Thursday, February 26, 2015

823. தோரணம்





*******


உமாசங்கருக்கு முன்பு குரல் கொடுத்தோமேன்னு நினச்சா கஷ்டமா இருக்கு. சரியான விஷயத்துக்கு ‘சவுண்டு’ கொடுத்தோம்; ஆனால் சரியான ஆளுக்கு சவுண்டு கொடுக்கவில்லையேன்னு வருத்தமாக இருக்கு. பலரையும் அதில் இழுத்து வேறு விட்டு விட்டேன். எல்லோரும் மன்னிக்கணும்.

மனிதனுக்கு எத்தனை எத்தனை நிறங்கள் ...?

ஜீசஸ் வேற அடிக்கடி நேரே வந்து இவர்ட்ட பேசுறாராமே .... கடவுளே!

ஒரு கல்லூரியில் பேசியதைக் கேட்டேன். முட்டாள்தனமாகப் பேசினார். எதற்காக அந்தக் கல்லூரியில் அனுமதித்தார்களோ தெரியவில்லை. பேச்சைக் கேட்ட மாணவர்களும் நன்றாக எதிர் வினை செய்யவில்லையே என்ற வருத்தம் எனக்கு.


******

தில்லி மம்ஸ்  நல்ல திறமைசாலி. நினைத்ததை எல்லாம் இதுவரை சாதித்து முடித்து விட்டார்.

ஹோவிட்ஸர் - இதற்கு சமாதி கட்ட நினைத்தார். முழுவதுமாக முடித்து விட்டார். ராஜிவ் புனிதராகி விட்டார்.

ராஜிவின் கொடும் கொலைக்குப் பரிகாரம் செய்ய நினைத்தார்.  முள்ளிவாய்க்காலில் அதை முழுமையாக முடித்து விட்டார்.

அடுத்த ப்ராஜக்ட் பெரிய காந்தி - அதாங்க, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி - அவர் சொன்னதை ஏறத்தாழ முடித்து விட்டார். என்ன .. காந்தி சுதந்திரம் கிடைத்ததும் காங்கிரஸைக் கலைக்கச் சொன்னார். மம்ஸ் கொஞ்சம் காலம் எடுத்துக் கொண்டார். அவ்வளவு தான். மன்மோகனும் ஒரு நல்ல பலிகிடா!

வாழ்த்துகள் மம்ஸ்!


******

காந்தி குடும்பம் தான் காங்கிரஸை ஒற்றுமைப் படுத்தி வைக்கும் என்று கட்சித் தலைவர்கள் கண்களை மூடிக்கொண்டு நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் அந்த மூட நம்பிக்கையிலிருந்து எப்போதோ விலகி விட்டார்கள். ஆனால் காங். தலைகள் அடுத்து பிரியங்கா வந்தால் காங். உய்வடைந்து விடும் என்று நினைப்பது வேடிக்கை.

அப்படி ஒரு வேளை பிரியங்கா வந்து விட்டால் என்ன செய்வது  என்று கொஞ்சம் அச்சமாகவே உள்ளது. பதவியில்லாத போதே அவரது ஆசைக்கணவர் அடிக்கும் கொள்ளை பயங்கரமாக இருக்கிறது. மாநிலத்துக்குள் அவர் அடிக்கும் ஸ்டண்ட் பிறகு நாடு முழுவதும் பரவி விடும்.

ராகுல் எங்கே போயிருக்கிறார் என்று தெரியவில்லை. க்ரீஸ் என்கிறார்கள். இமய மலை என்கிறார்கள்.போனது வரை சந்தோஷம்.

Times of Indiaவின் தலையங்கத்தை extend your leave ...  என்ற தலைப்பில் எழுதியுள்ளார்கள். quit என்று எழுதுவதற்குப் பதில் கொஞ்சம் நாகரீகமாக இப்படி எழுதியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். quit என்பதற்குப் பதில் disappear என்பது என் கருத்து.


*******


நல்லா நடிக்கிற தனுஷின் தலைவிதி ஏன் விளம்பரப் படங்களில் இம்புட்டு மோசமா இருக்கு? வாயில் போடுற சூயிங்கத்தை விளம்பரப்படுத்த ஒரு விளம்பரப் படத்தில ... அடடா ... கொடுமை வந்து கூத்தாடுது. இவருக்கு ஏனிப்படி ஒரு தலைவிதி!

தனுஷின் விளம்பரப் படங்கள் இதுவரை பார்த்ததெல்லாம் கொடுமையாக / கேவலமாக இருக்கு...

மாத்துங்க .. பாஸ்.


******

 அமிழ்திலும் இனிது தமிழ் என்றார். ஆனால் இலங்கைத் தமிழ்  அதிலினும் இனிது என்பது போல் இருக்கிறது.

பேசிப் பழக வேண்டுமென ஆசை!


******

Wednesday, February 25, 2015

822. நீயா ... நானா ... ?










சென்ற வாரம் நீயா நானா? - 22.2.15 - நிகழ்ச்சி பார்த்த போது ஆச்சரியம் தாங்கவில்லை.  முன்பொரு முறை கல்லூரி மாணவர்களை ஒரு புறம் வைத்து ஒரு நிகழ்ச்சி வந்தது. கல்லூரி மாணவர்களா அவர்கள்? சரியான தர்த்திகள்! நம் இளைஞர்கள் இவ்வளவு மோசமா என்று எரிச்சலாக இருந்தது. ஆனால் இந்த வாரம் வந்த இளைஞர் படை ... அடடே என்று ஆச்சரியப்பட வைத்தார்கள். அழகான, வள்ளுவர் படம் போட்ட ஒரு டி-சர்ட் ... ஜீன்ஸ் என்று உடையில் கலக்கியிருந்தார்கள். ஆனால் அவர்களின் மனமெல்லாம் வள்ளுவர் பொங்கி வழிந்தார். கயல் என்று பரிசு வாங்கிய இளம்பெண் குறளையும் அதன் பொருளையும் விளக்கியது எனக்கு ஒரு குற்ற மனப்பான்மையை அளித்தது.. திருக்குறளில் இவ்வளவு ஆர்வமா? அதில் இவ்வளவு தெரிந்து வைத்துள்ளதே என்று ஆச்சரியப்பட்டு போனேன். பள்ளியில் இந்தி படித்த அந்த மீசைக்கார இளைஞனும் அதே அளவு ஆச்சரியத்தை அளித்தார்.நம் இளைஞர்கள் மத்தியில் திருவள்ளுவருக்கு இத்தனை பெரிய இடமா?

குறளில் எந்தக் கடவுளும் இல்லை; எந்த இடமும் சொல்லப்படவில்லை; எந்த மன்னனின் பெயரும் இல்லை; எந்தக் காலக் குறிப்பும் இல்லை. நிஜமான பொதுமறை! எல்லோருக்கும், எல்லா காலத்திற்கும், மனித இனத்திற்கும் பொதுவான நன்னூல். --- இப்படி என்னென்னவோ கருத்துப் பரிமாற்றங்கள் வந்தன. ஆச்சரியப்பட வைத்தன. இந்த நூலை எல்லோரும் - எல்லா தமிழரும் - வாசித்தேயாக வேண்டும் என்ற நினைவைத் தந்தன.

அறத்துப் பாலும், காமத்துப் பாலும் அவ்வளவு அழகாக பரிமாறிக் கொள்ளப்பட்டன. நட்பைப் பற்றி இவ்வளவு சொல்லியிருக்கிறாரா வள்ளுவர் என்று புதிதாகத் தெரிந்தது. அதையும் விட வள்ளுவரின் கவித்துவத்தின் பெருமை காமத்துப் பாலில் அவ்வளவு அழகாக இருந்தது. ஊடலும் கூடலும் வள்ளுவனின் கவித்துவத்தோடு மிக அழகாகப் பேசப்பட்டன. கட்டாயம் காமத்துப் பாலைப் படித்துப் பார்த்திட வேண்டும் என்று என் மனதில் தோன்றியது. வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்.

பேருந்துகளில் குறள் உள்ளது; ஆனால் பலவற்றிற்குப் பொருள் தெரியவில்லை. உரையை சின்ன எழுத்துக்களில் கீழே கொடுத்தால் மிகப் பயனுள்ளதாக இருக்கும். அரசுப் பேருந்துகளில் அமுல் படுத்தலாமே!

குறளை  இதுபோல் பொது இடங்களில் எழுதி வைத்துப் பெருமைப் படுத்தியதற்காக  கோபி திராவிடக் கட்சிகளுக்கு நன்றி சொன்னார். கட்சிகள் என்பதை விட கட்சி என்று சொல்லியிருந்தால் சரியென்று நினைக்கிறேன். திராவிடப் பெயர்கள் வைத்திருப்பதாலேயே எல்லா கட்சிகளும் திராவிடக் கட்சிகளா என்ன ... ?

நிகழ்ச்சி பார்க்கும் போது நம் இளைஞர்களை நினைத்துப் பெருமைப் பட்டேன். சரியான வழியில் தான் நாம் போய்க்கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது.

நல்ல டி-சர்ட். அதை நிச்சயம் பிரபலப்படுத்த வேண்டும். எனக்கே ஒரு டி-சர்ட் வாங்கணும்னு கொள்ளை ஆசை.

சே குவாரா படம் போட்டுக் கொண்டு புரட்சி என்றால் என்னவென்றே தெரியாத நாம், ஐயனின் படம் போட்ட சட்டை போட்டுக் கொண்டு முதலில் காமத்துப் பாலையாவது படிக்க ஆரம்பிக்க வேண்டும்.

பொது இடங்களில் உள்ள குறள்களில் ஏன் காமத்துப் பாலை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்? அவைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  குறளைப் படிக்க அவை பெரும் உந்துதலாக, கிரியா ஊக்கியாக நிச்சயமாக இருக்கும்.


*******


ஐயனைப் பற்றி எழுதியதும் தமிழ் பற்றி இன்னொரு சோக நினைப்பும் வந்தது.

ஒரு காலத்தில் வழக்காடு மன்றம், பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகள் தமிழின் அருமையைக் கேட்போருக்குத் தந்தன. இலக்கியங்கள், காவியங்களை ஒட்டிய தலைப்புகள். ராமனின் தம்பி இலக்குவன் - ராவணனின் தம்பி விபீடணன் -- இருவரில் யார் சிறந்தவர்கள் போன்ற தலைப்புகள்.  இதில் எல்லோரும் பேசிவிட முடியாது. தமிழ் கற்றறிந்த பெரியவர்கள் மட்டுமே பேச முடியும். கேட்போருக்கும் தமிழ் மீது ஆர்வமும் வேண்டும். பல இலக்கிய உயர்வுகளை, ஓசை நயங்களை, பொருளழகுகளை, சொல்லழகுகளை  அவைகளில் கேட்க முடியும்; ரசிக்க முடியும். குன்றக்குடி அடிகளாரும்,  பாப்பையாவும் இன்னும் பல தமிழ்ப் பெருமகனார்களும் பேசுவார்கள். இதில் இப்போது  வழக்கொழிந்து போன வழக்காடு மன்றத்தில் ‘சூடு” பறக்கும். கேட்கவும் இனிக்கும்.

கற்றோரை கற்றோரே காமுறுவர். அந்தச் சூழல் இப்போது முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது. அன்று போன்று இன்றும் பேசினால் எடுபடாது என்று பட்டிமன்றப் பேச்சாளர்களே கூறுவதுண்டு. ஆனால் வள்ளுவன் பற்றிய நீயா .. நானா? நிகழ்வு அதனைப் பொய்யாக்கி விட்டது. கல்லாதாரையும் கற்றோர் காமுற வைக்கலாம்.

திரைப்படப் பாடல்களில் மேலோங்கி நிற்பது பழைய பாடல்களா, புதிய பாடல்களா என்று ஒரு தலைப்பில் பட்டிமன்றம் ஆரம்பித்த நாளே பட்டிமன்றங்களின் திவச நாளாகிப் போனது. லியோனி நன்றாகப் பாடுவார். இந்தப் பட்டிமன்றங்களின் “புதுப் புரட்சிக்கு’ அவர் முன்னோடியானார். நன்றாக இலக்கியத் தரத்தோடு பேசிய பெருந்தகைகளும் இவர் பின்னே - வாலைச் சுருட்டி என்று சொல்வார்கள்; அதே போல் பெருந்தகைகள் தங்கள் தமிழார்வத்தைச் சுருட்டிக் கொண்டு - சென்று விட்டார்கள். அதன் நீட்சியாக வாழ்க்கையோடு ஒட்டிய தலைப்பு என்று பல குப்பைகள் பட்டிமன்றத் தலைப்புகளாகி விட்டன.

டிவிக்கு ஒரு விழா வந்தால் போதும்;  உடனே போடு ஒரு பட்டிமன்றம், முன்பு வழக்காடு மன்றம், பட்டி மன்றம் ஒரு இலக்கிய விருந்தாக இருந்தது. இப்போ பட்டிமன்றம்னா ஏதாவது ஒரு தலைப்பு. நம்மூரு பெருசா; அடுத்த நாடு பெருசா?  மொதப்பிள்ளை ஆணா பெத்துக்கிறது நல்லதா? பெண்ணா பெத்துக்கிறது நல்லதா?  பிள்ளைக கெட்டுப் போறது அப்பனாலேயா அல்லது வாத்தியாராலேயே ..... இப்படியே போகும். எல்லாம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமான விஷயம். இதுல நடுவர் சொல்றது தான் தீர்ப்பு. அதைத் தான் தமிழக மக்கள் அப்படியே ஏத்துக்குப் போறாங்க. அட இன்னொன்ண்ணு உட்டுட்டேனே ... டிவி சீரியல்கள் பற்றி சில தலைப்புகள் ........... இப்படியே நல்ல நாளுக எல்லாம் டிவியில் சிரிக்குது.

பேச வர்ரவங்களும் நாலு நமத்துப் போன ஜோக். ரெடி பண்ணி வச்சிட்டு வருவாங்க..... நமக்கும் அது பழகிருதா... அந்த ஆளு நகைச்சுவையா பேசுவாருன்னு ஒரு நினப்பு.. ... அவர் வாயைத் திறந்ததும் அவர் சொன்னதுக்கெல்லாம் சிரிக்க வேண்டியது... டிவியில உள்ள எடிட்டிங்கை மறந்து, டிவியில் சிரிக்கிற மூஞ்சிகளைக் காண்பிக்கும் போது மக்களும் சேர்ந்து சிரிச்சிர்ராங்க .. டிவிக்கு நல்லா காசு பார்க்கிற  எளிதான வழி.

எங்க நாட்டுல தான் இந்தக் கதின்னா எங்க போனாலும் இதே தலைப்புகளை வச்சி பட்டிமன்றம் நடத்துறாங்க. தமிழ்நாடு பத்தாதுன்னு எங்கேயும் - அமெரிக்காவா இருந்தாலும், அரேபியாவாக இருந்தாலும் இந்த விளையாட்டு ... தமிழை நல்லா வாழ விடலாமா...? இப்படித்தான்  “கொன்னு .. கொன்னு” ... விளையாடணும்.

ஆனா சும்மா சொல்லப்படாது. இலக்கிய பட்டிமன்றங்கள் தெரு முக்குகளிலும்.கிராமியச் சூழலிலும் நடந்து வந்தன  இப்போ ஹை டெக்காக மாறிப் போச்சு.. மோடி மாதிரி கண்ணுக்குத் தெரியாத லேசர் லைட் போட்டு, ஹிண்ட்ஸ் வச்சிக்கிட்டு பெரிய மேடைகளில் கச்சேரி தொடர்கிறது. வந்து போறவங்களுக்கு டாலரும், தங்கமும் சேருது. எக்கானமிக் க்ளாஸ்ல வந்துட்டு ... பிசினஸ் க்ளாஸ்ல ப்ளேன் டிக்கட் காசு வாங்கிக்கிறாங்களாம் ... அயல்நாட்டிலிருக்கும் தமிழ் “ரசிகர்களின் தமிழ்ப்பசி”க்கு இவர்கள் இப்போது தீனி போடுகிறார்கள். அங்கிருக்கும்  நம் மக்களுக்கு கொடூரமான தமிழ்ப்பசி தான்!!!

***********








 *******

Tuesday, February 24, 2015

821. ஒரு குப்பைப் பதிவு

*






*


இது ஒரு குப்பைப் பதிவு; ஒரு கேவலமான பதிவு. இதனைப் பதிப்பதற்கே கூசுகிறது. இருந்தாலும் ....

ஏற்கெனவே ஹுசைனி ரத்தத்தால் மம்ஸ் சிலை செய்து சில ஏக்கர் நிலங்களை ‘அன்பளிப்பாகப் பெற்றான் என்பது செய்தி.

பிச்சை எடுப்பதில் பல விதம் உண்டு. யானை மேல் அமர்ந்து, சாமி வேஷம் போட்டு ‘இப்படிப் பல விதம். ஹுசைனி ரத்தம் ’சிந்தி’ பிச்சை பெறுகிறான்.

மிகவும் கேவலமான, மடத்தனமான,கிறுக்குத்தனமான வேஷம் இது. இதற்கு எத்தனை ஏக்கர் நிலம் வருகிறதோ.. தெரியவில்லை. அமைச்சர்களை விட தரம் தாழ்ந்து எடுக்கும் பிச்சை இது.

இவன் என் மாணவன் என்று சொல்லிக் கொள்ளவே மிகவும் கேவலமாக இருக்கிறது.



*




 

Monday, February 09, 2015

820. தருமி பக்கம் 24 (அதீதம்) - இலக்கணம் படிப்போமா ...?






*

”அதீதம்” இணைய இதழில் வந்த கட்டுரையின் மறு பதிப்பு ....


*

ஐந்தாம் வகுப்பில் லூக்காஸ் வாத்தியாரிடம் நல்ல பெயர் வாங்கினேன். நல்ல மாணவனாக இருந்திருப்பேன் போலும்!  எனக்கு அவரிடம் தனி மரியாதை உண்டு. எங்கள் வகுப்பில் என்னை மானிட்டர் மாதிரி வைத்திருந்தார். நான் படித்து முடித்து கல்லூரியில் படிக்கும் போதும் அவரை அவ்வப்போது பார்ப்பேன். படிக்கும் போது வைத்திருந்த அதே அன்பை எப்போதும் என்னிடம் காட்டுவார்.

அவர் முன்னால் தான் நான் தமிழில் ஒரு சூரப்புலி (!) என்று ராஜாவுடன் நடந்த ஒரு போட்டியால் முடிவானது. முதல் வகுப்பின் முதல் நாளிலிருந்து ஐந்தாவது வகுப்பில் ராஜாவுடனான போட்டியும், சிவகுமாரோடு போட்ட சண்டையும் தான் நினைவில் உள்ளன. பழைய நினைவுகளில் ஆரம்பப் பாடசாலை நினைவுகள் இவை மட்டுமே நினைவில் உள்ளன.

ஆறாம் வகுப்பில் தான் அப்போதெல்லாம் எங்களுக்கு ஆங்கில எழுத்துக்கள் சொல்லித் தர ஆரம்பிப்பார்கள். ஆனால் ஐந்தாம் வகுப்பிலேயே எங்களுக்கு லூக்காஸ் சார் a .. b .. c .. d.. சொல்லிக் கொடுத்தார். ஆறாம் வகுப்பு a .. b .. c .. d.. ல் ஆரம்பித்து பாடங்கள் தொடர்ந்தன. எனது ஆறாவது வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் படங்கள் எல்லாம் குச்சி குச்சியாக வரையப்பட்டிருக்கும். அதென்னவோ தெரியவில்லை… அந்தப் புத்தகம் எழுதியவருக்கு ராமன் என்ற பெயர் அதிகம் பிடிக்கும் போலும். Raman is playing .. Raman is eating … Raman is a good boy … Raman is a thief … என்று நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் ராமனைக் கூப்பிட்டிருப்பார். அப்போது இதை வைத்து ஏதோ ஒரு பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்தது. ஏன் இப்படி ராமனைப் போட்டு வதைக்கிறீர்கள் என்று கட்டுரையின் ஆசிரியர் கேட்டிருப்பார்.

ஏழாவது, எட்டாவது வகுப்பில் சந்தியாகு சாரும், என் அப்பாவும் ஆங்கிலம் எடுத்தார்கள். இருவரும் ஆங்கில இலக்கணத்தை எடுப்பது அவ்வளவு அருமை. நல்ல ஆழமான அஸ்திவாரம் போட்டார்கள். சந்தியாகு சார் வினைச் சொல் பயன்படுத்தும் முறை – conjugation of verbs – சொல்லிக் கொடுத்தார். வாய்ப்பாடு மாதிரி தான். ஒரு வினைச்சொல் சொல்லி, காலக் குறிப்பும் கொடுத்தால் I, we, you, he, she, it and they என்று கட கடன்னு 8 எழுவாய்களுக்கும் சொல்லணும். எட்டு வாய்ப்பாடுகள். மனப்பாடமா படிக்கணும். அவர் கேட்கும்போது வேகமாக ஒரே தடவையில் நடுவில மூச்சு விடாமல் சொல்லணும். மூச்சு விட்டுட்டா  மறுபடி முதலில் இருந்து சொல்லணும். எனக்கு இது ரொம்ப பிடிச்சிப் போச்சு .. இன்னைக்கி வரை அதை அப்படிச் சொல்லிப் பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டு. வாழ்க சந்தியாகு சார்.





அடுத்து  அப்பா… நல்ல வாத்தியார். அப்பா என்பதை விட ஆசிரியர் என்ற முறையில் அவர் மேல் மரியாதை அதிகமாக உண்டு. ஆங்கில இலக்கணமும், கணக்குப் பாடமும் எடுப்பதில் மன்னர். பசுமரத்தாணி மாதிரி, சொல்லித் தருவதை மனதில் ஆழமாக இறக்கும் அசாத்தியத் திறமை. என் ஆசிரியர்களுக்குள் அவருக்குத்தான் முதலிடம். அப்பா என்பதால் அல்ல … அருமையான ஆசிரியர் என்பதால் மட்டுமே. சந்தியாகு சார் போட்ட இலக்கணத்தின் அடுத்த படி அப்பா போட்டது. என் மண்டையிலேயே அன்று சொல்லிக் கொடுத்ததும், சொல்லிக் கொடுத்த முறையும் இன்னும் நினைவில் இருக்கின்றன. சாதா வாக்கியத்தை கேள்வி வாக்கியமாக மாற்றுவது, எதிர்ப் பொருளாக மாற்றுவது .. direct, indirect speech, change of voices, degrees of comparison எல்லாம் எனக்குத் தண்ணி பட்ட பாடுதான்!

 இதில் எனக்கு இன்னொரு வசதி. அப்பாவிடம் ட்யூஷன் படிக்க கொஞ்சம் மக்குப் பசங்க வருவாங்க. எங்கள் காலத்தில் ட்யூஷன் படிக்க வர்ரதே மக்குப் பசங்க மட்டும் தான். ட்யூஷனுக்கு வர்ர பசங்களோடு நானும் உட்காரணும். அவங்க எழுதுறதைத் திருத்தணும்… சேர்ந்து எழுதணும். ஆக எனக்கு இலக்கணப் பாடம் டபுள் டோஸ்ல கிடச்சுது. அந்தக் கிளாஸ்லேயே பாதி வாத்தியாராக இருப்பேன். சிலருக்குத் திருப்பிச் சொல்லித் தரும் பொறுப்பும் கிடைக்கும்.

சில உண்மைகளையும் சொல்லணும். அன்று பல ஆசிரியர்களின் கற்பிக்கும் தன்மையின் சிறப்பு இன்று வரை நன்கு நெஞ்சில் இருக்கிறது. devoted teachers என்பார்களே அந்த வகைதான். தெரிந்து, தெளிந்து, விரும்பிக் கற்றுக் கொடுத்த பெரியவர்கள் அவர்கள். இன்னும் பல ஆசிரியர்களின் உருவம் கண்முன் வருகிறது. நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். ஆசிரியனாக இருந்த போது என் ஆசிரியர்களிடம் நான் பார்த்த பல நல்லவைகளை நான் ‘காப்பி’ அடிக்க முனைந்திருக்கிறேன். என்றாலும் என் அனைத்து ஆசிரியர்களிடம் நான் பார்க்காத ஒன்று உண்டு. பாடங்களை அழகாகக் கற்பித்தார்கள். ஆனால் மாணவர்கள் எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும்; வாழ்க்கையில் மேலேறி வரவேண்டும் என்பதைச் சொல்ல விட்டு விட்டார்கள் என்ற எண்ணமும், ஏமாற்றமும் எனக்கிருந்தது. அதனால் தானோ என்னவோ நான் மாணவர்களுக்கு வெறும் ’சிலபஸ்’ என்பதோடு நில்லாமல் எல்லாமும், எல்லாவற்றையும் பற்றிப் பேசினேன். ஒரு வேளை கொஞ்சம் ‘அதிகமாகவே’ பேசியிருப்பேன் என்றே நினைக்கின்றேன்.

நல்ல கடமையுணர்வோடு இருந்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பைக் கெடுத்த ஒரு விஷயமும் நினைவுக்கு வருகிறது. அது ஆசிரியர்களே கண்டு பிடித்த ஒரு ’மட்டமான தயாரிப்பு’ தான். நான் படித்த காலத்தில் ஆங்கில இலக்கணம் என்றால் Wren Martin தான்.  ஆதிகாலத்து ஒரிஜினல் நூல். மாணவர்களை விட ஆசிரியர்களுக்கு இது ஒரு நல்ல கற்பிக்கும் நூல். ஆசிரியரை நன்றாகவே தயார் செய்யும். இப்படி இருந்த நிலை மாறி ஆசிரியர்களையும் இலக்கணத்தையும் முழுவதுமாகப் பிரித்தது – the so called ‘exercise books’ – hell with them ! இந்த நூல் முதலில் ஆசிரியர்களின் வேலையை எளிதாக்கியது; இதனால் அவர்களும் இலக்கணம் கற்றுக் கொள்ள வேண்டிய நிலை மாறியது;



ஆசிரியர்கள் இலக்கணம் படிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்து விடுபட்டார்கள். மாணவர்களுக்கு வேலை எளிதாயிற்று. ஏன் எதற்கு என்று தெரியாமல் பதில் மட்டும் கிடைக்கும் வகையான நூல்கள்.
ஒரு பள்ளி மாணவன் தன் exercise bookல் தப்பும் தவறுமாகப் பதில் எழுதியிருந்தான். அவனிடம் கேட்டேன். - பத்து கேள்விகளுக்கும் ஆசிரியர் பதிலைக் கரும்பலகையில் எழுதினார்; அப்படியே பார்த்து எழுதினேன் என்றான். பிறகு தான் புரிந்தது – ஆசிரியர் பதில் எழுதிப் போட்டதில் இவன் தவறுதலாக ஒரு பதிலை விட்டு விட்டு எழுதியிருக்கிறான். பல குழப்படிகள். He was eating football …. Meena wrote an apple …. Krish is waiting for a poetry…. இப்படி அர்த்தமில்லாமல் அனர்த்தமாக இருந்தது. ஒரு பதிலைத் தப்பாக எழுதியதால் அதன் பின் வந்தவை அனைத்தும் தப்பு. ஆக, ஆசிரியர் படிக்க வேண்டாம் … கற்றுக் கொடுக்க வேண்டாம் .. வெறும் புள்ளிக் கோலம் போடுவது போல் வெற்றுப் புள்ளிகளில் வார்த்தைகளைப் போட்டு விடலாம். மாணவனுக்குப் புரிகிறதோ இல்லையோ … இப்படியே போயிற்று ஆங்கில இலக்கணம்.

ஆங்கில இலக்கணம் இந்த லட்சணத்தில் போனதென்றால், தமிழ் வளராமல் போனதற்கு எனக்குத் தெரிந்த ஒரு காரணம் நம்ம “கோனார்” தான்! யார் தமிழ்ப் புத்தகங்களைப் படித்தார்கள். பார்த்தது .. படித்தது .. உருப்போட்டது எல்லாமே கோனார் தான். இதற்கு ஆசிரியர்கள் அருளிய வரம் என்னவென்றால் இலக்கணக் குறிப்புகள் எல்லாமே கோனாரிடமிருந்து கடன் வாங்கி தான் தேர்வில் கேட்பார்கள். மற்ற கேள்விகளும் அனேகமாக கோனார் சொன்ன கேள்வி பதில்கள் தான். கோனார் நோட்ஸோடு தமிழும், இலக்கணமும் சவமாகிப் போய்விட்டன. அப்பாவிடமும், சந்தியாகு சாரிடமும் படித்த ஆங்கில இலக்கணம், கந்தசாமிப் புலவரின் தமிழ் வகுப்பு இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் இந்த exercise books பள்ளிப் படிப்பை எப்படி நாசமாக்கியது என்பது தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. இன்றைக்கு அறிவியலை ஏகத்துக்கும் சொல்லித் தருகிறார்கள். ஆனால் அதை வெளிப்படுத்த வேண்டிய மொழித் திறமையைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. எவ்வளவு பெரிய அறிவியல் அறிவாளியாக இருந்தாலும் அதைத் திறமையாக வெளிப்படுத்தும் மொழித்திறமை இல்லாமல் மாணவர்கள் இருப்பதைக் காண்பது பெரும் சோகம். அந்த சோகத்தின் வெளிப்பாடே இந்த digression. விஷயத்துக்கு வருவோம்.

அப்பாவிடம் படித்துவிட்டு அவரிடம் அடி வாங்கியதைச் சொல்லாமல் போவதெப்படி? எட்டாம் வகுப்பு. அப்பா ஆங்கில வாத்தியார். அதனால் வகுப்புக்கு அவர் தான் ஆல் இன் ஆல் அழகு ராஜா. தங்கவேல் எங்கள் வகுப்பிலேயே பெரிய பையன். ஒல்லியாக உயரமாக இருப்பான். சின்னச் சின்னதாக முகத்தில் எங்காவது ஓரிடத்தில் வெள்ளை ப்ளாஸ்டர் ஒட்டி ஸ்டைலாக வருவான். அனுப்பானடியில் இருந்து வருவான். அப்பாவிடம் ட்யூஷன் வேறு படித்தான். அங்கு என்னிடம் மாட்டியிருப்பானோ என்னவோ ...! இரண்டு வகுப்புகளுக்கு நடுவே இருந்த நேரத்தில் வகுப்பில் பேசுவோர் பெயரைக் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும். என் பெயரை ஒரு நாள் எழுதினான். நான் பேசவில்லை என்று அவனிடம் விவாதித்துக் கொண்டிருந்தேன். அப்பா வகுப்பு. உள்ளே நுழைந்தார். என் பெயரை போர்டில் பார்த்தார். கையிலிருந்த டஸ்டர் என்னை நோக்கிப் பறந்து வந்து மண்டையில் விழுந்தது. மகன் தவறு செய்ததும் தேரேற்றிக் கொன்றானே … மனுநீதிச் சோழன் .. அப்படி ஆகி விட்டார் அப்பா. பொறிந்து தள்ளி விட்டார். அன்று வாங்கிய அடி மாதிரி அவ்வளவு அடி அவரிடமிருந்து எப்போதும் வாங்கியதில்லை. செமத்தி …! அதன்பின் வகுப்பிற்கு வெளியே நிற்க வைத்தார். வர்ர போற ஆசிரியர்கள் எட்டிப் பார்த்து பாவம் போல் என்னைப் பார்த்து விட்டுப் போனார்கள். (ஆமா … அது என்ன நீதிச் சோழன் என்பதில்லாமல் ஏன் “மனு” நீதின்னு அந்த மன்னனுக்குப் பெயர் வைத்தார்கள்; இங்கே எங்கே வந்தார் ’மனு’?)

இப்படி சோகமாக என் எட்டாம் வகுப்பை முடித்து வைத்தேன் ……….


 *