Monday, December 19, 2016

918. மதங்களும் ... சில விவாதங்களும்,





*


என் நூலைப் பற்றிப் பேசக் கூப்பிட்டிருந்தார்கள்.
சென்றேன் ..பேசினேன் ...
என்ன நடந்ததோ ..நானறியேன்!!!


Tuesday, November 22, 2016

917. GOD IS NOT GREAT ... CHRISTOPHER HITCHENS ... 3



*

முந்திய பதிவுகள்:

பதிவு:  1


பதிவு:  2





*



 அத்தியாயம் 9

  குரான் யூத, கிறித்துவக் கதைகளைக் 
 கடன் வாங்கிப் படைக்கப்பட்ட நூல்


மோஸஸ், ஆபிரஹாம், ஏசு – இவர்களெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக, நன்னெறிக்கு எதிராக, அடிப்படையற்று சொன்ன பல கூற்றுக்கள் போலவே குரானிலும் முகமதுவினால் தொடர்கிறதா என்றே பார்க்க வேண்டும். இங்கேயும் காபிரியேல் / ஜிப்ரேல் வருகிறார்; படிக்காத ஒருவருக்கு சுராக்களை அளிக்கிறார். இங்கேயும் நோவாவின் பிரளயம், விக்கிரக ஆராதனைகளுக்கு எதிரான தண்டனைகள் வருகின்றன. யூதர்களுக்காகச் சொல்லப்பட்டவைகளும், அவைகளை அவர்களே கண்டுகொள்ளாமல் செல்வதும் நடக்கிறது. இங்கேயும், ஹதிஸ் என்றழைக்கப்படும் நபியினால் சொல்லப்பட்டவைகளும் செய்தவைகளும் நிறைய நிச்சயமில்லாத விஷயங்களாகவும் நிகழ்வுகளாகவும் உள்ளன. (123)

 குரானில் சொல்லப்படும் நிகழ்வுகள் எல்லாமே ஒரு சமூகத்தின் மிகச்சிறிய பகுதிக்கானதாகவும், அங்கே நடந்த சிறு தகராறுகளாகவும் உள்ளன. அதுவுமின்றி, மற்ற ஹீப்ரு லத்தீன், க்ரீக் மொழி நூல்களிலிருந்து எவ்வித வரலாற்று ஒற்றுமையையும் காட்ட முடியாத நிகழ்வுகளாகவே அவை உள்ளன. அவைகள் யாவுமே வாய்வழியாக, அதுவும் அரபியில் மட்டுமே வாய்வழியாக வந்தவைகள்.


விற்பன்னர்கள் பலரும் குரான் அது எழுதப்பட்ட அராபிய மொழியில் மட்டுமே முழுமையாகப் புரிந்துகொள்ளப்படும் என்கின்றனர். ஏனெனில் அம்மொழி கணக்கற்ற சொல்லடைகளும், பகுதிவாரியான பேச்சு மொழிகளும் நிறையப் பெற்றது. (அப்படிப்பட்ட மொழியை ஏன் அல்லா தேர்ந்தெடுத்தார்?) Introducing Muhammad என்ற நூலின் ஆசிரியர்கள் இருவரும் அராபிய மொழியில் மட்டுமே குரான் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள். (..they insist that ”as the literal Word of God, the Koran is the Koran only in the original revealed text. A translation can never be the Koran, that inimitable symphony, ‘the very sound of which moves men and women to tears’.)


 எம்மொழிபெயர்ப்பாயினும் அது ஓரளவு மட்டுமே குரானின் உண்மைப் பொருளைத் தரமுடியும். கடவுள் ஒரு அராபியராக இருந்தால் ( ஒரு பாதுகாப்பற்ற கற்பனைதான் இது!) அவர் ஏன் ஒரு படிப்பறிவில்லாதவரை, தான் சொன்னதை அப்படியே மாற்றாமல் கொடுக்க முடியாத ஒருவரை எதற்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும்? (அப்படியே மொழி தெரியாதவராக இருந்தாலும், வஹி இறங்கிய கால்நூற்றாண்டுகள் முடியும் வரையும் அவர் தொடர்ந்து எழுதப் படிக்கத்தெரியாதவராக அவர் இருந்தது இன்னொரு அதிசயம்!) இது சொல்வதற்கு மிக எளிதான ஒரு விஷயமுமில்லை. ஏனெனில் கிறித்துவர்களுக்கு கன்னிமரியாள் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு முகமது பற்றிப் பேசுவது இஸ்லாமியருக்கு முக்கியமானது. (124)


 இன்றுவரையிலும் எம்மொழியில் குரான் மொழிபெயர்க்கப்பட்டாலும் குரானின் அராபிய மொழியாக்கமும் சேர்த்தே பதிப்பிடப்படுகிறது.(125)


இஸ்லாம் புதியதாகத் தோன்றிய ஒரு மதம்; ஆகவேதான் அது இன்னும் தன் உயர்ந்த தன்னம்பிக்கையளிக்கும் நிலையில் நின்று கொண்டிருக்கிறது. 


முகமதுவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளும், சொன்னவைகளும் அவரது காலத்திற்குப் பின் பல்லாண்டுகள் கழித்து தொகுக்கப்பட்டவை. அவைகள் சுய விருப்புகளாலும், வதந்திகளாலும், படிப்பறிவற்றதாலும் பல மாற்றங்களுக்கு உட்பட்ட ஒரு தொகுப்பாகும். (127)


 பிக்தால் (Pickthall) என்பவரின் கூற்றுப்படி முகமது தன்னை 'கடவுளின் அடிமை' என்று சொல்லிக்கொள்ள ஆரம்பித்த வரலாறு; மெக்காவிலுள்ள காபா ஆபிரஹாமால் கட்டப்பட்டது; பின் வஹாபிகளால் அழிக்கப்பட்டது; அதிலுள்ள விக்ரகங்களும் அழிக்கப்பட்டது; முகமதுவும் அதனாலேயே அமைதியை நாடி ஹீரா மலைக்குச் செல்கிறார். அங்கே அவர் தூக்கத்திலோ மயக்கத்திலோ இருக்கும்போது ஒரு குரல் அவரை வாசிக்கச் சொல்கிறது. முகமது இருமுறை தனக்கு வாசிக்கத் தெரியாது என்று கூறியும் மும்முறை அந்தக் குரலால் வாசிக்க அழைக்கப்படுகிறார். தன்னையும் அல்லாவிடமிருந்து வந்ததாக அந்தக் குரல் சொல்கிறது. இதன்பின் முகமது தன் மனைவி கத்தீஜாவிடம் சொல்ல, அவர் முகமதுவை கதீஜாவின் உறவினர் நெளபால் (Waraqa ibn Naufal) என்பவரிடம் அழைத்துச் செல்ல, யூத, கிறித்துவ நூல்களைப் பற்றி அறிந்த அவர் மோஸேவிடம் பேசியவரே உன்னிடமும் பேசியவர் என்று சொன்ன பிறகே, முகமது தன்னை அல்லாவின் அடிமை என்று கருதத் தொடங்குகிறார். (128)


 முகமது 632-ம் ஆண்டு இறக்கிறார். அதன் பின் 120 ஆண்டுகளுக்குப் பிறகு இப்னு இஷாக் (Ibn Ishaq) என்பவரால் முகமதுவின் வாழ்க்கை வரலாறு தொகுக்கப்படுகிறது. ஆனால் அது காணாமல் போக, இப்னு ஹிஷாம் (Ibn Hisham) என்பவரால் மீண்டும் மற்றுமொரு வரலாறு எழுதப்படுகிறது. (129) 


முகமதுவின் செயலர்கள், நண்பர்கள், உடனிருந்தோர் இவர்களிடமிருந்தெல்லாம் எப்படி முகமது சொன்னவைகள், நடந்த நிகழ்வுகள் எல்லாம் எப்படிப் பெறப்பட்டன என்பதற்கான எந்த ஒரு பொதுமுறையும் இருந்ததாகத் தெரியவில்லை.


 ஈசாவைப் போலல்லாமல் முகமது ஒரு குடும்பத்தைத் தனக்குப் பின் விட்டுப் போயிருந்தாலும், தனக்குப் பிறகு யார் தன் பொறுப்பை ஏற்று நடத்துவது என்று சொல்லிச் செல்லவில்லை. அதனால் அவர் இறந்ததுமே தலைமைக்குப் போட்டியும் சண்டைகளும் ஆரம்பித்து விட்டன. ஒரு மதமாக இஸ்லாம் உருவாவதற்குள் சன்னி, ஷியா என்று இரு குழுக்கள் பிறந்துவிட்டன.(130)


 முகமதுவிற்குப் பின் கலிபா ஆன அபு பக்கர் முகமதுவின் வார்த்தைகளை ஒருங்கிணைக்க முயல்கிறார். மனனம் செய்த பலர் போர்களில் இறந்துபட ஒரு சிலரே மனனம் செய்தவர்கள் இருந்தார்கள். ஆகவே, எல்லாவித விஷயங்களையும் - தாட்களில், கற்களில், ஓலைகளில், தோளெலும்புகளில், மற்ற எலும்புகளில், தோல்களில் - எழுதப்பட்ட வைகளை (ஜிப்ரெல் மூலமாகத் தன் வார்த்தைகளைத் தந்த கடவுள் அப்படியே அவைகளை ஒழுங்காக 'ரிக்கார்ட்' செய்யவும் ஏதாவது ஒரு நல்ல வழி காண்பித்திருக்கலாம்.) முகமதின் செயலராக இருந்த ஸைட் இப்னு தாபிட் (Zaid Ibn Thabit)மூலமாகத் தொகுக்கப்படுகிறது.


 மேலே சொன்னது உண்மையாயின் முகமதுவின் வாழ்க்கை முடிந்த உடனேயே அவரது வரலாறு எழுதப்பட்டு விட்டது என்ற கூற்று சரியாக இருக்கும். ஆனால் மேலே சொன்னது உண்மையா என்ற கேள்வி பெரிதும் உள்ளது. ஏனெனில் இவைகளைத் தொகுத்தது முதல் கலிபா இல்லை; நாலாவது கலிபாவான அலி; அவரே ஷியா குழுமத்தை ஆரம்பித்தவர் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் சன்னி குழுமத்தினர் இவைகள் தொகுக்கப்பட்டது 644 முதல் 656 வரை ஆண்ட உத்மன் என்ற கலிபாவினால் என்கிறார்கள். உத்மன் இறுதி வடிவத்திற்குக் காரணாமாயிருந்தார் என்கிறார்கள். இறுதி வடிவத்திற்குக் கொண்டு வந்ததும், ஏற்கெனவே இருந்தவைகளை - earlier and rival editions- எல்லாவற்றையும் உத்மன் எரித்து அழித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் வேறு நகல்கள் இருக்கக்கூடாதென்ற உத்மனின் திட்டம் சரியாகச் செயல்பட முடியாது. ஏனெனில் அராபிய மொழியின் எழுத்துக்கள் 9-வது நூற்றாண்டில்தான் இறுதி நிலைக்கு வந்தன. அதற்கு முன்பு புள்ளிகள், அரைப்புள்ளிகள், குறில்களுக்கான குறியீடுகள் ஏதும் இல்லாதிருந்தன. இதனால் வசனங்களில் மாறுபட்ட கருத்துகள் அன்றும், இன்றும் இருந்து வருகின்றன. (131)


 வசனங்களை விடவும் ஹதிஸ்கள் - வாய்மொழிச் சொல்லாக வந்தவைகள் - மேலும் குழப்பமூட்டுபவைகளாகவும், பொறுக்க முடியாதவைகளாகவும் உண்டு. ஒவ்வொரு ஹதிஸும் உண்மையானதென்று ஒரு isnad or chain என்ற ஒரு சாட்சி மூலம் வரவேண்டும். ஆனால் சில சமயங்களில் A- B யிடம் சொன்னதாகவும், அது C -யிடம் சொல்லப்பட்டு, பின் அது D- மூலமாக ..... இப்படியாக அந்த சாட்சிகள் சொல்லப்படுவதுண்டு.


 சான்றாக, புகாரி முகமதுவின் மரணத்திற்குப் பிறகு 238 ஆண்டுகள் கழித்து காலமானார். இவரது சாட்சிகள் மிகவும் கெளரவிக்கப்படுபவை. அவைகளில் எந்த வித குற்றம் குறை காண்பதரிது என்றும் சொல்லப்படும். ஆனால் அவர் மொத்தம் 3,00,000 ஹதிஸுகள் சொன்னதாகவும், பின் அதில் 2,00,000 ஹதிஸுகளை மதிப்பற்றவைகள் என்றோ உறுதி செய்யப்பட முடியாதவை என்றோ அவர் கழித்து விட்டார். மறுபடியும் தான் சொன்னவைகளில் சலித்தெடுத்து வெறும் 10,000 ஹதிஸுகளை மட்டுமே கொடுத்துள்ளார்.


 எவ்வித சான்றுமின்றி மூன்று லட்சத்திலிருந்து (குத்து மதிப்பாக!) வெறும் 10,000 ஹாதிசுகளைத் தன் நினைவிலிருந்து புகாரி கொடுத்தார் - அதுவும் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு ---- அப்படி அவர் தந்த ஹதிஸுகள் புனிதமான, எவ்வித மாறுதலுமற்றவைகள் என்று நீங்கள் நம்ப வேண்டுமானால் ... நம்பிக்கொள்ளுங்கள்.(132)


 சலித்துப் பார்த்தால் சில ஹதிசுகள் எங்கிருந்து கிடைத்தன என்பதுவும் தெரியும். ஹங்கேரி நாட்டு Ignaz Godlziher என்ற அறிஞர், Reza Aslan என்பவர் செய்த ஆராய்ச்சியின்படி, நிறைய ஹதிஸுகள் யூதர்களின் டோரா, கிறித்துவர்களின் விவிலியம், யூத குருமார்களின் வார்த்தைகள், பழைய பெர்சியன் கருத்துக்கள், க்ரேக்க தத்துவங்கள், இந்தியப் பழமொழிகள் … இதையெல்லாம் விட கிறித்துவர்களின் Lord’s Prayer வார்த்தைக்கு வார்த்தை அப்படியே எடுத்தாளப்பெற்றுள்ளன. விவிலியக் கதைகள் சிலவும், ‘’உன் வலதுகை செய்வது இடது கைக்குத் தெரியக்கூடாது’ என்ற வார்த்தைகளும் அப்படியே ஹதிஸுகளில் இடம் பெற்றுள்ளன.


 அஸ்லான் தனது ஆராய்ச்சியில் ஒன்பதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய சட்ட திட்டங்களை ijitihad மூலம் வடிவமைக்கும்போது, அவர்கள் பல ஹதிஸுகளை இரு கூறாகப் பிரித்துள்ளார்கள்: பொருளிய லாபத்துக்காகச் சொன்ன பொய்கள்; கருத்துச் சிறப்புக்காகச் சொன்ன பொய்கள்.


 இப்படி பல வழிகளிலிருந்து தங்கள் வேத நூல்களைப் படைத்திருந்தாலும் அவர்கள் தங்கள் வேதப்புத்தகமே முழுமையான, கடைசியான வேதநூல் என்று வலியுறுத்தி வருகிறார்கள். (133)


 தன்னைத் தவிர வேறு கடவுள்களை வணங்குபவர்களை மன்னிக்க மாட்டேன் என்ற அல்லாவின் கட்டளை கிறித்துவ பத்துக்கட்டளைகளிலிருந்து வாங்கிய கடனே.


முகமதுவின் மனைவியர்களில் சிலர் முகமதுவின் சில சின்ன சின்னத் தேவைகளுக்குக் கூட அவருக்கு வசனம் இறக்கப்படும் என்றும், இதை வைத்து முகமதுவை அவர்கள் கேலி செய்ததும் உண்டு.


 பொதுவிடத்தில் முகமதுவிற்கு வசனம் இறக்கப்படும் போதெல்லாம் அவர் வலியால் துடிப்பவராகவும், காதினுள் பலத்த மணியொலியும் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. மிகுந்த குளிர் காலத்தில் கூட அவருக்கு வியர்வைப் பெருக்கு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. (134)


 சில இதயமற்ற கிறித்துவர்கள் இவையெல்லாம் அவரது வலிப்பு நோயால் வந்தது என்று சொல்வதுண்டு. (ஆனால் அவர்கள் பவுலுக்கு டமாஸ்கஸ் செல்லும் வழியில் நடந்த நிகழ்வை அவ்வாறு சொல்வதில்லை.) டேவிட் ஹ்யும் (David Hume) -ன் கேள்வியை இங்கே கேட்டாலே போதும்: ஏற்கெனவே எழுதப்பட்டு இருந்த ஒன்றை கடவுள் ஒரு மனித ட்ரான்ஸ்மீட்டர் மூலம் நமக்குக் கொடுத்தாரா? இல்லை ... முகமதுவே தானாகவே இருந்த சிலவற்றைச் சொல்லி அதெல்லாமே கடவுள் எனக்குச் சொன்னது என்று சொன்னாரா? ஆனாலும் வசனம் இறங்கும்போது முகமது பெற்ற வலி, தலைக்குள் ஒசை, வியர்வைப் பெருக்கு - இவை எல்லாமே கடவுளிடமிருந்து முகமது பெற்றதெனின் அந்த நிகழ்வு அமைதியான, அழகான, தெளிவான ஒரு நிகழ்வாக இருந்திருக்கவில்லை.


 கிறித்துவத்தைப் போலன்றி இங்கே முகமதுவிற்கு ஒரு சந்ததியினர் இருந்துள்ளனர். இருந்தும் இஸ்லாம் பிறந்ததிலிருந்தே அவர்களுக்குள்ளே பல பிளவுகளும், குருதி சிந்தியதுவும் தொடர்ந்து வந்துள்ளன. (135)


இஸ்லாமிய நம்பிக்கையில்லாதவர்களுக்கு மெக்காவிற்குள் அனுமதி கிடையாது என்பதுவே இஸ்லாம் ஒரு உலகளாவிய (Universal) மதம் என்பதை மறுப்பதாக அல்லவா உள்ளது.


 மற்றைய ஓரிறை மதங்களைப்’ போலல்லாமல் இஸ்லாம் இதுவரை எவ்வித மாற்றத்திற்கும் உட்பட்டதில்லை என்று சொல்லப்படுவதுண்டு. இது மிகச் சரியோ, மிகத்தவறோ. இஸ்லாமிலும் பல வேறுபட்ட படிமங்கள் உண்டு. ஏனெனில், சுபிக்கள் இஸ்லாமிய தத்துவங்களுக்கு அதிக மரியாதை கொடுக்கிறார்கள். அவர்களது படிமங்களில் மற்ற நம்பிக்கைகளுக்கும் இடமுண்டு.


 இஸ்லாமியத்திற்கென்று ஒரே தலைமை இல்லாததால், பல்வேறு பத்வாக்கள் வருவதுண்டு. இதுவரை நம்பி வந்தவைகளை இனி நம்பத் தேவையில்லை என்று யாரும் இம்மதத்தில் கூற முடியாது. இது ஒரு வகையில் நல்லதற்கேயாயினும், எங்கள் இஸ்லாம் மாற்றுவதற்கு இடமில்லாத, கடைசி வேதமே என்ற இஸ்லாமியரின் அடிப்படை நம்பிக்கை மாற்ற முடியாத, ஆனால் அதே சமயத்தில் ஒரு தவறுதலான நம்பிக்கையாகவே இருக்க முடியும்.
 இஸ்லாமியத்திலுள்ள முன்னுக்குப் பின்னான முரண்கள், பல பிரதிகளுள் உள்ள வேற்றுமைகள் இவைகளை பொறுமையுடன் பட்டியலிடவும் கூட மிகப்பெரும் எதிர்ப்புகள் வரும்.


 அவர்களது முழு நம்பிக்கையானது ஒரு பரந்த உள்நோக்கைக் கூட முடியாத ஒன்றாக்கி விடுகிறது. (137)




*

நீல சாய்வெழுத்துகளில் இருப்பது என் கருத்துகள்


*

Saturday, November 19, 2016

916. GOD IS NOT GREAT ... CHRISTOPHER HITCHENS ... 2





*


முந்திய பதிவு;

GOD IS NOT GREAT ... CHRISTOPHER HITCHENS ... 1

**
மூன்றாம் பதிவு ...

**



 ***

 Chapter 7

 வெளிப்பாடுகள்: 
 பழைய ஏற்பாடு என்னும் கொடுங்கனவு 


 ‘கடவுளின்’ கட்டளைகள் அங்கங்கே அவ்வப்போது சில மனிதர்களை நேரடித் தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்தன. இந்த நம்பிக்கைக்குப் பல எதிர்ப்புகளைச் சொல்ல முடியும். சில சமயங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில் யாரோ ஒருவருக்கு அளிக்கப்படுகிறது. பல சமயங்களில் – அதுவும் கிறித்துவ மதத்தில் – இந்த வெளிப்பாடுகள் ஒருமுறை கொடுத்தால் போதாது என்பது போல் பின்னால் வேறோருவருக்குக் கொடுக்கப்பட்டு வெளிப்பாடுகள் வலியுறுத்தப் படுகின்றன. இன்னொரு விதத்தில் இதற்கு நேர் எதிர்மாறாக நடக்கிறது. ஒரே ஒருவர் அவருக்குக் கொடுக்கப்படுவதே வேதமாகிறது. கொடுக்கப்படுபவரின் ஒவ்வொரு சொல்லும் வேதமாகி விடுகிறது. (97)


 பொதுவாக பல வெளிப்பாடுகள் இறுதியான வார்த்தைகளாக இருப்பதில்லை. இதில் எந்த வார்த்தை உண்மை என்று கண்டறிய பல சமயம் மதப்போர்கள் நிகழ்கின்றன. 

 அதுவும் இந்த ஏற்பாடுகள் கொடுக்கப்படுவது மத்திய கிழக்கு நாடுகளில், கல்வியறிவற்ற, சிறிது வரலாற்றுத் தொடர்புடைய ஒரு மனிதருக்குக் கொடுக்கப்படுகிறது. 

 மூன்று ஆபிரஹாமிய மதங்களிலும் கடவுளும் மோசசும் சினாய் மலைமீது சந்தித்ததாகவும் அங்கு கடவுளால் பத்துக் கட்டளைகள் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மோசஸ் எழுதியதாகச் சொல்லப்படும் இரண்டாம் நூலில், யாத்திராகமத்தின் 20 – 40 அதிகாரங்களில் இப்படி சொல்லப்படுகிறது. 

 இந்தப் பத்து கட்டளைகளை ஒரு சிறப்பான பட்டியலாகக் கருதமுடியாது. (98) 


இக்கட்டளைகள் கடவுளால் கொடுக்கப்பட்டதல்ல ... மனிதக்கரங்களால் கொடுக்கப்பட்டவைகளே அவை. உதாரணமாக, கொலை செய்யாதே என்று ஒரு கட்டளையாகச் சொல்வதற்கு தேவை ஏதுமில்லை. கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவை எல்லாம் அப்போதென்ன விலக்கப்படாதவைகளாகவா இருந்திருக்கும்? (99) 


 இந்தக் கட்டளைகளில் சொல்லாமல் விடப்பட்டவைகளைத் தொகுத்தாலே அவைகளின் உண்மைத்தன்மை புரிந்து விடும். பச்சிளங்குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துவது பற்றியோ, கற்பழிப்புகள் பற்றியோ, அடிமைகளை வைத்துக் கொடுமை செய்வதை எதிர்த்தோ, இனப்படுகொலைகளுக்கு எதிராகவோ எந்த ஒரு கட்டளையும் கொடுக்கப்படவில்லை. (100) 

 யாத்திராமகத்தில் சொல்லப்பட்ட பல கொடுமையான, ஒழுங்கற்ற நிகழ்வுகள் நிச்சயமாக அப்படியே நடந்திருக்க வாய்ப்பில்லை. உலகின் மிகவும் புகழ் பெற்ற இஸ்ரேயலின் தொல்பொருள் விற்பன்னர்கள் கடவுள் மோசசிற்குக் கொடுத்த பத்துக் கட்டளைகள் பற்றிய ஆதாரங்கள் ஏதும் கிடைக்காதா என்று பெரும் முயற்சி எடுத்தும் இதுவரை அதற்கு ஏதேனும் பயனில்லை. 

 இஸ்ரேல் பிரதமர் டேவிட் பென்குரியன் முழு ஆய்வு செய்து தங்கள் நாட்டின் மீது உரிமை கோரக்கூடிய தகுந்த ஆதாரங்கள், சான்றுகள் ஏதும் கிடைக்குமா என்று தீவிரமாகத் தேடும்படி தனது நாட்டின் தொல்பொருள் ஆய்வாளர் யிகேல் யாதின் (Yogael Yadin) என்பவருக்கு ஆணையிட்டார். முழு முயற்சி எடுத்தும் அவர் தேடலில் ஏதும் கிடைக்கவில்லை.


யிகேல் யாதின் (Yogael Yadin), Israel Finkelstein of the Institute of Archaeology at Tel Aviv Universityல் பணியில் இருக்கும் Neil Asher Silberman என்பவரும் இணைந்து ஆய்வு செய்து தங்கள் அறிக்கையை கொடுத்தனர்: “மோசஸ் காலத்தில் நடந்ததாகச் சொல்லும் எவ்வித போரும் எகிப்தில் நடக்கவில்லை. நாற்பது ஆண்டுகளாக இஸ்ரேயலர்கள் அங்கு சுற்றித் திரியவில்லை. வாக்களிக்கப்பட்ட நாடு எதையும் அவர்கள் கண்டு கொள்ளவுமில்லை”.(102) 


தொல்பொருள் ஆய்வுகள் பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் யூதர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. தொல்பொருள் குப்பைகளில் பன்றி எலும்புகள் ஏதும் கிடைத்ததில்லை. ஆனால் மோசஸ் வாழ்ந்தது என்பதை எளிதாகப் புறந்தள்ளி விட முடியும். 


 பிரஞ்சு தொல்பொருள் ஆயவாளர் ரோலந்த் டி வாக்ஸ் (Roland de Vaux) “இஸ்ரேயலிர்களின் வரலாற்று நம்பிக்கைகளுக்கு உண்மையான வரலாற்றில் இடமில்லை; ஆகவே அவர்களின் நம்பிக்கைகளும் தவறு. (103) 


சினாய் மலையில் நிகழ்ந்த வெளிப்பாடுகளும், மோசஸ் காலத்தில் நடந்தவைகளாக எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து அதிகாரங்களும் மோசமாகச் சித்தரிக்கப்பட்ட புனைவுகள். 


 அமெரிக்க நாட்டின் மூத்த தலைவரான தாமஸ் பெய்ன் (Thomas Paine): “மேலே சொன்ன மோசசின் அதிகாரங்கள் ஐந்தும் மிகவும் போலியானவை. அவைகளை எழுதியதும் மோசஸ் இல்லை. மோசஸ் காலத்திற்குப் பின்னால் பல நூற்றாண்டுகளுக்குப் பின் அறிவற்ற, முட்டாள்தனமான சிலர் எழுதியவைகளே அவை”. (104) 


 மோசஸ் காலத்தில் நடந்தவைகளாக எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து அதிகாரங்களில் படைப்பைப் பற்றிய இரு மாறுபட்ட கருத்துகளும், ஆதமின் இரு வகை பாரம்பரியங்களும், நோவா காலத்து வெள்ளத்தைப் பற்றி இரு கூறுகளும் சொல்லப்படுள்ளன. (106) 



 Chapter 8 

பழைய ஏற்பாட்டின் தீமைகளை விடவும் 
புது ஏற்பாடு மோசமான ஒன்று 



விவிலியத்தில் சக்காரியா 9.9ல் மெசியா ஒரு கழுதையின் மேல் வருவார் என்று எழுதப்பட்டுள்ளது. யூதர்கள் இன்னும் அந்த நிகழ்விற்காகக் காத்திருக்கிறார்கள்; ஆனால் கிறித்துவர்கள் அது ஏற்கெனவே நடந்து முடிந்த போன நிகழ்வு அது என்கிறார்கள். (109) 


பழைய ஏற்பாடு போலவே புதிய ஏற்பாடும் மோசமான இட்டுக் கட்டின கதைகளின் தொகுதி தான். நடந்து முடிந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் அதற்கு ஏற்றாற்போல் திட்டமிட்டு எழுதப்பட்ட தொகுப்பே இது. (110)


 ஏசுவின் பிறப்பில் அவர் ஒரு கன்னித்தாயிடமிருந்து பிறந்தார் என்று சொல்வதில் மத்தேயுவும், லூக்காவும் ஒன்றாக ஒரேவழியில் சொல்லவில்லை. 


எகிப்திலிருந்து தப்பி ஓடிய நிகழ்ச்சியிலும் அவர்கள் வெவ்வேறு விதமாக எழுதியுள்ளார்கள். மத்தேயு ஜோசப்பிற்கு கனவில் வந்த எச்சரிக்கை பற்றிக் குறிப்பிடுகிறார். லூக்கா பெத்லேகமில் அடுத்த நாற்பது நாள் தங்கியிருந்து விட்டு, பின் நாஸ்ரேத்திற்கு ஜெருசலேம் வழியாகத் திரும்ப வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.(111)


பேரரசன் சீசர் அகஸ்டஸ் வரி விதிப்பிற்காக உத்தரவிட்ட மக்கள் கணக்கெடுப்பு நடந்த அதே ஆண்டில் ஏசு பிறந்தாரென லூக்காவில் கூறப்பட்டுள்ளது. அதே ஆண்டில் தான் ஹெரோது மன்னன் ஜுதேயா நாட்டை ஆண்டு கொண்டிருந்தார்; க்யுரினியஸ் சிரியாவின் கவர்னராக இருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விவிலியத்தில் ஓரளவாவது வரலாற்றுக் குறிப்புகள் ஏற்றப்பட வேண்டும் என்ற முயற்சியில் இதுவும் ஒன்று. ஆனால் ஹெரோது மன்னன் கிறித்து பிறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார் என்பது வரலாறு. அதோடு அவரது காலத்தில் சிரியாவின் ஆளுநராக இருந்தது க்யுரினியஸ் அல்ல. மேலும் எந்த எகிப்து வரலாற்றாளரும் அகஸ்டஸ் வரி விதிப்பைப் பற்றி எழுதிய குறிப்பேதும் இல்லை. ஆனால், யூத வரலாற்றுக் குறிப்பாளர் ஜோசபஸ் அப்படி ஒரு நிகழ்வைப் பற்றிப் பேசுகிறார். ஆனால் அதில் மக்கள் தங்கள் பிறந்த மண்ணுக்குத் திரும்பவேண்டும் என்ற எந்தக் கடினமான கட்டளைகள் ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்கிறார். ஆயினும் அவர் இந்தக் கணக்கெடுப்பும் கிறித்து பிறந்து ஆறு ஆண்டுகள் கழித்தே நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 


 ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் நாக் ஹமாதி ஏடுகள் என்ற புறந்தள்ளப்பட்ட விவிலியங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் பல ஆண்டுகளாகக் கண்டுபிடிக்கப் படாத யூதாசின் விவிலியமும் (Gospel of Judas) கிடைக்கப்பட்டு அதுநேஷனல் ஜியோக்ராபிக் சொசைட்டியால் மொழியாக்கம் செய்யப்பட்டு 2006 ஆண்டு வெளியிடப்பட்டது.(112) 


அதில் கூறப்பட்டுள்ளவை எல்லாம் வெறும் ‘ஆன்மீகப் பிதற்றல்கள்’ என்று கூறப்பட்டாலும், அவைகளில் வரும் பல நிகழ்வுகள் மிகவும் சரியான கால அளவில் உள்ளன. 


 ஏசு யூதாசைத் தனியாக அழைத்து அவருக்குச் சதையால் ஆன தன் ஈன உடலை விட்டுச செல்லும் உன்னதப் பணியில் உதவுமாறு கேட்டுக்கொள்கிறார். 


பல காலமாக எவையெல்லாம் உண்மையான, கடவுளால் ஏவப்பட்ட விவிலியங்கள் என்ற சூடான விவாதங்கள் தொடர்ந்து நடந்து வந்துள்ளன. (113) 


பழைய ஏற்பாட்டில் உள்ள முன்னறிவித்தலில் மெசியா தாவீதின் நகரத்தில் பிறப்பார் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் அது பெத்லேகமாக இருக்க வேண்டும். ஆனால் ஏசுவின் பெற்றோர்கள் நாசரேத் ஊரைச் சேர்ந்தவர்கள். பிள்ளை பிறந்திருந்தால் அங்குதான் பிறந்திருக்க வேண்டும். இதனால் அகஸ்டஸ், ஹெரோது, க்யுரினியஸ்ப் போன்ற வரல்லாற்றுப்பெயர்களையும், கணக்கெடுப்பு என்ற ஒரு நிகழ்வையும் சேர்த்து ஒரு திரிக்கப்பட்ட கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தை பிறந்தது பெத்லேகமாக மாறுகிறது – அதுவும் பிறந்த இடம் ஒரு ‘மாட்டுத் தொழுவம்’ என்பதும் ஒரு புதுச் சேர்க்கை. (114) 


ஏறத்தாழ எல்லா மதங்களிலும் – புத்த மதத்திலிருந்து இஸ்லாம் வரையிலும் – தேர்ந்த்தெடுக்கப்படும் தூதுவர்கள் மிகச்சாதாரண, பாவப்பட்ட மனிதர்களாகவோ அல்லது ஒரு ராஜகுமாரனாகவோ இருக்கிறார்கள். இது சாதாரண மக்களை ஈர்க்கும் ஒரு ஏற்பாடின்றி வேறென்ன? படித்தறிவு இல்லாத, பரிதாபத்திற்குரிய, பாவப்பட்ட மக்களை எளிதாகச் சென்றடைய இது தானே வழி. 


புது ஏற்பாட்டில் உள்ள முரண்கள் பற்றிய பெரும் தொகுப்புகள் வெளி வந்து விட்டன. 


 மரியாவைப்பற்றிச் சொல்லும்போது அவரை ‘virgin’ என்றழைக்கின்றனர். ஆனால் இந்தச்சொல் almah என்ற சொல்லிலிருந்து வருகிறது. இச்சொல்லின் பொருள் ‘இளம் பெண்’ என்பதேயாகும். (115) 


ஏசு ஒரு கன்னிகைக்குப் பிறந்தார் என்பதே இது மனிதக்கரங்கள் படைத்த கதை என்பதற்கு எளிதான தடயம். ஏசு தன் வாழ்நாளில் தன் தந்தை பரமபிதா பற்றி அடிக்கடி கூறுகிறார். ஆனால் ஓரிடத்தில் கூட தான் ஒரு கன்னிப்பெண்ணின் மகனாகப் பிறந்தேன் என்று கூறவேயில்லை. ஆனால் தன் அன்னையிடம் அவர் பலமுறை கடுமையாக நடந்து கொண்டுள்ளார். 


காபிரேயல் நீ ஒரு கடவுளின் தாய் என்று கூறியிருந்தும், ஏசு செய்வதெல்லாம் மரியாளுக்கு ஆச்சரியமான விஷயங்களாகத்தான் இருக்கிறது. 


 மரியாளுக்கு ஏசுவோடு நான்கு மகன்களும் சில சகோதரிகளும் உள்ளதாக மத்தேயு 13: 55 -57கூறுகிறது.(116) 


புறந்தள்ளப்பட்ட ஜேம்ஸ் விவிலியத்திலும் இதைப் பற்றிச் சொல்லியுள்ளது. ஏசுவின் உடன்பிறப்பான இன்னொரு ஜீசஸ் மதக் குழுக்களில் தீவிரமாக இருந்தாரெனச் சொல்லப்பட்டுள்ளது.


கத்தோலிக்க கிறித்துவ மக்கள் மரியாளை கன்னி மாதா என்று மிகவும் பக்தியோடு  வணங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இந்த செய்தி வருத்தம் தரலாம். அநேகமாக அதில் பலருக்கு இந்த விவிலியச் செய்தி  தெரியாமலும் இருக்கலாம். அவர்களுக்காக அந்த விவிலியத்தில் இருந்து இதை மேற்கோளிடுகிறேன்:  

 "இவன் தச்சனுடைய மகனல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமான், யூதா என்பவர்கள் இவர்களுக்குச் சகோதரர் அல்லவா?


இவன் சகோதரிகள் எல்லோரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இவனுக்கு இதெல்லாம் எப்படி வந்தது?


இதைச் சுற்றி பல கதைகள் நிர்மாணிக்கப்பட்டன. A sort of reverse-engineering. எந்த விவிலியங்களைத் தேர்ந்தெடுப்பது என்ற முயற்சியோடு, மரியாளின் பிறப்பைப்பற்றி எந்த நூல் சொல்லாவிட்டாலும், அவரது பிறப்பு பாவமற்ற ஒன்றாக இருக்க வேண்டும். அதோடு பாவத்தின் சம்பளம் மரணம் என்பதால் அவருக்கு இயற்கையான மரணம் இருக்க முடியாது. அதனாலேயே அவர் நேரே பரலோகத்திற்கு எழுந்தருளினார் என்றெல்லாம் கூறப்பட்டது. 


இதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடுகள் புதுக் கண்டுபிடிப்புகளாவும் ஆச்சரியமாகவும் உள்ளன. 

ரோம் நகரத்தில் 1852ல் மரியாளின் பாவமற்ற பிறப்பு – Immaculate Conception – என்பது அறிவிக்கப்பட்டது. 

அதன் பின் 1951ல் பரலோகத்திற்கு எழுந்தருளியது – Assumption – என்றும் அறிவிக்கப்பட்டது. 

கால வரிசை சரியாகச் செய்யப்பட்ட ஒரு திட்டம் இது. (117) 


புது ஏற்பாட்டில் சொல்லப்படுவது போல் மனித வாழ்க்கையை லில்லி பூக்களுக்கு ஒப்பிடுவது, நாளை என்பது பற்றிக் கவலைப்படாதே என்பது எல்லாமே குடும்ப வாழ்க்கை, சிக்கனம், புதுக் கண்டுபிடிப்புகள் போன்றவைகளை வெட்டியான விஷயங்கள் என்றாக்கி விடுகின்றன. 


ஏசு சொல்லலும் பல விஷயங்களைக் கேட்டு அவரது குடும்பத்தினரோ, ஏனையோரோ ஏசுவைக் குறைத்து மதிப்பிடுவதும் விவிலியங்களில் காணக்கிடைக்கின்றது. 


 ஏசு ஒரு குறுகிய இனவாத மனிதர் என்பதும் விவிலியங்களில் காணக் கிடைக்கிறது. உதவி கேட்ட கானானியப் பெண்ணுக்கு (மத்: 15: 21-28) உதவுவது இஸ்ரவேலருக்குரியதை மாற்றாருக்குக் கொடுப்பது தவறு என்கிறார். 


இப்படி சொல்லும் பல தூதுவர்கள் அப்போது இஸ்ரவேலில் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களில் இவர் தன்னைக் கடவுளாகவோ, கடவுளின் மகனாகவோ நினைத்திருக்கிறார். (119) 


விவிலியங்களின் வார்த்தைகள் அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடியவையல்ல. ஏசுவின் போதனைகள் நேரடியாக எழுதப்பட்டவை அல்ல. அவையெல்லாம் பலப்பல செவிவழிச் செய்திகளே – ஒருவர் சொல்லி, அடுத்தவர் கேட்டு அவர் சொல்லி, அவர் கேட்டு மீண்டும் சொல்லி .... என்று வந்தவை. ஆகவே தான் அதில் பல முரண்கள், முரண்பாடுகள் உள்ளன. 


இதை கிறித்துவ பக்திமானான பார்டன் எஃர்மேன் (Barton Ehrman) என்பவர் பல கிறித்துவக் கதைகள் பின்னால் எழுதிச் சேர்க்கப்பட்டவை என்று சொல்கிறார். (120) 


தன் விவாதத்திற்கு (யோவான்: 8: 3-11) என்ற நிகழ்வை எடுத்துக் கொள்கிறார். ‘உங்களில் பாவம்செய்யதவன் முதல் கல்லை எறியட்டும்’ என்று கூறி ஒரு விபச்சாரியைக் காப்பாற்றும் நிகழ்வு அது. இதை ஏசு சொன்னதும் சுற்றியிருந்த அனைவரும் சென்று விடுகிறார்கள். அப்படியானால் அதன் பின் நடந்ததை யார் கேட்டிருப்பார்கள்? (121) 


பார்டன் எஃர்மேன் மேலும் சில கேள்விகளை எழுப்புகிறார். “அந்தப் பெண்ணோடு தீச்செயலில் ஈடுபட்ட ஆண் எங்கே? 


மேலும் அவர் “இந்த நிகழ்வு நமக்குக் கிடைத்த பழைய கைப்பிரதியான யோவான் விவிலியத்தில் காணப்படவில்லை. இப்போதைய விவிலியத்தில் இந்நிகழ்வைச் சொல்லும் வார்த்தைகள் பலவும் வித்தியாசமானவை; அவை யோவான் விவிலியத்தில் வரும் ஏனைய மொழி நடையில் இல்லை. 


எனது முடிவு: இந்த நிகழ்வு உண்மையிலேயே இந்த விவிலியத்தில் மூலப்படிவத்தில் கூறப்பட்டதல்ல”. 


ஆகவே, வெளிப்பாடுகளை நம்புபவர்கள் வெறும் விசுவாசத்தால் மட்டுமே அவைகளை நம்புகிறார்கள். அவர்கள் தைரியமாக, வெளிப்படையாக இதை ஒப்புக்கொள்ளும் தைரியம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். 






 *

Sunday, November 13, 2016

915. அசோகர் -- "குங்குமம்" இதழில் ஒரு அறிமுகம்





*
18.11.16
குங்குமம் ஜங்ஷன்
புத்தகம் அறிமுகம்
பேரரசன் அசோகன்

சார்லஸ் ஆலன் / தமிழில்: தருமி
(எதிர் வெளியீடு, 96 நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி – 642 002. விலை ரூ. 400.
தொடர்புக்கு; 98650 05084)


“சாலையெங்கும் மரங்களை நட்டார் அசோகர்” என படித்தறியாத சிறுவர்கள் இங்கே எவரும் இருக்க முடியாது. அததகைய பேரரசன் அசோகனின் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட வரலாற்றை விவரிக்கிறது இந்நூல்.

அசோகன் வெறும் மன்னர் மட்டுமில்லை, அவரது மனச்சித்திரங்களாகக் காணக்கிடைப்பது ஆச்சரியமூட்டுகிறது. அவர் ஒரு தேசாந்திரியாக இருந்திருக்கிறார். அவரது பயணங்கள் விசாலமானவை. வாழ்ந்த இடமே மறந்து போகிற அளவுக்குப் பயணப்பட்டிருக்கிறார். அனைத்து மதங்களுமே மரியாதைக்குரியவை என நினைத்து வந்திருக்கிற அசோகனின் பெருந்தன்மை நினைவு கூரத்தக்கது. வரலாற்றைப் புறக்கணித்து விட்டு நாம் வந்துவிட இயலாது. மக்களின் மகிழ்ச்சி, அவர்களின் வாழ்க்கைத் தரம் என அவர் எப்போதும் கவனம் செலுத்தி வந்திருப்பது அழகு, சிறப்பு. வாசகனைச் சென்றடைய வேண்டிய முயற்சிகளை சார்லஸ் ஆலன் திறம்பட உழைத்து அமைத்திருக்கிறார்.


மொழியாக்கத்தில் தருமியின் செயல்பாடு மனதுக்கு நெருக்கமானது. முன்னோர்களை அறிய முயல்வது நம்மை அறிவது போன்றதே.








***

இவ்வார குங்குமத்தில் வந்த அறிமுகம்.

மகிழ்ச்சிக்குரிய ஒன்றை இந்த அறிமுகத்தில் பார்த்து  மகிழ்ச்சி அடைந்தேன். அசோகர் நூலை வாசிக்கும் போதே நான் ஆச்சரியப்பட்ட செய்தி அது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே இன்றும் நம்முடன் இருக்கவேண்டிய சமய நல்லிணக்கமும் மதத் தீவிரவாதத்திற்கு எதிரான கருத்துகளும் அன்றே அவரது மனதில் தோன்றி அதனைக் கல்வெட்டுகளில் அடித்து வைத்த அந்த மாமன்னனின் தீர்க்கப்பார்வை இன்னும் பெரும் ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. 

சார்லஸ் ஆலனின் முழுமையான அர்ப்பணிப்பும் என்னை ஆச்சரியப்பட வைத்த இன்னெரு விஷயம்.

இவை இரண்டையும் இந்த அறிமுகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.  

நன்றி



அசோகரின் மலைக் கல்வெட்டுகள்

எல்லோரும் என் குழந்தைகளே...  என் குழந்தைகளுக்கு நான் என்ன விரும்புகிறேனோ அவர்களின் நலமும் மகிழ்ச்சியும் இந்த உலகத்தில் மட்டுமல்லாது மறு வாழ்விலும் வேண்டியது போல் எல்லோருக்கும் அவை கிடைக்க வேண்டுமென்று  ஆசைப்படுகிறேன்.  எனது இந்த ஆசை எவ்வளவு பெரியதென்று உங்களுக்குத் தெரியாது.


***


எல்லா சமயங்களின் கருத்துகளும் நன்கு வளர வேண்டும். 

... தன் சமயத்தைத் தானே  புகழ்வதும், ஏனைய சமயங்களைக் காரணமின்றி குறைகூறுவதும் தவறு. 

....  யாரெல்லாம் தங்கள் மதத்தின்மீது கொண்ட தீவிரமான பற்றில் அதனைப் போற்றி ஏனைய மதங்களைக் குறை சொல்கிறார்களோ அவர்கள் உண்மையில் தன் மதத்தை தாங்களே தாழ்த்திவிடுகிறார்கள்.  

ஆகவே சமயங்கள் ஒன்றோடொன்று தொடர்புகொள்வது மிக நல்லது. ஒவ்வொருவரும் அடுத்த மதங்களில் சொல்லப்படும் கொள்கைகளைக் கட்டாயம் கேட்கவேண்டும். 


****


Wednesday, November 02, 2016

914. GOD IS NOT GREAT ... CHRISTOPHER HITCHENS ... 1





*

                   இரண்டாம் பதிவு


             மூன்றாம் பதிவு 

                                            CHRISTOPHER HITCHENS'

                                    GOD IS NOT GREAT:  
                       HOW RELIGION  POISONS  EVERYTHING                                        
                                                          
                          

கிறிஸ்டோபர் ஹிட்சன்ஸ் (Christopher Eric Hitchens) இங்கிலாந்தில் உள்ள போர்ட்ஸ்மவுத் என்னுமிடத்தில் 1949 ஆண்டு பிறந்தார்.   1970ல் ஆக்ஸ்போர்டில் பட்டப்படிப்பை முடித்தார்.  1981 ஆண்டில் அமெரிக்காவிற்குப் பயணமானார். 2007ல் அமெரிக்க குடிமகனாக – ஆங்கிலேய-அமெரிக்கனாக -  ஆனார். டிசம்பர் 2011ல் உணவுக்குழல் கான்சரில் மரணமடைந்தார்.

அவர் சாகும் நேரத்தில் தன்னை எதிர் நோக்கி வந்த  மரணத்தை கம்பீரமாக அனைத்துக் கொண்ட மன வலிமையை அவர் அப்போது எழுதியிருந்த ஹிச்-22 (Hitch-22) என்ற நூலை வாசிப்பவர்களுக்கு மிக எளிதாகப் புரியும். அதில், “மரணத்தை நேர்கொண்டு சந்திக்க விரும்புகிறேன்; என்னைத் தேடி வரும் மரணத்தை அதன் நேர்பார்வையில் கண்ணோடு கண் நோக்கி ‘வந்து பார்’ என்று சொல்லி, சந்திக்க விரும்புகிறேன்” என்று அதில் எழுதியுள்ளார். அந்த வரிகள் நம் மகா கவியின் இரு வரிகளை என் நினைவுக்குக் கொண்டு வந்தது:

                                 “காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
                                  காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்”.

சாகும் தருணத்திலும் இறை சக்தி தன்னை விடுவிக்கலாம் என்று நம்புவது நான் முன்பு நினைத்ததை விடவும் வெறும்  அர்த்தமற்றதாகவும், மேம்போக்கான கருத்தாகவும் தோன்றுகிறது என்று எழுதியுள்ளார். இறை மறுப்பில் அத்துணை உறுதியோடு இருந்துள்ளார்.

ஏழு வயதிலேயே உலக அரசியலில் நாட்டம் ஆரம்பித்தது. அப்போதிருந்த உலகச் சூழலும் ஹங்கேரி, சூயஸ் பிரச்சனைகளும் தனக்கு அப்போதே நன்கு தெரிந்திருந்தன என்று  1997ல் கொடுத்த செவ்வியில் கூறியுள்ளார். முளையிலேயே அவருக்கு ஏற்பட்டிருந்த இந்த ஆர்வம் அவரை ஒரு பெரும் பத்தியாளராக உருவெடுக்க வைத்தது. அதோடு நில்லாது கட்டுரையாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர், இதழாளர், பேச்சாளர், சமூகத்  திறனாய்வாளர், மதத் திறனாய்வாளர் என்று பன்முகங்களோடு வெற்றிகரமாகச் செயல்பட்டார். வானொலி, தொலைக்காட்சி, விவாத மேடை என்று பல ஊடகங்களிலும் பேசுவதற்கு தொடர்ந்து அழைப்புகள் வந்தன. எளிமையான தோற்றத்துடன் சென்று வலிமையான வார்த்தைகளால் முழங்கி வந்து கேட்போரை ஈர்த்து வந்தார்.

பரம்பொருள் ஒன்று உண்டு என்பது ஒரு சர்வாதிக்காரத்தனமான நம்பிக்கை. இது முழுமையாக தனிமனித சுதந்திரத்தை முழுமையாக வேரரறுத்து விடும். சுதந்திரமான வெளிப்பாடுகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் – இவை இரண்டும் மதப்போதனைகளுக்கு சரியான மாற்றாக அமைய வேண்டும். அந்த இரு காரணிகளும் வாழ்வியலை, கலாச்சாரத்தை நமக்குப் போதிக்க வேண்டும். “சான்றுகள் இல்லாமல் அழுத்தமாகக் கூறப்படும் எதையும் சான்றுகள் கூட இல்லாமல் புறந்தள்ளி விடவேண்டும்” என்பது ஹிட்சன்னின் ஆணித்தரமான கருத்து.


அவரது நூலைப் பற்றி ...

கட்டுப்பாடுள்ள மதங்கள் மிகவும் வன்முறையான, அறிவுக்குப் பொருந்தாத, நல்லிணக்கமற்ற தன்மைகளைக் கொண்டுள்ளன. மேலும் அவை இனவெறி, குழுவெறி, மதவெறி போன்ற தேவையற்றவைகளைத் தூண்டி விடும் தன்மை வாய்ந்தவை. மதங்களின் முக்கிய முதலீடுகளே அறியாமையும், அறிவுத் தேடலுக்கு எதிர்ப்பும், பெண்களை அடிமைப்படுத்துவதும், குழந்தைகளை வலிந்து இழுத்து வைத்திருப்பதும் தான். பிளவு படுத்துதலே அவைகளின் முன்முதல் குறிக்கோளாக உள்ளது.

முதல் அத்தியாயத்தில், தான் தனது ஒன்பதாவது வயதிலேயே விவிலியத்தின் மீது கேள்விகளை எழுப்பியதாகச் சொல்லியுள்ளார். கிடைத்த பதில்களும், சொல்லப்பட்ட தெய்வீகத் திட்டங்களும் மிகுந்த குறையோடு இருப்பதாகத் தனக்குத் தோன்றியதாகச் சொல்லியுள்ளார்.

அத்தியாயம் நான்கில், மதங்கள் மருத்துவத்திற்கு எதிராக இருப்பதாகக் கூறியுள்ளார். போலியோவிற்கான தடுப்பு மருந்துகளுக்கு எதிராக இஸ்லாமியர் இருப்பதைக் குறிப்பிடுகிறார்.

ஆறாவது பகுதியில் ஆப்ரஹாமிய மதங்கள் நம்பிக்கையாளார்கள் எல்லோரும் தங்களைப் பாவிகள் என்று நினைக்க வைத்து சுய மரியாதையைக் கெடுத்து அவர்களைக்  குட்டிச்சுவராக ஆக்கி விடுகிறது.  அதே நேரத்தில் தங்களைப் படைத்த கடவுள்கள் தங்களைக் காத்து ரட்சிக்கக் காத்திருப்பதாக நினைக்க வைத்து கடவுள்களை பெரும் பீடத்தில் ஏற்றி நிறுத்தி விடுகின்றன.

ஏழாவது அத்தியாயத்தில் பழைய ஏற்பாட்டில் உள்ள குழப்பங்களைப் பற்றி எழுதுகிறார். பழைய ஏற்பாடு தலையைச் சுற்ற வைக்கும், அச்சுறுத்தும் முன்பின் தொடர்பில்லாத நம்பமுடியாதவைகளின் தொகுப்பு.

எட்டாவது அத்தியாயம்: புது ஏற்பாடு பழைய ஏற்பாட்டை விட தீயதாக இருக்கிறது என்கிறார். கிறிஸ்து சிலுவையில் மரித்த பிறகு பல ஆண்டுகள் கழித்தே புதிய ஏற்பாடுகள் பலரால் எழதப்பட்டன. அதுவும் அவைகளுக்குள் நிறைய வேற்றுமை உள்ளன. அவைகள் சொல்வதையெல்லாம் அப்படியே ஒப்புக்கொள்ளும்படியான உண்மைகளை அவைகள் சொல்லவில்லை. ஏசு என்று ஒருவர் இருந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகளும் ஏதுமில்லை என்கிறார்.

லூக்காவின் விவிலியத்தில் ஏசுவின் பிறப்போடு ஒட்டியுள்ள மூன்று நிகழ்வுகளில் உள்ள பொருத்தமின்மையைக் குறிப்பிடுகின்றார். அகஸ்டஸ் ரோம ராஜ்ஜியம் முழுமைக்குமான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுத்தது, ஹெரோது மன்னன் யுதேயாவை ஆண்டுகொண்டு இருந்தது, சிரியாவின் கவர்னராக குயிரினியஸ் இருந்தது – இந்த மூன்று நிகழ்வுகளும் வரலாற்றின்படி சரியான தகவல்கள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அகஸ்டஸ் எடுத்த கணக்கெடுப்பு பற்றி எந்த வரலாற்றுக் குறிப்புகளும் கிடையாது. யூத வரலாற்றாசிரியர் ஜோசபஸ் அப்படி நடந்த ஒரு கணக்கெடுப்பில் மக்கள் தங்கள் பிறந்த ஊருக்கே திரும்ப வேண்டுமென்று எந்த உத்தரவும் தரவில்லை. அந்தக் கணக்கெடுப்பும் ஏசு பிறந்து ஆறு ஆண்டுகள் கழித்த பின்பே எடுக்கப்பட்டது. அடுத்து, ஹெரோது மன்னன் 4 BC-லேயே இறந்ததே வரலாறு தரும் செய்தி. மூன்றாவதாக குயிரினியஸ் சிரியாவின் கவர்னராக இருந்தது அந்தக் காலக்கட்டத்தில் இல்லை.


ஒன்பதாவது பகுதியில் இஸ்லாமிய மதம் பற்றிய தன் கருத்துகளைக் கூறுகிறார். முகமதுவும் அவரது வழியைப் பின்பற்றியவர்களும் ஏனைய மதங்களிலிருந்து கடன் வாங்கியவைகளை வைத்தே இம்மதத்தை உருவாக்கினர். ஹதிஸ் அனைத்தும் அப்போது  அரேபியாவிலும், பெர்ஷியாவிலும் பரவலாகப் பேசப்பட்டவைகளின் தொகுப்பு என்கிறார்.

அடுத்த பத்தாவது அத்தியாயத்தில் புதுமைகள் என்பவை எல்லாம் வெறும் கட்டுக் கதைகள் அல்லது புரிதல் இல்லாத, நம்ப முடியாத மக்களின் பிதற்றல்கள் என்பது அவர் கருத்து.

பதினொன்றாவது அத்தியாயத்தில் எப்படி மதங்கள் உருவாகின; எப்படி ஒழுக்கமில்லாத, தவறான மனிதர்கள் அவைகளை உருவாக்கியதாகச் சொல்லிக் கொள்கிறார்கள் என்று விளக்குகிறார். மார்ஜோ கார்ட்னர் (Marjoe Gortner) பெந்தகொஸ்தே சபையை உருவாக்கியதையும், ஜோசப் ஸ்மித் என்பவர் மார்மோனிசம்  என்ற ஒரு வழிபாட்டு முறையை உருவாக்கியதையும் விளக்கியுள்ளார்.

அடுத்து, பதினாலாவது பகுதியில் இந்து மதமும் புத்த மதமும் வறுமையையும், தவறான தகவமைப்புமுள்ள பிரபுத்துவத்தின் ஆளுமையையும் கொண்டுள்ளன.  “நிர்வாணம்” என்பதன் மூலம் முக்தியடையலாம் என்று திபெத்திலும் இலங்கையிலும் இம்மதங்கள் கற்பிப்பதை முற்றிலுமாகப் புறந்தள்ளுகிறார்.





கோவிலுக்கு வெளியே செருப்பைக் கழட்டி வைப்பது போல் உங்கள் மனதையும், காரண காரியங்களையும் கழற்றி வைத்துவிட்டு வாருங்கள் என்பதைப் பொருளற்றது என்று எதிர்க்கிறார்.  அவர் இந்தியாவிற்கு வந்து புனேயில் தங்கியிருந்த போது காசு பிடுங்கும் உத்தியில் சிறந்து பணம் பறித்திக்கொண்டிருந்த சந்திர மோகன் என்பவரையும், சத்யநாராயண ராஜூ என்பவரையும் சந்தித்தது பற்றியும் குறிப்பிடுகிறார்.

பதினைந்தாம் அத்தியாயத்தில் மதம் தான் முதல் பாவம்என்று கூறிவிட்டு, மதங்களில் உள்ள ஐந்து பெரும் முறையற்ற கொள்கைகள் என்று வரிசைப்படுத்துகிறார்.
1.             மிக எளிதாக நம்பும் மக்களிடம் இந்த உலகைப்பற்றிய தவறான ஒரு பார்வையை ஏற்படுத்துதல்.
2.             (அஸ்டெக் மதத்தில் இருப்பது போல்) உயிர்ப்பலி கொடுத்து கடவுளை ‘குளிர’ வைக்கலாம் என்று புகட்டுவது.
3.             பாவப்பட்ட மக்களை ‘பரிகாரம்’ என்ற குழிக்குள் தள்ளுவது.
4.             மறுமையில் நித்தியமான மோட்சம் / சுவனம் / முக்தி என்றோ, நித்தியமான நரகம் என்றோ சொல்லி ஏமாற்றுவது.
5.             எளிதில் கைக்கொள்ள முடியதவைகளை – பாலினக் கட்டுப்பாடுகள் போல் – மக்கள் தலையில் சுமத்துவது.

பதினெட்டாம் அத்தியாயம்: சாக்ரட்டிஸ், ஐன்ஸ்டீன், வால்டர்(Voltaire), ஸ்பினோசா(Spinoza), தாமஸ் பெய்ன்(Thomas Paine), சார்ல்ஸ் டார்வின், ஐசக் ந்யூட்டன் போன்ற பெரும் அறிஞர்கள் பற்றிய விளக்கங்களைத் தருகிறார். இவர்களில் சாக்ரட்டிஸ், ந்யூட்டன்தவிர மற்றவர்கள் அனைவரும் இறை மறுப்பாளர்களாகவோ, இயற்கை வழிபாட்டாளர்களாகவோ, இறைநாட்டம் இல்லாதவர்களாகவோ இருந்ததைக் குறிப்பிடுகிறார்.

ஞ்னத்திற்குப் புது வழி” என்ற தலைப்பில் கடைசி அத்தியாயத்தில், முன்பு இருந்தது போல் இல்லாமல் இப்போதைய உலகில் மனிதர்களிடம் மதங்களின் தேவை மிகவும் குறைந்து விட்டது என்று விவாதிக்கிறார். நிகழ் காலத்தில்  தனிமனித வாழ்விலும், பொதுக்கலாச்சாரத்திலும் அறிவியலுக்கும், காரணகாரியங்களுக்குமே பெரும் பங்கு இருக்கிறது.  மதங்களிலிருந்து மானுடர்களை மீட்டால் அது தனிமனித உயர்விற்கும், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

இறைமறுப்பாளர்கள் சமுதாயத்தை மதங்களின் பிடியிலிருந்து விடுவிக்க உழைக்க வேண்டும்.






*




Thursday, October 27, 2016

913. மதங்களும் ... சில விவாதங்களும் ... நூலைப்பற்றி சில வார்த்தைகள்






*


மானமிகு பேராசிரியர் தருமி அவர்களுக்கு,

வணக்கம்.நலம்காண விழைகிறேன்.

தங்களின் மதங்களும் சில விவாதங்களும் என்ற தலைப்படங்கிய நூலினை தஞ்சாவூர் வேர்ட்ஸ்வொர்த் புத்தக நிலையத்தில் பெற்று படித்திடும் வாய்ப்புகிடைத்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.

அறிவார்ந்த விளக்கங்கள்.விமர்சனங்கள்


 உளமார்ந்த பாராட்டுக்கள்

 அன்புடன்.


  உரத்தநாடு இரா.குணசேகரன்






 *

Thursday, October 20, 2016

912. மதங்களும் ... சில விவாதங்களும் -- நூலாய்வு







*

K.V. KRISHNASWAMI writes ....

வணக்கம்.

சென்னை ராயபேட்டையில் நடந்த புத்தக கண்காட்சியில் தங்கள் புத்தகத்தை அதன் தலைப்பை கண்டவுடன் உடனே வாங்கவேண்டும் என்கிற அவா தோன்றியது. காரணம், நான் சாதி-மதங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்கிற தீவிர கொள்கையுடையவன். 1982ல் "இந்திய தேசிய சமதர்ம சங்கம்" என்கிற பெயரில் ஒரு சமூதாய இயக்கத்தை நடத்தி வந்தேன். ஆனால் நான் எதிர்ப்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இன்றைய மக்கள் சினிமாவையும் அரசியலையும் தானே விரும்புகிறார்கள் என்பதால் பிறகு அதையே ஹிந்துஸ்தான் தேசிய கட்சி என்று அரசியல் கட்சியாக பதிவு செய்து மிக எளிய முறையில் சேவை மனப்பான்மையுடன் முன்னேற்ற பாடுபட்டு கொண்டிருக்கிறேன். எனவே இது சம்பந்தமாக அரசியல் ரீதியாக அறிவை வளர்த்துக்கொள்ள புத்தகங்களை சேகரித்து வருகிறேன்.

தங்கள் புத்தகத்தை வாங்கி புத்தக stallஐ விட்டு வெளியேரும்போதே புத்தகத்தை விரித்தபோது தருமி என்கிற புனைபெயரில் G.Sam George எழுதியிருக்கிறாரே? இவர் கிருத்துவத்தை போற்றித்தானே எழுதியிருப்பார் என்று துணுக்குற்றேன். பிறகு பேருந்தில் அமர்ந்தவுடன் என்னதான் எழுதியிருக்கிறார் பார்க்கலாமே என்று புத்தகத்தை புரட்டி முன்னுரையின் இரண்டாம் பத்தி கண்ணில் பட்டவுடன் என் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டு மொத்தமும் ஒரே மூச்சில் படித்தபின் முதலில் ஏற்பட்ட தவறான எண்ணத்திற்கு உளமார வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொண்டுவிட்டேன். 

தங்களின் புத்தகத்தில் உள்ளது அத்தனையும் பெரும் மதிப்புக்குரிய செய்திகள். இதை ஊன்றி படித்தவர்கள் கண்டிப்பாக சாதி மதத்தைப்பற்றி யோசிக்க தூண்டப்படுவார்கள். யார் மனதையும் புண் படுத்தாமல் , எந்த மதத்தையும் குறைகூறாமல் மிக அழகாக வேதங்களில் உள்ள ஓட்டைகளை வெளிபடுத்தி மதங்களைப் பற்றி சிந்திக்க வைக்கிறது தங்கள் புத்தகம். நன்றி.

தங்கள் சேவை மேலும் தொடர வேண்டுகிறேன்.


 தங்கள்,

 K.V.Krishnaswami.
 Jan 25, 16





 *

Wednesday, October 19, 2016

911. தமிழுக்கும் எனக்கும் நடக்கும் நீண்ட நெடும் போர் .......





*



 இன்றைக்கு இன்னொரு கூத்து.

இப்போதெல்லாம் தமிழில் தட்டச்ச தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கும் வேலையை செய்ய வேண்டியதாகி விட்டது. Windows 10.1 version போட்டதிலிருந்து ஒரு தலைவலி போய் அடுத்த தலைவலின்னு வந்து வந்து போய்க்கொண்டிருக்கிறது. NHM writer, e-kalappai…. எதுவும் வேலைக்காகவில்லை. இப்போது அது இது என்று சுற்றித் திரிந்து விட்டு google tools வழியாக கஷ்டப்பட்டு ஏதேதோ தட்டச்சி பொழப்பை ஒரு மாதிரியாக ஒட்டிக் கொண்டிருக்கிறேன். பல கஷ்டங்கள்.... அதில் ஒன்று ‘ஞ்’ என்ற எழுத்துக்கு நெடில் எப்படி தட்டச்சுவது என்றே தெரியவில்லை.

 ------------------------------

இப்போது தமிழில் தனியாகத் தட்டச்சி அதை என் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டேன். Publish என்பதை அழுத்தி விட்டு பதிவைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தேன். என்ன ஆச்சோ ... ஏது ஆச்சோ ... தெரியவில்லை. நான் தமிழில் தட்டச்சியது எப்படியோ ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி என்னைப் பார்த்து முழித்து நின்றது. அதை வாசித்து விட்டு நானும் முழித்து நின்றேன். அப்படி ஒரு அழகிய மொழிபெயர்ப்பு!!!! நீங்களும் வாசித்துப் பாருங்கள்.

 ------------------------------

 அடுத்துவரும் முதல் பத்தி நான் தமிழில் எழுதியது. அடுத்து இரண்டாம் பத்தி அதுவாகவே மொழி பெயர்ப்பாகி நின்ற கோலம்.

 --------------------------------

 ' ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி ' சிடி சினிமாவில் ஓடியது போல் எனக்கு ஒரு நினைவு. நிச்சயமாகத் தெரியாது.

இன்னொன்று நினைவுக்கு வருகிறது. நாயக்கர் மகாலில் இருந்து பார்த்தால் சிந்தாமணி தியேட்டரின் elevation வித்தியாசமாகத் தெரியும். அதன் நடுப்பகுதி பழைய காமிராவில் உள்ள bellows மாதிரி இருக்கும். அப்படி டிசைன் செய்திருக்கிறார்கள்.

முதன் முதல் கலர்படம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் இந்த தியேட்டரில் வந்தது. படம் பார்க்கனும்னு அப்பாட்ட கேட்டதும் பக்கத்து வீட்டில் இருந்தவர், என் நண்பனின் அப்பா அந்த தியேட்டரின் ஆப்பரேடர் ஆக இருந்தார். அவரோடு அனுப்பி வைத்தார்கள். அவர் மாட்னி நடக்கும் போதே என்னை உட்கார வைத்து விட்டுப் போய் விட்டார். படம் முடிந்ததும் எல்லோரும் போய் விட்டார்கள். நான் மட்டும் தியேட்டர் மெத்தையில் கடைசி வரிசையில் தனியாக உட்கார்ந்திருந்தேன். முருக்கு வந்தது. சாப்பிட்டுக் கொண்டு 'அம்பேல்' என்று உட்கார்ந்திருந்தேன். அதன் பின் மாலைப் படம் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தேன். 

 ------------------------------------

Blogger Tarumi said ... 

 'Apoorva Chintamani bought a thousand head, "I have a memory like CD and ran in the cinema. We do not know. 

There comes to mind. From the elevation of the theater Chintamani Nayak Mahal incorporating knew differently. In its mid old bellows camera model. Design done so. 

The first came in this theater kalarpatam Alibaba and forty thieves. Image parkkanumnu appatta neighbor had heard, my friend's father was the theater of the operator. He was sent to. Matni happens when he went from me to sit. The film was finished, everyone was gone. I sat alone in the last row of the theater of the mattress. Was mur. Eating 'ampel he sat down. After that evening I came home from watching the film. 

======================
இப்படம் வந்த ஆண்டு 1955. என் வயது அப்போது 11

===========================


இப்படி மொழி பெயர்த்தால் எப்படி இருக்கும்???




*

Saturday, October 15, 2016

910. சின்ன artist .........





*



 U.K.G. படிக்கும் சின்ன பேத்தி எங்கள் பொறுப்பில் மூன்று நாட்கள் இருந்தாள். வரும்போதே crayons, sketch pens, one new drawing note என்று கனக்கச்சிதமாக வந்தாள். drawing note முடிந்து அதன் பின் கையில் கிடைக்கும் பேப்பரில் எல்லாம் படம் தான்.

அக்காளுக்கு நல்ல போட்டிதான்.












 கடைசிப்படம் அவளதுஅக்கா தனது முதல் வகுப்பில் படிக்கும் போது வரைந்த படம்.








NO  PLASTIC  BAG!


FLOWERS




அம்மா,  அக்காவுடன்




BIG  BOAT




SMALL  OCCUPIED  BOAT ON  WAVES





அம்மா,  அக்காவுடன்


******
அக்கா  வரைந்தது ....






 *