Monday, October 13, 2025

1350. என் கதை – 4 A TOUCH OF PHILOSOPHY




*



இரண்டு வயதில் அம்மாவை இழந்து, ஐந்து வயது வரை கிராமத்து வாழ்க்கை வாழ்ந்து, அந்த வயதில் அப்பா மறுமணம் செய்ததும் நாங்கள் மூவருமாக அப்பா வேலை செய்து கொண்டிருந்த மதுரைக்கு வந்து புது வாழ்க்கையை ஆரம்பித்தோம். ஐந்தாம் வகுப்பு சென்றதிலிருந்து ஒரு புதிய பொறுப்பு வீட்டில் எனக்குக் கொடுக்கப்பட்டது. அப்பாவும், அம்மாவும் காலையில் 5 மணிக்கெல்லாம் அருகில் இருக்கும் புனித மரியன்னை கோவிலுக்கு பூசை பார்க்கப் போவார்கள். அப்போதே என்னையும் எழுப்பி விட்டாலும் நான் தூக்கத்திலே தான் இருப்பேன். அப்பா கோவிலிலிருந்து home tuition போய் விடுவார்கள். அம்மா வந்து மீண்டும் எழுப்ப, நான் ஆறுமணி பூசைக்குப் புறப்பட்டுப் போவேன். ஐந்தாம் வகுப்பு வந்த பின் கொடுக்கப்பட்ட புதிய பொறுப்பின்படி நான் கோவிலுக்கு ஒரு தூக்குப் பாத்திரத்துடன் போவேன், பூசை முடிந்ததும் அங்குள்ள குருமார்கள் விடுதியில் உள்ள மாட்டுப் பண்ணையிலிருந்து வீட்டுக்குப் பால் வாங்கிக் கொண்டு போகவேண்டும்.

வீட்டிலிருந்து கோவிலுக்குப் போகும் தூரம் ஒரு கிலோ மீட்டர் இருக்கும். நாங்கள் இருந்தது தெற்கு மாரட்டு வீதி. இந்த வீதிக்கு இணையாக வெளிப்பக்கம் அல்லது தெற்குப் பக்கம் தெற்கு வெளிவீதி இருக்கும். அது பெரிய வீதி. பஸ் போக்குவரத்து எல்லாமே அந்த வீதியில் தான். வீட்டிலிருந்து அரை கி, மீட்டர் தூரத்திலிருந்த தவுட்டுச் சந்தையைத் தாண்டியதும் இந்த இரண்டு வீதிகளும் இணைந்து ஒன்றாகி விடும். முதல் அரை கி,மீ. தூரத்தில் நான் காலையில் போகும்போது அநேகமாக ஆட்களே இருக்க மாட்டார்கள். விரைவாகப் போவதற்காக ஒரு புது டெக்னிக் கண்டுபிடித்து வைத்திருந்தேன். ஏதாவது ஒரு சிறு கல்லை காலால் எத்திக் கொண்டே போனால் போகும் தூரமே தெரியாது. இந்த வீதி வெளி வீதியோடு ஒன்றானதும் ஒழுங்காக பிளாட்பாரத்தில் ஏறிப் போகணும். இந்தப் பழக்கம் வெகு நாள் நீடித்தது.

இளங்காலையில் தனியாக நடந்து போகும்போது மனசுக்குள் ஏதேதோ எண்ணங்கள் ஓடும். அதில் முக்கியமான எண்ணம் என் அம்மாவைச் சுற்றி வரும். இறப்பு என்பது பற்றி எல்லாம் தெரிந்திருந்தது. அப்படியானால் இனிமேல் அம்மாவைப் பார்க்கவே முடியாதா என்ற ஏக்கம் அந்த வயதில் மிக அதிகமாக இருந்தது. அம்மா உயிரோடு இருந்திருந்தால் ஒரு வேளை நான்  அம்மாவைப் பற்றி அதிகமாக நினைத்திருக்க மாட்டேன். அந்த ஏக்கம் ஏதும் இருந்திருக்காது. ஆனால் இழந்ததால் எனக்கு அம்மா நினைப்பு மிகப் பல வருடங்கள் மனதில் அடிக்கடி தோன்றும்.

காலையில் தனியாக நடக்கும் அந்த வயதில் அம்மாவைப் பற்றிய நினைவும் ஏக்கமும் மிக அதிகமாக இருந்தன. வீட்டில் எல்லோருடன் இருக்கும்போது இல்லாத நினைவுகள் இந்தத் தனிமையில் நிறையவே வந்து என்னைச் சூழ்ந்து கொள்ளும். அந்த வயதில் -பத்திலிருந்து அநேகமாக பதினைந்து வயது வரை அப்போதெல்லாம் மனதில் ஒன்று வழக்கமாகத் தோன்றும். நான் செல்லும் வழியில் சரியாகப் பாதி வழியில் ஒரு தெரு முக்கில் பத்திரகாளியம்மன் கோவில் ஒன்று உண்டு.  அந்தக் கோவில் வாசலுக்கு முன்னால் இரண்டு தூண்களில் டோம் லைட் என்று சொல்வோமே அது போன்ற இரு வெள்ளை மின்சார விளக்குகள் இருக்கும். அந்த்த் தூண்களில் உட்கார்ந்து கொள்ள இடமிருக்கும். நடந்து போகும்போது சில சமயங்களில் அந்தத் திண்டின் மீது உட்கார்வேன். என்னவோ ஒரு ஞாபகம். அந்த விளக்கு வெளிச்சத்தில் உட்கார்ந்திருந்த போது முதல்  தடவையாக ஒரு புதிய எண்ணம் வந்தது போல் நினைக்கின்றேன்..

இப்போது நான் உயிரோடு இருக்கிறேன்; அம்மா என்னை விட்டுவிட்டு இறந்து விட்டார்கள். ஆனால் இதெல்லாம் உண்மையல்ல. நான் இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு நாள்  நான் விழித்தெழுவேன். அப்போது அம்மா அங்கே இருப்பார்கள். என்னை அணைத்துக் கொள்வார்கள். இப்படி ஓர் எண்ணம் ஓடும். ஏனோ இதில் எனக்கொரு தனி சுகம். மீண்டும் .. விழித்தெழுந்ததும் .. அம்மாவைப் பார்த்து விடுவேன் என்ற நம்பிக்கை மனதிலிருக்கும்..

இந்த நினைவு எத்தனை ஆண்டுகள் என்னைச் சமாதானப்படுத்தியது என்பது நினைவில்லை. வயதாக வயதாக இந்த நினைவுகள் மங்க ஆரம்பித்தன. பத்துப் பன்னிரெண்டு வயதில் தோன்றிய இந்த நினைவுகளை நான் அடியோடு மறந்து விடவில்லை. ஆனால் நாற்பது வயதில் இன்னொன்று நடந்தது. இப்போது தாவோயிஸம் (Daoism) என்ற சைனா கலாச்சாரத்தில் உள்ள சுவாங் த்சு (Chuang Tzu) என்பவரும், லாவோ த்சு (Laou Tzu) என்பவரும்  இணைந்து எழுதிய “சுவாங்சீ” என்ற நூலில் சொல்லப்பட்ட ஒரு கருத்தோடு எனக்குச் சிறு வயதில் வரும் நினைவும் ஒன்றாக  இருப்பதாக எனக்குத் தோன்றியது. இந்த இருவரில் சுவாங் த்சு என்பவர் ஒரு நாள் தூக்கத்தில் ஒரு கனவைக் காண்கிறார். கனவில் ஒரு வண்ணத்துப் பூச்சி அங்குமிங்கும் பறந்து திரிகிறது. தடையேதுமில்லாமல் பறக்கிறது. சுவாங் த்சு விழிக்கின்றார். இப்போது சுவாங்சீ அங்கே இருக்கிறார். வண்ணத்துப் பூச்சி அங்கே இப்போதில்லை.

சுவாங் த்சு மனதில் ஒரு ஐயம் எழுகிறது. அவர் தூங்கும் போது வண்ணத்துப் பூச்சி பறந்து திரிந்தது. விழித்ததும் அங்கே மனிதனாக சுவாங் த்சு மட்டும் இருக்கிறார். அவருக்கு வந்த  ஐயம் - மனிதனாக இருந்து ஒரு வண்ணத்துப் பூச்சியைக் கனவில் கண்டேனா?; அல்லது ஒரு வண்ணத்துப் பூச்சியின் கனவில் நான் ஒரு மனிதனாக இருக்கின்றேனா? இந்த எழுத்துகளுக்குப் பின்னால் இருக்கும் பல்வேறு கருத்துகளுக்கு தத்துவ விளக்கங்கள் பல கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் முதன் முதல் இதை நான் வாசித்த போது, எனக்குச் சிறு வயதில் தோன்றிய நினைவுகள் மீண்டும் வந்தன. ஒரு ஆச்சரியம். பெரும் தத்துவ அறிஞர்கள் சொன்ன ஒரு விஷயத்தின் ஒரு பகுதியை நான் என்னையறியாமலேயே மிகச் சிறு வயதிலேயே ஏறத்தாழ அதே போல் நினைத்திருக்கின்றேனே என்று ஆச்சரியப்பட்டேன். இந்த ஆச்சரியம் வயது முதிர்ந்த பிறகும் மேலும் அதிகமாகத் தொடர்ந்தது என்பது இன்னொரு ஆச்சரியம்.

பத்து வயதில் தெரிந்ததும்,  நாற்பது வயதில் தெரிந்ததும் ஒன்றாக இருந்தது எப்படி?  இது போன்ற ஒரு தத்துவத் தொடர்பு கிடைத்தது என்று நாற்பதுகளில் ஆச்சரியப் பட்டேன். ஆனால் எழுபதுகளில் கேள்விப்பட்ட இன்னொரு தத்துவமும் இதனோடு தொடார்பு கொண்டிருப்பதைப் பார்த்து மேலும் எனக்கொரு பெரும் ஆச்சரியம்.

நெடுநாட்களுக்கு மாலையில் நடக்கும் போதெல்லாம் ராஜாவே என் கூட வந்து கொண்டிருந்தார். பின் சில ஆண்டுகள் கழித்து பவா செல்லதுரை நெருங்கி கூடவே வந்தார். அது சில மாதங்கள். அடுத்து மதுரைக் கல்லூரி முதல்வர் பேரா. முரளி உடன் வர ஆரம்பித்தார். ஒரு மணி நேரத்திற்குத் தொடர்ந்து பேச எத்தனை மணி நேரம் தயாரிப்பில் இருப்பாரென்று நினைத்துப் பிரமித்திருக்கிறேன். அவரது  “பேச்சொளி” (புதியதொரு சொல்லை உருவாக்கியுள்ளேன். ) ஒன்றில்  ஆல்பெர் காம்யூ (Albert Camus) என்பவரைப் பற்றியும் அவரது தத்துவமான  அபத்தம்’ (absurdity) பற்றியும் பேசினார்> இதுவரை  அதை மூன்று முறையாவது கேட்டிருப்பேன்.

நம்ம பெரியார் சொன்னதை வேறு தத்துவ மொழியில் நீட்டி முழக்கிச் சொன்னது போலிருந்தது.  ஒரே வார்த்தையில் பெரியார் சொன்னார்: “வெங்காயம்”. அதை உறித்துப் பார்த்தால் என்ன மிச்சமாகும்? ஏதுமில்லை! நம் வாழ்வும் அப்படித்தான். உறித்துப் பார்த்தால் ஒன்றுமில்லை. ஏன் ஓடுகிறோம்?; ஏன் உழைக்கிறோம்?; ஒரு வழியில் சிந்தித்தால் இல்லாத ஒன்றைத் தேடி ஓடுகிறோமோ? வாழும் வாழ்க்கையில் ஏதேனும் அர்த்தமிருக்கிறதா? என்னதான் கிடைக்கிறது இறுதியில். முரளி காம்யூ எழுதிய ‘Stranger’ என்ற மிகவும் அதிகாமக மொழிபெயர்க்கப்பட்ட  நூலைப் பற்றி சொல்லியிருந்தார். அந்நியன்என்று தமிழில்  வந்திருக்கும் நூலையும் வாசித்து விட்டேன். விசித்திரமான நடை. எனக்கென்னவோ தஸ்தயேவ்ஸ்கி எழுதிய – நானும் மொழிபெயர்த்துள்ள – ‘Notes from Underground’ (“நிலவறையில் இருந்த சில குறிப்புகள்”) நடை போலவே இதிலும் இருந்தது. இரண்டுமே நினைவோட்டத்தைப் பதிவு செய்யும் நடையில் உள்ளன. ஒரு வெறுமை அந்த நடையில் இருந்தன. மனம் தளர்ந்த நிலை. பொருளில்லா வாழ்க்கை அங்கே இடம் பிடித்தது. தஸ்தயேவ்ஸ்கி நூலின் பின்புலத்தில் இருளும், கடும் பனியும் இருந்தன; காம்யூவின் நூலில் கூச வைக்கும் சூரிய ஒளியும், வெம்மையான வெயிலும் இருந்தன.

என் சிந்தனை ஓட்டத்தை மீண்டும் ரீவைண்ட் செய்தேன். பத்து வயதில் இப்போது வாழும் வாழ்க்கை ஒரு தூக்கமென்று நினைத்தேன்; விழித்தால் அம்மா வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கைக் கோடு தெரிந்தது போலிருந்தது. இது அன்றைய அறியாத வயதில் வந்த நினைப்பும், நம்பிக்கையும். 40 வயதில் அதே போல் இரு வேறு நினைவுகள் அந்த தத்துவ அறிஞருக்கு. அதில் எது உண்மை; எது கற்பனை என்ற கேள்வியைத் தனக்குத் தானே எழுப்புகிறார். 70 வயதில் காம்யூ வருகிறார். அவர் வாழ்க்கையே ஓர் அபத்தம் என்கிறார். ஏதோ ஒரு பூஜ்யத்திற்கு உள்ளே உள்ள ஒரு ராஜ்யத்திற்குள் சுற்றி வருவது போல் தெரிகிறதே.

எது உண்மை; எது பொய்மை?

உண்மையில் வாழ்க்கை என்பதுதான் என்ன?

விளக்கங்கள் குழப்புகின்றன.

வயதாகி விட்டதால் வரும் குழப்பங்கள் என்று தூக்கியெறிய முடியாது. காம்யூவும், தாவோயிச தத்துவ அறிஞரும் வயதான காலத்தில் இவ்வாறு சிந்திக்கவில்லையே!

 










Saturday, October 11, 2025

1349. ஆச்சரியமூட்டிய ஓர் இளைஞர்








 

Youtube - இதனைத் தோண்டினால் தேனூறும் என்பது தெரிந்ததே. ஆனால் இன்று எனக்கொரு ஆச்சரியம். இங்கே மூன்று நான்கு பேரைப் பற்றிப் பேச வேண்டுமென்ற ஆவல்.

முதல் ஆள்; மதுரைக்கார இளைஞர் மதன் கெளரி. இவரின் மீதான ஆச்சரியத்திற்குக் காரணம் அவரது 80 லட்சத்திற்கும் அதிகமான subscribers. Great achievement. நல்ல உழைப்பு.

அடுத்தது பேராசிரியர் முரளி. தத்துவப் பேராசிரியர். அறிவியல் பாடம் நடத்தும் என் போன்ற ஆசாமிகளுக்கு வகுப்பில் point by point ஆகப் பேசும் பழக்கம் இருக்கும். ஆனால் humanities ஆசிரியர்கள் அது போன்றில்லாமல் ஒட்டு மொத்தமாக ஒரு கருத்தைப் பற்றித் தொடர்ந்து பேசுவது கொஞ்சம் ஆச்சரியமான ஒன்று தான். அழகாக இதைச் செய்கிறார். அனுபவம் பேசுகிறது.

மூன்றாவதும் ஓர் இளைஞர் தான். Mr. GK என்ற பெயரில் எல்லாவற்றையும் பற்றிப் பேசுகிறார். Quantum physics பற்றியெல்லாம் எளிதாகப் பேசிச் செல்கிறார். இது போன்ற பல அறிவியல் கருத்துகளை எளிதாகப் பேசிச் செல்கிறார். அதோடு உருட்டுகள் பலவிதம்என்ற தலைப்பில் பல மூட நம்பிக்கைகளைச் சாடுகிறார். Bundle of information. இத்தனையையும் எப்படி காலமெடுத்துத் தயாரிக்கிறார் என்பது அடுத்த ஆச்சரியம். பாராட்டப் பட வேண்டிய இளைஞர்.

இன்று புதிதாக ஒருவரைப் பார்த்தேன். (கற்க கசடற) karka kasadara என்ற தலைப்பில் அவரைத் தேடியடையலாம். எல்லோரிலும் வயது குறைந்த இளைஞர். Sapiens புத்தகத்தின் சுருக்கம் என்று பேசினார். 57 நிமிடம் 40 வினாடிகள்  ஏறத்தாழ ஒரு மணி நேரம். மூச்சு விடாமல் பேசினார். கையில் எந்தக் குறிப்பும் கிடையாது. (அப்படிப் பழக்கப்பட்ட எனக்கு பெருத்த ஆச்சரியத்தை அளித்தது. எப்படிதான் முடியும்?) எந்தத் தடங்கலோ எதுவும் இல்லாமல் தொடர்ந்து அந்நூலின் உள்ளடக்கத்தைத் தந்தார். நானும் இந்த நூலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாசித்திருக்கிறேன். உடனே அந்த நூலைப் பற்றி அன்று என்னிடம் கேட்டிருந்தால் பத்துப் பதினைந்து நிமிடத்தில் நினைவில் இருப்பதைச் சொல்லியிருப்பேன். ஆனால் இவரோ பிரவாகமெடுத்த வெள்ளமாகக் கொட்டித் தீர்த்தார். சொல்லும் முறையும் அத்தனை இனிமை. நடுவில் நிறுத்த வேண்டியதிருந்தும் என்னால் நிறுத்த முடியவில்லை. அந்தக் காணொளியும் விட்டு விட்டு துண்டு துண்டாக எடுத்தது போல் தெரியவில்லை – just one sequence. இத்தனைக் கருத்துகளைக் கோவையாகப் பேச வேண்டுமென்றால் ... அம்மாடி, என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. (37 ஆண்டுகள் பேராசிரியர் பணி என்று சொல்லிக் கொள்ளலாம்! அதிலும் வேகமாகப் பேசி விடுகிறேன் என்று முதுகலை வகுப்புகளில் குறை சொல்லப்பட்டதுமுண்டு.)

சேரன் செங்குட்டுவன் நாடக வசனத்தை சிவாஜி கணேசன் மேக்கப் போடும் போது, ஒரே ஒரு முறை செவியால் கேட்டு, அப்படியே ஒரே டேக்கில் பேசினார் என்று சொல்வார்கள். நானும் அந்த நாடகத்தைப் பார்த்திருக்கிறேன். நடுவில் cut ஏதும் இருக்காது. இந்த இளைஞரும் அவ்வாறு அற்புதமாகப் பேசினார். Teleprompter ஏதும் இருந்திருக்காது!

பல தலைப்புகளில் நிறைய பேசியிருப்பார் போலும். நான் வாசித்திருக்கும் The psychology of money’ பற்றியும் பேசியிருக்கிறார். கேட்கணும். இன்று மாலை walk time-ல் அவரது தாவோயிசம் கேட்கப் போகிறேன்.



1358. ஏனிந்த நூலை வாசிக்க வேண்டும்?

 

நீங்கள் கட்டாயம் இந்த நூலை வாசிக்க வேண்டுமென்பதற்கு நான் தரும் சில காரணங்கள்:






-    ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்கை வைத்து 16 பேர் கைது செய்யப்பட்டன
ர். அவர்களனைவரும் அதுவரை ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும், சிறைவாசிகளின் நலனுக்காகவும், பல்கலைக் கழகங்களில் முறையான இடப்பங்கீடு வேண்டுமென்பதற்காகவும், மனித உரிமைகளுக்காவும் விடாது, தொடர்ந்து தங்கள் சொந்த நலனையும் துறந்து போராட்ட வீரர்களாக இருந்தவர்கள். இவ்வாறு மக்கள் நலனுக்காகப் போராடும் பெரு மக்களை அரசு ஏன் காரணமின்றி கைது செய்து நீண்ட நாள் சிறையிலடைத்துள்ளது என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாக நம்முன் நிற்கிறது-

-    கைது செய்யப்பட்டவர்களையும், அது போன்ற வேறு சில போராட்டக்காரர்களையும் நம்மை ஆளும் அரசு “urban Naxalitesஎன்று பட்டம் சூட்டி, அதில் சிலரைக் கொலையும் செய்து, பலரைச் சிறையிலடைத்து பெரும் தண்டனை வழங்கியுள்ளது நம் அரசு. Lankesh (2017),  Narendra Dabholkar (2013), Govind Pansare (2015), Malleshappa Kalburgi (2015) போன்றவர்கள் இடதுசாரிகளாக இருந்ததால்,  அல்லது வலதுசாரிகளையும், இந்துத்துவாவினரையும் அவர்கள் எதிர்த்தமைக்காகவே கொல்லப்பட்ட தியாகிகள் அவர்கள். கைது செய்யப்பட்ட 16 பேரும் இதே காரணங்களுக்காகவே கைது செய்யப்பட்டனர்.

-    நக்சலைட்டுகளில் பலரும் ஆதிவாசிமக்களின் உரிமைகளுக்காகப் போராடுப்வர்களாகவே உள்ளனர். இந்திய  நாட்டுச் சட்டத்தின்படி ஆதிவாசி மக்கள் அவர்கள் வாழும் இடத்தின் மீது முழு உரிமை கொண்டவர்கள். ஆனால் அரசு தனியார் வசம் இந்த நிலங்களைக் கொடுத்து, அனைத்து இயற்கை கனிம வளங்களைக் கொள்ளையடிக்க உறுதுணையாக உள்ளது. இதை எதிர்த்து ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் காவல் படையின் துப்பாக்கிகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்கள்.

-    ஸ்டேன் சாமி என்ற கிறித்துவப் பாதிரியார் தனது 83வது வயதில் 2020 ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இவர் முன்பே தனது குரு மடத்திலிருந்து விலகி, ஆதிவாசி மக்களின் குடிலில் தங்கி அந்த மக்களுக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். இவரே ஆதிவாசி மக்களுக்குத்தான் அவர்கள் வாழும் பகுதியின் உரிமை உள்ளது என்ற சட்டத்தை வெளியுலகிற்குக் கொண்டு வந்து, அந்த மக்களுக்கு ஒரு புதிய பாதையைக் காண்பித்தார். இவர் நரம்பு வியாதியால் பாதிக்கப்பட்டு, கை நடுக்கம் கண்டதால் straw tumbler ஒரு கட்டாயத் தேவையாக இருந்தும், அப்படி ஒரு தம்ளரைக் கொடுக்க காவல் துறைக்கு மனமில்லாமல் போனது. 50 நாட்கள் தொடர்ந்து போராடி ஒரு தம்ளரை அவருக்குப் போராட்டக்காரர்கள் பெற்றுக் கொடுத்தார்கள். காவல்துறையினரும், மற்றவர்களும் இந்த அளவு கடினமான மனதோடு எப்படியிருக்க முடியும் என்பது எனக்கு இன்னமும் பெரும் ஆச்சரியமாக உள்ளது.

-    6,7ம் இயல்களில் எவ்வாறு கைது செய்யப்பட்ட பலரின் கணினிகள் காவல்துறையின் கைப்பிடிக்குள் ரகசியாகக் கொண்டு வரப்பட்டு, பல்வேறு போலிக் கடிதங்களை அதற்குள் கள்ளத்தனமாக உள்ளேற்றி, அவைகளைச் சான்றுகளாக வைத்து அதை வைத்து அவர்களைக் கைது செய்தார்கள் என்ற செய்தி நாம் ஒரு குடியரசு நாட்டில் தான் வாழ்கிறோமா இல்லையா என்ற கேள்வியை வாசிப்பவர்களின் மனதில் எழுப்புகிறது. இதழியலாளர்கள் பலர் இந்த மர்மத்தை எப்படிப் போட்டுடைத்தார்கள் என்பதை இந்த இரு இயல்களிலும் வாசிக்கும்போது மனம் பதை பதைக்கின்றது.

-    கைது செய்யப்பட்ட 16 பேரில் நால்வர் கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்; மற்றப் போராளிகளில் கவிஞர், கலைஞர்கள், வனவளப் பாதுகாவலர்கள், சிறைவாசிகளின் நலன் பேணும் ஆர்வலர்கள், இதழியலாளர்கள், வழக்கறிஞர்கள் என்றிருந்தனர். (அவர்களும் பேராசிரியர்கள் .. நானும் ஒரு பேராசிரியன் என்று சொல்லவே தயக்கமாக உள்ளது. அத்தனை உயரத்தில் அவர்களுக்கு என் மனதில் இடம் கொடுத்தேன்.)

-    ஒரு பெண்மணி. இங்கிலாந்தில் தன் இளைய வாழ்வை ஆரம்பித்த இவர், இந்தியா வந்த பின் தன் அமெரிக்கக் கடவுச் சீட்டை வேண்டாமென்று திரும்பக் கொடுத்து விட்டு, இங்கு தொழிலாளர் நலனுக்காக அவர்களோடேயே ஒற்றை அறை உள்ள வீட்டில் உடன் தங்கியிருந்து வாழ்ந்தார் என்பதைப் படிக்கும் போது நாம் நமது கண்ணீரோடு போராட வேண்டியதிருக்கும்.

-    இதைவிட சற்றே குறைந்த பக்கங்கள் கொண்ட வேறொரு நூலை மொழிபெயர்க்க ஒரு முழு ஆண்டை எடுத்தேன். ஆனால் இந்த நூலை மொழிபெயர்க்க ஆரம்பித்த பின், யாரோ ஒருவர் பின்னாலிருந்து ஓரழுத்தம் கொடுத்தது போலுணர்ந்து, விரைந்து முடித்தேன். நான்கு மாதங்ளில் முடித்த போது நானே வியந்து நின்றேன். உள்ளூற ஒரு வெறி வந்து என்னை உந்தித் தள்ளியது.

-    நீங்களும் வாசித்து விடுங்கள் ....


 

-

 


Thursday, October 09, 2025

1357. மொழிபெயர்ப்பு விருது விழா


அருட்செல்வர் நா. மகாலிங்கம் காந்தியின் மீதுள்ள தனது பக்தியையும், மரியாதையையும் வெளிப்படுத்தும் வண்ணம், காந்தி பிறந்த நாளைப் பல்லாண்டுகளாகக் கொண்டாடி வருகிறார். காந்தியோடு அண்ணல் அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்த நாளையும் இணைத்துப் பெரு விழாவாக ஆண்டாண்டு தோறும் கொண்டாடினார்.

 

      அருட்செல்வர் நா. மகாலிஙம்

               

                                               முனைவர்  ம. மாணிக்கம்

தந்தையார் மறைந்த பின் அந்தப் பணியை அதே போல் சிறப்பாக அவரது மகனார் முனைவர் மாணிக்கம் அவர்கள்  தொடர்ந்து செய்து வந்துள்ளார். இந்த ஆண்டு நடந்த விழா தொடந்து 58 ஆண்டுகளாக நடைபெற்ற ஒரு பெரும் விழா.

புதிதாக சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பணிமன்றம் அருசெல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் மூலமாகப் பல மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிடப்படுமின்றன. அதனோடு இணைந்து ஆண்டு தோறும் பல சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு விருது கொடுத்து வருகின்றனர்.

இந்த ஆண்டு அக்டோபர் முதல் தேதியிலிருந்து இந்த விழா ஐந்தாம் தேதி வரை நடந்து முடிந்தது. காந்தி பிறந்த நாளான இரண்டாம் தேதி அருட்செல்வர் மொழிபெயர்ப்பு விருது வழங்கும் விழா பெரிதும் விமரிசையாக நடந்தது.

இவ்விழாவில் இருவருக்கு முதல் விருதும்(தலைக்கு 1,00,000), இருவருக்கு இரண்டாம் பரிசுகள் இருவருக்கும்(50,000), நால்வருக்கு மூன்றாம் பரிசுகளும்(25,000) கொடுத்தார்கள்.

இவ்விழாவில் எனக்கு மூன்றாம் பரிசு(தான்!) கிடைத்தது. பேரரசன் அசோகர்  என்ற நான் மொழிபெயர்த்த நூலுக்குக் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. எதிர் வெளியீடாக இந்த நூல் வெளிவந்தது. வெளியீட்டாளர் அனுஷ் அவர்களுக்கும், விருதளித்த மொழிபெயர்ப்பு மையத்திற்கும், அதனை நடாத்தி வரும் முனைவர் மாணிக்கம் அவர்களுக்கும்,  அதில் சிறப்பான பங்களித்துக் கொண்டிருக்கும் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.

விழாவின் வரவேற்பாளர் முனைவர் ஒளவை ந. அருள் (இயக்குநர், தமிழ் வளர்ச்ச்சித் துறை) அவர்களின் பேச்சு அருமையாக இருந்தது. (அவரின் தந்தை முனைவர் ஒளவை நடராசன் அவர்களும், அவரது தாத்தா ஒளவை சு. துரைசாமி அவர்களும் என் கல்லூரிக் காலத்தில் (61-64) ஆண்டுகளில் என் தமிழ் ஆசிரியர்களாக மதுரை தியாகராசர் கல்லூரியில் இருந்தார்கள் என்ற மகிழ்ச்சிச் செய்தியை அருள் அவர்களிடமும் தெரிவித்தேன். எனக்கும் மகிழ்ச்சி. செய்தி கேட்ட அவருக்கும் பேருவகை.) வாழ்க நீ எம்மான் என்ற தலைப்பில் பேசிய திருமதி பாரதி பாஸ்கர், தான் மிகப் பெரும் மேடைப் பேச்சாளர் என்பதை ஒவ்வொரு சொல்லிலும் உறுதியாக்கினார்.

குடும்பத்தினர் அனைவரும் - முக்கியமாக, என் பேரக் குழந்தைகள் நால்வரும் - வந்திருந்தது எனக்குப் பேரின்பமாக இருந்தது.

விழாவிற்குப் போனோம்; விருது வாங்கினோம்; மகிழ்ச்சியைக் கொண்டாட பெயரன்கள் விருந்துண்ண அழைத்துச் சென்றனர்.

 

 






















 


Monday, October 06, 2025

1356. என் கதை - 3 - (நான் பங்கேற்ற என் அப்பாவின் திருமணம்)

*



அப்பாவின் கல்யாண வைபோகமே…

அப்பா-அம்மா கல்யாணம் - நன்கு அழுத்தமாக நினைவில் நிற்கிற முதல் நினைவு அதுதான் என்று நினைக்கிறேன். பெத்த அம்மா இறக்கும்போது எனக்கு வயது ஒன்றரை, இரண்டு இருந்திருக்கும். ரொம்ப அம்மாவைத் தொந்தரவு செய்வேனாம். அம்மா இறந்ததும் அம்மாவுக்கு மாலை போடச் சொன்னார்களாம்; அம்மாவுக்கு முத்தம் கொடுத்தேனாம். எல்லாம் சொல்லக் கேள்வி. தொடச்சி வச்சது மாதிரி ஒன்றும் சுத்தமாக ஞாபகமில்லை. ஆனால் அதற்குப் பிறகு சின்ன வயது விதயங்கள் பலவும் நினனவில் இருக்கின்றன. பழைய போட்டோ ஆல்பம் ஒன்றைப் பக்கம் பக்கமாகப் புரட்டிப் பார்ப்பது போன்ற உணர்வு. பக்கங்கள் புரளப் புரள அதில் உள்ள படங்கள் ஒவ்வொன்றும் உயிர்த்து, என்னைச் சுற்றிச் சுற்றி நிஜ நடப்புகள் போல, ஒரு திரைப்படமாக உயிர்த்துடிப்போடு இயங்க ஆரம்பிக்கின்றன.

அந்தத் திருமண நிகழ்ச்சி தெளிவாகவே என் கண்முன் விரிகிறது. அருகில் அம்மாவின் ஊர் - குறும்பலாப் பேரி. கிராமத்துக் கிறித்துவக் கோயில்; அதற்குரிய எளிமையோடு இருக்கிறது. எனக்குத் தனியாக ஒரு நாற்காலி; எங்கிருந்து எடுத்து வந்திருந்தார்களோ. ஏனெனில் அந்தக் கோயிலில் ஏது நாற்காலியெல்லாம் அப்போது இருந்திருக்கப் போகிறது. அப்பாவுக்கும், பொண்ணுக்கும் இரண்டு நாற்காலிகள். ஆனால், அப்பா கோயிலின் முன்னால் அந்த பீடத்திற்குப் பக்கத்தில் முழங்கால் போட்டு ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்பா இளம் க்ரீம் கலரில் அந்தக் காலத்து Gaberdine துணியில் கோட், சூட் போட்டு இருந்தார்கள். நான் ஆல்டரின் பக்கத்தில் அந்த பெரிய சேருக்குள் அடங்கி உட்கார்ந்திருந்தேன். பெண்ணைப் பார்க்கும் டென்ஷன்; சிறிது நேரம் கழித்து கோயில் வாசல் பக்கம் கொட்டுச் சத்தம். திறந்த காரில் பெண் வந்தாகிவிட்டது. சிகப்பா, அழகாக இருந்தார்கள். (என் அம்மா கருப்போ, புது நிறமோ; ஆனா நிச்சயமா சிகப்பு இல்லை என்றுதான் நினைக்கிறேன்.) மஞ்சள் பட்டுப் புடவையும், தலையில் கிறித்துவ முறைப்படி ரீத், நெட் எல்லாம் போட்டிருந்தது. சின்னப் பிள்ளைகள் கூட்டமாய் பொண்ணைச்சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் அந்த திறந்த கார், கிறித்துவ முறையில் அலங்காரம் - இவை எல்லாமே அவர்களுக்கு ரொம்ப வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும்.

பிறகு கல்யாணம் நடந்தது. பின் அந்த திறந்த காரில் ஊர்வலம். அதில் ஒன்று மட்டும் ஞாபகமிருக்கிறது. காரில் உட்கார்ந்திருந்தேனோ என்னவோ தெரியவில்லை; ஆனால், ஏதோ ஒரு நேரத்தில் என் பாளையன்கோட்டை பெரியம்மா என்னைத் தூக்கி காரில் அப்பாவுக்கும், 'பொண்ணு'க்கும் நடுவில் உட்காரவைத்தார்கள்.


                        

இன்னும் கொஞ்சம் கல்யாண நிகழ்ச்சிகள் நினைவில் இருக்கிறது. அதைப் பார்ப்பதற்கு முன்பு சொல்லவேண்டிய வேறு சில விதயங்களைச் சொல்லிவிட்டு பிறகு இதற்கு வருகிறேன். என் ஐந்தாவது வயதில் அப்பாவின் கல்யாணம் நடந்திருக்க வேண்டும்; ஏனெனில், கல்யாணம் முடிந்த கையோடு கிராம வாழ்க்கையை முடித்துக் கொண்டு, மதுரைக்குச் சென்று பள்ளியில் சேர்ந்தேன். அப்பாவின் கல்யாண நிகழ்ச்சிகள் நினைவில் இருக்கும் அளவு அதற்கு முன் நடந்தவைகள் அவ்வளவு தெளிவாக நினைவில் இல்லை. அங்கங்கே விலகும் ஒரு பனி மூட்டம் வழியாக பார்ப்பதுபோல் சில காட்சிகள் - சில தெளிவாக; சில மஞ்சுவுக்கு ஊடாக.

நான் பிறந்து சில மாதங்களிலேயே அம்மாவுக்கு அந்தக் காலத்து பயங்கர நோயான எலும்புருக்கி - T.B. - வந்து விட்டதாம்; ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். நோய் முற்றிவிட்ட நிலையில் மதுரை அரசாங்க மருத்துவமனையில் சில நாட்கள் இருந்திருக்கிறார்கள். பின்னாளில் சில உறவினர்களுடன் அந்த மருத்துவமனை செல்லும்போது, அம்மா இருந்த கட்டிடம், வார்டு என்று என்னிடம் அடையாளம் காட்ட முயன்றதுண்டு. நான் அதை மனதில் வாங்கிக் கொள்ள முயன்றதேயில்லை; அது மட்டுமல்லாது அந்த சேதியை நான் அறியவும் விரும்பவில்லை. மருந்துகள் குணமளிக்க முடியாத நிலையில் அம்மா ‘நான் இங்கு சாகவேண்டாம்; ஊருக்குப் போய் விடுவோம்’ என்று சொல்லிவிட்டார்களாம். தென்காசி அருகிலுள்ள அம்மா ஊருக்கு - குறும்பலாப்பேரி - கொண்டு சென்றார்களாம். என்னை முடிந்தவரை அம்மா ‘தள்ளி’யே வைத்திருக்க முயற்சித்திருக்கிறார்கள் - மகனுக்கும் நோய் வந்துவிடக்கூடாதே என்று. நான் ரொம்பவும் அழுது தொல்லை கொடுத்தேனாம். ஊருக்குப் போன ஓரிரு மாதங்களில் அம்மா இறந்து போனார்கள்.

அம்மா இறந்த பிறகு அப்பா தனியாளாக மதுரையில் இருக்க நான் ஊரில் என் அப்பம்மாவிடம் இருந்தேன். வீட்டில் அப்பாவின் நான்கு தங்கைகளில் இருவர் அப்போது அங்கே இருந்தார்கள். பாட்டையா ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். செயிண்ட். ஜோசஃப் பாடசாலை என்று பெயர். அத்தைகள் இருவருமே அங்கே டீச்சர்களாக இருந்தார்கள். அப்பம்மாவும், பாட்டையாவும் காலங்காத்தால வயல்களுக்கு வேலைக்குப் போனால் பொழுது சாஞ்சதுக்குப் பிறகுதான் திரும்புவார்கள். இதனால் நான் இரண்டு வயதிலிருந்தே பள்ளிக்கூடம் போக ஆரம்பித்துவிட்டேன்.

அப்பா விடுமுறைகளில் ஊருக்கு வரும்போதெல்லாம் ஒரு நிகழ்ச்சி தவறாமல் அரங்கேறும். அதுவரை நான் பாட்டுக்கு விளையாடிக்கிட்டு இருப்பேன். அப்பா வந்ததும் என் அத்தைமார்கள், அப்பம்மா எல்லாரும் என்ன மாத்தி மாத்தி தூக்கி வச்சிக்கிடுவாங்க; ரொம்ப அழுதிருவாங்க. அதப் பாத்து நானும் அழுதிருவேன். இறந்துபோன அம்மா, அம்மா இல்லாத பிள்ளையாக இருக்கிற நான் - எல்லாம் உள்ளே இருக்கிற சோக நெருப்பை அப்பாவுடைய வரவு ஊதிப் பெருக்கிவிடும். அப்பாவும், பாட்டையாவும்தான் இந்த சூழலை மாத்துவாங்க - ஏதாவது பேசி; மதுரையில் மழ இருக்கா, வெயிலு எப்படி இருக்கு அப்டின்னு ஏதாவது பேசி.

அப்பா வரும்போதெல்லாம் ஏதாவது வாங்கிட்டு வருவாங்க. எனக்குப் பிடிச்சது என்னன்னா, திராட்சைப் பழம். அப்போவெல்லாம் பச்சை திராட்சைதான் எங்கேயும் கிடைக்கும். நல்லா புளிக்கும். நரிகூட நிஜமாவே வேண்டாம்னு போச்சே, அது. கருப்புத் திராட்சை -ஹைதராபாத் திராட்சை என்பார்கள் - நல்லா இனிக்கும்; அத அப்பா வாங்கிட்டு வர்ரப்போவெல்லாம் ஒரே ஜாலி.

ஒருதடவை அந்த மாதிரி வரும்பொது எனக்கு ஒரு மூணு சக்கர சைக்கிள் வந்திச்சு. சரியான கனம்; கெட்டிக் கம்பில பண்ணுனது. பச்சைக் கலர். வீல் சைடு எல்லாம் ஒரு மாதிரி சிகப்பு. கெட்டி ரப்பர்ல டயர். அழகா பேப்பர் போட்டு சுத்தி வந்து இறங்கிச்சி. அடேங்கப்பா! எப்படித்தான் நியூஸ் பரவுச்சோ…கொஞ்ச நேரத்தில ஊர்ல இருக்கிற சின்ன பசங்க பூரா வந்திட்டாங்கல்லா நம்ம வீட்டுக்கு.

அப்போ சைக்கிள் ஓட்ற வயசும் இல்ல; அதனால நமக்கு ஒரு டிரைவர் செட் பண்ணியாச்சி. வேற யாரு; நம்ம தங்கச்சாமி தான். வீட்டுக்குப் பின்னால பெரிய காலி இடம் இருக்கும். நம்ம டிரைவரோடு போயிட வேண்டியதுதான்; என்ன உக்கார வச்சு தங்கச்சாமி சுத்தி சுத்தி தள்ளிக்கிட்டே ஓடுவான். வேணுமான்னு கேட்டாகூட வேண்டான்னுட்டு, தள்ளி உடுவான். நமக்கு ‘ஸ்டீயரிங் கன்ட்ரோல்’ மட்டும்தான். ஒருநாள் எனக்கும், தங்கச்சாமிக்கும் படு ஜாலி. வேக வேகமா சுத்திக்கிட்டு இருந்தோம். டபார்னு கால சக்கரத்துக்குள்ள விட்டுட்டேன். பெரு விரல் நசுங்கி ஒரே ரத்தம். தங்கச்சாமி என் அத்தைமார்களுக்குப் பயந்து பின் வாசல் வழியே ஓடிப் போய்ட்டான். ஆனா, இதில் ஒரு நல்லது நடந்தது. அதுக்குப் பிறகு வண்டிக்கு டிரைவர் கிடையாது. அதனால நானே ஓட்டப்பழகினேன்.. அதன் பின் அத்தைகளின் கையைப் பிடித்து நடந்து வந்த நான் சைக்கிளில் சென்று வர ஆரம்பித்தேன். என் சைக்கிள் மட்டுமே அந்தப் பள்ளியில் மரத்தடியில் ‘பார்க்’ செய்யப்பட்ட சைக்கிளாக இருக்கும். நான் சைக்கிளில் செல்வதைப் பார்க்க வழியில் உள்ள வீட்டிலிருந்து பெரிசுகளின் தலைகள் கூட எட்டிப் பார்க்கும்.


கிராமத்துப் பிள்ளைகளோடு விளையாடி ஒன்றாக இருந்தாலும் எல்லோருக்கும் நான் ஒரு ‘தாயில்லாப் பிள்ளை’. அந்தக் கண்ணோட்டத்தில்தான் என்னைப் பார்ப்பார்கள். அதை எனக்குப் புரியும் வகையில் ‘ஸ்பெஷல் அன்பைப் பொழிவார்கள். I was the most pampered and petted child in the village. அதுவே என் பின்னாளைய வாழ்வில் ஒரு அழியா தடத்தை ஏற்படுத்திவிட்டது. அதன் பாதிப்பு என்னிடம் இன்று வரை இருப்பதாகவே நினைக்கிறேன்.
சரி சொல்ல வந்ததை விட்டுட்டு எங்கேயோ போய்ட்டோமோ? கல்யாணத்திற்கு வருவோம். அது என்னவென தெரியல…காட்சிகள் எல்லாம் சினிமாவில் cut-shots என்பார்களே அது மாதிரி தொடர்பில்லாமல் துண்டு துண்டுக் காட்சிகளாகத் தெரிகின்றன. அம்மா-அப்பாவின் நடுவில் கல்யாண ஊர்வலக் காரில் உட்கார்த்தப் பட்டது ‘தெரிகிறது’. அதை விடவும் வழி நெடுகச் சென்ற ஊர்வலத்தில் நானே பலரின் கவனத்தை ஈர்ப்பவனாகி விட்டேன். அதை நான் அப்போதே உணர்ந்ததாக இப்போதுகூட எனக்குத் தோன்றுகிறது.

அடுத்த cut-shot! இது கல்யாண நாளின் மாலை நேரம். அந்தி சாய்ந்து விட்டது. இடம்: அப்பாவின் ஊர் (காசியாபுரம்), எங்கள் வீடு. அந்தக் காலத்தில் - ஏன் இப்பவும் கூட, கிராமத்தில் ஒரு கல்யாணம் என்றால் ஊர் ஒட்டு மொத்தமும் கல்யாண வீட்டில்தான் இருக்கும் - வீடு முழுவதும் ஆட்கள். நாலைந்து ‘பெட்ரோமாக்ஸ் லைட்டுகள்’. அதுவும் அந்தக் காலத்திற்கு பெரிய novelties. வீட்டுக்கு முன்புறம் இரண்டு தலைவாசல்கள் இருக்கும். வடக்குப் பக்க வாசல்தான் பொதுவாக எப்போதும் எல்லோரும் பயன்படுத்தும் வழி; தெக்குப் பக்கம் உள்ளது அதிகமாக யாரும் பயன்படுத்துவதில்லை. ஏனென்று தெரியாது - நான் தனியாக அந்த தெக்கு வாசலில் உட்கார்ந்து கொண்டு, அந்த பெட்ரோமாக்ஸ் விளக்கைச்சுற்றி விளையாடிக்கொண்டிருந்த என் வயசுப் பசங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் யாரோ வந்து நின்னது மாதிரி இருந்திச்சி; திரும்பிப் பார்த்தேன். அப்பாதான் பட்டு வேஷ்டி கட்டிக்கிட்டு நின்னாங்க. பக்கத்தில் உக்காந்தாங்க; கொஞ்ச நேரம் ஏதும் பேசலை. நானும்தான். பிறகு அப்பா மெல்ல கேட்டாங்க: ‘வந்திருக்கிறது உனக்கு யார்?’என்று கேட்டார்கள் . ‘சித்தி’. அப்படிதான் எனக்குச் சொல்லிக் கொடுத்திருந்தார்கள்; அதைச் சொன்னேன். ‘இல்லப்பா, அது உனக்கு அம்மா’ என்றார்கள்.

அதிலிருந்து அப்படித்தான்.