Showing posts with label கடவுள் என்னும் மாயை. Show all posts
Showing posts with label கடவுள் என்னும் மாயை. Show all posts

Sunday, September 30, 2018

1005. அண்மையில் படித்த புத்தகம் : கடவுள் என்னும் மாயை...தருமி



*

எனது இரண்டாம் புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர்சனப் பார்வை

                       முனைவர் வா. நேரு அவர்கள் எழுதிய கட்டுரை










*


அண்மையில் படித்த புத்தகம் : கடவுள் என்னும் மாயை...தருமி


ஆசிரியர்                   : தருமி
வெளியீடு                  : எதிர் வெளியீடு ,பொள்ளாச்சி- 624 002,99425 11302
முதல் பதிப்பு               : டிசம்பர் 2017
மொத்த பக்கங்கள்           :  328,  விலை ரூ 350 .

                                கடவுள் என்னும் மாயை என்னும் இந்தப்புத்தகம் அண்மையில் புத்தகக் கண்காட்சியில் வாங்கியது.இந்நூலை எழுதிய தருமி அவர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர். தமிழ் வலைத்தளத்தில் சக பதிவாளர். தொடர்ந்து பதிவுகளைப் பதிவிடக்கூடியவர். ஓய்வு வாழ்க்கையை புத்தகங்களை வாசிப்பதிலும்,அதனை பதிவிடுவதிலும், ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்ப்பதிலும் செலவழித்து மிக அர்த்தமுள்ள வாழ்க்கையாக தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளவர். அவரால் அண்மையில் எழுதப்பட்டு வெளிவந்துள்ள புத்தகம் இந்த 'கடவுள் என்னும் மாயை ' என்னும் புத்தகம்.



                                நீங்கள் எந்த மதத்து நம்பிக்கையாளராகவும் இருக்கலாம். இந்துவாக, கிறித்துவராக,இஸ்லாமியராக இருக்கலாம்,நீங்கள் நேர்மையான,திறந்து மனதோடு இந்தப் புத்தகத்தைப் படித்தால், இந்த புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது உங்களுக்குள் உங்கள் கடவுள் பற்றி ஆயிரமாயிரம் கேள்விகள் வருவதை உணர்வீர்கள். எந்த வயதுக்காரராக நீங்கள் இருந்தாலும், இந்த வயதுவரை நமக்கு இருந்த கடவுள் நம்பிக்கை சரிதானா? என்னும் கேள்வி ஆழமாகப் பதிவதை நீங்கள் மறுக்க இயலாது. எல்லா மதங்களைப் பற்றியும் , எல்லாக் கடவுள்கள் பற்றியும் ஆதாரபூர்வமான கேள்விகளை வைக்கின்ற, நேர்மையானவர்களாக இருந்தால் கடவுள் நம்பிக்கையாளர்களிடமிருந்து கேள்விகளுக்கு பதிலினை எதிர்பார்க்கின்ற புத்தகம். இந்த நூலுக்கான வாழ்த்துரையை "புதிய வெளிச்சம் தரும் இந்நூலை எழுதியவரைப் பாராட்டுவதற்கான ஓர் அரிய வாய்ப்பு என மகிழ்ந்தேன் " என ஜீவானந்தம் கொடுத்திருக்கின்றார்.

                               ஆசிரியர் முன்னுரையை ' புலியின் வாலைப் பிடித்த கதையாகி விட்டது என் பிழைப்பு ' என ஆரம்பிக்கின்றார். அப்போது வாசிப்பதில் ஏற்படும் ஈர்ப்பு புத்தகத்தின் கடைசி வரை ஈர்ப்பாகவே இருக்கின்றது. தான் படித்த 12 புத்தகங்களைப் பற்றிய (9 ஆங்கில நூல்கள், 3 தமிழ் நூல்கள்) தொகுப்புதான் இந்த நூல் என்றாலும், ஒவ்வொரு நூலும் ஒரு நம்பிக்கையாளனின் கடவுள் நம்பிக்கையை போட்டு தாக்கித் தகர்க்கும் அணுகுண்டைப் போன்ற வலிமை மிக்க நூல்கள். மிகப் பொறுமையாகப் படித்து, அதன் கருத்துக்களைப் புரிந்து அதனை தமிழாக்கம் செய்து, தனது கருத்துக்களையும் இணைத்து இந்த நூலை நமக்குக் கொடுத்திருக்கின்றார் தருமி.

                  கிறித்துவமத நம்பிக்கைகளை  கேள்விகேட்கும் வகையில் வந்துள்ள 6 நூல்களை முதலில் நூல் ஆசிரியர் கொடுத்துள்ளார். நூல், நூல் ஆசிரியர் அறிமுகம், நூலில் உள்ள செய்திகள் பற்றிய விளக்கம் என்ற வகையில்தான் இந்த நூல் முழுக்க அமைந்துள்ளது.தருமி கொடுத்திருக்கும் முதல் நூல் 'கடவுள் என்னும் மாயை ' என்னும் ரிச்சர்டு டாக்கின்ஸ் நூல். தமிழில் கு.வெ.கி. ஆசான் அவர்களால் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு,திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்டு  இன்றும் விற்பனையில் சாதனை படைக்கும் நூல். ரிச்சர்டு டாக்கின்ஸ் அவர்களைப் பற்றிய குறிப்புகளை, அவர் எழுதிய புத்தகங்கள் பட்டியலைக் கொடுத்திருக்கின்றார். பின்பு அந்தப் புத்தகத்தின் கருத்துக்களை 10 தலைப்புகளில் கொடுத்திருக்கின்றார்.

                             இரண்டாவது நூல் அன்னை தெரசா அவர்களைப் பற்றியது. " அன்னை தெரசா ஒளியே வருவாய் என்னிடம் கொல்கத்தா புனிதையின் தனிப்பட்ட கடிதங்கள் .." என்னும் புத்தகம் ப்ரையன் கோலோடைசுக் M.C. என்பவர் எழுதியது. " இந்த நூலில் அன்னையின் வாழ்வின் பெரும்பகுதியில் ஆன்மிக வாழ்வில் அவருக்கு நடந்த கடினமான, மனதுக்குள் நடந்த நீண்ட போராட்டமான வாழ்க்கை தெளிவெனத் தெரிகிறது. இறை நம்பிக்கைகளில் இருந்த குழப்பத்தை அவர் தனது சமூக வாழ்க்கையில் வெளிக்காண்பிக்காது,தன் சேவைகளைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்......இப்பதிவை மிகவும் யோசித்தபிறகே வலையேற்றுகிறேன் " என இந்த நூல் ஆசிரியர் குறிப்பிடுவதும் வேறுபட்ட கோணத்தில் அன்னை தெரசாவின் ஆன்மிகத்தைப் பார்ப்பதுவும் வாசிக்கும் நமக்கு மிகவும் புதிய கோணமாக இருக்கின்றது.பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் அவர்களின் ' நான் ஏன் கிறித்துவனல்ல '  என்னும் நூல் 3-வது நூலாகும். இது பெரும்பாலான நாத்திகர்கள் படித்திருக்கக்கூடிய புத்தகம்.நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் பற்றியும் அவரின் கருத்துகள் பற்றியும் எழுதியுள்ளார்.

                          எலைன் பேஜல்ஸ் என்பவர் எழுதிய 'ஞான மரபு நற்செய்திகள் ' என்பது 4-வது நூல். என்னைப் போன்றவர்கள் கேள்விப்பட்டிராத நூல். "கிறிஸ்துவ மதத்தின் ஆரம்ப காலங்களில் இருந்த உட்பிரிவினைகள்,யூத,கிறித்துவ சமயங்களின் ஆரம்பகாலத்தில் பெண்கள் கையாளப்பட்ட விதம் போன்றவைகளை இந்த நூலில் எழுதியுள்ளார். மிகவும் முக்கியமான ஓர் இடத்தை அந்த நூல் விரைவில் பெற்றது. 20-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த நூறு புத்தகங்களில் இதுவும் ஒன்று என Modern Library என்ற அமெரிக்க வெளியீட்டாளர் தேர்ந்தெடுத்தனர் " (பக்கம் 72 ) எனக்குறிப்பிட்டு அந்த நூல் எழுப்பும் கேள்விகள் கடந்த 2000 ஆண்டுகளாக இருப்பதை கடைசியில் சுட்டிக்காட்டுகின்றார்.

                          யூதாசின் நற்செய்தி என்பது அடுத்த நூல். இதனைத் தொகுத்தவர்கள் மூன்று பேர்.யூதாஸ் என்பவர் வில்லன் அல்ல, யேசுவின் மிக நெருங்கிய நண்பர். யேசுவால் மிகவும் நம்பப்பட்டவர். யேசு சொல்லியே அவர் எதிரிகளிடம் யேசுவை யூதாஸ்  காட்டிக்கொடுத்தார் என்பதற்கு ஆதாரமாகக் கிடைத்திருக்கும், 1600 ஆண்டுகளாக மறைத்துவைக்கப்பட்டிருந்து, இப்போது கிடைத்திருக்கும் புத்தகத்தின் வழியாகக் கிடைத்திருப்பதை சுட்டிக்காட்டுகின்றார்.

                          கிற்ஸ்டோபர் ஹிட்சன்ஸ் எழுதிய 'கடவுள் என்பது பெரிதொன்றுமில்லை( God is not great ) என்பது ஆறாவது நூலாகும்.அவரது நூலைப் பற்றி சில குறிப்புகள் எனக்குறிப்பிட்டு பக்கம் 125-ல் " கட்டுப்பாடுள்ள மதங்கள் மிகவும் வன்முறையான,அறிவுக்குப் பொருந்தாத, நல்லிணக்கமற்ற தன்மைகளைக் கொண்டுள்ளன.மேலும் அவை இனவெறி,குழுவெறி,மதவெறி போன்ற தேவையற்றவைகளைத் தூண்டி விடும் தன்மை வாய்ந்தவை.மதங்களின் முக்கிய முதலீடுகளே அறியாமையும், அறிவுத்தேடலுக்கு எதிர்ப்பும்,பெண்களை அடிமைப்படுத்துவதும், குழந்தைகளை வலிந்து இழுத்து வைத்திருப்பதும்தான்.பிளவுபடுத்துதலே அவைகளின் முதன்முதல் குறிக்கோளாக உள்ளது " விவரிக்கின்றார். நூலினைப் பற்றி சுருக்கமாக புரிந்துகொள்ளும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளது.

                        இஸ்லாம் மதத்தை விமர்சனம் செய்யும் இரண்டு நூல்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. இப்னு வராக் என்பவர் எழுதிய " நான் ஏன் ஒரு இஸ்லாமியனல்ல? ' என்னும் புத்தகமும்,ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய 'இஸ்லாமியத் தத்துவ இயல் ' என்பதுவுமாகும். நான் ஏன் ஒரு இஸ்லாமியனல்ல என்னும் புத்தகம் மிக விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. முதலில் படிப்பவருக்கு பல அதிர்ச்சியூட்டும் செய்திகள் -இஸ்லாம் மதத்தைப் பற்றி இந்த நூலில் உள்ளன. " மதங்களில் இருக்க வேண்டிய சுதந்திரத்தை வராக் வலியுறுத்துகிறார். அவர் இஸ்லாத்தில் அம்மதத்தை விட்டு விலகும் சுதந்திரம் இல்லவே இல்லை. முஸ்லிமாகப் பிறந்தால் அதுவே முடிவு.அதை எதற்காகவும் உன்னால் மறுக்க, விட்டுச்செல்ல முடியாது. முயன்றால் நீ மரண தண்டனைக்குரியவனாக ஆகின்றாய் " என்று சொல்கின்றார். உண்மைதான். இன்றைக்கும் நாத்திகம் பேசினால் மரணதண்டனை கொடுக்கும் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. ஆனால் உண்மை, உண்மைதானே.....சல்மான் ரஷ்டி பிரச்சனையின் மூலமாகவே எழுத வேண்டும் என்ற உணர்வு தோன்றியதாக இப்னு வராக் எழுதுகின்றார்.குரான் பற்றி, முகமது நபி அவர்களைப் பற்றி எழுப்பப்படும் பல கேள்விகளை இப்னு வராக் எழுதியிருக்கின்றார். அதனைத் தமிழில் தருமி அவர்கள் மொழிபெயர்த்து , இஸ்லாமிய மதம் எப்படி எப்படியெல்லாம்  மனித உரிமைகளுக்கும் , பெண் உரிமைகளுக்கும் எதிரானது என்னும் பட்டியலைத் தருகின்றார். ராகுல்ஜியின் 'இஸ்லாமியத் தத்துவ இயல் ' என்னும் புத்தகம் மிகச்சுருக்கமாக 5 பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளது.

                     இந்து மதத்தை விமர்சனம் செய்யும் காஞ்சா அய்லய்யா என்னும் தலித் தத்துவ அறிஞர் எழுதிய " நான் ஏன் இந்து அல்ல " என்னும் புத்தகமும், அக்னி ஹோத்ரம் தாத்தாச்சாரியார் எழுதிய 'இந்து மதம் எங்கே போகிறது " என்னும் புத்தகமும் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே என்னைப் போன்றவர்கள் படித்த புத்தகங்கள் இவை.மீண்டும் அதன் கருத்துக்களை சுருக்கமாகக் காண்பதற்கான வாய்ப்பாக இந்த 'கடவுள் என்னும் மாயை ' என்னும் புத்தகம் அமைந்தது.

                     கடைசி இரண்டு நூல்களும் புனைவுகள். பிலிப் புல்மேன் எழுதிய " ஜீசஸ் என்ற நல்லவரும் கிறிஸ்து என்னும் போக்கிரியும் " என்னும் புத்தகம் வாங்கிய கதையை தருமி விவரிக்கின்றார். " பெயரைக் கேள்விப்பட்டவுடன் வாங்கிய நூல்.வாங்கிய பிறகே இது ஒரு கதை என்பது தெரிந்தது. கிறிஸ்துவைப் பற்றி,கிறித்துவத்தைப் பற்றிய நூலாக இருக்குமென நினைத்தேன். வாங்கிய பின் பின்னட்டையிலேயே 'இது ஒரு கதை ' என்று தெளிவாகப் போட்டிருந்தது " பக்கம் 309 எனக் குறிப்பிடுகின்றார். இந்த நூலின் கதையைச்சொல்லி விளக்கும் நூல் ஆசிரியர் தருமி தனது கருத்துக்களை மிகவும் மனம் திறந்து பேசும் பகுதியாக இந்தப் பகுதி இருக்கின்றது எனலாம்.

                  12-வது நூல் டான் பிரவுன் என்பவர் எழுதிய டா வின்சி கோட் என்னும் நூல். " 44 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு,8 கோடி நூல்கள் உலகம் முழுவதும் விற்கப்பட்டு,அக்கதையை திரைப்படமாகவும் வெற்றிகரமாக எடுக்கப்பட்டு மிகவும் புகழ் சேர்த்த புனைவு நூல் " என தருமி இந்த நூலை அறிமுகம் செய்கின்றார். " மிக முக்கியமானதாகவும்,கிறித்துவர்களுக்கு அதிர்ச்சி தரும் சேதியாகவும் கதையில் வருவது ;ஜீசஸ் திருமணமானவர் என்பது.திருமணம் என்பது தன்னிலே தவறாக இல்லாவிட்டாலும் ஒவ்வொரு கிறித்தவருக்கும் இது அதிர்ச்சி தரும் சேதி என்பதே உண்மையாக இருக்கும் " பக்கம் (325) எனக் குறிப்பிடுகின்றார்.

                  கட்டுடைத்தல் என்பது இன்றைய தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான கோட்பாடு. அந்தக் கட்டுடைத்தல் என்பது மனித நேயத்தினையும் அன்பையும் அடிப்படையாகக் கொள்ளும்போது பழமைகள் காற்றுப்போன டயர்கள் போல வலுவிழந்து போகின்றன. ஆனால் பழமைவாதிகள் தங்களிடம் இருக்கும் பிரச்சார பலத்தால் மட்டுமல்லாது, வன்முறையாலும் மதங்களைக் காப்பாற்றிட முனைகின்றனர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் " மதவாதிகளின் கோட்பாடுகள், பிரச்ச்சாரம் எல்லாம் பெரிய பலூன் போன்றவை .அவற்றை பகுத்தறிவு என்னும் ஊசி கொண்டு குத்தும்போது எவ்வளவு பெரிய பலூனும் வற்றிப்போய்விடும் ' என்பார். உண்மைதான் இந்த நூலின் கட்டுரை ஒவ்வொன்றும் மிக வலிமையான பகுத்தறிவு ஊசிகள்தான்.அந்தந்த மதத்தை சார்ந்தவர்கள் பகுத்தறிவு ஊசிகளைப் பயன்படுத்தும்போது மதங்கள் என்னும் பலூன்கள் காணாமல் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

                 இந்த நூலின் ஆசிரியர் தருமி அவர்கள் ஒரு காலத்தில் மிகுந்த நம்பிக்கையாளராக கிறித்துவ மதத்தில் இருந்தவர். இன்றைக்கும் உற்றார்,உறவினர்கள் எல்லோரும் கிறித்துவமதத்தில் பற்றுடைவர்களாக, பரப்புவர்களாக இருப்பவர்கள். ஆனால் தன்னுடைய மனதில் எழுந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்காதபோது, கடவுள் என்னும் கருத்தினை சந்தேகிக்க ஆரம்பித்து, கேள்விகள் கேட்டு கேட்டு கடவுள் இல்லை என்னும் நாத்திகராக மாறியவர். தான் மாறியது மட்டுமல்லாமல் , தான் மாறியதற்கான காரணங்களை 'மதங்கள்-சில விவாதங்கள் ' என்னும் நூல் மூலம் மற்றவர்கள் மாறுவதற்கும் வழி காட்டியவர். இப்போது ஓர் அருமையான நூலினை 'கடவுள் என்னும் மாயை ' என்னும் புத்தகத்தை அளித்துள்ளார். எனது சார்பாகவும், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாகவும் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும். எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் தொடரும் இவரின் எழுத்துப்பணி தொடர, நாம் அளிக்கும் ஆதரவு என்பது இவரது எழுத்துக்களைப் படிப்பதுவும், அதனை மற்றவர்களையும் படிக்க வைப்பதுமே ஆகும். செய்வோம்..



*


Tuesday, April 03, 2018

979. கடவுள் என்னும் மாயை ... நூல் விமர்சனம்


பேரா. விஜயகுமார் எனது  கடவுள் என்னும் மாயை என்ற நூலுக்கான ஒரு முழு விமர்சனம் எழுதியுள்ளார். இம்மாத  செம்மலர் இதழில் வெளி வந்துள்ளது. 
பேராசிரியருக்கும், செம்மலருக்கும் நன்றி 



*******

நூல் விமர்சனம்:
கடவுள் என்னும் மாயை

ஆசிரியர் : தருமி










வெளியீடு : எதிர் வெளியீடு, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி—642002.

விலை : ரூ.350/-




 






          கடவுள் மறுப்பு நூல்கள் தமிழில் அதிகம் வெளிவருவதில்லை. தந்தை பெரியார் தமிழகத்தில் 90 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கடவுள் மறுப்புக் கருத்துக்களை பிரச்சாரம் செய்திருந்தாலும், தமிழர்கள் அப்படியொன்றும் மதத்தின் பிடியிலிருந்து வெளிவந்திடவில்லை என்பதே காரணம். கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுவது போல்மதம் மயக்கும் அபின் மட்டுமல்ல, அதுவே குரலற்ற அபலைகளின் குரலாக, இதயமற்ற உலகின் இதயமாகி உள்ளது”. பல நூறாண்டு காலங்களாக நீடித்திருக்கும் மதத்தின் பிடி அவ்வளவு எளிதில் விலகிடுமா, என்ன? இருப்பினும் ஐரோப்பிய நாடுகளில் மதத்தின் பிடி தளர்ந்திருப்பதைக் காண்கிறோம்.  உலகெங்கிலும் உள்ள மக்கள் பகுத்தறிவு தரும் வெளிச்சத்தில் இறை நம்பிக்கையிலிருந்து விடுபட்டு அறிவொளி நோக்கி பயணிப்பார்கள் என்ற நம்பிக்கையை வளர்க்கிறதுகடவுள் என்னும் மாயைஎனும் இந்நூல்.


          தருமி எனும் புனைப் பெயரில் தன்னுடைய நூல்களை எழுதிவரும் பேரா.சாம் ஜார்ஜ் மதுரை தி அமெரிக்கன் கல்லூரியில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக விலங்கியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். ’மதங்களும் சில விவாதங்களும்எனும் இவரின் முந்தைய நூலின் தொடர்ச்சியாக இந்நூல் அமைந்துள்ளது. கடவுள் மறுப்பு பற்றிய பன்னிரெண்டு அரிய புத்தகங்களின் விரிவான விளக்கங்களை இந்நூலில் ஆசிரியர் தருமி வழங்கியுள்ளார். புத்தகத்தைப் படித்து முடித்ததும் பன்னிரெண்டு புத்தகங்களை வாசித்த பலன்களைப் பெறுகிறோம்


கடவுள் மறுப்பு குறித்து ஆழ்ந்த விவாதங்களை முன்வைக்கும் பத்து நூல்களுடன் இரண்டு நாவல்களும் சேர்ந்திருப்பது சுவாரசியமானது. கிறித்துவ சமுதாயத்தினிடையே மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திய டான் பிரவுனின்டாவின்சி கோட் நாவல் மற்றும் அதே அளவுக்குப் பரபரப்பை ஏற்படுத்திய பிலிப் புல்மேன் எழுதியஜீசஸ் என்ற நல்லவரும், கிறிஸ்து என்ற போக்கிரியும்நாவல் ஆகியன பற்றிய விமர்சனங்களும் படிக்கக் கிடைக்கின்றன. பெட்ரண்ட் ரஸ்ஸலின்நான் ஏன் ஒரு கிறித்துவனல்ல”, இப்னு வராக் எழுதியுள்ளநான் ஏன் ஒரு இஸ்லாமியனல்ல”, காஞ்சா அய்லய்யா எழுதியநான் ஏன் இந்து அல்ல ஆகிய நூல்கள் பற்றிய விளக்கக் கட்டுரைகள் மூன்று மதத்தினரையும் நாத்திகம் நோக்கி நகர்ந்திட உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


 கோவில்கள் மூலமாக இயங்கும் கிறித்துவ மதம் இப்போதும், எப்போதும் உலகின் பண்பாட்டு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவே இருந்து வந்துள்ளது என்று நான் துணிந்து சொல்வேன் என்கிறார் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல். கிறித்துவின் நல்லொழுக்கக் கோட்பாடுகளில் ஒன்று நரகத்தைப் பற்றிய பயமுறுத்தலாகும். மனிதத்தன்மையுள்ள எவரும் அப்படியொரு காலவரையற்ற தண்டனையை நம்பமுடியாது. இத்தகைய கொடூரமான நீண்ட தண்டனை என்பது கிறித்துவின் உயர் பண்புகளுக்கு எதிரானதாக இல்லையா என்று கேட்கிறார்


நான் ஏன் ஒரு இஸ்லாமியனல்லஎனும் நூலில் இப்னு வராக்உலகின் அனைத்து அரசுகளும் ஷாரியா சட்டத்தையும், பத்வா முறைகளையும், மத குருக்களின் ஆக்கிரமைப்பையும், மதம் தொடர்பான அரசு முறைகளையும் முற்றிலுமாக புறந்தள்ளவேண்டும், ஏனேனில் அவை எல்லாமே உலக மனித உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானவைஎன்கிறார். இன்று மேற்காசியாவில் இஸ்லாமிற்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் நடக்கும் போரினை சுதந்திரத்தை விரும்புவோருக்கும் அதனை எதிர்ப்போருக்கும் இடையிலான போர் என்று இப்னு வராக் கூறுவதை ஏற்கமுடியாது. இராக், சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் மீது தொடுக்கப்பட்டுள்ள போர்களுக்கெல்லாம் காரணம் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றிடவா? நிச்சயம் இல்லை என்பது உலகறிந்த உண்மை. இவைகளுக்குப் பின்னால் நிறைய புவியியல் அரசியல்களும், மேற்காசியாவின் எண்ணெய் வளமும் இருக்கின்றன என்பதையும் அனைவரும் அறிவர்


நான் ஏன் இந்துவல்லஎனும் கட்டுரையில் காஞ்சா அய்லய்யா, “மதங்களின் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான நிறுவனமாக இந்து மதம் இருந்து வந்துள்ளது. இந்தியாவில் உள்ள தலித் பகுஜன்களின் வேதனை மிக்க வாழ்வே இந்தக் கொடூரத் தன்மைக்குச் சான்றாக அமைகிறது.” என்கிறார். எல்லா இந்துக் கடவுள்களும் தலித் பகுஜன்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய கடவுள்களாக இருக்கிறார்கள் என்கிறார் அய்லய்யா. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் இலக்கியங்கள் எதுவும் இந்துக் கடவுள்களை விமர்சனம் செய்ததே இல்லை என்று அய்லய்யா சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாற்றுக் கலாச்சாரம் குறித்து கம்யூனிஸ்டுகள் பேசியபோதும் கூட அந்த மாற்றுக் கலாச்சாரம் இந்து வாழ்க்கை முறையிலிருந்து விலகியதில்லை என்று கம்யூனிஸ்டுகள் மீது அவர் சுமர்த்தும் குற்றச்சாட்டும் உண்மைக்குப் புறம்பானது.


          ”இந்து மதம் எங்கே போகிறது?’ கட்டுரையை காஞ்சி சங்கராச்சாரியர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர் என்ற வைணவப் பெரியார் எழுதியுள்ளார். தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம் என்றெல்லாம் போற்றிப் புகழப்படும் தமிழ் ஆழ்வார்களின் நாலாயிரம் இறைப்பாடல்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம்என சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுவது ஏன் என்று கேட்கிறார். நாலாயிர அருளிச் செயல் என்று தெள்ளு தமிழில் அழைக்கலாமே என்கிறார். அதே போல் நாள்தோறும் நாம் கேட்கும் சமஸ்கிருத சுப்ரபாரத வடிவத்தை அது இயற்றப்பட்டதற்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அற்புதமாக எழுதியிருக்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார். “திருப்பள்ளியெழுச்சிஎன்று பெயரில்  பத்து முத்தான பாடல்கள் நாலாயிர அருளிச் செயல் புத்தகத்தில் உள்ளதைக் குறிப்பிடுகிறார். மத்தியில் பாஜக ஆட்சியில் சமஸ்கிருத திணிப்பு நடக்கும் இன்றைய சூழலில் தாத்தாச்சாரியாரின் இந்த நிலைபாடு மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள் மறுப்பாளர் அல்லாத தாத்தாச்சாரியார் கட்டுரையை இத்தொகுப்பில் இணைத்தது ஏனோ?  


          ரிச்சர்டு டாக்கின்ஸ் 2006இல் எழுதியகடவுள் என்னும் மாயைநூல் பற்றிய கட்டுரை காத்திரமானதாகும். பரிணாமக் கொள்கையில் அவருக்கிருந்த ஈடுபாடு அவரை ஒரு முழு இறை மறுப்பாளாராக மாற்றியது. அறிவியலில் ஆழ்ந்த அறிவுடையவர்கள் எங்ஙனம் கடவுள் நம்பிக்கையோடு இருக்க முடியும் என்கிறார். அறிவியலில் வரும் பல அனுமானங்கள் போலவே, கடவுள் இருக்கிறார் என்பதையும் ஒரு அனுமானமாக வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம் என்பது அவர் கருத்து. தகப்பன் இல்லாமல் கன்னி மேரிக்கு ஒரு குழந்தை பிறந்தது; (இந்து மதக் கடவுள்கள் ஐயப்பன், பிள்ளையார், முருகன், கர்ணன் பிறந்த கதைகள் மாதிரி) செத்துப் போன லாசரை உயிர்ப்பிப்பது; செத்து மூன்று நாட்கள் கழித்து உயிரோடு வந்தது போன்ற கிறித்தவர்களின் நம்பிக்கை எவ்வளவு மூடத்தனமானது என்கிறார் டாக்கின்ஸ். அரசியல் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றிருக்கிறது. ஆனால் மதங்கள் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்றுள்ளது என்கிறார். மனித நேயம் எப்போதும் கடவுள் மறுப்பாளர்களோடு சேர்ந்து செல்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.


விவிலியத்தில் ஜான், மார்க், லூக், மாத்யூ ஆகியோர் எழுதிய நான்கு நற்செய்திகள் உள்ளன. 1970இல் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டயூதாசின் நற்செய்திநூல் கிறித்தவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். எகிப்திய காப்டிக் மொழியில் எழுதப்பட்டுள்ள யூதாசின் நற்செய்தி பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களைக் கொண்டதாக இருக்கிறது. யூதாஸ் விவிலியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது போல் வில்லன் அல்ல. ஏசுவிற்கு மிகவும் பிடித்தமான சீடன் என்பதைக் காட்டுகிறது. ஏசுவின் வேண்டுகோளுக்கு இணங்கியே அவரைக் காட்டிக் கொடுத்தார் என்று குறிப்பிடுகிறது. டான் பிரவுனின் டாவின்சி கோடு நாவல் ஏசுவுக்கும், மேரி மகதலினுக்கும் திருமணம் நடந்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு என்று சொல்லி சர்ச்சையைக் கிளப்பியது போல் யூதாவின் நற்செய்தியும் ஏசுவின் வாழ்வு குறித்து இதுவரை நாம் அறிந்திராத செய்திகளைத் தருகிறது.


 “அன்னை தெரஸா, ஒளியே என்னிடம் வருவாய்- கொல்கத்தா புனிதையின் தனிப்பட்ட கடிதங்கள்” என்ற நூலில் ப்ரையான் கோலோடைசுக் அதிர்ச்சியளிக்கும் செய்திகளை வெளியிடுகிறார். ஏசு சிலுவையில் அறையப்பட்டு வேதனைப்படும் போது பிதாவினால் தான் கைவிடப்பட்டதாக நினைத்து வேதனையோடும், தவிப்போடும், “என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று கத்தும்போது இருந்த அதே உணர்வை அன்னை தெரஸாவும் தன் வாழ்நாளில் உணர்ந்திருக்கிறார் என்கிறார். அன்னை தெரஸா தன்னுடைய ஆன்மீக வழிகாட்டிகளுக்கு எழுதியுள்ள கடிதங்களில் கிறிஸ்துவிலும், மதத்திலும்,  தனக்கு ஏற்பட்ட ஐயங்களை பகிர்ந்துள்ளார். இக்கடிதங்கள் மூலம் அன்னை தெரஸாவின் ஆன்மீக வாழ்வில் அவர் மனதுக்குள் நடந்த நீண்ட போராட்டத்தைப் பற்றி அறிகிறோம். ஆனால் தன் மனதுக்குள் இருந்த தனிமையும், ஆன்மாவை அழுத்திய கருமையும் அவரது இதயத்தில் இருந்த சமூக ஆர்வத்தைத் தொடாமால் பார்த்துக் கொண்டிருக்கிறார். வெளியே கொளுந்துவிட்டு எரிந்த ஏழைகளின் மீதான அன்பு; உள்ளே தனக்குள்  நடத்திக் கொண்ட ஆன்மீக தவிப்பு; -— இந்த இரண்டுக்கும் நடுவில் நடந்த வாழ்க்கை அவரை அபூர்வ ஆன்மீகவாதியாகக் காண்பிக்கிறது.


அன்னை தெரஸா மேல் பலரும் வைத்திருக்கும் அன்பிற்கான காரணம் அவர் ஒரு பெரிய கிறித்துவர் என்பதால் அல்ல. ஆதரவற்றவர்களின் அமைதியான இறுதிக் காலத்திற்கு வழி கோலியவர் என்பதே காரணம். எனவே ப்ரையன் கோலோடைசுக்கின் இப்பதிவு அன்னை தெரஸாவின் மீது நாம் வைத்திருக்கும் அன்பையும், மரியாதையையும் இன்னும் அதிகரிக்கவே செய்கிறது. இந்தக் காரணத்திற்காகவே கிறித்துவ திருச்சபையும் அன்னை தெரஸாவின் கடிதங்களை அவர் கேட்டுக்கொண்டது போல் எரித்து விடாமல் அவைகளை அச்சிட்டு வெளியிட்டிருக்க வேண்டும்.


தமிழக வாசகர்களுக்கென எழுதப்பட்டுள்ள நூலில் பகுத்தறிவு பகலவன் என்றழைக்கப்படும் தந்தை பெரியாரின் இறை மறுப்புக் கட்டுரை ஒன்றையும் இணைத்திருக்கலாம். காஞ்சா அய்லய்யா இந்து மதத்தை வெறுக்கும் அளவிற்கு இந்திய கம்யூனிஸ்டுகளையும் வெறுப்பது விந்தையே! தேர்ந்தெடுத்த பனிரெண்டு கட்டுரைகளை விளக்கிச் செல்வதைத் தாண்டி ஆசிரியர் தருமி தன்னுடைய கருத்துக்களை அதிகம் வெளியிடவில்லை என்பது ஒரு குறையே.   



                  
                           ------பேரா.பெ.விஜயகுமார்.
                 



  ---------------------------------------------------------                .     
















Sunday, January 21, 2018

967. கடவுள் என்னும் மாயை

 
கடவுள் என்னும் மாயை
 
நூலைப்பற்றி
 
தி  இந்துவில்
 
புத்தக விழா சமயத்தில்
 
வந்த நல்ல செய்தி

 
 
 
 
 
 

965. சென்னை புத்தக விழா - 2018

 
 
சென்னை புத்தக விழா 5 -22.1.2018
 
 
12,13,14 நாட்களில் புத்தக தரிசனத்திற்காகச் சென்றேன்.


பல நண்பர்களை, அதுவும் மிகவும் பழைய சிரில் அலெக்ஸ், போகன் சங்கர் போன்ற வலைப்பூ நண்பர்களைக் காண வாய்ப்பு கிடைத்தது.


என் நூலின் வெளியீட்டு நிகழ்வும் நடந்தேறியது.
இனிய நாட்கள்..மகிழ்ச்சியான மணித்துளிகள்.
 
 
 
 
 
 





 









 
 
 

Thursday, January 11, 2018

963. கடவுள் என்னும் மாயை ..முன்னுரை






*

இந்நூலின் வாழ்த்துரை  இங்கே ...  





முன்னுரை


புலியின் வாலைப் பிடித்த கதையாகி விட்டது என் பிழைப்பு.

வலைப்பூக்களில் மதங்களைப் பற்றிய என் பார்வைகளைப் பதித்து வந்தேன். நான் சார்ந்திருந்த மதத்தை விட்டு ஏன், எப்படி வெளிவந்தேன் என்பதை எழுதினேன். நம் மதத்தைப் பற்றி எழுதினோம்; மற்ற மதங்களையும் பார்ப்போமே என்று அவைகளைப் பற்றி தெரிந்த சில விஷயங்களை எழுத ஆரம்பித்தேன். கொஞ்சம் கடினமான, கஷ்டப்படுத்திய வேலை. வாசித்தவர்கள் கேள்விகளோடு திரும்பி வந்தார்கள்; சிலர் மிகத்தீவிரமாக கேள்விகளோடு பொருத வந்தார்கள். அவர்களிடமிருந்து பல கேள்விக் கணைகள். வாசித்தவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயச் சூழல் வந்தது. அப்போது தான் புலியின் வாலைப் பிடிக்கவேண்டிய கட்டாயம் பிறந்தது.

அப்போது புலி வாலைப் பிடித்தேன். ... இன்னும் விட முடியவில்லை!

பதிலைத்தேடி அங்குமிங்கும் ஓடி, அந்தப் புத்தகம் … இந்தப் புத்தகம் என்று நிறைய வாசிக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. கிறித்துவ மதம், இஸ்லாமியம், இந்து மதம் என்று வகை வகையாக வாசித்தேன். வாசிக்க வைத்த எதிரணியினருக்கு எப்போதும் என் நன்றி. வாசித்த நூல்களிலிருந்து முக்கிய பகுதிகளைத் தமிழில் என் வலைப்பூவில் இட்டு வந்தேன். அவை மதம் பற்றிய அறிவையும், ஆழத்தையும் அதிகமாக்க பெரும் உதவியாக இருந்தன. புதுக் கருத்துக்களுக்கு ஆரம்பத்தையும், தெரிந்த கருத்துக்களுக்கு வலு சேர்க்கவும் உதவின.

அப்படித் தேர்ந்தெடுத்து வாசித்த நூல்களில் நான் கண்ட விஷயங்களில் பல எனக்கு மிகவும் புதியவனவாக இருந்தன. சாதாரண நம்பிக்கையாளர் ஒருவருக்கு அவர் நம்பி பல்லாண்டுகளாகக் கடைப்பிடிக்கும் மதங்களிலேயே அவருக்குத் தெரியாத பல உண்மைகளும், வரலாறுகளும், வேண்டுமென்றே மறைக்கப்பட்ட செய்திகளும் நிறைய இருக்கிறதெனத் தெரிந்தது. பூனை பிடிக்கப் போனவனுக்கு யானை கிடைத்தால் எப்படியோ அப்படி எனக்கும் ஒரு பெரும் புதையல் கிடைத்த மகிழ்ச்சி. மகிழ்ச்சியினால் வாசிப்பும் அதிகமாயிற்று.

நெல்லுக்கு இறைத்த நீர் வீணாகுமா? அவைகளைப் பாத்தி கட்டி நாற்றுகள் போல் பராமரித்து, வயலில் பாவுவது போல் என் வலைப்பூக்களில் நான் விதைத்து வைத்தவைகளைத் தொகுத்து ஒரு தனி நூலாகக் கொண்டு வர முயற்சியெடுத்தேன். பன்னிரண்டு நூல்கள். அவைகளில் ஆங்கிலத்தில் ஒன்பது .. தமிழில் மூன்று. மதங்களைப் பற்றியதாக இருப்பினும் அவற்றில் இரண்டு நூல்கள் புதினங்கள். அவைகளிலும் சில தேவையான தகவல்கள் இருந்தமையால் அவைகளையும் இத்துடன் சேர்த்துள்ளேன்.

இந்தப் பன்னிரெண்டு நூல்களையும் வாசித்து அதில் எனக்குப் பிடித்த, இறைமறுப்புக்கு ஆதரவான கருத்துக்களைத் தமிழ்ப்படுத்தி கோர்வையாக்கினேன். ஒவ்வொரு நூலின் ஆசிரியரைப் பற்றிய குறிப்புகளையும், நூலைப்பற்றிய குறிப்புகளையும் இணைத்துத் தந்துள்ளேன். என் கருத்துகள் இருப்பின் அவைகளை சாய்வெழுத்துகளில் அங்கங்கே தந்துள்ளேன். நான் இதற்கு முன் என் சொந்த அனுபவங்களையும், மதங்களைப் பற்றிய என் எண்ணங்களையும் தொகுத்து எழுதிய “மதங்களும், சில விவாதங்களும்” என்ற நூலின் தொடர்பே இந்த இரண்டாம் நூல். இதோ … இந்த நூலின் பக்கங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.





  *

Sunday, January 07, 2018

961. ”கடவுள் என்னும் மாயை” நூலுக்கான வாழ்த்துரை






*

இந்நூலுக்கான முன்னுரை ...


*


10.1.2018 முதல் 22.1.2018 - என்ற நாட்களில் நடைபெறும் 

சென்னைப் புத்தக விழாவில் 

எதிர் வெளியீடு வெளியிடும் 12 நூல்களில் 

நான் ஏழுதிய 

“கடவுள் என்னும் மாயை”  

நூலும் ஒன்று.


அந்நூலுக்கான மதிப்புரையை  Dr. ஜீவானந்தம்,  M.B., B.S., D.A., ஈரோடு, அவர்கள் எழுதி நன்றிக்குரியவர் ஆகிறார். அவர் எழுதிய “வாழ்த்துரை”யை மகிழ்ச்சியோடு இங்கே அளிக்கிறேன்.



வாழ்த்துரை


“கடவுள் என்னும் மாயை” என்ற இந்நூலுக்கு முன்னுரை எழுத பேராசிரியர் தருமி என்னைக் கேட்ட போது தயங்கினேன். ஏனெனில் சகிப்புத் தன்மை இழந்த கால கட்டத்தில் அல்லவா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்பையும், சமாதானத்தையும், சகிப்புத் தன்மையையும் போதித்த கடவுள்களின் பெயரால் அல்லவா இன்று பேரழிவுகளும், படுகொலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் புத்தகத்தின் தட்டச்சுப் பிரதியைப் படித்த பின், புதிய வெளிச்சம் தரும் இந்நூலை எழுதியவரைப் பாராட்டுவதற்கான ஓர் அரிய வாய்ப்பு என மகிழ்ந்தேன்.
முதலாவதாக மதம், கடவுள் பற்றி ஒவ்வொரு  மதம் சார்ந்த மாபெரும் அறிஞர்கள், பெரும் ஆராய்ச்சியின் பின் எழுப்பியுள்ள 12 நூல்களின் சாரத்தை  ஒரு சேரப் படிக்கும்  வாய்ப்பை அவர் எனக்குத் தந்துள்ளார் என்பதற்கு நான் அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
”எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
      அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு”

என்ற தமிழ்மறையின் வழிகாட்டுதலில் அறிஞர்கள் தாம் சார்ந்த மதத்தை, விருப்பு வெறுப்பின்றி ஆய்வு செய்துள்ள பல நூல்களின் கருத்துகளைச் சுருக்கமாக வாசித்த மன நிறைவைத் தருகிறது இந்நூல்.

மகான்கள் தமது காலத்தின் சரிவாதிகாரத்திற்கும், உடமை வெறிக்கும், அநீதிகளுக்கும் எதிரான பொது நீதியை மிக்க துணிவுடன் தருகிறார்கள். அனால் பின் வரும் பூசாரிகள் அவற்றிற்கு நேர் எதிராக மக்களை ஒடுக்கி ஆளும் வர்க்கத்தின் கேடயமாகவே மதங்களை அவர்களின் பெயரால் உருவாக்கினர் என்பதே உலகெங்கும் நாம் காணும் நடைமுறையாக உள்ளது.

இதை எதிர்த்துப் பல புரட்சிக் குரல்கள் அவ்வப்போது அறம் சார்ந்த நல்லோரால் எழுப்பப்படுகின்றன. நட்ட கல்லை தெய்வம் என்போரைச் சாடினர் சித்தர்கள். ஆரிய மதத்தின் கேடுகள் கண்டு கொதித்தெழுந்த கலகக்காரர்களே புத்தரும், மகாவீரரும். பின் வந்த குருநானக்கும், பிரம்மோ சமாஜமும், ஆரிய சமாஜமும், ராமகிருஷ்ண மடமும், பசுவேஸ்வரரும், வள்ளலாரும், நாராயண குருவும் நான் இந்துவல்ல என்று எதிர்த்தெழுந்தவர்களே.

14, 15ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் பெரும் சர்வாதிகாரிகளாகிய, அறம் தவறிய போப்புகளை எதிர்த்து, கிறிஸ்த்துவத்தில் உருவானதே எதிர்ப்புரட்சி மார்க்கமான ப்ராட்டஸ்டென்ட் கிறித்துவம். முகமது நபியின் மரணத்தின் பின் பதவிப் போட்டியில் இரண்டு பட்ட இஸ்லாம் இன்று வரை சொந்தச் சகோதரர்களையே கொன்று குவித்துக் கொண்டுள்ள அவலத்தைத் தினமும் பார்க்கிறோம்.

அன்னை தெரசாவின் இறுதி கால மனப் போராட்டத்தைக் கூறும் “COME BE MY LIGHT” ”என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்என்று கதறிய இயேசுவின் குரலாகவே உள்ளது. தன்னலமும், அதிகார வெறியும், உடமை வெறியும் மிகுந்த சமூகத்தில் உன்னத அறம் சார்ந்த நல்லோரின் விரக்திப் புலம்பல் இவ்விதமாகவே இருக்க முடியும்.

கிறிஸ்துவின் வாழ்வு உண்மைகள், அவரது போதனைகளைத் திரட்டி எழுதிய பல்வேறு சுவிசேஷங்களைப் படிப்பின் ஆதிக்க சக்திகளின் கேடயமாகிப் போன மதம் இருட்டடிப்பு செய்து அழித்தன. எப்படி ஏகாதிபத்திய சர்வாதிகார சக்திகளின் கையாளாக கிறிஸ்துவம் மாற்றப் பட்டது என்பது பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் உட்படப் பல அறிஞர்கள் வெளிப்படுத்தியுள்ளதை அறியும் வாய்ப்பினை இந்நூல் தருகிறது.

இந்து மதம் பற்றிய கசப்பான உண்மைகளைப் பெரியாரை விடவும் அப்பட்டமாகவும், ஆதாரப் பூர்வமாகவும் வெளிப்படுத்தும் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரின் வாதம், இன்று இந்து ஆரிய மதவாதச் சக்தியை எதிர்ப்போருக்கும் பெரிதும் உதவும் கையேடாகும்.

மதம், கடவுள் இவற்றின் குறைகளை, அநீதிகளை எத்தனை பேசிய போதும் வறுமையும், அறியாமையும், தனியுடமையும்,  சுரண்டலும் மிக்க உலகத்தில், மதம் மயக்கும் அபின் மட்டுமல்ல; அதுவே குரலற்ற அபலைகளின் குரலாக, இதயமற்ற உலகின் இதயமாகி உள்ளது என்று காரல் மார்க்ஸ் கூறுவதை நாம் மறந்து விட முடியாது.

அறிவியலும், பகுத்தறிவும், சமத்துவமும் வளர்ந்து வரும் உலகில் கடவுள் எனும் போதை, மாயையிலிருந்து மக்கள் விடுபட்டு வருவது வேகமாக நடந்து வருகிறது. ஐரோப்பாவில் தேவாலயங்கள் காலியாகி வருகின்றன. போப் புரட்சிக் குரலில் பேசி வருகிறார்.

உலகின் அநீதிகளுக்கும், போர்களுக்கும், படுகொலைகளுக்கும் பின்னணியில் மதமே நிற்கிறது என்பது தெளிவாகி வருகிறது. அறிவியலும், பகுத்தறிவும், சமத்துவ உணர்வும் தகவல் தொடர்பும் வளர்ந்து வரும் உலகில் படிப்படியாக கடவுளும், மதமும் தமது தேவையை இழந்து உதிர்ந்து போவது உறுதி.

பல ஆயிரம் ஆண்டுகால இருள், ஒரு நொடியில் விலகாது. ஆனால் கீழை வானம் சிவக்கிறது என்ற புதிய நம்பிக்கையை இந்நூல் வளர்க்கிறது. இந்நூலை வெளியிடும் “எதிர் வெளியீடு”, எழுதிய பேராசிரியர் தருமி அறிவியில்வாதிகளின் வாழ்த்துக்கும், நன்றிக்கும் உரியவர்கள்.

                               இருளிலிருந்துது வெளிச்சத்திற்கும்,
                               அஞ்ஞானத்திலிருந்து அறிவொளி நோக்கியும் பயணிப்போம்.



3.12.17
ஜீவானந்தம்,
9442272772



















*