Friday, September 29, 2017

950. BIG SALUTE TO HER !




*


 சும்மா சொல்லக்கூடாது. அந்த 75 நாட்கள். என்ன நடந்தது .. என்னவெல்லாம் நடக்கவில்லை என்பது பயங்கர மர்மமாக இருக்கிறது. இப்போது ஒவ்வொரு மூலைக்குள்ளிருந்தும் ஒவ்வொரு முனகல்கள். சில பிதற்றல்கள். ஆனாலும் ஒன்று மட்டும் உண்மையாக விசுவரூபமெடுத்து நிற்கிறது. அந்தக் கட்சியில் எல்லாருமே காசு .. பணம் .. பதவி. இவ்வளவு தான். எந்த நன்றியுணர்வோ, அன்போ பாசமோ, எதுவும் இல்லாமல் காசுக்கு நாக்கைத் தொங்க போட்டுக்கொண்டு அலையும் ஆட்களே எங்கும் காணப்படுகிறார்கள். அட .. அந்த அம்மாவின் விசிறிகளாகவும், பக்தர்களாகவும் இருந்த சாதாரண மக்கள் கூட இப்போது எந்த உணர்வும் இல்லாமல் அலைகிறார்கள். செத்தவுடன் சித்தி மேல் கோபமாக இருந்தது போல் தெரிந்தது. இந்தம்மாதான் அந்தம்மாவை கொன்னுரிச்சின்னு கோபமா இருந்தாங்க. இப்போ எல்லாம் மறந்தது போல் தெரிகிறது. ஆறிப் போச்சு போலும். முதலில் மன்னார்குடி மேலிருந்த கோபமெல்லாம் இப்போது இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை.


ஆயிரம் இருந்தாலும் ‘சித்தி’ சரியான சித்திதான் போலும். எம்புட்டு காரியங்களை செய்ய முடியுதுன்னு பார்த்தா மலைப்பா இருக்கு.


சரி … மம்மியை மருத்துவ மனையில் சேர்த்தாச்சு. ஏன் சர்க்கரை அம்புட்டு கூடிப்போச்சுன்னு தெரியலை. விடுங்க. மருத்துவ மனையில் பெரிய பெரிய மருத்துவர்களெல்லோரும் வந்தாங்க .. மருத்துவம் பார்த்தாங்க. மருத்துவ மனைத் தலைவர் அப்பப்போ என்னென்னவோ செய்திகளையெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தார். அதிலும் நோயாளி எப்போ வீடு திரும்பலாம் என்பதை நோயாளியே முடிவு செய்யும் படியான அளவிற்கு மருத்துவம் வெற்றியடைந்தது என்றார். அது ஒரு நல்ல ஜோக்காக இருந்தது. மற்ற மருத்துவர்கள் வாயே திறக்கவில்லை. ஒரு வேளை அது medical ethics என்று எடுத்துக் கொள்வோம். ஆனால் இங்கிலாந்து மருத்துவர் பீலே ஏன் ஊடகங்களைக் கூட்டி பேசினார் என்று தெரியவில்லை. அப்போது அதற்கான அவசியம் இருந்ததா என்றும் தெரியவில்லை. அடுத்து, அரசியல் வியாதிகள் எல்லோரும் வந்து பார்த்தார்கள். நேரில் எல்லோரையும் அந்த சித்தியால் எப்படி filter பண்ண முடியும், எப்படி தடுத்து நிறுத்த முடியும் என்பது எனக்குப் புரியவே இல்லை. மத்திய அமைச்சர்கள், ஆளுநர் என்று எல்லோரையும் தடுத்து நிறுத்தும் அதிகாரத்தை எப்படி ஒருவரால் எடுத்துக் கொள்ள முடிந்தது? வந்து பார்க்க வந்தவர்களும் எப்படி அதற்கு அடிபணிந்தார்கள் என்பதை என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. எப்படி அவ்வளவு அதிகாரம்? யாரும் ஏன் கேள்வி கேட்கக்கூட தைரியம் இல்லாமல் இருந்தார்கள். ஆச்சரியம் … அவலம். அவ்வளவு தான் நம் ஆட்கள்.


மேல்மட்ட ஆட்களை எப்படி ”தன்னைக்கட்டினார்” என்பது புரியவில்லை. காசு வேலை பார்த்ததா? அப்படியா எல்லோரும் சரமாரியாயக் காசுக்கு விழுந்து விடுவார்கள்? சரி … அது ஒழியட்டும். அடுத்து அடுத்த நிலை ஆட்கள். நிச்சயம் ஒரு மருத்துவ மனையில் மிகச் சாதாரண வேலை பார்க்க அத்தனை பேர்கள் இருப்பார்கள். அடிமட்ட வேலைக்கு வந்த மக்களைக் கூட எப்படி “வாயைக் கட்ட முடியும்” என்றும் புரியவில்லை. எந்த செய்தியும் வராத அளவிற்கு எப்படி அந்தப் பெண்ணால் அணைகட்ட முடிந்தது. காசும், பதவியும்(?) செய்த வேலையா அது?


தன் கட்சி ஆட்களை அடக்கி வைப்பது எளிது. வளைந்தே பழகிய மக்கள். நிமிர்ந்து நிற்க முடியாத ஜென்மங்கள். சாலையைத் தொட்டுக் கும்பிடும் மக்கள் தானே. (இன்னும் கூட அவர்களின் முதுகு நிமிறவே முடியவில்லை. எடப்பாடி அவர்களோடு இருந்த இன்னொரு சாதாரண எம்.எல்.ஏ. ஆனால் இப்போது முதல் அமைச்சர். அவர் வரும்போதும் இப்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் மம்மிக்கு குனிந்த அளவு இல்லாவிட்டாலும் அப்படி ஒரு அநியாயமாகக் குனிந்து வணக்கம் போடுகிறார்கள். என்னவோ சொல்வார்கள். மரத்துக்குச் சேலையைச் சுற்றினாலும் திரும்பிப் பார்ப்பான் என்பார்கள். அது மாதிரி இந்தக் கட்சி உறுப்பினர்கள் பதவியில் யார் வந்தாலும் விழுந்து கும்பிடுவார்கள் போலும். நல்ல வளர்ப்பு!)


ஆக, சித்தி தன் கட்சி ஆட்களை அடக்கி ஆண்டார்; ஆண்டு கொண்டிருக்கிறார். அது பெரிதில்லை. ஆனால் கூட்டிப் பெருக்க வரும் ஒரு பாவப்பட்ட பெண்ணிலிருந்து, மத்திய அமைச்சர்கள் வரை வந்தவர்கள் அனைவரின் கண்ணைக் கட்டி விட்டது எப்படி? ஒரு விஷயமும் கசியாதபடி எப்படி திரை போட்டு அக்குடும்பம் மறைத்தது? இரண்டு முறை ஒரே ஆளைச் சாக வைத்த நாடகமும் நடந்தேறியது. செத்தவரின் மீது போர்த்திய நாட்டின் மூவர்ணக் கொடியை வாங்கும் மனத்திறமை மிக அபாரம். அப்போதே தனது வாரிசுரிமைக்குக் கையெழுத்தைப் போட்டாகி விட்டது. அல்லது அது நம் தலையெழுத்துக்கே போட்ட கையெழுத்தோ என்னவோ?


சிறைக்குப் போனதென்னவோ குற்றம் செய்ததற்கும், குற்றத்திற்கு உதவியாக இருந்ததற்கும். போலி கம்பெனி இருந்ததற்கும் ஆதாரம் வந்தாச்சு. ஆனால் ஷாப்பிங் போற அளவு திறமையாக தன் சுற்றத்தை சிறையிலேயே அமைத்துக் கொள்ள முடிகிறது. சும்மா வந்த ஊர்ப்பய காசு தானே. அதானால் தான் அது சிறையாக இருந்தால் என்ன .. கூவத்தூராக இருந்தால் என்ன … கூர்காக இருந்தால் என்ன? அள்ளி எறிய முடிகிறது!


இவ்வளவு திறமையான அந்தப் பெண்ணுக்கு ஒரு பெரிய சல்யூட் தாராளமாகப் போடலாம்.


படே ஆத்மி!


*

ஆனால் philosophical-ஆக பார்த்தால் … 20 வருஷத்துக்கு மேல அப்படி ஒரு முரட்டுத்தனமான powerfulஆக இருந்துட்டு, எப்படி செத்தோம்னு தெரியாம ஒரு ஆள் போயாச்சு. இன்னொரு ஆளுக்கு காத்து அடிக்க ஆரம்பிச்ச காலத்துல சிறைக்குப் போயாச்சு. என்னதான் ஷாப்பிங் போய்ட்டு வந்துட்டாலும் சிறை தானே வாழ்க்கையாகப் போச்சு.

பிள்ள குட்டிகளுக்கும் சேர்க்கலை. தியேட்டரும், நீரும், நிலமும் வாங்கி/பிடுங்கிக் குமிச்சி யாருக்காகவோ குமிச்சி வச்சாச்சி… என்ன வாழ்க்கை? 

இது தான் வாழ்க்கையா? தெரியலையே!


*



http://tamil.south.news/sasikala-jayalalitha-fight/


*

Monday, September 11, 2017

949. சில விவாதங்கள் - என் ‘மதங்களும் சில விவாதங்களும்” நூலுக்கான ஓர் ஆய்வுரை

*


 சில விவாதங்கள்



மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன் மற்றும் நினைவாற்றலைக் கட்டுப் படுத்துகின்ற மூளையின் டெம்பரல் லோப் என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது. 

 மூளையின் இந்தப் பகுதி, வலிப்பு நோயால் பாதிக்கப்படும்போதோ, அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ, சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான ஆன்மீக அனுபவங்கள் ஏற்படுகின்றன. 

 இவையன்றி பட்டினிக் கிடத்தல், இரத்த சர்க்கரையின் அளவு அலை பாய்தல், திரும்பத் திரும்ப ஒரே சொல்லை உச்சரிக்கும் மந்திர உச்சாடனங்கள், ஒரே விதமான அசைவுகளைக் கொண்ட நடனம் ஆகியவையும், அமானுஷ்யமானவை என்று சொல்லப்படும் அனுபத்தைத் தர வல்லவை. 

 சாதாரணமாக இளம் வயதில் மதத்தை விட்டு விலகியிருந்து, திருமணமாகி, குழந்தைகள் பெற்று, வயதடைய வயதடைய, கடவுளைத் தேடி சரணடைபவர்கள் ஏராளம்..

 ஆனால் இவர் சற்று வித்தியாசமானர்.

 40 – 43 வயது வரை, இவர் சார்ந்த கிறித்துவ மதத்தின் மேல் மட்டற்ற நம்பிக்கையும், இம்மதக் கடவுளின் மேல் மாறா பற்றும் உடையவராய விளங்கியவர்.

 இளம் வயதில் பூட்டிக் கிடந்த கோவிலின் முன்னால், இரவு நேரத்திலே போய், தனியாக உட்கார்ந்து அழுதவர்தான் இவர்.

 ஆனாலும், பின்னர் மெல்ல மாறினார்.

 ஒரு நாளிலோ, ஒரு சில மாதங்களிலோ ஏற்படட மாற்றமில்லை. தயங்கித் தயங்கி, நின்று நிதானித்து மெல்ல மெல்ல மாறினார்

 யார் மீதோ அல்லது எதன் மீதோ ஏற்பட்ட ஏமாற்றங்களினாலோ, கோபதாபங்களாலோ இவர் மாறவில்லை.

 கேள்வியும் நானே, பதிலும் நானே என இவர், இவரையேக் கேள்விகள் கேட்டு, அதற்கானப் பதில்களையும் இவரே கூறி, பலமுறை பதிலுக்காக அலையாய் அலைந்து, பதிலைத் தேடிக் கண்டுபிடித்து, மெல்ல மெல்ல மாறியவர்.

 தன் மதம், பிறர் மதம் என்று பாராமல், உலகின் அத்துனை மதங்களையும் அலசி, நெக்குருகப் படித்து, தீவிராமாய் ஆராய்ந்து, சில விவாதங்களை முன் வைக்கிறார்.

 தேவதூதர், யேசுவின் பிறப்பைப் பற்றி மேரியிடம் கூறியதாகவும், அதே தேவதூதர் முகமதுவிற்கு அல்லாவின் வார்த்தைகளைக் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. 

 இதோ கடவுள் உன்னிடம் குழந்தையாய் பிறக்கப் போகிறார் என்று மேரியிடம் சொன்ன தேவதூதனா அல்லது பயப்படாதே, நான் அல்லாவினால் அனுப்பப் பட்டவன் என்று முகமதுவிடம் சொன்ன தேவதூதனா. 

 எது சரி?

 இரண்டில் ஒன்றுதானே சரியாக இருக்க வேண்டும்.

 விவாதத்தை முன் வைக்கிறார்.

 நம் இந்தியக் கடவுளர்கள் எங்கெல்லாம் சஞ்சரித்தார்கள். வடக்கே கைலாயம் என்ற இமயம். தெற்கே குமரி முனை இந்த இந்தியக் கண்டத்தைத் விட்டு வெளியே செல்லாத கடவுளர்கள், கொஞ்சம் தாண்டியதாகக் கூறினால், அடுத்த நாடு, இலங்கையைக் கூறலாம். 

 கிரேக்க நாட்டுக் கடவுளர்கள், நமது முருகனைப் போல், மலைகளில் மட்டுமே வசிப்பதான கதை. 

 ஆபிரஹாமிய மதங்களில் வரும் சம்பவங்கள் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டில் வரும், அனைத்து தீர்க்க தரிசிகளின் செயல்பாடுகளும், அரேபிய நாட்டு எல்லைகளுக்குள்ளேயே முடங்கி விடுவது ஏன்? 

விவாதத்தை முன் வைக்கிறார். ஏன் கடவுளர்கள், ஒரு குறுகிய எல்லைக்கு உட்பட்டு இருக்கிறார்கள். 

யோசித்துப் பாருங்கள் என சிந்திக்க நம்மைத் தூண்டுகிறார்.

 ஆற்ற முடியாத சோகங்களைக், காலம் மெல்ல மெல்ல ஆற்றும். 

 ஆனால் அதே சோகங்களை கடவுள் நம்பிக்கை, உடனடியாய் போக்கும். 

இதனைப் புரிந்து வாழ்ந்து, பட்டுணர்ந்து தெளிவு பட்ட, நம் முன்னோர், நமக்காக ஏற்படுத்திக் கொடுத்த, சுமை தாங்கித் தூண்கள்தான் நமது கடவுளர்கள். 

 அவைகள் வெறும் தூண்கள்தான், வெறும் கற்கள்தான், வெறும் கதைகள்தான். 

ஆனால் மனதிற்கு இதம் அளிக்க, மனிதனால், மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள்.

 சிறு வயதில், மனதை நல்வழிப்படுத்த கடவுள் பயம் தேவை. 

 வயதும், மனமும் வளர வளர, கடவுள் நமக்குத் தேவையில்லை. 

 செத்தபிறகு மோட்சமாவது, நரகமாவது. இருக்கும்போது, 

உன்னையும், என்னையும், மனிதம் உள்ள மனிதனாக வைத்திருக்க வந்ததே மதமும், கடவுளும். 

 இந்த வெளிச்சத்தை உணர்ந்தபின், அறிந்தபின், கடவுள் எதற்கு. மனிதம் போதுமே.

 மதங்களும் சில விவாதங்களும் 

 பேசுவதே இவர் தொழில்.

 ஆம். இவர், 37 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

ஒரு நைஜீரியப் புதினத்தை மொழி பெயர்த்தமைக்காக, இரு மாநில விருதுகளைப் பெற்றவர்.

 இவரது இரண்டாவது மொழி பெயர்ப்பு நூல் பேரரசன் அசோகன்.


‘மதங்களும் சில விவாதங்களும்” 


என்னைப் பொறுத்தவரை இது ஒரு நீண்ட நெடும் தேடல் …… தொடர்ந்த தேடல் …… 

 முடிவைத் தொட்டுவிட்டேன் என்று கூறவில்லை. 

நான் சென்ற எல்லை வரை, உங்களையும் அழைத்துச் செல்ல ஆசை. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. கடினமானதுதான். உங்கள் மனக் கதவுகளைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள் …. 

 240 பக்கங்களுக்குத் தொடரும் விவாதங்கள், விளக்கங்கள், வெளிச்சங்கள். 

பெரு வள்ளலாய், பெரு வெள்ளமாய், விவாதங்களை முன் வைத்து, அலசி ஆராயும் இவரின் புனைப் பெயர் ....

 த ரு மி

. மதங்களும்,சில விவாதங்களும்
எதிர்வெளியீடு,
96,நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி -642 002
தொலைபேசி 04259 . 226012, 9942511302

 மின்னஞ்சல் dharumibook@gmail.com 





 *

Friday, September 01, 2017

948. அசோகர்



*


https://www.facebook.com/sam.george.946/posts/10212057853234879?pnref=story


*

***


*