Tuesday, May 24, 2011

504. அழகர்சாமியின் குதிரை

*


‘என்னடா இது? நம்ம தமிழ் திரைப்பட இயக்குனர்கள் - ’திலகத்’திலிருந்து ’இமயம்’ - வரைக்கும் யாருக்கும் காதல் என்பதைத் தவிர மையப்புள்ளியாக வேறு ஏதாவது வாழ்க்கைப் பிரச்சனையை வைத்து படம் இயக்கவே தெரியாதா?” என்பது எனது பல காலத்து பிலாக்கணம். அப்பாடா ... கொஞ்சம் நல்ல முடிவுகள், வளர்ச்சிகள் தெரியுது.

யுத்தம் செய்
நந்தலாலா
பயணம்
ஆடுகளம்
அழகர்சாமியின் குதிரை

.......... வரிசையாகப் பார்த்த இப்படங்களில் காதலை வெறும் ஊறுகாயாக, அல்லது முற்றிலும் காதல் இல்லாத ஒன்றாக ஆக்கிய படங்கள்.

வளர்கிறோம் ... மிக்க மகிழ்ச்சி.

அழகர்சாமியின் குதிரை

இரண்டு  காதல் ஜோடிகள் - ஊறுகாய் மாதிரி.

கதை என்னவோ ஒரு கிராமத்தின் மத நம்பிக்கைகளும், அவர்களின் நம்பிக்கைக்களுக்குத் தீனியாக ஒரு குதிரையும், குதிரைக்காரனின் அன்பும் அவசரமும் கதையாக, அழகாக அமைந்துள்ளன. 

நல்ல சிறுகதை வாசித்து முடிந்ததும் அப்பாடா ... என்று காலை நீட்டி, மறுபடி அதே கதைக்குள் மீண்டும் முங்கி, மூழ்கி, முக்குளிப்போமே அந்த உணர்வு படம் பார்த்ததும் வந்தது.

சின்ன ஊர், சின்ன நிகழ்வுகள், சின்ன சிக்கல்கள் ... ஆனால் சொன்ன விஷயங்கள் நிறைய. கிராமங்களில் விரவி நிற்கும் தெய்வ நம்பிக்கைகள், நல்ல மனிதர்கள், ஏழ்மை, வறுமை, பண்டிகைகளில் கொப்பளிக்கும் உற்சாகம், நம்பிக்கைகளிலிருந்து விலகி நிற்கும் ஒரு சின்ன இளைஞர் கூட்டம் ... எல்லாமே இனிமை. அதுவும் அந்தக் கடைசி சீனில் கிராமத்து பிரசிடென்ட் தன் மகன் வேற்று சாதியைச் சார்ந்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான் என்றதும், இந்த ஊருக்கு மழையே வராது என்று சாபம் கொடுத்தவுடனேயே, மழை கொட்டோ என்று கொட்ட ... முதலில் பெண்ணின் தகப்பன் முகத்தில் புன்முறுவல், சிறிது நொடிகளில் சாபமிட்டவரும் முறுவல் செய்ய ... நம் முகத்திலும் நல்ல முறுவல்!

யாரும் நடிக்கவில்லை; குதிரை மட்டும் எல்லோரையும் விரட்டும் இடத்தில் கொஞ்சம் ஓவர்! மைனரைப் ‘பதம் பார்க்கும்’ இடமும்தான்! ‘போலீஸ்காரர் ஜோக்’ கொஞ்சம் சில இடங்களில் ஒட்டாக இருந்தன; ஆனாலும் அவரது உடல்மொழியால் நன்கு ரசிக்க முடிந்தது.

ஆடுகளத்திலும், அழகர்சாமி குதிரையிலும் ஒரு குறை மனதில் தோன்றியது. ஆடுகளத்தில் காதல் இல்லாமல் இருந்திருந்தால் மிகவும் அப்படம்

பிடித்திருக்கும். அதிலும் டாப்ஸி மாதிரி ஒரு பொண்ணு ’தரைடிக்கெட்’ கதாநாயகனுக்கு ஜோடியா வந்தது நெருடியது. இந்தப் படத்திலும் சரண்யா கதாநாயகியாக வந்தது நெருடியது.
தனுஷையும், இப்பட நாயகனையும் (அவ்ர் பெயர்?) நாம் கதாநாயகர்களாக ஒத்துக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்து விட்டோம். நல்லது. அதே போல் அவ்வளவு அழகு குறைவான, சாதாரணமான ஒரு பெண்ணை கதாநாயகியாக ஒத்துக் கொள்ள மாட்டோமா என்ன? at least கொஞ்சம் தோல் இவ்வளவு சிகப்பில்லாமல் ஒரு திராவிட வண்ணத்தோடு இருந்திருந்தால் இன்னும் பொருத்தமல்லவா?

படத்தில் டைட்டில் போடும்போது நடிகர்கள் பெயரெல்லாம் காணோம்? எடுத்ததும் கார் ஓட்டுனர்கள் என்றெல்லாம் ஆரம்பித்தது.

’அவளுக்கென்று ஒரு மனம்’ ஸ்ரீதரின் படம். ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன் பார்த்தது.  ஜெமினி ஒரு பாடலுக்கு மழையில் நனைந்து கொண்டே பாடுவார். அந்தப் படத்தில் வந்த அந்த மழை எனக்குப் பிடித்தது. அதற்கு அடுத்து நம் தமிழ்ப்படங்களில் இந்த படத்தில் கடைசியில் பெய்த மழை  பிடித்தது. வழக்கமாக நம் தமிழ்ப்படங்களில் பெய்யும் மழை செங்குத்தாக கோடு போல் விழும். இப்படத்தில் சாய்வாக நீரை அடித்தது இயல்பான மழை போல்  நன்றாக இருந்தது. படப்பிடிப்பு இயக்குனர் தேனீ ஈஸ்வருக்குத்தான் அந்த பெருமையோ என்னவோ? இரவுக் காட்சிகளாக நாலைந்து காட்சிகள். உண்மையான இருளில் படப்பிடிப்பு நடத்தியிருந்தார்கள். நன்றாக அந்தக் காட்சிகள் இருந்தன.  ஈஸ்வரின் stills எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இப்படத்தில் படப்பிடிப்பு இன்னும் அவர் நன்றாக செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

படத்தில் இன்னொரு ஏமாற்றம் ராஜா தான். ஏனோ பாடலோ, அதைவிட பின்னணி இசையோ என்னை ஏமாற்றின.

ஒரு நாவலை எடுத்துப் படமாக்குவதற்கு தனி தைரியம் வேண்டும். அதுவும் ஒரு கிராமத்துக் கதை. தமிழ்ப்படத்திற்கான எந்த வித சிறப்பம்சங்கள் - காதல், கண்ணீர், சண்டை, அருவாள் ... - ஏதுமில்லை. மேலும், கதாசிரியர் பாஸ்கர் சக்தியை துணிந்து  துணை இயக்குனராக வைத்துள்ளார்.   இது போன்ற  கதைகளை இயக்க துணிச்சலும் தன் திறமையில் நம்பிக்கையும், மக்களின் ரசனை மீது  மிக நம்பிக்கையும்  அவசியத் தேவை.  இந்த மூன்றில் முதல் இரண்டை மட்டுமின்றி மூன்றாவதான நமது ரசனையையும் நம்பி எடுத்துள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.

அவரது மூன்றாவது நம்பிக்கையையும் நாம் காப்பாற்றி விட்டோம்.






*

Monday, May 23, 2011

503. கடவுள் என்னோடு பேசினார் ...!

*

தேர்தல் முடிவுகளோடு வெளிவந்த ஜூ.வி.யில் ஒரு பெட்டிச் செய்தி வந்திருந்தது. very interesting ...!

உயர்பதவியில் இருக்கும் ஒரு அதிகாரியிடம் ஏசு வந்து “3” என்று எழுதி சென்று விட்டாராம். ஏற்கெனவே போன அரசின் தண்டனைகள் அவருக்கு வந்த போது ஒரு விவிலிய வாசகம் அவருக்கு ஏசுவால் சொல்லப்பட்டதாம். அது விவிலியத்தில் உள்ள ஒரு வசனம். அதனால் அது அவர் மனதில் தானாகத் தோன்றியிருக்கலாமென நான் நினைத்தேன்.

ஆனால் இப்போது தேர்வு முடிவு வருவதற்கு முன்பே ஏசு வந்து ’3’ என்று எழுதியதை வைத்து அந்த அதிகாரி தி.மு.க.விற்கு மூன்று இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று நினைத்தாராம். (இந்தக் கடவுள்களே இப்படித்தான் ... சொல்ல வேண்டியதை, அது அரசியலாக இருக்கட்டும்; இல்லை, அறிவியலாக இருக்கட்டும். இப்படி ‘சுற்றி வளைத்துப் பேசுவதையே’ வாடிக்கையாக வைத்துள்ளார்கள். நேரடியாக எதையும் சட்டு புட்டுன்னு சொல்வதில்லை!!) ஆனால் திமுகவிற்கு மூன்றாவது இடம் என்றுதான் ஏசு சொல்லியிருந்திருக்கிறார் என்று அந்த அதிகாரிக்குப் பின்புதான் புரிந்ததாம்.. ஆனாலும் கடவுள்கள் செம புத்திசாலிகள்தான். திமுக வென்றிருந்தாலும் அந்த ‘3’ என்பது தி.மு.க. என்ற மூன்றெழுத்து என்று ஏசு சொன்னார் என்றும் சொல்லிக் கொள்ளலாம். அல்லது ‘3’ என்றது ‘மம்மி’ என்ற மூன்றெழுத்து, மூன்றாவது முறையாக பதவியேற்பதைக்கூட ஏசு சொன்னதாகவும் இப்போதும் சொல்லலாம். இதுவரை மூன்று I.A.S. அதிகாரிகளுக்கு எந்த பொறுப்பும் மம்மி தரவில்லையென்பதும் தினசரியில் வந்த ஒரு செய்தி. அந்த மூவரில் இந்த அதிகாரியும் ஒருவர். ஒருவேளை ஏசு ’மூவரில் நீ ஒருவன்’ என்பதைத்தான் இப்படி சொல்லியிருக்கலாமோ?!


ஏன்தான்  கடவுள்கள் இந்த வேலைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ என்று எனக்குப் புலப்படுவதேயில்லை. ஏதோ ஒன்றைச் சொல்கிறோமே .. அதை ஒழுங்காகச் சொல்லிட்டுப் போகலாமென்றும் இந்தக் கடவுள்களுக்கு ஏன் புரிபடுவதில்லை?

எனக்கும் முன்பு ஒரு “தெய்வ தரிசனம்” கிடைத்துள்ளது; அதைப் பற்றி இங்கு எழுதியுள்ளேன்.

இருந்தாலும் மேற்படி செய்தி கொடுத்த அதிகாரியின் முகவரி என்னிடம் இருந்ததால் அவருக்குக் கீழ்க்கண்ட மயில் ஒன்று அனுப்பினேன்:

hello mr. ....

read the excerpt in Junior vikatan about you and 'the message from Jesus' about the poll verdict.

got two questions:

1. should a man in public service wear his religion on his sleeves this much?

2. have you heard 'such stories' told by many - i know one interesting story told by one Dr. marimuthu, the father of John david (killer of navarasu),  for his conversion to christianity - jesus giving him the question paper for his final year exams!!

p.s.: just one more info: i was born as a christian 66 years ago!

இதுவரை இம்மயிலுக்குப் பதிலேதும் இல்லை.
இன்று - மே, 24 - காலை பதில் வந்து விட்டது. (மே,24; காலை: 10:40)

இந்த மயிலில் இரண்டாவது செய்தி இருக்கிறதே ... அதுவும் ரொம்ப interestisng .... நாவரசு கொலைக்கு முன்பே டாக்டர் மாரிமுத்து என்பவர் இந்துவாக இருந்து கிறித்துவனாக மாறியதாக என் துறைத் தலைவர் என்னிடம் சொன்னார். எப்படி, ஏன் மாறினார் என்பதற்கும் ஒரு ’கதை’ சொன்னார்.

படிக்காமல் ஊர்சுற்றிய மாரிமுத்துவிற்குக் கடைசி நேரத்தில் ஏசுவின் ஞாபகம் வந்திருக்கிறது. (ஏன் என்று என்னிடம் கேட்காதீங்க!) உடனே (இந்த மாதிரி ஆட்கள் என்ன செய்வார்களோ, அதையே அவரும் செய்துள்ளார்.) ’மனம் உருக’ ஏசுவிடம் ஜெபம் செய்ய, ஏசு அவர் முன்னே வந்து ஒரு வினாத்தாளைக் கொடுத்திருக்கிறார். அதோடு இதை leak செய்து விடாதே என்றும் ஒரு precautionary condition / command கொடுத்துள்ளார். ஆனாலும் பின்னால் ஒரு சாட்சி வேண்டுமே என்பதற்காக மாரிமுத்து நண்பன் ஒருவனிடம் சில கேள்விகளைக் கூறியுள்ளார். command-யை மீறியதற்குக் கடவுள் கண்ணை எடுக்கவில்லை! அடுத்த நாள் தேர்வில் அதே கேள்விகள்; கொஞ்சம் கேள்வி எண்கள் மட்டும் மாறியிருந்ததாம்! மாரிமுத்து தேர்வில் செம வெற்றி. அதோடு கிறித்துவனாக மாறி பிரச்சாரத்திலும் ஈடுபாடு கொண்டு, இந்தக் கதையையும் தன் கூட்டங்களில் கூறுவாராம்.

இதை என் துறைத் தலைவர் கூறியதும்  இதை எப்படி நம்புவது என்பது போல் சொல்லி விட்டு, சிறிது நேரம் கழித்து அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். (துறைத் தலைவரின் மகன் எங்கள் துறையில் இளங்கலையை முடித்து ஓரிரு ஆண்டுகள் ஆகியிருந்தது. நல்ல பையன்; நன்கு படிப்பான்; நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வாயிருந்தான்.) ’பாஸ் .. உங்க பையன் நம்ம துறையில் படிக்கும் போது அவனுக்கு நீங்கள் வினாத்தாள்களைக் கொடுத்திருப்பீர்களோ; நல்ல மதிப்பெண் பெற்றானே’ என்று கேட்டேன்.

மனிதர் துள்ளிக் குதித்து விட்டார்; பதறி விட்டார். ‘என்ன சாம்,  இப்படி சொல்லிட்டீங்க; நான் அப்படியெல்லாம் பண்ணுவேனா?’ என்று உருகிக் கேட்டு விட்டார். ‘பரவாயில்லை பாஸ்! கவலைப் படாதீங்க; நீங்க அப்படியெல்லாம் செஞ்சிருக்க மாட்டீங்க. ஆனா, ஒரு மனுஷனான நீங்களே இதை ஒரு பெரிய தப்பு என்று சொல்லும் ஒன்றை, எல்லாம் வல்ல கடவுள் செய்கிறார் என்றால் அதற்கு என்ன பொருள்?’ என்று கேட்டேன். அப்பவும் அவருக்கு மாரிமுத்தை கீழே விட மனதில்லை. ’அவர் அப்படித்தான் சொன்னார்’ என்றார்.

’மனிதனே செய்யக்கூடாது என்பதை ஏசு செய்கிறார் என்றால் நீங்கள் ஏசுவை மனிதனுக்கும் கீழான ஒன்றாக ஆக்கி விட்டீர்கள்; ஏசுவைக் கேவலப்படுத்துகிறீர்கள்’ என்றேன்.

மேலே சொன்ன ‘கதை’ நடந்ததில் எம்மாற்றமும், கூடுதலை குறைச்சலோ இன்றி சொல்லியுள்ளேன். ஆனால் இது போன்ற கதைகள் நிறைய கேட்டதுண்டு. ’துதி’ சங்கர் என்ற மதப் பிரச்சாரகர் - advertiser! - ஒருவருக்கும் இதே மாதிரி ஒரு கதையைப் பிறர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அது இதை விட interesting!  ஏனெனில் மாரிமுத்து விஷயத்தில் ஏசு வினாத்தாள் கொடுத்ததோடு நின்று விட்டார். முந்தின நாள் கிடைத்திருந்தாலும் மாரிமுத்து “படித்து” பாஸ் ஆகிவிட்டார்!  ஆனால் துதி விஷயத்தில் முடியவில்லை. கிடைத்த வினாவைப் படித்து விட்டு போனாலும் துதிக்கு தேர்வறைக்குப் போனதும் எல்லாம் மறந்து போயிற்றாம். மறுபடி அவர் இறைஞ்சி மன்றாட .... இப்போது ரொம்ப dramatic ஆக, ஏசுவின் தயவால் அவரது விடைத்தாளுக்கும், வினாத்தாளுக்கும் இடையில் ‘அப்படியே’ பதிலும்  வந்ததாம். இப்படித்தான் அவரது டிப்ளமா கோர்ஸில் பாஸ் செய்தாராம். (’பிட்’ அடிக்கும்போது இப்படித்தான் மாணவர்கள் இரண்டு தாள்களுக்கு நடுவே பிட் வைத்து காப்பி அடிப்பார்களே என்றெல்லாம் நீங்கள் நம்பிக்கையில்லாமல் நினைக்கக் கூடாது, சொல்லிப்பிட்டேன்!)

நாம் நம் வேலையை ஒழுங்காகப் பார்க்க, ‘கடவுள்கள்’ அவர்கள் வேலையை மட்டும் ஒழுங்காகப் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்??!! எதற்காக இந்த question leak, election result, போர்களில், விளையாட்டுகளில் வெற்றி தோல்வி, - இதிலெல்லாம் தலையிட வேண்டும்? புரியவேயில்லை!

:(

*