Sunday, September 18, 2022

1186. என் மேல ஒரு கேசைப் போடு பார்ப்போம் - திரைவிமர்சனம்




*

என் மேல ஒரு கேசைப் போடு ... பார்ப்போம்

குமாரசாமி மாதிரி ஆளுக நிறைய இருக்காங்க ...  குன்கா மாதிரிதான் நமக்கு யாருமில்லை ...




பல நாள் கழித்து 19 (1) (a) என்ற மலையாளப் படம் பார்த்து அசந்தேன். அதைப் பார்த்த ஒரு நண்பர் இன்னும் இரு படங்கள் பெயரைச் சொல்லி அவைகளையும் பார்க்கச் சொன்னார். ஒரு 19 (1) (a) பார்த்து விட்டு, இதுபோல் தமிழில் படமெடுக்க இன்னும் பத்தாண்டுகள் ஆகும் என்றேன். ஆனால் நண்பர் சொன்ன இரு படங்களில் ஒன்றான .. என் மேல கேசைப் போடு / Enn, thaan case kodu / sue me … என்ற தலைப்பில் உள்ள படத்தைப் பார்த்தேன். பார்த்ததும், ஒரு காலத்திலும் இப்படி ஒரு படம் தமிழில் வரவே வராது என்றே முடிவு செய்தேன்.

இரண்டு நடிகர்களை முதன் முதல் பார்க்கிறேன். அவர்களைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும்.

கதாநாயகனின் பெயர்:  குஞ்சாக்கோ போபன்.

நீதிபதியாக (மேஜிஸ்ட்ரேட்)  - குன்ஹி கிருஷ்ணன்.

கதை, வசனம், இயக்கம்  - android kunjappan  படம் எடுத்த ரத்தீஷ் பாலகிருஷ்ணன் போடுவால்.

ஆகஸ்டில் வெளிவந்த இப்படத்திற்கு இதுவரை வசூல் 50 கோடி. இதை ஏன் சொல்கிறேனென்றால் மலையாள ரசிகர்கள் இப்படத்தை மிக நன்றாக வரவேற்றுள்ளார்கள்.

இது ஓர் அரசியல் அங்கதம். பாவப்பட்ட மனுஷன் ஒருவன்சாலையில் உள்ள பள்ளத்தினால் சுவர் ஏறிக் குதிக்கிறான். அமைச்சர் வீடு அது. நாய்கள் குண்டியைக் (என்ன .. கேட்க நாராசகமாக இருக்கிறதா? படத்தில் அப்படித்தான் பேசுகிறார்கள்!) கடித்துக் குதறி விடுகின்றன. அவன் மேல் திருட்டுக் குற்றத்தைச் சாட்டுகிறார்கள். அவனோ சாலை சரியாகப் போடவில்லை என்று அமைச்சர் மேல் கேஸ் போடுகிறான். மந்திரிக்குக் கடைசியில் தண்டனையும் தண்டமும் கிடைக்கிறது.

முதல் அரை மணி நேரம் பார்த்து விட்டுப் படுக்கப் போய்விட்டேன். வடிவேலு சொல்வது போல் நான் பார்த்த முதல் பகுதி சின்னப்பிள்ளைத் தனமாகத் தோன்றியது. ஒரே ஒரு விசயம் தவிர. கதாநாயகன் ஒரு பூமர் அங்கிள். அவர் பயந்து ஓடி ஒரு கூட்டத்தில் நிற்கிறார்.  எல்லோரும் ஆடுகிறார்கள். நம் அங்கிளும் ஆடுகிறார். அது எனக்கு நிறைய பிடித்தது. (அந்த நடனத்தைப் ப்ரோமாகப்  போட்டு பயங்கரமாக ஹிட் ஆகியிருந்திருக்கிறது. மம்முட்டியின் பழைய படத்தை வைத்து ஆடிய நடனமாம் அது..)

அடுத்த நாள் படத்தைத் தொடர்ந்தேன். நிறுத்த முடியவில்லை. கதை பெட்ரோல் 65 ரூபாய் விற்பதிலிருந்து ஆரம்பித்து, நூத்தி சொச்சம் வரை செல்வது வரை கதையும் தொடர்கிறது என்று காண்பிக்கிறார்கள். நீதிமன்றத்துக் காட்சிகள். மாஜிஸ்ட்ரேட்டாக ஒருவர் வருகிறார்.  அப்படிப் பிடித்தது அவரை எனக்கு. பெயரும் அவரைப் பற்றிய விவரங்களையும் தேடினேன். Got confused!  இறுதியில் கண்டு பிடித்து விட்டேன். அவர் பெயர் குன்ஹி கிருஷ்ணன். . அசத்தலான நடிப்பு. 

                               

வழக்கு விசாரணையைக் கேட்டுக் கொண்டே  பாதாம் பருப்பு சாப்பிடுவது, ரத்த அழுத்த மாத்திரை சாப்பிடுவதும் ... கோர்ட் அறைக்குள் சுற்றியலையும் புறாக்களை சைட் அடிப்பதும் ... மனுஷன் செம அலப்பறை. மந்திரியை போட்டுப் பார்க்கிறார். பார்க்கும் நமக்கும்  இவரைப் போன்ற குன்கா  நீதிபதிகள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது. ஆனால் நமக்குக் கிடைப்பதெல்லாம் வெறும் வெத்து குமாரசாமிகள்  மட்டும் தான்.

சாதாரண கதை.  நிறைய ஜோக்குகள். இவைகள் எல்லாம் கற்பனைதான் என்றாலும் உண்மையாக இருக்கக் கூடாதா என்ற எண்ணங்களை மனதில் விதைக்கின்றன. இது போன்ற படங்களை அள்ளி அணைக்கும் மலையாள ரசிகர்களுக்கு என் அளப்பரிய மரியாதை.

நாங்களும் வளரணும் .........







*


Friday, September 16, 2022

1185. 19 (1) (a) - திரைவிமர்சனம்


 

ப்பாடா .. ஒரு வழியாக மொழியாக்கம் செய்து கொண்டிருந்த வேலை முடிந்தது. 532 கையெழுத்துப் பக்கங்கள். இனி அதைச் சரிசெய்து…. இன்னும் எவ்வளவோ இருக்கு ... ஆனாலும் ஒரு பெரிய வேலையைச் செய்து முடித்த மகிழ்ச்சி. கொண்டாட வேண்டாமா...?


                                              

சினிமா அதுவும் மலையாளச் சினிமா பார்த்து விட வேண்டும் என்று நெட்பிளிக்ஸில் தேடலை ஆரம்பித்தேன். விஜயசேதுபதி மலையாளத்துப் படத்திலா? அதுவும் நித்தியா மேனன் படமா என்று ஓர் ஆச்சரியம். படத்தின் பெயர் 19(1)(a). அது என்ன சட்டம் என்று பார்த்தேன்: Article 19(1)(a) of the Indian Constitution upholds freedom of speech and expression.

 

படம் ஆரம்பித்தது. விடியாத இளங்காலை நேரம். விசே வருகிறார். ஒரு டீ குடிப்பதற்குள் யாரோ வந்து அவரைச் சுட்டு விட்டுப் போய் விடுகிறார்கள். அதற்குப் பிறகு கொஞ்சம் நேரம் வரை அவரைக் காணவே காணோம்.


                                               

 

படம் பார்த்ததும் அப்படி ஒரு பெரும் ஆச்சரியம். இது போன்று ஒரு படம் தமிழில் வருவதற்கு அநேகமாக இன்னும் பத்து ஆண்டுகளாவது ஆகும் என நினைக்கின்றேன்.ஏனெனில் நம் ரசிகப் பெருமக்களின் தரம் அப்படி. இப்படத்தில் விசே வரும் சீன்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மீதியெல்லாம் நித்தியா மட்டுமே வருகிறார். அவரைச் சுற்றி மூவர்: ஒரு (இஸ்லாமியத்) தோழி; ஒரு கம்யூனிச தோழர்; வாழ்க்கையையே ஒதுக்கி வாழும் தகப்பன். இவர்களும் வரும் இடங்கள் எல்லாமே ஒரு கை எண்ணுக்குள்ளேயே தானிருக்கும். படங்கள் எதையும் விளக்குவதில்லை. புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும் என்ற பாணி. டமில் ரசிகர்கள் இதில் தோற்றுவிடுவார்கள் என்று இயக்குநர்கள் பயப்படுவார்கள்.


 2017 ஆண்டில் பெங்களுரில் கொல்லப்பட்ட கெளரி லங்கேஷ் என்ற இதழாளரின் மரணம் இக்கதையின் ஆரம்ப வித்து. இதே போல் இப்படத்தில் வரும் சமுகப் போராளியான விசே கெளரி சங்கர் கொல்லப்படுகிறார். அவரால் எழுதப்பட்ட  அவரது கடைசி எழுத்துகள் நகல் எடுப்பதற்காக நித்தியாவிடம் வருகிறது.

 

பெண் இயக்குநர் இந்துவிற்கு இது முதல் படம். அவரது துணிச்சலுக்குப் பாராட்டுகள். தயாரிப்பாளருக்குப் பெரும் பாராட்டுகள். படம் ஒரு காவியம் போல் மெல்லவே விரிகிறது. படம் முழுவதும் நித்தியாவிற்கே சொந்தம். இறந்து போன போராளி மீது நித்தியாவிற்கு ஏற்படுவது மரியாதை ஏற்படுகிறது.  இல்லை .. அதையும் தாண்டி அவர் மீதான அபிமானம், அன்பு, பெருமிதம் எல்லாம் கூடுகிறது.அவரது நூலைத் தன் பையில் வைத்துக் கொண்டு நெஞ்சோடு அழுத்திப் பிடித்தபடியே இருக்கிறார்.  சுவற்றில் வரைந்த விசேயின் படத்தைப் பார்க்கும் போது பின்னாலிலிருந்து ஒரு கேள்வி: எதைப் பார்க்கிறாய்? படத்தையா, வாசகங்களையா? என்றொரு கேள்வி. நித்தியாவின் பதில் இரண்டையும் தான். இதுவும் ஒரு காதல் அல்லது பக்தி தான்.

 

விசேயின் அக்கா வீட்டிற்கு ஒரு பத்திரிகையாளரோடு செல்கிறாள் நித்தியா. அங்கே ஒரு virtual விசே வருகிறார். (இங்கேயும் டமில் ரசிகர்கள் பெயிலாகலாம்!) அமைதியான, அழகான சீன். அந்த வீட்டிலிலிருந்து கிளம்பி நடக்கும் போது நித்தியா நின்று திரும்பி வேகமாகத் திரும்பி வந்து விசெயின் அக்காவைக் கட்டிப் பிடித்துவிட்டு, பின் திரும்பாமல் விரைகின்றார். எனக்குப் பிடித்த சீன்.

 



 

விசே எப்படி என்றே தெரியவில்லை. தன்னுடைய இருப்பின் தாக்கத்தை முழுவதுமாகத் தந்துள்ளார். அந்தக் காலத்தில் சிவாஜி கணேசன் சிகரெட் பிடிக்கும் அழகிற்கு யாரும் பக்கத்தில் நெருங்க முடியாது என்று நினைப்பதுண்டு (புதிய பறவை, ‘யார் இந்த நிலவுப் பாடல் ... போன்றவைகள் நினைவுக்கு வருகின்றன).  அந்தப் பாடல்களில் சிகரெட்டும் இன்னொரு character ஆகவே இருக்கும். அதன்பிறகு பல நடிகர்கள் முயன்று தோற்றதை விசே மிக அழகாகச் செய்துள்ளார். சிவாஜியின் நடிப்பில் aesthetics நன்கிருக்கும். ஆனால் விசே செய்தது அப்படியே ஒரு smoker செய்யும் விதத்தை அழகாகக் காண்பித்திருப்பார். இவரும் சிகரெட்டை  ஒரு பாத்திரமாக ஆக்கியிருப்பார். மிக மிக சின்ன ரோல் தான் அவருக்கு. ஆனால் நிறைவாகச் செய்துள்ளார். இலைகள் நிறைந்த ஓர் ஒற்றையடிப்பாதையில் நடப்பதைக் காண்பித்திருப்பார்கள். நிறைந்த காட்சி. பின்னால் கதாநாயகி வந்து விடுவாரோ என்ற எண்ணம் மனதில் தோன்றுகிறது.

 

இப்படத்திப் பார்க்கும் போது, தீவிரமாக எழுதப்பட்ட ஓர் ஆணின் கவிதையை ஓர் அழகான பெண்ணின் குரலில் கேட்பது போன்றிருந்தது.

 

போராளிகள் கொல்லப்படலாம்; ஆனால் போராட்டம் சாகாது என்பதை மிக அழகாகப் படமாக்கியுள்ளனர்.

                                           



Wednesday, September 07, 2022

1184. பல்வலியும் ராசாவும்



*






பல் மருத்துவரைப் பார்க்கப் போனேன். நீளமாக, காலை நீட்டி உட்காருவது போலிருக்கும் படுக்கை நாற்காலியில் படுக்கப் போட்டார்கள். மருத்துவர் வந்தார். என்னைப் பரிசோதிப்பதற்கு முன் மாஸ்க் எல்லாம் போட்டுக்கொண்டு தயாராகிக் கொண்டிருந்த மருத்துவர் என்னைப் பார்த்து, “ சார்.. என்ன பிரச்சனை “என்றார். பிரச்சனையே இல்லை என்றேன். செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு என்னை (முறைத்துப்) பார்த்தார்! கண்ணில் ஒரு கேள்விக் குறி. “பல்லே இல்லை; அதுதான் பிரச்சனை” என்றேன். இப்படி ஆரம்பித்தது பல்சேவை!

வீட்டில் நால்வர். நானும் பிள்ளைகளும் காலை, இரவு என்று ஒழுங்காகப் பல் துலக்கினோம். பாஸ் காலையோடு சரி. ஆனால் பாருங்கள் .. எங்கள் மூவருக்கும் பல்வலி..பல் பிடுங்கல்கள், root canal மருத்துவம் என்று தொடர்ந்து வந்தன. எனக்கு இருபதுகளில் ஆரம்பித்த தொல்லை தொடர்ந்து வந்ததில் இறுதியில் பல் ஏதுமில்லா நிலைக்கு ஏறத்தாழ வந்து விட்டேன். முன்னால் பற்கள் இருந்ததால் வெளியே சிரித்துச் சமாளித்தேன். ஆனால் சாப்பிட அரைக்கும் பற்கள் வேண்டுமாமே... அதற்கு நான் எங்கு போய் கடன் வாங்குவது என்ற நிலை வந்ததும் மருத்துவரிடம் சென்றேன்.

பல்லுக்கெல்லாம் லட்சக் கணக்கில் செலவாகும் என்றெல்லாம் தெரியாது. பழையன கழிதலும் புதியன புகுதலும் பல்லுக்கு சின்ன வயசில் மட்டும் தான் நடக்குமாம். இப்போதெல்லாம் பல்லு போச்சுன்னா bridge போடணுமாம்; அல்லது implant செய்யணுமாம். பல்செட் காலமெல்லாம் மலையேறிப் போச்சாம்.

நாலைந்து நாளாகத் தொடர்ந்து சென்று மருத்துவம் செய்து வருகிறேன். பல் டாக்டர் என்றாலே வலி தான் நினைவுக்கு வரும். அந்தப் பயம் நிறைய இருந்தது. ஆனால் சும்மா சொல்லக் கூடாது. ஒரு பல் பிடுங்கப்பட்டது. எழு பல்கள் root canal செய்யப்பட்டன. அது ஒரு டாக்டரம்மா (Dr. Mohana, 7806959533).. இதுவொரு டாக்டரய்யா (Dr. Praveen Kumar, 9940548982). இதுவரை வலியேதும் இல்லை. அந்த நீள நாற்காலியில் நீண்ட நேரம் படுத்திருந்ததால் கொஞ்சம் முதுகில் வலி. A good magic combo. இரு மருத்துவர்கள் .. இதுவரை தொல்லையில்லாத, வலியில்லாத மருத்துவம். root canal செய்தும் வலிக்கவில்லை என்று சொன்னால் மகள்கள் நம்ப மறுக்கிறார்கள்.

இன்னும் ஒரு மகிழ்ச்சியான விஷயம். எனக்கும் மருத்துவர்களுக்கும் அப்படியொரு good rapport. very pleasant people and that made me write this.

நேற்று ஞாயிற்றுக் கிழமையும் சென்றேன். டாக்டர் மூன்று பற்களுக்கு மட்டும் root canal செய்தார். இந்த க்ளினிக்கில் பிடித்த இன்னொரு விஷயம் ஒரு பெரிய டிவியில் இயற்கைக் காட்சிகள் மட்டும் ஓடிக் கொண்டிருக்கும். மிக மிக அழகான ரம்மியமான காட்சிகள். ஆனால் அதோடு வரும் இசை ... அடேயப்பா... வெறும் ஒற்றை பியானோ என்று நினைக்கின்றேன். அத்தனை சுகம் அதைக் கேட்பது. (எப்படியாவது நகலெடுக்க நினைத்திருக்கிறேன்). ஆனால் ஞாயிற்றுக் கிழமை என்பதால் வழக்கமான நோயாளிகள் இல்லை. நானும் இன்னொருவர் மட்டும். அதனால் டாக்டர் வேலையை ஆரம்பித்தவருக்கு இசையில்லாமல் இருந்தது பிடிக்கவில்லை. துணைக்கு இருக்கும் மகேஷிடம் பாட்டுப் போடச் சொன்னார். மகேஷ் சின்னப் பையன். என்ன பாட்டு இருக்கும் அவனிடம். இரண்டு மூன்று குத்துப் பாட்டு ஓடியது. வாய்க் கொப்பளிக்க எழுந்தவன் “ஏம்பா .. எங்க ராசா இல்லையா?” என்றேன். டாக்டரும் உடனே பாட்டுகளை மாற்றச் சொன்னார். ஆஹா ... ராசா வந்தால் தனி ரகம் தானே. அது மட்டுமா ... டாக்டரும் தன் வேலையில் கருத்தாக இருந்தாலும் பாட்டுகளையும் மெல்ல முணுமுணுத்துக் கொண்டே பாடிக்கொண்டு வேலையைத் தொடர்ந்தார். எனக்கு ஒரு சின்ன கஷ்டம் ... பாட்டு கேட்கும்போது தன்னிச்சையாக வரும் தலையசைத்தலோ, கால்களால் மெல்ல தாளமிடுவதையோ தவிர்க்க வேண்டியதிருந்தது. ஆனால் ராசாவோடு பயணம் செய்ததால் root canal-ம் எளிதாகப் போனது.  


                                                       


இந்த மருத்துவமனையில் இன்னொரு நல்ல காரியம். மருத்துவம் பார்த்த அடுத்த நாள் அங்கு வேலை பார்க்கும் முதுகலையில் பரிசும் பட்டமும் பெற்ற பெண்மணி, பாமினி நம்மைத் தொலை பேசியில் அழைத்து, சுகம் விசாரிக்கின்றார். ( ஒரு சின்ன சந்தேகம் நமக்கு மட்டும்தான் இது போன்ற அழைப்பா என்று நினைத்தேன். அனைத்து “பல்லர் & பல்லி”களுக்கும் அவ்வாறு அழைத்து சுக நலம் விசாரிப்பது பழக்கமாம்.)


இன்னும் பல் மருத்துவம் தொடர்ந்து செல்லும். ஆனால் பயந்த அளவு தொல்லையில்லை என்பதில் மகிழ்ச்சி.