Tuesday, January 30, 2007

198. ஒரு க.கை.நா.-க்கு ஒரு ஓர் உதவி...

*

*

ஐயன்மீர், அம்மாமீர்,

notepad-ல் e-கலப்பை வைத்து உழுகத் தெரியும். அப்படி உழுததை பிறகு நகல் & ஒட்டு செய்து பதிவு போட்டுக் கொண்டு காலத்தை நல்லபடியாதான் ஓட்டிக்கிட்டு இருக்கேன். இப்போ ஒரு சின்ன ஆசை; அதனால் ஒரு ப்ரச்சனை. அதான் புத்தரே சொல்லிட்டுப் போய்ட்டார் - ஆசைதாண்டா கவலைக்குக் காரணம்னு. ப்ரச்சனை என்னன்னா, word-ல போய் சில பல விஷயங்களைத் தமிழ்ல தட்டச்சி வேற சில வேலை செய்யலாமேவென நினச்சி, அங்க போய் தட்டச்சினா கட்டம் கட்டி விளையாடுது. எழுத்து வர மாட்டேங்குது. நமக்குத் தெரிஞ்சதெல்லாம் கலப்பையை வச்சு உழுவுறது மட்டும்தான். தமிழ் தட்டச்சு படிக்கலை. (இனிமே படிக்கிறதாகவும் எண்ணமில்லை !) அதாவது phonetic வச்சி தட்டச்சிறதுதான்.

அதனால மக்களே!

எனக்குத் தெரிஞ்ச கலப்பையை வச்சி தருசு நிலத்தில (அதாங்க - notepad) மட்டும் உழுதுக்கிட்டு இருக்கிற நான் வயக்காட்டுல (அதாங்க - word-ல) எப்படி உழுகுறதுன்னு எனக்குக் கூட புரியறது மாதிரி யாராவது ஒரு புண்ணியாத்மாவாவது சொல்லிக் கொடுங்கப்பா...ப்ளீஸ். போற இடத்துக்குப் புண்ணியமாகப் போகும்.


*

*

Friday, January 19, 2007

197. பொங்கல் - ஜோ-வும் இன்ன பிறரும்....

*

*

சில ஆண்டுகளுக்கு முன் முதுகலை மாணவர்களோடு அழகர்கோவில் மலைக்கு செய்முறை வகுப்புக்காக ஒரு பயணம். மலைமேல் வகுப்பு முடிந்து கீழே இறங்கியதும் கோவில் செல்ல மாணவர்களுக்கு சிறிது நேரம் ஒதுக்கப்பட்டது. மாணவன் ஒருவன் கோவிலில் வாங்கிய பிரசாத லட்டுகளை நண்பர்களுக்குக் கொடுக்க ஒரு கிறித்துவ மாணவி வாங்க மறுத்தார். இந்துக் கடவுளுக்குப் படைத்த பிரசாதம் சாப்பிட மாட்டேன் என்று மாணவி கூற, அதுவும் 'அந்த' மாணவி கூற மாணவர் கொஞ்சம் மனம் வெறுத்து விட்டார். விவாதம் நடந்திருக்கிறது. நானும் என் சீனியர் ஒருவரும் கோவிலை அடுத்துள்ள ஒரு மண்டபத்தில் மாணவர்களுக்காகக் காத்திருந்தோம். நான் அப்போது ஒரு 'தம்' கேசு. அதனால் இன்னும் கொஞ்சம் தள்ளி தனியாக அமர்ந்து நானும் எனது சிகரெட்டுமாக இருந்தோம். மாணவர்கள் இருவரும் எங்களிடம் வந்தார்கள். முதலில் சீனியரிடம் பையன் தர அவரும் மறுத்து விட்டார். அதன் பின் என்னிடம் வந்தார்கள்; கொடுத்தார்கள்; சாப்பிட்டேன். மாணவிக்குக் கோபம்; பையனுக்கு ஆச்சரியமும், சந்தோஷமும்.

மறுபடி விவாதம் என்னோடு. மாணவியிடம் கேட்டேன்: அந்தக் கோவிலில் உள்ளது உங்களைப் பொறுத்தவரை என்ன? கடவுளா, கல்லா என்றேன். வெறும் கல்தான் என்று மாணவி கூறினார். வெறும் ஒரு கல் முன்னால் வைத்து எடுத்தால் லட்டு என்ன ஆகும்; வெறும் லட்டாகத்தான் இருக்கும். நம்பிக்கையுள்ளவர்களுக்கு அது கடவுள்; அப்போது அவர்களுக்கு அந்த லட்டு பிரசாதமாகும். என்னைப் பொறுத்தவரை அவன் கொடுத்தது லட்டு; லட்டு எனக்குப் பிடிக்கும்; சாப்பிட்டேன் என்றேன். அந்த மாணவிக்கு மட்டுமல்ல இன்று வரையும் பல கிறித்துவர்களுக்கு இந்த விவாதம் பிடிக்காதுதான். இருப்பினும் என் எண்ணம் அதுதான். இவ்வளவுக்கும் இந்த விவாதம் நடந்த அன்று நான் ஒரு மிக நம்பிக்கையுள்ள, நடைமுறைகளை ஒழுங்காக அனுசரித்து வந்த 'நல்ல' கிறித்துவன்தான்!

A goose's sauce may be a gander's poison. எனக்கு அது லட்டு; உனக்கு அது ப்ரசாதம்னா அப்படியே வச்சுக்கோ. அத விட்டுட்டு நீயும் இதை ப்ரசாதமா நினச்சுதான் சாப்பிடணும்னு முரண்டு பிடிச்சா அது என்ன முரட்டுப் பிடிவாதம்?

பொங்கல் திருநாள் உழவர் திருநாள். உழவருக்கும், மாட்டுக்கும் நன்றி சொல்லும் நாள் என்று சொல்லிக் கொள்கிறோம். பட்டினத்து மக்கள் (நம் பதிவர்கள்) எல்லோரும் முற்றத்தில் புதுப்பானையில் வைத்து பொங்கலிட்டு, பொங்கிவரும்போது குரவையிட்டு அடுத்த நாள் மாட்டைக் குளிப்பாட்டி அலங்கரித்து ஊருக்குள் கயிறு பிடித்து அழைத்துப் போவது போல் இங்கே மக்கள் பேசுவதைப் பார்த்து ஒரு புறம் சிரிப்புதான் வருகிறது. கிராமங்களில் நடக்கும் பொங்கல் அந்த சீரோடு நடக்கிறது. பட்டணங்களில் என்ன நடக்கிறது. ஒருவர் ஒரு பின்னூட்டத்தில் சொன்னது போல் குக்கரில் அன்று காலை பொங்கல் செய்து சாப்பிட்டு விட்டு டிவி முன்னால் உட்கார்ந்து சிறப்பு பட்டிமன்றம் கேட்டுக்கிட்டு இருக்கிறதுதான் நடப்பாக இருக்கிறது.

இப்படி நடக்கும் பொங்கல் திருநாளை கேரள மக்கள் சாதி, சமயம் என்ற எந்த வேறு பாடின்றி ஓணம் கொண்டாடுவது போல தமிழர்கள் நாமும் ஏன் பொங்கலைக் கொண்டாடக் கூடாது என்று நல்ல மனதோடு போன வருடமே சில பதிவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். ஜோவும் போன ஆண்டு ஒரு பதிவு போட்டார். அதையே இப்போது மீள் பதிவும் செய்து விட்டார். போன வருடம் இல்லாத எதிர்ப்பு இந்த ஆண்டு. ஆண்டொன்று போகப்போக பதிவர்களின் maturity, மனசு, நியாயங்கள் எல்லாம் சுருங்கி விடும் போலும்.

ஜோ தான் எப்போதும் பொங்கல் கொண்டாடுவது பற்றி எழுதிவிட்டு, இது தமிழர் பண்டிகை; இந்துப் பண்டிகை இல்லையென்று சொல்லிவிட்டாரென்று "சுத்த இந்து"க்களுக்குக் கோபம். பானையில் திருநீறு பூசுகிறார்கள்; ஆகவே இது இந்துத் திருவிழாதான் அதனால் நாங்கள் கொண்டாட மாட்டோமென்று முஸ்லீம்கள் வாதம். மதத்துக்கொரு கலர் கண்ணாடி. அதனால்தான் பார்வைகளில் இத்தனை வேறுபாடு. யார் சொன்னாலும் இது மாறவா போகிறது? ஆனால் விவாதிக்கப்படும் விஷயம் அடைத்து வைத்திருக்கும் மனக் கதவுகளைச் சற்றே திறந்தால் கூட போதும்; அதற்கும்கூட நாம் தயாரில்லை என்பதுதான் கவலைக்குறிய விஷயம்.

அணுவும் அண்டமும் பிறந்ததிலிருந்து இன்றைய ஸ்டெம் செல்கள் வரை எல்லாமே எங்கள் புத்தகத்தில் கூறப்பட்டு விட்டது என்கிறார்கள் இஸ்லாமியர். ஆனால், அது ஒரு text book level-ல் இருந்திருந்தால் நமக்கு நிறைய அறிவியல் உண்மைகள் instant - ஆக கிடைத்திருக்கும். இன்னும் nano technology, super conductivity என்று அறிவியலாளர்கள் தடுமாறிக்கொண்டிருக்க வேண்டியதிருக்காது. லட்டு லட்டாக அறிவியல் விஷயங்கள் நமக்கு readymade- ஆகக் கிடைத்திருக்கும். சரி, பொங்கலைப் பொருத்தவரை அவர்களது எதிர்ப்பு இணை வைக்கக் கூடாது என்பதுதானென்றால் பொங்கல் திருநாளை ஒரு சமூகம் சார்ந்த சமயச் சார்பற்ற விழாவாக இதைக் கொண்டாடலாமே. என் பிள்ளைகள் வளரும் வரை, கிறிஸ்துமஸுக்கு அப்பா நல்ல துணிமணிகள் வாங்கித் தருவார்கள் என்று புரிந்துகொள்ளும் வயது வரை அவர்களுக்கு தீபாவளிக்கும் புத்தாடை எடுத்ததுண்டு. பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் புதுத்துணி போட்டுக் கொண்டு, மத்தாப்பு கொளுத்திக்கொண்டு இருக்கும்போது என் பிள்ளைகள் நமக்கு இல்லையே என்று மருகக்கூடாதென்று புதுத் துணியும், மத்தாப்பும் வாங்கினேன். அவர்களும் போட்டு மகிழ்ந்தார்கள். அதனால் நான் இந்து மதத் திருவிழாவைக் கொண்டாடினேன் என்றா பொருள்? - அப்படியே கொண்டாடினாலும் தவறில்லையென்றாலும்! இன்றும் துணைவியார், பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் என்று புதுத்துணியணிந்து கிறிஸ்துமஸ் கொண்டாடும்போது நானும் புதுத்துணியோடு அவர்களோடு சேர்ந்து கொண்டாடுகிறேன். அதில் என்ன தவறு? பக்கத்து வீட்டில் இஸ்லாமியர் இருந்து பக்ரீத்துக்கு பிரியாணி செய்திருந்தால் நானும் என் வீட்டில் அன்று பிரியாணி செய்து பக்ரீத்தை 'கொண்டாடியிருப்பேன்'. அதற்காக என் கடவுளுக்கு இணையாக மற்றைய கடவுளர்களை வைத்துவிட்டேன் என்றா பொருள்? பக்கத்து வீட்டுக்காரன் சிரித்து மகிழ்ந்திருக்கும்போது நானும் சிரித்து அவனோடு சந்தோஷமாக இருப்பதுதான் மனித நேயம் என்பது. அதை விட்டு நான் 'தேமே' என்று மூஞ்சைத் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பதுவா சகோதரத்துவம். தமிழர் திருநாள், உழவர் திருநாள் என்ற பெயரில் இந்துக்கள் பானைக்குப் பொட்டிட்டு, நீறிட்டு அவர்கள் சாமியை துணைக்கழைத்துக் கொண்டாடினால், மற்றவர்கள் அவர்கள் சாமியை நினைத்தோ, இல்லை சாமித் தொடர்பே இல்லாமலோ இப்பண்டிகையைக் கொண்டாடுவதில் என்ன தவறு இருக்க முடியும்.

பழையபடி மேற்சொன்ன பழமொழிக்கே வருவோம்: A goose's sauce may be a gander's poison. ஆனால் நம் இஸ்லாமிய நண்பர்களைப் பொருத்தவரை one goose's sauce becomes poison to another goose. நம் பக்கத்து மாநிலத்தில் ஓணம் பண்டிகையை - அது முழுக்க முழுக்க இந்து புராணம் தொடர்பான ஒரு பண்டிகையாக இருந்தும் - இஸ்லாமியர்கள் (அந்த மாநிலத்தில் அவர்களின் விழுக்காடு அதிகம், இருப்பினும் ..) அதை மாநில விழாவாக, சமயச் சார்பற்ற விழாவாகக் கருத முடியும்போது ஏன் நம் மாநில இஸ்லாமியர்களால் அது முடியவில்லை? இருவருக்கும் நம்பிக்கைகளும், புத்தகமும் ஒன்றுதானே? அவர்களுக்குள்ள விசாலப் பார்வை நம் நண்பர்களுக்கு ஏனில்லை? இவ்வளவுக்கும் பொங்கல் பண்டிகையைப் பொருத்தவரையிலும் ஓணம் போலவோ, தீபாவளி போலவோ எந்த வித புராண அடிப்படையும் இல்லாத திருவிழா.

பொங்கல் இந்துப் பண்டிகை அல்ல; ஒரு தமிழர் திருநாள் என்று சொன்னதற்காக 'சுத்த இந்துக்கள்' சிலர் வரிந்து கட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள். போன வருடம் இந்த அளவுக்கு 'வரிந்து கட்டல்' இல்லை. நியூட்டனின் கோட்பாடு செயலாக்கப் படுகிறது போலும்!

நம் நாட்டிலேயே பல வேறு பெயர்களில் இந்தப் பண்டிகை கொண்டாடப் படுகிறது; அதுவும் இந்து சமயத் தொடர்போடு என்கிறார்கள். ஆனால் பல நாடுகளில் அறுவடைத் திருநாளாக கொண்டாடப்படுவதே இப்பொங்கல் திருநாள். யூதர்கள் கொண்டாடும் பண்டிகையின் பெயர்: சுக்கோத் என்கிறார்கள். (//அதை யூதப் பண்டிகை இல்லை அல்ல என்று எவனாவது சொன்னால் செருப்படி கிடைக்குமாம்.//! நான் சொல்லவில்லை அப்படி...) ஒன்று தெரிகிறது; இந்த வகைப் பண்டிகைகள் உலகம் முழுக்க ஏதோ ஒரு பெயரில் கொண்டாடப்படுகின்ற ஒரு விஷயம் என்று. அதைச் சிலர் சமயச் சார்புள்ளதாகவோ இல்லை சமுதாயச் சார்பாகவோ கொண்டாடுகிறார்கள். ஒரு நாடு; ஒரு மதம் என்றிருக்கும் நாடுகளில் (உதா: இஸ்ரேல்!) அது எப்படியிருந்தாலும் அதனால் எந்தப் பிரச்சனையுமில்லை; ஆனால் பலகோடி மக்கள், பல் வேறு சமயங்கள்; பல்வேறு சமுதாயக் கூறுகள்; பல்வேறு மொழி, கலாச்சாரம்; பல்வேறு சாதிக் கட்டமைப்புகள் என்றிருக்கும் நம் திருநாட்டில் அந்த ஒரு முனைப்பு இருக்க முடியாது; தேவையுமில்லை. ஒரு மாநிலத்தில் கொண்டாடுவது போலவே எல்லா மாநிலங்களும் கொண்டாட வேண்டும் என்ற விதியுமில்லை. அதோடு நம் மாநிலத்தைப் பொருத்தவரை இந்த பொங்கல் விழாவுக்கு இந்துப் புராணங்களோடு எத்தொடர்பும் கிடையாது - வலிந்து இனி ஏதும் உருவாக்கினாலொழிய..! பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட பிள்ளையார் சதுர்த்தி நாடு முழுவதும் ஒரே மாதிரியாகவா கொண்டாடி வந்தோம்? ஒரு incursion நடந்தேறவில்லையா கடந்த சில ஆண்டுகளில். இப்போதும் அதே போல நாடு முழுவதும் ஒரே மாதிரியாக ( இதற்கு bracket போடுவது என்று ஒரு பெயர் வைக்கலாமென நினைக்கின்றேன் ) பொங்கல் திருநாளைப் பொதுவாக்கி - அதை இந்துச் சமயத்தின் விழாவாக முழுமையாக மாற்ற - எடுக்கப்படும் முயற்சியாகவே இதைப் பார்க்கிறேன். நாம் எல்லோரும் ஒரு மதம்; நம் நல்ல நாட்கள் எல்லாமே இந்து மத திருநாட்கள் என்பதாகக் கொண்டு வரும் முயற்சியாகவே இதைப் பார்க்கிறேன். இந்த முயற்சி எடுப்போரைப் பார்க்கும்போது வரும் எண்ணம்தான் இது. விநாயகர் சதுர்த்தியில் பெற்ற வெற்றி அவர்களை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர வைக்கிறது. இது நல்லதா; தேவையா என்பதற்குப் பதில் ... ?

பொங்கலை எல்லோருமாக ஒரு சமுதாயத் திருநாளாகக் கொண்டாடுவோம் என்று குரல் எழுப்புவர்களும் "இந்துக்களே"; இல்லை ... இல்லை.. இது இந்துத் திருவிழா என்று சொல்பவர்களும் "இந்துக்களே". ஏற்கெனவே சொன்னது போல இந்த இரு இந்துக் குரல்களும் யாரிடமிருந்து எழுகின்றன; ஏன் இப்படி அவர்களிடமிருந்து இரு வேறு பட்ட குரல்கள் என்பதற்குப் பதில் இங்கு தேவையா என்ன? உள்ளங்கைப் புண்... பின் எதற்குக் கண்ணாடி?

இந்துக்களல்லாத தமிழர்கள் பொங்கலை ஒருமித்து அதை ஒரு சமுதாயப் பெரு விழாவாகக் கொண்டாடப் போகிறார்களா, இல்லை அதையும் விநாயகர் சதுர்த்தி போல் ஆக்கி, பொங்கலையும் ஒரு pan-indian / pan-hindu festival என்று ஆக்குவதற்கான முயற்சிக்குத் துணை போகப் போகிறார்களா என்று இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தெரிந்துவிடும் என்றே நினைக்கிறேன். இளைஞர்களே ! எழுமின்; விழிமின்! ....


*


பி.கு.
பின்னூட்டங்களில் என்னைக் கண்டிப்பவர்கள் / என் கருத்தை எதிர்ப்பவர்கள் தயவு செய்து 'மிஷ நரித்தனம்', 'ஆபிரஹாமிய சூழ்ச்சி' போன்ற சொல்லாடல்களைத் தவிர்த்தால் தன்யனாவேன்...


*

*

Thursday, January 18, 2007

196. ரஜீவ் & Sam - க்கு ஜே!

*

*

அந்தக் காலத்துல சினிமாவிலயும் சரி, உண்மையான் வாழ்க்கையிலேயும் சரி ஒரு ஜோக் உண்டு: போன்ல யாரும் பேசினா, பேசினவங்க எப்படி பேசுனாங்க.. அப்டின்னு ஒருவர் கேட்க போன் பேசியவர்,' அவர் மூஞ்சியா தெரிஞ்சுது.. அவர் கோபமா பேசினாரா இல்லையான்னு தெரிஞ்சுக்கிறதுக்கு அப்டினு சொல்லுவாங்க.. இப்போ அது உண்மையாய் ஆகிப் போச்சாமே..இந்துவில் வீடியோ போன் பற்றி ஒரு செய்தி வந்திருக்கு. http://www.hindu.com/2007/01/07/stories/2007010700101100.htm தொலைபேசியில் அழைப்பவர்கள் முகம் தெரியுமாமே; அதுவும் நம்ம ஊருக்கே வந்திருச்சாமே! கலிகாலம் / நவீனகாலம் !

இதை வாசிச்சதும் 'பழைய நினைப்புடா பேராண்டி'ன்னு பழைய நினைவுகள் ரீவைண்ட் ஆயிருச்சு.

ஏற்கெனவே என் முதல் போன் அனுபவத்தைச் சொன்னேன். 15 வயசு வரை போனைத் தொடக்கூட இல்லைன்னா பாருங்களேன். அந்தக் காலத்தில தொலைதூரம் போன் பேச வேண்டியிருந்தால் trunk call பண்ணணும். அதுக்கு காத்திருந்து லைன் கிடச்சு, பேசுறதுக்கு பல நேரம் நேரேயே போய் சொல்லிட்டு வந்திரலாம்னு தோணும். அப்படியே லைன் கிடச்சாலும் அந்த ஊருக்கே போன் இல்லாமலே பேசுனாலும் கேக்கிறது மாதிரி சத்தம் போட்டுப் பேசணும். இந்தக் கூத்துகள் எல்லாம் தபால் நிலைய தொலைபேசிகள் மூலம்தான் பெரும்பாலும். ஏன்னா சொந்தத்தில போன் வச்சுக்கிறது என்பதே தொண்ணூறுகளில்தான் பலருக்கும் சாத்தியமாயிற்று.

எண்பதுகளில் நண்பனொருவன் வசதியாயிருந்த போது கட்டிய பணத்திற்கு வீட்டுக்கு போன் வர - அப்போதெல்லாம் பணம் கட்டி ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் ஆன பிறகே கிடைக்கும் - அப்போதைய நிலையில் அவனுக்கு அது தேவையில்லை என்றானதால் நீ எடுத்துக் கொள்கிறாயா என்றான். 'போன் வச்சுக்கிற அளவுக்கு எல்லாம் நாங்கள் பெரிய ஆளுக இல்லையப்பா' என்று சொல்லி வேண்டாமென்று விட்டு விட்டேன். அதிலிருந்து ஓரிரு ஆண்டுகள் ஆனதும் அடடா, வாங்கியிருக்கலாமோ என்று தோன்ற அதனால் புதிய இணைப்புக்குப் பணம் கட்டினேன். மறந்தும் போனேன். 96-97 -ல் எதிர் வீட்டுக்காரருக்கு (பிள்ளாயாரும் பால் குடித்தார் பதிவில் வந்தவர்) புதிய இணைப்புக்குரிய முன்னேற்பாடுகள் நடக்க ஆரம்பித்தன. அவர் எனக்கும் பிறகே முன் பணம் கட்டியவர் என்பது தெரியும். அதனால் இணைப்புக்கு வந்தவர்களிடம் சாதாரணமாக இதைச் சொல்லி எனக்கு எப்போது வரும் என்று கேட்டேன். சீக்கிரம் வந்து விடும் என்றார்கள். அதே மாதிரி ஓரிரு நாட்களில் வந்தும் விட்டார்கள். ஆனால் பின்னால் ஒரு தனிக்கதை நடந்திருக்கிறது. எதிர் வீட்டு நண்பர் தொலைபேசித் துறையில் சிலரைத் தனியாகக் 'கவனித்திருப்பார்' போலும். ஆனால் நான் போய் கேட்டதால் எனக்கும் இணைப்பைத் தந்து விட்டு அவருக்குக் கொடுத்ததால் எனக்கும் கொடுக்க வேண்டியதாயிற்று என்று சொல்லி அதற்கும் அவரையே 'கவனிக்கச்' சொல்லி விட்டார்களாம். எப்படியோ 'நல்லார் ஒருவர் 'கவனித்ததால்' தெருவில் எல்லோர்க்கும் இணைப்பு' என்றாயிற்று!

98-ன் இறுதியில் புது வீடு மாறினோம். மனித நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதி மாதிரிதான். எங்கள் காலனியில் மொத்தமே பதினொரு வீடுகள் மட்டுமே. அதிலும் எங்கள் வீடு கட்டக் கடைசியில். யார் வீட்டிலும் போன் கிடையாது. 11 புதிய இணைப்புத் தூண்கள் வைத்துதான் இணணப்பு கொடுக்க முடியும் என்பதால் எங்கள் பழைய இணைப்பு இங்கே வர காலம், காசு இரண்டுமே அதிகம் ஆகும்னு எல்லோரும் பயம் காட்டினார்கள். ஆனால் இரண்டாவது மாதத்திலேயே பட படன்னு சில ஆட்கள் தூண்களோடு வந்தார்கள். சட சடன்னு நட்டுவிட்டுப் போய் விட்டார்கள். அதிலிருந்து இரண்டாவது நாளே இணைப்பைக் கொடுத்துவிட்டுப் போய் விட்டார்கள். டிப்ஸ் / காபி கொடுக்கக் கூட காலம் தரவில்லை. அதென்னவோ எனக்கும் தொலைபேசித் துறைக்கும் அப்படி ஒரு பிணைப்பு !! ஏறக்குறைய அடுத்த ஓராண்டு வரை 11 வீட்டுக்கும் நம்ம வீட்டு போன்தான் ஒரே இணைப்பு. தனி மவுசுதான். அதோடு ரொம்ப கஷ்டமும் கூட. ஒவ்வொருவர் வீட்டுக்கு வரும் அழைப்புகளுக்கு நானே வீடுதேடி சென்று மறு அழைப்பு வைத்துக் கூப்பிட்டு வரவேண்டும். தூரத்தில் உள்ள வீட்டினரை அழைப்பதற்கென்றே ஒரு லேசர் லைட் வாங்கி.. ..ம்ம்.. அதுவே ஒரு தனிக் கதை. தொலைபேசித் துறைக்கும் எனக்கும் இருந்த அந்த பிணைப்பு இன்று வரை இருக்கும் போலும். அகலப்பட்டை வந்த போதும்கூட எல்லாமே in a jiffy...

Alvin Toffler எழுதிய FUTURE SHOCK நினைவுக்கு வருது. எதிர்காலத்தில் வரப் போகும் பெரும் மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ள நாம் தயாராக வேண்டும்; இல்லையென்றால் அது ஒரு பெரிய அதிர்ச்சியாக - shock - இருக்குமென்கிறார். என் வயசுக்காரங்களுக்கு நிச்சயமாக இந்த தொலைபேசித் தொடர்புகளின் வளர்ச்சியின் வேகம் மிகவும் பிரமிப்பூட்டுவதாகத்தான் உள்ளது. இன்னொரு உண்மைக் கதையும் உண்டு. நண்பன் ஒருவன் அமெரிக்கா சென்று 9 மாதம் கழித்து வந்தவன் pager பற்றி என்னிடம் வியந்து கூறிக்கொண்டிருந்தான். சொல்லும் வரை கேட்டுக் கொண்டிருந்து விட்டு, 'அட பையா, அது நம்ம ஊரு மதுரைக்கே வந்திருச்சு' என்ற போது அதிர்ச்சியும், ஆச்சரியமும் அவனுக்குத்தான். அவன் மதுரையை விட்டுச் செல்லும் போது இல்லாத ஒரு technology அவன் திரும்பி வருவதற்குள் இங்கு சாதாரண ஒன்றாகி இருந்தது.

இந்த மாற்றங்கள் எல்லாமே 1985-95-ற்குள் நடந்ததாகத்தான் எனக்கு நினைவு. இந்த பெரும் மாற்றங்களுக்கு அடிகோலியது ரஜீவ் காந்தியின் காலத்தில்தான். அவர் முயற்சி எடுக்காவிட்டிருந்தாலும் காலப் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனாலும் அவரது ஆட்சிக் காலத்தில் அவர் கொடுத்த முனைப்பே இன்றைய வளர்ச்சிக்கு வித்திட்டன. Sam Pitroda-வை அறிவியல் ஆலோசகராகக் கொண்டு அவர்கள் போட்ட 'பிள்ளையார் சுழி'யின் பலன் இன்று நாம் உலகின்முன் முன்னிறுத்தப் படுவதற்கு பெரும் துணையாக உள்ளது. Sam Pitroda -வுக்கு முழுச்சுதந்திரம் தந்து தொலைபேசித் தொடர்பை ரஜீவ் வளர்க்கச் சொன்னதாகச் சொல்லுவார்கள். அறுபது, எழுபது தாண்டிய கட்டைகள் கூட இன்று கணினியின் முன்னால் உட்கார்ந்து தங்கள் பழைய நினைப்புகளை ப்ளாக் வழியாக மற்றோருடன் பகிர்ந்து கொள்ள முடிகிறதென்றால் அதற்கு ஆரம்பம் கொடுத்தவர்களுக்கு நன்றி சொல்கிறேன்:

ரஜீவ் & Sam - க்கு ஜே!

Monday, January 08, 2007

195. என் முதல் (போன்) கால்



*

*

'என் முதல் போன் கால்' என்று எழுத நினச்சி ஆரம்பிச்சப்போ, நம்ம பீட்டா என்ஜினியர் எழுத்தை எழுதிட்டு அத அடிக்கிறது எப்படின்னு சொல்லிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. அதை முயற்சி செஞ்சு பார்க்கிற சான்ஸுக்காக இப்படி தலைப்புக் கொடுத்தேன். மற்றபடி நீங்க இங்க வரணும்னு செய்றதுக்காக இந்த மாதிரி தலைப்புக் கொடுக்கலை. சரி.. இது தலைப்பில் உள்ள அடித்தல், பெருக்கல், திருத்தல் பற்றியது. இனிம, விஷயத்துக்கு வருவோம்...

இது நடந்தது என் 14-15 வயசில. ஒரு 48 வருஷம் ஆகிப் போச்சு. அதுவரை நான் பார்த்த சிவாஜி படத்திலெல்லாம் ஒரு கருப்பு போனை கைல தூக்கிக் கிட்டே அவர் ஸ்டைலா நடந்துகிட்டே பேசுறதப் பாத்து அட்லீஸ்ட் நம்ம ஒரே ஒரு போன்கால் செய்ய மாட்டோமான்னு ஒரு ஆசை வந்துகிட்டே இருந்துச்சு. போனை காதில வச்சுக்கிட்டு, ஸ்டைலா '..ஆங்... சொல்லுங்க.. சரி..ஓகே.. செஞ்சுடுவோம்' அப்டின்னெல்லாம் பேசணும்னு ஆசையா இருந்திச்சு. அப்படியெல்லாமா அப்பாட்ட சொல்ல முடியும்? பொத்தாம் பொதுவா அப்பாட்ட போன் பேசுறது பத்தி பேசி வச்சேன். 'ஆகட்டும்; பார்க்கலாம்'னு சொன்னாங்க. அப்பல்லாம் அப்பாமார்கள் அப்படி சொல்றதுதான் ஸ்டைல். ஏன்னா, அப்படித்தான் கர்மவீரர் சொல்லுவார். ஆனா அவர் அப்படி சொல்லிட்டு செஞ்சுருவார். ஆனா எங்க அப்பா நான் கேக்கிறதுக்கு இந்தப் பதிலைச் சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.

நயினா ஸ்கூல் வாத்தியாரா? அப்போவெல்லாம் மக்குப் பசங்கதான் ட்யூஷன் படிக்க வருவாங்க.. அதில் ஒரு பையன் எனக்கு ஒரு வருஷம் ஜூனியர். நான் 9வது படிக்கும்போது அவன் அப்பாகிட்ட படிச்சான். எங்க பக்கத்துத் தெருதான். தெற்கு வெளி வீதியில அவங்க வீடு. பெருசா இருக்கும். வீட்டுப் படிகூட அவ்ளோ உசரம். நாங்க இருந்ததோ ஒரு ஒண்டுக் குடித்தனம். மூணு குடித்தனத்தோடு இருப்போம். எங்க வீட்டு போர்ஷனுக்குள்ள வர்ரதுக்கே தனித்திறமை வேணும். கிணற்றடி, அதச் சுத்தி எப்பவும் கட்டி நிக்கிற தண்ணி இதையெல்லாம் டாட்ஜ் செஞ்சு வந்தாதான் புழச்சாங்க. நடுவில பாசியில வழுக்கி விழ ஏகப்பட்ட சான்ஸ். நிறைய பேர் 'சர்ருன்னு' வழுக்கி விழுந்து வச்சத பார்க்கணுமே... புதுசா வர்ரவங்களை நான் வீட்ல இருக்கிறப்போவெல்லாம் usherer வேல பார்த்து காப்பாத்திருவேன்.. இல்லாட்டி அவங்க தலைவிதிப்படி நடக்கிறதுதான்..

அப்பத்தான் இந்தப் பையன், நம்ம ஜூனியர் - பேரு நவநீத கிருஷ்ணன் - வந்து சேர்ந்தான். ஒரு நாள் அப்பாவுக்கு நான் போன் பேசணும்னு சொன்னது ஞாபகத்துக்கு வர, நம்ம நவநீதன்கிட்ட 'டேய், ஜார்ஜை வீட்டுக்குக் கூட்டிட்டு போய் ஒரு போன் பண்ண வையேண்டா' அப்டின்னாங்க. அவனும் சரின்னு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனான். அந்த உசரப் படிக்கட்டைப் பார்த்ததுமே மிரண்டு போய்ட்டேன். வீட்டுக்குள்ள போனா, அது பாட்டுக்கு நீளமா போய்க்கிட்டே இருந்துச்சு. ரொம்பவே அசந்துட்டேன். வீட்டுக்கு நடுவில சோபா அது இதுன்னு இருந்திச்சு. உடம்பு எதிலயும் படாம பாத்துக்கிட்டேன். பணக்காரத்தனத்தைப் பார்த்தா அப்ப இருந்தே ஒரு தயக்கம்; இன்னும் கூட இருக்கு. ஒரு நாற்காலி பக்கத்தில ஒரு மேஜை மேல பள பளன்னு கருப்ப்ப்பா டெலிபோன் உக்காந்திருச்சு. நீங்கல்லாம் நிறைய பேரு பாத்திருக்க மாட்டீங்க.. அதில டயல் ஒண்ணும் இருக்காது. டயல் இருக்கிற இடத்துல ஒரு ஒத்த ரூபாய் சைஸ்ல ஒரு வட்டம்.. அதில அந்த போன் நம்பர் எழுதியிருக்கும். அப்போல்லாம் மூணு டிஜிட்தான் என்று ஞாபகம்.

நவநீதன் போனக் காமிச்சி, 'ம்ம்..போன் பண்ணு' அப்டின்னான். இப்படி சொன்னா நான் என்ன பண்ண முடியும்? என்ன செய்யணும் ஏது செய்யணும்னு எனக்கு என்ன தெரியும். 'இல்ல.. வேணாம்; நான் பண்ணலை' அப்டின்னேன். சரி நான் ரயில்வே என்கொயரிக்கு போட்டுத் தர்ரேன். ஏதாவது பேசு அப்டின்னான். அப்போவெல்லாம் டைரக்ட் ட்யலிங் கிடையாது. என்கொயரிக்குப் போன் செஞ்சு, அங்க நாம யார்ட்ட போன் பேசணும்னு சொன்னா அவங்க கனெக்ட் பண்ணுவாங்க. அதெல்லாம் யாருக்குத் தெரியும்.

அவனே என்கொயரிக்கு போன் போட்டு, ரயில்வே என்கொயரி அப்டின்னான். உடனே என்கிட்ட கொடுத்தான். நான் கையில வாங்கியதுமே ஹலோ..ஹலோ அப்டின்னேன். 'கொஞ்சம் பொறு; கனெக்க்ஷன் கிடச்ச பிறகு பேசு' அப்டின்னான். சரின்னு காதில வச்சிக்கிட்டு, என் கவனத்தையெல்லாம் அந்த இடது காதில தேக்கி வச்சிக்கிட்டு காத்துக்கிட்டு இருந்தேன். என்னமோ சத்தமெல்லாம் கேட்டது மாதிரி இருந்திச்சி. திடீர்னு காதில 'ஹலோ'ன்னு ஒரு சத்தம் கேட்டுச்சி. நாம ரொம்ப மரியாதைக்காரங்க இல்லியா ...
அதனால நானும் திருப்பி 'ஹலோ' அப்டின்னேன். அந்தப் பக்கம் இருந்து மறுபடி 'ஹலோ' அப்டின்னு சத்தம் வந்திச்சி. நாம மரியாதை கொடுக்கிறதை நிறுத்தலாமோ ... அதனால நானும் மறுபடியும் 'ஹலோ' அப்டின்னு சொன்னேன். 'டொக்' அப்டின்னு சத்தம் வந்திச்சி. பேய்முழி முழிச்சிக்கிட்டு, இருந்தாலும் போனை காதில இருந்து எடுக்காம அப்டியே உறஞ்சு போய் நின்னுக்கிட்டே இருந்தேன். இனிம ஒருவேளை மறுபடி பேசுவாங்கன்னு நினச்சிக்கிட்டு இருந்தேன். ஒண்ணையுமே காணோம்.
என் முழியைப் பாத்து நவநீதன் என் கையில இருந்து போனை வாங்கி காதில வச்சுப் பாத்துட்டு 'கட்' பண்ணிட்டாங்க. ஹலோன்னு சொன்னா நீ உடனே ஏதாவது ட்ரெயின் எப்போ வரும்னு கேக்க வேண்டியதுதானே அப்டின்னான். 'அடப்பாவி, இதையெல்லாம் மொதல்லே சொல்லிக் கொடுத்திருக்கக் கூடாதா; இப்போ சொல்றியே' அப்டின்னு நினச்சுக்கிட்டேன். வேற யார்ட்டயாவது பேசுறியான்னு கேட்டான். 'யார்ட்டயாவது பேசணும்னுதான் ஆசையா இருக்கு; ஆனா யார்ட்ட பேசுறதுன்னு தெரியலையே..' அப்டின்னு மனசுக்குள்ள ஓடுன டயலாக்கை அவனிட்ட எப்படி சொல்றது? அதெல்லாம் வேண்டாம்னுட்டு போன் பண்ற ஆசைய மூட்ட கட்டி வச்சிட்டு வந்ததுதான் என் முதல் போன் கால்.

இது நடந்து ஏறக்குறைய அரை நூற்றாண்டு ஆகிப் போச்சு. இப்ப என்னடான்னா என் பேரப் பிள்ளைங்க - முளைச்சி மூணு இலை விடலை - போன்ல சர்வ சாதாரணமா பேசுறது மட்டுமில்ல... webcam-ல பாத்துக்கிட்டு, chat-ல audible போட்டு விளையாடுதுங்க. எல்லாம் கலிகாலம்...

*

*




*

*