Monday, November 30, 2009

354. மதங்கள் - இஸ்லாம் -2

*


எனது முந்திய பதிவில் கேட்ட சில கேள்விகளில் ஒன்று:

"எல்லாம் தெரிந்த" கடவுள் அறிவியல் உண்மைகளைச் சொல்ல வேண்டுமென்றால், 2 + 2 = 4 என்றல்லவா சொல்ல வேண்டும். விந்திலிருந்து மனிதன் பிறக்கிறான் என்று சொல்வதை விட இடுப்பிலிருந்து வரும் திரவத்தால் மனிதன் பிறக்கிறான் என்பது என்ன அறிவியல்?

இப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தேன். அதற்குப் பதிலாக ஆஷிக் கீழ்க்கண்ட பதிலை அளித்திருக்கிறார். அதை அவர் எழுதிய ஆங்கிலத்திலும், என் தமிழாக்கத்தோடும் கீழே தருகிறேன்.

I do not know whether you read that verse or not. If you would have read, you would not have come to this conclusion. You are referring to Qur’anic verses 86:5-7, what you quoted is the verse 86:7. Would you mind to read the verses 86:5-6 which give answers directly as per your expectation?

Even in other verses Qur’an tells Man is created from Semen (semen may not be the right word; ( I don’t know what Aashiq says. Semen is and has to be the very right word) Qur’an does not refer that as Semen, it refers it as a surging fluid/ gushing water/ the liquid that pours out). What is stunning to see is not semen; because everybody knows due to semen we are created. Qur’an further moves on to say where exactly the semen comes from. That is a stunner. So my answer to your claim is, you have misunderstood and INFACT QUR’AN DIRECTLY TELLS THAT NEWS AND MORE THAN THAT IT JUSTIFIES THE CURRENT SCIENCE 100% FROM WHERE THE SEMEN COMES FROM.

நீங்கள் குரானின் வாசகத்தை வாசித்தீர்களா என்பது தெரியவில்லை. வாசித்திருந்தால் இது போல் சொல்லியிருக்க மாட்டீர்கள். நீங்கள் குரானின் 86:5-7 வசனங்களில் 86:7 வசனத்தை மட்டும் மேற்கோள் காட்டியுள்ளீர்கள். விடுபட்ட 86:5-6 பகுதியையும் வாசித்தால் உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும்.

குரானின் மற்றப் பகுதிகளிலும் மனிதன் விந்திலிருந்து பிறக்கிறான் என்று சொல்லியுள்ளது.(விந்து என்பது சரியான வார்த்தை அல்ல; { ஆஷிக் என்ன சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை; விந்து என்பதே மிகச்சரியான சொல்லாக இருக்க முடியும்.} குரான் அதனை விந்து என்பதற்குப் பதிலாக ஒரு பீச்சியடிக்கும் திரவம்/பீறிடும் திரவம்/வெளியேறும் திரவம் என்று சொல்கிறது.) எல்லோருக்கும் விந்து பற்றித் தெரியும்; அதனால் அது பெரிய விஷயமில்லை. அதையும் தாண்டி, குரான் விந்து எங்கிருந்து வருகிறது என்பதைச் சொல்கிறது. அதுவே மிகவும் பிரமிப்பானதாக இருக்கிறது. ஆகவே உங்கள் கேள்விக்கான என் பதில்: நீங்கள் தவறாக நினைத்துள்ளீர்கள். உண்மையில் குரான் நேரடியாக அந்த செய்தியைச் சொல்கிறது. அதோடு விந்து எங்கிருந்து வருகிறது என்பதை 100 விழுக்காடு சரியாக இன்றைய அறிவியல் உண்மையோடு சொல்கிறது.

இதற்கு மேலும் ஆஷிக் இவ்வாறு கூறியுள்ளார்:
PLEASE BRING ON A SINGLE VERSE FROM QUR’AN WHICH IS SCIENTIFICALLY INCORRECT. THAT’S IS A OPEN CHALLENGE.

இங்கே ஆஷிக் சொன்ன குரானின் வசனங்களைத் தருகிறேன்.

நூல்:
குர்ஆன் தர்ஜமா
திரீயெம் பிரிண்டர்ஸ்,
சென்னை.(பனிரெண்டாம் பதிப்பு)

அத்தியாயம்86

5. எனவே, மனிதன் எதிலிருந்து தான் படைக்கப்பட்டுள்ளான் என்பதை (நோட்டமிட்டு)ப் பார்ப்பானாக!

6. குதித்து வெளியாகும் நீரினால் அவன் படைக்கப்பட்டுள்ளான் –

7. (ஆணுடைய) முதுகுத் தண்டிற்கும், (பெண்ணுடைய) நெஞ்செலும்புகளுக்குமிடையில் இருந்து அது வெளியாகிறது.


//(பெண்ணுடைய) நெஞ்செலும்புகளுக்குமிடையில் இருந்து அது ..//– ஒருவேளை அது முட்டையாக / Ovum-ஆக இருக்கலாம். ஆனால் அது நெஞ்செலும்பிலிருந்தா வருகிறது?

ஆணின் விந்துக்கும் முதுகுத் தண்டிற்கும் என்ன தொடர்போ?

அதை நீங்களே பார்த்துக் கொள்ள கீழே ஆண் & பெண் பிறப்புறுக்களின் படங்களைத் தந்துள்ளேன்.












இதற்கும் மேலே, குரானில் சொல்லப்பட்டுள்ளது போல் பூமி ஒரு விரிப்பா, தேனீக்கள் பழங்களைச் சாப்பிடுகின்றனவா என்றெல்லாம் நிறைய கேள்விகளை அடுக்கிக் கொண்டு போகலாம். இப்போதைக்கு -- இந்த ஒரு பருக்கை மட்டும்.



*
இந்த இடுகையையும் பார்க்கலாம் ...
http://youtu.be/Foor6wga20A
*

Friday, November 20, 2009

353. மதங்கள் - இஸ்லாம்

*



*



வாசித்தது ...
வாசித்துக் கொண்டிருப்பது ...
வாசிக்க வேண்டியது ...




*

மதங்களைப் பற்றி பல நூல்கள் வாசிக்கும்போது அவ்வப்போது எழும் ஐயங்களைத் தொகுக்க ஓரிடம் வேண்டுமல்லவா? என் பதிவுகளில் அதற்கான ஒரிடம் இது. எனக்குள் எழும் ஐயங்களை இங்கே தொகுத்து வைக்கின்றேன். இதை நீங்கள் வாசிப்பீர்களா இல்லை தவிர்த்து விடுவீர்களா என்பதல்ல .. எனக்கு ஓரிடம் வேண்டும்; அங்கங்கே வாசிப்பதை நூல்களில் வெறும் கோடிட்டு வைத்து விட்டு மறந்து விடுவது போலல்லாமல் தொகுக்க என் இடம் இது.

*
விவிலியத்தில் கடவுள் தன் சாயலில் மனிதனைப் படைத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இஸ்லாத்தில் இது முழுமையாக மாறி உள்ளதுபோல் தெரிகிறது. அல்லா மனித சாயலில் படைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அல்லா மிகவும் பெரியவன்; அல்லா பெரிதும் கோபப்படுவான்; அல்லா மிகவும் ரோஷக்காரன்; அல்லா வெட்கப்படுவான் - போன்ற சொலவடைகள் மிகவும் பிரபலம். அதாவது இங்கு கடவுள் / அல்லா மனித உருவில் பார்க்கப்படுகிறது / பார்க்கப் படுகிறான். சாதாரண மனித குணங்களைக் கடவுள் மீது ஏற்றுவது "If triangles have gods, those gods would be bigger triangles" என்ற கூற்றினை ஒத்து வருகிறது.

*
பிள்ளைப் பிராயத்தில் சொல்லித் தரப்படுவதால் என்றே நினைக்கிறேன் - பல இஸ்லாமிய நண்பர்களிடம் ஒரே மாதிரியான சில கருத்துக்கள் பொதுவாகப் பேசப்படும்.

*எங்களைப் பெற்றவர்களைவிடவும் நாங்கள் நபியை மதிக்கிறோம்.

*குரான் எந்த மனிதக் கரங்களாலும் மாற்றப்படவில்லை. - (எல்லோரும் எத்துணை ஆராய்ச்சியில் இதைச் சொல்கிறீர்கள்? இவையெல்லாம் சின்னப் பிள்ளையில் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயம் - கத்தோலிக்க கிறித்துவக் குழந்தைகளிடம் "நன்மை"யில் ஏசு அப்படியே ரத்தமும் சதையுமாக இருக்கிறார் என்றும், ஏசு கன்னிமாதாவிடமிருந்து பிறந்தார் என்பதும், இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதைச் சொல்லிக் கொடுப்பதையும் அவர்கள் அப்படியே அதைக் காலம் காலமாய் நம்புவதைப் போல.)

பொத்தாம் பொதுவாக அப்படி சொல்லிக்கொடுக்கப்பட்ட விஷயங்களை வெறும் நம்பிக்கைகளால் மட்டும் சொல்லிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் அதை ஆராய்ச்சி செய்தவர்களின் முடிவுகளைக் கேட்க மட்டுமாவது, கண்களையும் மனத்தையும் திறந்து நாம் தயாராக இருக்க வேண்டுமல்லவா? அதில் எது உண்மை என்று அதன்பின் யோசிக்க ஆரம்பிக்கலாமே .. அதைவிட்டு விட்டு 'என் நம்பிக்கை இது; இதை எப்படி யாரும் ஆராய்ச்சி செய்யலாம்' என நினைத்து அதனைப் புறந்தள்ளக் கூடாதல்லவா?


*குரான் அறிவியல் உண்மைகள் பல கொண்டுள்ளது.

(எல்லா மதக்காரர்களும் சமயம் கிடைக்கும்போது அறிவியல் உண்மைகள் எங்கள் மதத்தில் உள்ளது என்று கூறுவதில் ஏதும் வித்தியாசமில்லை. அப்படி "எல்லாம் தெரிந்த" கடவுள் அறிவியல் உண்மைகளைச் சொல்ல வேண்டுமென்றால், 2 + 2 = 4 என்றல்லவா சொல்ல வேண்டும். விந்திலிருந்து மனிதன் பிறக்கிறான் என்று சொல்வதை விட இடுப்பிலிருந்து வரும் திரவத்தால் மனிதன் பிறக்கிறான் என்பது என்ன அறிவியல்? 'ஏழு வானம்' என்பது என்ன அறிவியல். இரவுக்குள் பகலையும், பகலுக்குள் இரவையும் .... பூமியை நீட்டி விரித்து ... மலையின் வேர்... இப்படியே பல ...)

*இஸ்லாம் ஒரு வாழ்க்கை மார்க்கம்.

எப்படி வாழ வேண்டும் என்று கடவுள் கற்பிப்பதும், ஆணையிடுவதும் வேறு. ஆனால், நீ வெள்ளை சட்டை போடணும்; உட்கார்ந்து சிறுநீர் கழிக்கணும்; எப்போதெப்போது நீ நிர்வாணமாக இருந்தால் கடவுளுக்கு வெட்கம் வராது; அல்லது எப்போதெப்போது நீ நிர்வாணமாக இருந்தால் கடவுளுக்கு வெட்கம் வரும்; ஆண்கள் தங்க நகை அணியக்கூடாது;
( தங்கத்துக்கும், Y குரோமோசோமுக்கும் அப்படி என்ன பகை?)
இப்படிப்பட்ட கட்டளைகளை கடவுள் மனிதனுக்குத் தருவாரா? தர வேண்டுமா? sounds kiddish! பிள்ளையைப் பலி கொடு என்று கேட்கிற கடவுள் ஒருவேளை இதுபோன்ற கட்டளைகளைக் கொடுக்கலாமோ?!

இங்கே கடவுளை மனிதானாக ஆக்கும் முயற்சியே இது என்று தெரிகிறது
.

*ஆண்கள் தாங்கள் ஆண்கள் என்பதைக் காண்பிக்க தாடியிடனும், பெண்கள் பர்க்காவுடனும் இருக்க வேண்டும்.
( ஆண்களும் பெண்களும்
இப்படியெல்லாம் வித்தியாசமாக இருக்க வேண்டுமெனில் அவை அவரது படைப்பில் உள்ள குற்றமா? இப்படி ஆண்கள் பெண்களிடமிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டுமென்பது அவரது ஆசை என்றால் சில விலங்கினங்களில் போல் ( மான், கோழி-சேவல்) என்பவற்றில் ஆண் பெண் வேற்றுமை மாதிரி - ஆண்களை ஆண்களாகக் காண்பிக்க வேறு மாதிரியே படைத்திருக்கலாமே; பெண்களையும்தான். நீ தாடி வை; நீ பர்க்கா போடு என் அவரது படைப்பையே அவரே கேள்வி கேட்கிறாரோ?)

*
எங்கள் மார்க்கத்தில் எல்லா கேள்விகளுக்கும் பதிலுண்டு.
(கேள்விகளே கேட்கப்படும் முன் இப்படி ஒரு நல்ல நம்பிக்கை இருப்பது சரியா? இதற்குப் பெயர்தான் super confidence!
fossils, stem cell therapy, நாளைய CERN results இவைகளைப் பற்றி நான் கேட்டால் பதிலிருக்குமா? இல்லை மதத்தில்தான் கேட்கவேண்டும் என்றால் அதிலும் பல கேள்விகள் கேட்டாச்சே ... இதுவும் சிறுவயதிலிருந்தே சொல்லிக்கொடுக்கப்படும் பாடம்; அவ்வளவே.)


*
பரிணாமம் ஒரு கொள்கையேயன்றி நிரூபிக்கப்பட்ட ஒன்றல்ல. (டார்வின் சொன்ன சில hypotheses அவரைப் பொறுத்தவரை அன்றைய அறிவியல் சூழலில் நிரூபிக்க முடியாத கருத்துக்கள். அவர் 'ஏதோ ஒரு factor' என்று சொல்லிச் சென்றதை இன்று அறிவியல் முழுமையாகப் 'பிரித்து மேய்ந்து' விட்டது. அந்த factor - chromosome, gene, nucleic acids என்று அறிவியலில் முழுமையாக அறிந்தாராயப்பட்டு விட்டது. பரிணாமம் இன்னும் ஒரு தியரி என்ற நினைப்பில் இந்தக் கருத்து ஒரு முகமாக எல்லா இஸ்லாமியர்களிடமும் பரவலாகக் காணப்படுகிறது. சிறுபிள்ளையில் போதிக்கப்பட்ட பாடம். எத்தனை பேர் டார்வினின் பரிணாமக் கருத்து தவறென்று டார்வின் கொள்கைகளைப் படித்துப் பார்த்துவிட்டு அப்படிச் சொல்கிறீர்கள்?

கிறித்துவர்களிடமும் இதைப் பரவலாகக் காண முடியும்.
கடவுள் ஆணின் விலா எலும்பிலிருந்துதான் பெண்ணைப் படைத்தார்; ஆகவே, இன்னும் ஆண்களுக்கு ஒரு விலா எலும்பு பெண்களைவிட குறைவு என்ற தவறான கருத்து பல படித்த கிறித்துவர்களிடம் கூட உண்டு. என் மாணவன் ஒருவனுக்கு எலும்புக்கூட்டைக் காண்பித்து விளக்கினாலும் ஒத்துக்கொள்ள மறுத்தான். Fossils பரிணாமக் கொள்கையின் உண்மையை விளக்கும் பெரும் தூண்கள். ஆனால், அதெல்லாம் மனுஷனே பண்ணி வச்சிக்கிட்டது என்ற ஒரு பாடமும் போதிக்கப்படுகிறது பக்தர்களின் மனதில்!)


*
ஆதாமிலிருந்து பல நபிகள் தோன்றி அல்லாவின் சட்ட திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் அந்த சட்டங்கள் மனிதக் கரங்களால் கறை படுத்தப் பட்டதால் இறுதியாக முகமது மூலமாக கடைசிச் சட்டம் தரப்பட்டுள்ளது. இது மனிதனால் மாற்றப்படாதது.

(சில ஐயங்கள்:

ஒரே கடவுளால் தரப்பட்ட சட்டங்கள் எப்படி வித்தியாசமாகின?

பழைய ஏற்பாட்டில் கண்ணுக்கு கண்; பல்லுக்குப் பல் என்ற பழி வாங்குதல் எப்படி கிறித்துவர்களின் - ஈசாவின் - சட்டத்தில் இடது கன்னத்தில் அடித்தால் வலது கன்னத்தைக் காட்டு என்றாயிற்று? பின் எப்படி குரானில் மறுபடியும் பழைய நிலை வந்தது?


600 வருஷத்துக்கு முன்னால் கடவுள் ஈசா நபியிடம் 'வாளை உன் உறையில் போடு; ஏனெனில் வாளை எடுத்தவன் வாளால் சாவான்' என்று அவரைச் சொல்லும்படி அறிவுறுத்தி விட்டு, அதன் பின் 600 வருஷம் கழித்து பல போர்க்களங்களை தன் நபியைக் காணச் செய்கிறார். ஏனிப்படி 600 வருஷத்தில் ஜெகோவாவிடம் / அல்லாவிடம் ஒரு மாற்றம்?

ஒரு பொது நிலைக்கேள்வி:

பல நபிகள்; பல சட்ட திட்டங்கள் கொடுக்கப்பட்டு எல்லாமே மாறி விட்டன. உலகம் தோன்றி பல கோடி ஆண்டுகள் என்று அறிவியல் சொல்ல, பரிணாமத்தை எதிர்ப்போர் ஆதாம் பிறந்தது வெறும் 6000 ஆண்டுகளுக்கு முன்புதான் என்பார்கள். இந்தக் கருத்தையே எடுத்துக் கொண்டாலும் முதல் 4500 ஆண்டளவாக கடவுளின் சட்டங்கள் மனிதக் கரங்களால் கைபட்டு மாறிப்போக, அதன் பின்னால் நபியின் மூலமாக 1400 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புதிய இறுதிச் சட்டம் கொடுக்கிறார் என்றால் --

*முதல் 4500 ஆண்டுகளாக ஆதாம், மோஸே, ஆப்ரஹாம் --- இப்படி மாறி மாறி வந்த சட்டங்களை வைத்து கடவுள் ஏன், எப்படி மனிதர்களைக் குழப்பினார்? முதலிலேயே இதுபோல் முழுமையாகக் 'காபந்து செய்யப்பட்ட ஒரு கட்டளைகளைக்' கடவுள் மனிதனுக்குத் தந்திருக்க முடியாதா? ஏன் அப்படி தராமல் இப்போது முகமதுவிடம் மட்டும் இப்படி ஒரு நூலைத் தரவேண்டும் - அதுவும் கடைசி என்ற அறிவிப்புடன். அப்படியானால் முதலில் நடந்த தவறைத் திருத்த, அல்லாவின் second thoughts மூலமாக இந்த நூல் வந்ததா? (இது கடவுளின் திருவுள்ளம் என்றோ, இது அவன் செயல் என்பதோ, அவனது "திருவிளையாடல்" என்பதோ, தீர்ப்பு நாளில் கேட்டுக் கொள்ளலாம் என்பதோ சரியான ஒரு பதிலாக இருக்கக்கூடாது; இருக்க முடியாது.)

*சரி, இப்படியெல்லாம் இதுவரை தப்பு நடந்து போனது; இனி இப்படி நடக்கக்கூடாதென்று on second thoughts முகமதிடம் கடைசிச் சட்டத்தைக் கொடுத்தார் என்று கொள்வோம். அப்படியானால் அதுவே கடவுள் ஏற்கெனவே ஒரு தவறு செய்துவிட்டார் என்று நிரூபிக்கிறது.


*அப்படி சில தவறுகள் நடந்த பின் தன் சட்டத்தை மனிதனுக்காகக் கொடுக்க எண்ணிய அல்லா, சொல்லப்பட்டதை உடனே குறிப்பெடுத்து எந்த மாற்றமும் இல்லாமல் எழுதக்கூடிய ஒரு படித்தவரை அல்லவா தேர்ந்தெடுக்க வேண்டும். or atleast திருஞானசம்பந்தர், காளிதாசன் கதை மாதிரி ஏதாவது செய்திருக்கலாம்! ஜிப்ரெல் சொன்னதை அப்படியே ஒரு மனிதன் எதையும் மாற்றாமல் சொல்ல முடியுமா? சரி, அல்லாவின் அருளால் நபியை அப்படியே சொல்லும்படி அருளினார் என்று கொள்வதா? இவ்வளவு கஷ்டம் எதற்கு? இதற்குப் பதில், பேசாமல் ஒரு well written document ஒன்றை ஜிப்ரெல் நபியிடம் கொடுத்திருக்கலாமே. அல்லாவால் முடியாத ஒன்றா அது?

(ஒரு விளையாட்டு உண்டு. சிலரை வைத்துக் கொண்டு, அதில் முதல்வரிடம் ஏதாவது ஒரு statement ரகசியமாகக் கொடுங்கள். அவர் அதை அடுத்தவரிடம் சொல்லட்டும் ரகசியமாக. நாலைந்துபேர் தாண்டும் முன் அந்த statement முற்றிலுமாக மாறியிருக்கும்.)

*நபி முதலில் தனக்கு மலைக்குகையில் நடந்தது நம்ப முடியாமல் இருந்தது; அவரது மனைவி சொல்லி நம்பியது; ஜிப்ரெல் சொன்னதை மற்றவர்களிடம் சொல்லி, காலம் சிறிது ஆனபின் அவைகளை அவர்கள் எழுதியது; பின் வந்தவர்கள் அதைத் தொகுத்தது -- இத்தனை குழப்பமானவைகளை விடவும் கடவுள் ஒரு ஆணையை உருவாக்கி அதை அப்படியே நபியிடம் தந்திருந்திருக்கலாமே. எளிது; குழப்பமில்லை; குரானில் மாற்றமே இல்லையா என்று 1400 வருஷமாகக் கேட்கப்படும் கேள்விகளும் இருக்காதே.)

*இசை, கலை, பாடல்கள், ஓவியங்கள் - இவைகளை ஒதுக்கி வைக்கும்படி அல்லா நபியிடம் கூறியுள்ளார்.

(இது நான் பெரிதாக வியக்கும் ஒரு விஷயம். இசையின் ஆரம்பமே கடவுளோடு இணைந்தது என்பார்கள். கோவிலில் பாடப்பட்டு, பின்பு அரசர்களின் அரண்மனைக்குள் நுழைந்து, பின் மக்களிடம் இசை வந்ததென்பார்கள். Divine music -> Chamber music -> Popular music. ஆனால், இங்கு கடவுளே இசையை மறுக்கிறது; வெறுக்கிறது! பக்தியை இசையால் நிரப்பிய நம் சமூகத்தில் இந்தக் கருத்து ஒரு ஆச்சரியத்தைத்தான் அளிக்கிறது. பாடலும், இசையும், ஒவியமும் இச்சை தூண்டும் கருவிகளா? இது வெறும் ஆச்சரியம் மட்டுமல்ல; நம்ப முடியாத ஒன்று. நிச்சயமாக இது ஒரு தனிமனிதனின் (முகமது) விருப்பு வெறுப்பாக இருக்க முடியுமே ஒழிய சர்வ நிச்சயமாக 'ஒரு கடவுளின்' விருப்பு வெறுப்பாக இருக்கவே முடியாது. இஸ்லாமைப் புறந்தள்ள இந்த ஒரு காரணம்கூட போதும்.

ஒரு பதிவர் ஏ.ஆர். ரஹ்மான் இசையை விட்டு விட வேண்டுமென்று எழுதியிருந்ததை வாசிக்கும்போது, அதைவிட 'நீ உன் மூச்சை நிறுத்திக்கொள்' என்று சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது.)


*

*

சமயங்களைப் பற்றி மட்டும் பேச நினைத்த எனக்கு இன்னொரு சின்ன சமூக வேண்டுகோள் உண்டு.

நம் பதிவர்களிடையே சில முறை ஓர் அனுபவம் கிடைத்தது. இஸ்லாமிய மன்னர்கள் நம் நாட்டிற்குள் நுழைந்த அன்னியர் என்ற நினைவு பலரிடம் இல்லை. ஒளரங்கசீப் ஜிஸ்யா வரி வசூலித்தாரே என்றால் நம் நாட்டில் அவரது ஆட்சி முறையாக இருந்த ஒரு அரசு போலவும், அவர் வரி வசூலிப்பது நம் நாட்டை நன்றாக ஆள்வதற்கு என்றும் ஒரு கூற்று வருகிறது. அப்போது ஆங்கிலேயர் விதித்த உப்பு வரியும் சரிதானா? அதை எதிர்த்த காந்தி தவறு செய்து விட்டாரா? இஸ்லாமிய அரசர்கள் அந்நியர்கள்; ஆக்கிரமிப்பாளர்கள். நம் நாட்டைப் படையெடுத்து, அடிமைப் படுத்தி, நம்மை ஆண்டவர்கள் - ஆங்கிலேயர்களைப் போல; பிரெஞ்சு நாட்டுக்காரர்கள் போல; போர்த்துக்கீசியவர்கள் போல. இந்த வெள்ளைத் தோல் கொண்ட இவர்கள் எல்லோரும் கிறித்தவர்கள் என்பதற்காக, எந்த நம் நாட்டு கிறித்துவனும் அவர்களைப் போற்றிப் பாடுவதில்லை.

இஸ்லாமிய அரசர்கள் நம்மை அடிமைப்படுத்தியவர்கள். அதோடு நிற்க வேண்டும். ஏன் மதங்களை அவர்கள் மேல் சாற்றி அவர்கள் துதி பாட வேண்டும்? ஜெனரல் டயர் ஒரு கிறித்துவன் என்பதற்காக நம்மூர் கிறித்துவன் ஜெனரல் டயர் தன் கடமையைத்தானே செய்தான் என்று சொல்லி அவனின் பெருமை பேசுவானா?

மதங்களைத் தனித்துப் பாருங்கள். அதை மனிதர்கள் மேல் ஏற்றி, 'என் மதக்காரன் என்றாலே அவன் எனக்கு உறவு' என்று சொந்தம் பாராட்டாதீர்கள். நிச்சயமாக அரசியலோடு மதங்களை இணைக்காதீர்கள். படும் துன்பம் போதும்.

இன்னொன்றும் சிலர் சொல்வதுண்டு. அந்நிய நாட்டுப் படையெடுப்பாளர்களில் பலரும் நம்மிடம் கொள்ளையடித்து தம் நாட்டுக்கு நம் செல்வங்களைக் கொண்டு சென்றார்கள். அதைவிட நம் நாட்டுக்குப் படையெடுத்து வந்து, இங்கேயே அரசாட்சி செய்து நம் நாட்டுக்கு "நல்லது" செய்தார்கள் இஸ்லாமிய மன்னர்கள். இதுவும் ஒரு வேடிக்கையான விளக்கம்தான். கொள்ளைக்காரன் ஒருவன் நம் வீடு நுழைந்து, நம் சோற்றுப் பானையைத் தூக்கிக் கொண்டு போய் அவன் வீட்டில் வைத்து சாப்பிட்டான்; இன்னொருவன் கொள்ளையடித்து வெளியே செல்லாமல் நம் சோற்றை நம் வீட்டிலேயே வைத்து நமக்கெதிரே வைத்தே சாப்பிட்டான் - இப்படித்தான் இருக்கிறது அந்த விளக்கம்.

இதையெல்லாம் சொல்வதை வைத்து பாபர் மசூதி விஷயத்தை இங்கு இழுக்க வேண்டாம். ஏனெனில் அதைப் பற்றிய என் கருத்துக்கள் இருப்பது வேறோரிடத்தில் ...




*

*

*

Thursday, November 19, 2009

352. சில சின்னச் சின்னக் கேள்விகள் ...

*
2007-ல் தீர்ப்பு வந்தது -- தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று அ.தி.மு.க. கட்சியினருக்குத் தூக்குத் தண்டனை அப்டின்னு. நம்ம பதிவர்கள் எல்லோரும் ரொம்ப சந்தோஷமா கை தட்டினாங்க.

அவங்க தொங்கியாச்சா?

*
2006-ல் இன்னொரு தீர்ப்பு. அப்சலம் தூக்குத் தண்டனை. பதிவுலகத்தில் நிறைய வாதங்கள்.

அவனும் தொங்கியாச்சா?

*
கேசாப் வழக்கு இன்னும் நடக்குது. அவன் வயசாகி, தானா சாகுறதுக்குள்ள அந்த வழக்கு முடிஞ்சிருமா?

*
கோடா இப்ப நாலஞ்சு நாளா ஆளே தினசரியில காணுமே. எங்க போனான்? அம்புட்டுதானா?

*
இன்னொரு மத்திய அமைச்சர். வெளிநாடு போனப்போ இங்கே அந்த ஆளு வீட்ல படுக்கை அறை, பூசை அறையில் இருந்த சாக்கு மூடைகளில் பணம்.. பணம் .. அப்டின்னு மூட்டை மூட்டையா கண்டு பிடிச்சாங்க. பேரு என்னமோ ஒரு ராமர் அப்டின்னு நினைவில் இருக்குது. அதுவும் அம்புட்டுதான் ...

*
மஞ்சள் துண்டு ஆட்சி வந்ததும் பழைய பச்சை சேலை இருந்த சிறுதாவூர் அரண்மனை அடிச்சிப் பிடிச்ச இடத்தில கட்டுனதுன்னு புகார் வந்திச்சி. புதுசா வந்திருக்க ஆளுக உடனே அடிச்சிப் பிடிப்பாங்கன்னு பார்த்தேன். அவுகளுக்குள்ள என்ன அரேஞ்மென்டோ ... அந்த நில தாக்கீதை ஒரு வாரத்தில கண்டு பிடிங்கன்னு சொல்லுவாங்கன்னு நினச்சா அரசே 6 மாசம் டைம் கொடுத்திருச்சி. அதுக்கு ஏது இம்புட்டு டைம்?!. ஆனா, இப்ப இதுவரை ஒண்ணையுமே காணோம். மஞ்சளுக்கும் பச்சைக்கும் நடுவில சிகப்பு வந்திச்சி. அதுட்ட இருந்தும் சத்தம் ஒண்ணும் இல்லை.

*
அந்த பத்திர ஊழலில் ஒரு போலீஸ்காரர் முதல் நிறைய பேருங்க சொன்னாங்க. என்ன ஆச்சுன்னு தெரியலை. ஆனா இதில் எனக்குப் பிடிச்சது அந்த பிடிபட்ட போலீஸ்காரர் அப்படியே சும்மா ஜில்லுன்னு மீசையை வருடி விட்டுக்கிட்டு வர, அவரை சுத்தி நிக்கிற போலீஸெலாம் அவருக்கு சல்யூட் அடிப்பாங்க பாருங்க .. அது நல்லா இருந்திச்சி. மற்ற சில குற்றவாளிகள் மாதிரி மூஞ்சை மூடிக்கிட்டு ... அதெல்லாம் எதுக்கு இவருக்கு? நல்ல மனுசன் ..

*
ராஜா விவகாரமும் இப்ப தினசரியில ஒண்ணையும் காணோம். "எல்லாமும்" முடிஞ்சிருக்குமோ?

*
கொஞ்ச நாளா லட்ச கோடிப்பணம் ஸ்விஸ் வங்கிகளில் தூங்குது. நாங்க வந்த உடனே வெளியே கொண்டு வந்திருவோம்னு சொன்ன காவிக்கலர்காரங்க இப்ப அவங்க பிரச்சனையில இருந்து இன்னும் வெளியே வரவேயில்லை. அதுவும் அம்புட்டுதானா?

*
அப்போ, மாட்டுத்தீவனத்தை "மாடு" தின்னுட்டு போயிரிச்சி; இனிமே அது அம்புட்டுதானா?

*
பச்சை சேலைக்கர மம்மி மேல இன்னும் நிறைய கேஸ் இருக்கும் போலும். லண்டன் ஹோட்டல் ... அது இதுன்னு நிறைய இருக்கு. ஆனா எல்லாமே அம்புட்டுதானோ?

* ஆனாலும் போபர்ஸ் வழக்கு மாதிரி எதுவும் இருக்க முடியாதுல்ல .. க்வாட்ரச்சியோடு அதையும் இழுத்து மூடியாச்சோ?

*
ஆனாலும் நமக்கெல்லாம் மறக்கிற ஞாபக சக்தி இல்லாட்டி ரொம்ப கஷ்டம்ல ...?


*

*
U.I.D. பற்றி சிறிது எழுதணும்; அதற்கு உங்க ஆதரவும் வேணும். கொஞ்சம் யோசிச்சிட்டு பொறுத்து எழுதுகிறேன்.

*

Thursday, November 12, 2009

351. மதங்கள் - கிறித்துவம்

*




வாசித்தது ...
வாசித்துக் கொண்டிருப்பது ...
வாசிக்க வேண்டியது ...




*
மதங்களைப் பற்றி பல நூல்கள் வாசிக்கும்போது அவ்வப்போது எழும் ஐயங்களைத் தொகுக்க ஓரிடம் வேண்டுமல்லவா? என் பதிவுகளில் அதற்கான ஒரிடம் இது. எனக்குள் எழும் ஐயங்களை இங்கே தொகுத்து வைக்கின்றேன். இதை நீங்கள் வாசிப்பீர்களா இல்லை தவிர்த்து விடுவீர்களா என்பதல்ல .. எனக்கு ஓரிடம் வேண்டும்; அங்கங்கே வாசிப்பதை நூல்களில் வெறும் கோடிட்டு வைத்து விட்டு மறந்து விடுவது போலல்லாமல் தொகுக்க என் இடம் இது.

*

சிறு வயதிலிருந்தே பல சமயச் செய்திகள் மனத்தின் ஆழத்தில் புதைக்கப்படுகின்றன.

அந்த வயதில் நம் மனத்துக்குள் புதைக்கப்படும் அத்தகைய "சமய உண்மைகள்" வாழ்க்கையில் எப்போதும் நிரந்தர இடம் பிடிக்கவே பெரும்பாலும் வாய்ப்பாக ஆகிவிடுகிறது. அந்த "உண்மைகள்" மீது நாம் கேள்விகள் எழுப்பவே எப்போதும் பயப்படுகிறோம்; அது தவரென்று எப்போதும் நமக்குக் கற்பிக்கப்பட்டிருப்பதால் அந்த நினைப்புகளையே "பாவம்" என்று ஒதுக்கி விடுகிறோம். எப்போதாவது எழும் ஐயங்களை ஒதுக்கித் தள்ள நமக்கு ஏற்கெனவே "பாடங்கள்" சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கும்.

உதாரணமாக, கத்தோலிக்க கிறித்துவ, பிரிவினைக் கிறித்துவ பெண்கள் பொட்டு வைத்துக் கொள்வதில் முரண்பாடு உண்டு. அடிப்படைக்காரணம் என்ன என்பது தெரியாமலேயே இதில் முழு வேற்றுமையைக் காண்பிப்பார்கள். சில காதல் திருமணங்கள் கூட இந்த வேற்றுமையால் மணவிலக்கு வரை சென்றதுகூட எனக்குத் தெரியும். சொல்லிக்கொடுத்ததைத் தாண்டாத மக்கள் ....!!

அப்படி சொல்லிக்கொடுக்கப்பட்ட சில "பாடங்கள்".

THE HOLY TRINITY: தம திரித்துவம் என்பர். அதாவது கடவுள் மூன்று ஆட்களாக (தந்தை, மகன், பரிசுத்த ஆவி என்று ... ) இருக்கிறார்; ஆனால் ஒரே கடவுளாக இருக்கிறார். இதை விளக்க யாரும் முயல்வதில்லை. அதற்குப் பதிலாக சின்னப் பிள்ளை கடல் நீரை சிரட்டையால் கடல் கரையின் சிறு பள்ளத்தில் நிரப்ப முயல்வது போன்ற செயல் அது என்று ஒரு கதை சொல்லி அதைப் பற்றி நினைப்பதே தவறு என்று பாடம் சொல்லி விடுவார்கள். அகுஸ்தினார் என்ற புனித / அறிஞருக்கே எட்டாத விஷயம் என்று சொல்லி 'அமுக்கிவிடுவார்கள்'.

ஏசு கடவுள் என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டதில்லையே. அவரை ஏன் கர்த்தராக்கினீர்கள் என்றெல்லாம் கேட்கக் கூடாது.

ஏசு ஒரு சின்ன மக்கள் கூட்டத்திற்கு - யூதர்களுக்கு - வந்ததாகவும், அவர்களே கடவுளால் 'தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்' எனவும் விவிலியத்தில் பல இடங்களில் இருக்கிறதே என்று கேட்டாலும் பதில் வராது.

மத்தேயு (10: 5,6) இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,
காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திலும் போங்கள். - இதன் பொருள் ஏசு ஒரு சின்ன மக்கள் குழுவிற்கு மட்டும் வந்ததாகத்தானே தெரிகிறது?!
(கத்தோலிக்க விவிலியம்: இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: "பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். மாறாக வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.)

மத்தேயு (10:23) மனுஷ குமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றி முடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன். ????????????
(கத்தோலிக்க விவிலியம்: ... மானிட மகனின் வருகைக்கு முன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.)


கத்தோலிக்கர்களின் 'நன்மை' - holy communion - ஒரு அடையாளச் செயல்தானே; அதில் சொல்லப்படுவது போல் ரொட்டித்துண்டு ஏசுவின் ரத்தமாக, சதையாக மாறுவதுண்டா என்று கேட்கப்படக்கூடாது.

ஏசுவிற்குப் பிறகு மரியாளுக்கு குழந்தைகள் பிறந்தன. ஜேம்ஸ் என்றெல்லாம் இருக்கிறதே என்றால் அது பிரிவினைக்காரர்களின் - protestants - கருத்து என்று ஒதுக்கப்படும்.

இதெல்லாம் போதாதென்றால், விவிலியத்தின் ஒவ்வொரு வார்த்தையும் கடவுளின் அருளால், அதுவும் சிறப்பாக பரிசுத்த ஆவியின் 'ஏவுதலால்' எழுதப்பட்டவை என்ற ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.

ஆனால் டா வின்ஸி கோட் கதை வாசித்து சிறிது கிளறிய பின்பே -கிறிஸ்து இறந்து 325 ஆண்டுகளுக்குப் பிறகு Constantine , the great என்ற மன்னன் மூலமாகக் கூட்டப்பட்ட முதல் கிறித்துவர் "மாநாட்டில்"தான் (First Council of Nicaea in 325 A.D.) ஏசு கடவுள் என்பதுவும், இருந்த பல புத்தகங்களிலிருந்து சிலவற்றை மட்டும் விவிலியமாக தேர்ந்தெடுக்கப்பட்டன என்றும் gnostic gospels போன்ற சில நூல்கள் புறந்தள்ளப்பட்டன என்பதுவும் தெரிந்தது. இதைத் தேர்ந்தெடுத்ததும் முழுவதுமான சமயக் காவல்ர்களோ, தலைவர்களோ இல்லாமல் சில அரசியல் காரணங்களுக்காக மன்னவனே முன்னின்று நடத்தியது என்பது தெரிகிறது. ஏசுவின் சகோதரர் ஜேம்ஸ், மரிய மகதலேன், பீட்டர் (ராயப்பர்), Gospel of Thomas, Gospel of Philip, Apocryphon (Secret book) of John ( The Gnostic Gospels, Elaine Pagels (XV-XVI) - இந்த நூல்கள் மறைக்கப்பட்டு வேறு நால்வரின் நூல்கள் மட்டும் ஏன் கரையேறின என்பது தெரியவில்லை.

ஏசுவின் வாழ்க்கையில் 'மறைந்த ஜீவியம்' என்று பல ஆண்டுகளைச் சொல்வதுண்டு. அதன் தேவையோ, காரணமோ என்ன?

மார்க் எழுதிய விவிலியம் ஏசுவிற்குப் பின் 70-80-ன் ஆண்டிலும், லூக், ஜாண் இருவரின் விவிலியம் 90-110 ஆண்டிலும் எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது. இரண்டிலும் சிலுவையில் ஏசுவின் மரணம் வேறு வேறு விதமாகக் கூறப்படுவதின் காரணம் என்ன? (The Gnostic Gospels, Elaine Pagels, pp71)

மத்தேயு (10: 34, 35) பூமியின் மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன். எப்படியெனில், மகனுக்கும் தக்ப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகனுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். 


????????!!!!!!!!!!!!! இதெல்லாம் ஒண்ணும் புரியலையே ... 

(கத்தோலிக்க விவிலியம்: "நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும், தாய்க்கு எதிராக மகளையும், மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன்.)

*
கிறித்தவ மதத்துக்காகவே தன் வாழ்நாளைக் கழித்த அன்னை தெரஸாவின் வாக்கு மூலத்தை கீழே தருகிறேன். அன்னை தெரஸாவின் நிலையே இப்படி என்றால் மற்றவர்களைப் பற்றி சொல்லவா வேண்டும்.

“பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்தை நோக்கி எழுப்ப முயல்கிறேன் அங்கோ தண்டிக்கும் வெறுமை அந்தச் சிந்தனைகள் கூரிய கத்திகளாய்த் திரும்ப வந்து என் இதயத்தைக் கிழிக்கின்றன தேவன் என்னை நேசிப்பதாகச் சொல்கிறார்கள் இருப்பினும் எதார்த்தத்தில் இருளும் உணர்ச்சியின்மையும் வெறுமையும் என்னுள் நிறைந்து மேலோங்கியிருப்பதால் எதுவும் என் ஆன்மாவைத் தொடுவதில்லை பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?”

“என்னுள் ஓங்கி நிறைந்திருக்கும் வெறுமை காரணமாக நான் பார்க்கிறேன், ஆனால் கவனிப்பதில்லை கேட்கிறேன், ஆனால் காது கொடுப்பதில்லை என் நாக்குதான் அசைகிறது, நான் பேசுவதில்லை.”

“என்னை நானே எதற்காக வருத்திக் கொள்கிறேன்? தேவன் இல்லையெனும்போது ஆன்மாவும் இருக்க முடியாது ஆன்மா இல்லையென்றால் யேசுவே நீரும் உண்மையல்ல.”

மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸின் மூத்த உறுப்பனரும், தெரசாவுக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து வருபவருமான அருட்தந்தை ப்ரியன் கலோடிஜெக் வெளியிட்டுள்ள ‘அன்னை தெரசா - என் ஒளியாய் இரு’ என்ற நூலில் தனது நம்பிக்கையின்மையை வெளியிடும் வண்ணம் தெரசா எழுதிய சுமார் 40 இரகசியக் கடிதங்கள் தொகுக்கப்பட்டதில் ஒரு பகுதி.

அந்த நூலின் சில பகுதிகளை இங்கு காணலாம் ...




*










Thursday, November 05, 2009

350. என்னென்னமோ ...

*


*

கோலங்கள் அப்டின்னு ஒரு சீரியல். காலங்காலமாய் நடந்துக்கிட்டு இருக்கு. அதில் வர்ர கேமிரா கோணங்களைப் பார்த்தா ரொம்ப கோவமா வந்ததாலே ரொம்ப முந்தியே அதப் பார்க்கிறதை நிப்பாட்டியாச்சி. இருந்தாலும் தங்ஸ் அதில வர்ர ஒரு கேரக்டர் வந்ததும் என்னைக் கூப்பிடுவாங்க. ரொம்ப ஜாலியா இருக்கும் அதில வர்ர 'தில்லா'வைப் பார்க்கிறதுக்கு. மற்ற முக்கிய கேரக்டர்கள் அழுமூஞ்சி அம்மாவும், 'வரட் வரட்' ஆதியும். இந்த அம்மா, ஆச்சி பொடிக்கு சிரிச்சிக்கிட்டே வருவாங்களா, அதில கூட அவங்களை இப்ப பார்க்க முடியாம போச்சு. அதில கூட அவங்க அழுதுகிட்டே விளம்பரம் பண்ணினால் நல்லா இருக்கும்னு தோணுது. அந்த அளவுக்கு இந்த சீரியலில் கிளிசரின் பாட்டிலோடு வந்துக்கிட்டே இருக்காங்க. அந்த ஆதிக்கு நல்ல தொண்டை. இவங்களைப் பார்த்தாலே நிலமை ரொம்ப மோசமா போனதாலதான் அந்த சீரியல் நேரத்தில் ஹால் பக்கமே போறதில்லை. ஆனா, தில்லா ரொம்ப தமாஷான ஆளு. ஒரு ஆளு ஏன் இப்படி பண்றார்; அதை டைரடக்கர் எப்படி அனுமதிக்கிறார் என்றே புரியவில்லை.

நீங்களும் பார்த்துச் சொல்லுங்க ...

*

அந்த சீரியலில் ஒரு 'தோழர்' வந்தார்; செத்துட்டார். தமிழ் நல்லா பேசுவார். டைரடக்கர் அவர் மூலமாக இலங்கைப் பிரச்சனையில் தன் கருத்தை நன்றாக சொல்ல வைத்துவிட்டு சாகடித்து விட்டார்.

*

அரசி சீரியல் என்று நினைக்கிறேன். அதில் உசரமா நல்லதம்பின்னு பேருன்னு நினக்கிறேன். நல்ல உடல்மொழி. குரலும் நல்லா இருக்கும். இந்த மாதிரி ஆட்களெல்லாம் திடீர்னு வந்துட்டு அப்புறம் காணாம போய்றாங்க. இந்த மாதிரி ஆளுகளையெல்லாம் விட்டுட்டு தாங்க முடியாத தர்த்தியான மூஞ்சுகளை அடிக்கடி சீரியல்களில் பார்க்க முடிகிறது. ஏன் இப்படி நம்ம டைரடக்கர்களுக்கு ஒரு டேஸ்ட்!?

பாவம் .. இந்த மாதிரி நல்ல நடிகர்கள்.

*
குரு பூஜைக்காக எங்க ஊரு ஜே .. ஜே ன்னு இருந்திச்சி - வழக்கம் போல. இதுவரை எனக்குத் தெரிஞ்சு இந்த ஒரு குரு பூஜைதான் இருந்தது. ஆனா, இப்போது நாலு குரு்பூஜை இதே சமயத்தில் நடக்குது.

அந்த குருபூஜைகளில் பேருந்துகளில் எறியும் கல்களையும், தீர்த்து எரிக்கும் பெட்ரோல் காசை வைத்தும் வருஷத்து நாலு பள்ளிக்கூடம் கட்டலாம்.

*
*
பழைய ஜார்க்கண்ட் முதலமைச்சர் மது கோடா தண்டிக்கப்படுவார்னு யாராவது நிஜமா நினைக்கிறீங்களா? (CNN-IBN has learnt that during the four days of continuous interrogation, Koda allegedly admitted to stashing away Rs 375 crore in Swiss banks.) அம்மாடி!!

அப்புறம் நம்ம ராசா?

*

லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஸ்விஸ் வங்கிகளில் இருக்காமே, அதையெல்லாம் என்ன பண்ணப்போறார் ப.சி.?

*



*

Monday, November 02, 2009

349. பேராண்மை

*

பேராண்மை படம் பார்த்தேன்.

நிறைய வசனங்கள் தணிக்கைக் குழுவினால் வெட்டப்பட்டிருந்தன.

மிக்க நன்றி -- வெட்டப்பட்ட இடங்கள் "நிறைய பேசின".


*