Wednesday, May 31, 2023

1225. பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு .....



*



இன்று காலை ஒரு காட்சி.

ஒரு தாய் தன் கைப்பிள்ளையைக் கையில் ஏந்தி நிற்கிறார். கொஞ்சம் அறிவுத் திறன் குறைந்த குழந்தை போலும். அவர்களுக்கு எதிரில் நான் முன்பே சொன்ன உடல் நலம் குறைந்த பெண். ஆடி ஓடித் திரிந்த குழந்தை ஆறு ஏழு வயதிற்குப் பிறகு நடக்க முடியாமல் போன பெண். நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள். அவள் பின்னால் அவளது தாய்.

கைப்பிள்ளை வைத்திருந்த தாய் தன் பிள்ளையிடம் எதிர்த்தாற் போலிருக்கும் பெண்ணைக் காண்பித்து, ‘ இதோ பார், அக்கா...” என்கிறார்கள். குழந்தையிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. நாற்காலியில் அமர்ந்திருந்த பெண்ணும் அந்தக் குழந்தையை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

இவர்களைத் தாண்டிப் போகும்போது இந்த நிகழ்வைப் பார்த்தேன். யாருக்காக வருந்துவது என்பதே தெரியவில்லை. எந்த உணர்வும் இல்லாத குழந்தையைப் பார்த்துக் கவலைப்படுவதா? இளம் வயதிலும் நடக்க முடியாத அந்தப் பெண்ணைப் பார்த்தா? அல்லது குழந்தைகளையும் அதனால் ஆன சோகங்களையும் மனதில் தேக்கி வைத்திருக்கும் இரண்டு அம்மாமார்களையும் நினைத்து வருந்துவதா?

தெரியவில்லை ...

Absurd philosophy என்று Albert Camus சொன்னவைகள் நினைவுக்கு வந்தன. வாழ்க்கையென்னும் ஓடம் .. ஆடி அடங்கும் வாழ்க்கையடா ... என்று பல பாடல்களும் நினைவில் ஆடின.

இத்தனை துயரத்தில் உழலும் மக்கள் நித்தமும் கடவுள் முன்னால் நின்று வேண்டிக் கொள்வது எனக்கு சில சமயத்தில் அர்த்தமில்லாததாகவும், சில வேளைகளில் பாவம் போலும் தோன்றுகிறது. எது சரியென்று எனக்கும் தெரியவில்லை. எப்படி இந்த நம்பிக்கை? என்ன கிடைக்கிறது என்று இந்த நம்பிக்கை. தெரியவில்லை.

Camus சொன்ன philosophical suicide சரியா என்றும் புரியவில்லை. எல்லாமே அபத்தமாகவும், குழப்பமாகவும் தெரிகிறது. கடவுளை நம்புவதும் இது போன்ற ஒரு அபத்தம் என்றே தெரிகிறது.

பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு ..... 

என்ன வாழ்க்கை இது? புரிந்தால் சொல்லுங்கள்...

புரிந்து கொள்கிறேன்.

 


Monday, May 29, 2023

1224. மருத்துவ முகாமில் சில நாள் வாழ்க்கை








முந்திய பதிவு: :

https://dharumi.blogspo/1223-what-life.htmlt.com/2023/05


மருத்துவ முகாம் வாழ்க்கை; கண்ணை மூடித் திறப்பதற்குள் 18 நாட்கள் ஓடிவிட்டன. வாழ்க்கை பழகியது போலும் இருக்கிறது. ஆனாலும் குழந்தைகளைப் பார்க்கும் போது அந்த வேதனைகள் மீண்டும் வந்து தோளில் தொத்திக் கொள்கின்றன. எவ்வித இயல்பான உணர்வுகள் இல்லாத குழந்தைகளைத் தோளில் சுமந்து,  உள்ளுணர்வுகளை அடக்கி வைத்திருக்கும் பெற்றோர்கள். வாழ்க்கையின் அர்த்தமே புரியாமல் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய சூழல். பணம், வேலை, பதவி, அதிகாரம், ஆணவம் என்று சுற்றிலும் இதுவரை பார்த்திருந்து விட்டு, இப்போது உடல் நலம் பற்றி மட்டும், அதுவும் தான் பெற்ற பிள்ளைகளின் உடல் நலத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு அலைந்து திரியும் பெற்றோர்கள்; அதிலும் முக்கியமாக தாய்மார்கள்... இவர்களைத்தான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனாலும் இந்த வாழ்க்கையிலும் அவ்வப்போது சில ஒளிக்கீற்றுகள். மலரின் பெயர் கொண்ட சின்னச் சிநேகிதியுடன் நேற்று பேசிக் கொண்டிருந்தேன். குழந்தை என்னை இரு கேள்விகளால் தோற்கடித்தது. என் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்து, அதில் உள்ள படங்களைப் பார்த்து சில கேள்விகள் கேட்டாள். பதில் சொன்னேன். இன்னொரு கேள்வி கேட்டு மடக்கி விட்டாள். புத்திசாலிப் பெண். அவளுக்குப் பணக்கார தனிப்பள்ளிகளில் இடம் கொடுக்க மறுத்து விட்டார்களாம். அரசுப் பள்ளியில் அனுமதித்துள்ளார்களாம். ஐந்தாம் வகுப்பு. அவளின் அம்மாவிடம் அவளுக்கு நிறைய கதைப்புத்தகங்கள் வாங்கித் தரச் சொன்னேன். படிப்பில் அத்தனை ஆர்வம்; புத்திசாலித்தனத்திற்கும் குறைவில்லை. அவளின் கால்களும் குணமாகி நம்மைப் போன்ற “சாதாரண” நிலமைக்கு வந்தால் மகிழ்ச்சி.

சில மாதங்களேயான சின்னப் பையன். ஓடும் மின்விசிறி, அணைந்து அணைந்து எரியும் மின் விளக்குகள், பேனா-பேப்பர் என்று தன் ஆவலைக் காண்பித்துக் கொண்டு, அப்பாவின் கைகளில் சரிந்து கிடக்கும் பையன். காது கேட்கவில்லையாம். ஏனைய உணர்வுகளும் சரியாக இல்லையாம். பெற்றோர் இருவரும் அனைவருடனும் சிரித்து சிரித்துப் பேசுகிறார்கள். அதுவே  எனக்கு முதலில் ஆச்சரியமாகவே இருந்தது. அவர்களெல்லாம் நிம்மதியாக இரவில் உறங்க முடியுமா? தெரியவில்லை.

மனம் சரியில்லா குழந்தைகள்; கால்களால் நடக்க முடியாத குழந்தைகள்; விந்தி விந்தி நடக்கும் சேட்டைக்காரச் சின்னப் பசங்கள்; யாரிடமும் மிகவும் முரட்டுத்தனமாக நடக்கும் ஆபத்தான சின்னப் பையன் ... இப்படியே பார்த்துக் கொண்டிருந்த நான் ஒரு நல்ல ஆச்சரியமான நிகழ்வு ஒன்றையும் பார்த்தேன். 


இரவு 9 மணிக்கு மேல் சில பையனும் பெண்களும் இங்கிருக்கும் ஒரு சிற்றாலயத்தின் முன்னால் இருக்கும் முற்றத்தில் கூடுகிறார்கள். அடுத்து இரண்டு மணி நேரத்திற்கு அந்த இடம் அமளி துமளியாகி விடுகிறது.  சில குறைகளோடு மருத்துவத்திற்காக வந்திருக்கும், ஆனால் நன்றாக நடமாடக்கூடிய குழந்தைகள் என்று ஒரு சிறு கூட்டம். ஏறத்தாழ 10 குழந்தைகள். நான் அந்த alter-ன் படியில் அமர்ந்திருப்பேன்... இனிமையான காற்றிற்காக. என்னிடம் வந்து பேனா பேப்பர் சில சமயம் கேட்பார்கள். எப்படி இப்படிக் கூத்தடிக்கிறார்கள் என்று யோசித்தேன். பாவம் .. இந்தக் குழந்தைகள் வேறு நோயற்ற குழந்தைகளோடு விளையாடும் வாய்ப்பு பொதுவாக அவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கலாம். இங்கு அந்த ஏற்றத்தாழ்வு கிடையாது. அனைவரும் சமம் என்ற உணர்வு இருக்கும் போலும். அதனால் நன்கு சுதந்திரமாக விளையாடுகிறார்கள் என்று நினைத்தேன். ஆடிய பின் வட்டமாக உட்கார்ந்து வேறு விளையாட்டு, பேச்சு என்றிருந்தார்கள். 


ஒரு நாள் இரவு பதினோரு மணி வரை ஆட்டம் தொடர்ந்தது. ஏனென்று நினைத்தேன்; பதில் கிடைத்தது. அவர்களில் ஒரு பத்துவயதுப் பெண். அடுத்த நாள் காலையில் புறப்படப் போகிறாள். ஒரு விதமான farewell party ! என்னிடம் பேப்பர் பேனா வாங்கி அவர்களுக்குள் தொலைபேசி எண்களை வாங்கிக் கொண்டனர். அதில் இன்னொரு சின்னப் பெண் ஊருக்குச் செல்லும் பெண்ணைக் கட்டிப் பிடித்து, “அக்கா, இனிமே நான் உங்களைப் பார்க்கவே முடியாதில்லையா?” என்று அழுதது. சோகம் என்னையும் கட்டிப் போட்டது. அதைவிட அந்தப் பெண் என் முன் வந்து, கண்கலங்கி “தாத்தா, போய்ட்டு வர்ரேன்” என்ற போது ....

 

இன்னும் இங்கே இன்னும் சில நாட்களைக் கடத்தியாக வேண்டும் ....

 


Tuesday, May 23, 2023

1223. WHAT A LIFE ....?

நீண்ட நாள் மருத்துவத்திற்காக நெடுந்தூரம் பயணம் செய்து ஓர் ஊரில் வந்து தங்கியிருக்கிறோம். மருத்துவம் பற்றியோ, மருத்துவர் பற்றியோ எதுவும் பேசுவது இப்போது என் நோக்கமல்ல. ஆனால் மருத்துவத்திற்காக வந்த மக்களைப் பற்றிக் கட்டாயம் பேச வேண்டுமென்று முதலிலிருந்து ஓர் உறுத்தல்.

சேர்ந்த முதல் நாள் காதில், கண்ணில் ஏதும் விழவில்லை. அங்கங்கே அலைந்து கொண்டிருந்தேன். இரண்டாம் நாள் மருத்துவத்திற்காக வந்த மக்களோடு ஒருவனாய் காத்திருந்த போது பார்த்த காட்சிகள் என்றும் மனதை விட்டு அகலாது. பெரியவர்கள் பலரும் சிரமத்துடன் பார்த்த போது மனம் ஒன்றும் சிரமப்படவில்லை. ஆனால் சின்னஞ்சிறு குழந்தைகளையும் அவர்களின் குறைபாடுகளையும் பார்த்து மனம் பதறியது. அங்கே தொடர்ந்து இருக்க முடியாமல் ஓட வேண்டும் போல் இருந்தது. பக்கத்தில் உறவுக்காரப் பெண் என்னோடு இருந்தாள். இறை நம்பிக்கை நிறைந்த பெண். எங்களுக்கருகில் சாமி உருவங்கள் இருந்த அலங்கார மேடை ஒன்றும் இருந்தது. பலரும் வணக்கம் செலுத்திக் கொண்டிருந்தனர். என்னால் கண்முன் நடப்பதையோ பார்க்க முடியாமல் மனம் பதைத்தது. இல்லாத அந்த தெய்வத்தின் மேல் கோபம் வந்தது. உறவுக்காரப் பெண்ணிடம், “இப்படி ஒரு கடவுள் இருந்து இப்படி படைத்தாரென்றால் அந்தக் கடவுளைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் எறிந்து விடணும்என்று கோபமாகச் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

முதல் அனுபவே இப்படிக் கசந்தது. அப்போது எந்தக் குழந்தை பற்றியும் தனித்து ஏதும் தெரியாது. தங்கிய நாட்கள் ஒவ்வொன்றாகக் கடந்த போது ஒவ்வொரு குழந்தை பற்றியும் தெரியத் தெரிய ... மனசு தாங்கவில்லை.

ஒரு சின்னக் குழந்தை. பத்துப் பதினோரு வயதிருக்கும். மலரின் பெயர் அந்தப் பெண்ணுக்கு. அழகுக் குழந்தை. முகம் அத்தனை அழகு. மெல்லிய குரலில் பேசும் அழகே அழகு. பிறந்த நாளிலிருந்து கை கால்களின் எலும்புகளினாலோ என்னவோ நடக்கவோ, கையால்  எதையும் பிடிக்கவோ முடியாது. நாங்கள் நல்ல நண்பர்களாகி விட்டோம். என்ன பாவம் செய்தது அந்தக் குழந்தை. கடவுள் படைத்தான் என்பதோ, ஊழ்வினைப் பயன் என்பதோ நான் நம்ப மறுக்கும்  வெறும் வெத்து வேட்டுகள்.

பத்துப் பன்னிரண்டு வயது என்று அந்த பெண்ணைப் பார்த்த போது நினைத்தேன். ஆனால் உண்மையில் இருபதைத் தாண்டிய பெண். உடம்பே கோணலாகி வளைந்திருக்கிறது. காலில் சுத்தமாகப் பலமில்லை. ஏழெட்டு வயது வரை துள்ளி ஓடிய பிள்ளையாம். நடனம் ஆடுவதை போட்டோ எடுத்து வைத்திருக்கிறார்களாம். குழந்தைப் பருவத்தில்வெகு விரைவாக நடக்க ஆரம்பித்த குழந்தை. இப்போது முழுவதும் முடங்கிப் போன பிள்ளை.

இன்னொரு பையன். பிறவியிலேயே மூட்டை முடிச்சாகப் பிறந்தான் போலும். கால்கள் திருகி இருக்கின்றன. அவனது தந்தை ஒரு வருடமாக உடனிருந்து வைத்தியம் பார்க்கிறாராம். முதலில் அம்மாவோடு இருந்திருக்கிறான். அம்மா செல்லமாக இருந்ததால் அவரை வியாபாரம் பார்க்க தன் கடையில் இருத்தி விட்டு அப்பா பையனை சிறிது முரட்டுத்தனத்தோடு கவனிக்கிறார் என்றார்கள். அதுவே பையனை விரைவில் சுகமாக்கும் என்று அப்பா நினைக்கின்றார் என்றார்கள்.

பிறக்கும் போதே காது கேளாமையுடன் பிறந்த பையன். அவனோடு மல்லாடும் பெற்றோர். அப்பா work from home software ஆள். வேலையும் பையனையும் எப்படியோ சமாளிக்கிறார் அப்பா.

இப்படி எத்தனையோ குழந்தைகள். இப்படி கொத்துக் கொத்தாய் பாவப்பட்ட குழந்தைகளைப் பார்க்கும் போது மனது தாங்கவில்லை. அதிலும் குழந்தைகள் என்பதால் அவர்களுக்கு தங்களுக்கான கொடுமைகளைச் சரியாகக்கூட புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் பெற்ற தாய் தந்தையரை நினைத்தாலே மனம் பதறுகிறது. எத்தனை எத்தனை பெற்றோர் தூக்கம், இன்பம் தொலைத்து பிள்ளைகளின் நிலையறிந்து சோகமுற்றிருக்கிறார்கள் என்று தோன்றியது. பிள்ளைகள் நிலைகளை விட இவர்கள் நிலைதான் பாவம் என்று தோன்றியது. நம்பிக்கைகளோடு காத்திருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை நடக்கட்டும், நடந்தேறட்டும் என்று மட்டுமே மனதில் தோன்றுகிறது. circumstances make one go very philosophical.

சோகமான சூழல்தான். ஆனால் அதிலும் ஒரு வெகு நல்ல விஷயம் பார்த்தேன். Camaraderie எ-ன்ற சொல்லின் முழுப்பொருளையும் இங்கு ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறேன்.  எல்லோரும் எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்கிறார்கள். மனதில் சோகத்தைச் சுமையாகத் தூக்கிக்கொண்டு வெளியே இன்முகத்துடைன் உடனிருப்போரிடம் பழகுகிறார்கள். உயர்வு தாழ்வு இல்லை. எனக்குத் தோன்றியதை சிலருடன் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னேன். “நம்ம கெட்ட குணங்களையெல்லாம் வெளியே விட்டுவிட்டு நல்லவர்களாக அனைவரும் இருக்கிறோம்என்றேன். பலமாக எல்லோரும் ஒத்துக் கொண்டனர். நான் தொடர்ந்து, “யார் கண்டது? வெளியே போனதும் பழைய குணங்கள் மீண்டும் வந்து நம்மீது ஏறிக் கொள்ளலாம் என்றேன். ஒரு பெண்மணி உடனே ஒரு பதில் சொன்னார்கள். “அப்படியெல்லாம் நடக்காது சார். இங்கே பத்தியம் இருப்பது போல் இருக்கிறோம். இந்தப் பத்தியமும் என்றும் நம்மோடு இருக்கும். என்றும் இப்படியேதான் வெளியேயும் இருப்போம்” என்றார் உறுதியாக. என்றார். அது உண்மையாக இருக்க வேண்டும். அது உண்மையானால் உலகமே அன்பு மயமாகி விடும் என்றே தோன்றியது. 

Thursday, May 18, 2023

1222. #அயோத்தி #DHARUMIsPAGE answering to #KASHMIRFILES

Wednesday, May 17, 2023

1221. WALKING TIME IN A GREEN PARADISE



நேற்றைய நடையில் ஊரைப் பார்த்து வியந்தேன்; இன்று (14.5.23) ஊரின் வெளிப்பகுதியைப் பார்த்து அதன் அழகில் மயங்கி விழுந்தேன். சமீப காலத்தில் நெட்பிளிக்ஸ், ப்ரைம் வீடியோ அருள்பாலித்ததில் நிறைய கேரளப் படங்களைப் பார்த்து, ஏற்கெனவே இருந்த கேரளக் காதல் அதிகமாக வளர்ந்துள்ளது. இப்போதும் இந்த ஊர் கேரள எல்லையில் உள்ளது. இன்று நடந்த சாலையில் தொடர்ந்தால் ஓரிரு கிலோ மீட்டர் தொலைவில் கேரளம் வந்து விடுமாம். எல்லைப் பகுதி மக்கள் என்பதால் தமிழும் கேரளமும் எங்கும் நிரவிக்கிடக்கின்றன.

தெரியாத சாலை. நல்ல சிமிண்ட் போட்ட சாலை. பெரிய சாலையிலிருந்து கிளைத்துச் சென்ற நல்லதொரு சாலை. நடக்க ஆரம்பித்தேன். பச்சையழகில் அப்படியே குடை சாய்ந்து வீழ்ந்தே விட்டேன். வழுவழு சாலை. சாலையில் வலது பக்கத்தில் பெரும்பள்ளம். அது ஒரு கால்வாய். ஆனால் தண்ணீர் கண்ணுக்குப் புலப்படவில்லை. அந்தப் பள்ளத்திலிருந்து பல்வேறு மரங்கள்; செடிகள்.  திரும்பும் இடமெல்லாம் பச்சைப் பசேலென்று இருந்தது. சிறிது தூரம் வரை இடது பக்கத்தில் பல மாமரங்கள். காய்கள் காய்த்துத் தொங்கின. அதன்பின் இடது பக்கம் ஆங்காங்கே சில கேரள வீடுகள்; சில பாவப்பட்ட மக்களின் குடிசைகள். வலது பக்கமோ நான் நடந்த தொலைவு வரை செடிகளும், மரங்களும். எல்லோரும் வாழைத் தோப்பு பார்த்திருப்போம். ஆனால், இங்கே கால்வாய் பள்ளத்திலிருந்து உயர்ந்து வளர்ந்த பல வாழை மரங்கள் கேட்பாரற்று காய்த்து, காய்ந்து, சாய்ந்து ஒரு வாழைக்காடாக இருந்தது.

எதிரில் வந்த சில மக்களும், குடிசை வாழ் மக்களும் என்னை ஓர் அபூர்வ பிராணி மாதிரி பார்த்தார்கள். நட்பாகப் பழகிய காவல் துறை ஆய்வாளரிடம் திரும்பி வரும்போது அவரது அவுட் போஸ்ட்டில் காலாற உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். எல்லையோரம் என்பதால் அருகருகே அவுட்போஸ்ட்டுகள் இருக்கின்றன என்றார். அபூர்வ பார்வை பற்றிச் சொன்னேன். இந்தப் பக்கம் யாரும் உங்களைப் போல் முக்கால் கால்சட்டை போடுவதில்லை; அதனால் அப்படிப் பார்த்திருப்பார்கள் போலும்” என்றார். இன்னொன்றும் நான் கவனித்தேன்: என்னைப் போன்ற ஒரு வயயயசான ஆள் காதில் எதையோ மாட்டிக் கொண்டு பாட்டு கேட்பதையும் விநோதமாக ( வயது குறைவான இப்போதைய என் ரூம் மேட்டும் அப்படிதான் பார்த்தார்; கேட்டார்!) பார்ப்பது போல் தோன்றியது.

என்னமோ போடா, குமாரு!

நான் மயங்கிய இடங்களைக் காண்பிக்க இதோ ஓர் காணொளி:

காணொளி போட முயற்சித்தேன். இரு நாளாக முயற்சித்தும் முடியவில்லை - இங்கே இணையத்தின் நிலை இப்படி போலும். பின்னாளில் சேர்க்கிறேன். இப்போதைக்கு இப்பதிவு இவ்வளவே !!



Sunday, May 14, 2023

1220. இது ஆறாம் திணையோ ...?

                                     

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித்திணையில் வருமாமே? அப்படியென்றால் ஒரே ஊரில் நகரமும், கிராமியமும் இணைந்தால் அதன் பெயர் என்ன? ஏழ்மையும், வளமையும் அருகருகே அடுத்தடுத்து இருந்தால் அதன் பெயர் என்ன? நாடும் காடும் ஒரே தெருவில் அடுத்தடுத்து இருந்தால் அதன் பெயர் என்ன? ஆளே இல்லாத இடத்தில் பெரிய கடைகள் நடுநடுவே இருந்தால் அதன் பெயர்  என்ன? எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

நாஞ்சில் நாட்டுக்கு ஒரு மருத்துவப் பயணம். தமிழ் நாடு- கேரளம் இரண்டும் இணையும் இடத்தில் – இப்படி சொல்லணுமா அல்லது இரண்டும் பிரியும் இடத்தில் – ஒரு சிற்றூர். மாலை நேரம். சற்றே நடக்கலாமென்று நேற்று ஒரு சாலையில் சென்றேன். சின்ன குறுகலான சாலை; ஆள் நடமாட்டம் மிகவும் குறைவு. ஆனால் எதிரும் புதிருமாக நிறைய வண்டிகள். அதனால் இன்று(13.5.23) சாலையை மாற்றி நடக்க ஆரம்பித்தேன். நீண்ட நெடும் பாதை. சிறிது ஏற்றமும் இறக்கமுமாக இருந்த சாலை.


பல வியப்புகள் ...

·         சாலையில் இருமருங்கிலும் தொடர்ந்து வீடுகள் இருந்தன. இருந்தும் ஆள் நடமாட்டம் அதிகமில்லை. இரு சக்கர வண்டிகள் மட்டும் பறந்து கொண்டிருந்தன. இப்போது தான் வாசித்த ஒரு செய்தி உண்மையெனத் தெரிந்தது. சில பெரிய வீடுகள் ஆளில்லாத வீடுகள் மாதிரி இருந்தன. இப்படிக் காலி வீடுகள் நிறைய கேரளாவில் இருப்பதாகவும் வெளிநாட்டுக்குக் குடியேறிவிட்டார்கள் எனவும் சமீபத்தில்  வாசித்திருந்தேன். வீடுகளைப் பார்த்த போது அச்செய்திதான் நினைவுக்கு வந்தது. இதில் ஆச்சரியப்பட வைத்த ஒன்றும் இருந்தது. பெரிய வீடுகள் .. அலங்கார வீடுகள். ஆனால் அடுத்த வீடு ஒரு ஓட்டைக் குடிசையாக இருந்தது. சாலைகள் மேடும் பள்ளமுமாக இருப்பது போல் மக்களும் ஏழ்மையும் வளமையும் மாறி மாறி இருந்தார்கள்.  இருண்ட ஒரு வீட்டின் முன் உட்கார்ந்திருந்த ஒரு வயதான் அம்மையார் என்னைக் கவர்ந்தார். படம் எடுக்க உத்தரவு வாங்கிப் படம் எடுத்தேன். மொழியில்லாமல் இருவரும் பேசிக்கொண்டோம்.

                                                                  



                                                                              



                                                                                                         


·         சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தபோது பார்த்த ஒரு அதிசயம்; இரு மருங்கிலும் வீடுகள். அதிகமாக மரங்கள் சூழ்ந்த வீடுகள். மாமரங்கள் காய்த்துத் தொங்கின. பலாமரங்கள் கைக்கெட்டும் அளவில் காய்த்துத் தொங்கின. சிறு வயதில் எங்காவது கண்ணில் படும் மாமரங்களில் அல்லது புளியமரங்களில் கல்லெறிந்து விரட்டுப்பட்ட நினைவு வந்தது. இங்கே யாரும் கல்லை விட்டு கூட அல்ல, எட்டியும் மாங்காயைப் பறிக்க மாட்டார்கள் போலும். நான் படமெடுத்த போது காய் பிடுங்கும் ஆவலைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன்.




·         வீடுகள் நிறைய உள்ள தெரு என்றால் அங்கு வீடுகளை மட்டும் தான் நாம் பார்க்க முடியும். ஆனால் வீடுகளின் நடுவே ஒரு காடும் இருக்கிறதே என்று வியப்போடு பார்த்தேன். அடுக்கடுக்காக நீள் வரிசையில் ஒரு பெரும் காட்டையும் அந்தத் தெருவில் பார்த்தேன். அடுத்த ஆச்சரியமாக அது இருந்தது.                                                                                     

                                                          


    



·         மரங்கள் அடர்ந்த காடு இருந்தது. ஆட்கள் அதிகமில்லாத வீடுகள் இருந்தன. ஆனால் அந்தத் தெருவில் அங்கங்கே பல கடைகள். ஒரு ரெடிமேட்  கடை; இன்னொரு பெரிய பழக்கடை. கவரிங் கோல் கடையும் கூட ஒன்று; ஓர் இருசக்கர பணிமனை. யார் இங்கு வந்து வியாபாரம் செய்வார்கள் என்ற கேள்வி மனதில் எழுந்தது.


                                                                             

·         இவ்வூரின் ஊராட்சி அலுவலகமும், நூலகமும் அதே தெருவில் பார்த்தேன். இது அவ்வூரின் முக்கிய தெருவாக இருக்குமோ?
















Sunday, May 07, 2023

1219. walk time #DHARUMIsPAGE