Thursday, August 31, 2006

174. IF I WERE THE .... .... ?

நம் மாநில முதலமைச்சர் கீரிப்பட்டி,பாப்பாப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் என்ற கிராமப் பஞ்சாயத்துகளில் நடந்தேறிக்கொண்டிருக்கும் தேர்தல் என்னும் கேலிக்கூத்துக்களை மனதில் கொண்டு, அந்த கிராமங்களில் ஒழுங்கான தேர்தல்களும், தலித்துகளின் முழுமையான அரசியல் பங்கேற்பும் நடை பெறும்வரை அவைகளின் 'ரிசர்வ்டு' நிலை நீட்டிக்கப்படும் என்று கூறியுள்ளது வரவேற்கத்தக்கதே. ஆயினும் இதனால் எல்லாம் அங்குள்ள பெருவாரியான தேவர்(கள்ளர்?)சாதி மக்கள் மனம் தளர்ந்து விடப் போகிறார்களா என்ன? அவர்கள்தான் ஆளமட்டுமே பிறந்தவர்களாச்சே! அவர்கள் விட்டுக் கொடுத்தோ, அவர்களை விட்டுக் கொடுக்க வைத்தோ தலித்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு ஜனநாயகம் மலர்ந்து விடும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அந்த சாதியைச் சேர்ந்த சிலரோடு பேசிப் பார்த்ததிலேயே இந்த உண்மை புரிகின்றது. விடாக் கொண்டான், கொடாக் கொண்டான் கதைதான். அந்த பெருவாரியான சாதியினர் கொடாக் கொண்டான் என்றால் அரசாங்கமும், அரசாங்கத்தின் அங்கங்களும் விடாக் கொண்டான் போல் வேஷம் போட்டுக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அரசாங்கம் தன் முழு பலத்தோடு இறங்கினால்தான் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வரும். ஓட்டுக்களில் கண்ணை எப்போதும் வைத்திருக்கும் எந்த சனநாயக அரசும் அந்த முடிவுக்கு வராது. எப்போதும் போல 'தேர்தல் நாடகங்கள்'தான் நடந்தேறும்.

தலித் தலைவர்களும், தலித் கட்சிகளுமாவது இதில் முழு முனைப்போடு இருக்கிறதா, இருக்குமாவெனில், அதுவும் இல்லை. இந்த நிலையில் தலித் மக்கள் முழு வீச்சில் புரட்சியில் எழ முடியுமாவென்றால் அது இப்போதைக்கு நடக்கக் கூடிய காரியமல்ல; அவர்களின் வாழ்வும், வாழ்வாதாரமும் பெருவாரிச்சாதியினரை அண்டிப் பிழைக்கக் கூடிய நிலையில்தான் இருக்கிறது. தட்டில் விழும் பருக்கைகளைப் புறந்தள்ளி, அடிப்படை வாழ்க்கையின் தேவைகளை உதறிவிட்டு புரட்சிக்குப் புறப்படுங்கள் என்றால் எப்படி நடக்கும்.

இந்த நிலையில் என்னதான் நடக்கும்; நடக்க முடியும்?

கனவுகள்..கனவுகள்... IF I WERE THE -------


IF I WERE THE C. M. OF TN....

எளியோருக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்கும் திட்டம் இந்த நான்கு கிராமங்களில் முதலில் நடக்கும். ஆளுக்கு இரண்டு ஏக்கர் என்பதைவிடவும் அந்த ஒவ்வொரு கிராமத்துத் தலித்துகளுக்கும் மொத்தமாக ஒரு பொது நிலம், அனைவரும் சேர்ந்து உழைக்க ஒரு கூட்டமைப்பு, அவர்கள் விவசாயம் செய்ய எல்லா வகை உதவிகள், கட்டமைப்புக்கு வேண்டிய தேவையான எல்லா உதவிகள், அரசாங்க விவசாயத்துறையின் நேரடி மேற்பார்வையும், உதவியும், முக்கியமாக எல்லாவகை பாதுகாப்பு, - இவைகள் அனைத்தும் அவசரகால அடிப்படையில் செய்து தந்து இந்த மக்கள் தலை நிமிர, வயிற்றுப்பாடு முற்றிலும் தீர, மக்கள் பொருளாதார அடிப்படையில் தன்னிறைவடைய எல்லாமும் செய்யப்படும்.

IF I WERE THE COLLECTOR OF THAT DISTRICT .....

இந்த நான்கு கிராமங்களில் நிச்சயமாக தலித்துகள் தனியாக ஒதுங்கி, ஒதுக்கப்பட்டு தனிச் சேரிகளில்தான் வாழ்வார்கள். அந்தப் பகுதி மட்டும் மாவட்ட அதிகாரிகளின் தனிக்கவனம் பெறும். அவர்களுக்கு வேண்டிய தண்ணீர், சாலை, பள்ளிக்கூடங்கள், காவல் நிலையங்களும், அங்கு இந்த சாதிவெறி இல்லாத காவல் துறையினரும், மாவட்ட அதிகாரியினால் முழுமூச்சில் செய்யக்கூடிய அனைத்து உதவிகளும் விரைந்து அளிக்கப்படும். முக்கியமாக இடுகாடுகளும் அதற்குச் செல்ல தனிச் சாலைகளும் (!) அமைத்துத் தரப்படும். wantonly all the basic amenities will be DENIED to the other "high" caste. they have to wait for those things till the next elected panachyat is formed. obstinance has to be paid back by utter obstinance.

IF I WERE ONE AMONG THE MAJORITY CASTE ...

(நான் மட்டும் விதி விலக்காகவா இருந்திருக்கப் போகிறேன்?)

காலங்காலமாய் எங்க காலடியில் கிடந்ததுகள், நாங்க சொன்னதக் கேட்டுக்கிட்டு இருந்ததுகள், ஒரு வாய் சோத்துக்கு எங்கள விட்டா நாதியில்லாததுகள் ... இதுக பிரசிடெண்டா இருந்து எங்கள ஆளன்னும்னு நினச்சா அது முடியுமா? அவங்க சாதி என்ன? எங்க சாதி என்ன? எங்கள ஆளணும்னு நினச்சாலே அவங்கள உண்டு இல்லன்னு பாத்துற மாட்டோமா..? சும்மா உட்ருவமா, என்ன? "நாங்க" யாருன்னு உலகத்துக்குக் காமிக்க வேண்டாமா? எவன் என்ன பண்ண முடியும்னு பாத்துருவோம்....

IF I WERE ONE AMONG THOSE DALITS ....

ஊர்ல உலகத்துல எல்லோரும் என்னமாவது சொல்லிட்டுப் போயுறுவீக..இங்கன நாங்க எங்க தினசரி பொழப்ப பார்க்கணுமே. வீம்புக்கு தேர்தல்ல நின்னு அவங்கள எதுத்துக்கிட்டு நிக்கணும்னா எங்களுக்கு என்ன பலம் இருக்கு? யாரு சப்போர்ட்டுக்கு இருக்கா? ஒரு நாலு நாளு நாலு போலீசும் ரெண்டு தலைவரும் நின்னுட்டா எல்லாம் ஆயிப் போச்சா? உடுங்க'ய்யா...என்ன தேர்தல் ..என்ன தலைவர் பதவி ... மொதல்ல உசுரோட இருக்கணுமே!

... மனுசனுக்கு உசிரு மேல ஆச இருந்து தொலையுதே, இந்த கேடு கெட்ட சாதியில பொறந்த பிறவும்... என்ன பண்ணச் சொல்றீக.. சொல்லுங்க ... எங்கள விடுங்க .. வெந்தத தின்னுட்டு விதி வந்தா போய்ச் சேரணும்ங்கிறது எங்க தலையெழுத்தாகிப் போச்சு..

====================

ஒரு நடந்த கதை:

கல்லூரியில் முதல் தலைமுறையினருக்காக நடத்தப்பட்ட ஒரு சிறப்பு பயிற்சி வகுப்பில் ஒரு தலித் மாணவன் சொன்னது:
இன்றைக்கும் அவர் பஸ் விட்டு இறங்கி தன் சேரிக்குச் செல்லும்போது அந்தப் "பெரிய"சாதிக்காரர்களின் பகுதியைத் தாண்டித்தான் போகவேண்டும். அப்படிப் போகும்போது தங்கள் காலணிகளைக் கையில் எடுத்துத்தான் செல்ல வேண்டுமாம். நல்ல வேளை சட்டையைக் கழட்டச் சொல்வதில்லை அந்தக் கிராமத்தில்!

மாணவனிடம், சரி, உங்களைப் பார்க்க நானே வருகிறேன் என்று வைத்துக் கொள்வோம். அப்போது என்னையும் அப்படி எதிர்பார்ப்பார்களா என்று ஆசிரியர் கேட்ட போது நிச்சயமாக என்றார் மாணவர். அப்படியே அந்த வரைமுறை தெரியாமல் நீங்கள் என்னை வந்து பார்த்துவிட்டுப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்; நீங்கள் போனபிறகு என்னைக் கூப்பிட்டு 'ஊர் கட்டுமானத்தைச் சொல்லிப்பிடு; அடுத்த தடவை இப்படியெல்லாம் நடக்கக் கூடாது' என்று சொல்வார்கள் என்றார்.

நமக்கு சுதந்திரம் வந்து 60 ஆண்டுகள் முடிந்து விட்டதாமே!

ஜெய்ஹிந்த்.

another naked truth of casteism has been shown here in this post in all its rawness.

Wednesday, August 30, 2006

173. ஹைக்கூ தெரியும்; சினிகூ...?

நேற்று இந்துவின் கடைசிப் பக்கத்தில் வந்த ஒரு செய்தி மிகவும் பிடித்தது. ராமச்சந்திர பாபு என்ற மலையாளத் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆரம்பித்து வைத்துள்ள ஹைக்கூ-சினிமா அல்லது சினிமா-ஹைக்கு. ஆங்கிலத்தில் இதற்கு cineku என்று பெயர் வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு தங்கள் தங்கள் செல்போன் காமிராவில் திரைப்படம் எடுப்பது பற்றி ஒரு சேதி பத்திரிக்கைகளில் வந்தன. அதுபோல இங்கே ஒரு புது முயற்சி.

ராமச்சந்திர பாபு இந்த சினிகூ ஆரம்பித்தது மட்டுமல்லாமல் அதற்கு ஒரு இலக்கணம் தந்துள்ளார். 40 வினாடிகளுக்கு ஒரு ஷாட் வீதம் மொத்தம் மூன்றே ஷாட்டுகளில் ஒரு படம் எடுப்பது என்பதே அந்த இலக்கணம். 3 ஷாட்டுகள்; 120 வினாடிகள் - ஒரு படம். ஹைக்கூ கவிதை வடிவத்தையொத்து ஒரு திரைப்படம். எந்த கிராஃபிக்ஸ் சித்து விளையாட்டும் இருக்கக் கூடாது என்பதும் ஒரு விதி.

கேட்கவே நன்றாக இருக்கிறது. முயற்சி செய்ய ஆசை இருக்கு.

ராமச்சந்திர பாபு எடுத்த ஒரு சினிகூ-வின் "திரைக்கதை" கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் ஷாட்: குளோசப் ஷாட் - ஒரு பெண்ணின் விரலில் ஓர் ஆண் திருமண மோதிரம்
அணிவித்தல் - zoom - ஒரு ஆணும் பெண்ணும் - ஆண் பெண்ணை நெருங்க...
இரண்டாவது ஷாட்: குளோசப் ஷாட் - குழந்தை ஒன்று தாய்க்குத் தரும் முத்தம் - zoom - அப்பா,
அம்மா, குழந்தை - சந்தோஷமான குடும்பம்.
மூன்றாவது ஷாட்: குளோசப் ஷாட் - முத்தம் தரும் குழந்தை ஒன்று - zoom - இறந்த அப்பாவின்
உடல்.

இந்த சினிகூ-வின் கதை எனக்குப் பிடிக்கவில்லை. இன்னும் நல்லதாக ஆக்க முடியும்.

Saturday, August 19, 2006

172. இடப் பெயர்ச்சி

மீண்டும் ஓர் இடப் பெயர்ச்சி. just in a jiffy ஆரம்பிக்க முடியும்னு
பெரியவங்க சொன்னாங்க; அது மாதிரியே ப்ளாக்ஸ்பாட்டில் என் முதல் இடுகையைச் சுலபமாக ஆரம்பித்தேன். ரொம்ப
சந்தோஷமாயிருந்தது. கொஞ்ச நாள் ஆனதும் சுத்தி முத்திப்
பார்த்தப்போ, சிலரது ப்ளாக்குகள் அழகழகா இருந்ததைப் பார்த்து
ஜொள்ளு விட்டுக்கிட்டு இருந்தேன் - எதுக்கெல்லாம் ஜொள்ளுன்னு ஒரு விவஸ்தையில்லையான்னு கேக்காதீங்க, அழகா இருக்கிற எதப் பார்த்தாலும் அது தானா வருது; என்ன செய்றது? ஒரு கலா ரசனைதானே!

அது என்னமோ, வெப்லாக்ஸ் அப்டின்னாங்க; படம் எல்லாம் டிசைன் டிசைனா போட முடியும்னு சொன்னாங்களா அதனால ரொம்ப பிடிச்சிப் போச்சி. சில நல்ல மனுசங்க உதவியோடு - ஒரு மனுசிதான் - மதிக்கு நன்றி - வீடு மாத்தினேன். நல்லாதான் போச்சு. அப்பப்போ தலைப்பில படம் மாத்திக்கிட்டே இருந்தேன். ஒரு படம் நல்லா பிடிச்சதும் இத்தனை நாளா அதே படத்தலைப்போடு போய்க்கிட்டு இருந்தது. the going was good.

ஆனா இதில ஒரு முக்கிய பிரச்சனை. ஏறக்குறைய நிறைய பேர் தமிழ்மணத்தில ப்ளாக்ஸ்பாட் வச்சிருக்கிறதால ஏதாவது மாற்றம் அப்டி இப்டின்னு கொண்டுவந்தா, செய்முறை எல்லாம் ப்ளாக்ஸ்பாட்டுக்குதான் கிடைக்கும்; வெப்லாக்ஸ்காரங்க எண்ணி நாலஞ்சு பேருதான்னு நினைக்கிறேன். அதில நான் ஒருத்தன் மட்டும் தான் க.கை.நா.. அதனால திருவிழாவில தொலஞ்ச சின்ன பிள்ளை மாதிரி நிறைய நேரம் 'பே'ன்னு (ங் இதுக்கு ரெட்டைக்கொம்பு சேர்க்கிறது எப்படின்னு தெரியலை; அதான் 'பே'ன்னு போட்டுக்கிட்டேன்!) நிக்க வேண்டியதாகிப் போச்சு.

இப்போ இன்னொரு பிரச்சனை. புதுப் பதிவு போடும்போது தட்டச்சிவிட்டு ப்ரிவியூ பார்த்தால் கோணக்க மாணக்க இருக்கும். அது என்னமோ htmlன்னு ஒண்ணு இருக்காமே, அது கன்னாபின்னான்னு மாறியிருக்கும். அத சரி செஞ்சிட்டு மறுபடி ப்ரிவியூ பார்த்தா இப்போ இன்னொரு கோணக்க மாணக்க.. ஒரு பதிவு போடறதுக்குள்ள தாவு தீர்ந்திடும். அதோட இந்த சமயத்திலதான் நான் இடப்பங்கீடு பற்றிய நீண்ட (நீங்க யாருமே படிக்காத, நீங்க யாருமே படிக்க மாட்டீங்கன்னு தெரிஞ்சுமே நான் சீரியஸா போட்ட) பதிவுகளாகப் போடவேண்டியதாயிருந்தது. பொறுமை இழந்து, போராடி ஒவ்வொரு பதிவையும் ஏற்றும்படியாய் இருந்தது.

போதும்டா சாமின்னு ஆகிப்போச்சு. (என்னடா சாமிய எல்லாம் இவன் கூப்பிடுறானேன்னு கேக்றீங்களா? இங்க ஒரு digression -
வாத்தியார் புத்திதான்! (bye pass செய்துட்டு மருத்துவமனையில் ஒரு நாள்; படுக்கையில் படுத்திருக்கேன்; அப்ப எல்லாம் ஒரு தும்மலோ, இருமலோ வந்துட்டா...அம்மாடி...நெஞ்சாங்கூடு இருக்கே, அங்கே என்னமோ பிச்சுக்கிட்டு போறது மாதிரி ஒரு வலி வரும் பாருங்க...அப்படி ஒரு நேரம்..வலி சுரீர்னு..அது ஒண்ணும் சாதாரண மானிட சுரீர் இல்ல... இது அதையும் தாண்டி... அந்த நேரத்தில வலியில 'ஓ, ஜீசஸ்'அப்டின்னேன். பக்கத்தில இருந்த மனைவி மக்களுக்கு ஒரே சந்தோஷம்...ஆஹா, மனுஷனுக்குப் புத்தி வந்திருச்சு அப்டின்னு. சிரிச்சிக்கிட்டே 'அதுதான் சொல்றதுக்கு ஒரு rhyming-ஆ style-ஆ இருக்கு; அவ்வளவுதான்' அப்டின்னேன். 'அதான, இந்த மனுஷனுக்கு அப்படியா நல்ல புத்தி வந்திரப்போகுது' - இது
மனைவியின் பின்னூட்டம், அதாவது comment) சரி..சரி...எங்க விட்டேன். போதும்டா சாமின்னு ஆகிப்போச்சா..நாலும் தெரிஞ்ச நாலு மக்கள்கிட்ட கேட்டேன். ஏறக்குறைய எல்லாரும் சொன்னதன் சாராம்சம்: எல்லாருக்கும் ஒரு வழின்னா இடும்பனுக்கு மட்டும் ஒரு வழியாம்னு தெக்காட்டுப் பக்கம் ஒரு சொலவடை உண்டு; அது மாதிரி நீங்க மட்டும் ஏன் அத வச்சிக்கிட்டு மாரடிக்கிறீங்க...பேசாம உலகத்தோடு ஒட்ட ஒழுகல்தான் சரி அப்படின்னுட்டாங்க. நம்ம ஒன்பது கட்டளைகளில் ஒன்றான dare to be different அப்டிங்கிற நம்ம கட்டளைய ஒதுக்கி வச்சிடறதா முடிவு செஞ்சாச்சு.

நல்ல வேளையா, ஒரு 'கவைக்கு' இருக்கட்டும்னு வெப்லாக்ஸில போட்ட பதிவுகளை அப்பப்போ பழைய ப்ளாக்ஸ்பாட்டில சேமிச்சி வச்சிக்கிட்டு இருந்தேன். என்ன, முதல் உள்ளதில போட்டோ அது இதுன்னு போடறது உண்டு.இங்கு அத ஏற்றலை. அதோட வந்த ஒரு நாலஞ்சி பின்னூட்டங்களை அப்படியே copy 'n paste செஞ்சி பதிவோடு சேர்த்து போட்டு வரவேண்டியதாயிருந்தது. எப்படியோ அப்படி இப்படின்னு 146 பதிவுகள் வரை போட்டு வச்சிருந்திருக்கேன். இன்னும் ஒரு இருபது பதிவு இன்னும் ஏற்றணும். சீக்கிரம் போட்டுடணும்.(இல்லேன்னா ஒங்கள மாதிரி ஒண்ணு ரெண்டு பேரு வர்ரவங்க ரொம்ப ஏமாந்திருவாங்களே?!)
இதில இன்னும் கொஞ்சம் சிக்கல் இருக்கும்போலத் தெரியுது.
பின்னூட்டத்தில தகராறு வரும்னாங்க. சரி, அதெல்லாம் பின்னூட்டம் நிறைய வாங்குறவங்க பட வேண்டிய கவலை. நம்மள மாதிரி ஆளுகளுக்கு எதுக்கு அதெல்லாம். ஏதோ, ஒரு ஓரத்தில உக்காந்தோமா; நமக்குப் பிடிச்சதை எழுதினோமான்னு இருக்கிற ஆளு நம்ம. அப்படியே கீதையைக் கடைப்பிடிக்கிற ஆளு - பதிவுகளைப் போடு; பின்னூட்டங்களைப்பத்திக் கவலைப்படாதேன்னு அன்னைக்கே சும்மாவா சொல்லியிருக்கு.

கொஞ்சம் கவலைதான். வெப்லாக்ஸ் கெட் அப்பே தனிதான். படம் போட்ட அழகு என்ன? category வச்சிருந்த அழகு என்ன? அந்த lay out இருந்த இருப்பென்ன? இப்படி பல என்ன..என்ன..! ஆனால் என்ன, ப்ளாக்ஸ்பாட்டில கண்ணே கண்ணுன்னு ஒரே ஒரு டெம்ப்ளேட்...அதில நூத்தி எட்டு டெம்ப்ளேட். எத தூக்கி எதுல போடறதுன்னு ஒண்ணும் கடைசி வரை புரிஞ்சதில்லை. ப்ளாக் ஸ்பாட்டில கொஞ்சம் பிடிபடுது. உதவிக்கும் பார்ட்னர் செல்வன் மாதிரி ஒரு சில நல்லாத்துமாக்கள் (வாழ்க அவர்கள் உயருள்ளம்! மக்களே, ஐஸ் வச்சாச்சு; அடுத்த தடவை வரும்போது மறந்திராதீங்க!)

சரி...எப்படியோ மறுபடி ப்ளாக்ஸ்பாட்டுக்கு வந்தாச்சு. பழைய வீட்டை - வெப்லாக்ஸை - இனிமே ஸ்டோர்ஹவுஸா வச்சுக்க வேண்டியதுதான். நீங்க எல்லோரும் . நீங்க எல்லோரும் எப்போதும் மாதிரி கண்டுக்காதீங்க; வர்ட்டா...!

Thursday, August 17, 2006

171. அனானிகளுக்கு மட்டும்...

இடப் பங்கீடு பற்றி விரிவாக எழுத வேண்டிய ஒரு நிலை திசைகளில் எழுத அழைக்கப்பட்டதால் ஏற்பட்ட பிறகே அதனைப் பற்றிய ஒரு முழுக் கண்ணோட்டம் எனக்குக் கிடைத்தது. கிடைத்த சேதிகளும் நடந்து வந்த, வருகின்ற விஷயங்களைப் பார்க்கும் போதுதான் ஒரு மிரட்சியே ஏற்பட்டது,

இடப்பங்கீட்டின் தேவை,
இதுவரை நடந்தேறிய நல்லதும் அல்லதும்,
இனி நடக்கவேண்டியவைகள்,
அதற்குள்ள முட்டுக்கட்டைகள்,
முட்டுக்கட்டை போடுபவர்களின் திறமை,
அவர்களின் மனப்பாங்கு,
எல்லாவற்றையும் விடவும்
UPSC தேர்வுகளில் நடக்கும் பித்தலாட்டங்கள்


இவைகள் எல்லாம என்னை உண்மையிலேயே மிகவும் பாதித்தன. அந்தப் பாதிப்பை நம் பதிவர்களோடவாவது பகிர்ந்து கொள்ள நினைத்து அக் கட்டுரையை என் பதிவுகளில் தொடர்ந்து இட்டேன். பலரின் கவனம் கவர வேண்டுவதற்காகவே அக்கட்டுரையைப் பகுதிகளாகப் பிரித்தும் இட்டேன்.

ஆயினும் நான் எதிர்பார்த்தது போல் இந்த விஷயம் அதிகம் பேரைப் போய்ச்சேர்ந்ததாகவோ, படித்தவர்களைப் பாதித்ததாகவோ தெரியவில்லை.அதற்குக் காரணமும் தெரியவில்லை. வழக்கமாக என் பதிவுகள் பக்கம் கொஞ்சமாவது எட்டிப் பார்த்துவிட்டுப் பின்னூட்டம் வெகு சிலராவது போடுவதுண்டு. I would not touch it even with a ten foot pole என்பது மாதிரி யாரும் எட்டிகூடப் பார்க்கவில்லை.

ஒவ்வொரு semester இறுதியிலும் மாணவர்களிடமிருந்து ஒரு feedback வாங்குவதுண்டு - நான் வகுப்பு எடுத்த ‘அழகை’ப்பற்றி தெரிந்து கொள்வதற்காக. அந்த feedback எழுதும் போது மாணவர்கள் தங்கள் பெயரை எழுதக்கூடாது என்பது ஒரு விதி. அதைப் போலவே இப்போது ஒரு feedback எனக்கு வேண்டும். ஆகவே வழக்கமான என் விதியைத் தளர்த்தி உங்களிடமிருந்து முறையான, என் மாணவர்கள் இதுவரை தந்தது போன்ற முதிர்வான, பாரபட்சமற்ற, forthright கருத்துக்களை அனானியாக வந்தே தெரிவிக்க அழைக்கிறேன்.

எனக்குள் உள்ள கேள்விகள்:

1. ஏன் இந்தப் பதிவுகள் மற்ற என் பதிவுகளுக்குப் பெறும் கவனிப்பைக் கூட பெறவில்லை?

2. கட்டுரை உங்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையா?

3. ‘நடப்பது நடந்தே தீரும்’, தலையெழுத்துப்படிதான் எல்லாம் நடக்கும்’, - என்பது போன்ற fatalist idea-வின் படி செல்லும் மனப்பாங்கு காரணமாக இருக்குமோ?

4. ‘இதெல்லாம் எனக்கு முன்னமேயே தெரியுமே’ என்பதா?

5. இதில் ஆச்சரியப்படவோ, வருத்தப்படவோ ஏதுமில்லையே என்பதா?

அனானிகளாக வந்து பதிலளிக்க அழைக்கிறேன்.

Saturday, August 12, 2006

170 என்னதான் நடக்குது இங்க…?

தி.மு.க., அ.தி.மு.க. இரண்டிலேயும் இரண்டாவது ஆளாக எப்போதும் இருந்த - numero uno என்பதற்குப் பதில் numero doux ! ஆக இருந்த நெடுஞ்செழியன் மீதும் மற்ற அவரது தலைவி மேலும் சொத்துக் குவிப்பு வழக்கு போட்ட போது சொன்னார்: ‘இந்தக் கேசு எல்லாம் ஜுஜுபி; இதில தோற்றாலும் அடுத்து அப்பீல் போட மாட்டோமா? அப்படி இப்படி பல வருஷம் வழக்கு இழுத்துக்கிட்டே போகும். அதற்குள் எத்தனை பேர் இருப்போமோ, போவோமோ’. சும்மா சொல்லக்கூடாது; மனுஷன் தீர்க்கதரிசிதான். கேஸ் முடியறதுக்குள்ளேயே அவர் போய்ச்சேர்ந்துட்டார்.

பல குற்றவாளிங்க தப்பிச்சாலும் ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாதுன்னு எந்த பெரிய மனுஷன் சொன்னாரோ தெரியலை; நம்ம ஊரு நீதிமன்றங்கள் முதல் பாதியை முழுசா - குற்றவாளிங்களை விட்டுடறதப் பத்தி சொல்றேன் - காப்பாத்திடுறாங்க. டான்ஸி கேஸ்ல கூட பாருங்க..நீதிபதி, ‘ ஏதோ நீங்களா பாத்து பெரிய மனசு பண்ணி அந்த நிலத்தைத் திருப்பி கொடுத்துட்டு, அதுக்குப் பொறவாட்டி வீட்ல தனியா உக்காந்து மோட்ட பாத்துக்கிட்டு நம்ம பண்ணினது சரிதானான்னு உங்களயே நீங்களே கேட்டுப் பாத்துக்குங்க ‘ அப்டின்னு ஒரு பிரமாதமான தீர்ப்பைக் கொடுத்தார்.

இதுக்கு ஏத்தது மாதிரியே நம்ம C.B.I. எடுத்து நடத்துற கேஸ்கள்ல முக்காலே முண்டாணி சரியாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை; தகுந்த ஆதாரங்கள் தரப்படவில்லை; குற்றப் பத்திரிக்கையை ஒழுங்கா பைண்டு பண்ணிக் கொடுக்கவில்லை - இப்படி ஏதோ ஒரு காரணம் காட்டி வழக்குக்களை டிஸ்போஸ் செய்துவிடுகின்றன நமது நீதிமன்றங்கள்.அது பத்தாதுன்னு நம்ம I.P.C. எப்படி எழுதுனாங்களோ, யார் எழுதுனாங்களோ, எதுக்கு எழுதுனாங்களோ யாருக்குத் தெரியும். ஓட்டைகளே அதிகம் போலும். ஒரு பானைன்னா அதில ஊத்துறதுக்கு வாய் வேணும், அதவிட்டுட்டு பானை பூரா ஓட்டை போட்டு வச்சா தண்ணி எங்க நிக்கும்.

இப்போ கூட பாருங்க..மும்பை தொடர் குண்டு வெடிப்பு கேஸ் - நடந்தது 1993; விசாரணை 1995-லிருந்து. விசாரணை முடிஞ்சது ஜூன் 30, 2003; கேசு நடந்த இந்த கால கட்டத்துக்குள்ள 11 பேரு மர்கயா; பத்தாம் தேதி தீர்ப்பு வரும் என்று தினசரிகளில் செய்தி வந்ததும் பரவாயில்லையே இவ்வளவு சீக்கிரம் தீர்ப்பு சொல்லப் போறாங்களே, இன்னைக்கு அது என்னன்னு பார்த்து விடுவோம்னு நினச்சுக்கிட்டு இருந்தேன். என்ன சொல்லுவாங்கன்னு ஓரளவு நினச்சு வச்சுருந்தேன். என்ன சொல்லுவாங்க…சாட்சிகள் எல்லோரும் முதலில் சொன்னதை பிறகு இல்லன்னு சொல்லியிருப்பாங்க..அல்லது C.B.I. கொடுத்த சான்றுகள் சரியாக நிரூபிக்கப் படவில்லை…அல்லது மனிதாபிமான அடிப்படையிலும், சஞ்சய் தத் ரசிகர்கள் ஏமாந்து வருத்தப்பட வாய்ப்பு இருப்பதாலும் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்றோம் அப்டின்னு எதிர்பார்த்தேன்.

ஆனா பாருங்க…நான் நினச்சுப் பார்க்காத ஒரு லா பாயிண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கிடைச்சிருச்சி. அபு சாலிம் எவ்வளவு நல்லவர்; வல்லவர். அவர் தொடர்பான ஒரு கேஸ் இன்னும் பெண்டிங். அதனால் இந்த கேசின் தீர்ப்பு ஒத்திவைக்கப் படுகிறது. இதில் இன்னொரு விஷயம்: ” commencing delivery of judgment ” என்பதற்கும் ” commencement of judgment ” என்பதற்கும் உள்ள வித்தியாசம் பற்றி நீதிபதி ஒரு ‘ ஆங்கில வகுப்பு ‘ எடுத்திருக்கார். இப்படி ஒரு hair-splitting argument (தவறிப்போய் இதைத் தமிழில் சொன்னால், யாராவது contmept of court அப்டின்னு சொல்லி ஏதாவது பயமுறுத்துவாங்க…) எவ்வளவு தேவை பாருங்க.

நம்ம நீதி மன்றங்களில் என்னதான் நடக்கிறது? எந்த பெரிய ‘முதலை’யும் தண்டிக்கப்பட்டதாக வரலாறே கிடையாதா? கீழ் கோர்ட்டில் ‘பூட்ட” கேசு அடுத்த கோர்ட்டில் ‘மறு உயிர்பெற்று’ துள்ளியெழுகின்றது. கீழே தூக்குத்தண்டனை என்றால் மேல் கோர்ட்டில் நிச்சயம் ஆயுள் தண்டனை; இப்படியே போகும் நமது நீதி பரிபாலனம்.



என்னமோ போங்க…ஒண்ணுமே புரியலை.











Š







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Aug 12 2006 12:23 am | Uncategorized | | edit this
19 Responses
வணக்கத்துடன்... Says:
August 12th, 2006 at 1:02 am e
//நீதிபதி, ‘ ஏதோ நீங்களா பாத்து பெரிய மனசு பண்ணி அந்த நிலத்தைத் திருப்பி கொடுத்துட்டு, அதுக்குப் பொறவாட்டி வீட்ல தனியா உக்காந்து மோட்ட பாத்துக்கிட்டு நம்ம பண்ணினது சரிதானான்னு உங்களயே நீங்களே கேட்டுப் பாத்துக்குங்க ‘ அப்டின்னு ஒரு பிரமாதமான தீர்ப்பைக் கொடுத்தார்.//

//குற்றப் பத்திரிக்கையை ஒழுங்கா பைண்டு பண்ணிக் கொடுக்கவில்லை - இப்படி ஏதோ ஒரு காரணம் காட்டி வழக்குக்களை டிஸ்போஸ் செய்துவிடுகின்றன நமது நீதிமன்றங்கள்.//

//சஞ்சய் தத் ரசிகர்கள் ஏமாந்து வருத்தப்பட வாய்ப்பு இருப்பதாலும் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்றோம் அப்டின்னு எதிர்பார்த்தேன்//

என்னா வாத்யாரே? இவ்வலவையும் சொல்லீட்டு, அப்பாலிக்கா

//(தவறிப்போய் இதைத் தமிழில் சொன்னால், யாராவது contmept of court அப்டின்னு சொல்லி ஏதாவது பயமுறுத்துவாங்க…)// ன்னு ஜகா வாங்குனா? வுட்ருவாங்களா?

நோட்டீஸு வந்துக்கினேக்கீது, ரெடியாரூபா…அகாங்.

அப்பாலே, கோர்ட்ல மீட் ‘பன்னி’க்கலாம்.

வர்ட்டா,
வணக்கத்துடன்…

Thiru Says:
August 12th, 2006 at 1:13 am e
கலக்குங்க! ம் நீதீ மன்றங்களா?

Balachandar Says:
August 12th, 2006 at 1:34 am e
இந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு மூலகாரணமான ஒட்டைகள் நிறைந்த சட்டத்தினை சரியாக சாடியுள்ளீர்கள். நீதிமன்றங்கள் சட்டத்தின் எல்லைகளுக்குள் மட்டும் தான் செயல்பட முடியும். அதை மீறி அவர்களால் கருத்து மட்டுமே கூற முடியும்( டான்சி வழக்கில் நடந்தது போல).மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாது.

சிறில் அலெக்ஸ் Says:
August 12th, 2006 at 3:04 am e
//பல குற்றவாளிங்க தப்பிச்சாலும் ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாதுன்னு எந்த பெரிய மனுஷன் சொன்னாரோ தெரியலை; நம்ம ஊரு நீதிமன்றங்கள் முதல் பாதியை முழுசா - குற்றவாளிங்களை விட்டுடறதப் பத்தி சொல்றேன் - காப்பாத்திடுறாங்க//

:))

நீதி மன்றங்களையே குறை சொல்ற அளவுக்கு வந்துட்டீங்களா?
அப்படீன்னா, என்னதான் கேஸ் போட்டாலும் அடுத்து 20 வருசத்துக்கு தீர்ப்பு வராதுங்கற நம்பிக்கை உங்களுக்கும் இருக்குல்ல?

:))

சிறில் அலெக்ஸ் Says:
August 12th, 2006 at 3:05 am e
போட்ட கமெண்ட் வந்துச்சா

குழலி Says:
August 12th, 2006 at 7:24 am e
ஏற்கனவே நீதிமன்றங்களின் நீதியையும் நீதிபதிகளின் மனுநீதியையும் பார்த்து வெறுத்து போயுள்ளேன் நீங்கள் வேறு ஏற்றிவிடுகின்றீர் இது மாதிரி பதிவு போட்டு…

தருமி Says:
August 12th, 2006 at 3:44 pm e
வணக்கத்துடன் கோர்ட்ல மீட் ‘பன்னி’க்கலாம் அப்டின்னு முதல் முதல்ல வந்து சொல்லிட்டீங்க. ஏதோ பாத்து செய்யுங்க…

அது ஏன் ‘பன்னி’க்கு மேற்கோள் குறிகள்?

தருமி Says:
August 12th, 2006 at 3:46 pm e
திரு,
கலக்க கலக்க மேலும் மேலும் கலங்கலாதான் ஆகுது; தெளிவே ஆக மாட்டேங்குதே

தருமி Says:
August 12th, 2006 at 4:00 pm e
பாலச்சந்தர்,
//சட்டத்தின் எல்லைகளுக்குள் மட்டும் தான் செயல்பட முடியும். // அதாவது நடக்கிறதா என்பதுதான் என் கேள்வி. எல்லோரும் சொன்னது டான்ஸி கேஸ் ஒரு open and shut case என்று. நானும் தினத்தாள்களில் படித்த அளவு குற்றம் ருசுப்படுத்தப்பட்ட பின்னும் என்ன நடந்தது.
pleasant stay hotel விவகாரத்தில் அனுமதியின்றி அதிகப்படியாக ஒரு மாடி (floor) கட்டியிருப்பதாக ருசுப்படுத்தப்பட்டு, அதனால் கோர்ட் ஒரு மாடியை இடிக்க வேண்டுமென்று தீர்ப்பு வருகிறது. அதற்கு அடுத்த வந்த கேஸ் நினைவிருக்கிறதா? அப்படி இடிக்கவேண்டுமானால் எந்த மாடியை இடிக்க வேண்டும் என்று ஒரு மனு. வேடிக்கையாயில்லை - வழக்கை இழுத்தடிக்க இப்படி ஒரு யோசனை. எனக்கு ஒரு ஆசை - நான் நீதிபதியாயிருந்தால் அந்த இரண்டாவது வழக்கிற்கு உடனே ஒரு தீர்ப்பு அளிப்பேன் - அந்த ground floor-யை மட்டும் இடித்தால் போதும் என்று.

உங்களுக்கு shylock - portia கதை நினைவுக்கு வருமேயானால், ஒரு கடைச்செருகல்: நீதான் உன் கட்டிடத்தை இடிக்கப் போகிறாய்; ground floor இடிக்கும்போது மற்ற floors-களை முடிந்தால் காப்பாற்றிக் கொள்வது உன் திறமை. ஆனால் இப்போது (நீயே கேட்டதால் ) ground floor இடி.

தருமி Says:
August 12th, 2006 at 4:06 pm e
சிறில்,
//அடுத்து 20 வருசத்துக்கு தீர்ப்பு வராதுங்கற நம்பிக்கை ../
அய்யய்யோ அப்படியில்லை சிறில்..அவங்களுக்கு இஷ்டம்னா உடனே எடுத்தோம், கவிழ்த்தோம் அப்டின்னும் இருக்குது போலேயே!

நம்ம M.P.களைப் பாருங்க. அவர்களுக்குப் புதிய சம்பளம், சலுகைகள் அப்டின்னு ஏதாவது பாராளுமன்றத்தில் வந்தால் அனைவரும் அன்னைக்கு present.. House full தான்! சுடச்சுட சட்டம்தான். இப்போகூட இரட்டைப் பத்வி சட்டம் என்ன ஸ்பீடு!

அவனவனுக்கு வந்தா தெரியும் பல்வலியும் தல வலியும்னு சும்மாவா சொன்னாங்க

நவீன பாரதி Says:
August 12th, 2006 at 4:37 pm e
சட்டங்கள் செய்தென்ன கண்டோம்?
——————————-

சட்டங்கள் செய்தென்ன கண்டோம்? - அதில்
சந்துகள், பொந்துகள் வசதியாய்க் கொண்டோம்!
செல்வம் படைத்தோர்க்கொரு நீதி - பாழும்
வறியவர்க்கு இங்கெங்கே மீதி?

TheKa Says:
August 12th, 2006 at 6:23 pm e
/எனக்கு ஒரு ஆசை - நான் நீதிபதியாயிருந்தால் அந்த இரண்டாவது வழக்கிற்கு உடனே ஒரு தீர்ப்பு அளிப்பேன் - அந்த ground floor-யை மட்டும் இடித்தால் போதும் என்று. //

இது வந்து நீதிபதி அய்யா, படுத்துகிட்டு போத்திக்கிறதா இல்ல போத்திக்கிட்டு படுத்துக்கிறதான்னு இருக்கிற சிக்கலான கேள்விக்கு இவ்வளவு ஈசியான விடையா .

நாங்கள் இதற்கென ஒரு கமிஷன் போட்டு தீர்க்க ஆய்ந்து முடிவெடுக்கலாமென்று நினைத்துக் கொண்டிருந்தால், நீங்கள் இப்படி இன்ஸ்டன்ட் தீர்ப்பு கொடுப்பவராக இருந்தால் உங்களை “ப்ளூ க்ராசில்” மிருக வதைப்பு சட்ட நீதிபதியா தூக்கி அடிக்க வேண்டியதுதான் .

அய்யா, எனக்கு ஏதாவது ‘நோட்டீஸு’ அனுப்புவீங்களாய்யா… இப்பிடி சொன்னதுக்காக…

தருமி Says:
August 13th, 2006 at 7:26 pm e
நவீன பாரதி,

உங்கள் கவிதையின் கடைசி வரி - சுயநலம் வாழுது இன்று!//

யாருக்குத்தான் இல்லை சுய நலம்; ஆனால் அடுத்தவனைக் கெடுத்து நல்லது தேடாமல் இருந்தால் போதுமே. அதற்கு வேண்டும் சட்ட திட்டங்கள். அந்தச் சட்ட திட்டங்களைத் தாண்டுவோரைப் ‘பிடித்துப் போட்டால்’தான் இனி இங்கு வாழ்க்கை நேராகும்; நேர்மையாகும்.

தருமி Says:
August 13th, 2006 at 8:31 pm e
தெக்கா,



Sivabalan V Says:
August 13th, 2006 at 8:35 pm e
தருமி அய்யா

நன்றாக எழுதியுள்ளீர்கள்..

இது போல பல வழக்குகள்…

தருமபுரி பேருந்து எரிப்பு வழுக்கின் நிலை தெரியவில்லை..

தாமதமான் நீதியும் அநீதியே..

கோ.இராகவன் Says:
August 13th, 2006 at 9:50 pm e
ம்ம்ம்ம்ம்…எல்லாம் அவனவன் தலையெழுத்து. ஒன்னும் பண்ண முடியாது.

பட்டணத்து ராசா Says:
August 14th, 2006 at 12:55 pm e
இந்தியச் சட்டத்தில் விரைவில் வழக்கை முடிப்பதற்கு எவ்வித வழியும் இல்லை. ஆனால் வழக்கைத் தாமதப்படுத்த அநேக வழிகள் உண்டு. ஆங்கிலேயர் காலத்தில் வழக்குகள் குறைவாய் இருந்தன. அப்பொழுது கடைப்பிடிக்கப்பட்ட நீதிமன்ற நடைமுறைகள் இன்றைக்குப் பயன்படாது. எனினும் ஆங்கிலேயர் காலத்து நீதிமன்ற நடைமுறைகளே இன்றும் பின்பற்றப்படுகின்றன. ஒரு வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வழக்கு எண் வழங்குவதற்கு இந்திய நீதிமன்றத்திற்கு ஒரு மாத காலம் தேவைப்படுகிறது. அதற்குப் பின்
அனுப்பப்படும் சம்மன்களை எதிர்த்தரப்பு, நிர்வாக ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து ‘எதிர்த்தரப்பினர் ஊரில் இல்லை’ எனச் சொல்ல வைத்து, ஆறு மாதத்திலிருந்து ஓராண்டு வரை இழுத்தடிக்கலாம். ‘வழக்கறிஞருக்கு உடல்நிலை சரியில்லை’ என்றோ, ‘வழக்கில் ஈடுபடுத்தப்பட்டவருக்கு உடல்நிலை சரியில்லை’ என்றோ ஆயிரமாயிரம் பொய் சொல்லி ‘வாய்தா’ க்கள் வாங்கலாம்.

நீதித்துறையை ஆராய்வதற்கென பல கமிஷன்கள் உருவாக்கப்பட்டன. உருவாக்கப்படும் பொழுது செய்தித்தாள்களில் இடம் பெறுவதைத் தவிர இந்தக் கமிஷன்கள் பெரும்பாலும் மக்கள் தொடர்பற்றே இருக்கின்றன. பல ஊர்களில் உள்ள வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகளிடம் கருத்துகள் கேட்டறியப்படாமலே கமிஷன்கள் செயல்படுவது எவ்வித
நன்மையையும் பயக்கப் போவதில்லை. தேங்கிக் கிடக்கும் வழக்குகள், கமிஷன் அறிக்கைகளைக் கிடப்பில் போடுவது போன்றவற்றை மாற்றவே இன்னும் அரசாங்கம் முயலாதபொழுது அரசாங்க அமைப்பின் மேம்பாட்டைப் பற்றிப் பேசுவது அரசியல் நகைச்சுவையாகிவிட்டது.

மனு Says:
August 14th, 2006 at 3:13 pm e
தருமி, இரண்டு மூன்று நாள் முன்னால் தான் சோ சாரின் உண்மையெ உன் விலை என்ன? சினிமா பார்த்தேன்.
அதில் நீதிக்காகப் போராடும் ஒருவர் தான் செய்யாத, தன்னிடம் பாவ மன்னிப்புக் (confession) கேட்க வந்த ஒருவனுக்காக, கடைசியில் உயிர் விடுவதாகக் கதை வருகிறது.
அதனால் நீதீயே தலையிட பயப்படுகிறதோ என்னவோ.
வாழ்க சுதந்திரம்.

தருமி Says:
August 14th, 2006 at 8:38 pm e
சிவபாலன்,
எரிக்கப்பட்ட அந்தக் குழந்தைகளின் பெற்றோர்முன் அந்தக் கொலைகாரப் பாவிகள் தலைநிமிர்ந்து நடந்து போகும்போது அவர்களுக்கு எப்படி இருக்கும்? குழந்தைகளை இழந்தபோது வந்த வலியை விட அதிகமாக இருக்காது.

Sunday, August 06, 2006

169. “இட ஒதுக்கீடு” - தவறு.

சென்ற வாரம் மதுரை அருகில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியில் மாநிலக் கருத்தரங்கு ஒன்று _ இட ஒதுக்கீடு - தாக்கமும், தடைகளும் - என்ற தலைப்பில், திரு, நல்லக்கண்ணு அவர்களின் தலைமையுரையுடன் நடந்தது. அதில் நெல்லை வழக்கறிஞர் பிரிட்டோ அவர்கள் பேசும்போது தான் நெல்லையில் நடத்திய கருத்தரங்கத்தில் தமிழ்ப் பேராசிரியர் திரு. தெ.பொ,மீ, அவர்கள் கூறியதாகச் சொன்னது:

இட ஒதுக்கீடு என்ற சொல் காலனிய ஆதிக்கத்தின் எச்சம். Reservation என்ற ஆங்கிலச்சொல்லை அடிப்படையாக வைத்து வந்த சொல்லே இட ஒதுக்கீடு. இந்தச் சொல் குறிப்பிட்ட சிலருக்குச் சலுகையாகத் தருவதான பொருளில் வருகிறது. அப்படியின்றி அது அவர்களது உரிமை என்ற பொருளில் இட ஒதுக்கீடு என்றின்றி ‘இடப் பங்கீடு’ என்று அழைக்கப்படுவதே சரி.

அதனால், நம் பதிவுலகத்தில் இச்சொற்களை அறிமுகப்படுத்துகிறேன். நான் இனி இந்த சொற்களையே பயன்படுத்தப் போவதாக முடிவெடுப்பதோடு, மற்ற பதிவர்களையும் இச்சொற்களையே இட ஒதுக்கீடு என்பதற்குப் பதிலாகப் பயன்படுத்த வேண்டுகிறேன்.









Pathivu Toolbar ©2005thamizmanam.com


Aug 06 2006 02:54 pm சமூகம் edit this
5 Responses
kumar Says:
August 6th, 2006 at 6:55 pm e
ஹூம்!!
உழைப்பதைத்தவிர எதை சொல்லிக்கொடுத்தாலும், இனாமாக கொடுத்தாலும் அது அவனுக்கும் நாட்டுக்கும் கெடுதல் என்பது என் எண்னம்.

TheKa Says:
August 6th, 2006 at 7:10 pm e
//இட ஒதுக்கீடு என்ற சொல் காலனிய ஆதிக்கத்தின் எச்சம். //

இன்னும் என்னவெல்லாமிருக்கோ. எங்கவெல்லாமிருக்கோ. பகவானுக்கே வெளிச்சம்!!

Sivabalan V Says:
August 6th, 2006 at 8:43 pm e
அருமையான சொல்… இடப் பங்கீடு எனும் போது அடிப்படை உரிமை போன்ற உணர்வை ஏற்படுகிறது.

தருமி அய்யா,

இங்கே பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.

தருமி Says:
August 6th, 2006 at 10:47 pm e
குமார்,
நீங்க சொல்றது ஒண்ணும் புரியலை .
அந்த ‘அவன்’ யார்?

தருமி Says:
August 6th, 2006 at 10:48 pm e
தெக்கா, சிவபாலன்,
நன்றி.
சிவபாலன்,
நீங்கள் சொன்னது மிகச்சரி

Friday, August 04, 2006

168. சாதிகள் இருக்குதடி பாப்பா - முழுக்கட்டுரை


"It is certainly true that reservation for Other Backlward Classes will cause a lot of heart burning to others. But should the mere fact of this heart burning be allowed to operate as a moral veto against social reform? ...It burns the heart of all whites when the blacks protest against apartheid in South Africa. When the higher castes constituting less than 20% of the country's population subjected the rest to all manner of social injustice, it must have casued a lot of heart burning to the lower castes. ...... Of all the spacious arguments advanced against reservation for backward classes, there is none which beats this one about "heart burning" in sheer sophistry.

In fact the Hindu society has always operated a very rigorous scheme of reservation, which was internalised through caste system. Ekalaiva (Mahabharata) lost his thumb and Shambhuk (Ramayana) his neck for their breach of caste rules of reservation. The present furor against reservations for Other Backward Classes is not aimed at the principle itself, but against the new class of beneficiaries as they are now clamouring for a share of the opportunities which were all along monopolised by the higher castes." (Mandal Commission Report - chapter XIII)



"OBCs constitute 12.55% of the total number of Central Government employees whereas their aggregate propulation is 52%. Their representation in Class I jobs is 4.69%, less than 1/10th of their population to the country's total population. (Mandal Commission Report - Chapter XIV)





I. முதல் பகுதி


இட ஒதுக்கீடு பற்றிய ஒரு வரலாற்றுக் குறிப்பு:

1857-ல் ஆரம்பித்த ஒரு புரட்சியும், 1909,1919 -களில் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்தவேண்டுமாயின் இந்நாட்டு மக்களையும் அரசுப்பணியில் அமர்த்தினால்தான் முடியும் என்ற கருத்தில் புதிய சட்ட திட்டங்கள் கொண்டுவந்து ( J.S. Mill ) நமக்கு ஆங்கிலேயரின் அரசுப் பணியில் சேரும் வழி பிறந்தது.

1928 - COMMUNAL G.O. - மேற்கண்ட திட்டத்தின் தொடர்பாகவே...தமிழ்நாட்டில் மட்டும் - அனைத்து தமிழ்மக்களும் 5 வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு அனைத்து அரசுப்பணிகளும் அவர்களுக்குப் பிரித்து அளிக்கப்பட்டன. இத்திட்டம் சமூக நீதிக்காகத் தோன்றிய நீதிக்கட்சியின் முத்தையா முதலியாரால் மதராஸ் ராஜதானியில் கொண்டு வரப்பட்டது.

1940 - முதல் தமிழ்நாட்டில் மட்டும் - உயர் கல்விக்கும், தொழிற்கல்விக்கும் மேற்கண்ட ஒதுக்கீடுகள் அளிக்கப்பட்டன.

1947 - முதல் தமிழ்நாட்டில் மட்டும் 5 வகுப்பினர் என்பது 6ஆக பிரிக்கபட்டு மேற்கண்ட ஒதுக்கீடுகள் அளிக்கப்பட்டன.

26.01.19550 - நாடு குடியரசானபோது இந்திய அரசியலமைப்பு விதி 16 (4) B.C., S.C., S.T. ஆகிய மூன்று பிரிவினருக்கு அரசுப்பணிகளில் மட்டும் இட ஒதுக்கீடு அளிக்க வழி`செய்தது.

இந்த விதியைச் சார்ந்து, சென்னை மாகாணத்தில் அளிக்கப்பட்டு வந்த வகுப்புவாரி அடிப்படை செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றமும், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்தன.

1950 - ' 51 - இத்தீர்ப்பை எதிர்த்து தமிழ் நாட்டில் பெரியாரின் போராட்டமும் அம்பேத்காரின் முயற்சியாலும் அரசியலமைப்புச் சட்டத்தில் புது விதி ஒன்று - 15 (4) சேர்க்கப்பட்டது.

மீண்டும் சென்னை மாகாணத்தில் மொத்த அரசுப் பணிகள் முன்பு போலவே 6 வகுப்பாருக்குப் பிரித்தளிக்கப்பட்டன.

1954 முதல் 1971 வரை - தமிழ்நாட்டில் பிற்படுத்தப் பட்டோருக்கு25 % இடங்களும், பட்டியல் குலத்தாருக்கு 16% இடங்களும், ஆக 41% இடங்கள் மட்டுமே பிரித்தளிக்கப்பட்டன.

1972 முதல் 31.1.1980 முடிய - பிற்படுத்தப்பட்டோருக்கு: 31%; பட்டியல் குலத்தாருக்கு: 18%
1.1.1979-ல் பிரதமர் மொரார்ஜியால் மண்டல் குழு அமைக்கப் பட்டது.
1.2.1980 முதல் - தமிழ் நாட்டில் பிற்படுத்தப் பட்டோருக்கு 50%; பட்டியல் குலத்தாருக்கு 18%;

1989 முதல் -தமிழ் நாட்டில் பிற்படுத்தப் பட்டோருக்கு 50%; பட்டியல் குலத்தாருக்கு 18%; முதல் முறையாக பழங்குடியினருக்கு 1% -- ஆக 69% இடங்கள் பிரித்தளிக்கப்பட்டன. இதில் பிற்படுத்தப் பட்டோருக்கான 50% ல் 20% மிக பிற்படுத்தப்பட்டோருக்குப் பிரித்து அளிக்கப்பட்டன.

1977 முதல் 'பொதுக்கல்வி' பொது அதிகாரப்பட்டியலுக்கு (concurrent list) மாற்றப் பட்டதால் மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும், மேலாண்மை உரிமையும் இல்லாது போயிற்று.

1980களின் ஆரம்பத்திலிருந்தே கல்விக்கு நிதி ஒதுக்கீடு குறைந்தமையால் தனியார் கல்வி நிறுவனங்கள் நிறைய தோன்ற ஆரம்பித்துவிட்டன. இக்கல்வி நிலையங்கள் அந்தந்த மாநிலத்தில் நடப்பில் உள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கையை ஏற்று நடைமுறைப்படுத்துவது கட்டாயமாக நடப்பில் இருந்தது. மாணவர் சேர்க்கை, படிப்பு இவைகளுக்கான கட்டணம் எவ்வளவு என்பதையும் மாநில அரசே நிர்ணயிக்கும் என்றும் இருந்தது.

12.10.2005ல் உச்ச நீதி மன்றம் மேற்பட்ட நடப்பு செல்லாது என்று தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பின் விளைவுகள் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் உயர் கல்வி பெறும் வாய்ப்பை அடியோடு தடுப்பவை ஆகும். மாணவர் சேர்ப்புக்காக இக்கல்வி நிறுவனங்கள் பெறும் பெருந்தொகை (capitation fee) ஒடுக்கப்பட்டவர்களின் கல்வியாசைகளை நிராசையாக்கின. பணம் இருந்தால் போதும். so called 'merit' என்பதற்கு எந்த மரியாதையும் கிடையாது என்ற நிலை வேரூன்றியது. ஆகவே இதை எதிர்த்து சட்டத்திருத்தம் ஒன்று கொண்டு வரவேண்டுமென்ற கோரிக்கையோடு பரவலான அரசியல், சமூக அமைப்புகளும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதே சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர், திரு இ.எம். சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட ஆய்வுக் குழுவும் சட்ட திருத்தம் தேவையென்று பரிந்துரை செய்தது.

20.12.2005 அன்று புதிய 104வது சட்ட திருத்தமாக புதிய உள்விதி ஒன்றை - 15 (5) - பாராளுமன்றம் நிறைவேற்றியது.

விதி 15 (5) : - ".......... சமுதாயத்திலும் கல்வியிலும் பின் தங்கிய எந்த வகுப்புக் குடிமக்களுக்கும் அல்லது பட்டியல் குலத்தினருக்கும் மற்றும் பழங்குடியினருக்கும் இவ்வகுப்பினரின் முன்னேற்றங் கருதி, இவர்களுக்கென்று கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக உள்ள ஏற்பாடு எதையும் சட்ட ஏற்பின் மூலம் (by law) - அரசிடம் நிதி உதவி பெறுகிற அல்லது நிதி உதவிபெறாத நிறுவனங்களில் அரசு செய்வதைத் தடுக்காது. அரசமைப்பு விதி 30(1) இன்படி மதச் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு இவ்விதி பொருந்தாது."

1955-லேயே பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மைய அரசு கல்வியிலும், அரசு வேலைகளிலும் வழங்கப்பட்டிருக்க வேண்டிய இட ஒதுக்கீட்டிற்கு, 1994 வரை மண்டலின் பரிந்துரைக்காகக் காத்திருந்து மைய அரசின் வேலையில் மட்டுமே இட ஒதுக்கீடு பெற முடிந்தது. கல்விக்கான முழுமையான் இட ஒதுக்கீட்டை மறுப்பது 60 விழுக்காடாக உள்ள 60 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் உயர்கல்வி பெறும் உரிமையை மறுப்பதாகும்.
அதிலும் சிறப்பாக, முழுக்க முழுக்க மத்திய அரசின் உதவித் தொகையால் நடந்து வரும்
14 Central Govt. Universities
7 IITs
6 IIMs
6 IIScs
54 தொழில்-வணிகப் பயிற்சி நிறுவங்கள் (உள்நோக்கத்துடன்) மைய அரசின் பிடியில் இருந்து வந்துள்ள இந்த உயர் கல்வி நிறுவங்களில் 50 ஆண்டு காலமாக ஒரே ஒரு விழுக்காடு இட ஒதுக்கீடுகூட பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப் படவில்லை. இந்த நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகை முழுக்க முழுக்க மக்களின் வரிப் பணம் - அதிலும் 60 கோடிக்கும் மேலான OBC, BC, SC, & ST செலுத்தும் வரிப்பணமே.
மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் உள்ள பதிவு எண்கள் 62, 63. 64-ல் கண்ட மேற்சொன்ன எல்லா மத்திய அரசுக் கல்வி நிறுவங்களிலும், பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு செய்து நியாயம் வழங்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது - இதற்கு வரும் நியாயமற்ற எதிர்ப்புகள் எவ்வளவாயினும்.





II. இரண்டாம் பகுதி.


ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு?:

சாதிகளை இன்றே தூக்கியெறியுங்கள்; இட ஒதுக்கீடும் ஒரு மண்ணும் யாருக்கும் தேவையில்லை.

ஆனல் முதலில் சொன்னது நடக்குமா? நடப்பதற்குறிய எந்த அறிகுறியும் இல்லை. சனாதன தர்மமும் நிலைக்க வேண்டும்; சமூக நீதியும் கிடையாது என்பது என்னவிதமான மனப்பாங்கு?

ஆண்டாண்டு காலமாய் நம் சமூகத்தைப் பீடித்துள்ள சாதி என்னும் வியாதி ஒழிந்து, பிறப்பினால் எந்த மனிதனும் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ இல்லை என்ற சமத்துவ சமுதாயம் ஏற்படும் என்ற நம்பிக்கைக் கீற்றைக் கூடக் காண முடியாத இன்றைய சூழ்நிலையின் நிதர்சனங்களை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். சாதிகள் இல்லை என்றோ, 'நம்மைப் போன்றவர்களுங்கூட' சாதிப் பிரிவினைகளைப் பற்றிப் பேசுவது தவறு என்றோ நினைத்தால் நாம் கண்களை மூடிக்கொண்ட பூனைகளாகத்தான் இருப்போம். நம்மிடையே சாதிகளும், சாதீய உணர்வுகளும் ஆழமாகவே பதிந்துள்ளன. சாதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூக ஏற்றத் தாழ்வுகள் எங்கும் நீக்கமற நிறைந்தே இருக்கின்றன. கீழ்நிலை படுத்தப்பட்டவரைப் பார்த்து, அவருக்குச் சாதீயத் தரவரிசையில் சற்றே மேலேயுள்ளவர்கள் 'அவன்' மேலே வந்துவிடக்கூடாதே என்ற நச்சு நினைவோடு 'கீழ்சாதிக்காரன்' எப்போதுமே தன் அடிமையாகவும் தான் எப்போதுமே 'ஆண்டானாகவும்' இருக்கவேண்டும் என்ற மன வெறியை எல்லா சாதி நிலைகளிலும் பார்க்க முடிகிறது. இந்தக் காழ்ப்பு உணர்வு வெறியாக மாறி நித்தம் நித்தம் நம் முன் நடந்தேறும் கொடூர நடப்புகள்தான் எத்தனை எத்தனை. வெண்மணியும், திண்ணியமும், பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி நடப்புகளும் ஒரு புறம் என்றால், கையில் செருப்புகளோடும், விளக்குமாறுகளோடு நடத்தப்படும் 'புனிதப் போராட்டங்கள்' மறுபுறம். அதிலும் இந்த இரண்டாம் வகை புனிதப் போராட்டங்கள் இருவகையில் மிகத் தரம் குறைந்தவைகள்:
ஒன்று: இந்த விளக்குமாறுப் போராட்டங்கள் வெற்றி பெருமாயின், காலங்காலமாய் இருந்து வரும் சமூக ஏற்றத்தாழ்வுகள் இன்னும் பல காலத்துக்கும் தொடரும்.
இரண்டாவது: தங்களையே முற்படுத்திக்கொண்டோர் தன் சக மனிதனை கேவலமாகவும், அவன் என்றும் எப்போதும் தனக்கு இணையில்லை என்ற அகம்பாவ நினைப்பையும் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் கீழ்த்தரம்தான் இப்போராட்டங்கள் என்று நமக்கு விளக்குகின்றன. தங்களையே, தங்கள் உள்ளக் கிடக்கையையே அவர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். இதற்கு மேலும் அந்தப் போராட்டங்களில் உள்ளடங்கியிருக்கும் 'தத்துவங்களைப்' பற்றி - பலரும் விமர்சித்ததற்குப் பின் - பேசாமல் விடுவதே நல்லது.

நம் சமூக உயர்வில் பங்களிக்காதவர் யார்? ஏதோ ஒரு வழியில் அரசுக்கு வரும் வருமானத்தில் ஒவ்வொருவரும் பங்களிக்கவில்லையா? அப்படியானால் அரசு தரும் service-களில் எல்லோருக்கும் பங்குபெற உரிமை உண்டா இல்லையா? அந்த உரிமை மத நம்பிக்கைகளால் சமூகத்தின் ஒரு பெரும் பிரிவினருக்கு - 75% விழுக்காட்டுக்கு மேல் - மறுக்கப்பட்டு வந்துள்ளது உண்மையில்லையா? மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற அவர்களுக்குச் 'சலுகைகள்' என்ற பெயரிலாவது இனியாவது புதிய கதவுகளைத் திறப்பது அரசின் முதல் கடமை இல்லையா?

இடஒதுக்கீடு ஏன் என்ற கேள்விக்கு ஒரே வரியிலும் பதில் தரமுடியும்: To provide level playing field என்பதே அது. மண்டல் தன் அறிக்கையில் கூறுவது: " சமமானவர்களிடம்தான் சமத்துவம் இருக்க முடியும். சமமாக இல்லாதவர்களை சம்மானவர்களாகக் கருதுவதே சமத்துவமின்மை ஆகும்." ஒரே அமைப்பில் ஒரு பகுதியினர் கல்வியோடு தொடர்பு கொண்டவர்களாகவும், மற்றொரு பகுதியினர் பொது சமூகநலனுக்காக 'உழைக்கும் வர்க்கமாகவும்' பிரிக்கப்பட்டு வெகுகாலமாய் பிரித்து வைக்கப்பட்ட ஒரே காரணத்தால் மட்டுமே தங்களை 'அறிவாளிகளாகப்' புனைந்து கொண்டு கல்வி தங்களுக்கே உரிய ஒரு விஷயமாகக் கற்பித்துக்கொண்டு இருப்பதுவும், மற்றவருக்குத் 'தகுதி' இல்லையென்ற கூற்றை கோயபல்ஸ் தனமாக திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருப்பது இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு செல்லுபடியாகும்? (தகுதி, திறமை பற்றியப் பிரச்சனைகளைத் தனியாக, அடுத்ததாகப் பேசுவோம்).

நாம் எப்போதுமே அண்ணாந்து பார்க்கும் அமெரிக்க நாட்டில் 1964-லேயே Proactive Employment Law என்ற சம வேலைவாய்ப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் மக்கள் தொகை, race - இவைகளின் அடிப்படையில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது அரசு வேலைகளுக்கு மட்டுமின்றி தனியார் துறைகளுக்கும் பொருந்தும் என்ற சட்டம் இயற்றப் பட்டுள்ளதே. சரியான இன்னுமொரு சான்று வேண்டுமெனின், டெட்ராய்ட் மாநிலத்தில் பாதிக்கு மேல் ஆஃப்ரோ-அமெரிக்கர்கள் இருந்தும் பல அரசு வேலைகளில் அதுவும் காவல் துறையில் மேல்பதவியிலிருப்பவர்கள் பலரும் வெள்ளையர்கள் என்பதை எதிர்ப்பு செய்தமையால், 50:50 என்ற அளவில் இரு சாராருக்கும் பதவிகள் கொடுக்கப் பட அதை எதிர்த்து வெள்ளையர் நீதி மன்றம் சென்ற போது நீதி மன்றம் விகிதாசார அடிப்படையில் பதவிகள் கொடுக்கப்படுவதே சரியென்று தீர்ப்பும் அளித்தது.

ஆனால் நம் நாட்டில் இப்படி ஒரு தீர்ப்பை இன்னும் பல ஆண்டுகளுக்கு எதிர்பார்க்கவே முடியாது. ஏனெனில் இங்கே ஒரு பக்க நியாயம் - அதுவும் முற்படுத்திக்கொண்டோரின் நியாயம் - மட்டுமே படியேறும். ஏனெனில் இதுவரை உச்ச நீதி மன்றத்தில் நீதியரசர்களாக இருந்தவர்கள் மொத்தம் 270; அதில் நான்கு பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டோர். இதுவரை இட ஒதுக்கீடு தொடர்பான பல வழக்குகள் நம் நீதியரசர்கள் முன் தோல்வியடைவதே வாடிக்கை. அதிலும் நம் நீதியரசர்கள் எப்போதும் இந்த விஷயத்தில் மிகவும் proactive -ஆக இருப்பது கண்கூடு. 1950- ஆம் ஆண்டில் சண்பகம் துரைராஜ் என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ப்ராமணப் பெண் சென்னை உயர் நீதி மன்றத்தில் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஒரு வழக்கு தொடுக்கப்படுகிறது. பொதுவாக, கல்லூரியில் - பெயரளவிலாவது - பயிலப் போகும் மாணவர்களின் பெயரில் இம்மாதிரி வழக்குகள் தொடுக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு யாரோ ஒருவர் - மருத்துவப் படிப்போடு தொடர்பேதுமில்லாதவர் - வழக்கு ஒன்று போடுகிறார். ஸ்ரீனிவாசன் என்ற பொறியிய்யல் மாணவரும் இது போன்ற ஒரு வழக்கைத் தொடுக்கிறார், நீதியரசர் S.R.Das - அவர் சாதி என்ன என்பதை இங்கே குறிப்பிட்டால்தான் எல்லோருக்கும் தெரியுமா, என்ன..? - உடனே அந்த வழக்கை எடுத்து, எடுத்த வேகத்தில் இட ஒதுக்கீட்டிர்கு எதிர்ப்பான தீர்ப்பை அ(ழி)ளிக்கிறார். வழக்கு உச்ச நீதி மன்றத்திற்கு செல்கிறது. அங்கே உள்ள 'பென்ச்'சில் ஒரு நீதியரசர் மட்டும் இஸ்லாமியர்; மற்றவர் வழக்கம்போல். ஆகவே அங்கும் அதே தீர்ப்பு. இதிலும் ஒரு நல்லது நடந்தது. இத்தீர்ப்புகளுக்கு எதிராக பெரியாரால் தமிழ்நாட்டில் எழுந்த போராட்டமும், தில்லியில் அம்பேத்காரின் முயற்சியாலும் இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டமாக மாறிற்று. நன்றி அந்தப் பெண்மணிக்கு; வழக்கில் தொடர்புள்ள அத்தனை நீதிபதிகளுக்கும்தான்!

அன்று நடந்தது இன்றும் தொடர்கிறது. 2005-ல் நடந்த இனாம்தார் வழக்கில் தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கூடாது என்றும் நம் நீதியரசர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள். சொந்தக் காசில் கல்லூரி நடத்துகிறார்கள் என்ற கோஷம் அவ்வப்போது வரும். ஆனால் வசதியாக, கல்விக்கூடங்களை நடத்துவதால் - அதுவும் இப்போதெல்லாம் அதுவும் ஒரு வியாபாரம்தான் என்பது யாருக்குத்தான் தெரியாது - கல்லூரி நிர்வாகிககளுக்கு அரசிடமிருந்து கிடைக்கும் பல உதவிகள், சலுகைகள் ( tax exemption on land, buildings, vehicles; exemption from land ceiling etc..etc..) மக்கள் தரும் வரிப்பணத்திலிருந்துதான் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள் நம் நீதியரசர்களும், ஏனைய தனியார் கல்லூரிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களும்.

இட ஒதுக்கீட்டை அனுமதித்தால் சமத்துவம் (equality) இல்லாமல் போய்விடும் என்று முற்படுத்திக்கொண்டோர் சொல்லுகிறார்கள். அதுவும் அவர்களது 'விளக்குமாறு போராட்டத்தில்' இந்த 'வசனம்' அடிக்கடி பலர் வாயிலிருந்தும் வந்தது. சமூகத்தில் சமத்துவம் உள்ளதா? இல்லாமலிருப்பின் அதற்குரிய காரணிகள் என்ன? யார்? சமூகத்தில் சமத்துவத்தை மறுப்பவர்கள், சமத்துவம் பிறப்பினாலாயே இல்லை என்பவர்கள் கல்வி வாய்ப்பில் சமத்துவம் பேசுகிறார்கள். சமூகத்தில் சமத்துவத்தைக் கொண்டு வருவதற்காகத்தானே கல்வியில் முடக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியதுள்ளது. இந்திய சமூகத்தில் 5% மட்டுமே ப்ராமணர்கள்; ஏனைய முன்னேறிய பிரிவினர்களையும் சேர்த்தால் இவர்கள் மொத்தம் 15% மட்டுமே. சமூகத்தில் இருக்கும் மக்களுக்கு அவரவர் மக்கள் தொகைப்படி 'விகிதாச்சார இட ஒதுக்கீடு' (proportional reservation) செய்திருந்தால் இன்று இவர்கள் 75முதல் 85% விழுக்காடு வரை ஆக்கிரமித்து இருக்க முடியுமா? ( எங்களிடம் 'திறமை' இருந்ததால் மேலே வந்தோம் என்று யாரும் இந்த இடத்தில் சொல்ல நினைத்தால் கொஞ்சம் பொறுங்கள்.)

வேறொன்றுமில்லை. ஓரளவேனும் இருக்கும் இப்போதைய இட ஒதுக்கீட்டினால் பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர் சிறிது சிறிதாக முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். இதனால்,இட ஒதுக்கீட்டையே ஒழிக்க முயலுகிறார்கள். முற்படுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே உரியது முன்னேற்றம் என்ற "நல்லெண்ணமே" இதற்கெல்லாம் காரணம். ஓட்டப் பந்தயத்தில் தனக்கு முந்திய இடத்தில் இருப்பவனை முந்துவதே ஒவ்வொரு ஓட்டப் பந்தயக்காரனின் முனைப்பாக இருக்கும். ஆகவேதான் சாதித் தரவரிசைகளில் கடைசிப் படிக்கட்டில் வைக்கப்பட்ட தலித்துகளின் முன்னேற்றம் அவர்களுக்கு சற்றே மேற்பட்ட படியில் வைக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கு எரிச்சலை மூட்டுகிறது. இவர்கள் எல்லோரும் ஓரளவாவது முன்னேறுவது இதுவரை முதலிடத்தில் இருப்பவர்களுக்கு எரிச்சலை மூட்டுகிறது.





III. மூன்றாம் பகுதி


திறமையும், இட ஒதுக்கீடும்:

இட ஒதுக்கீட்டின் மூலம் வரும் மாணவர்கள் திறமை இல்லாதவர்களாக இருப்பார்கள்; ஆகவே இட ஒதுக்கீடு கூடவே கூடாது.

தரத்திற்கு முதலிடம் கொடுத்தால்தான் நாடு உண்மையான முன்னேற்றம் காண முடியும். ஆகவே இட ஒதுக்கீடு கூடாது. அதுவும் உயர் கல்வியில் கூடவே கூடாது.

ஏகலைவனும், சம்புகனும்தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறார்கள். ராமாயணமும், மகாபாரதமும் இன்னும் முடியவேயில்லை.

**தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் வெறும் பாஸ் மார்க் வாங்கினாலே போதும்; அவர்களை எங்கள் கோட்டாவில் சேர்த்துக்கொள்ள உரிமை தர வேண்டும் என்று கல்லூரிகள் கேட்ட போது - இப்போது தரம் பற்றிப் பேசுவர்கள் எங்கே போனார்கள்?

**NRI மாணவர்களுக்கும் இதே போல் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி மருத்துவக் கல்லூரி இடங்கள் 'ஏலம்' விடப்படும்போது - இப்போது தரம் பற்றிப் பேசுவர்கள் எங்கே போனார்கள்?
தமிழ்நாட்டைப் பொருத்த மட்டிலுமாவது எல்லோருக்குமே தெரியுமே - உயர் கல்விக்குரிய நுழைவுத்தேர்வுகளில் cut-off மதிப்பெண்கள் எப்படி உள்ளன என்று. இதற்குப் பிறகும் இன்னும் அதே பல்லவியை எத்தனை நாட்களுக்கு 'ப்ரஸ்தாபித்து'க் கொண்டே இருப்பது?

cut-off மதிப்பெண்களில்தான் அதிக ஏற்றத்தாழ்வு இல்லையே; பின் எதற்காக இன்னும் இட ஒதுக்கீடு என்றொரு கேள்வி பலரிடமிருந்து. - இட ஒதுக்கீடு ஏன் என்ற கேள்விக்குரிய பதில் அவர்களுக்குப் புரியவில்லை அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்பதே பொருள்.

1950கள் வரை முற்படுத்திக்கொண்ட சாதியினர் அனைவரும் மிகவும் புத்திசாலிகள், நன்றாகப் படிப்பவர்கள் என்றொரு 'மாயை' இருந்து வந்தது என்னவோ உண்மைதான். ஆனால் இந்த மாயை, 60-களிலேயே சரியத் தொடங்கி, இன்றைக்கு அது முற்றிலுமாகத் துடைக்கப்பட்டு விட்டது. ஆராய்ச்சி, மருத்துவம், நீதித்துறை, ஆடிட்டிங், எழுத்து, ஊடகங்கள், படைப்பாளர்கள் - என்று அவர்கள் மட்டுமே கோலோச்சிய நிலையா இன்று? எல்லோரும், எங்கும் எதிலும் என நீக்கமற நிறைந்திருப்பது மட்டுமின்றி, இன்றைய டாப் - 2 என கருதப்படும் கம்ப்யூட்டர், biotechnology என்ற இரு துறைகளிலுமே முற்படுத்திக்கொண்டோர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர் அனைவருமே சமமான அளவு தங்கள் திறமைகளை காண்பித்துக் கொண்டிருக்கிறார்களே.

'அவனுக்குத்தன் படிப்பு வரும்; இவனுக்கெல்லாம் படிப்பா?' என்ற மமதையான நேற்றைய பேச்சு இன்று செல்லுபடியாகுமா? திறமைகள் எல்லோரிடமும் உண்டு; எல்லோரிடமும் அதற்குரிய ஜீன்கள் உண்டு. அவைகளைக் வெளிக்கொணரத் தேவையானது சாதி அடையாளம் - caste label - இல்லை; வாய்ப்புகள் மட்டுமே. இருட்டுக்குள்ளேயே வைத்திருந்த செடியை வெயிலுக்குக் கொண்டு வந்ததும் வீறுகொண்டு வளருமே, அது போல தாழ்த்தப் பட்டவர்களுக்குக் கொடுக்கப்படும் புதிய வாய்ப்புகள் தரும் உத்வேகங்கள் அவர்களை வேகமாகவே முன்னெடுத்துச் செல்ல வைக்கும். இதுவரை மறுக்கப்பட்ட வாய்ப்புகளைத் தங்கள் உரிமைகளாக அவர்கள் கேட்கிறார்கள். ஆனால் 'விளக்குமாறு போராட்டக்காரர்களோ' அவர்களையெல்லாம் இப்போது இருக்கும் இடத்திலேயே வைக்கவேண்டும் என்ற தங்கள் மன நிலையை, மன வக்கிரத்தைத் தான் காண்பிக்கிறார்கள்.

அவ்வளவு ஏன்? "....இன்னும்கூட அனைத்திந்திய அளவில் வழங்கப்படும் படைப்பாக்கத்திற்கான பரிசு - Innovation Awards - பெறுவோரில் 60-70% பேர் பள்ளிப் படிப்பையே பாதியில் நிறுத்தியவர்கள்" என்கிறார் IIM -A முனைவர் அனில் குப்தா. அப்படியென்றால் IIM-ல் படித்த மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்டால், நம் வரிப்பணத்தில் பெரிய படிப்பு படித்துவிட்டு பெரிய சம்பளத்திற்காக அயல் நாடுகளுக்குப் பயணம் போய்விடுகிறார்கள்.

வரலாற்றிலிருந்து இன்னொரு பக்கம்:

இட ஒதுக்கீட்டை மறுக்கும் முற்படுத்திக் கொண்டோரின் தகுதி, திறமை குறித்து சந்திரபான் பிரசாத் என்பவர் Pioneer நாளிதழில் சில வரலாற்று உண்மைகளைப் பற்றிச் சொல்கிறார்:

" 1858-ம் ஆண்டில் சென்னையில் பட்டப் படிப்பிற்கான கல்லூரி தொடங்கப்பட்டது. இங்கிலாந்திலிருந்து பேராசிரியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததால் கல்லூரியைத் தொடந்து நடத்த முடியவில்லை. ஆங்கிலேய அரசு பட்டப் படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் 'இண்டர்மீடியட்' வகுப்பில் முதலாம், இரண்டாம் தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதைத் தகுதியாக நிர்ணயித்திருந்தது. மேலும் ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
அன்று மேல்சாதி மாணவர்களால் முதலாம், இரண்டாம் தரங்களில் தேர்ச்சி அடைய முடியவில்லை. தேர்ச்சிக்கான 40 மதிப்பெண்ணையும் பெற முடியவில்லை. மேல்சாதியினரின் வற்புறுத்துதலின் காரணமாக ஆங்கிலேய அரசு பட்டப் படிப்பில் சேருவதற்கான தகுதியைக் குறைத்தது. மூன்றாவது வகுப்பில் தேர்ச்சி அடைந்தவர்களும் பட்டப் படிப்பில் சேரத் தகுதி வாய்ந்தவர்கள் என அரசு அறிவித்தது. தேர்ச்சிக்கான மதிப்பெண் 40%-லிருந்து 33% ஆகக் குறைக்கப் பட்டது."
1901-ம் ஆண்டு கல்கத்தாவில் மெட்ரிகுலேசன் தேர்வில் ஆங்கிலப்பாடத்தில் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை 40%-லிருந்து 33% ஆகக் குறைத்திருக்காவிட்டால் 1400க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருக்க முடியாது.

1922-1927-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கல்வி அறிக்கையின்படி மேல்சாதி மாணவர்களில் 45% மருத்துவப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெறவில்லை; 35% மாணவர்கள் பொறியியல் படிப்பில் தேர்ச்சி அடையவில்லை.

ஒரு நூற்றாண்டுக்கு முன் இருந்த தங்களது 'தகுதியற்ற நிலையை' மறந்து உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்ப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து இன்று 'விளக்குமாறு போராட்டம்' நடத்தப்படுகிறது!

all said and done, மேல்குடி மக்களோடு ஒப்பிடும்போது கீழ்மட்டத்தாருக்குத் 'தகுதி'களில் சில குறைபாடுகள் உண்டுதான். இந்த வேறுபாடு நம் ஜீன்களில் இல்லை; நம் வாழ்வியல் முறைகளால் இருக்கிறது. இந்த வேறுபாடு பிறப்பினால் இல்லை; வளர்ப்பினால் இருக்கிறது. பிற்படுத்தப்பட்டோரில் பெரும்பாலுமும், தாழ்த்தப்பட்டோர் கிட்டத்தட்ட முற்றிலுமே வறுமைச் சூழலிலிருந்தே வருகிறார்கள். மேற்படுத்திக்கொண்ட சாதியினரின் குழந்தைகளுக்குக் கிடைக்கும் வீட்டுச் சூழல், ஆயிரக்கணக்கில் பணம் கொட்டிக் கொடுத்து நுழைவுத் தேர்வுகளுக்காய் அவர்களைத் தயார் படுத்தும் பண வசதி - இவைகள் ஏதும் அவர்களிடம் இல்லை. அந்த வசதிகள் இல்லாமல் போனதற்குக் காரணம் - உனக்கு இதுதான் தொழில் என்று பிறப்பிலேயே தண்ணீர் தெளித்துவிட்டு விட்ட சாதீயக் கட்டுப்பாடுகள் தானே காரணம்? இந்தச் சாதீயக் கட்டுப்பாடுகள் எங்கிருந்து வந்தன? வேதங்களிலிருந்துதானே? வேதங்களை அன்றும் இன்றும் கட்டிக் காத்துக் காபந்து செய்து கொண்டிருப்பவர்கள் யார்? பஞ்சாபில் (மற்ற மாநிலங்கள் பற்றித் தெரியாது) 1947 வரையிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நில உடமை தடை செய்யப்பட்டிருந்திருக்கிறது. இப்படி விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட நாட்டில் நில உடைமையைத் தடை செய்து விட்டு, இன்று நீ ஏழை, படிப்பறிவில்லாதவன், என்று கூறி அதோடு உனக்கு அறிவு இல்லை, திறமையும் இல்லை என்று பறையடிப்பதால்தானே பெரும்பான்மையான மக்களின் சமூகக் கோபம் முற்படுத்திக் கொண்டோரின் மீது உள்ளது. Level playing field கொடுத்து ஆட்டத்தை ஆரம்பித்து விட்டு அதன் பின் எழுப்புவோம் திறமை பற்றிய கேள்விகளை.

கடைசியாக, cut-off மார்க்கை சிறிதே குறைத்து இட ஒதுக்கீட்டின் மூலம் இதுவரை பெரும்பான்மையோருக்கு மறுக்கப்பட்டு வந்துள்ளவைகளில் பங்கு (அவர்களின் எண்ணைக்கையின் படி "சிறிய பங்கு"தான்) கேட்கும்போது 'திறமை' பற்றிய அரற்றல் வந்து விடுகிறது. கல்வித்தரம் அதள பாதாளத்தில் வீழ்ந்துவிடும் என்ற ஓலம் கேட்கிறது. 95 மார்க் வாங்குபவனுக்கும், 85 மார்க் வாங்குபவனுக்கும் (அவர்களது வாழ்க்கைச் சூழல், பொருளாதார வேற்றுமை என்பவை பற்றி இப்போது பேச வேண்டாமே) 'திறமை'யில் என்ன பெரிய வித்தியாசம்? சரி, 85 மார்க் வாங்கியவனுக்கு இடம் கொடுத்தாகி விட்டாச்சு; அதன் பின் படிப்பில், தேர்வில் அவன் 95 மார்க் வாங்கியவனுடந்தானே போட்டியிட வேண்டும். அவனுக்கென்று தேர்வுகளில் ஏதும் சலுகை உண்டா என்ன? அவனும் எல்லோரையும் போலவே முறையான தேர்வுகள் எழுதி தேறி வரவேண்டும். பின் end product-ல் தரம் எப்படி குறையும்? பொறியியலில் இட ஒதுக்கீட்டீல் இடம் பெரும் மாணவன் கட்டும் வீடுகளும், கட்டிடமும் ஆடிக்கொண்டே இருக்கும் என்றும், வைத்தியனானால் அவன் பார்க்கும் நோயாளி மட்டும் 'பொசுக்'குன்னு போய்டுவான் என்றும் அறிவற்ற முறையில் பேசுவதை இந்த 'விளக்குமாறு போராட்டக்காரர்கள்' நிறுத்தினால் நல்லது.



IV நான்காம் பகுதி

திரட்டுப் படலம் /Creamy layer:

இதற்கான சுருக்கமான ஓர் ஒற்றைவரிப் பதில்: இது இட ஒதுக்கீடு பெறுபவர்களின் கவலை; இதில் மேற்படுத்திக் கொண்டோருக்கு என்ன வேலை? ஆடு நனைகிறதே என்று இவர்களுக்கு ஏன் கவலை?
மண்டல் கமிஷன் தீர்ப்பில் நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் கூறியது போல்..." "The milk is yet to boil; where is the cream now?"
பிற்படுத்தப் பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மொத்த விழுக்காட்டில் பணக்கார-பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடமெல்லாம் போகிறதே என்று மற்ற ஏழை-பிற்படுத்தப்பட்டவர்கள் கவலைப்படும் நிலை வரும்போது அவர்களே அந்தப் பிரசனையைத் தீர்த்துக் கொள்ளட்டுமே...இதில் 'விளக்குமாறு போராட்டக்காரர்களுக்கு' என்ன வேலை?



V. ஐந்தாம் பகுதி

பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு:

இட ஒதுக்கீடே சமுதாயத்தில் பொருளாதார சமத்துவம் பற்றியதல்ல. சாதீயக் கட்டுகளிலிருந்து விடுதலையும், சமூக நீதி பெறுதலுமே அதன் கோட்பாடு. மேலே சொன்னது போலவே பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்றால் இப்போதைக்கு நடைமுறைப்படுத்த பிரச்சனைகளும் உண்டு. தாழ்த்தப்பட்ட ஒருவர் பன்றி மேய்த்து மாதம் 10,000 ரூபாயும் சம்பாதிக்க முடியும். அதனாலேயே அவர் பிள்ளை இட ஒதுக்கீட்டில் இடம் பெற முடியாதென்றால் அப்படி ஒரு இட ஒதுக்கீடு எதற்கு? மாதச் சம்பளம் பெறும் பலரும் இதில் பலன் பெற முடியாதபடி போய், அதற்குப் பதிலாக, கள்ளக் கணக்கெழுதி பெரும் பணம் சம்பாதிக்கும் மற்றொருவர் இட ஒதுக்கீடு பெற முடியும். ஒவ்வொரு மனிதனின் பொருளாதர நிலையை முற்றாக அரசு அறிந்துகொள்ள - அமெரிக்காவில் உள்ளது போல social security number - ஏதுவாக அரசு திட்டம் கொணர்ந்து அதன் பின் பொருளாதாரத் தகுதி பார்த்து இட ஒதுக்கிடு தரட்டும். அதுவரை இப்போது உள்ள அளவுகோல்களை வைத்தே இட ஒதுக்கீடு தரவேண்டும்.


VI. ஆறாம் பகுதி

தற்போதைய நிலை:

நம் அரசுகள் பார்க்காத போராட்டங்களா? நினைத்திருந்தால் இந்த 'விளக்குமாறு போராட்டங்களை' எளிதில் முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும். மனமிருந்தால் வழியிருந்திருக்கும். அதை விட்டு விட்டு, கண்காணிப்புக் குழு, அறிஞர் குழு என்றெல்லாம் அமைப்பது நமது நாட்டு அரசியல்வாதிகள் ஒரு முடிவுக்கும் வராமல் ஒரு விஷயத்தை இழுத்தடித்து, பிரச்சனையையே மக்களை மறக்க வைக்கும் ஒரு டெக்னிக்தானே!
இப்போதே பல உயர் கல்வி நிலையங்களில் நுழைவுத் தேர்வு முடிந்து விட்டது என்ற காரணம் சொல்லி 2006-2007-ல் இட ஒதுக்கீடு இல்லையென்றாகி விட்டது.அடுத்த ஆண்டுக்கு இன்னும் எத்தனை எத்தனை நொண்டிச் சாக்குகளோ?
அதோடு முற்படுத்திக் கொண்டோரிடமிருந்து பிறந்து அரசால் தத்து எடுத்துக் கொள்ளப் பட்டுள்ள இன்னொரு 'பரிந்துரைப்பு' - உயர்கல்வி நிலையங்களில் உள்ள மாணவர் எண்ணிக்கையை அதிகப் படுத்துவது. சும்மா சொல்லக் கூடாது - இது ஒரு நல்ல ராஜதந்திரம். கீழ்க்கண்ட கணக்கு அதைத் தெளிவுபடுத்தும்.

தற்போது I.I.T.களில் உள்ள மொத்த இடங்கள் : 4000
54% இட அதிகரிப்பில் கூடும் இடங்கள் : 2160
ஆக மொத்த இடங்கள் : 6160
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (4000ல் 27%) : 1080
தாழ்த்தப்பட்டவர்களுக்கு - SC (4000ல் 15%) : 600
தாழ்த்தப்பட்டவர்களுக்கு - ST (4000ல் 7.5%) : 300
B.C. + S.C. + S.T. 27%+15%+7.5%) : 1980 - இது மொத்த 6160 இடங்களில் வெறும் 32%. அதாவது ஏற்கெனவே உள்ள 49.5% யை வெறும் 32% ஆக மாற்றும் நல்ல ராஜதந்திரம். மீதியுள்ள 68%(51%க்குப் பதிலாக) விளக்குமாறு போராட்டக்காரர்களுக்கு!
இந்தத் திறமைகளுக்குப் பஞ்சமேயில்லை நம் விளக்குமாறு போராட்டக்காரர்களுக்கு! இதை விடவும் சட்டத்தை எப்படி தைரியமாக, தந்திரமாக, வெளியே தெரியாதபடி (கமுக்கமாக) தங்களுக்குச் சாதகமாக முறியடிக்கும் trickery-யை இன்னொரு உதாரணம் மூலம் பார்க்கிறீர்களா? இதோ அந்தச் சாதனை........
I.A.S., I.P.S. என்பதற்கான UPSC தேர்வுகள் எந்தக் குழறுபடி இல்லாமல், ஊழல் இல்லாமல் மிகச் சரியாக சிறப்பாக நடந்து வருவதாகத்தான் நானும் பலரைப்போல் நினைத்திருந்தேன் - இந்த வழக்கைப் பற்றிக் கேள்விப்படும்வரை.

Prelims, Mains தேர்வுகளில் வெற்றி பெற்று அதன் பின் நடக்கும் நேர்முகத்தேர்வில் பெறும் மொத்த மதிப்பெண்களை வைத்து rank செய்யப் பட்டு அதில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை OC (open competition) -ல் சாதி எதுவும் பார்க்காது தேர்ந்தெடுக்க வேண்டும். OC quota முடிந்தபின் B.C., S.C., S.T. என்ற சாதிவாரியான மாணவர்களை அவர்களது rankபடி தேர்ந்தெடுக்க வேண்டும்.இதுவே முறை. ஆனால் எத்தனை ஆண்டுகளாகவோ தெரியாது; என்ன நடந்திருக்கிறது என்றால் O.C. என்றால் (F.C. என்ற கணக்கில்) அது முற்படுத்திக் கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே உரியது போல், top rankers-ல் உள்ள Forward Community மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து விட்டு, மற்ற சாதி அடிப்படையான இடங்களுக்கு மட்டுமே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மாணவர்களிலிருந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். They were hoodwinking everybody and kept their portal safe and secure. இதனால் பிறபடுத்தப் பட்டோர் 25%க்கு மேலும், தாழ்த்தப்பட்டோர் மொத்தமே 18%க்கு மேலும் வரமுடியாது. இது ஒரு பயங்கர மோசடி.

கதைபோல் தெரிகிறதா? எனக்கும் அப்படியே தோன்றியது. எப்படி இப்படிப்பட்ட உயர் அமைப்புகளில் விதிகளை இந்த அளவு மீறி (trickery and violation of law) தைரியமாக மிக மிக அநியாயமான ஒரு செயலைச் செய்திருக்க முடியும் எனபது ஆச்சரியமாகவும் கவலைக்குறிய ஒன்றாகவும் இருக்கிறது. எத்தனை பேரின் கூட்டில் இந்தச் சதி நடந்திருக்க முடியும்? இதை எப்போது நம்ப முடிந்தது என்றால்...

க்ளீட்டஸ் என்பவர் UPSC தேர்வுகள் எழுதி GRADE I Officer ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், நடந்தவைகளை வைத்து CAT -Central Administration Tribunal -க்கு ஒரு Original Application ( O.A. - this is equivalent to writ petition ) கொடுத்தார். அஜ்மல்கான் என்ற வழக்கறிஞர் இதை க்ளீட்டஸுக்காக வாதாடினார். நீதிபதி திருமதி பத்மினி ஜேசுதுரை இவ்வழக்கில் UPSCக்கு எதிரான தீர்ப்பளித்தார். இதன் பிறகு விதிகள் கடைப்பிடிக்கப் படுகின்றன என நம்பப் படுகிறது. எப்படிப்பட்ட வடிகட்டிய அநியாயம் என்பதை இந்த வழக்கைப் பற்றி அறிந்த போது உணர்ந்தேன். ஆனால் இப்படி 'வடிகட்டிய' போதும் வெற்றி பெற்ற B.C., S.C., S.T.மாணவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவ்வளவு தடைகளையும் மீறி அவர்கள் பெற்ற வெற்றி அவர்களின் தகுதியின் தரம் பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெளிவாக்குகிறது.

ஆனாலும் இப்போதும் இன்னொரு தடைக்கல் இருப்பதாக நண்பர்கள் மூலமாக அறிகிறேன்: Prelims, Mains - இவைகளில் தேர்வு பெற்று நேர்முகத் தேர்வுக்குப் போகும்போது மாணவர்களை random-ஆக interview boards-ல் ஏதாவது ஒன்றிற்கு அனுப்புவதே சரி. அவர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், அவர்களது சாதி பற்றிய விவரங்கள் ஏதுமின்றி நேர்முகத் தேர்விலும் அவர்கள் மதிப்பிடப்பட வேண்டும் என்பதே சரி.Prelims, Mainsதேர்வுகளில் மாணவர்களின் தனி அடையாளங்கள் எப்படி திருத்துபவர்களுக்குத் தெரியாதோ அதே போலத்தானே நேர்முகத் தேர்விலும் இருக்க வேண்டும். pedagogical principlesகளில் 'halo effect' என்று ஒன்று சொல்வார்கள். மாணவனைப் பற்றிய எவ்வித முன்முடிவுமின்றி அவனது தேர்வுத்தாள் திருத்தப்பட வேண்டும்; இல்லையெனில் மனித மனம் முதலில் மாணவன் மீது திருத்துபவர் கொண்ட முடிவின்படி மதிப்பீடு செய்யும் தன்மை கொண்டதே என்பது இந்த 'halo effect' .
UPSC நேர்முகத் தேர்வுகளில் முதலில் OC. மாணவர்கள் தொடர்ந்து அனுப்பப் பட்டு அதன் பின் ..B.C.,... S.C..... S.T....என்று சாதி வாரியாக வரிசைப்படுத்தப்பட்டே அனுப்பப் படுகிறார்களாம். தேர்வாளர்களாக இருப்பவர்களில் இன்றைய நிலையில் யார் பெருவாரியாக இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாதா என்ன? இம்முறையினால் நேர்முகத் தேர்வுகள் 'halo effect' இல்லாமல் நேர்மையாக இருக்குமா என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

இந்த ஏமாற்று வேலை எத்தனை ஆண்டுகள் நடந்து வருகிறதோ; யாமறியோம். ஆனால் இது பற்றிய முழு விவரமும் இந்த ஏமாற்றை எதிர்த்து பாதிக்கப்பட்டோர் தொடர்ந்த வழக்குக்கள் பற்றிய விவரங்களோடும், முழு விபரத்தோடும் ஷரத் யாதவ் 0-7.07.2006-ல் The Hindu-வில் எழுதிய முழுக்கட்டுரையினை இந்தப் பதிவில் கொடுத்துள்ளேன்.


VII. ஏழாம் பகுதி

முடிவுரை:

ப்ராமணர்களை 'வந்தேறிகள்' என்றார்கள் ஒரு பிரிவினர்; இன்று human genomics பற்றிய ஆராய்ச்சிகளும், DNA பற்றிய ஆராய்ச்சிகள் மூலம் "நாம்' அனைவரும் ஒரே RACE என்கிறார்கள். (ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்? ) எனக்கு இந்த இரண்டாவதுதான் பிடிக்கிறது ! வந்தேறிகள் என்று அழைக்கப்படும் போது வருந்திய, கோபமுற்ற முற்படுத்திக் கொண்டோர் DNA கூற்றினை உண்மையென ஒத்துக்கொள்கிறார்களா?

நம் ஒவ்வொரு சாதியின் 'gene pool' ஒன்றும் water tight compartments இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரே நிலப்பரப்பில் வாழும் எந்த உயிரினங்களுக்குள்ளும் (community) genetic exchange நடந்தே தீரும் என்பது மறுக்க முடியாத உண்மை. இங்கே என்னதான் சாதிப் பிரிவினைகள் என்ற கோடுகள் போட்டு மக்களைப் பிரித்து வைத்திருந்தாலும் , பாலுணர்வுக்கு ஏது வரைமுறைகள். அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது நடந்திருந்தாலும் ஒவ்வொரு சாதிக்குறிய gene pool 100% purity-யோடு இருக்க சாத்தியமேயில்லை. நடுவில் ராமானுஜர் தாழ்த்தப்பட்ட சாதியினரை 'முற்படுத்திய' வரலாறு வேறு உண்டு.

இப்படி வழியில் எவ்வளவோ! என்னென்னவோ !! பின் ஏன் இன்னும் சாதிகளைக் கட்டிக்கொண்டு அழுகிறோம்?! நம் DNAக்களில் இருக்கும் ஒற்றுமைகளை நாம் புரிந்து கொள்ளப் போகும் காலம் எப்போது? விளக்குமாறே உன் கதி; உன் தொழில் என்ற தள்ளப்பட்டு சமூகத்தின் கடைசியில் நிற்கும் ஒருவருக்கும், 'போராளி'யாய் இன்று தெருவில் விளக்குமாறோடு நிற்பவருக்கும் என்ன வேறுபாடு? இரண்டு பேருமே சொந்தக்காரர்கள்தானே !

50, 60 ஆண்டுகளுக்கு முன்பு இது 'சாதிப்புத்தி' என்று ஒவ்வொரு சாதிக்கும் சில 'பண்பு நலன்களை' (??!!)க் கூறுவதுண்டு. இன்று அந்த மாதிரியான பேச்சு ஒருவாறு குறைந்து வந்து கொண்டிருந்தது. இட ஒதுக்கீடு போன்ற பிரச்சனைகள் நம்மை மறுபடியும் 50-60 ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்கு கொண்டு போய்விட்டது.

இன்னும் 2000-3000 ஆண்டுக்கதைகள் எதற்கு? கடந்த 50-100 ஆண்டுகளில் எல்லோருக்கும் பொதுவான வசதி வாய்ப்புகளைப் பெரு வாரியாக ஒரு சிலர் அடைந்து விட்டனர். சாதியின் பெயரில், சாதி உயர்வு சொல்லி அதனால் வந்த வாய்ப்புகள் ஒரு சிலருக்கே கிடைத்து வந்திருக்கிறது. சாதிப் பிரிவினைகளை மட்டுமே வைத்து வந்த வாய்ப்புகள் அவை. வேறு எந்த காரணமுமில்லை. திறமை நம் எல்லோருக்கும் உண்டு. இனியாவது வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும்; உருவாக்க வேண்டும். உருவாக்கப்பட வேண்டும்.ஏற்கெனவே பலன்களை corner செய்துகொண்டவர்கள்தான் இதற்காக முதலில் நேசக்கரம் நீட்ட வேண்டும்; இனியாவது எல்லோரும் முன்னேறினால்தான், எல்லோரையும் முன்னேற்றினால்தான் அது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது; அதுவே முறையானது; மனிதத்தனமானது என்ற உணர்வு வரவேண்டும். வருமா..?

B.C., S.C., S.T., - இவர்களுக்கு ஒரு வார்த்தை:

சமூக நீதி கிடைக்கப் பெறுவதற்குரிய வரலாற்றின் ஒரு திருப்புமுனைக் கட்டத்தில் இருக்கிறோம். பலருக்கும் இட ஒதுக்கீடு, அதனைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான கல்வி, வேலைகளில் இட ஒதுக்கீடு பற்றிய புரிதல் இல்லாமல் உள்ளது; அதனை ஒட்டி நடக்கும் போராட்டங்கள் யாருக்காகவோ, எதற்காகவோ நடப்பது போல் பலரும் இருப்பதாகவே படுகிறது. புரிந்து கொள்வதும், புரியாதவருக்குப் புரிய வைப்பதும் இன்றைய கால கட்டத்தில் ஒரு கட்டாயத் தேவை.

புரிந்தவர்கள், சமூக, பொருளாதார தளங்களில் மேலே வந்து விட்டவர்கள், படித்தவர்கள் - இப்படிப் பலரும் சாதிகளைப் பற்றிப் பேசுவதே தவறென்று நினைத்துக் கொண்டு, தங்களைப் புனித பிம்பங்களாக கருதிக் கொண்டு இட ஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு வலு சேர்க்காதது பெரும் தவறு. எதிர் காலம் அவர்களைக் குற்றம் சொல்லும்.


இனியாவது வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும்; உருவாக்க வேண்டும்.