Thursday, October 24, 2013

691. TWO SIDES OF A COLLEGE









*



கல்லூரி பசங்க மூணுபேரு அவங்க கல்லூரி முதல்வரைக் கொன்னுட்டாங்களாமே ... இதை ஒரு ஐந்து வருஷத்துக்கு முந்தி சொல்லியிருந்தா நான் ரொம்ப ஆச்சரியப்பட்டிருப்பேன். ஏன்னா என் அனுபவம் அப்படி. நான் 33 வருஷமா வேலை பார்த்த கல்லூரியும் சரி .. அங்குள்ள எங்க மாணவர்களும் சரி .. அப்படித் தங்கமா இருந்தது.

வேலை பார்த்தா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேலை பார்க்கணும் அப்டின்னு எல்லோரும் நினைக்கிற அளவிற்குக் காலம் காலமாய் இருந்தது எங்கள் கல்லூரி. மற்றக் கல்லூரி ஆசிரியர்களே எங்கள் கல்லூரிக்காகவே அங்கே வேலை பார்க்கிற எங்களை கொஞ்சம் பொறாமையோடு பார்த்து, கல்லூரிக்காகவே எங்களுக்குத் தனி மரியாதை கொடுத்ததைப் பல தடவை அனுபவித்திருக்கிறேன். நிறைய சுதந்திரம். நிறைய சலுகைகள். அந்தக் கல்லுரியில் வேலை பார்ப்பதே அப்படி ஒரு சுகம். அழகான ஆசிரிய-மாணவ உறவுகள்.

ஆசிரியர்களுக்குத்தான் அப்படியென்றால் இங்கு மாணவனாக இருப்பதும் தனிப் பெருமை. மதுரையில் அமெரிக்கன் கல்லூரி மாணவன் என்றால் இளைஞர் உலகத்தில் தனியிடம் தான். அட ... கல்லூரி மாணவிகளிடமே அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்குத் தனியிடம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.  

ONE SIDE OF OUR COLLEGE

கல்லூரி என்றாலே ragging என்றெல்லாம் சொல்லுவார்களே ... அப்படியெல்லாம் எங்கள் கல்லூரியில் கிடையாது. சூழலே வேறு, ஆண்டின் ஆரம்பத்தில் admission forms  கொடுக்க ஆரம்பித்த நாளே கல்லூரிக்குள்  ஒரு தற்காலிக கூரை ஷெட் ஒன்று போட்டிருப்பார்கள். அதில் விரும்பும் சீனியர் மாணவர்கள் புதியதாக admission வாங்க வரும் மாணவர்களுக்கு அறிவுரை கூறத் தயாராக இருப்பார்கள். புதிதாக வரும் மாணவர்கள் எந்த பாடம் எடுத்திருக்கிறார்கள்; எந்தப் பாடத் திட்டத்தில் சேரலாம் போன்றவைகளைச் சொல்வார்கள்.

அதைவிட அவர்களின் உதவி புதிய மாணவர்களுக்கு, அதிலும் கிராமத்திலிருந்து வரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கும், அவர்கள் பெற்றோர்களுக்கும் மிகவும் வசதியாக இருக்கும். இந்த மாணவர்களே admission-யை முழுவதும் நிரப்பித் தர உதவுவார்கள். புது மாணவர்களுக்குத் தொல்லை தருவது தங்கள் மதிப்பெண்களுக்கு admission form-ல் attestation  பெறுவது. வெளியூரிலிருந்து வரும் மாணவன் ... பாவம் attestation வாங்க எங்கே போவான்? அதற்காகவே volunteer ஆக உதவுவதற்காக இருக்கும் மாணவர்கள் விடுமுறையிலும் கல்லூரிக்கு வரும் ஆசிரியர்களின் உதவியோடு உடனே attestation வாங்கிக் கொடுத்து விடுவார்கள். admission form வாங்க வருபவர் சில நிமிடங்களில் அதனை முழுவதுமாக பூர்த்தி செய்து, உடனே கல்லூரியில் கொடுத்து விட்டுச் செல்லும் நிலைமை இருக்கும். எனக்குத் தெரிந்த வேறு எந்தக் கல்லூரியிலும் இப்படி சீனியர் மாணவர்கள் புதிய மாணவர்களுக்கு இப்படி உதவுவது இருப்பதாகத் தெரியவில்லை.

Thanks to Dr. Silas who introduced this 'May I Help' counter.

admission form போடும் போது கிடைக்கும் இந்த இன்ப உதவி இன்னும் நீடிக்கும். மாணவனுக்கு இடம் கிடைத்த பிறகு கல்லூரி ஆரம்பிக்கும் நாளன்று கல்லூரிக்குள் நுழைந்ததும் சீனியர் மாணவர்களால் வரவேற்கப்படுவார்கள். இன்று சீனியர்களுக்கு வகுப்பு இருக்காது. volunteers மட்டும் இருப்பார்கள்.

மாணவர் விடுதிகள், துறைகள் என்று தனித்தனியாக சீனியர் மாணவர்கள் மேஜை போட்டு, வரும் புதிய மாணவர்களை வரவேற்று அவர்கள் விடுதிக்குச் செல்ல உதவுவார்கள். முதல் நாளன்று காலையில் புதிய மாணவர்களுக்கு கூட்டம் ஒன்று - ORIENTATION - நடக்கும். வழக்கமாக கல்லூரி முதல்வர் தமிழில் மாணவர்களை வரவேற்றுப் பேசுவார். பெற்றோர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும். கூட்டம் முடிந்ததும் புதிய மாணவர்கள் தங்கள் தங்கள் துறைக்குச் செல்வார்கள். volunteers அவர்களை வழி நடத்தி துறைக்கு அழைத்துச் செல்வார்கள். ஆசிரியர்கள் துறைகளில் காத்திருந்து துறை பற்றிய விளக்கங்கள், ஏனைய எதிர்பார்ப்புகள் என்றெல்லாம் பரிமாறுவதுண்டு.

மதியம் புதிய மாணவர்களுக்கு கல்லூரி விடுதிகளில் உணவு. புதிய மாணவர்கள், volunteers, ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து மதிய உணவு. என் அனுபவத்தில் ஒரு முறை வெளிநாட்டு மாணவன் ஒருவன் என் அருகில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் அழ ஆரம்பித்து விட்டான். என்னப்பா என்று கேட்டால், I never thought that I could sit with my masters in a lunch table  என்று உறுக்கமாக அழுது கொண்டே  பேசினான். இப்படி கல்லூரி வாழ்வை ஆரம்பிக்கும் ஒரு மாணவனுக்கு கல்லூரியின் மீதோ, ஆசிரியர்கள் மீதோ எவ்வளவு நம்பிக்கையும், பாசமும் இருக்கும்.

மீண்டும் மாலையில் துறையில் சந்திப்பு. இப்போது பொதுவாக volunteers பொறுப்பேற்றுக் கொள்வார்கள். மாணவர்களை கல்லூரியின் பல இடங்களுக்கு - நூலகம், மைதானம், வகுப்பு நடக்கும் பல கட்டிடங்களும் அவர்களின் பெயர்களும், N.C.C., N.S.S. - போன்ற இடங்களுக்கு volunteers அழைத்துப் போவார்கள். மாலை மறுபடி ஒரு கூட்டம். இப்போது கல்லூரித் தலைவர் ஆங்கிலத்தில் உரையாற்றுவார்.

புதிய மாணவர்கள் மூன்றாம் நாள் தான் சீனியர் மாணவர்களைச் சந்திப்பார்கள். ஆனால் அதற்குள் பல volunteers அவர்களுக்குப் பழகியிருக்கும். volunteers சீனியர்கள் அநேகமாக இதற்குள் புதியவர்களுக்கு ‘அண்ணனாக’ மாறியிருப்பார்கள். இச்சூழலில் ஏது ragging!! எல்லாமே smooth sailing தான்.

------------------

 மாணவர்களுக்கு கல்லூரி வாழ்க்கையின் முதல் நாள் இவ்வளவு இனிமையாக இருக்கும். ஆனால் கடைசி நாள் அவர்களையும், அவர்கள் மனத்தையும் உலுக்கியெடுத்து விடும். CANDLE LIGHT CEREMONY . கல்லூரியின் இறுதி வேலை நாளின் மாலையில் துறை வாரியாக மாணவர்களும், ஆசிரியர்களும் அமர்ந்து ஒரு high tea முடித்து விட்டு, கல்லூரியின் பெரு மன்றத்திற்குள் வெள்ளை ஆடையோடு அமைதியாக நுழைந்து அமர்ந்திருக்க வேண்டும். Schubert-ன் Ave Maria  என்ற symphony இசை மெல்லியதாகத் தவழ்ந்து வரும்.What a gripping music!

மண்டபத்தின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு மேடையில் ஒரே ஒரு குத்து விளக்கு மட்டும் எரியும். அதிலிருந்து ஆசிரியர்கள் தங்கள் மெழுகுவர்த்தியை ஏற்றி, மாணவர்களிடையே வந்து அவர்களின் மெழுகுவர்த்திகளில் ஒளியை ஏற்றுவார்கள். இருண்ட மண்டபம் சில நிமிடங்களில் மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தில் ஒளிரும். வெளியே வரும் மாணவர்கள் மண்டபத்தின் சுவர்களில் மெழுகுவர்த்திகளை ஆங்காங்கே வைத்து விட்டு வந்த பின் இருளில் பார்க்கவே அந்த மண்டபம் ஒளியால் மின்னும்.

வழக்கமாக இந்த விழாவின் படிப்பு முடித்து வெளியேறும்  மாணவர்களின் உணர்ச்சிகளை அதிகமாகவே தூண்டி விட்டு விடும். பல ஆண்டு மாணவர்களோடு இந்த உணர்ச்சிப் போராட்டத்தில் நானும் இருந்ததை இன்றும் எண்ணும்போது கொஞ்சம் மனசு தடுமாறுகிறது. ஆயிரத்தி தொன்னூறு தொன்னூற்றைந்து ஆண்டு வரை இந்த நாளில் மாணவர்கள் தங்கள் துறைகளுக்குச் சென்று தங்கள் உணர்வுகளின் மேலீட்டால் கலங்குவதோ, அழுவதோ ஒரு தொடர் நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் இருக்கும். A very sentimental day ........ No American College student can forget this day.

-----------------

பல முறை என் கல்லூரி மாணவர்களின் ‘நன்னடத்தை’ என்னைப் புல்லரிக்கச் செய்துள்ளன. ஒரு உதாரணம். கல்லூரியின் MAIN HALL தனது 90வது ஆண்டை முடித்த போது அதை ஒரு விழாவாக எடுக்க முடிவு செய்யப்பட்டது. என் நல்லூழ். நான் அதன் coordinator ஆக இருந்தேன். அந்த நாளை COMMEMORATION DAY என்று கொண்டாடினோம். (சில ஆண்டுகள் தொடர்ந்து நடந்த இந்த இனிய விழா கல்லூரித் தலைமை மாறியதும் நின்று போனது இன்னொரு சோகம்!) மதியத்திலிருந்து விழாக்கோலம். ஒரு பக்கம் மாணவர்களின் ஆட்டம் .. பாட்டம். இன்னொரு பக்கம் food court .. மகிழ்ச்சியால் எல்லோரும் மூழ்கி இருப்போம். பட்டிமன்றமும் நடந்தது. எல்லா நிகழ்ச்சிகளுக்கும் முத்தாய்ப்பாய் இறுதியில் ஒரு ஒலி-ஒளிக் காட்சி.

நான் பொறுப்பில் இருந்த முதல் வருடத்தில் மெயின் ஹாலைப் பின்னணியாக வைத்து, 90 ஆண்டுகளுக்கு முன் பசுமலையிலிருந்த சிறு கல்லூரி இந்தப் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டதை வைத்து, அந்தக் காலத்து கல்லூரி முதல்வர் எடுத்த அந்த நல்ல முடிவை நாடகமாக்கினோம். மெயின் ஹாலைச் சுற்றி மாணவர்களை நிற்க வைத்து, மேலே மாணவ-நடிகர்கள் நடித்தார்கள். அவர்களுக்குப் பின்புலமாகக் கீழிருந்து ஒலி தந்தோம். இதில் நாங்கள் மறந்தது - இது மாணவர்களுக்குப் புதிய ஒரு நிகழ்வு. மாணவிகளும் நிறைய் உண்டு. எங்கும் இருள். யாருக்கும் எந்த தொல்லையும் இருக்கக்கூடாது. ஆனால் இதை நாங்கள் முதலில் நினைத்துப் பார்க்கவில்லை. ஆகவே ‘பந்தோபஸ்து’ ஏதும் திட்டமிடவில்லை. 

விளக்குகள் அணைந்தன. எங்கும் இருட்டு. ஒரே ஒரு விளக்கு ஹாலின் முன்பக்கம் ஒளிர்ந்தது. அந்த ஒளியில் ‘ஜெபம்’ நடந்தது. பின் ஒலி-ஒளி நிகழ்ச்சி. நிகழ்ச்சியில் நடிகர்கள் ஹாலின் உள்ளும், மேலும் கைகளில் தீவட்டிகளோடு நடித்தார்கள் - 90 ஆண்டுகளுக்கு முந்திய நிகழ்வல்லவா! புதிய கட்டிடம் கட்டப்பட்டதாக நடித்தார்கள். அதன் முடிவில் YANNY-ன் ஓசைப் பின்னணியோடு ஒரு தீப்பிழம்பு கீழிருந்து கட்டிடத்தின் உச்சிக்கு எழும்பியது விழாவின் அது உச்ச கட்டமாக இருந்தது. 

எந்தக் குழப்பமும் இல்லை. விளக்குகள் அணைந்ததும் ஓரிரு விசில்கள். அவ்வளவே. நிகழ்ச்சி முழுவதும் இனிமையான அமைதியில் நடந்தது, தீப்பிழம்பு மேலெழுந்த போது யாரோ ஒரு மாணவன் நிலவியிருந்த அமைதிக்குள்ளிருந்து  தனிக்குரலில் உரத்துப் பாட ஆரம்பித்தான்: (வாழ்க அவன்.) HAPPY BIRTHDAY TO YOU .... கூட்டமும் அவனோடு சேர்ந்தது. தன்னிச்சையாக ஆரம்பித்த அந்தப் பாடல் பலரின் கண்களில் கண்ணீரைக் கொண்டு வந்தது. ஆடிப் போய் விட்டேன். 

Thanks to Dr. Sudhnandha for starting commemoration day functions..

Thanks to Dr. Prabakar & Dr. Kali Sundar for the lovely light-sound show.

இது போன்று பல இடங்களில் எங்கள் கல்லூரி மாணவர்களின் நடத்தை பெருமை தேடித்தரும் நேரங்களாக இருந்திருக்கின்றன. நாங்களா சொல்லிக் கொடுத்தோம். அவர்களிடம் அது innate ஆக இருந்திருக்கும் போலும். அந்தப் பெருமை எனக்கு எப்போதும் என் கல்லூரி மாணவர்களைப் பொறுத்து இருந்தது. 

ஆனால் ......

-------------------------------------

OTHER  SIDE OF OUR COLLEGE


கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்கள் கல்லூரியில் ஒரு குழப்பம்.கல்லூரியை ஆரம்பித்த அமெரிக்க மிஷநரிகள்  கல்லூரிச் சட்டத்திலேயே இது பொதுமக்களுக்கான கல்லூரி என்று ஆணித்தரமாகக் கூறி இக்கல்லூரி கிறித்துவக் கட்டுப்பாட்டிற்குள் வராது என்று எழுதி வைத்துவிட்டுப் போனார்கள். ஆனால் இப்போது கல்லூரிகள் எல்லாமே வியாபாரம் தானே. ஆகவே கிறித்துவ சபை C.S.I. கல்லூரியைத் தங்கள் பிடிக்குள் கொண்டுவர முனைந்தார்கள். இப்போது அவர்கள் கையே மேலோங்கி நிற்கிறது. முறையற்ற வழியில் தங்கள் பிடிக்குள் கொண்டு வந்து விட்டார்கள். இதற்கு பல அதர்ம வழிகள். அதில் ஒன்று சில மாணவர்களைத் தங்கள் பக்கம் இழுத்து ..... அதில் பெரும் வெற்றியும் பெற்று விட்டார்கள். அந்த மாணவர்கள் “ஆடிய ஆட்டத்தின்’ சில படங்கள் மட்டும் இங்கே. எங்கள் கல்லூரி மாணவர்களா இவர்கள் என்று நொந்து போய் எடுத்த படங்கள் இவை.

கல்லும் கட்டையும் கல்விக் கருவிகளாகி விட்டன

வெளியிலிருந்து வேடிக்கை பார்த்த பாதிரிகள்
.

இன்னும் இத்தகைய ’அருமையான’ படங்களைப் பார்க்க விரும்பினால், இங்கே செல்லுங்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் வண்டிகளைச் ‘சரியாக’ அடையாளம் கண்டு உடைத்துப் போட்டனர்.

இப்படி ஒரு செயலை கனவிலும் எதிர்பார்க்காத நான் ஒரு நண்பரிடம், ‘இதைப் பார்த்த பிறகாவது எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல் ‘ராமன் ஆண்டாலென்ன ... ராவணன் ஆண்டாலென்ன ...’ என்று நினைக்கும் ஆசிரியர்கள் - அதுவும் ‘பக்தி’ மிகுந்த ஆசிரியர்கள் மனம் மாற மாட்டார்களா?’ என்று கேட்டேன். 
நண்பரின் பதில் அதிர்ச்சியடைய வைத்தது. பக்தியான ஒரு ஆசிரியர், ‘இது போல் இன்னும் நடந்தால் தான் போராடுபவர்களுக்கு ‘நல்ல புத்தி’ வரும்’ என்று சொன்னாராம். அடக் கடவுளே ....!

உண்மை வெல்லும் என்கிறார்கள். நிஜமாகவா .... பார்க்கலாம்.

*

ஒன்று புரிகிறது. மாணவர்களில் பலரும் பச்சை மண்கள் தான். எப்படி படைக்கிறோமோ அது போல் அவர்களும் மாறி விடுகிறார்கள் போலும். 

எங்கள் கல்லூரியில் தடியெடுத்தான் ... சமீபத்தில் பார்த்த நிகழ்வில் கத்தி எடுத்திருக்கிறான். 


*










*

Monday, October 21, 2013

690. தருமி பக்கம் (8) - மறுமலர்ச்சியில் தமிழ்த் திரையுலகம்







*
*


அதீதம் இணைய இதழில் வந்த என் கட்டுரையின் மறுபதிப்பு:


திருட்டுத் தனமா ஆங்கிலத் திரைப்படங்கள் பார்க்க ஆரம்பித்த அந்தக் காலத்தில் இருந்து (முதன் முதல் திருட்டுத்தனமாக வீட்டுக்குத் தெரியாமல் பார்த்த முதல் சினிமா நினைவுக்கு வருகிறது...!)ஒரு பெரிய கவலை! ஆங்கிலப்படங்கள் என்றால் genre வாரியாக படங்கள் வருகிறதே .. அங்கே மாதிரி தனியான காமெடி படம், சண்டைப் படம், காதல் படம், வீரதீரச் செயல்கள் படம் என்று வித விதமாக வராமல் எல்லா தமிழ்ப் படமும் ஒரே மாதிரியாக வருகிறதே என்று தோன்றும்.

ஒரு வேளை நம் நாட்டில் இதிகாசங்கள் நிறைய உண்டு. அமெரிக்க நாட்டின் வரலாறு மிகச் சிறிதே. இவர்களுக்கு நம்மைப் போன்ற பழம் காவியங்கள் இல்லை. அவர்கள் கைவசம் இருப்பது ஒரு உள்நாட்டுப் போர், முதல் இரண்டாம் உலகப் போர்கள், ரஷ்யாவுடன் இருந்த cold war ... இதனால் பல படங்களில் இவைகளில் ஏதாவது ஒன்றினை வைத்துப் படம் எடுத்திருப்பார்கள் போலும். இப்படி ஏதும் அதிகம் இல்லாத நாடுகளில்  இது போன்ற வரலாறுகளும் இல்லாததால் அதிகமாக தனி மனிதனை வைத்தே படம் எடுத்திருப்பார்களோ என்று எனக்குத் தோன்றும். நமக்கிருந்த புராணக்கதைகளே நமக்குப் போதும் போதும் என்ற அளவில் இருந்ததால் அதை மட்டுமே கதைக் களமாக்கி முதலில் படம் எடுத்தார்கள். பின் அதை விட்டு விட்டு காதலை மட்டும் பிடித்துக் கொண்டார்கள் போலும்.

புது தியரி ஒன்றும் பல மக்களால் சொல்லப்படுவதுண்டு. இரண்டரை மணி நேரம் காசு கொடுத்து போவது நம்மை மறந்து ‘ஜாலியாக’ இருந்து விட்டு வர மட்டுமே என்பார்கள். அனேகமாக இந்தத் தத்துவம் பேசுபவர்கள் எல்லோரும் ஒரு வாராந்தரியைக் கையில் எடுத்தால் அதில் உள்ள ஜோக்ஸ் மட்டும் படித்து பத்திரிகையைத் தூக்கி எறிபவர்களாக இருக்கும். அதில் உள்ள பல நல்ல கட்டுரைகளை அவர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. வாசிப்பவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான ரசனை இருப்பதில்லை. வெறும் காமிக்ஸ் வாசகர்கள் உண்டு. சிறு வயதிலிருந்தே இதில் எனக்கு ரசனை இல்லை. ஆனால் மற்ற கதைகளைத் தொடர்ந்து வாசிப்பதுண்டு. வாசித்த பல genre வாரியான புத்தகங்களை மீண்டும் நினைத்துப் பார்த்தால் எந்தக் கதைகள் வாசித்து என் கண்ணில் கண்ணீர் கசிந்ததோ அவைகளே நினைவில் நிற்கின்றன. முதன் முதல் கண்ணீர் வரவழைத்த நாவல் அகிலனின் ‘பாவை விளக்கு’. ஆங்கில நாவல்களில் முன்னிடம் வகிப்பது Leon Uris எழுதிய Exodus. மூன்று முறை வாசித்த போதும் கண்ணீருக்குப் பஞ்சமில்லாமல் வாசித்தேன். Alex Haley எழுதிய The Roots. இலக்கியங்களை வாசிக்கும் போது நம் நெஞ்சை உலுக்கும் படைப்புகள் மனத்தின் ஆழத்திற்கே சென்று தங்கி விடுகின்றன. இந்த தியரியோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது திரைப்படங்கள் just for past time என்று சொல்வது சரியாகத் தெரியவில்லை.

நம் மக்கள் கூறும் இந்த ’இலக்கணத்தோடு’ வரும் படங்களில் இன்னொரு வேடிக்கை ஒரே படத்தில் அனைத்து சுவைகளும் இருக்க வேண்டும் என்கிறார்கள் படைப்பாளிகளும், படம் பார்ப்பவர்களில் பலரும். படம வருவதற்கு முன்பே நம் இயக்குனர்கள் தங்கள் படத்தை வானளாவப் புகழ்வதும் கடைசியாக் அப்படத்தில் அது .. இது .. என்று எல்லாமும் இருப்பதாகக் கூறுவார்கள். அதில் கட்டாயம் காதல் நிச்சயமாக இருக்கும். இவர்கள் இப்படி ம்ருகி மருகி காதலைப் பறை சாற்றுவதால் தான் நமது மக்களும் ‘காதல் .. காதல் .. காதல் இல்லையேல் சாதல்’ என்று முடிவு பண்ணுகிறார்களோ என்னவோ! தற்கொலைகள் அதிகமாவது இந்த அடிப்படையில் தானோ என்னவோ! எதற்கும் சாகாத இளசுகள் காதலுக்காக உயிரை விடுவது சினிமாக்கள் தரும் உத்வேகம் தானோ என்னவோ!

இப்படியே தான் நமது படங்கள் வரும்; வேறு வழியில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தமிழ்ப்பட உலகில் திடீரென்று சில நல்ல மாற்றங்கள் தோன்ற ஆரம்பித்து விட்டன. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வரும் மாற்றங்கள் இதைப் போலவே தொடர்ந்தால் மிக மிக நல்லது. இதற்கு அரசு கூட ஒத்துழைக்க முடியும். படத்தின் நீளம் இன்னொரு தடைக்கல். எப்படியும் இரண்டரை மணி நேரம் என்பது யார் விதித்த விதியோ. படத்தின் நீளத்திற்காகவே இன்னும் இரு பாட்டு; நான்கு சண்டை என்று போட்டி போட்டுக்கொண்டு படத்தின் நீளத்தை அதிகரிக்கிறார்கள். எததெற்கோ காரணம் சொல்லி வரியை அரசு குறைக்கிறது. ஒன்றரை மணி நேரத்திற்குள் எடுக்கும் படத்திற்கு வரிக் குறைப்பு என்று ஒன்று கொண்டு வந்தால் இன்னும் சிறப்பு. நீளத்திற்காகவே நம் பல கதைகள் வெறும் ‘அவியல்களாக’ மாறி விடுகின்றன. அவை இதில் கொஞ்சம் தவிர்க்கப்படலாம்.

படத்தின் நீளத்திற்காகவே சேர்க்கப்பட வேண்டும் என்று விதிக்குள் வருவது திரைப்பாடல்கள். இவைகள் தேவையில்லை என்று பெரும் பிரம்மாக்கள் பேட்டிகளில் சொல்லி விடுவார்கள். அதோடு அவர்கள் சரி .. அதற்குரிய முயற்சிகளில் அவர்கள் இறங்குவதில்லை. நல்ல வேளையாக படங்களில் பாடல் எதற்கு என்று கடந்த ஒரு வாரத்தில் இரு இசை இயக்குனர்கள் - முதலில், விஜய் அண்டோனி, அடுத்து, அதை ஒத்துக் கொண்டுள்ள ஜிப்ரான் - கூறியிருப்பது இன்னும் மகிழ்ச்சியைத் தருகிறது.

எப்படியோ ... எனக்குத் தோன்றுவது தமிழ்ப்படங்களில் ஒரு புது மறுமலர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இது மேலும் வளர வேண்டும்.

நல்ல காலம் பிறக்க வேண்டும் ... நடக்கும் புதிய நல்ல விஷயங்கள் தொடர வேண்டும்.


*

படங்கள்: இணையத்திலிருந்து..

Wednesday, October 16, 2013

689. நான் ஏன் இந்து அல்ல ... 5




*


*
தொடர் பதிவுகள்:   1 ......     2 .....     3 .....  4..........  5..............  6 ...........  7..................

*

*



 அத்தியாயம்   4

சமகால இந்து மதம்


மேற்படிப்புக்கு நான் தள்ளிவிடப்பட்ட போது ஒவ்வொரு நிலையிலும் கல்வி எனக்கு அன்னியமாக இருந்தது. மேலும் மேலும் அது பார்ப்பனிய மயமாகவும் ஆங்கில மயமாகவும் இருந்தது.

வரலாற்றுப் புத்தகம் முழுக்க சத்திரியர்களின் கதைகளே ஆக்கிரமித்திருந்தன. தலித் பகுஜன்களின் வாழ்க்கை இன்று வரை பாடத்திட்டத்தில் இடம் பெறவில்லை. நாமெல்லாம் வரலாற்றிலிருந்து புறக்கணிக்கப்பட்டு விட்டோம்.(94)

பார்ப்பனிய  பாடங்கள் திட்டமிட்டு மெளனம் சாதித்த போது ஆங்கிலப் பாடங்கள் அதற்கு எதிர்மாறாக இருந்தன. அவைகள் ஐரோப்பாவில் இருக்கிற வர்க்கங்கள் பற்றிக் குறிப்பிட்டன. ஏழை பணக்கார வர்க்கங்களின் கலாச்சாரம் குறித்துப் பேசின. ஆங்கிலப் பாடப்புத்தகம் டிக்கன்ஸ் போன்ற எழுத்தாளர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது. அரசியல், அறிவியல் பாடத்தில் பல்வேறு வர்க்கங்களின் பண்பாடும், விடுதலை குறித்த கருத்துகளும், சமத்துவம் மற்றும் சமத்துவமின்மை போன்ற கருத்துகளும் இடம் பெற்றிருந்தன.

வர்க்கச் சமுதாயங்களில் அங்கும் கூட முரண்பாடுகள் இருந்த போதிலும் நமது இருப்பை மவுனமாக்கும் சதி என்பது சாதியச் சமுதாயங்களை விட அங்கு குறைவு என்பது தான். தெலுங்குப் பாடப்புத்தகத்தில் அடக்கி வைக்கப்பட்ட மெளனம் இடியைப் போல பயங்கரமானது.

உயர்கல்வி அமைப்புகளில் நான் ஆதிக்க சாதி ஆசிரியர்களையே எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ... அவர்களே சாதி வெறியர்களாக இருந்தார்கள்.(95)

இந்து ஆசிரியர்களின் கருத்துப்படி நாங்கள் பல்கலைக் கழகத்தில் இடம் பெறவே தகுதியற்றவர்கள்.

கல்வியின் தரத்தைக் குறைப்பதற்குப் பதிலாக எங்களுக்கு எங்களுடைய சூழ்நிலையிலேயே புதிய வாழ்க்கை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்கள். அவர்களுடைய கருத்துப்படி  நாங்கள் தெலுங்கிலோ ஆங்கிலத்திலோ புலமை பெற முடியாது.

நாங்கள் எங்களுக்கு எதிரான, ஆங்கில மயமாக்கப்பட்ட பார்ப்பனீய வகுப்பறைகளில் உட்கார்ந்திருக்கிறோம். எங்களுடைய பெற்றோர்களின் உபரியை உறிஞ்சி உருவாக்கப்பட்ட வகுப்பறைகள் அவை.

நகர மையங்களுக்கு நாங்கள் வந்த போது ‘பிராமண உணவு விடுதி’ என அங்கே பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. உணவும் கூட பார்ப்பன சுவைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டவையாகவே இருந்தன. ... நமது ருசிக்கேற்ப உணவு அளிக்கக்கூடிய குருமா, கவுடா ஓட்டல் ஒன்று கூட நான் பார்த்ததில்லை. பார்ப்பன பனியா ருசியே எல்லோருக்குமான ருசியாக மாற்றப்பட்டிருந்தன.(96)

இங்கும் அங்குமாய் ஒரு சில தலித் அதிகாரிகள் இருந்தார்கள். அதுவும் கூட டாக்டர் அமபேத்கர் அவர்கள் வாங்கித் தந்த இட ஒதுக்கீட்டின் முலம் தான் நிகழ்ந்தது. தலித் அலுவலர்கள் மீது அலுவலகத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டது.

நாங்கள் மாணவர்களாக இருந்த போது மகாத்மா பூலே பற்றியோ, டாக்டர் அம்பேத்கர் பற்றியோ யாரும் சொல்லவேயில்லை. எங்களுக்கெல்லாம் காந்தி, சுபாஷ், நேரு போன்றவர்களைப் பற்றித்தான் கூறினார்கள்.(98)

சுதந்திரத்திற்குப் பின் ... காங்கிரஸ் தலித் பகுஜன் நலன்கள் குறித்துப் பேசி வந்தது.  காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த மேல் சாதியினருக்கும் தலித் பகுஜன்களுக்குமான உறவு ராமனுக்கும் அனுமனுக்குமிடையில் உள்ள உறவாக இருந்தது.  அனுமன் தென்னிந்திய தேசியத் தலைவனான ராவணனை எதிர்த்த ராமனுடைய படையில் சேர்ந்த தலித் ஆவான். ராமனுடைய பேரரசுக்காக அவன் இரவு பகலாக உழைத்தான்.; போராடினான. இருந்தும் கூட அனுமன் நிர்வாகத்தில் ஒதுக்கப்பட்டவனாகவும், ஏவல் புரிவோனாகவுமே நடத்தப்பட்டான்.  ... இன்றைய அரசியல் நடைமுறைகள் அன்றைய இராம ராஜ்ஜியப் பாணியில் வளர்க்கப்பட்டன.(99)

ஏழையாக இருந்தாலும் ஒரு ‘மேற்’சாதிக்காரன் தன்னை மேலானவனாகவே கருதிக் கொள்கிறான். பணக்கார ‘மேற்’சாதியானும் அப்படித்தான் நினைத்துக் கொள்கிறான். பணம் சேர்ப்பதன் மூலமாகவே ஒரு தலித் பகுஜனின் அந்தஸ்து என்பது உயர்ந்து விடுவதில்லை.(100)

தலித் பகுஜன் மக்கள் கம்யூனிசத் தலைமையிலிருந்து மூன்று வகைகளில் வேறுபட்டவர்களாகவே இருந்துவந்தார்கள். ... ஒன்று: கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை மேல்சாதி வசமாக, குறிப்பாக பார்ப்பனர்கள் கையில் இருந்தது.. இரண்டு: அவர்கள் அன்றாட வாழ்வில் இந்துக்களாகவே வாழ்ந்து வந்தார்கள்.மூன்றாவதாகக் கட்சியிலிருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் ஏழையாகவே இருப்பார்கள். ஆனால் தலைவர்களோ பணக்காரப் பின்னணியிலிருந்து  உருவானவர்கள். கம்யூனிஸ்ட் கட்சியில் மக்கள் கூட்டம் என்பது தலித் பகுஜன் கூட்டமாகவே இருந்தது. இருந்தும் அவர்கள் தலைமைக்கு அழைக்கப்படவேயில்லை.  ... கேரளாவில் பொது மக்களிடம் கொடூரமாக நடந்து கொண்ட நம்பூதிரிகளே தலைவர்கள் ஆனார்கள்.  ... இவ்வாறு நாடு முழுவதும் பார்ப்பனர்கள் எல்லோரும் தலைவர்கள் ஆனார்கள். மேல்சாதித் தலைவர்கள் ஒரு குழுவாகவும், தலித் பகுஜன் மக்கள் தொண்ட்ர்களாகவும், கட்சி உறுப்பினர்களாகவும் இரண்டு அடுக்காகச் செயல்பட்டார்கள். டாக்டர் அம்பேத்கர்தான் இந்த் உண்மையை முதன் முதல் அறிந்து கொண்டு செயல்பட்டவர்.

எல்லா இந்துக் கடவுள்களும் பிரம்மா, விஷ்ணு தொடங்கி தசாவதாரம் வரை தலித் பகுஜன்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய கடவுள்களாக இருந்தார்கள். ... இந்திய கம்யூனிச இலக்கியங்கள் எதுவும் இந்தக் கடவுள்களை விமர்சனம் செய்ததே இல்லை.(101)

மாற்றுக் கலாச்சாரம் குறித்து கம்யூனிஸ்டுகள் பேசியபோதும் கூட, அந்த மாற்றுக் கலாச்சாரம் இந்து வாழ்க்கை முறையிலிருந்து விலகியதில்லை. இது இந்தியக் கம்யூனிஸ்ட்டுக்கே உரித்த குணமாகும். (102)

1990-ல் இருந்தே இந்து சாதியினருக்கும் தலித் பகுஜன் சாதியினருக்கும் இடையேயிருந்த முரண்பட்ட கலாச்சார வேறுபட்டைக் கூர்மையாக அறிய முடிந்தது.

நான் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய போது விஞ்ஞானக் கல்வியும் மேலைநாட்டு அறிவும் எந்த வகையிலும் இந்துக்களைப் பகுத்தறிவாளர்களாக மாற்றவில்லை என்பதை உணர்ந்தேன்.

தலித் பகுஜன சாதியிலிருந்து வரும் இளைஞர்கள் தகுதி குறைந்தவர்கள் என்றும் அவர்கள் பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணியாற்ற தகுதியற்றவர்கள் என்றும் 1990களில் கூட (மண்டல் இயக்கம் நடைபெற்றபோது) அவர்களால் வாதிட முடிந்தது. (103)

மேல்சாதியினருடைய புத்தக அறிவு தலித் பகுஜன்களின் உழைப்பு சார்ந்த அறிவை விட உயர்வானது என்று தலைகீழாக நினைக்கும் மேல் சாதிக்காரனை எப்போதும் திருத்த முடியாது. (104)

நகர்மயமாதல் அதிகரித்து வரும் இந்நாட்களில் பார்ப்பனர்கள் நகர்ப்புறங்களில் குவிந்து வருகின்றனர்.

மூவாயிரம் ஆண்டுகளாக தலித் பகுஜன் படிப்பதற்குக் கடுமையான எதிர்ப்பு இருந்து வந்தும் கூட அவர்களின் முதல் சந்ததியினர் கல்வி கற்ற போது ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியல் அறிஞர்கள், நிர்வாகிகள், ஆகியோரின் திறமை, முன்னேற்றம் என்பன நம்ப முடியாத அளவிற்கு இருந்தன.  ... தலித் பகுஜனங்களின் திறமை பார்ப்பனின் திறமையை விட எந்த விதத்திலும் குறைவானதாய் இல்லை. பல மடங்கு உயர்வாகத்தான் உள்ளது. (105)

பார்ப்பனியம் மனித சிந்தனையை வருணாசிரம அடிப்படையில் மேல் கீழாகப் பிரித்தது. (106)

முதலாளித்துவச் சந்தை சீரழிந்த சாதிச் சந்தையாக மாறிவிட்டது. பம்பாய், தில்லி, கல்கத்தா, ஐதராபாத் போன்ற பெரு நகரங்களில் கூட எந்த தலித் பகுஜனும் தொழில் தொடங்கத் துணிவதில்லை. சென்னை மட்டும் விதி விலக்கு. தி.மு.க. ஆட்சியில் இருந்ததன் விளைவாக இருக்கலாம். (107)

முதலாளித்துவ உற்பத்தியில் கூட சாதி ஆதிக்கம் செலுத்துகிறது. இதையே சாதிமயமான மூலதனம்  என்கிறோம். இவ்வகையான சாதி மயமாக்கப்பட்ட மூலதனம் மனிதத் தன்மையற்ற சுரண்டலிலேயே முடியும்.(108)

குடியேற்ற ஆட்சி அகற்றப்பட்ட இந்தியாவில் அரசியல், பொருளாதார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மற்றும் நிர்வாக அமைப்புகள் அனைத்திலும் சாதி ஒழிந்து சம உரிமை ஏற்படும் என்று எதிர்பார்த்தோம்.  ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை.

தலித் பகுஜன்கள் பலர் தங்களை சமஸ்கிருத மயமாக்கிக் கொண்டார்கள். தங்களுடைய சொந்தப் பெயரை மாற்றிப் பாப்பனியப் பெயரைச் சூட்டிக் கொண்டார்கள். முத்தையா மூர்த்தியானார். கோபய்யா கோபால கிருஷ்ணன் ஆனார்  ... ஒருவன் என்ன பெயர் வைத்துக் கொண்டாலும் ஒரு சில நாட்களுக்குள் அந்த நபரின் சாதியைத் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு பார்ப்பனர்கள் நடந்து கொள்கிறார்கள். (110)

சமஸ்கிருதமயமாகும் செயல்கள் சாதி அடையாளத்தையோ சாதி அடிப்படையிலான அவமானத்தையோ எந்த அளவிலும் குறைத்து விட வில்லை.

தலித் பகுஜன்களின் சம்ஸ்கிருதமயமாகும் போக்கு இந்துக்களின் காட்டுமிராண்டித்தனத்திற்குத் தீர்வு அல்ல என்பதைப் பின்னாளில் உணர்ந்தார்கள்.(111)  இதே காரணத்திற்காகத்தான் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்து கலாச்சாரத்திற்கு எதிரான கலாச்சாரத்தை உருவாக்க முயன்று ஐந்து லட்ச்ம் தலித் மக்களோடு பவுத்தத்தைத் தழுவினார்.  ஈவெரா பெரியாரும் ஒரு மாற்றுக் கலாச்சாரமாக திராவிடக் கலாச்சாரத்தை உருவாக்கி பார்ப்பனியத்தையும் இந்துக் கலாச்சாரத்தையும் இந்துக் கடவுள்களையும் அம்பலப் படுத்தினார். (112)





*





Monday, October 07, 2013

688. காதல் தேவையில்லை என தள்ளி வையுங்கள்.











*
என்  பழைய பதிவுகள் சிலவற்றில் என் ‘கண்ணீர்க் குரல்”.  கேட்டுப் பாருங்கள்:


இந்தப் படத்தில நீங்க எதிர்பார்க்கிற எல்லாமும் இருக்கும் - பாட்டு, டான்ஸ், குத்துப் பாட்டு, சென்டிமென்ட், காமெடி - இப்படி எல்லாம் வச்சிருக்கோம். தயவுசெஞ்சி எல்லோரும் தியேட்டருக்கு வந்து படம் பாருங்க அப்டிம்பாங்க. ஐயா, சாம்பார் செய்யும்போது சாம்பார் பொடி மட்டும்தானே போடணும்; ஸ்டாக்கில இருக்கிற பொடி எல்லாத்தையும் ஒண்ணா போடுவேன்னா, அது என்ன குழம்புன்னு சொல்றது. அதைச் சாப்பிட்டு தொலைக்க வேண்டியதிருக்கே ... (உன்ன யாரு படம் பார்க்கச் சொன்னா அப்டின்னு கேட்டுராதீக !)
 -------------------------------------------
  ‘என்னடா இது? நம்ம தமிழ் திரைப்பட இயக்குனர்கள் - ’திலகத்’திலிருந்து ’இமயம்’ - வரைக்கும் யாருக்கும் காதல் என்பதைத் தவிர மையப்புள்ளியாக வேறு ஏதாவது வாழ்க்கைப் பிரச்சனையை வைத்து படம் இயக்கவே தெரியாதா?” என்பது எனது பல காலத்து பிலாக்கணம். அப்பாடா ... கொஞ்சம் நல்ல முடிவுகள், வளர்ச்சிகள் தெரியுது. 
யுத்தம் செய்
நந்தலாலா
பயணம்
ஆடுகளம்
அழகர்சாமியின் குதிரை
----------------------------------------------
இப்படி ‘மசாலா’ படங்களாக இன்னும் எத்தனை கால்த்திற்குத்தான் பார்த்துக்கொண்டே இருக்கப் போகிறோம். ஆங்கிலத்தில் சொல்வார்களே -genre - என்று அதுபோல வகைப்படுத்தப் பட்ட படங்களைப் பார்க்கும் காலம் வரவே வராதா? நம் இந்தியப் படங்களில்தான் இப்படி ‘எல்லாமும்’ சேர்ந்த சினிமாக்கள் வருகின்றன. action, thriller, musical, mystery, suspense, western, war stories என்று எத்தனை வகைகள் மற்ற எல்லா மொழிப்படங்களிலும் இருக்கிறதே ...

 ----------------------------------------------------
 -- இவையெல்லாம் என் முன் அழுகைப் பதிவுகளில் எழுதியவை. சோகம் தான். பின் இருக்காதா? எந்தப் படம் எடுத்தாலும் காதல் மட்டுமே மையப்புள்ளியாகக் கதைகள். அதுவும் ஒரே மசாலா. காரமே இல்லாத மசாலா. எப்படியாவது உலக சினிமாக்களில் வருவது போன்ற genre movies வரவே வராதா என்ற ஏக்கம் எனக்கு. ஆனால் தமிழ்ப்படங்களில் அப்படி ஒரு நிலை வரவே வராது என்பதே இணையப் பதிவுலகத்திற்குள் நுழைந்த போது நான் கொண்டிருந்த எண்ணம். காதல் இல்லாத படம் என்றால் அந்தக் காலத்தில் வந்த ‘அந்த நாள்’ படமும், ஜெயகாந்தனின் ஓரிரு படங்களும் நினைவுக்கு வந்து செல்லும். அவ்வளவே.

இப்படிப் போய்க்கொண்டிருக்கும் போது புது விடியல் போல் இப்போது வரும் படங்களில் பல காதலைப் புறந்தள்ளி விட்டு புதிய வகைப் படங்களாக வர ஆரம்பித்துள்ளன.  சமீபத்தில் வந்த விஜய சேதுபதியின் மூன்று படங்களும், மிஷ்கினின் கதாநாயகி என்று யாருமில்லாமல் வந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும், நேற்று நான் பார்த்த மூடர் கூடம் படமும் புதிய அலை ஒன்று கோலிவுட்டில் நொப்பும் நுரையுமாக பொங்கி வருவது போல் தோன்றுவது நல்லதொரு மகிழ்ச்சியான விஷயம்.

மூடர் கூடம் ஒரு black humour படம். வழக்கமான காமெடி மாதிரி இல்லாமல், கதாபாத்திரங்கள் சீரியஸாக ஏதாவது பேச நமக்கு அது வேடிக்கையாக இருக்கிறது. காமெடி படம் என்றாலே அங்கு லாஜிக் பேசப்படக்கூடாது. இங்கும் அப்படித்தான். ஒரு வீட்டுக்குத் திருடப் போனால், அஙக வர்ரவன் போரவனையெல்லாம் அங்கேயே அடச்சி வச்சிக்கிட்டு இருக்க் முடியுமான்னு சீரியசான கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது. வடிவேல், சந்தானம் டைப் காமெடி கிடையாது.  மூடர்களின் கூடம் ஒன்றில் நாமும் ஒரு ஓரத்தில் நின்று அங்கு நடக்கும் கூத்துகளைப் பார்த்திருக்க வேண்டும்.

டைரக்டர் நவின் படத்திற்கு நடிக்க வருபவர்கள் அனைவருக்குமே தலை கீழாக நிற்க முடிந்தால் மட்டும் நடிக்க வாருங்கள் என்று சொன்னாரோ என்னவோ... முக்கிய பாத்திரங்கள் நால்வரைத் தவிர படத்தில் வரும் முக்கால்வாசி பாத்திரங்கள் தலை கீழாக நிற்கிறார்கள். கதாநாயகி .. காதல் .. டூயட்... டிஷ்யும் டிஷ்யும் எதுவும் கிடையாது. கண்ட பாத்திரங்களுக்கெல்லாம் - நாய்க்கும் கூட - flash back இருக்கிறது. கடைசியில் வரும் moral மிக நன்றாக இருக்கிறது.

இயக்குனர்கள் இப்போது genre பிரித்துப் படமெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இசை இயக்குனர் விசய் ஆண்டனி சமீபத்தில் சொன்னது போல் படத்தில் எதற்குப் பாட்டுகள் என்ற நிலைக்கு உயர ஆரம்பித்து விட்டார்கள். வழக்கமான தமிழ் மசாலாவை விட்டு விலகி புதிதாக, புதிய முறையில் படம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். வளர்க தமிழ்ப்பட இயக்குனர்களே.

இயக்குனர்களே! காதல் மட்டும் படத்திற்கு வேண்டும் என்ற ஓட்டைத் தத்துவத்தைத் தள்ளி வையுங்கள். வளருங்கள்.

தமிழ் ரசிகர்களும் நல்ல தரமான ரசிகர்களாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள் போலும். மூடர் கூடம் பார்க்க நினைத்தால் முதலில் மதுரையில் எந்த தியேட்டரிலும் ஓடவில்லை என்றார்கள். நேற்று தேடிப்பார்த்த போது ஒரே ஒரு தியேட்டரில் ஓடிக்கொண்டிருப்பது தெரிந்ததும், நானும் ஓடிப் போய் படம் பார்க்கப் போனேன். பொதுவாக முதலிரு நாட்களிலேயே இருபது பேர், முப்பது பேர் மட்டும் தியேட்டரில் பயந்து கொண்டே உட்கார்ந்து படம் பார்ப்பது மாதிரி இல்லாமல், நல்லதொரு எண்ணிக்கையில் படம் பார்க்க வந்திருந்தார்கள். இயக்குனர்களே நீங்கள் வளர்ந்தால் நாங்களும் வளர்ந்திருவோமுல்ல  ....

அடுத்து ஒரு தைரியமான இயக்குனர் 90 நிமிடங்களுக்கு மட்டும் படம் எடுக்க ஆரம்பிக்க வேண்டும். இன்னும் படம் பாடல், டிஷ்யூம் இல்லாமல் ‘சிக்’கென அழகான வடிவோடு நல்ல படங்கள் விரைவில் வெளி வரும் என்று நம்புகிறேன். இரண்டு ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி .. இன்னும் தொடர வேண்டுமென்று ஆவல்;
-------------------------------------------


பி.கு.

இயக்குனர் நவீன் அதிர்ஷ்டம் இல்லாதவர். மூடர் கூடத்தில் ஒரு இஸ்லாமியப் பெண் இந்துச் சாமி கும்பிடுகிறாள்; திருநீறு இட்டுக் கொள்கிறாள்; பொட்டு வைத்துக் கொள்கிறாள்; தமிழ் மணப்பெண் போல் அலங்கரித்து இந்துப் பையனைத் திருமணம் செய்யப் போகிறாள்.

ஒரு வேளை நம் சகோக்கள் இதற்காக மம்மி உதவியுடன் ஒரு போராட்டம் நடத்தியிருந்தால விஸ்வரூபம் மாதிரி இந்தப் படம் மிகவும் வெற்றிகரமான படமாக ஓடியிருந்திருக்கும். நவீனுக்கு .... வடை போச்சே!



*


Saturday, October 05, 2013

687. தருமி பக்கம் (7) - எப்டின்னே புரியலையே !



*

அதீதம் இணைய இதழின் தருமி பக்கம் (7)-ல் வெளியான கட்டுரையின் மறு பதிப்பு.




*




அறிவியலில் பல கேள்விகள். சின்ன வயதிலிருந்தே பல கேள்விகள். அன்றும் பதில் தெரியவில்லை; இன்றும் தெரியவில்லை. கிராம போன். சின்னூண்டு ஒரு பொட்டி. அதுக்கு மேல் ரிக்கார்ட் வச்சா சத்தம் வந்துது. எப்டின்னு அன்னைக்கும் புரியலை. ரேடியோ .. என்னமோ அலை வரிசை என்கிறார்கள். முள்ளைத் திருப்பினால் வேறு வேறு இடத்திலிருந்து பாட்டு வருது. எப்படி? யாருக்குத் தெரியும்!

ஆனாலும், இதைப் பற்றிக் கொஞ்சம் அறிவியலா யோசிக்கவாவது  முடியுது. லேசா அரசல் புரசலா புரியுது. அரைகுறை அறிவியல் வச்சி ஏதோ சில காரணம் கண்டுபிடிக்க முடியுது. ஆனால் இன்னொரு விஷயம். பல நூற்றாண்டு விஷயம். அது எப்படி நடந்ததுன்னு நானும் யோசிச்சிப் பார்க்கிறேன். இதுவரை ஏதும் விடை தெரியவில்லை. 

நம்ம ஊர் ஆயுர்வேத / மூலிகை மருத்துவம் பற்றிய கேள்விகள் அவை. இந்த வியாதிக்கு இது மருந்துன்னு சொல்றாங்க. ஒரு சின்ன எடுத்துக்காட்டாக மஞ்சள் காமாலைக்கு கீவாநல்லி இலை மருந்துன்னு சொன்னாங்க. இப்ப ஆங்கிலேய மருத்துவக்காரர்களுமே இதை ஒப்புக் கொண்டு விட்டார்கள். 

மருத்துவம் எல்லாமே வேதியல் தொடர்புடையது தான். வியாதி வருவதற்கு ஏதோ ஒரு வேதியல் பொருள் நம் உடம்பில் இல்லாமல போகிறது அல்லது அதிகமாக ஆகி விடுகிறது. நமக்குக் கொடுக்கப்படும் மருந்தில் உள்ள வேதியப்பொருள் இந்தக் குறைபாட்டை சரி செய்வதற்காகத்தான் கொடுக்கப்படுகிறது. எனக்குத் தெரிந்த மருத்துவம் இது தான். இப்போதைய நிலையில் உடம்பின் வேதியல் முறைகள் பலவும் கற்றுணரப்பட்டு விட்டன. சர்க்கரை வியாதியா? இன்சுலின் இல்லை. அதனால் சர்க்கரை ரத்தத்தில் முறையாகக் கட்டுப் படுத்தப் படுவதில்லை. அதற்குரிய மருந்தாக இன்சுலினில் உள்ள வேதியப் பொருள்  பயன்படுகிறது.

இன்றைக்கு வேதியல் பற்றிய ஆய்வுகள் மூலம் இதை அறிய முடிகிறது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சர்க்கரை வியாதிக்கு இது மருந்து என்று ஏதோ ஒரு செடியை அல்லது மஞ்சள் காமாலைக்கு இந்த செடி மருந்து என்று எப்படிக் கண்டுபிடித்திருக்க முடியும்? கீவாநல்லியில் உள்ள வேதியல் பொருள் என்ன என்று நம் பழைய மூலிகை வைத்தியர்கள் எப்படிக் கண்டுபிடித்திருக்க முடியும்? இது போன்ற பெரிய பட்டியலே இருக்கிறது.

trial and error method மட்டுமே இதற்குக் காரணமாக இருக்க முடியுமா? ஒரு நோய்க்கு இது தான் சரியான மருந்து என்பதை இந்த முறை மூலம் நிச்சயமாகக் கண்டுபிடிக்க முடியாது என்றே நினைக்கிறேன். அத்தனை அத்தனை மனிதர்கள், அத்தனை அத்தனை வியாதிகள், பல முறைகள், பல மருந்துகள் அல்லது மூலிகைகள் என்றா ஆராய்ச்சி செய்திருக்க முடியும்? இன்றைய ஆராய்ச்சிகள் போல் sample, control and experimental systems ... இப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்திருக்க முடியாது. ஆனால் பல நோய்களுக்குப் பல சரியான மூலிகை மருந்துகள் என்று அவர்கள் அன்று எப்படிக் கண்டு பிடித்திருக்க முடியும். இந்த மூலிகை இந்த நோய்க்கான மருந்து என்றோ, இந்த வியாதிக்கு இந்த மூலிகை மருந்து என்றோ எப்படி, எந்த முறையில் அவர்களால் கண்டுபிடித்திருக்க முடியும்.

என்றோ எப்படியோ கண்டு பிடித்த மூலிகை மருந்துகளைப் பற்றிய ஆழ்ந்த அறிவு இன்றும் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. கிடைத்த சில தகவல்கள் மூலம் இக்கண்டுபிடிப்புகள் பற்றிய என் ஆச்சரியமும், அதிசயமும் அதிகமாகிக் கொண்டே போகின்றன. ஆனால் விடைகள் தான் இன்னும் கிடைக்கவில்லை. முதலில் உருண்டோடும் ஒரு கல்லில் இருந்தோ இல்லை வேறு ஏதோ பொருளிலிருந்தோ ஒரு சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கலாம். அதிலிருந்து ஒரு வண்டி, தேர் என்றெல்லாம் எப்படி பரிணாமம் நடந்திருக்க வேண்டுமென்று யோசிக்க முடிகிறது.




அட ... நமது சைக்கிள்களின் பரிணாமம் தான் நமக்குத் தெரியுமே .. அது எப்படி நடந்திருக்க முடியும் என்பது புரிகிறது.




ஆனால் வியாதிகளும், சரியான மருந்துகளும் என்ன  mechanism? என்ன method? ....ம்ம்..ம்.. எனக்குப் புரியவில்லை. உங்களுக்கு ...?







*



 

Thursday, October 03, 2013

686. நான் ஏன் இந்து அல்ல ... 4






*
*
தொடர் பதிவுகள்:   1 ......     2 .....     3 .....  4..........  5..............  6 ...........  7..................

*







அத்தியாயம் 4

புதிய சத்திரியர்களின் எழுச்சியும்
அதிகார உறவுகளின் மறு சீரமைப்பும் 


*

அரசியல் அதிகாரம் சத்திரியர்களுக்கும் அவர்களுக்கு அமைச்சர்களாயிருந்து ஆலோசன வழங்குகிற பார்ப்பனர்களுக்கும் மட்டுமே என்று கடந்த கால இந்துக் கோட்பாடு கூறுகிறது.

தலித் பகுஜன்கள் ஒரு குறிப்பிட்ட அதிகார வரம்புக்கு உட்பட்டே வாழ வேண்டியுள்ளது. எல்லாவற்றிற்கும் முதலாவதாக  சாதி அமைப்பே ஒரு வகையான அதிகார உறவுகளை நிலைநாட்டுகிறது. (74)

தென்னிந்தியக் கிராமங்களில் எல்லாம் (வட இந்தியாவுக்கும் இது பொருந்தும்) ஆட்சியதிகாரத்தைக் கையில் வைத்திருந்த சத்திரிய வகுப்பினர் செயலற்றுப் போனதும், சூத்திர மேல் சாதியினர் புதிய சத்திரியர்களாக உருவாகி வருகிறார்கள்.

இந்தப் புதிய சத்திரியர்கள் தங்களை இந்து ஆன்மீகத்தின் ஒரு அங்கம் என்றே நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். இந்துத்துவத்தின் ஆதரவாளர்களாக மாறி வருகிறார்கள்.

இந்துத்துவா எப்போதும் சிலரைச் சேர்த்துக் கொள்வதற்கும், சில பேரை விலக்கிக் கொள்வதற்கும் ஏற்ற கொள்கைகளையே நம்புகிறது. பார்ப்பன பனியாக்கள் புதிய சத்திரியர்களை மெதுவாகத் தம் பக்கம் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கும் கீழ்ப்பட்ட சாதியினரைப் புறக்கணிக்கின்றனர். (75)

புதிய சத்திரியர்கள் பார்ப்பனியத்தை அழிவிலிருந்து காப்பாற்றி பார்ப்பனீயம் மேலும் வலுப்பெறுவதற்கு உதவியிருக்கிறார்கள்.(76)

புதிய சத்திரியர்களுடைய நோக்கம் மனித உறவுகளைத் த்லித் மயமாக்குவதோ, ஜனநாயகமாக்குவதோ அல்ல. மாறாக, பார்ப்பனீய மயமாக்கவே முயலுகிறார்கள்.

புதிய சத்திரியர்களுக்கு நிலத்திலும் அரசியல் அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்துவதற்குக் கறிப்பிக்கப் படுகிறது. பார்ப்பனீய ‘கெளடில்யனிசம்’ இதற்கு உதவுகிறது. (77)

தலித் பகுஜன் சட்டமென்பது அதிகாரத்திலிருந்து உருவானதல்ல. அது சமுதாயத்திலிருந்து தோன்றுகிறது.

தலித் பகுஜன் பஞ்சாயத்து தனித்த சிறப்புடையது. அதன் நீதிக் கோட்பாடு தனி மனித நலன் சார்ந்ததல்ல. சமூக நலன் சார்ந்தது. (78)

தனிநபர் சார்ந்த அந்தரங்க உறவு என்பதே த்லித் பகுஜன் வாழ்வில் கிடையாது. எல்லா தனி நபர் உறவுகளும் சமூக அரசியல் பரிமாணங்களுக்கு உட்பட்டதேயாகும். (79)

குடியேற்றக் காலத்திற்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சியில் அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சில உதவிகள் செய்து அவர்கள் சொத்து சேர்க்க வழிகோலியது. எனினும் அது மிகச் சொற்பமானதே. ஆனால் அந்தச் சொற்கள் கூட குறுகிய காலத்தில் பொதுச் சொத்தாக மாறி விட்டன.  .. இத்தகைய பறிகொடுப்புக் கலாச்சாரத்தை ஊதாரித்தனம் என்று விமர்சிக்கிறார்கள்.  ... ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தனிச்சொத்து என்பது பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் வாழ்ந்த ஒரு சமுதாயம் தனக்குக் கொடையாக வழங்கப்பட்ட சொத்தை விரைவாக இழந்து நிற்பது இயல்புதான்.(80)

1947க்குப் பிறகு எல்லா மட்டத்திலும், குறிப்பாக அரசியலிலும் தொழில் நுட்பத் துறையிலும் பார்ப்பன பனியாக்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.  ... 1990ல் மேற்கொள்ளப்பட்ட மண்டல் பரிந்துரை அமலாக்கம் தலித் பகுஜன்களுக்குச் சாதகமானதாக இருந்ததால் புதிய சத்திரியர்கள் தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள இந்துத்துவத்தோடு அய்க்கியமானார்கள்.  ... பார்ப்பன - பனியா - புதிய சத்திரியர்களின் உறவு இந்தியச் சமூகத்தின் நவீனத்துவமாக அடையாளப்படுத்தப் பட்டது. (81)
... இந்த மூன்று சாதிகளின் கூட்டமைப்பு மதச்சார்பற்ற தளத்தில் நின்று சனநாயக சக்திகளை எதிர்கொள்ளத் தயாராக இல்லை.  எனவே இம்மேல்சாதிக் கூட்டு, அரசியல் அதிகாரத்தோடு ஆன்மீகத்தையும் கலக்கிறது.அவ்வாறு கலப்பதென்பது தமது சாதிய மேலாதிக்கத்தையும் ஆணாதிக்கத்தையும் அதிகாரப் பூர்வமாக உறுதிப்படுத்திக் கொள்ள உதவுகிறது. (82)

பார்ப்பனன் அரசியலதிகாரத்தை மட்டுமின்றி ஆன்மீக அதிகாரங்களையும் கொண்டிருந்தான். பனியா பொருளாதார அதிகாரங்களையும் கொண்டிருந்தான். தலித் பகுஜன்களோ எந்த ஒரு அதிகாரத்தையும் பெறாதவர்களாக ஆக்கப்பட்டிருந்தார்கள்.(84)

சிவில் சமூக அரசியல் அமைப்புகளுக்கும் மேலாக, அரசு நிறுவனங்களிலும் கிராம நிர்வாகங்களிலும் இந்து அரசியலதிகாரம் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. ... பூ மாலையில் இருக்கிற நூலைப்போல் இந்துத்துவா எல்லா அமைப்புகளிலும் ஊடாக நுழைந்து அவற்றை மேல்சாதியினரின் தனியுடைமையாக்கி விடுகிறது.(85)

விடுதலைக்குப் பிறகு பார்ப்பனர்கள் தங்கள் தந்திரத்தை அரசியல் நிறுவனங்களில் செலுத்தி, தங்களுடைய அதிகாரத்தை நிலை நிறுத்தி, தங்களின் ஆன்மிக எல்லையை அரசியல் தளம் வரை விரிவு படுத்திக் கொண்டார்கள்.... சாதியால் பிளவுபட்டுக் கிடக்கும் கிராம சமுதாயத்தில் இதன் மூலம் புதிய சத்திரியர்கள் சகல அதிகாரமும் படைத்தவர்களாக ஆகின்றனர். அவர்கள் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லா நிலங்களையும் கையகப்படுத்தித் தங்கள் கையில் வைத்துள்ளார்கள்.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக உருவான தேசீய இயக்கங்கள் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் ஆகிய அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தியவர்கள் பார்ப்பனர்களே. ... ஆங்கில ஏகாதிபத்தியம் மேல்சாதிக்காரர்களுக்குச் சாதகமாக இருந்தது. ... (88)  ஒரு புறம் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது போலவும், தேசிய நலனில் அக்கறையுடன் நடந்து கொளவது போலவும், மறுபுறம் ஆங்கிலேயர்களின் கைக்கூலிகளாகவும் ஆதிக்க சாதியினர் இரட்டை வேடம் போட்டனர். மேல்சாதி ஆதிக்கத்தில் இவர்கள் இருப்பது தான் தனது நலனுக்கு உகந்தது என ஆங்கில அரசும் தெரிந்து கொண்டது. எனவே அவர்கள் இந்நிலையை ஊக்குவித்தனர்.

அதே சமயம் பிரிட்டிஷ் அரசாங்கம் தலித் பகுஜன்கள் ஒருங்கிணைவதற்கான அடித்தளத்தையும் உருவாக்கிக் கொடுத்தது. மகாத்மா ஜோதிபா பூலே பார்ப்பன எதிர்ப்பியக்கத்தின் முன்னோடியாவார். தேசிய அளவில் சாதி எதிர்ப்புப் புரட்சியை ஏற்படுத்தியவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆவார். (89)

காலனிய ஆட்சி இந்துத்துவமும் பாப்பனியக் கருத்தியல்களைக் கொண்ட வைதீக மேல்சாதியினரின் வளர்ச்சிக்குப் பேரளவு ஆதரவு காட்டியது. இந்தச் சூழலில் மிகவும் புரட்சிக் கோட்பாடான மார்க்சீயம், மிகவும் பிற்போக்கு சக்திகளான பார்ப்பன - பனியா -  புதிய சத்திரியர்களின் கையில் சிக்கியது. ... கம்யூனிஸ்டுகளுக்கும் கம்யூனிஸ்ட் அல்லாத பார்ப்பனர்களுக்குமான உறவு மட்டும் மிகவும் நெருக்கமானதாக இருந்தது. (90)

1990ல் உருவான மண்டல் குழு அறிக்கை அமுலாக்கத்திற்கு சாதிப் போராட்டங்களுக்கான வழியைத் திறந்து வைத்தன.

இந்த மண்டல் போராட்டம் பார்ப்பன இந்துத்துவத்தை மெல்ல அழிக்கக்கூடிய தலித் மயமாக்குதலுக்கு ஒரு முன்னோட்டமாகும். இப்படியிருக்க இந்தச் சூழ்நிலையை உணர்ந்து கொண்ட பார்ப்பனர்கள் உடனடியாகத் திரண்டு  இந்த சாதியப் போராட்டத்தை மதக் கலவரமாக திசை திருப்பி விட்டார்கள். இந்தத் திசை திருப்பலின் விளைவே 1992 டிசம்பரில் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பாகும்.(91)

புதிய சத்திரியர்கள் மெல்ல ஒரு ‘குலக்’ (?)  வர்க்கமாக உருவெடுத்தார்கள். இவர்கள் பார்ப்பனர்களுக்கும் உழைக்கும் சாதியினருக்கும் இடையில் ஒரு பாலமாக இருந்து பழமை நிலையைப் பாதுகாக்க உதவினார்கள். உழைக்கும் சாதியினரோ மேலும் மேலும் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டனர்.

பண்டைக்காலங்களில் பார்ப்பன சக்திகள் சூத்திரர்களாக இருந்த சத்திரியர்களோடு கூட்டு சேர்ந்து கொண்டு புரட்சிகளைத் தடுத்தனர்; பவுத்த சமணப் புரட்சிகள் எவ்வாறு அழிக்கப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரியும். (92)

பார்ப்பன பனியாக்களிடத்திலேயே அரசியலதிகாரம் குவிந்து கிடப்பதால் அவர்கள் மற்ரவர்களை அடிமைத்தளத்திலிருந்து விடுதலை செய்யப் போவதில்லை. புதிய சத்திரியர்கள் இந்த ஆதிக்கக் கருத்தியலை என்றுமே புரிந்து கொண்டது இல்லை. உதாரணமாக புதிய சத்திரியர்களை உள்வாங்கத் தயாராக இருக்கும் பார்ப்பனீய அமைப்பு அவர்களை இந்துக் கோயில்களில் புரோகிதராக அனுமதிக்குமா?


சமூகப் பொருளாதார அமைப்பிற்குப் புதிய சத்திரியர்கள் செய்த நாச வேலைகள் ஏராளம். அவர்கள் இந்துத்துவத்தின் தூண்களாகிக் கொண்டிருக்கிறார்கள். (93)

*















*




 

Wednesday, October 02, 2013

685. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ....... மிஸ்கின் ஒரு நல்ல மேய்ப்பன் !






*

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பார்ப்பதற்கு முன்பு எந்த திரை விமர்சனம் வாசிக்கக் கூடாது என்று முடிவு கட்டியிருந்தது போலவே  இருந்து நேற்று படம் பார்த்தேன். நானும் படக்கதை பற்றி ஏதும் எழுதப் போவதில்லை.

‘கண்ணிருப்போர் காணட்டும்’!

முதல் சீன். ஒரு மரம். முழு இரவில்  தனியாக ஒரு மரம். strikingly beautiful !
இடை வேளை முடிந்து மறுபடி  படம். இரவில் சில மரங்கள். வலது பக்கம் பச்சை வண்ணத்தில் சில செடிகள். இடது பக்கம் பல வண்ணத்தில் ஒரு மரம்.
 strikingly beautiful !

இருளில் நகரும் படம். சில இடங்களில் space logic  .. சில இடங்களில் time logic - உதைக்கிறது. யுத்தம் செய் படத்திலும் இந்தப் படத்திலும் உள்ள ஒரு ‘வெறுமை’ பிடிக்கவில்லை. இரு படத்திலும் கதைக்குரிய பாத்திரங்கள் மட்டுமே அங்கிருப்பார்கள். நடப்பது ஒரு பெரிய பொது இடத்தில். ஆயினும் வெறுமை மட்டும் இருக்கும்; அதனோடு நமது கதை மாந்தர்கள் மட்டும் இருப்பார்கள். இப்படத்தில் வரும் train sequence நன்றாக எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் ரயிலில் இரண்டே பேர் -  guide & driver. மருந்துக்கும் பயணிகள் இல்லை. இது மட்டுமே ஒரு சின்னக் குறையாக எனக்குத் தோன்றியது.

படம் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை ஒரே வேகம். படம் முடிந்து டைட்டில் கார்டுகள் வருகின்றன. படம் முடிய ஆரம்பிக்கும் போது மக்கள் எழுந்து கலைய ஆரம்பிப்பார்களே .. அப்படி ஏதும் நடக்கவில்லை. படம் முடிந்த பிறகும் விலகாத கூட்டம்.

நிரம்ப நாளாக பாடல் இல்லாத படம் என்ற ஆசை; இங்கே பாடல் இல்லை; கதாநாயகி இல்லை; (என்ன ஆச்சரியம்!); தனி காமெடி ட்ராக் இல்லை. இதெல்லாம் இல்லாமல் ஒரு தமிழ்ப் படம்! Hats off, Myskin! genre வாரியாகப் படம் வரவேண்டும் என்றும் ஒரு ஆசை. அதுவும் நிறைவேறியது. நிச்சயமாக இது ஒரு தமிழ்ப்படம் அல்ல; அதையும் தாண்டிய நல்ல படம்.

படம் ஆரம்பிக்கும்போது இருவர் பெயர் மட்டும் பார்த்தேன் என்று நினைக்கிறேன்.ஒன்று இயக்குனர்; அடுத்தது - முன்னணி இசை - இளைய ராஜா என்று போட்டிருந்தது.  நிச்சயமாக முன்னணி இசை தான். படத்திற்கு ராஜா ஒரு foreign touch கொடுத்திருக்கிறார் என்று தோன்றியது.

ஆனாலும் மிஸ்கின், இளையராஜா பற்றி இன்னும் சொல்ல வேண்டுமானால் இப்படத்தை இன்னொமொரு முறையாவது பார்த்தால் தான் முடியும்..

ஒரு genre-ல் தமிழ்ப்படம் என்றால் எனக்கு ’அந்த நாள்’ படம் நினைவிற்கு வரும்.இப்படமும் ஒரு புள்ளியில் ஆரம்பித்து, நேர்கோடாய் ஒரு படம். பிசிறில்லை. இது போன்ற படங்கள் மட்டும் வர ஆரம்பித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். சின்னச் சின்ன குறைகள் ...

ஆனால் மிகவும் சிரத்தை எடுத்து, நானும் புத்திசாலி ... படம் பார்க்க வருபவர்களும் புத்திசாலிகள் என்ற நினைப்பில் படம் எடுத்த இயக்குனருக்கு என் பாராட்டுகள்.




*