Thursday, August 28, 2014

785. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்






*




 சில மாதங்களுக்கு முன் ஒரு மருத்துவரைப் பார்க்கப் போயிருந்தேன். சின்ன நோவு. ஒரு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றார். நோயின் நிலை குறித்து எனக்கு விளக்கம் சொல்லி விட்டு, மருந்துச் சீட்டு எழுதிக் கொடுதார். அவருடைய பீஸ் எவ்வளவு என்று கேட்டு, கொடுத்தேன். பணத்தை வாங்கி உள்ளே போட்டவர் மேசையின் மேலிருந்த சில உறைகளில் ஒன்றைத் தேடி எடுத்து என்னிடம் கொடுத்தார். ’என்ன இது?’ என்றேன். ’நீங்கள் ஸ்கேன் எடுத்ததற்காக அவர்கள் எனக்குக் கொடுத்த கமிஷன். வழக்கமாக இதை நான் அவரவர்களிடம் கொடுத்து விடுவேன்’ என்றார்.

 இப்படி ஒரு டாக்டர்.

 கமிஷன் வேண்டாமென்றால் அதுவும் ஸ்கேன்காரர்களிடமே போய் விடும். அதை வாங்கி நம்மிடமே கொடுப்பதே அவர் வழக்கமாம். அவர் பெயரைச் சொன்னாலும் இந்த நல்ல விஷயம் முடிவுக்கு வந்து விடும்.

*****

ஆனால் இன்னொரு டாக்டர் பெயர் கேட்டாலும் சொல்வேன். தனது மருத்துவ மனையில் கிருபானந்த வாரியாரின் படம் தொங்கும். அவருக்காகவே தான் இந்த ‘சேவையைத்’ தொடர்ந்து செய்வதாக என்னிடம் சொன்னார். ஆனால் என் முதல் heart attackற்குப் பிறகு இரு முறை அவரது ‘சேவை’ நாடிச் சென்றேன். இரண்டாம் முறையே நன்றாக அவர் முகத்துக்கெதிரேயே சில கேள்விகள் கேட்டேன். ’உங்கள் சேவை’ இன்னும் பலருக்குக் கட்டாயம் heart attack வர வைத்து விடும்’ என்று சொல்லி விட்டு வந்தேன்.

இப்படியும் ஒரு டாக்டர்!

******

எங்கள் கல்லூரி சுயாட்சிக் கல்லூரி. நாங்களே கேள்வித்தாள் எடுத்து, நாங்களே திருத்தி மதிப்பீடு செய்ய வேண்டும். இம்முறையில் ஆசிரியர் ட்யூஷன் எடுப்பது போன்றவை மிகவும் தப்பானவை.முன்பு என் மைத்துனன் இப்படி ஒரு ஆசிரியரிடம் ட்யூஷன் எடுத்திருப்பான் போலும். சில நாட்களுக்குள் அவன் என் உறவினன் என்பது அவருக்குத் தெரிய வர அவனை நீ வரவேண்டாம் என்று சொல்லி நிறுத்தி விட்டார். மைத்துனன் என் தங்க்ஸிடம் ‘உங்க ஆளால் எனக்குல்ல நஷ்டம்’ என்றானாம்.

இன்னொரு முறை கேள்வித்தாளைக் காசு கொடுத்து வாங்கிய ஒரு மாணவன் மற்ற நன்கு படிக்கும் சில மாணவர்கள் மூலம் என்னிடம் மாட்டிக் கொண்டான். நேரே கல்லூரித் தலைவரிடம் சென்றேன். அவர் புது விதமான தண்டனை ஒன்று சொன்னார் - பையனைத் தண்டிப்போம் என்றார். பையன் புத்திசாலி ... எந்த வாத்தியார் எப்படி என்று தெரிந்து அவரிடம் சென்றிருக்கிறான். இங்கே குற்றவாளி ஆசிரியர். அவரைத் தண்டிக்காமல் மாணவனைத் தண்டித்தால் நான் அவன் பக்கம் நிற்பேன் என்றேன்.

*****

பக்கத்தில் ஒரு பள்ளியில் ஒரு மாணவன் பணம் கொடுத்து அவனுக்கு வேண்டிய ஆசிரியரை 12ம் இறுதித் தேர்வுக்கு supvervisionக்கு வரவைத்து, அறை மாணவர்கள் அனைவரும் காப்பி அடித்தார்கள் என்று கேள்விப்பட்ட போது, ‘இது போன்ற ஆசிரியர்கள் பேசாமல் ..... செய்து காசு சம்பாதிக்கலாமே!’ என்றேன்.

இப்படியும் சில ஆசிரியர்கள்.

******

நேற்று whats upல் ஒரு audio clipping ஒன்று வந்தது. ’நீயா .. நானா’ நிகழ்ச்சி பற்றி யாரோ ஒரு டாக்டர் பேசியிருக்கிறார்’’  அதில் பல மருத்துவ தொடர்பான வார்த்தைகளைப் போட்டுப் பேசியதால் அவர் ஒரு மருத்துவராக இருக்கலாம் என்று அனுமானித்தேன். .மற்றபடி அது ஒரு பண்பட்ட மருத்துவரிடமிருந்து வந்த வார்த்தைகள் அல்ல. மிகவும் தரம் தாழ்த்திப் பேசினார்.கோபியின் தொப்பையிலிருந்து எல்லாவற்றையும் ‘குழாயடிச் சண்டையில்’ பேசுவது போல் பேசினார். அல்லது ஒரு வேளை மருத்துவர்களிடமிருந்து சில வார்த்தைகளைப் போட்டு யாரோ ஒரு ஆள் அப்படி தரம் கெட்டும் பேசியிருக்கலாம்.

 விஜய் டிவியின் TRP  பற்றி அதிகம் கவலைப்பட்டார். இதைப் போல் தானே மருத்துவ பில்களைப் பார்க்கும் போது மக்களுக்கும் இருக்கும் என்று அவர் நினைக்கவில்லை.

******

 எங்கள் குடும்ப டாக்டரும், டாக்டரம்மாவும் எங்கள் குடும்பத் தோழர்கள் போல் உள்ளனர். வீட்டு விஷயங்கள், பிள்ளைகள் விஷயங்கள் வரை எல்லாம் பேசுவோம். டாக்டரம்மாவின் பருத்திச் சேலைகள் மீது தங்க்ஸிற்கு எப்போதும் ஒரு கண்!

******

உலகமயமாக்கலின் தொடர்புடையதாக மருத்துவம் ஒரு தொழிலாக, சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் - it is a pucca business - மாறி விட்டது. இதை நீயா நானில் வந்த மருத்துவர்களே ஒப்புக்கொண்ட விஷயம். ஒப்புக்கொண்டார்களோ இல்லையோ... அது தான் உண்மை என்பது நன்கு தெரிந்த விஷயம்.

ரமணா கதையில் வருவது போல் கோமாவில் இருந்த ஒரு உறவினனை மருத்துவ மனையிலேயே வைத்திருந்து..... சில லட்சங்கள் கைமாறின. 

தேவையில்லாத அளவிற்கு மாறி மாறி மருத்துவ சோதனைகள், அதுவும் மருத்துவர் சொல்லும் சோதனைச் சாலைகளில் மட்டும். மதுரையில் உள்ள பெரிய மருத்துவ மனையில் இரு முறை சர்க்கரை அளவிற்கு சோதனியிட்ட போது இரு முறையும் 120 தாண்டியது. அச்சத்தோடு பக்கத்திலிருந்து சிறு சோதனைச் சாலையில் பார்த்தேன். 100தான். feed back கொடுத்தேன். என்ன பயனோ? அடுத்த முறை போகும் போது தான் தெரியும்.

எல்லாவற்றையும் விட குழந்தைப் பேறு மருத்துவர்கள் ஒரு தனி சாதி போலும்! என் மகளுக்கு தேவையில்லாமல் அச்சம் ஊட்டிய டாக்டரம்மா பெரிய மருத்துவ மனை வைத்திருந்தார்கள். முதல் முறையோடு அந்த டாக்டர் வேண்டாமென்று முடிவெடுத்தோம். அவர்கள் அச்சமுறுத்தியது போல் ஏதுமில்லை.



*******

ஒரு ஆசிரியன் தவறுதலாக நடக்கிறான் என்று சொன்னால் அதை இன்னொரு ஆசிரியனாக என்னால் அதை முழுமையாக ஒத்துக் கொள்ள முடியும். ஆம் .. அவன் தவறு செய்திருக்கிறான் என்று என்னால் தலை நிமிர்ந்து சொல்ல முடியும். திருத்தப் பட வேண்டும்; தண்டிக்கப்பட வேண்டும் என்று நிச்சயம் உறுதியாகச் சொல்வேன்.

அதை விட்டு விட்டு, அவனும் நானும் ஒரே ‘ஜாதி’ என்ற ஒரே காரணத்தால் நான் அவனை நல்லவன்; ஆசிரியர்கள் என்றாலே கடவுளோட ஜாதி... தொழிலும் மிகுந்த உயர்வான தொழில் ... அப்படியே நாங்கள் எங்கள் மாணவர்களை mould செய்கிறோம் ... அவர்களை எப்படி நீ குறை சொல்லலாம் என்று நான் கூரை மீதேறி கத்தினால் ....

நான் நல்ல மனிதனல்ல.


 *******

After Dr. Bruno's accusation that i had given a fiction regarding a doctor who gave me the commission ...

Sorry, tamil font does not work properly now. So in English.
// பெரும்பாலான மருத்துவர்கள் பணத்தின் மேல் ஆசைப்படுவதில்லை.
தங்களிடம் வருபவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கிறார்கள்//

They give very nice medical certificates too for a handsome money. Our class time was between 8 to 12 noon. Between 9-10 I had an internal test – which carries weight in the internal assessment. A student didn’t turn up. Normally I never go for certificates for giving a retest. Not knowing my practice, a student came with a certificate from a govt doctor. He had certified that the boy had chest pain and was treated by him. The poor boy had attended classes in the other three periods. I sent a letter ‘appreciating’ the doctor for his miraculous treatment, which cured the boy’s chest pain within an hour since he was able to attend his classes very immediately.

This may too be considered by my very well educated blogger friend Dr. Bruno as a “fiction”. He can hold on to that since I don’t have any evidence with me now for that incident which took place nearly some 20 or 25 years back.


Friday, August 22, 2014

784. படம் பார்க்கப் போன வரலாற்று நிகழ்வு









*




 சவாலே சமாளி. சிவாஜி; ஜெயலலிதா.முதல் நாள். மதுரை தேவி தியேட்டர். (இராதாகிருஷ்னன் பார்த்திபனாக இல்லாமல் வெறும் பார்த்திபனாக இருந்த போது ’ஹவுஸ் புல்’ அப்டின்னு ஒரு படம் எடுத்தாரே, அந்த தியேட்டர் தான்.) முதல் நாள் மாலை படம் போகலாம்னு நண்பன் ஆல்பர்ட் சொன்னான். அதெல்லாம் வேண்டாண்டா... யாரு அடி வாங்குறது. பிறகு பார்த்துக்கலாம் அப்டின்னேன். நான் டிக்கெட் வாங்கிர்ரேன்... வா’ன்னு இழுத்துட்டுப் போனான். 


கிழக்கு மேற்காகப் போகும் ரோட்டில் அந்த தியேட்டர் இருந்தது. தியேட்டரும் கீழ் மேலாக இருந்தது. ரோட்டிலிருந்து 100 மீட்டர் நீளம் தாண்டி தான் தியேட்டர். அந்த 100 மீட்டரும் ஒரு ரோட் மாதிரி நீளமாக தியேட்டருக்குள் போகும்.இந்தச் சாலையின் இரு பக்க ஓரத்தில் சுவர் ஓரமாக ஒரு ஆள் போகும் அகலத்தில் கம்பி வைத்து வரிசையாக டிக்கட் வாங்க கட்டி இருப்பார்கள். தலைக்கு மேல் தகரம் போட்டிருக்கும். மெயின் கேட்டை மூடி இரு காவலர்கள் நிற்பார்கள். அந்த மெயின் வாசல் வரை டிக்கெட் வாங்க அதில் வரிசையாக ஆட்களை நிறுத்தி இருந்தார்கள். மெயின் கதவுக்கு வெளியே ரோட்டில் ஜே..ஜே ..ன்னு கூட்டம்.

மெல்ல கேட் வரை நானும் ஆல்பர்ட்டும் போனோம். எனக்கு அவ்வளவு தான் தைரியமிருந்தது. போதும்டா... வா போய்டுவோம் அப்டின்னேன். கொஞ்சம் பொறு; C.T.O. (commercial tax office அப்டின்னு சொல்லிப் பார்க்கிறேன் என்று சொல்லி திடீரென்று கூட்டத்திலிருந்து எல்லாவற்றையும் தள்ளிக்கொண்டு போவது போல் வாயில் காப்பான் பக்கதில் போய் விட்டான். என்னமோ பேசினான். கதவைத் திறந்து உள்ளே விட்டு விட்டார்கள். எல்லோரும் வரிசையில் நிற்கும் போது இவன் மட்டும் நேரே தியேட்டர் வாசலுக்குப் போய் விட்டான். அங்கே ஒரு பெரிய கதவு இருக்கும். அங்கே போனான் ... அடுத்து உள்ளே போய்விட்டான்.

கொஞ்ச நேரம் ஆளைக் காணோம். எனக்கு என்ன பயம்னா ... ஆல்பர்ட் பயலுக்கு இத்தனூண்டு உடம்பு. ஆளும் குட்டை; சின்ன உருவம். இவன் உடம்புக்கு C.T.O. அப்டின்னு சொன்னாலும் யார் நம்புவார்கள்... உள்ளே விட்டு ’மாட்டிறக் கூடாதேன்னு’ எனக்குப் பயம். கொஞ்ச நேரம் ஆளைக் காணோம். டிக்கெட் குடுக்க ஆரம்பித்தார்கள். பாதி வழி வந்து, அங்கிருந்து என்னைப் பார்த்துக் கையைக் காண்பித்தான். நானும் அப்படியே உள்ளே போய் விட்டேன். இப்படி முதல் நாள் ஒரு படம் பார்த்தோம்.

அடுத்த முறையும் இதே போல் சினிமா முதல் நாள் போவோம் என்றான்.  நான் வரமாட்டேன் என்று சொல்லி விட்டேன். ஏனென்றால் ஏதோ அந்த தியேட்டர் ஆளுக அவன நம்பிட்டாங்க ... எப்படித்தான் நம்பினார்களோ! அடுத்த தியேட்டர்லயும் இதே போல் சொன்னா என்ன ஆகுமோன்னு பயமா இருக்குடான்னு சொல்லி அவனையும் தடுத்து நிறுத்தி விட்டேன். அப்போவெல்லாம் தியேட்டர்னா கூட்டமோ .. கூட்டம். அதில் இப்படிப் படம் பார்த்ததெல்லாம் ஒரு பெரிய adventure தான்!

இது பழைய்ய்ய்ய கதை. ஆனால் புதிய கதை என்ன தெரியுமா?

சில படங்களை மட்டும் தியேட்டரில் பார்க்க ஆசை. பொதுவாக அவை எல்லாம் இயக்குனர்களை வைத்து கொடுக்கும் முன்னுரிமை. சமீபத்தில் வந்தவற்றில் ஜிகர்தண்டா, சதுரங்க சூதாட்டம் இரண்டையும் பார்த்தேன் - வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த இரு தியேட்டர்கள். எளிதாகப் போயிற்று. இன்னொரு படமும் இயக்குனர் வைத்து பார்க்க நினைத்தேன். தொலைவில் தியேட்டர்கள் இருந்ததால் இன்று .. நாளை .. என்று தள்ளிப் போனது. சென்ற வியாழக்கிழமை படம் பார்த்து விட முடிவு செய்தேன். அடுத்த நாள் படங்கள் எல்லாம் மாறி விடுமேன்னு நினைத்தேன். ஆனால் மதியம் தூக்கம் கண்ணைக் கட்டியது. சரி ஒரு மணி நேரம் மண்டையைப் போடுவோம்னு நினச்சி நாலு மணிக்குப் படுத்தேன். ஆனால் எழுந்த போது மணி 5.30.

இனி எங்கே போவது என்று நினைத்து, தங்ஸிடம் சினிமா போகலாம்னு நினச்சேன்; தூங்கிட்டேன் என்றேன். தங்ஸிற்கு நான் பார்க்க நினைத்த படம் தெரியும். ’ஏம்’பா இனிமே போக முடியாதா’ன்னு கேட்டாங்க. அது எனக்கு ஒரு கிரியா ஊக்கியாகிப் போனது. போய்ட்டு வந்திருவோம்னு நினச்சி புறப்பட்டேன். மணி 5.45

நான் இருந்தது மதுரைக் கிராமத்தின் மேற்குக் கடைசி. நான் படம் பார்க்க நினைத்தது கிழக்குக் கடைசி. முன்பு ஒரு நல்ல படம் - ஆரண்ய காண்டம் - படம் பார்க்கப் போனேன். படமும் நன்றாக இருந்தது; தியேட்டரும் நன்றாக இருந்தது; இடைவேளையில் சாப்பிட்ட குல்ஃபி ஐஸ் க்ரீமும் நன்றாக இருந்தது. இதனாலேயே அந்தத் தியேட்டருக்குப் போக வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

நடுவில் பெட்ரோல் வேறு போட வேண்டியதிருந்தது. அடிச்சிப் பிடிச்சி தியேட்டருக்குப் போனேன். எப்படியும் பத்துப் பதினைந்து நிமிடம் போயிருக்கும் என்று நினைத்து தியேட்டருக்குப் போனேன். வாசலில் இருந்த இளம் வயதுக் காப்போன் படம் இன்னும் ஆரம்பிக்கவில்லை; இன்னும் டிக்கெட்டும் கொடுக்கவில்லை என்றார். ஏன் என்றேன். பத்து இருபது பேராவது வந்தால் தான் படம் என்றார்.எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்றேன். இரண்டு தியேட்டர் அங்கே. ஒரு ஆங்கிலப்படத்திற்கு ஒரு பையனும், இன்னும் இரண்டு மூன்று இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் எந்தப் படத்திற்கு வந்திருந்தார்களோ.. தெரியவில்லை. எப்படி ரொம்ப தூரத்திலிருந்து வேகமாக வந்தேன் என்று சொன்னேன். என்ன நினைத்தாரோ மெல்ல போய் டிக்கெட் கொடுப்பவரிடம் ஏதோ கேட்டார். பின்பு என்னிடம் வந்து சார்.. ’அந்தப் படம் அபிராமி தியேட்டரில் ஓடுகிறதாம். அங்கேயே போய் விடுங்களேன்’ என்றார்.

வீட்டுக்குப் போகலாமா தியேட்டருக்குப் போகலாமான்னு நினைத்தேன். நடந்தது நடந்து போச்சி. அந்த தியேட்டருக்கே போய் விடலாம்னு நினச்சி புறப்பட்டேன். இதிலும் ஒரு சந்தேகம் ... இந்த அபிராமி தியேட்டர் எங்கே இருக்குன்னு...அம்பிகா / அமராவதி என்ற இரு தியேட்டர்கள் உண்டு. ஆனால் எது எங்கே என்பது பற்றிய சந்தேகம் அது. சரியென்று ஒரு காம்ப்ளக்ஸ் போனேன். அங்கு அம்பிகா இருந்தது; அபிராமி இல்லை. அது எங்கே என்று கேட்டு அட... போகிற வழிதான்னு அபிராமிக்குப் போனேன். அங்கே இருபது இருபத்தியைந்து வண்டிகள் நின்றன. சரி படம் ஓடுகிறது என்று நினைத்து அங்கிருந்தவரிடம் கேட்டேன். அநியாயம் போங்க... இங்கேயும் இரு தியேட்டர்கள். ஆனால் அன்று தியேட்டர்காரர்களது choice என்னன்னா... வேறு ஒரு படத்திற்கு. ஒரு தியேட்டரில் மட்டும் வேறு ஒரு படம் ஓடியது. நான் நினைத்த படம் அவர்கள் choiceல் இல்லை. ஓடிய படம் பார்க்க விருப்பமில்லை. பேசாமல் அப்படியே வண்டியை வீட்டை நோக்கித் திரும்பினேன்.

சோகத்தை மறைக்க வழியில் இருந்த பர்மா இடியாப்பக் கடையில் இடியாப்பம் வாங்கி வீட்டுக்குத் திரும்பினேன். வழியிலேயே ஒரு முடிவு எடுத்திருந்தேன். என்ன ஆச்சு என்றார்கள் தங்ஸ். நடந்ததைச் சொன்னேன். அவர்கள் சரியாக நான் எடுத்திருந்த முடிவை அச்சு அசல் மாறாமல் கீதை மந்திரம் போல் சொன்னார்கள்:

”இனி இப்படி தியேட்டர் பக்கம் போகாதீங்க... பேசாம  வீட்டுலேயே உக்காந்து திருட்டு டிவிடியில் படம் பாத்துக்கங்க” என்றார்கள்.

தங்ஸ் பேச்சைக் கேட்காமல் இருக்கலாமா... !




 *

Wednesday, August 06, 2014

783. தருமி பக்கம் (21) ..... FROM A CLEAN SLATE .......



அதீதம் இதழில் வந்த பதிவின் மறு பதிப்பு



*
to start with a clean slate - என்று ஆங்கிலத்தில்  ஒர் idiom சொல்வார்கள். இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு tablet என்றால் என்னவென்று தெரிந்திருக்கும். ஆனால் slate என்றால் என்னவென்று தெரியுமா என்பது சந்தேகமே. எங்கள் காலத்தில் எங்களின் முதல் கல்வித் துணையே இது தான். இப்போவெல்லாம் பெரிய புத்தக மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு பிஞ்சுக் குழந்தைகள் பள்ளிக்குப் போவது போல் நாங்கள்


போனதில்லை. ஒரு சின்னத் துணிப்பை. அதற்குள் ஒரு ஸ்லேட். இரண்டு மூன்று புத்தகங்களும் நோட்டுகளும் மட்டுமே எங்களுக்கு இருந்தன. இதில் ஸ்லேட் மட்டுமே எங்கள் கல்விக்கு முதல் பிள்ளையார் சுழி.

இது எதனால் செய்யப்பட்டது என்றெல்லாம் தெரியாது. ஆனால் ஏதோ ஒரு கல்லிருந்து செதுக்கி எடுத்திருப்பார்கள் போலும். கருப்புக் கலரில் இருக்கும். சுற்றிலும் மரத்தால் ஆன ப்ரேம் இருக்கும். அப்பா ஸ்லேட் வாங்கியதும் என் பெயரை தமிழில் ஒரு பக்கமும், ஆங்கிலத்தில் இன்னொரு பக்கமும் ப்ரேமில் எழுதி விடுவார்கள். முதலில் இந்த ஸ்லேட்டில் எழுத  ஸ்லேட் குச்சி இருக்கும். இந்தக் குச்சியும் ஸ்லேட் செய்ற பொருளிலிருந்தே செய்வார்களோ என்னவோ .. அதுவும் கருப்பாக இருக்கும். பொதுவாக இந்தக் குச்சிகள் வழு வழுன்னு எழுதாது. நடுவில ‘கல்லுக் கோடு’ எழுதும் போது விழும். அதாவது சொற சொறன்னு எழுதிவிடும்.

சில ஆண்டுகள் கழித்து இந்த ஸ்லேட் போய் தகர ஸ்லேட் வழக்கிற்கு வந்தது. பழைய ஸ்லேட் கீழே விழுந்தால் எளிதாக உடைந்து விடும். அநேகமாக எங்கள் ஸ்லேட்கள் இது போல் கீழே விழுந்து கீறிப் போயிருக்கும். சுற்றியிருக்கும் ப்ரேமினால் பிழைத்திருக்கும். நாங்களென்ன use & throw காலத்திலா வாழ்ந்தோம்?  அதனால் கீழே விழுந்தாலும் உடையாத தகரத்தில் ஸ்லேட் வந்தது. ஆனால் இந்த ஸ்லேட் கணக்கில் இரண்டு நஷ்டக் கணக்கு உண்டு. முதல் நட்டம் - எளிதாக இதன் மேல் அடித்துள்ள கருப்பு பெயிண்ட் போய், ஸ்லேட் வழு வழுன்னு ஆகிவிடும். எழுதினால் எழுத்துகளே பதியாது. இரண்டாம் நட்டம் கொஞ்சம் சீரியஸானது. ப்ரேம் கழண்டு போனாலும் ஸ்லேட்டைத் தூரத் தூக்கிப் போட முடியாது. தகர ஸ்லேட் இல்லையா.. உடையாமல் முழுசாக இருக்கும். இதனால் வெறும் மொட்டையான ஸ்லேட் கையில் இருக்கும். பல பசங்கள் தீவிரவாதிகளாக மாறி மொட்டை ஸ்லேட்டை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம். யாரையாவது இதை வைத்து மண்டையில் போட்டால் பெரிய வெட்டே விழும்.

இப்போ இதெல்லாம் போய் plastic slate வந்து விட்டது. இன்னொண்ணு... எழுதி அழிச்சிக்கலாம்னு ஒரு ஸ்லேட்  -magic slate அப்டின்னு வந்திருச்சு. ஆனால் இப்போ ஸ்லேட் என்றாலே என்னென்ன தெரியாத மாதிரி ஆகிப் போச்சு. ஸ்லேட்  ... குச்சிகள் எல்லாம் தொல்பொருளாக மாறி விட்டன.

எங்கள் ஸ்லேட்டை refurbish செய்ய வேண்டியது முக்கிய கடமை. அதுவும் தேர்வுக் காலத்திற்கு முன்பு ஸ்லேட்டைப் புதுசாக்க முழு முயற்சியெடுப்போம். அதிலும் இரண்டு மூன்று grades இருந்தது. முதல் முறை ரொம்ப சிம்பிள். வீட்டின் அடுப்படியில்  இருக்கும் கட்டைக் கரியை எடுத்து வைத்துக் கொண்டு ஸ்லேட்டை நன்கு கழுவிக்கொண்டு அதன் பின் எடுத்து வந்த கரியின் மெதுவான பாகம் வைத்து ஸ்லேட்டில் அழுத்தித் தேய்ப்போம். அதன் பின் காய வைத்து விடுவோம். காய்ந்த பின் கழுவினால் ஸ்லேட் ரெடி. 

இன்னொரு advanced method ஒன்றும் இருந்தது. இதில் கரித்துண்டுகள் சிலவற்றை ஊமத்தங்காய் என்று ஒரு செடி இருக்கும். அதன் காய்களோடுசேர்த்து அம்மியில் வைத்து அரைத்து, அதனை எடுத்து எங்கள் ஸ்லேட்டில் தேய்ப்போம். ஆனாலும் இது முக்கியமாக பள்ளியில் உள்ள கரும்பலகைக்கு மட்டுமே பொதுவாக இந்த  advanced process நடந்தேறும். அம்மிக் கல்லுக்குப் பதில் பள்ளிக்கூடத்தில் எங்காவது ஒரு மூலையில் உடைந்த அம்மிக் குழவி ஒன்று கட்டாயம் கிடைக்கும். ஆசிரியர்கள் கரும்பலகைக்கு ஒரு நாள் ஓய்வு கொடித்து, இந்த வேலை மேற்கொள்ளப்படும். கரி கொண்டு வர சிலர் ... ஊமத்தங்காய் பறித்து வர சிலர் ... அரைத்துக் கொடுக்க சிலர் .... கரும்பலகையில் தேய்க்க சிலர் ... கடைசியில் கரும்பலகையைக் கழுவ சிலர்.  அப்பாடா ...ஒரு பெரிய division of labour ! சட்டையெல்லாம் கரியாக்கி  வீட்டில் கிடைத்த அடிகளைப் பற்றிய விளக்கம் அடுத்த நாள் கட்டாயம் கிடைக்கும்!

ஸ்லேட் ரெடின்னா குச்சியும் ரெடியாக வேண்டுமே. அந்த கருப்புக் குச்சிக்கு மட்டும் தான் இந்த மெதட் பயன் படுத்துவோம். குச்சி மேல் லேசாக நல்லெண்ணெய் தேய்த்து. நல்ல கல் தரை மேல் குச்சியை வைத்து பாதத்தை வளைத்து அதன் மேல் வைத்து லேசாக மேலும் கீழும் குச்சியைத் தரையில் தேய்ப்போம். இதில் ஒரு பிரச்சனை. எவ்வளவு மெல்ல தேய்த்தாலும் குச்சி உடைந்து விடும். ஒரு முழு நீளக் குச்சி இந்த மெக்கானிசத்தால் துண்டு துண்டாக உடைந்து விடும். ஆனாலும் ‘மாப்போல’ எழுதும்ல ..! அதாவது மாவு மாதிரி எழுதும்ல ..! அதைவிட குச்சி உடைந்து விடக்கூடாதென்பதற்காக, குச்சியை அதிகமாக அழுத்தாமல் மெல்ல மெல்ல அதனைத் தேய்க்க வேண்டும். அப்படித் தேய்க்கும் போது நமது கடமையில் கண்ணாக .. அல்லது காலாக இருக்க வேண்டும். நினைவு வேறு எங்கு திரும்பினாலும் காலின் அழுத்தம் கூடி குச்சி உடைந்து விடும் என்ற அபாயகரமான நிலை. உண்மையிலேயே இது ஒரு மோன தவம் மாதிரி. அம்புட்டு ஜாக்கிரதையாக செய்யணும்!

ஸ்லேட் பரிமாண வளர்ச்சில் கட்டை ஸ்லேட்டிலிருந்து தகர ஸ்லேட் வந்தது. இதே போல் எழுதும் குச்சிகளிலும் பரிணாம வளர்ச்சி இருந்தது. முதலில் கருப்புக் குச்சி மட்டும் தான் கிடைக்கும். கொஞ்ச நாள் கழித்து மாவில் செய்த கலர் குச்சிகள் கிடைத்தன. பழையதுக்குப் பெயர் ஸ்லேட் குச்சி. இப்போ இருவகை குச்சி வந்ததால் இந்தப் புதிய குச்சிக்கு ’மாக்குச்சி’ என்று நாமகரணமிட்டோம். பழைய ஸ்லேட் குச்சி மாதிரி இதுவும் அதே நீளத்தில் கிடைக்கும். அதுவும் குச்சியின் சைடில் கலர் கலரா கோடுகள் இருக்கும். ஆனாலும் சோகம் என்னன்னா ... குச்சியில் கலர்க் கோடுகள் இருக்கும். ஆனால் எழுதும் போது ஒரே வெள்ளைக் கலரில் தான் எழுதும்.  only B & w; no colour at all!   :(

இந்த ஸ்லேட் & குச்சிகளோடு வேறு சில accessories அதிர்ஷ்டம் இருந்தால் அவ்வப்போது கிடைக்கும். அவைகள் கடல்நுரையும், கடல் குச்சிகளும்.



"கடல் நுரை”

கடல் அலைகள் கரையில் வந்து மோதும் போது நுரையாக இருக்கும். இந்த நுரையெல்லாம் ஒண்ணா சேர்ந்து, அதன் பின் வெயிலில் காய்ந்து இது உருவாவது என்று எங்கள் ‘ஆராய்ச்சி மூளை’ சொல்லியதால் இதை கடல் நுரை என்று எல்லோரும் சொல்வோம். இது நாகணவாய் - ஆக்டோபஸ்ஸிற்கு க்ளோஸ் சொந்தக்காரர் - என்ற கடல்வாழ் உயிரின் ஷெல்.  பரிணாமத்தில் உடலின் உள்ளே சென்று விட்டதாம். இதன் உட்புறம் மெதுவாக இருக்கும். இந்தக் ‘கடல் நுரை’ வைத்து அழித்தால் ஸ்லேட் நன்றாக இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.


SEA URCHIN
அடுத்து இன்னொரு கடல்வாழ் உயிரியின் மேல் தோலில் உள்ள சின்ன மெல்லிய குச்சிகள் - நாங்கள் இதைக் கடல் குச்சி என்று சொல்வோம். ஆனால் சுண்ணாம்பினால் ஆன இந்தக் குச்சிகள் பெரும்பாலும் கீச் ..கீச்.. என்று தான் எழுதும். இருந்தாலும் கிடைத்தற்கரிய பொருள் என்பதால் எங்களுக்கு அதன் மேல் ஒரு கிக் உண்டு


"கடல் குச்சி”

பெரியப்பாவின் மகன் - அண்ணன் ஒருவன் உண்டு. என்னைவிட இரு வயது மூத்தவன். எல்லா நல்ல விஷயமும் ஏனைய விஷயமும் காதில் முதலில் ஓதியவன் இவனே. நானும் இவனும் சேர்ந்தே பள்ளிக்கூடம் செல்வதுண்டு. அவன் ஐந்தாவது படிக்கும் போது ஒரு நாள் நடந்து போய்க்கொண்டிருந்தோம். (அப்புறம் என்ன ஆட்டோவிலோ... காரிலோவா போயிருக்க முடியும்?!) அப்போது தனது ஸ்லேட்டை எடுத்து ஏதோ எழுதுவது போல் செய்தான். பின் மெல்ல கையால் எழுதியதை அரையும் குறையுமாக அழித்தான். கீழே தன் பெயரை முழுவதுமாக எழுதினான். என்ன பண்ற? அப்டின்னு கேட்டேன். ’வீட்டுப்பாடம் எழுதலை ... அதான் இப்போ எழுதினேன்’ என்றான். ஸ்லேட்டில் எழுத்து இருந்தது மாதிரியும் இல்லாதது மாதிரியும் தெரிந்தது. என்னன்னு கேட்டேன். ‘நான் வீட்டுப்பாடம் எழுதுறதெல்லாம் இப்படித் தான்’ என்றான்.  நான் முயற்சித்தேன். execution சரியாக வரவில்லை. உட்டுட்டேன்!


*





Monday, August 04, 2014