Thursday, May 29, 2014

752. தருமி பக்கம் (19) - அம்மா வீடு




*

“அதீதம்”  இணைய இதழில் வந்த தருமி பக்கத்தின் மறு பதிப்பு ....


*


சிறு வயதில் அப்பா ஊருக்குப் போகும் போது ஒரு விதம் என்றால் அங்கிருந்து பத்துப் பதினைந்து மைல் தள்ளியிருந்த அம்மா ஊருக்குப் போகும்போது கிடைக்கும் அனுபவங்கள் வித்தியாசமாக இருக்கும். அம்மா ஊர் மரக்கடைகளுக்கும், சீமை அல்லது மலையாள ஓடு என்பார்களே அந்த ஓட்டுக்கும் பிரபலமான பாவூர் சத்திரம் என்ற ஊருக்குப் பக்கதிலிருந்த குறும்பலாப்பேரி என்ற ஊர். இங்கு எனக்கு இரு தாத்தா-பாட்டி வீடுகள். ஒன்று பெத்த அம்மாவின் வீடு; இன்னொன்று வளர்த்த அம்மாவின் வீடு. ஒரு காலத்தில் இந்த இரு குடும்பங்களும் உறவினர்களாய், நெருங்கி இருந்திருக்கிறார்கள். ஆனால் பின்னால் விலகி விட்டார்கள்.


நாங்கள் குடும்பத்தோடு முதலில் வளர்த்த அம்மா வீட்டிற்குப் போவோம். சில மணி கழித்து நானும் அப்பாவும் மட்டும் பெத்த அம்மா வீட்டிற்குப் போவோம். அதென்னவோ இந்த வீட்டுக்கு வரும்போதெல்லாம் அப்பா தன் வழக்கமான வெள்ளைச் சட்டை, வேட்டியோடு தோளில் ஒரு அங்கவஸ்திரம் போட்டிருப்பார்கள். கழுத்தைச் சுற்றி போட்டிருப்பார்கள். துண்டின் ஒரு பகுதி முனை முன் பக்கமும், இன்னொரு முனை பின்பக்கமும் தொங்கும். அது நீள வெள்ளைத் துண்டு. அதில் தங்க ஜரிகை பார்டர் இருக்கும். இதை மூன்று விரல் அகலத்திற்கு மடித்து அழகாக அயர்ன் செய்திருப்பார்கள். எப்படித்தான் அவ்வளவு அழகாக மடித்து அயர்ன் செய்ய முடியுமோ என்று எனக்கு இன்று வரை ஒரு ஆச்சரியம் தான். ஒரு வேளை ‘மாப்பிள்ளை ஜபர்தஸ்து’க்காக அப்பா  இந்த உடையில் வந்திருப்பார்கள் போலும். இங்கே சில நாள் என்னை விட்டு விட்டு அப்பா போய் விடுவார்கள். பின் வந்து என்னைக் கூட்டிக் கொண்டு அடுத்த தாத்தா வீட்டிற்குப் போய், பின் அங்கிருந்து அப்பா ஊருக்கு மீண்டும் பயணம் என்பது தான் வழக்கம்.


அந்த வயதில் அப்பா வழி கொஞ்சம் செழிப்பாக இருந்தார்கள். அம்மா வழி பழைய கதைகள் சொல்லிக் கொண்டு கொஞ்சம் தாழ்ந்து போய் இருந்தார்கள். இப்போது நிலை அப்படியே மாறிப்போய் உள்ளது. வாழ்க்கையே ஒரு சகடம் தானே!


அம்மா  வழி தாத்தா வீடு பெரியதாக இருக்கும். மூன்று புறமும் வீடுகள்; நடுவில் பெரிய திறந்த முற்றம். அதில் ஒரு பெரிய பன்னீர் மரம். இந்த மரமும் என் மனதில் இன்று வரை நின்று போன ஒரு நிழல். தாத்தா வீடு என்றால் அந்த மரமும் நினைவுக்கு வந்து விடும். விசாலமான வீடு என்பதால் மாலையில் வெளிச்சம் போனதும் கண்ணா மூச்சி விளையாட ஏதுவான இடம். வீட்டுக்குள்ளேயே ஒளிந்து கொள்ள ஏராளமான இடம் இருக்கும். அப்பா வழி தாத்தா வீட்டில் வெளியே போய் விளையாடியது தான் நிறைய. இங்கே தலை கீழ். மாலையில் கண்ணா மூச்சி விளையாட்டு. பகலில் புளியங்கொட்டை வைத்து ‘ஒத்தையா .. ரெட்டையா?’ விளையாட்டு இருக்கும். அல்லது பாண்டி விளையாட்டு. இதில் நான் ரொம்ப வீக்; எப்போதும் தோற்று விடுவேன். எப்போதும் நான் ஜெயிக்கும் விளையாட்டு சினிமா பெயர் சொல்லி விளையாடுவது.


இங்கு எனக்கு விளையாட்டுத் துணை என்று அதிகம் இல்லை. என் சித்தி தான் எனக்கு முழு துணை. சித்திக்கு என்னிடம் கொள்ளைப் பிரியம். நேரம் முழுமையும் அநேகமாக அவர்களோடுதான் இருப்பேன். அம்மாவிடம் எதிர்பார்த்த அன்பு அவர்களிடமிருந்து தான் கிடைத்தது. சித்தியைப் போல் இன்னும் ஒருவரை நான் இன்னும் பார்த்ததில்லை. எப்படியும் யாரைப் பற்றியும் நல்லது சொல்ல நாலாயிரம்  பேர் இருந்தாலும், ஒரு நாலு பேராவது மோசமாகப் பேசுவது வழக்கம் தான். ஆனால் என் வாழ்க்கையில் பொல்லாத ஒரு வார்த்தையையும் நான் எங்கும் சித்தியைப் பற்றி யாரும் பேசியதாகக் கேட்டதேயில்லை. திருமணமாகி அவர்கள் சென்ற ஊரிலும் அதே போல் தான். அங்கே ஒரு பள்ளியின் பொறுப்பாளராகவும், தலைமை ஆசிரியையாகவும் இருந்தார்கள். ஆசிரியர்களிலிருந்து மாணவர்கள் வரை அவர்கள் மேல் அத்தனை மரியாதையையும், அன்பையும் பார்த்திருக்கிறேன். அட .. இவ்வளவு எதுக்கு? ஐந்து நாத்தனார்கள் அவர்களுக்கு. ஒரு சண்டையோ .. எதுவுமோ இல்லை. அவர்களது பிள்ளைகளுக்கு புத்தி சொல்ல சித்தியிடம் பிள்ளைகளை அனுப்பி வைப்பார்கள். மாமியாரும், மருமகளும் மாவு ஆட்டிக் கொண்டே அரட்டை அடித்துக் கொண்டிருப்பதை கிராமமே ஆச்சரியமாகப் பார்க்கும்;  பேசும்! இது போன்ற ஒரு உயர்ந்த ஜீவனை என் வாழ்நாளில் நான் கண்டதேயில்லை.


வெளியில் சென்றால் போகும் ஒரே இடம் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில். சின்ன உயரமான கல் மண்டபத்தின் உள்ளே  பிள்ளையார் இருந்தார். 


இரண்டு கல் தூண்கள் இருக்கும். அதில் ஒரு பக்கம் எனக்குப் பூட்டனாராம் – தாத்தாவின் தந்தை – சிலை இருக்கும். 


இன்னொரு பக்கம் பூட்டியின் சிலை. பூட்டையா கட்டிய கோவிலாம் அது. 




இந்த மண்டபத்திற்கு முன்னால் மிக நீளமான, மண்டபத்தை விட உயரம் குறைவான திண்ணை இருந்தது. உயரமாக ஓடு போட்டு வேயப்பட்ட மண்டபம். ஊர் மக்கள் நிழலுக்கும், காற்றுக்கும் இங்கு வந்து உடம்பைச் ‘சாய்ப்பது’ உண்டு. எப்போதும் அங்கே யாராவது இருப்பார்கள். பழைய செஸ் விளையாட்டு மாதிரி ஆடு-புலி ஆட்டம் ஒன்று உண்டே – மூணு புலி, பதினைந்து ஆடு – அது விளையாட மண்டபத்தின் ஒரு ஓரத்தில் இடம் இருக்கும். மக்கள் விளையாடி விளையாடியே தரையில் உள்ள செங்கல்லில் முக்கோண வடிவ பள்ளங்கள் இருக்கும். பல நாள் வேடிக்கைப் பார்த்து, சில நாள் விளையாடியுள்ளேன்.




தாத்தா வீடு, பிள்ளையார் கோவில் மண்டபம் தவிர மீதி நினைவில் நிற்கும் ஒன்று மண்டபத்தின் பக்கத்தில் நின்ற ஒரு தெரு விளக்கு. தெரு விளக்குன்னா இன்றைக்குள்ள தெரு விளக்குகள் இல்லை. வெறும் ஒரு கல் தூண். அதன் தலையில் கண்ணாடிக் கூண்டோடு இருந்த ஒரு விளக்கு. இரவில் முழு இருட்டுதான். மாலையில் கல் விளக்கை ஏற்ற ஒரு ஏணியோடு ஒருவர் வருவார். மண்ணெண்ணெய் ஊற்றி விளக்கை ஏற்றி வைப்பார். காலையில் வந்து விளக்கை அணைத்து விடுவார் என்று சொன்னார்கள். சின்ன வயதில் அவர் விளக்கை ஏற்றுவதைப் பார்க்க மிகவும் பிடிக்கும். விளக்கையேற்றி வைத்த பின்பும் அந்த இடத்தின் இருள் வேறெங்கும் போய் விடாது. எல்லா இருளும் அங்கேயும் இருக்கும். ஆனாலும் ஒரு சின்ன ஒளிக்கீற்று. அப்போதே நகரத்தில் வாழ்ந்த எனக்கு ஒரு பெரிய கேள்வி – ஒளியே தராத இந்த விளக்கு அங்கு எதற்கு என்று. ஆனாலும் இருளுக்குள் இருக்கும் அந்த விளக்குத் தூணின் உருவம் மனதிற்குள் பதிந்து இன்று வரை நின்று நிலைத்து விட்டது.


விளக்குத் தூணின் உருவம் மட்டும் அப்படியே மனதிற்குள் ஏன் பதிந்தது என்பதற்கான விடையும் எனக்குத் தெரியும். ஒரு சிறுகதை தான் காரணம். அந்தக் காலத்தில் வாசித்த புதுமைப்பித்தன் எழுதிய கதையில் இதுபோன்ற ஒரு விளக்கும், அதனை ஏற்ற வரும் ஒருவரும் இருப்பார்கள். காலப்போக்கில் மின் விளக்கு வந்த பிறகு அந்த விளக்கு ஏற்றப்படாமல் விடப்படும். ஒரு நாள் காலை அந்த விளக்கின் அடியில் வழக்கமாக விளக்கை ஏற்றுபவரின் சடலம் கிடைக்கும். இந்தக் கதையை இளம் வயதில் வாசித்ததும் அம்மா ஊரில் பார்த்த அந்த விளக்குக் கம்பம் நினைவுக்கு வந்தது. புதுமைப்பித்தனின் கதையின் scenario தெரு முக்கில் இருந்த அந்த விளக்காக என் மனதில் உருப்பெற்று விட்டது. மின் விளக்கு வந்த சில ஆண்டுகள் வரை அந்த தூண் அங்கேயே நின்றது. ஊர் செல்லும் போது அதைப் பார்ப்பது ஒரு கட்டாயத் தேவையாக இருந்தது.


நல்ல வேளை … அந்த விளக்குத் தூண் சரிந்து விழுந்த கிடந்ததையும் பார்த்தேன். ஆனால் புதுமைப்பித்தனின் கதைமாந்தனுக்கு நடந்தது எனக்கு நடக்காமல் தப்பித்தேன்!



*








Saturday, May 24, 2014

751. அஹமதியா மதம் பிறந்த கதை - ஒரு திருத்தப்பட்ட மீள் பதிவு








*

1835ல் பஞ்சாப் மாநிலத்திலுள்ள காதியான் என்ற ஊரில் பிறந்த மிர்சா குலாம் அகமது என்பவர் 1889களில் தனக்கு அல்லாவிடமிருந்து தூதுச் செய்திகள் (வஹி) வருவதாகக் கூறி தாம் குர்ஆன் கூறும் அடுத்த தூதுவர் (நபி) என அறிவித்துக்கொள்கிறார்,

ஒவ்வொரு மதங்களும் தமது வேத நூல்களில் அடுத்து ஒரு தூதர் வருவார் அல்லது அவதாரம் வரும் என்றே கூறுகின்றன. இந்து மதம் கிருக்ஷ்ணனின் கலியுக அவதாரமான கல்கி வருவார் என்று கூறுகிறது. யூதர்களின் டோரா ஏலியாஸ் (இசுலாமியர் இலியாஸ் நபி என்று கூறுவர்) வருவார் என்றும், பைபிள் மெசியா வருவார் என்றும் கூறுகிறது. குர்ஆனும் அவ்வாறே பெயர் குறிப்பிடாமல் தூதர் வருவார் என (வசன எண்: 3:81 ) கூறுகிறது,



குர்ஆன் வசனம் 3:81 பின் வருமாறு கூறுகிறது.
இன்னும் அல்லாஹ் தூதர்களிடம் ‘வேதத்தையும் ஞானத்தையும் உங்களுக்கு நான் கொடுத்து பிறகு உங்களுடனிருப்பதை மெய்பிக்கும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால்
அவர் மீது நீங்கள் திண்ணமாக நம்பிக்கை வைத்து அவருக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்’ என்று உறுதி மொழி எடுத்தபோது, ‘நீங்கள் (இதனை) உறுதிப்படுத்தினீர்களா? இதன் மீது என்னுடைய வாக்குறுதியை நீங்கள் (ஏற்று) எடுத்துக் கொண்டீர்களா?’ என்று கேட்டான், ‘நாங்கள் உறுதிப்படுத்தினோம்’ என்று அவர்கள் கூறினார்கள். (அதற்கு) ‘நீங்கள் சாட்சியாக இருங்கள்; நானும் உங்களுடன் காட்சியாளர்களில் ஒருவனாக இருக்கிறேன்’ என்று அவன் கூறினான்.
தான் அனுப்பிய தூதர்களிடம் (முகம்மது நபி உட்பட) தான் அனுப்பிய வேதங்களை (குர்ஆன் உட்பட) மெய்ப்பிக்கும் தூதர் ஒருவர் வந்தால் நம்பிக்கைக் கொண்டு உதவிகள் செய்திட வேண்டும் என்று அல்லா உறுதிமொழி வாங்கியதாக இந்த குர்ஆன் வசனம் உள்ளதை ஆதாரமாகக் கொண்டு தன்னை மிர்சா நபியாக அறிவித்துக் கொள்கிறார்



முகம்மது நபியிடமும் அல்லா உறுதி மொழி வாங்கினான் என்பதற்கு குர்ஆனின் வசனம் 33:7 ‘உம்மிடமும்’ (முகம்மது நபியினைச் சுட்டிக்காட்டி) என்று வருவதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.


குர்ஆன் வசனம் 33:40  முத்திரை நபி  (ஹாத்தமுன் நபி) என்று கூறுவதை இறுதியானவர் (sealed) என்று சன்னிகளும், நபிகளில் சிறப்பானவர் என்று சிறப்பைக் குறிக்கவே முத்திரை  என்ற சொல் உள்ளதாக அகமதியாக்களும் கூறுகின்றனர். எனவே முகம்மது இறுதி நபி என்று கூறுவது தவறு என்பது அகமதியாக்களின் நிலைப்பாடு. ‘ஹாத்தமுன்நபி’ முத்திரை நபி என்பதற்குப் பதிலாக இறுதி நபி என்றும் பொருள் கொள்ளலாம் என்ற வாதத்திற்கு எதிராக ஹதீஸ்கள் இருக்கின்றன. புஹாரி பாகம்1 அத்தியாயம் 4 எண் 190 நபியின் முத்திரை( ஹாத்தம்) என்பது சிறப்புத்தகுதியோ, இறுதி நபி என்ற விளக்கமோ அல்ல அது உடலிலுள்ள ஒரு மரு அல்லது மச்சம் போன்ற ஒன்று என்று சொல்கிறது. இதே ஹதீஸ் ‘முஸ்லீமிலும்’ பதிவு செய்யப்பட்டுள்ளது(எண்: 5793). புஹாரியிலும் முஸ்லீமிலும் பதியப்பட்டுள்ளதால் அதிகாரபூர்வமற்றது என அந்த ஹதீஸ்களை தள்ளிவிட முடியாது.



முகம்மது தான் இறுதி நபி அவரைத்தவிர வேறு யாரும் இல்லை அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்” என அறுதியிட்டு ஒரு வசனத்தை அல்லாஹ் கூறியிருந்தால், அஹ்மதியாக்களோ இல்லை அவரைப்போன்றவர்களோ தோன்றுவதற்கான அடிப்படையே இல்லாமல் போயிருக்குமல்லவா? அதை மறந்ததேன்? ‘ஹாத்தமுன் நபி’ என்பதைத் தங்களுக்கு சாதகமாக பொருள் கொள்கிறார்கள். அறுதியிட்டு கூறப்படாததை அவர்கள் அவர்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டார்கள். அவ்வளவுதான்.



மிர்ஸா குலாம் அகமது கிறித்துவத்தையும், இந்து மதத்தையும் எதிர்த்து நிறைய எழுதினார். 1880ல் Barahin-i-Ahmadiyah என்ற நூலின் நான்கு பகுதிகளில் இஸ்லாமிய மதத்தை ஆதரித்தும், கிறித்துவ மிஷனரிகளை எதிர்த்தும், ஆர்ய சமாஜை எதிர்த்தும் எழுதினார். ஹோசியார்பூர் என்ற ஊருக்கு சென்ற போது தன்னிடம் இறைவசனங்கள் இறங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார். அந்த நேரத்தில் சூபி ஞானிகள் செய்யும் சில்லா நாசினித்தில் (பெரும்பாலும் இந்திய ஈரானிய சூபிகளிடம் இருக்கும் பழக்கம்) ஈடுபட்டிருந்தார். இது தனிமையில் ஒரு வட்டத்துக்குள் இருந்து 40 நாட்கள் தூக்கமும் உணவும் இல்லாமல் இருப்பதாகும். இது இயேசு நாற்பது நாட்கள் வனத்தில் இருந்ததையும், மோஸஸ் சினாய் மலையில் நாற்பது நாட்கள் இருந்ததற்கும், எலிஜா என்ற தீர்க்கதரிசி நாற்பது நாட்கள் பட்டினியாக இருந்ததோடும் ஒப்பிடப்படுகிறது. ஆனால், குலாம் மிர்ஸா பட்டினியுடன் இருக்கவில்லை. அவ்வப்போது உணவு உண்டதாகக் கூறுகிறார். இந்த காலத்தில்தான் அவருக்கு ஒரு மிகச்சிறப்பான மகன் பிறக்கப்போவதாக இறைவன் கூறியதாகக் கூறினார்.


பின் தன்னையே ‘வாக்களிக்கப்பட்ட இரட்சிப்பாளர்’ என்று அழைத்துக்கொண்டார். தானே ஏசுவின் ஆன்மா, அல்லாவின் தூதுவர், கிருஷ்ண பரமாத்வாவின் மறு அவதாரம் என்றெல்லாம் தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ள ஆரம்பித்தார்.



இதற்குப் பின்னர் தன்னை ஒரு முஜாதித் (சீர்திருத்தவாதி) என்று கூறிக்கொண்டு தன்னை இஸ்லாமிய நபியாக முன்னிருத்திக்கொண்டார். இறுதித்தீர்ப்பு நாளன்று இயேசு வருவார் என்ற இஸ்லாமிய நம்பிக்கையை முன்னிருத்தி தன்னையே அப்படிப்பட்ட இயேசு என்று கூறிக்கொண்டார். இஸ்லாமியர்கள் எதிர்பார்ப்பது போல மிலிட்டரி தலைவராக இயேசு வரமாட்டார் என்றும் ஆன்மீகத் தலைவராகவே வருவார் என்றும், இனி ஜிஹாத் என்னும் இஸ்லாமிய போர் இந்த காலத்தில் தேவை இல்லைஎன்றும் அறிவித்தார். இது அப்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த வெள்ளையர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது; அதனால் அரசின் ஆதரவும் இவருக்குக் கிடைத்தது.



ஆயினும் இவர் சொன்ன பல தீர்க்க தரிசனங்கள் தவறாகவே இருந்தன. தான் நான்கு பகுதிகளில் எழுதிய நூலை 50 பகுதிகளாகத் தொடர்ந்து எழுதப்போவதாகச் சொன்னார். ஆனால் வெறும் 5 பகுதிகள் மட்டுமே எழுதினார். அதுவும் அந்த ஐந்தாவது புத்தகம் எந்தச் சிறப்புமற்ற நூலாக இருந்தது. உருது, அராபிய மொழியில் ஐந்துக்கும் ஐம்பதுக்கும் ஒரே ஒரு புள்ளி மட்டுமே வித்தியாசமாக இருந்தது. இதை வைத்து சமாளிக்க முயற்சித்தார்!



கிறித்துவர்களையும், இந்துக்களையும் போட்டிக்கழைத்த அகமது பின்னாளில் இஸ்லாமியரையும் போட்டிக்கழைத்தார். இதனால் இஸ்லாமியர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார். கடவுள் தனக்கு எல்லா தூதுவர்களைப் பற்றியும் தன்னிடம் பேசியுள்ளதாகக் கூறினார். ’ஆதாம், நோவா, இப்ராஹீம், ஐசக், யாக்கோபு, இஸ்மாயில், மோசஸ், தாவூது, ஏசு, முகமது – என்ற எல்லா தூதுவர்களாக வந்ததே தானே என்று கூறிக்கொண்டார்.



இது பல இஸ்லாமிய தலைவர்களை இவருக்கு எதிராக திருப்பியது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு உதவியாக முஸ்லீம்களின் ஜிஹாத் உணர்வை மழுங்கடிக்க இவர் பயன்படுத்தப்பட்டார் என்று இதர முஸ்லீம் தலைவர்கள் இவரைக் குற்றம் சாட்டுகிறார்கள். இஸ்லாமியர்கள் இவரை முழுமையாக எதிர்த்ததால் இவரும் இவரை நம்பியோரும் புதிய குழு ஒன்றை அமைத்துக் கொண்டனர். இவர்கள் அஹமதியா என்று தங்களை அழைத்துக் கொண்டனர். ’அஹமதியா’ என்பது முகமதுவின் இன்னொரு பெயர்; அஹமதுவின் பெயருக்காக இப்பெயரை வைக்கவில்லை என்பது அவர்களது விளக்கம். இஸ்லாமியர்கள் இவர்களை ‘காதியர்கள்’ என்று அஹமது பிறந்த ஊரின் பெயரை வைத்து அழைத்தனர்.



தன்னை இறுதி மெஹ்தியாகவும், வாக்களிக்கப்பட்ட மெசியாவாகவும் அறிவித்துக் கொண்ட பின்னால், பல முஸ்லீம் தலைவர்கள் இவரை காபிர் என்றும், இவரையும் இவரது சீடர்களையும் கொல்லத் தகுந்தவர்களாக அறிவித்து பத்வா விதித்தனர். அந்த பத்வா இந்தியாவெங்கும் எடுத்து செல்லப்பட்டு, 200க்கும் மேற்பட்ட முஸ்லீம் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.



ஆனால் என்ன தான் அகமதியா , ஷியா பிரிவினரை முஸ்லிம் இல்லை என்று சன்னிகள் சொன்னாலும் , அவர்களும் ஹஜ் மற்றும் உம்ரா செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். சவுதி அரசாங்கமும் அவர்களுக்கு அனுமதி அளிக்கிறது. குரான் 9:28 ஆம் வசனம் இப்படிக்கூறுகிறது, “இவ்வாண்டுக்குப்பிறகு முஸ்லீம்களை தவிர வேறு யாரையும் மக்காவுக்குள் அனுமதிக்கக்கூடாது.” அல்லாவின் நாட்டம் இல்லாமல் யாரும் ஹஜ் உம்ரா செய்து விட முடியாது என்று கூறப்பட்டிருக்கையில் , அவர்கள் செய்வதை ஒப்புகொண்டே ஆகவேண்டும். மக்காவில் மாற்று மதத்தவர்கள் நுழைந்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கும் சௌதி அரசு (இந்திரா காந்தி கூட ஒருமுறை மக்கா செல்ல விரும்பிய போது அப்போதைய சௌதி அரசு அதை அனுமதிக்கவில்லை) அஹ்மதியாக்களை ஆண்டுதோறும் அனுமதித்துக்கொண்டுதான் உள்ளது. அஹ்மதியாக்கள் தனிமதம் என்பவர்கள், தங்கள் அல்லாஹ்வின் ஆணை சௌதி அரசால் செயல்படுத்தப்படவில்லை என்பதை ஏற்கிறார்களா?

ஈத்-உல்-அதா திருவிழாவன்று 1900இல் இவர் அரபிய மொழியில் ஒரு மணிநேரம் தியாகத்தைப் பற்றி உரையாற்றினார். இந்த உரை இறைவனால் அவருக்கு அளிக்கப்பட்டது என்று அவரை பின்பற்றுபவர்கள் கொண்டாடுகின்றார்கள். இந்த உரையின் போது அவர் குரல் மாறியதாகவும், அவர் ஒரு மோன நிலையிலிருந்து இந்த உரையை ஆற்றியதாகவும் கூறுகிறார்கள். இந்த உரையை பற்றி பின்னால் மிர்சா குலாம் எழுதும்போது ‘ஒரு தேவதூதன் என் நாவின் மூலமாகப் பேசியது போலிருந்தது’ என்கிறார்.

அல்லாஹ் சுமார் 7000 வருடங்களுக்கு முன்னால், முதல் மனிதரான ஆதாமை உருவாக்கியதாகவும் அதன் பின்னால் முகம்மது நபி 4508 ஆண்டுகளுக்கு பின்னால் தோன்றியதாகவும் கூறியிருக்கிறார். (Lecture Sialkot – Page 11, Lecture Sialkot – Page 15) இருந்தாலும் இன்றைய அஹ்மதியா பிரிவினர் பரிணாமவியலை ஒப்புகொள்வதாக கூறுகின்றனர்.

இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி இயேசு இரண்டாம் முறை வரும்போது டமாஸ்கஸ் நகருக்கு கிழக்கே வெள்ளை மினாரட்டுக்கு அருகே உதிப்பார் என்று இருப்பதாகக் கூறிய இவர், தன்னையே இயேசு என்று கூறிகொள்வதால், தனது ஊரான குவாதியான் நகரிலேயே 1903இல் வெள்ளை மினாரட் கட்ட அஸ்திவாரம் போட்டார். இந்த மினாரட் 1916 இல் கட்டி முடிக்கப்பட்டது. இது அஹ்மதியா இஸ்லாமின் சின்னமாக கருதப்படுகிறது.

இவரது காலத்திலேயே ஏராளமான முஸ்லீம்கள் இவரைப் பின்பற்றினர். இவரது காலத்துக்கு பின்னர் அந்த இயக்கம் இரண்டாக உடைந்தது. ஒன்று லாகூர் அஹ்மதியா இயக்கம்; அடுத்தது அஹ்மதியா முஸ்லீம் இயக்கம். அஹ்மதியா முஸ்லீம் இயக்கம் இன்று 200 நாடுகளில் உள்ளது. இந்த இயக்கத்தில் சுமார் இரண்டு கோடிக்கு மேல் பக்தர்கள் உள்ளனர். லாகூர் அஹ்மதியா இயக்கம் 17 நாடுகளில் உள்ளது. 1974ம் ஆண்டு இக்குழுவினர் காபிர் என்று பாகிஸ்தான் அரசால் சட்டம் இயற்றப்பட்டது. இவர்கள் மெக்காவிற்குச் செல்லவும் தடை செய்யப்பட்டார்கள். என்றாலும் அவர்கள் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே உள்ளது. பாகிஸ்தானின் ஒரே நோபல் பரிசு விஞ்ஞானி அப்துஸ் சலாம் அஹ்மதியா பிரிவை சேர்ந்தவர்.

மிர்ஸா குலாம் அஹ்மதுவுக்கு டெம்போரல் வலிப்பு நோய் இருந்திருக்கலாம் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. முதலாவது அவர் தன்னை கடவுளோடு உரையாடுபவராகக் கூறிக் கொள்கிறார். ’நீ என்னுடைய ஒருமையைப் போல இருக்கிறாய். என்னுடைய தனித்துவத்தை போல இருக்கிறாய். என்னுடைய ஆசனம் போல இருக்கிறாய். என்னுடைய மகனைப் போல இருக்கிறாய்’ என்று கடவுள் இவரிடம் சொன்னதாக எழுதியுள்ளார். இவருக்கு வலிப்பு நோய் இருந்திருப்பதை இவரது மருத்துவரும் மற்றவர்களும் குறித்து வைத்துள்ளனர். அஹமதுவே தனக்கு இருந்த வலிப்பு நோய் போல இயேசுவுக்கும் இருந்திருக்கிறது என்று எழுதியிருக்கிறார். (Jesus had actually become insane due to epilepsy. - (Roohani Khazain, Satt Bachan – Volume 10 – Page 295)

இவர் எதிர்காலத்தில் நடக்கப்போவதாக நிறைய சொல்லியிருக்கிறார். அந்த தீர்க்கதரிசனங்கள் அனைத்தையும் அல்லாவே தன்னிடம் கூறியதாகச் சொன்னார். இது போன்ற ஏராளமான வாசகங்களை அவர் எழுதிய நூற்றுக்கும் மேலான புத்தகங்களில்

காணலாம். இவர் கூறிய பல தீர்க்க தரிசனங்கள் அவரது வாழ்க்கைக் காலத்திலேயே தவறாகிப் போய் விட்டன. தான் ’காதலித்த’ முகமதி பேகம் என்ற பெண்ணை மணக்க அவர் எடுத்துக் கொண்ட நம்பிக்கைகளும், முயற்சிகளும் மிகவும் வேடிக்கையானவை. முகமது நபி ஜேனப் என்ற பெண்ணை மணக்க அல்லா உதவியது போல் தனக்கும் உதவுவார் என்ற நம்பிக்கையில் தான் இத்தனை முயற்சிகள் எடுத்திருக்கிறார்! தன் வாழ்க்கைக் காலத்திலேயே கிறித்துவ மதம் அழிந்து விடும் என்றார்; அதுவும் நடக்கவில்லை; இது போன்ற அவரது தீர்க்க தரிசனப் பட்டியல் மிக நீளம் ....



நன்றி ...


செங்கொடி
http://www.answering-islam.org/Gilchrist/Vol1/9c.html
http://news.bbc.co.uk/2/hi/8711026.stm

Thursday, May 22, 2014

720 (a) JIHADI COLLECTION .... (8)







*



 * JUST A PERSONAL COLLECTION *


*** 




 .....the breakaway faction formed a new organisation, calling itself the Ansar-ul-Tauheed, or Army of the One True Faith. In videotapes obtained by The Hindu , Ansar-ul-Tauheed operatives are seen training with assault weapons.

“The Muslims of India are not powerless,” the videotape featuring the group warns. “Their warriors are advancing towards you from Afghanistan, the blessed land of the one true faith. The same way we delivered carnage to you in times past, we will do so again.” 

 *****



Although initially the Indian Mujahideen was thought to be directly involved in the blasts, the police are currently investigating if the person they are looking for, Abubacker Siddique, had formed an independent self-styled South Indian Mujahideen.. 


 *****

10.05.2014


*****

15. 04.’14



Boko Haram -- the nickname means "Western education is forbidden"
 -- has been attacking schools, villages, market places and military 
barracks and checkpoints this year in increasingly frequent and deadly 
attacks. Its mission is to force an Islamic state on Nigeria whose 170 million people are divided almost equally between Muslims living mainly in the north and Christians in the south.

*

11.4.2014

 *
3.4.'14


Nirban’s family and friends say the allegations are untrue but investigators insist he is the face of a disturbing new wave of jihadist recruitments.
For months now, the police have been stumbling on similar cells ...

*

1.4.14

"...the life of nations depends on martyrs. The national fields can be irrigated only with the blood of the best hearts”.




You who have ruled India for eight hundred years, you who lit the flame of the one true God in the darkness of polytheism: how can you remain in your slumber when the Muslims of the world are awakening?” the al-Qaeda ideologue Asim Umar asked India’s Muslims last summer.


*
 2.27.14 








 *****


*
24.3.14 






*


25.3.14 









*


166 +192+180 + 293

Friday, May 09, 2014

750. இதை வாசிக்காதீர்கள் ... நிறைய திட்டுவீர்கள் !








*


இப்பதிவு முழுவதுமாக என் எண்ணங்கள் .. என் கணிப்பு .. என் ரசனை .. இதைப் பொதுவில் வைக்கக் கூடாதென்று பல்லைக் கடித்து என்னை நானே தடுத்துக் கொண்டேயிருந்தேன், முடியவில்லை. அதுவும் நம்ம சூப்பர் இஸ்டார் தொலைக்காட்சித் திரையில் தோன்றி ரத, கஜ, துரக, பதாதிகள் ... ..என்று சொல்லும் போது அவரது வசனம் அடிவயிற்றில் கத்தியைச் சொருகுவது போலிருந்தது. தாங்க முடியவில்லை.

சாம்ராட் அசோகன் நாடகம். சிவாஜி கணேசனின் உச்சரிப்பில் கலைஞரின் வசனம். அதில் சிம்மக்குரலில் வரும் ரத, கஜ, துரக, பதாதிகள் ... என்ற அழுத்தமான, அழகான வசனத்தை அந்தக் காலத்தில் அப்படி ரசித்திருக்கிறோம். இன்று அந்த அமிழ்தை தனது ‘நடிப்பின் தீரத்தினால்’ சூ.இ. கொச்சைப் படுத்துவது போல் படுகிறது.

எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவேயில்லை. அது என்ன ... charisma என்றொரு சொல் உண்டே... அது மாதிரி சிலர் மீது மக்களுக்குக் கண்மூடித் தனமான அன்பு .. அது .. இதுன்னு நிறைய இருக்கு. அதுவும் நம் தமிழ்ப்பட உலகில் இதற்கென்றே தனியிடமே உண்டு. இது ஏனென்று புரிபடவேயில்லை. முதலில் புரட்சி நடிகர் (நடிக்கத் தெரியாமலே நடிகராக இருந்ததால் இந்தப் பெயரோ?) பிறகு சூப்பர் இஸ்டார் (காசு அள்ளிக் கட்டுவதால் இந்தப் பெயரோ?) அடுத்து நம்ம இளைய தளபதி - இந்த வரிசையில் இந்த charisma தொடர்ந்து வருகிறது.

இவர்கள் வந்தால் வரட்டும் என்றும் இருக்க முடியவில்லை. நல்ல படங்கள் வருவதை இந்தப் பிரம்மாக்கள் தொடர்ந்து தடுத்து வந்துள்ளனர். ஒரே பார்முலா ... அதே கெக்கே பிக்கே நடிப்பு ... வேறு நல்ல படங்கள் வந்தாலும் இவர்களது பெரும் படங்களுக்கு முன்னால் நிச்சயம் தோல்வி தான். தமிழ்ப்பட உலகம் இவர்களால் பல மைல் தொலைவு பின் தங்கி விட்டது என்பது என் எண்ணம். இந்த மூன்று நடிகர்களின் படங்கள் போல் மற்றவர்கள் நடித்திருந்தால் அவைகளெல்லாம் நிச்ச்யமாக ஓரிரு நாளில் மண் கவ்வும். ஆனால் இந்த charismatic actors நடித்தால் கூரையைப் பொத்துக்கிட்டு கூட்டம் வரும்.

இந்த மூன்று பேரில் முதல் ஆள் .. முடிந்து போன விவகாரம். மூன்றாவது ஆளின் படங்கள் இரண்டாவது ஆளின் படங்கள் போல் அத்தனை மோசமில்லை. இரண்டாவது ஆள் இருக்காரே ... அவர் ஒரு நல்ல நடிகர்; ஆனால் விசிறிகளால் இப்படி நடிக்கிறார் என்றெல்லாம் ஒரு கதை சொல்வதுண்டு. (என்னைப் பொருத்தவரை முதல் ஆளுக்கு - பெற்றால் தான் பிள்ளையா; அடுத்த ஆளுக்கு - புவனா ஒரு கேள்விக்குறி; மூன்றாவது ஆளுக்கு - துள்ளாத மனமும் துள்ளும்) ஆனால் அந்த வசனங்களை நான் ஒத்துக் கொள்வதில்லை; ஒரு வேளை வில்லன் நடிகராக மட்டும் இருந்திருந்தால் கொஞ்சமாவது பரவாயில்லாமல் இருந்திருக்கும். அவரது கால கட்டத்தில் தமிழ் சினிமாவிற்கு நடந்த நஷ்டங்கள் குறைவாக இருந்திருக்கும்.

சிவாஜின்னு ஒரு படம். வேண்டுமென்றே ‘சிவாஜி’யின் பெயரைக் கெடுக்கவே அப்பெயர் வைத்தார்கள் என்று அந்த சமயத்தில் ஒரு பதிவர் எழுதியிருந்தார். கூகுள் ஆண்டவரிடம் சிவாஜின்னு போட்டா இந்த சிவாஜி பெயர் வர வைப்பதற்காக என்றும் எழுதியிருந்தார்; உண்மையாக இருக்கலாம். அந்தப் படத்துக் க்தையை வேறு எந்த நடிகரை வைத்து எடுத்திருந்தாலும் நாலே நாள் டப்பாவுக்குள் போயிருக்கும். இந்த ஆளுடைய charisma படத்தை ஓட வைத்தது. ஆனால் அமெரிக்காவிற்குப் பொழைக்கப்போன ஆளு இப்படி கோடி கோடியா டாலர் சம்பாதிச்சிட்டு ’கல்யாண வயசிலேயே’ இங்கே வந்து என்னென்னமோ பண்றாராம். அட போங்கப்பா ...

அதே மாதிரி பொண்ணுகளை டேமேஜ் பண்றதுக்கும் குறைச்சலில்லை; ஒரு படம். இவர் சாதாரண் வேலைக்காரர். அவரது முதலாளி விஜய சாந்தி. இந்தியாவிலேயே டாப் பிஸினஸ் உமன். ஆனால் கடைசிக் காட்சியில் தலைவருக்கு சாப்பாடு கட்டிக் கொடுத்துட்டு அவங்க வீட்ல இருப்பாங்க; தலைவர் இன்னும் அதே மாதிரி வேலைக்காரனாக வேலைக்குப் போவார். இப்படி பல கழிசடைக் கதைகள். ஆனாலும் படம் ஓடும். கேட்டால் charisma என்பீர்கள். எங்கிருந்து தான் இதெல்லாம் வருமோ!

வடிவேலு பாவம் .. இதுவரை சந்திரமுகி போன்ற மொக்கை படம் அவருக்கு வாய்க்கவில்லை. சூ.இ. இந்தப் படத்தில் அடித்த ஜோக்குகளும் மூன்றாம் தரம். சில நல்ல படங்கள் என்று விசிறிகள் சில படங்களைச் சொல்லலாம். நூறு படம் நடிச்சா நான் கூட  நாலஞ்சு படம் நல்லா பண்ணிடுவேன்!

இந்த மூவரில் சூ.இ. படங்களில் தான் லாஜிக் எல்லாம் தூர எறியப்படும். அட ... ஒரு கூட்டமே அடிக்க வந்து நிற்கும். தலைவர் தன் வேல் கம்பை எடுத்து முன்னால் நடுவார். அந்தக் குச்சி அப்படியே எல்லாத்தையும் ஒரு சுத்து வந்து திரும்பி தலைவர் முன்னால் வந்து நிற்கும். இது கவுண்ட மணி, வடிவேலு செய்தால் நல்ல காமெடியாக இருக்கும், ஆனால் கதாநாயகனுக்கே இப்படி,. இப்படி ஒரு அர்த்தம் கெட்ட சீனை டைரடக்கர் வைப்பார்; நம்ம ஆளுகளும் நல்லா விசிலடிப்பாங்க. படமும் வெற்றிப் படமாகும். கெட்ட காலம். என்னமோ சீறி வரும் துப்பாக்கிக் குண்டை பல்லால் கடித்து நிற்க வைப்பார் என்று எதிர்பார்த்தோம்; அது மட்டும் இன்னும் நடக்கவில்லை.


மூஞ்சு கொஞ்சம்  பார்க்கிறது மாதிரி இருக்கணும். அதுவும் இல்லை.
அல்லது பார்க்க முன்ன பின்ன இருந்தாலும் மருமகன் தனுஷ் மாதிரி நல்லா நடிக்கணும். அதுவும் இல்லை.
என்னமோ இஸ்டைல் பண்றார் அப்டிம்பாங்க; கடவுளேன்னு தலையில் அடிச்சிக்கணும் - அவரு சிவாஜி படத்தில மொட்டைத் தலையில அடிச்சிக்கிறது மாதிரி.
இல்ல ... அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர். கொடுத்துக் களைத்தவர் என்பார்கள். உண்மையோ பொய்யோ...? ஆனால் இவர் அப்படி சமூகத்திற்கு ஏதேனும் பண்ணிட்டாரா என்றால் அப்படி ஏதும் இல்லை. (மனோரமா பேசிய பேச்சுக்கு மறைந்தவர் என்றால் போட்டுப் பார்த்திருப்பார். இவர் அணைத்துக் கொண்டது ஒரு நல்ல விஷயம். பாபா படத்திற்கு நஷ்ட ஈடு கொடுத்ததாகச் சொல்வார்கள். .. இப்படி அங்கென்றும் .. இங்கொன்றும் ...)
அட .. இவ்வளவு எதுக்கு? மக கல்யாணத்திற்கு விசிறிகளுக்கு பிரியாணி போடுறேன்னு சொல்லி அல்வா கொடுத்துட்டாருல்லா ...

அரசியலுக்கு வந்திருவேன் என்று ரொம்ப நாள் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார்; நல்ல வேளை .. அது நடக்கவேயில்லை.

ஏன் இப்படி இரண்டாந்தர ஆட்களை மக்கள் தலையில் வைத்துத் தூக்கிக் கொண்டாடுகிறார்கள் என்பதே புரியவில்லை. இதில் ஒரு சின்ன சந்தோஷம். இப்போதெல்லாம் தமிழ் சினிமா ... நடிப்பு .. என்றெல்லாம் வரும்போது யாரும் எம்.ஜி.ஆரை quote செய்வதில்லை. கால வெள்ளத்தில் மறக்கடிக்கப் பட்டு, காணாமல் போய் விடுகிறார்கள் போலும்.

இருந்தாலும் பாவம் தான் அந்த முதல் தர மக்கள்!




*





*

Wednesday, May 07, 2014

749. தருமி பக்கம் (18) .... அந்தக் காலத்தில ...





*

“அதீதம்”  இணைய இதழில் வந்த தருமி பக்கத்தின் மறு பதிப்பு ....

*

தின்பண்ட வரிசை ....



*




சிறு வயதில் ஊருக்குப் போனால் அங்கே கிடைக்கும் தின்பண்ட வரிசை மிகச் சிறியது தான். ஆனாலும் அவையெல்லாம் மிகவும் பிடித்த ஒன்று. நிச்சயமாக சந்தை அன்று கிடைக்கும் அவித்த பயறு வகைகள் வாரத்தில் ஒரு நாள் கிடைக்கும் தின்பண்டம். அதன்பின் எப்போதும் கிடைக்கும் தின்பண்டம் ஒரு கையளவு பெரிதாக இருக்கும் அரிசி முருக்கு. நல்ல வெள்ளையாக இருக்கும். அதிலிருந்து  எள் அங்கங்கே எட்டிப் பார்க்கும்.

அனேகமாக இது காப்பி குடிக்கும் போது கிடைக்கும் அதற்கான சைட் டிஷ்! இரண்டும் கைக்கு வந்ததும் முருக்கை உடைத்து அதிலிருந்து முக்கால் வாசியைக் காப்பிக்குள் போட்டு விட வேண்டும். அதன்பின் கைவசம் மீதி இருக்கும் முருக்கை சாப்பிட வேண்டும். இந்த நேரத்திற்குள் முருக்கு காப்பிக்குள் முங்கி, முக்குளித்து உள்ளே போய் ‘அடங்கி’ விடும். காப்பியின் சூடும் போய் விடும். இப்போது காப்பியைக் குடிக்க வேண்டும். முதலில் அனேகமாகக் காப்பி மட்டும் வாய்க்குள் போகும். அதன்பின் மிதக்கும் ஒன்றிரண்டு முருக்குத் துண்டுகளும் உடன் போகும். கடைசியில் காப்பியைச் சுற்றிச் சுழற்றினால் நன்கு ஊறிப்போயிருக்கும் முருக்குத் துண்டுகள் காப்பிக்குத் தனிச் சுவை கொடுத்து உள்ளே போகும்.  காப்பி முடிந்த பின் மீதி ஊறிய முருக்குகள் தனிச் சுவையோடு உள்ளே போகும்.  ஊருக்குப் போவது நின்று போனபின் வேறு முருக்குகளைக் காப்பியில் ஊறப் போட்டால் அப்படி ஒன்றும் சுவையாக இல்லை. அந்த காப்பிக்கும் - வெள்ளைக் காப்பியோ, கருப்புக் காப்பியோ - எங்கள் ஊர் அரிசி முருக்குக்கும் மட்டும் தான் அந்த combo-effect போலும்!

 மதுரை வாழ்க்கை ஆரம்பித்த வருடங்களில் இந்த முருக்குக் கதை மதுரை வரை சென்றது. விடுமுறைக்கு ஊருக்கு வந்து திரும்பிப் போகும் முன் எங்கள் ஊர் ஹோட்டலில் அரிசி முருக்கு செய்பவர் எங்கள் வீட்டுக்கே வந்து முருக்கு செய்து கொடுப்பார். அனேகமாக ஊருக்குப் புறப்படும் ஓரிரு நாட்களுக்கு முன் வந்து முருக்கு செய்து கொடுப்பார்.  மீதியிருக்கும் அந்த ஓரிரு நாட்களில் முருக்குக்கு எந்த ரேஷனும் இருக்காது. வேண்டிய மட்டும் எடுத்துச் சாப்பிடலாம். ஆனால் மதுரைக்குப் போனதும் ரேஷன் வந்து விடும். அம்மா கொடுக்கும்போது, கொடுப்பதை மட்டும் சாப்பிட வேண்டும்.

இருந்ததென்னவொ ஒன்றரை அறை மட்டும்  இருந்த வீடுதான். ஆனாலும், வழக்கமாக இந்த முருக்கு வகையறாக்கள் கைக்குக் கிடைக்காத அளவிற்கு  உயரே வைத்து விடுவார்கள். அதற்கென்றே இருந்த சதுர தகர டப்பாவில் வைத்து மேலே வைத்து விடுவார்கள். எனக்கு எட்டாது. ஆனால் எட்டாத பழம் தானே சுவை. அம்மா வெளியே எங்கேயும் செல்லும் போது கண்ணபிரானின் வெண்ணெய் திருட்டு வேலையை நான் முருக்குத் திருட்டாக செய்து விடுவேன். கண்ண பிரான் பானைகளை அடுக்கி உரியிலிருந்து வெண்ணெய் எடுப்பாராம். நான் எங்கள் கதவின் மேல் ஏறி என் திருவிளையாட்டின் மூலம் முருக்கை எடுப்பேன்.

எங்கள் கதவில் மூன்று இடங்களில்  மரச் சட்டங்கள் இருக்கும். கதவு உறுதியாக இருக்க வேண்டுமே என்று அந்த மரக்கட்டைகள் கட்டையின் முன்புறம் இருக்கும். ஒன்று மேலே; இன்னொன்று கீழே; இன்னொன்று நடுவில். எட்டி மேலே உள்ள கட்டையைப் பிடித்து, கதவின் உச்சியை ஒரு கை பிடிக்கும். காலை நடுக்கட்டையில் வைத்து ஏறினால் மேலே உள்ள முருக்கு டப்பாவை எட்டி விடலாம். அம்மா வருவதற்குள் வேகமாக கதவில் ஏறி ஒன்று - பொதுவாக ஒன்றோடு நிற்பதில்லை - அல்லது இரண்டு முருக்குகளை எடுத்துக் கால்சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டு இறங்கி விடுவேன்.  இறங்கியதும் கால் சட்டையோடு முருக்கை கையால் இரண்டு போடு போட்டதும் முருக்கு நொறுங்கி விடும்.  இனி ... மெல்ல தின்று கொள்ளலாம்.

இதில் ஒரு சின்ன பிரச்சனை. அனேகமாக உங்களுக்கெல்லாம தெரியாத ஒரு பிரச்சனை. அந்தக் காலத்தில் துணிகளை வெளுக்க வீட்டுக்கே வண்ணார் வருவார்கள். அவர்களிடம் தான் துணி வெளுக்கப் போடுவோம். அவர்கள் துவைக்க ஆற்றிற்கு எடுத்துச் செல்வார்கள். அங்கே வெளுப்பதற்கு முன் துணிகள் sterilise  செய்யப்படும். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆற்றுப் படுகையில் உள்ள உவர் மண் என்று சொல்வார்கள். அதில் துணிகளைப் போட்டு புரட்டி எடுத்து, அதற்குப் பிறகு அழுக்குத் துணிகளைப் பெரிய மூட்டையாகக் கட்டி, சுண்ணாம்புக் காளவாசலில் இருக்குமே அது போல் வைத்து துணிகளை வேக வைத்து விடுவார்கள். எங்கள் அழுக்கு அத்தனை அதிகம் போலும். உவர் மண் போட்டு, வேக வைத்து, அதன் பின் அடித்துத் துவைத்து வெளுப்பார்கள். இதனால் எங்கள் கால்சட்டையின் பாக்கெட்டுக்குள் எப்படியும் சிறிது மணல் இருக்கும். இந்த மணலோடு தான் திருடிய முருக்கைச் சாப்பிடணும்! இப்படி ஒரு பிரச்சனை இருந்தது! ஊதி ஊதி கடைசி துண்டுகளைச் சாப்பிடணும்.

ஊரில் எப்போதும் அந்தக் காலத்தில் கிடைத்த தின்பண்டம் காய வைத்த பனங்கிழங்கு. எந்தக் காலத்தில் பிடுங்குவார்களோ தெரியாது. அனேகமாக அளவுக்கு மீறி கிடைக்கும் போலும். நான் ஊருக்குப் போகும் போதெல்லாம் மெத்தையில் மொத்தமாக புளி, வத்தல் இவைகளைப் போட்டு வைக்கும் ஒரு அறையில் மூட்டை கட்டி காய வைத்த பனங்கிழங்குகள் இருக்கும். இதுவும் எங்கள் பொருளாதார நிலைக்கு நல்ல indicator ஆக இருந்தது. சின்ன வயதில் இரண்டு மூன்று பெரிய மூட்டைகளில் கிழங்கு இருக்கும்.


அத்ன் பின் மூட்டைகளின் எண்ணிக்கையில் குறைவு நடந்தது. பின்னால் நார்ப் பெட்டிகளுக்குள் சென்றது. அப்படியே குறைந்தது. சின்ன வ்யதில் கிழங்குகளுக்குப் பஞ்சமே இல்லை. பல்லுக்கும் நல்ல வலு இருந்தது. மெத்தைக்குப் போய் கிண்ணிப் பெட்டியில் அள்ளி எடுத்துக் கொண்டு வந்தால் ‘அரவை’ நன்றாக போகும்.

’கிண்ணிப் பொட்டி’


பின்னாளில் இதற்கு ஒரு combination  கிடைத்தது. கொஞ்சம் கிழங்கு ... சின்ன தேங்காய்த் துண்டு ... சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். தேங்காய் இல்லாவிட்டால் கொஞ்சம் பொரிகடலை. இதுவும் நல்ல combo effect !


சின்ன வயதில் பனம்பழம் சாப்பிட்ட நினைவு இருக்கிறது. ஏனென்று தெரியவில்லை .. பின்னாளில் பனம் பழம் ஏதும் சாப்பிடவேயில்லை.  விழுந்து கிடக்கும் பனம் பழத்தைச் சுட்டுத் தருவார்கள். நல்ல மணம் இருக்கும். நாராக இருக்கும். சப்பிச் சப்பி சாப்பிட வேண்டும். நன்றாகவே இருந்தது. ரொம்ப



சின்ன வயதில் சாப்பிட்டது;  அதன் பின்னால் வாய்ப்பே கிடைக்கவில்லை;

அனேகமாக கிராமத்துப் பசங்க யாரும் குருவியை, அணிலைச் சுட்டு தின்னாமல் இருந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். எனக்கும் அந்த அனுபவம் உண்டு. குறைந்த அனுபவம் தான். இதோடு மழைக்காலத்தில் வரும் ஈசல் பூச்சிகளைப் பிடித்து, வறுத்து தின்ற அனுபவமும் உண்டு.

அது ஒரு காலம் ....








*