Monday, March 05, 2018

974. அசோகர் நூலைப் பற்றி தெக்கா - நான்காம் பாகம்





*

பேரரசன் அசோகர்: பகுதி-3 

வாங்கி கிடப்பில் போடு (அஜந்தா)


புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வட அமெரிக்கா பூமியில் இரத்தக் களரி ஆட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதே கால கட்டத்தில் தான் கிழக்கிந்திய கம்பெனியும் பெருமளவில் இந்திய துணைக் கண்டத்தில் ஆக்கிரமித்து அவர்களுக்குத் தேவையானதை செய்து கொண்டது போக, நம்முடைய சமூக சீர்திருத்தத்திற்கும் அரும்பணி ஆற்றி இருக்கிறார்கள்.
இது போன்ற பண்டைய கால வரலாற்று புத்தகங்கள் படிக்கும் பொழுது வெளித் தெரியாத பலப்பல விடயங்கள் பல துறைகளிலும் நிகழ்த்தப்பட்டிருப்பதாக தெளிவாகிறது.
கிழக்கிந்திய கம்பெனியின் வழியாக வேலைக்கென இங்கு வந்த வெள்ளையர்கள் அவர்களுக்கிட்ட பணியைத் தாண்டி தங்களது ஓய்வு நேரத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நம்முடைய துணைக்கண்டத்திற்கான பண்டைய வரலாற்றை மண்ணிலிருந்து மீட்டெடுத்து நமக்கான சுவடுகளை அறியத் தந்திருக்கிறார்கள்.
உதாரணமாக ஒருவர் நாணயங்கள் தயாரிப்பு அல்லது நில அளவை செய்வதற்கென வந்தவர் இங்கு காணும் பழைய காலத்து சிதிலமடைந்த குடைக் கோவில்கள், சிலைகள், ஓவியங்களை பார்த்து மலைத்துப் போய் அதன் வழியில் தங்களுடைய மொழித் திறமையை வளர்த்து ஒரு தொல்லியல் துறை நிபுணனுக்கேயான வழியில் தங்களை பட்டை தீட்டி மொழி பெயர்ப்பில் ஈடுபட்டு கிடைக்கும் தடயங்களை சேமிப்பு செய்திருக்கிறார்கள்.
அவர்களுடைய உழைப்பைப் பற்றி வாசிக்கும் பொழுது பெரும் பெருமூச்சும் ஒரு விதமான வெட்கமுமே எஞ்சி நிற்கிறது. அந்த கால கட்டத்திலும் வேத விற்பன்னர்கள் தங்களுடைய மொழியை தங்கள் சுற்றத்தை தாண்டி வேறு யாருக்கும் கற்றுக் கொடுக்க தயாராக இல்லை என்பதும், கிடைக்கும் தரவுகளை அவர்களிடத்தில் காட்டி அதனையொட்டி கேள்விகள் எழுப்பினால் மழுப்பலான பதிலுமாக கொடுத்திருந்திருக்கிறார்கள்.
இந்த பகுதியில் அஜந்தா குகை கோவில்களை கண்டெடுப்பதற்கு முன் அங்கே செல்வதற்கே அச்ச மூட்டும் வகையில் புலிகளின் நடமாட்டம் மிக்க பகுதி என்றும்சொல்லப்பட்ட, பல நூற்றாண்டுகளாக கண்டு கொள்ளாமல் விடப்பட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களும், கல்வெட்டுகளும், சிற்பங்களும், ஓவியங்களுமென நிரம்பிக் கிடந்த ஏகாந்தமான புதையல் பகுதியான அஜந்தா குடைக் கோவில் பகுதியை கண்டெடுத்திருக்கிறனர்.
அந்தப் பகுதியை அடைய கால் நடையாக நடந்து ஒரு குடைவுப் பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு செல்ல மரங்களில் ஏறியும் பார்த்து நகல் எடுத்திருந்திருக்கிறார்கள். அவைகளை பிரிதொரு சமயம் உரியவர்களிடம் கொடுத்து...
//...அலெக்சாண்டர் பேசிய பின் ஆறு மாதங்கள் கழித்து காப்டன் க்ரெஸ்லி(2) என்பவரும் ரால்ஃப்(3) என்பவரும் அஜந்தாவைக் காணச் சென்றனர். அவர்கள் அங்கிருந்த கல்வெட்டின் நகல்களைக் கொண்டுவந்தார்கள். இந்த நகல்களை பெனராஸில் உள்ள பிராமணப் பண்டிதர்களிடம் கொடுத்தும், அங்கிருந்த கல்லூரியின் செயலரிடம் கொடுத்ததும், எப்பயனும் இன்றிப் போனது ...//
வாங்கி கிடப்பில் போட்டிருக்கிறார்கள். சில இடங்களில் செய்தி தரவுகளைக் கூட கொடுக்க மறுத்திருக்கிறார்கள். காலனிய ஆராய்ச்சியாளர்களின் உழைப்புதான் இங்கு மெச்சுதலுக்குறியது. ஏனெனியில் இத்தனை தவிர்ப்புகளையும் தாண்டி தொடர் முயற்சியின் மூலமாக வட மொழி கற்றுக் கொண்டு தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைப்பனவற்றை ஏனைய பகுதிகளில் வேலை பார்க்கும் அதே ஆர்வமுடையவர்கள் கண்டெடுத்த தரவுகளுடன் ஒப்புமை படுத்தி ஒரு நேர்த்திக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
அசோகர் காலத்து ஸ்தூபா ஒன்று இடித்து தரைமட்டமாக்கியது போக எஞ்சிய பகுதிகளை புபனோஷ்வரின் ஓர் ஆலயத்திற்கு அருகில் இருப்பதாக அறிந்து செல்கிறார்கள். வனப்பகுதியில் இடிந்த நிலையில் ஒரு சிங்கத்தின் தலையும் தோள்பகுதியும் கிடப்பதையும் அருகிலேயே அந்த தூணின் சில பகுதிகளும் கண்டு அருகில் உள்ள ஆலய நிர்வாகிகளிடம் அது பற்றி பேசப் போக அவர்கள் இந்த ஆராய்ச்சியை இத்தோட விட்டு விடுங்கள் என்று கேட்டுக் கொண்டதிற்கு இணங்க அந்த தடயம் தாண்டி செல்லப் பட்டிருக்கிறது.






இதிலிருந்து நமக்கும் தெரிய வருவது என்ன வென்றால், எங்கிருந்தோ வந்தவர்கள் நம்முடைய வரலாற்றை தோண்டித் துருவி விடுகதையாக விடயங்களை அவிழ்த்துக் கொண்டிருக்கும் பொழுது எதற்காக இங்கேயே இருப்பவர்கள் அதனை மறைக்க எண்ணி குறுக்கே விழுந்திருக்க வேண்டும்? இப்படியான குறுக்கே விழுந்து அரசியல் செய்த கதைகள் வரிசையாக அணி கட்டி இந்த புத்தக்கத்தில் வெளி வருகிறது.






1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உண்மைதான். எங்கிருந்தோ வந்தவர்களுக்கு இருந்த வரலாற்றுணர்வு நம்மவர்களிடம் இல்லை. அது அப்போது மட்டுமல்ல, இப்போதும்கூட. என் ஆய்வின்போது புத்தர் சிலைகளைத் தேடிச் சென்ற சமயத்தில் பல இடங்களில் மிக அருகில் புதிய அதுவரை வெளிப்படுத்தப்படாத புத்தர் சிலைகள் இருந்தபோதிலும் களப்பணியின்போது அதனை வெளிப்படையாக பலர் கூறவில்லை. என் தொடர்ந்த களப்பணி மூலமாகவே பல தேடல்களுக்கு விடை கண்டேன்.

Post a Comment