Sunday, March 18, 2018

976. நல்ல சில சினிமாக்கள் ……….

* * சினிமா பற்றிப் பேச ஆரம்பித்தோமா … அதைப் பற்றியும் சொல்ல நிறைய இருக்கிறது. தமிழனாச்சே … சினிமா இல்லாமல் ஏது அவனுக்குவாழ்வு.

 படிக்கிற காலத்தைத் தாண்டி வேலை பார்க்க ஆரம்பித்த காலத்தில் ஒண்ணு நண்பர்களோடு அரட்டை அடிக்கணும் .. இல்ல … ஏதாவது ஒரு சினிமாவிற்குப் போகணும். வேறு போக்கிடம் ஏதும் கிடையாது. நானும் நண்பன் ஆல்பர்ட்டும் இந்த இரண்டையும் இணைத்து விடுவோம். எப்படியும் வாரத்திற்கு ஒரு சினிமாவாவது பார்க்கணும் என்பது ஒரு எழுதப்படாத விதி. தமிழ்ப்படங்களை விட ஆங்கிலப்படங்கள் அதிகமாக பார்த்திருப்போம். அதற்கு ஒரு காரணம் தமிழ்ப்படம் ஓரளவு அதிக நாள் ஓடும். ஆங்கிலப் படங்கள் ஓரிரண்டு தவிர மற்றதெல்லாம் ஒரு வாரம் கூட ஓடுவதில்லை. அதனால் ஆங்கிலப்படம் பார்க்கும் வாய்ப்புகளும் அதிகம். ரீகல் தியேட்டர் தான் அதற்கெல்லாம் சொர்க்கம். அந்த தியேட்டரைப் பற்றியே நிறைய பேசலாம். (இங்கே பேசியிருக்கிறேன்.)

 ஆனாலும் அப்போதிருந்தே மதுரை ஒரு கிராமிய டவுன் தானே! தியேட்டரே பற்றாது. நன்கு நினைவில் இருக்கிறது. மதுரை சென்னைக்கு அடுத்த மாநகராட்சியாக மாறிய போது வெறும் 14 தியேட்டர்கள் மட்டுமே இருந்ததாக நினைவு.. படம் நிறைய போடுவதற்கு தியேட்டர்களே கிடையாது. எதற்காகடா இந்த ஊருக்கு மாநகராட்சி அந்தஸ்து என்று பேசிக்கொள்வோம்.


 ஒரு நாள் நன்றாக நினைவில் இருக்கிறது. அந்த வாரம் சினிமா ஏதும் பார்க்கவேயில்லை. ஆனால் ஏதாவது ஒரு சினிமா பார்த்தே ஆக வேண்டுமென்று ஒரு கை அரிப்பு. யோசித்துப் பார்த்தோம். நண்பர்கள் சிலர் மீனாட்சி தியேட்டரில் ஒரு மலையாளப்படம் ஓடுது … அந்தப் பக்கமே போயிறாதீங்க என் ஒரு பயங்கர அறிவிப்பு கொடுத்திருந்தார்கள். படத்தின் பெயர்: போஸ்ட் மேனை காணலில்லா … போஸ்ட் மேனைக் காணவில்லை என்று பொருளோ? எப்படித்தான் போரடிக்குன்னு பார்ப்போம்னு தைரியமா அந்தப் படத்திற்கும் போனோம். வெட்டுப்பட்டு வெளியே விழுந்தோம். ஆனாலும் ஒரு ‘கடமையை’ முழுவதாகச் செய்து விட்ட பெருமிதம்!

 ஆனால் சில சமயங்களில் அப்படிக் கண்ணை மூடிக்கொண்டு படம் பார்க்கப் போய் சில நல்ல படங்களைப் பார்த்த நினைவும் உண்டு. தாகம் என்றொரு படம். ஒரு வங்காள நடிகை நடித்திருந்தார். நம்மூர் முத்துராமன் குருடனாக நடித்திருப்பார். அப்போதெல்லாம் படத்தைப் பற்றி ஏதும் அதிகமாக ஊடகங்களில் செய்திகள் அதிகமில்லை. எப்படிப்பட்ட படம் என்று தெரியாது போய் பார்த்தேன். இன்னும் சில காட்சிகள் நினைவில் இருக்கின்றன. அடிக்கடி ஒரு மரத்தைச் சுற்றிப் போடப்பட்ட ஒரு வட்ட திண்டு இருக்கும். படத்தில் அடிக்கடி வந்தாலும் போரடிக்காமல் அந்த இடத்தோடு ஒரு தொடர்பை நாமளே எடுத்துக் கொள்வோம். படம் டைரடர் புட்டண்ணா.. உதவி இயக்குநர் பாரதிராஜா என்று பின்னால் பார்த்த நினைவு. ஆனால் இப்போது இணையத்தில் அந்த செய்திகளைத் தேடி உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இல்லை .. இல்லை…இணையத்தில் கூகுள் சாமி கொடுக்காத விஷயமா… கொஞ்சம் கண்டு பிடித்து விட்டேன். கதாநாயகி நந்திதா போஸ். இயக்குனர் பாபு நந்தன் கோடு. வேறு விவரங்கள் தெரியவில்லை. புட்டண்ணா …பா.ராஜா பற்றி சொன்னது தப்பு. படம் அப்படிப் பிடித்துப் போனது. எவ்வளவு என்றால் கட்டாயம் நாலைந்து நாட்களுக்காவதுஒரு சினிமா என்றிருந்த என்னால் அடுத்த சில நாட்களுக்கு எந்தப் படத்தையும் பார்க்கப் பிடிக்காத ஒரு மன நிலைக்குத் தள்ளப்பட்டேன். சில சமயம் பிடித்த ஒரு இனிப்பைச் சாப்பிட்டு விட்டு அதன் ருசி நாக்கை விட்டு நகராமல், நாமும் அடுத்து எதையும் அந்த சுவை மாறக்கூடாதென சாப்பிடாமல் இருப்போமே … அது மாதிரி அந்தப் படம் எனக்கு ஒரு பெரும் தாக்கத்தை அளித்தது. ஒரு மரத்தைச் சுற்றி ஒரு சிமிண்ட்டால் ஆன திண்டு என்று சொன்னேனே … அதே எபெக்ட் பின்னாளில் இன்னொரு படத்திலும் ஒரே இடம் திரும்பித் திரும்பி வரும். அந்த இடத்தையே நாமும் காதலிக்க ஆரம்பித்து விடுவோம். அது பாலு மகேந்திராவின் மம்முட்டி நடித்த ‘யாத்ரா’. அந்தப் படமும் அழியாத கோலங்கள், வீடு படமும் பாலு மகேந்திராவை ஒரு நல்ல திரைக்கதை அமைப்பாளராக எனக்குக் காட்டியது. பாக்யராஜை இந்த விஷயத்தில் எல்லோரும் தூக்கிப் பிடிப்பது எப்படி என்று எனக்குப் புரிவதில்லை.



 இதே போல் இன்னொரு படம். மலையாளத்தில் நிர்மால்யம் என்னும் படம். பரிசிற்காக எடுத்த படம். நாலைந்து பாத்திரங்கள் மட்டும் உள்ள ஒரு படம். அசையாமல் ஒரு கட்டிலில் படுத்துக் கிடக்கும் ஒரு கிழவர் மிக முக்கியமான பாத்திரம். சிறந்த நடிகருக்கான பரிசு இப்பட்த்தில் நடித்த அந்தோனி என்ற நடிகருக்கு. இவர் அந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான பரிசை வாங்கினார். ஆனால் விழாவிற்கு முன் விழா நடக்கும் இட்த்திற்குப் பக்கத்தில் ஒரு ப்ளாட்பார்மில் ஓரமாக உட்கார்ந்து பீடி குடித்துக் கொண்டிருந்தார் என்று சொல்வார்கள்.

 தனக்கு அரசு வேலை கிடைத்து விட்டது என்று கதாநாயகியைக் காதலிப்பவன் அவளிடம் சொல்லிவிட்டு ஊரை விட்டுப் போவான். ஒரு அகலமான, தண்ணீரே இல்லாத ஆற்றைத் தாண்டி நடக்க ஆரம்பிப்பான். காமிரா ஸ்டான்ட் போட்டு ஆற்றில் ஓரத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அவன் முழு ஆற்றைக் கடப்பது வரை அந்தக் காமிரா அதே கோணத்தில் அதே இடத்தில் அசையாமல் இருக்கும். கதாநாயகன் ஆற்றைக் கடக்கும் போது ஒரு சாவு ஊர்வலம் ஒன்று அவனைக் கடந்து செல்லும். காட்சிப் பொருளாக நம்முன் இவை எல்லாம் கடந்து போகும். கதாநாயகன் ஒரு முறை வீட்டிலிருந்து தன் செருப்பை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பி தெரு முனை போகும் வரை காமிரா ஒரே இடத்தில் அசையாமல் இருக்கும். படத்தைப் பற்றி முழுமையாகத் தெரியாது. பரிசுப்படம் என்பது மட்டும் தெரியும். நான் மட்டும் படத்திற்குத் தனியாகப் போயிருந்திருக்கலாம்.



கடைசி சீனில் கதாநாயகன் – ஒரு கோவில் பூசாரி – கோவிலில் கஷ்டப்பட்டு விழா எடுக்கிறான். கடைசி நாள் தான் தன் மனைவி சோரம் போவதைத் தெரிந்து கொள்கிறான். இத்தனை நாளும் கட்டிலில் படுத்திருக்கும் கிழவர் – கதாநாயகனின் தந்தை – அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரே சாட்சி.





விழாவின் இறுதி நாள். கையில் அருவாளைத் தூக்கு வைத்துக் கொண்டு சாமி ஆடுகிறான். இறுதி சீன். தன் தலையை வெட்டிக்கொண்டு கடவுளின் காலடியில் உயிரின்றி சாகிறான். படம் முடிகிறது. படத்தின் டைரகடர் . எம்.டி. வாசுதேவன் நாயர்.





 நான் என் நண்பன் ஒருவரையும் அவனது நண்பர்கள் சிலரையும் கிளப்பி விட்டுப் படம் பார்த்து வந்தோம்.மதுரை லட்சுமி தியேட்டர். படம் முடிந்து மெளனமாகத் திரும்பி வந்தோம். தியேட்டரிலிருந்து ஏறத்தாழ ஐம்பது மீட்டர் தாண்டி இருந்த கடையில் சிகரெட், டீக்காக நின்றோம். நான் மெல்ல படம் நன்றாக இருந்துதில்ல … என்று பேச ஆரம்பித்தேன். எல்லோரும் அடிக்க வந்தார்கள்.அடப்பாவி … வேறுபடம் கிடைக்காமல் இந்தப் படத்துக்கு எங்களை ஓட்டிட்டு வந்துட்டியா …? காமிரா மேன் காமிராவை வைத்து விட்டு அவர் பாட்டுக்கு டீ குடிக்கப் போய்றாரு … நல்ல படமான்னு தகராறு செய்தனர். ஒருத்தர் மட்டும் அந்தக் கடைசி சீன் மட்டும் நல்லா இருந்தது என்றார்.


நமக்கு அது பத்தாதா? இங்க பாருங்க… படம் பாத்துட்டு வழக்கமா எதையாவது ஜாலியா பேசிக்கிட்டே நடந்து வருவோம். நாம் மட்டுமல்ல .. தியேட்டர் விட்டு வரும்போது யாரவது ஏதாவது பேசிக்கொண்டு வந்தது மாதிரி பார்த்தீங்களா? எல்லோரும் பிரம்மை பிடிச்சி வெளியே வந்தாங்களா இல்லையா? அந்தக் கடைச் சீனுக்கான பில்டப்பு தான் இந்த முழுப்படம் என்றேன்.

அவர்களுக்கு நான் சொன்னதை முழுவதுமாக ஒப்புக் கொள்ளவும் முடியவில்ல. அட போப்பா இல்லைன்னு சொல்லவும் முடியவில்லை. 


அழகான படம்.






 *

975. I.S.L. 2018 - FINAL

* ஏனென்றே தெரியவில்லை .. இந்த சீசனின் I.S.L. விளையாட்டு எதையும் பார்க்கவே இல்லை. சரி .. கடைசி நாள் ஆட்டத்தையாவது பார்த்து விடுவோம் என்று நேற்று – 17.3.18 – உட்கார்ந்தேன். என்னவோ முதல் பத்து நிமிடத்தில் இறுதியாட்டத்தில் இருக்க வேண்டிய ‘fire’ எதுவும் இல்லை. அதிலும் சென்னையின் தற்காப்பு மிக மோசமாக இருந்தது. அதகேற்றது போல் முதல் கோல் ஒன்றும் பெண்களூரு அணி போட்டது. அதன்பின் சென்னையின் அணியின் ஆட்டம் சூடு பிடித்தது. அதோடு, இந்தியாவில் கொல்கத்தா, கோவா கேரளா என்ற மூன்று மாநிலங்கம் மட்டுமே கால்பந்தில் அதிக ஆர்வம் காண்பிக்கின்றன.அந்த மாநிலங்களில் ஏதும் இறுதிக்கு வரவில்லை என்பதே ஏமாற்றமாக இருந்தது. அதோடு பெண்களூரு குழுவில் சேத்திரி விளையாடியதும் பொருந்தாமல் இருந்தது. சென்ற ஆண்டு I.S.L. பற்றி எழுதும் போது நம் நாட்டு வீரர்களும் அயல்நாட்டு வீரர்களும் ஏதோ ஒரு விழுக்காட்டில் இருக்க வேண்டும். நமது நாட்டு ஆட்டக்காரர்களுக்குப் போதுமான விழுக்காடு ஒவ்வொரு அணியிலும் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்தேன். இந்த ஆண்டு இன்னொரு ஐடியாவும் தோன்றுகிறது. ஒவ்வொரு மாநில அணியும் போட்டியில் பங்கேற்க வேண்டும். ஒவ்வொரு அணியிலும் முதலில் 40 விழுக்காடாவது நமது நாட்டு வீரர்கள் விளையாட வேண்டும். அந்தந்த மாநில விளையாட்டு வீரர்கள் அந்தந்த மாநிலத்தில் மட்டும் விளையாட வேண்டும். இப்படி ஓர் ஒழுங்கைக் கொண்டு வந்தால் தான் நம் நாட்டு வீரர்களுக்கு விளையாட இடமும், வசதியும் கிடைக்கும். அதன் மூலமாக மட்டும் தான் கால் பந்து விளையாட்டிற்கு ஊக்கத்தைக் கொடுக்க முடியும். எல்லோரும் வேற்று நாட்டவர்கள் அல்லது வேற்று மாநிலத்தவர்கள் என்றால் அது மாநிலப் போட்டியாக இருக்காது. சென்னையின் அணி வென்றிருக்கலாம், ஆனால் அதில் எத்தனைபேர் நம் மாநிலத்து வீரர்கள் இருந்தனர்? Dhanpal Ganesh மட்டும் நம் ஊர் பெயராகத் தெரிகிறது. என் மாநில முகங்களோ, வீரர்களோ இல்லாவிட்டால் நான் எதற்காக என் மாநிலத்திற்கு ‘விசில்’ அடிக்கப் போகிறேன்? முதல் கோலிற்குப் பிறகு ஆட்டம் சுறுசுறுப்பாக நடந்தது. சென்னை அணி 3:2 என்ற கணக்கில் வென்றது. எப்படியோ .. இந்த ஆண்டு உலகக் கோப்பை ஆட்டம் இருக்கிறது. உட்கார்ந்து பார்க்க வேண்டும். இரண்டரை மணி நேரம் நாம் முன்னால் இருக்கிறோம். அதனால் தூக்கம் கெடாமல் எல்லா ஆட்டங்களையும் காண முடியுமென நினைக்கின்றேன். போன தடவை மாதிரி ப்ரேசில் வரிசையாகக் கோல் வாங்கி கேவலமாக வெளியேறியது போல் இல்லாமல் நன்கு விளையாட வேண்டும். அதிலும், நெய்மர் காலில் அறுவைச் சிகிச்சை முடிந்து நல்ல படியாக விளையாட வரவேண்டும். ப்ரேசில் போன தடவை தோற்றது மிகக் கேவலமாக இருந்தது. பார்க்கலாம் …. , *

Monday, March 05, 2018

974. அசோகர் நூலைப் பற்றி தெக்கா - நான்காம் பாகம்





*

பேரரசன் அசோகர்: பகுதி-3 

வாங்கி கிடப்பில் போடு (அஜந்தா)


புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வட அமெரிக்கா பூமியில் இரத்தக் களரி ஆட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதே கால கட்டத்தில் தான் கிழக்கிந்திய கம்பெனியும் பெருமளவில் இந்திய துணைக் கண்டத்தில் ஆக்கிரமித்து அவர்களுக்குத் தேவையானதை செய்து கொண்டது போக, நம்முடைய சமூக சீர்திருத்தத்திற்கும் அரும்பணி ஆற்றி இருக்கிறார்கள்.
இது போன்ற பண்டைய கால வரலாற்று புத்தகங்கள் படிக்கும் பொழுது வெளித் தெரியாத பலப்பல விடயங்கள் பல துறைகளிலும் நிகழ்த்தப்பட்டிருப்பதாக தெளிவாகிறது.
கிழக்கிந்திய கம்பெனியின் வழியாக வேலைக்கென இங்கு வந்த வெள்ளையர்கள் அவர்களுக்கிட்ட பணியைத் தாண்டி தங்களது ஓய்வு நேரத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நம்முடைய துணைக்கண்டத்திற்கான பண்டைய வரலாற்றை மண்ணிலிருந்து மீட்டெடுத்து நமக்கான சுவடுகளை அறியத் தந்திருக்கிறார்கள்.
உதாரணமாக ஒருவர் நாணயங்கள் தயாரிப்பு அல்லது நில அளவை செய்வதற்கென வந்தவர் இங்கு காணும் பழைய காலத்து சிதிலமடைந்த குடைக் கோவில்கள், சிலைகள், ஓவியங்களை பார்த்து மலைத்துப் போய் அதன் வழியில் தங்களுடைய மொழித் திறமையை வளர்த்து ஒரு தொல்லியல் துறை நிபுணனுக்கேயான வழியில் தங்களை பட்டை தீட்டி மொழி பெயர்ப்பில் ஈடுபட்டு கிடைக்கும் தடயங்களை சேமிப்பு செய்திருக்கிறார்கள்.
அவர்களுடைய உழைப்பைப் பற்றி வாசிக்கும் பொழுது பெரும் பெருமூச்சும் ஒரு விதமான வெட்கமுமே எஞ்சி நிற்கிறது. அந்த கால கட்டத்திலும் வேத விற்பன்னர்கள் தங்களுடைய மொழியை தங்கள் சுற்றத்தை தாண்டி வேறு யாருக்கும் கற்றுக் கொடுக்க தயாராக இல்லை என்பதும், கிடைக்கும் தரவுகளை அவர்களிடத்தில் காட்டி அதனையொட்டி கேள்விகள் எழுப்பினால் மழுப்பலான பதிலுமாக கொடுத்திருந்திருக்கிறார்கள்.
இந்த பகுதியில் அஜந்தா குகை கோவில்களை கண்டெடுப்பதற்கு முன் அங்கே செல்வதற்கே அச்ச மூட்டும் வகையில் புலிகளின் நடமாட்டம் மிக்க பகுதி என்றும்சொல்லப்பட்ட, பல நூற்றாண்டுகளாக கண்டு கொள்ளாமல் விடப்பட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களும், கல்வெட்டுகளும், சிற்பங்களும், ஓவியங்களுமென நிரம்பிக் கிடந்த ஏகாந்தமான புதையல் பகுதியான அஜந்தா குடைக் கோவில் பகுதியை கண்டெடுத்திருக்கிறனர்.
அந்தப் பகுதியை அடைய கால் நடையாக நடந்து ஒரு குடைவுப் பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு செல்ல மரங்களில் ஏறியும் பார்த்து நகல் எடுத்திருந்திருக்கிறார்கள். அவைகளை பிரிதொரு சமயம் உரியவர்களிடம் கொடுத்து...
//...அலெக்சாண்டர் பேசிய பின் ஆறு மாதங்கள் கழித்து காப்டன் க்ரெஸ்லி(2) என்பவரும் ரால்ஃப்(3) என்பவரும் அஜந்தாவைக் காணச் சென்றனர். அவர்கள் அங்கிருந்த கல்வெட்டின் நகல்களைக் கொண்டுவந்தார்கள். இந்த நகல்களை பெனராஸில் உள்ள பிராமணப் பண்டிதர்களிடம் கொடுத்தும், அங்கிருந்த கல்லூரியின் செயலரிடம் கொடுத்ததும், எப்பயனும் இன்றிப் போனது ...//
வாங்கி கிடப்பில் போட்டிருக்கிறார்கள். சில இடங்களில் செய்தி தரவுகளைக் கூட கொடுக்க மறுத்திருக்கிறார்கள். காலனிய ஆராய்ச்சியாளர்களின் உழைப்புதான் இங்கு மெச்சுதலுக்குறியது. ஏனெனியில் இத்தனை தவிர்ப்புகளையும் தாண்டி தொடர் முயற்சியின் மூலமாக வட மொழி கற்றுக் கொண்டு தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைப்பனவற்றை ஏனைய பகுதிகளில் வேலை பார்க்கும் அதே ஆர்வமுடையவர்கள் கண்டெடுத்த தரவுகளுடன் ஒப்புமை படுத்தி ஒரு நேர்த்திக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
அசோகர் காலத்து ஸ்தூபா ஒன்று இடித்து தரைமட்டமாக்கியது போக எஞ்சிய பகுதிகளை புபனோஷ்வரின் ஓர் ஆலயத்திற்கு அருகில் இருப்பதாக அறிந்து செல்கிறார்கள். வனப்பகுதியில் இடிந்த நிலையில் ஒரு சிங்கத்தின் தலையும் தோள்பகுதியும் கிடப்பதையும் அருகிலேயே அந்த தூணின் சில பகுதிகளும் கண்டு அருகில் உள்ள ஆலய நிர்வாகிகளிடம் அது பற்றி பேசப் போக அவர்கள் இந்த ஆராய்ச்சியை இத்தோட விட்டு விடுங்கள் என்று கேட்டுக் கொண்டதிற்கு இணங்க அந்த தடயம் தாண்டி செல்லப் பட்டிருக்கிறது.






இதிலிருந்து நமக்கும் தெரிய வருவது என்ன வென்றால், எங்கிருந்தோ வந்தவர்கள் நம்முடைய வரலாற்றை தோண்டித் துருவி விடுகதையாக விடயங்களை அவிழ்த்துக் கொண்டிருக்கும் பொழுது எதற்காக இங்கேயே இருப்பவர்கள் அதனை மறைக்க எண்ணி குறுக்கே விழுந்திருக்க வேண்டும்? இப்படியான குறுக்கே விழுந்து அரசியல் செய்த கதைகள் வரிசையாக அணி கட்டி இந்த புத்தக்கத்தில் வெளி வருகிறது.