Friday, January 19, 2007

197. பொங்கல் - ஜோ-வும் இன்ன பிறரும்....

*

*

சில ஆண்டுகளுக்கு முன் முதுகலை மாணவர்களோடு அழகர்கோவில் மலைக்கு செய்முறை வகுப்புக்காக ஒரு பயணம். மலைமேல் வகுப்பு முடிந்து கீழே இறங்கியதும் கோவில் செல்ல மாணவர்களுக்கு சிறிது நேரம் ஒதுக்கப்பட்டது. மாணவன் ஒருவன் கோவிலில் வாங்கிய பிரசாத லட்டுகளை நண்பர்களுக்குக் கொடுக்க ஒரு கிறித்துவ மாணவி வாங்க மறுத்தார். இந்துக் கடவுளுக்குப் படைத்த பிரசாதம் சாப்பிட மாட்டேன் என்று மாணவி கூற, அதுவும் 'அந்த' மாணவி கூற மாணவர் கொஞ்சம் மனம் வெறுத்து விட்டார். விவாதம் நடந்திருக்கிறது. நானும் என் சீனியர் ஒருவரும் கோவிலை அடுத்துள்ள ஒரு மண்டபத்தில் மாணவர்களுக்காகக் காத்திருந்தோம். நான் அப்போது ஒரு 'தம்' கேசு. அதனால் இன்னும் கொஞ்சம் தள்ளி தனியாக அமர்ந்து நானும் எனது சிகரெட்டுமாக இருந்தோம். மாணவர்கள் இருவரும் எங்களிடம் வந்தார்கள். முதலில் சீனியரிடம் பையன் தர அவரும் மறுத்து விட்டார். அதன் பின் என்னிடம் வந்தார்கள்; கொடுத்தார்கள்; சாப்பிட்டேன். மாணவிக்குக் கோபம்; பையனுக்கு ஆச்சரியமும், சந்தோஷமும்.

மறுபடி விவாதம் என்னோடு. மாணவியிடம் கேட்டேன்: அந்தக் கோவிலில் உள்ளது உங்களைப் பொறுத்தவரை என்ன? கடவுளா, கல்லா என்றேன். வெறும் கல்தான் என்று மாணவி கூறினார். வெறும் ஒரு கல் முன்னால் வைத்து எடுத்தால் லட்டு என்ன ஆகும்; வெறும் லட்டாகத்தான் இருக்கும். நம்பிக்கையுள்ளவர்களுக்கு அது கடவுள்; அப்போது அவர்களுக்கு அந்த லட்டு பிரசாதமாகும். என்னைப் பொறுத்தவரை அவன் கொடுத்தது லட்டு; லட்டு எனக்குப் பிடிக்கும்; சாப்பிட்டேன் என்றேன். அந்த மாணவிக்கு மட்டுமல்ல இன்று வரையும் பல கிறித்துவர்களுக்கு இந்த விவாதம் பிடிக்காதுதான். இருப்பினும் என் எண்ணம் அதுதான். இவ்வளவுக்கும் இந்த விவாதம் நடந்த அன்று நான் ஒரு மிக நம்பிக்கையுள்ள, நடைமுறைகளை ஒழுங்காக அனுசரித்து வந்த 'நல்ல' கிறித்துவன்தான்!

A goose's sauce may be a gander's poison. எனக்கு அது லட்டு; உனக்கு அது ப்ரசாதம்னா அப்படியே வச்சுக்கோ. அத விட்டுட்டு நீயும் இதை ப்ரசாதமா நினச்சுதான் சாப்பிடணும்னு முரண்டு பிடிச்சா அது என்ன முரட்டுப் பிடிவாதம்?

பொங்கல் திருநாள் உழவர் திருநாள். உழவருக்கும், மாட்டுக்கும் நன்றி சொல்லும் நாள் என்று சொல்லிக் கொள்கிறோம். பட்டினத்து மக்கள் (நம் பதிவர்கள்) எல்லோரும் முற்றத்தில் புதுப்பானையில் வைத்து பொங்கலிட்டு, பொங்கிவரும்போது குரவையிட்டு அடுத்த நாள் மாட்டைக் குளிப்பாட்டி அலங்கரித்து ஊருக்குள் கயிறு பிடித்து அழைத்துப் போவது போல் இங்கே மக்கள் பேசுவதைப் பார்த்து ஒரு புறம் சிரிப்புதான் வருகிறது. கிராமங்களில் நடக்கும் பொங்கல் அந்த சீரோடு நடக்கிறது. பட்டணங்களில் என்ன நடக்கிறது. ஒருவர் ஒரு பின்னூட்டத்தில் சொன்னது போல் குக்கரில் அன்று காலை பொங்கல் செய்து சாப்பிட்டு விட்டு டிவி முன்னால் உட்கார்ந்து சிறப்பு பட்டிமன்றம் கேட்டுக்கிட்டு இருக்கிறதுதான் நடப்பாக இருக்கிறது.

இப்படி நடக்கும் பொங்கல் திருநாளை கேரள மக்கள் சாதி, சமயம் என்ற எந்த வேறு பாடின்றி ஓணம் கொண்டாடுவது போல தமிழர்கள் நாமும் ஏன் பொங்கலைக் கொண்டாடக் கூடாது என்று நல்ல மனதோடு போன வருடமே சில பதிவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். ஜோவும் போன ஆண்டு ஒரு பதிவு போட்டார். அதையே இப்போது மீள் பதிவும் செய்து விட்டார். போன வருடம் இல்லாத எதிர்ப்பு இந்த ஆண்டு. ஆண்டொன்று போகப்போக பதிவர்களின் maturity, மனசு, நியாயங்கள் எல்லாம் சுருங்கி விடும் போலும்.

ஜோ தான் எப்போதும் பொங்கல் கொண்டாடுவது பற்றி எழுதிவிட்டு, இது தமிழர் பண்டிகை; இந்துப் பண்டிகை இல்லையென்று சொல்லிவிட்டாரென்று "சுத்த இந்து"க்களுக்குக் கோபம். பானையில் திருநீறு பூசுகிறார்கள்; ஆகவே இது இந்துத் திருவிழாதான் அதனால் நாங்கள் கொண்டாட மாட்டோமென்று முஸ்லீம்கள் வாதம். மதத்துக்கொரு கலர் கண்ணாடி. அதனால்தான் பார்வைகளில் இத்தனை வேறுபாடு. யார் சொன்னாலும் இது மாறவா போகிறது? ஆனால் விவாதிக்கப்படும் விஷயம் அடைத்து வைத்திருக்கும் மனக் கதவுகளைச் சற்றே திறந்தால் கூட போதும்; அதற்கும்கூட நாம் தயாரில்லை என்பதுதான் கவலைக்குறிய விஷயம்.

அணுவும் அண்டமும் பிறந்ததிலிருந்து இன்றைய ஸ்டெம் செல்கள் வரை எல்லாமே எங்கள் புத்தகத்தில் கூறப்பட்டு விட்டது என்கிறார்கள் இஸ்லாமியர். ஆனால், அது ஒரு text book level-ல் இருந்திருந்தால் நமக்கு நிறைய அறிவியல் உண்மைகள் instant - ஆக கிடைத்திருக்கும். இன்னும் nano technology, super conductivity என்று அறிவியலாளர்கள் தடுமாறிக்கொண்டிருக்க வேண்டியதிருக்காது. லட்டு லட்டாக அறிவியல் விஷயங்கள் நமக்கு readymade- ஆகக் கிடைத்திருக்கும். சரி, பொங்கலைப் பொருத்தவரை அவர்களது எதிர்ப்பு இணை வைக்கக் கூடாது என்பதுதானென்றால் பொங்கல் திருநாளை ஒரு சமூகம் சார்ந்த சமயச் சார்பற்ற விழாவாக இதைக் கொண்டாடலாமே. என் பிள்ளைகள் வளரும் வரை, கிறிஸ்துமஸுக்கு அப்பா நல்ல துணிமணிகள் வாங்கித் தருவார்கள் என்று புரிந்துகொள்ளும் வயது வரை அவர்களுக்கு தீபாவளிக்கும் புத்தாடை எடுத்ததுண்டு. பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் புதுத்துணி போட்டுக் கொண்டு, மத்தாப்பு கொளுத்திக்கொண்டு இருக்கும்போது என் பிள்ளைகள் நமக்கு இல்லையே என்று மருகக்கூடாதென்று புதுத் துணியும், மத்தாப்பும் வாங்கினேன். அவர்களும் போட்டு மகிழ்ந்தார்கள். அதனால் நான் இந்து மதத் திருவிழாவைக் கொண்டாடினேன் என்றா பொருள்? - அப்படியே கொண்டாடினாலும் தவறில்லையென்றாலும்! இன்றும் துணைவியார், பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் என்று புதுத்துணியணிந்து கிறிஸ்துமஸ் கொண்டாடும்போது நானும் புதுத்துணியோடு அவர்களோடு சேர்ந்து கொண்டாடுகிறேன். அதில் என்ன தவறு? பக்கத்து வீட்டில் இஸ்லாமியர் இருந்து பக்ரீத்துக்கு பிரியாணி செய்திருந்தால் நானும் என் வீட்டில் அன்று பிரியாணி செய்து பக்ரீத்தை 'கொண்டாடியிருப்பேன்'. அதற்காக என் கடவுளுக்கு இணையாக மற்றைய கடவுளர்களை வைத்துவிட்டேன் என்றா பொருள்? பக்கத்து வீட்டுக்காரன் சிரித்து மகிழ்ந்திருக்கும்போது நானும் சிரித்து அவனோடு சந்தோஷமாக இருப்பதுதான் மனித நேயம் என்பது. அதை விட்டு நான் 'தேமே' என்று மூஞ்சைத் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பதுவா சகோதரத்துவம். தமிழர் திருநாள், உழவர் திருநாள் என்ற பெயரில் இந்துக்கள் பானைக்குப் பொட்டிட்டு, நீறிட்டு அவர்கள் சாமியை துணைக்கழைத்துக் கொண்டாடினால், மற்றவர்கள் அவர்கள் சாமியை நினைத்தோ, இல்லை சாமித் தொடர்பே இல்லாமலோ இப்பண்டிகையைக் கொண்டாடுவதில் என்ன தவறு இருக்க முடியும்.

பழையபடி மேற்சொன்ன பழமொழிக்கே வருவோம்: A goose's sauce may be a gander's poison. ஆனால் நம் இஸ்லாமிய நண்பர்களைப் பொருத்தவரை one goose's sauce becomes poison to another goose. நம் பக்கத்து மாநிலத்தில் ஓணம் பண்டிகையை - அது முழுக்க முழுக்க இந்து புராணம் தொடர்பான ஒரு பண்டிகையாக இருந்தும் - இஸ்லாமியர்கள் (அந்த மாநிலத்தில் அவர்களின் விழுக்காடு அதிகம், இருப்பினும் ..) அதை மாநில விழாவாக, சமயச் சார்பற்ற விழாவாகக் கருத முடியும்போது ஏன் நம் மாநில இஸ்லாமியர்களால் அது முடியவில்லை? இருவருக்கும் நம்பிக்கைகளும், புத்தகமும் ஒன்றுதானே? அவர்களுக்குள்ள விசாலப் பார்வை நம் நண்பர்களுக்கு ஏனில்லை? இவ்வளவுக்கும் பொங்கல் பண்டிகையைப் பொருத்தவரையிலும் ஓணம் போலவோ, தீபாவளி போலவோ எந்த வித புராண அடிப்படையும் இல்லாத திருவிழா.

பொங்கல் இந்துப் பண்டிகை அல்ல; ஒரு தமிழர் திருநாள் என்று சொன்னதற்காக 'சுத்த இந்துக்கள்' சிலர் வரிந்து கட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள். போன வருடம் இந்த அளவுக்கு 'வரிந்து கட்டல்' இல்லை. நியூட்டனின் கோட்பாடு செயலாக்கப் படுகிறது போலும்!

நம் நாட்டிலேயே பல வேறு பெயர்களில் இந்தப் பண்டிகை கொண்டாடப் படுகிறது; அதுவும் இந்து சமயத் தொடர்போடு என்கிறார்கள். ஆனால் பல நாடுகளில் அறுவடைத் திருநாளாக கொண்டாடப்படுவதே இப்பொங்கல் திருநாள். யூதர்கள் கொண்டாடும் பண்டிகையின் பெயர்: சுக்கோத் என்கிறார்கள். (//அதை யூதப் பண்டிகை இல்லை அல்ல என்று எவனாவது சொன்னால் செருப்படி கிடைக்குமாம்.//! நான் சொல்லவில்லை அப்படி...) ஒன்று தெரிகிறது; இந்த வகைப் பண்டிகைகள் உலகம் முழுக்க ஏதோ ஒரு பெயரில் கொண்டாடப்படுகின்ற ஒரு விஷயம் என்று. அதைச் சிலர் சமயச் சார்புள்ளதாகவோ இல்லை சமுதாயச் சார்பாகவோ கொண்டாடுகிறார்கள். ஒரு நாடு; ஒரு மதம் என்றிருக்கும் நாடுகளில் (உதா: இஸ்ரேல்!) அது எப்படியிருந்தாலும் அதனால் எந்தப் பிரச்சனையுமில்லை; ஆனால் பலகோடி மக்கள், பல் வேறு சமயங்கள்; பல்வேறு சமுதாயக் கூறுகள்; பல்வேறு மொழி, கலாச்சாரம்; பல்வேறு சாதிக் கட்டமைப்புகள் என்றிருக்கும் நம் திருநாட்டில் அந்த ஒரு முனைப்பு இருக்க முடியாது; தேவையுமில்லை. ஒரு மாநிலத்தில் கொண்டாடுவது போலவே எல்லா மாநிலங்களும் கொண்டாட வேண்டும் என்ற விதியுமில்லை. அதோடு நம் மாநிலத்தைப் பொருத்தவரை இந்த பொங்கல் விழாவுக்கு இந்துப் புராணங்களோடு எத்தொடர்பும் கிடையாது - வலிந்து இனி ஏதும் உருவாக்கினாலொழிய..! பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட பிள்ளையார் சதுர்த்தி நாடு முழுவதும் ஒரே மாதிரியாகவா கொண்டாடி வந்தோம்? ஒரு incursion நடந்தேறவில்லையா கடந்த சில ஆண்டுகளில். இப்போதும் அதே போல நாடு முழுவதும் ஒரே மாதிரியாக ( இதற்கு bracket போடுவது என்று ஒரு பெயர் வைக்கலாமென நினைக்கின்றேன் ) பொங்கல் திருநாளைப் பொதுவாக்கி - அதை இந்துச் சமயத்தின் விழாவாக முழுமையாக மாற்ற - எடுக்கப்படும் முயற்சியாகவே இதைப் பார்க்கிறேன். நாம் எல்லோரும் ஒரு மதம்; நம் நல்ல நாட்கள் எல்லாமே இந்து மத திருநாட்கள் என்பதாகக் கொண்டு வரும் முயற்சியாகவே இதைப் பார்க்கிறேன். இந்த முயற்சி எடுப்போரைப் பார்க்கும்போது வரும் எண்ணம்தான் இது. விநாயகர் சதுர்த்தியில் பெற்ற வெற்றி அவர்களை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர வைக்கிறது. இது நல்லதா; தேவையா என்பதற்குப் பதில் ... ?

பொங்கலை எல்லோருமாக ஒரு சமுதாயத் திருநாளாகக் கொண்டாடுவோம் என்று குரல் எழுப்புவர்களும் "இந்துக்களே"; இல்லை ... இல்லை.. இது இந்துத் திருவிழா என்று சொல்பவர்களும் "இந்துக்களே". ஏற்கெனவே சொன்னது போல இந்த இரு இந்துக் குரல்களும் யாரிடமிருந்து எழுகின்றன; ஏன் இப்படி அவர்களிடமிருந்து இரு வேறு பட்ட குரல்கள் என்பதற்குப் பதில் இங்கு தேவையா என்ன? உள்ளங்கைப் புண்... பின் எதற்குக் கண்ணாடி?

இந்துக்களல்லாத தமிழர்கள் பொங்கலை ஒருமித்து அதை ஒரு சமுதாயப் பெரு விழாவாகக் கொண்டாடப் போகிறார்களா, இல்லை அதையும் விநாயகர் சதுர்த்தி போல் ஆக்கி, பொங்கலையும் ஒரு pan-indian / pan-hindu festival என்று ஆக்குவதற்கான முயற்சிக்குத் துணை போகப் போகிறார்களா என்று இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தெரிந்துவிடும் என்றே நினைக்கிறேன். இளைஞர்களே ! எழுமின்; விழிமின்! ....


*


பி.கு.
பின்னூட்டங்களில் என்னைக் கண்டிப்பவர்கள் / என் கருத்தை எதிர்ப்பவர்கள் தயவு செய்து 'மிஷ நரித்தனம்', 'ஆபிரஹாமிய சூழ்ச்சி' போன்ற சொல்லாடல்களைத் தவிர்த்தால் தன்யனாவேன்...


*

*

89 comments:

பூனைக்குட்டி said...

மற்ற வீடுகளைப் பற்றி தெரியாது. எங்கள் வீட்டில் சில ஆண்டுகளுக்கு முன்வரை வெளியில் இரண்டு பக்கமும் கரும்பு வைத்து. அதற்கென்று வாங்கிவந்த அடுப்பில் தான் பொங்கலிடுவது வழக்கம்.(சரியாகச் சொல்லவேண்டுமானால் எங்க பாட்டி உயிரோடு இருந்த வரை - இது ஒரு பாலிடிக்ஸ்)

வெளியில் பொங்கலிடுவதற்கு காரணம் சூரியனை வழிபடுவதற்காகத்தான்(சூரியன் இந்துக் கடவுளா எனக்குத் தெரியாது.) ஆனால் படையல் வைப்பதுண்டு அதுவும் மொத்தம் ஏழு பிரிவுகளாக. இதற்கும் ஒரு காரணம் உண்டு.

சூரியன் தான் உழவர்களுக்கு மிகவும் உதவு அவர்கள் பயிர் செய்ய உதவுவதால், அப்படி சூரியன் உதவ அவருக்கு உதவும் சூரிய பகவானின்(இது இந்துக்கடவுள்)வாகனத்தில் பூட்டப்பட்டிருக்கும் ஏழு குதிரைகளுக்கு படைப்பதற்காகத்தான் அந்த ஏழு பிரிவுகள்.

எப்படி சூரியனின் குதிரைகள் வந்ததென்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும் அந்தக் காலத்தில் நம்பப்பட்ட சில பழக்கவழக்கங்களில் ஒன்று தான் இதுவும் என்று அதாவது அந்த ரதத்தில் வந்து தான் சூரிய பகவான் வெளிச்சத்தை வழங்குவதாகக் கருதுவது தான்.

இந்த தடவை அம்மா கேஸ் டவ்வில், எவர்சில்வர் பாத்திரத்தில்(குக்கர் இல்லை) வைக்க நான் கேட்டேன் உன் மாமியார் இருந்த வரைக்கும் ஒழுங்கா பானையில் செய்த பொங்கல் கேஸிற்கு மாறியதற்கு என்ன காரணம் என்று.

நேத்திக்கு அபிஸியல் ஒர்க்னு பொய் சொல்லிட்டி மெட்ராஸ் புத்தகக்கண்காட்சிக்கு போய்ட்டு வந்ததை நைனாகிட்ட போட்டுக்கொடுத்துருவேன்னு சொன்னதும் கிரிக்கெட் விளையாட நைஸாக வெளியே கிளம்பிப் போனேன்.

இந்தப் பின்னூட்டம் உங்கள்பதிவிற்கு தேவையா நீங்கள் தான் முடிவு செய்யணும்.

ஜோ/Joe said...

//என்னைப் பொறுத்தவரை அவன் கொடுத்தது லட்டு; லட்டு எனக்குப் பிடிக்கும்; சாப்பிட்டேன் என்றேன். அந்த மாணவிக்கு மட்டுமல்ல இன்று வரையும் பல கிறித்துவர்களுக்கு இந்த விவாதம் பிடிக்காதுதான். இருப்பினும் என் எண்ணம் அதுதான். //
என்னுடைய எண்ணமும் இது தான்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள மாதிரி போன வருடம் வராத எதிர்ப்பு இந்த வருடம் வந்திருப்பது பலவற்றை உணர்த்துகிறது. இதற்காக நான் போலி எனவும் ,நடிப்பதாகவும் பேர் வாங்கியிருக்கிறேன் .நடுநிலைமை இந்துக்களாக கருதும் பலர் கூட இதனை கண்டிக்கவில்லை .நீங்களாவது புரிந்து கொண்டு எழுதியிருப்பது ஆறுதல் தருவதாக உள்ளது..நன்றி

டிபிஆர்.ஜோசப் said...

இவ்வளவுக்கும் இந்த விவாதம் நடந்த அன்று நான் ஒரு மிக நம்பிக்கையுள்ள, நடைமுறைகளை ஒழுங்காக அனுசரித்து வந்த 'நல்ல' கிறித்துவன்தான்!//

அப்போ இப்ப இல்லேங்கறீங்களா?

என்ன காரணம்? கொஞ்சம் விளக்குங்களேன்..

என்னுடைய கேள்விக்கு பின்னால் வில்லங்கம் ஏதுமில்லை. ஒரு ஆர்வம்தான்:)

நாமக்கல் சிபி said...

200 வது பதிவுக்கு முன்பண வாழ்த்துக்கள்!

தருமி said...

சிபி,

ரொம்பவே முந்தியே சொல்லிட்டீங்க...

இருந்தாலும் நன்றி - இதை 200க்குப் பிறகு 'வரவு' வைத்துக்கொள்ளவும்..

சரி, அதென்ன.. //முன்பண வாழ்த்துக்கள்!

ஏதாவது 'மொய்' அனுப்புவீங்களா?

நாமக்கல் சிபி said...

//என்ன காரணம்? கொஞ்சம் விளக்குங்களேன்..
//

ஜோசஃப் ஐயா! அதுதான் ஊரறிஞ்ச விஷயமாச்சே!

வரிசையா பதிவுகள் போட்டாரே!

நாமக்கல் சிபி said...

முன்பணம் - > அட்வான்ஸ்!

:))

நாமக்கல் சிபி said...

//ஏதாவது 'மொய்' அனுப்புவீங்களா? //

மொய்ப்பின்னூட்டம் இடுவேன்!

Unknown said...

//அப்போ இப்ப இல்லேங்கறீங்களா?

என்ன காரணம்? கொஞ்சம் விளக்குங்களேன்.. //

??

ஜோசப்,
தருமியின் மதம் பற்றிய பதிவுகளைப் படித்தது இல்லையா?
*******

தருமி,
மனிதம் என்பது கூட்டம் ஆக ஆக குறைந்துவிடும். போன வருடத்தைவிட இந்தவருடம் பதிவர்கள் அதிகம். :-))


***

தருமி said...

ஜோசப்,

நெஜமாவா தெரியாம கேக்குறீங்க ..? என்னங்க இது, நான் 'திருந்தி' எத்தனை வருஷமாச்சு; அதப் பத்தி பதிவு போட்டு எத்தனை மாசமாச்சு? வாசிச்சதில்லையா? என்ன போங்க..

சரி, இப்பவாவது இதில இருந்து வாசிக்க ஆரம்பிங்களேன். படிச்சுட்டு உங்க கருத்தையும் சொல்லுங்களேன்...

நாடோடி said...

நாந்தான் பர்ஸ்ட்.

இது கொஞ்சம் வேதனையானது. அரசியல் எல்லாவற்றிலும் பாய்ந்து கொண்டிருக்கிறது.

இங்கு அதிகமாக நடக்கும் கொடுமை என்னா "இந்து மதத்தை சேர்ந்தது" என்ற பதிவு மட்டுமே அதிகாமாக கவனிக்கப்படுகிறது.

இது எங்கள் மதத்திற்கு எதிரான பண்டிகை, ஜல்லிகட்டில் மாடுகளை கொடுமைபடுத்துகிறார்கள்(இதுதான் அங்க இருந்த மிகப்பெரிய காமடி) என்ற பதிவு எந்த ஒரு எதிர்வினையையும் ஏற்படுத்தவில்லை.
ஏன் அரசியலா?..

ஒருவர் தான் சார்ந்த சமுதாயத்திலிருந்து தனது மதத்திற்குள் இழுத்தார். ஒருவர் தன் மதத்திற்காக வெளியே தள்ளினார். இதில் ஒருவரை மட்டுமே குறைகூறமுடியுமா?..
இதில் இந்துமத்தை சார்ந்தவர்களே அவரின் கருத்துக்களை எதிர்த்தார்கள்.
ஆனால் இன்னொன்றில் அதிகமானவர்கள் அதை ஆதரிக்கவேசெய்தனர்.

"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" தானு சொல்லுரது வேண படத்துல சூப்பரா இருக்கும். ஆனா நடைமுறை ஓட்டு அரசியல் தொண்டர்கள் ஓட்டுக்காக தன்மானத்தைகூட இழக்க தாயரா இருக்கின்றனர்.

கோவி.கண்ணன் [GK] said...

//இந்த பொங்கல் விழாவுக்கு இந்துப் புராணங்களோடு எத்தொடர்பும் கிடையாது - வலிந்து இனி ஏதும் உருவாக்கினாலொழிய..!//

அதெல்லாம் இனி கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என்பதால் சிலர் மகர சங்கராந்தியுடன் தொடர்பு படுத்தி காட்ட முயல்கிறார்கள்.

:)))

பொன்ஸ்~~Poorna said...

// மனிதம் என்பது கூட்டம் ஆக ஆக குறைந்துவிடும். போன வருடத்தைவிட இந்தவருடம் பதிவர்கள் அதிகம். :-)) //
உண்மைதான் கல்வெட்டு :(((

தருமி said...

மருத புல்லட் பாண்டி said ..

அட *** சனங்கா,
பொங்கல் இயற்க நமக்கு நல்ல வெளச்சல கொடுத்ததுக்கு நன்றி தெரிவிக்கும் நாள். மறுநா அதுக்கு ஒதவிய மாட்டை பாராட்ட ஒரு விழா, இதில் மதத்தை புகுத்தும் நீங்க *****போக

(கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது; பாண்டி பொறுத்துக் கொள்ளவும் - தருமி

தருமி said...

கல்வெட்டு, பொன்ஸ்,

மன்னிக்கணும் .
நீங்கள் சொல்வதோடு எனக்கு உடன்பாடல்ல.
எதிர் கருத்துக்களைக் கூறியவர்கள் பலரும் புதியவர்களல்லவே.. இது எண்ணிக்கை கூடியதால் வந்த விளைவல்ல என்றே கருதுகிறேன்.

Unknown said...

தருமி,
வலைப்பதிவுகளில் யார் சொன்னதையும் கேட்டு யாரும் மாறியதாக வரலாறு (??) இல்லை.
அவரவர் அவரவரின் கொள்கை/கோட்பாடு/நம்பிக்கைகளில் எப்படி இருந்தார்களோ இன்னும் அப்படியே இருக்கிறார்கள் அல்லது இருக்கிறோம்.
*
மதத்தையும்,சாதியையும் பிடித்து தொங்கிக்கொண்டு இருப்பவர்களால் அவர்களின் நம்பிக்கைகளை ஆட்டிப்பார்க்கும் எந்த செயலையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
*
வருடங்கள் அதிகம் ஆக ஆக நிறையபேர் வருவார்கள்.அப்படி வரும் போது சாதி மத நம்பிக்கை கொண்டவர்களின் விகிதாச்சார எண்ணிக்கையும் கூடும்.அவர்களின் குரல்தான் அதிகம் இருக்கும்.சாதி/மத நம்பிக்கை அற்றவர்களின் விகிதாச்சாரம் குறைந்தேதன் இருக்கும்.
*
நாம் வாழும் சமுதாய்த்தை எடுத்துக்கொள்ளுங்கள் 5 % மக்கள் வேண்டுமானால் சாதி/மத நம்பிக்கை அற்றவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் அனைவரும் ஏதோ ஒரு மத/சாதியவாதிகள்தான்.
*
காலம் செல்லச் செல்ல அதுதான் இங்கேயும் வரும்.
*
கூட்டம் அதிகமாக அதிகமாக வலைப்பதிவும் (எல்லா ஊடகங்களும்) சமுதாயத்தின் பிரதிபலிப்பாகத்தான் இருக்குமே தவிர இங்கிருந்து சமுதாயத்திற்கு செல்லும் நல்ல விசயங்கள் குறைவாகவே இருக்கும்.
*
வலைப்பதிவில் நம்பிக்கையாளர்களின் விகிதாச்சாரம் கூடியதால் அவர்களின் குரல் அதிகம் கேட்கிறது.மற்றபடி சென்ற வருடம் ஆதரவு தெரிவித்த யாரும் மனம் மாறி எதிர்ப்புச் சொல்லிவிடவில்லை.அதுபோல் எதிர்ப்பு தெரிவித்த யாரும் மனம் மாறி ஆதரவு சொல்லிவிடவில்லை.
*******

//எதிர் கருத்துக்களைக் கூறியவர்கள் பலரும் புதியவர்களல்லவே.. //

புரியவில்லை
1.பழையவர்கள் தனது கருத்தை மாற்றி இப்போது எதிர்த்துள்ளார்களா?
2.முன்பு அமைதிகாத்தவர்கள் இப்ப்போது எதிர்த்துள்ளார்களா?

அனைவரும் அனைத்துப் பதிவுகளையும் படிப்பதும் இல்லை.அப்படியே படித்தாலும் பின்னூட்டங்கள் இடுவதும் இல்லை என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

***

தை 1 ஐ கட்டாய தமிழர்நாளாக அறிவித்து அனைத்து தமிழர்களும் கொண்டாடவேண்டும் என்று அரசு சட்டம் போட்டால்தான் உண்டு :-))
அப்போது எந்த சாதி/மத/சமூகங்கள் ஆதரிக்கின்றன அல்லது எதிர்க்கின்றது என்பது வெளிப்படையான விவாதமாக மக்கள் மதியிலேயே நடக்க வாய்ப்பு உள்ளது.

G.Ragavan said...

தருமி, நான் எதை நினைத்துப் பயப்படுகிறேனோ...அதை மிகத்தெளிவாக பெரிய பதிவாகப் போட்டிருக்கின்றீர்கள். உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது. இது தமிழர் பண்டிகைதான். கல்லென்று நம்புகிறார்கள் என்றால் அதன் முன் வைத்த லட்டுக்கு என்ன நடந்து விடும்? நல்ல கேள்வி. ஆனால் இதற்கு வக்கனை பதில்கள் நிறைய கிடைக்கும். :-( இருக்கும் இடைவெளியைப் பெரிதாக்க இத்தனை மெனக்கெடுகிறார்கள். ஆனால் அந்த இடைவெளியை அடைக்க எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நடக்க மாட்டேன் என்கிறதே தருமி. :-(

Boston Bala said...

குரு படத்தில் கூட இந்த லட்டு காட்சியும் கடவுள் நம்பிக்கையும் இதே போன்ற அர்த்தத்தில் இடம்பெறும். மணி ரத்னம், உங்க வாழ்க்கையில் இருந்து காட்சியை லவட்டிட்டார் ; )

இலவசக்கொத்தனார் said...

//பக்கத்து வீட்டுக்காரன் சிரித்து மகிழ்ந்திருக்கும்போது நானும் சிரித்து அவனோடு சந்தோஷமாக இருப்பதுதான் மனித நேயம் என்பது. //

அதே! அதே!

//நியூட்டனின் கோட்பாடு செயலாக்கப் படுகிறது போலும்! //

அதே! அதே!

// நம் நல்ல நாட்கள் எல்லாமே இந்து மத திருநாட்கள் என்பதாகக் கொண்டு வரும் முயற்சியாகவே இதைப் பார்க்கிறேன். //

இது நீங்க மேல சொன்ன பாயிண்டுக்கு ஏத்தா மாதிரி இல்லையே. அது ஒரு Knee Jerk Reaction என்பதுதான் என் கருத்து.

சிறில் அலெக்ஸ் said...

//ஆனால் விவாதிக்கப்படும் விஷயம் அடைத்து வைத்திருக்கும் மனக் கதவுகளைச் சற்றே திறந்தால் கூட போதும்; அதற்கும்கூட நாம் தயாரில்லை என்பதுதான் கவலைக்குறிய விஷயம்.//

(இந்த வரிகளப் படிச்சதும் போடுற பின்னூட்டம் இது...)

ரெம்பக் கவலைதரும் விஷயம்..

(இன்னும் மேல படிச்சுட்டு வர்றேன்)

வாசகன் said...

//History Of Pongal

The history of Pongal can be traced back to the Sangam Age, ie, 200 B.C. to
300 A.D. Pongal is an ancient festival of the Tamils and it is not known
when exactly the Tamils began celebrating the festival, but some historians
identify it with the Thai Un and Thai Niradal, believed to have been
celebrated during the Sangam Age. Pongal, a traditional Tamilian food item
that has found a place in the menu of Indian restaurants across the globe,
is perhaps the only dish to have lent its name to a festival.

As part of the festivities, maidens of the Sangam era observed penance
during the Tamil month of Margazhi (December-January). Throughout the
month, they avoided milk and milk products. They would not oil their hair
and refrained from using harsh words while speaking. The women had their
ceremonial baths early in the morning.

They worshiped the image of Goddess Katyayani, which would be carved out of
sand. They ended their penance on the first day of the month of Thai
(January-February). This penance was to bring abundant rains and
agricultural prosperity for the country.

Thai Niradal was a major festival during the reign of the Pallavas (4th to
8th Century A.D.). Andal's Tiruppavai and Manickavachakar's Tiruvembavai
vividly describe the festival. According to an inscription found in the
Veeraraghava temple at Tiruvallur, the Chola king Kiluttunga used to gift
lands to the temple specially for the Pongal celebrations.

According to Hindu mythology, this is when the day of the gods begins,
after a six-month long night. The festival is spread over three days and is
the most important and most fervently-celebrated harvest festival of South
India. A special puja is performed on the first day of Pongal before the
cutting of the paddy. Farmers worship the sun and the earth by anointing
their ploughs and sickles with sandal wood paste. It is with these
consecrated tools that the newly-harvested rice is cut.

According to a legend, once Shiva asked his bull, Basava, to go to the
earth and ask the mortals to have an oil massage and bath every day and to
eat once a month. Inadvertently, Basava announced that everyone should eat
daily and have an oil bath once a month. This mistake enraged Shiva who
then cursed Basava, banishing him to live on the earth forever. He would
have to plough the fields and help people produce more food. Thus the
association of this day with cattle.

Each of the three days are marked by different festivities. The first day,
Bhogi Pongal, is a day for the family. Surya Pongal, the second day, is
dedicated to the worship of Surya, the Sun God. Boiled milk and jaggery is
offered to the Sun God. The third day of Pongal, Mattu Pongal, is for
worship of the cattle known as Mattu. Cattle are bathed, their horns
polished and painted in bright colors, and garlands of flowers placed
around their necks. The Pongal that has been offered to the Gods is then
given to cattle and birds to eat.

Legend of Pongal

All the festivals have some interesting legends associated with it. Pongal,
the much awaited festival of South India particularly Tamil Nadu also has
interesting legends associated with it. The most popular legends attached
to Pongal celebration are discussed below:

Legend of Mount Govardhan
The first day of the festival Bhogi Pongal has an association with legend
of Lord Indra (the God of clouds and rains) and Lord Krishna. Earlier,
people used to worship Lord Indra who was the King of the deities. This
honor given to Lord Indra made him full of pride and arrogance. He thought
himself to be the most powerful of all the beings. When child Krishna came
to know about this he thought of a plan to teach him a lesson. He persuaded
his cowherd friends to worship Mt. Govardhan rather than Lord Indra. This
angered Lord Indra and he sent forth the clouds to generate non-stop
thunder, lightning, heavy rains and flood the land. As per the tale, Lord
Krishna lifted the huge Govardhan Parvat on his little finger to protect
the cowherds and the cattle. He kept standing with the lifted mount to save
all the humans from the ravaging storm of Lord Indra. The rains continued
for three days and at last Indra realized his mistake and divine power of
Lord Krishna. He promised humility and begged Krishna's forgiveness. Since
then, Krishna allowed to let the Bhogi celebrations continue in honor of
Indra. Thus, the day gave the origin to the Pongal celebration. The
festival got another name of Indran from this legendary story.

Legend of Lord Shiva
Another legend associated with the festival relates to Lord Shiva. The
third day of Pongal known as Mattu Pongal involves Lord Shiva and his
mount, Nandi (Basava), the bull. According to the legend, Lord Shiva once
asked his bull to go to the Earth and deliver his message to the people to
have an oil massage and bath daily and to eat food once a moth. Mistakenly,
Basava announced to have an oil massage and bath once a month and to eat
food daily. Enraged Shiva cursed Basava and said that due to this mistake
there would be lack of grains on the Earth. He banished the bull to live on
earth forever and help people plough the fields. Thus, Mattu Pongal has an
association with the cattle. It is also called Kanu Pongal. The
celebrations of the festival are similar to the festivals of Raksha Bandhan
and Bhai Dooj of North India.//

They worshiped the image of Goddess Katyayani, which would be carved out of sand. They ended their penance on the first day of the month of Thai (January-February). This penance was to bring abundant rains and
agricultural prosperity for the country.

A special puja is performed on the first day of Pongal before the
cutting of the paddy. Farmers worship the sun and the earth by anointing their ploughs and sickles with sandal wood paste.

The first day, Bhogi Pongal, is a day for the family. Surya Pongal, the second day, is dedicated to the worship of Surya, the Sun God. Boiled milk and jaggery is
offered to the Sun God. The third day of Pongal, Mattu Pongal, is for
worship of the cattle known as Mattu.

The first day of the festival Bhogi Pongal has an association with legend of Lord Indra (the God of clouds and rains) and Lord Krishna. Earlier, people used to worship Lord Indra who was the King of the deities. This
honor given to Lord Indra made him full of pride and arrogance. He thought himself to be the most powerful of all the beings. When child Krishna came to know about this he thought of a plan to teach him a lesson. He persuaded his cowherd friends to worship Mt. Govardhan rather than Lord Indra.

The Pongal that has been offered to the Gods is then
given to cattle and birds to eat

மேற்காண்பவை மட்டும் பொய்யாயிருந்தால் ஆண்டுக்கு ஒருமுறை நம் அனைவர் வீட்டிலும் பொங்கல் வைத்து எல்லாரும் ஒன்றாயமர்ந்து, பகிர்ந்து உண்ணும் மகிழ்வில் கலந்து கொள்வதற்கு எந்த முஸ்லிமும் தயங்க மாட்டான்.

(Taken from Nalladiyar's)

சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப தெளிவா இந்த விஷயத்த அலசியிருக்கீங்க. ஜோவின் பதிவுக்கு இப்படி ஒரு எதிர்ப்பு வரும்னு நான் எதிர்பார்க்கவேயில்ல. தேவையில்லாம வேணுமின்னே பிரச்சனைய உருவாக்கிக்கிறாங்க.

பொங்கல் மட்டுமல்ல எந்த பண்டிகையும் நாம் வாழுற கலாச்சாரத்தோட ஒன்றியிருக்குது. இதை எடுத்துக்கொள்வதும் விடுவதும் நம்ம கையில இருக்கு.

ரெம்ப ரெம்ப நல்ல பதிவு.

-/பெயரிலி. said...

பக்கத்துவீட்டுக்காரனுக்காக நாமும் எல்லாவற்றையும் கொண்டாடவேண்டுமா என்பது பொருளாதாரத்திலே கடிக்கும் ;-) ஆனால், நீங்கள் பதிவிலே நீங்கள் சொல்வது மூளையைக் கசக்காமலே புரிந்துகொள்ளக்கூடிய விடயம். இவர்கள் மூளைக்கும் மூலையிலேகூட மூச்சுவிட முடியாமல் "எம் மதமே" மூடிபோட்டு வைத்தால், உள்ளே புழுங்குவதைத் தவிர வேறெதை யோசிக்கப்போகிறார்கள்? :-( ஒன்றுமட்டும் இவர்கள் பதிவிலே தெளிவு. அடுத்த மதத்தைத் திட்டுவதிலும் தன் மதத்திலே குதிப்பதிலும் மொத்தமாக ஒரு கூட்டணி மதம் பாராது வைத்திருக்கின்றார்கள். அவர்களின் மதமே 'மதம்' தான் ;-)

தருமி said...

மோகன்தாஸ்,
சூரியன் = இயற்கை
சூரியனை நீங்கள் கடவுளாகப் பாருங்கள்; நான் இயற்கைச் சக்தியாகப் பார்த்துக் கொள்கிறேன். அவ்வளவே. இதில் எங்கு முரண்பாடு வரப் போகிறது?

Aside: புத்தகக் கண்காட்சிக்குப் போனது வரை சரி. அதற்குப் பிறகு கிரிக்கெட் அப்டின்னுட்டு எங்க போனீங்க?

ramachandranusha(உஷா) said...

ஒண்ணுமட்டும் புரியலைங்கைய்யா! இந்தளவு உணர்ச்சிவசப்பட என்ன இருக்கு? பண்டிகைகள் என்ன அழகில் வர வர கொண்டாடிக் கொண்டு வருகிறோம் இந்த அவசர
உலகில்! அடுத்த தலைமுறை இவைகளை நினைவிலாவது வைத்திருக்குமா என்பதே சந்தேகம். அப்படி இருக்க, ஒரு பண்டிக்கை
கொண்டாடுவது என்பது ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை அல்லது வீட்டு சம்பிரதாயம் என்று சொல்லலாம். இதில் திடீரென்று நானும் இனி மகாவீர் ஜெயந்தி, கிறிஸ்துமஸ்,பெரூ நாள் கொண்டாட போகிறேன், புது புடைவை எடுக்கப் போறேன் என்று ஆரம்பித்தால்... :-))))

தருமி said...

ஜோ,
மதம் பிடித்தவர்களைப் பற்றி எல்லாம் ஏன் இப்படி கவலைப்படுகிறீர்கள். விடுங்கள்..

தருமி said...

நாடோடி,

// "இந்து மதத்தை சேர்ந்தது" என்ற பதிவு மட்டுமே அதிகாமாக கவனிக்கப்படுகிறது.//

காரணம்: கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

நீங்கள் உங்கள் மூன்றாம் பத்தியில் சொல்லும் சேதி என் கண்ணில் இதுவரை படாதது; அதனால் புரியவில்லை.

நாலாவது பத்தி சுத்தமாகப் புரியவில்லை.

தருமி said...

கோவி,
நன்றி

மருத புல்லட் பாண்டி,
நன்றி. தலைவர் ரொம்ப கோபமா இருக்கீங்களோ..?

தருமி said...

கல்வெட்டு,
//எதிர் கருத்துக்களைக் கூறியவர்கள் பலரும் புதியவர்களல்லவே.. //

புரியவில்லை //

உங்களின் பட்டியலில் உள்ள இரண்டாம் அணி ..?

தருமி said...

சினேகிதன்,

//.. மற்ற உயிர்களின் மேல் அன்பு செலுத்துபவராக இருந்தால், நீங்கள் கடவுளை வணங்க வேண்டிய அவசியம் இல்லை. கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் தேடிவந்து உங்களுடன் இருப்பார்.//
இதைக் கொஞ்சம் மாற்றி ...கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் உன் பின்னே வருவார் என்பது நான் ஒருகாலத்தில் (ஒருவேளை கடவுள் என்று ஒன்று இருக்குமோ என்று சந்தேகித்த காலத்தில் :) ) நான் அடிக்கடி சொல்லும் வாக்கியம்.

மிக்க நன்றி..

நிர்மல் said...

மதம் என்பது கடவுளை காணும் நெறிமுறைகளா(guidelines) அல்லது விதிமுறைகளா(rules) என்பதே பிரச்சனை.

விதிமுறை என்று நினைப்போர் தங்கள் தரப்புக்கு நியாயம் தேட கையில் கிடைப்பது, கண்ணில் பார்ப்பது, மண்ணில் நிலைப்பது எல்லாவற்றிலும் அவ்விதியை ஒட்டி வைத்து அவற்றை தங்கள் மதங்களின் இருப்புக்கு சாட்சியாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றார்கள்.

இந்த மனநிலையில் அவர்களுக்கு மாற்றுப்பார்வை என்பதே விதிமீறலாகிறது. விதிமீறல் குற்ற உணர்வை உருவாக்க அதை அகற்ற மதத்தின் மீது உடும்பு பிடி அங்கு நேர்கிறது.

வழக்கம், மரபு, கலாச்சாரம் எல்லாம் மனிதரால் உருவாக்கப்பட்டவையே. துவக்கத்தில் fashion ஆக இருப்பது அதை நிறைய நபர்கள் தொடர பிற்காலத்தில் culture ஆக மாறுகின்றது. அப்புறம் அதில் வரலாறோ, புராணமோ ஒட்டிக் கொள்கிறது.

தருமி said...

ஜிரா,
//...இருக்கும் இடைவெளியைப் பெரிதாக்க இத்தனை மெனக்கெடுகிறார்கள்..//

நம் ஆதங்கங்கள், வருத்தங்கள் எந்தவித பயனுமில்லாமல் போய்விடுமோ, ஜிரா?

தருமி said...

பாபா,

:)
:)

தருமி said...

பாபா,
நெஜமாவே நான் இன்னும் குரு பார்க்கவில்லை.. :)

தருமி said...

கொத்ஸ்,
மனதில் தோன்றியதை, எனக்குச் சரியென்று பட்டதை வெளிப்படையாக எழுதியிருக்கிறேன்.

தருமி said...

சிறில் அலெக்ஸ்,
மிக்க நன்றி

தருமி said...

கனி,
எங்கிருந்து கிடைத்தது இந்த அரிய பொக்கிஷம்?!

நான் எழுதியதை உள்வாங்கியிருந்தால் இந்த C & P -க்குத் தேவையேயில்லை. இவ்வளவு மெனக்கெட்டிருக்க வேண்டாம்.

சீரியஸான பதிவுதான். இருந்தாலும் உங்கள் பின்னூட்டத்திற்கு இப்படித்தான் பதில் சொல்ல ஆசை:

என்ன இது? ரொம்ப சின்னபிள்ளைத்தனமால்ல இருக்கு :)

தருமி said...

பெயரிலி,
//... மதமே 'மதம்' தான் ;-) //


சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

தருமி said...

ராமச்சந்திரன் உஷா,
//இந்தளவு உணர்ச்சிவசப்பட என்ன இருக்கு?//

நீங்கள் வெகு மேலோட்டமாக இந்த விஷயத்தைப் பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

மனித நேயம் அற்றுப் போய் மதவெறி மீறுவது என்பது நான் பார்ப்பது.

தருமி said...

நிர்மல்,

//...மாற்றுப்பார்வை என்பதே விதிமீறலாகிறது//

மதியும் மறைந்தே போகிறது; இல்லையா?

குமரன் (Kumaran) said...

//போன வருடம் இந்த அளவுக்கு 'வரிந்து கட்டல்' இல்லை. நியூட்டனின் கோட்பாடு செயலாக்கப் படுகிறது போலும்!
//

தருமி ஐயா. எனக்கு என்னவோ இது சரியான காரணம் என்று தோன்றுகிறது. வினைகளும் எதிர்வினைகளுமாகவே அதிகமாகப் பதிவுகள் வருவதைப் பார்க்கும் போதே தெரிகிறதே.

குமரன் (Kumaran) said...

கல்வெட்டின் விளக்கத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். எல்லாரும் எல்லா பதிவுகளும் படிப்பதில்லை. நான் இன்னும் ஜோவின் பதிவையோ (அது மீள்பதிவு என்றால் போன வருடம் படித்திருப்பேன்) அதற்கு எதிர்வினையாக வந்தப் பதிவையோ படிக்கவில்லை. அப்படி பலர் இருப்பார்கள். அப்படியே 'நடுநிலை இந்துக்கள்' ஏதாவது கருத்து சொல்லியிருந்தாலும் அது இராகவனின் பின்னூட்டத்தைப் போல் இரைச்சலில் காணாமல் போய்விடுகின்றது.

தருமி said...

குமரன்,

//..இது சரியான காரணம் என்று தோன்றுகிறது..//

அப்போ அடுத்து: அவன நிறுத்தச் சொல்லு; நான் நிறுத்துறேன் என்பதா? :(

ramachandranusha(உஷா) said...

தருமி நான் மேம்போக்காய் கேட்கவில்லை, பிராக்டிக்கலாய் கேட்கிறேன். பொங்கல் எந்த அழகில் கொண்டாடப்பட்டுகிறது என்று நம் தமிழக வாழ் நண்பர்கள் சொல்ல்லட்டும். சென்னையில் அடுக்குமாடி கலாச்சாரத்தில் சூரியனே உள்ளே வரமாட்டான்.
டீவியே சொர்க்கம். இதில் பிள்ளைகள் பொங்கலையும், பாயாசத்தையும் கையில் தொடுவது இல்லை. இது பல வீடுகளில் நடக்கும் கூத்து. சரியா மக்களே! கரும்பு வாங்குவதை விட்டாச்சு. பெயருக்கு, அரைகிளாஸ் அரிசி போட்டு கிண்டி, சுகர், கொலஸ்ட்ராஸ் லொட்டு, லொசுக்கு பார்த்து, இரவு அதிலும் ஒரு கரண்டி மிச்சம். என் மகள் பொங்கல் பொங்குவாளா? என் மகனுக்கு பொங்கல் கிண்டும் மனைவி கிடைப்பாளா என்ற ஆதங்கத்துடன் இந்த மடல். தருமி, நான் நான் பிள்ளைகளுக்கு தெரிய வேண்டும் என்றும், கணவருக்கு நம்பிக்கை உண்டு என்பதாலும் எந்த பண்டிகையையும் விடுவதில்லை.
பி.கு கிருஷ்ணஜெயந்தி என்று ஒன்று உண்டு. சென்னையில் இன்று யாராவது வீட்டில் சீடை, முறுக்கு செய்கிறார்களா?
எல்லாம் ஸ்பெஷல் பேக், முன் கூட்டியே கிராண்ட் ஸ்வீட் போன்ற கடைகளில் பதிவு செய்ய வேண்டும் ;-)

குமரன் (Kumaran) said...

//அப்போ அடுத்து: அவன நிறுத்தச் சொல்லு; நான் நிறுத்துறேன் என்பதா? :(
//

அதே. சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பலவகையாகப் பிரிந்து கிடக்கும் பதிவர்கள் அதனைத் தான் எண்ணுகிறார்கள்; செயலிலும் காட்டுகிறார்கள். இவர் அவரைத் தாக்க அவர் இவரைத் தாக்க, இப்படி செய்து கொண்டிருக்கும் போது நிழலாக வேறு யாரையாவது தாக்க, உள்குத்து, வெளிக்குத்து, நிழல் குத்து என்று பலவகையாகப் போன வருடம் தொடங்கி (அதற்கு முன்னாலும் இருந்திருக்கலாம். நான் 2005ல் பதிவுலகத்திற்கு வந்ததால் போன வருடம் தொடங்கி மிகுதியானதாக உணர்வதாக இருக்கலாம்) மிகுந்து கொண்டே போகிறதே.

Each controversial post is raising the bar for the other group.

ஆனால் எல்லார் மனத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறொம் என்ற எண்ணமே இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

//அப்போ அடுத்து: அவன நிறுத்தச் சொல்லு; நான் நிறுத்துறேன் என்பதா? :(
//

அதே. சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பலவகையாகப் பிரிந்து கிடக்கும் பதிவர்கள் அதனைத் தான் எண்ணுகிறார்கள்; செயலிலும் காட்டுகிறார்கள். இவர் அவரைத் தாக்க அவர் இவரைத் தாக்க, இப்படி செய்து கொண்டிருக்கும் போது நிழலாக வேறு யாரையாவது தாக்க, உள்குத்து, வெளிக்குத்து, நிழல் குத்து என்று பலவகையாகப் போன வருடம் தொடங்கி (அதற்கு முன்னாலும் இருந்திருக்கலாம். நான் 2005ல் பதிவுலகத்திற்கு வந்ததால் போன வருடம் தொடங்கி மிகுதியானதாக உணர்வதாக இருக்கலாம்) மிகுந்து கொண்டே போகிறதே.

Each controversial post is raising the bar for the other group.

ஆனால் எல்லார் மனத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறொம் என்ற எண்ணமே இருக்கிறது.

வெற்றி said...

தருமி ஐயா,
நல்ல பதிவு. இப் பதிவில் நீங்கள் சொல்லியுள்ள பல கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு உண்டு.

/* இந்துக்களல்லாத தமிழர்கள் பொங்கலை ஒருமித்து அதை ஒரு சமுதாயப் பெரு விழாவாகக் கொண்டாடப் போகிறார்களா, இல்லை அதையும் விநாயகர் சதுர்த்தி போல் ஆக்கி, பொங்கலையும் ஒரு pan-indian / pan-hindu festival என்று ஆக்குவதற்கான முயற்சிக்குத் துணை போகப் போகிறார்களா என்று இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தெரிந்துவிடும் என்றே நினைக்கிறேன். இளைஞர்களே ! எழுமின்; விழிமின்! .... */

வழிமொழிகிறேன்.

இன்னொரு விடயம், நண்பர் ஜோ அவர்கள் கிறிஸ்தவர்களும் தைப்பொங்கல் கொண்டாடுகிறார்கள் என்பது எனக்குப் புதுச் செய்தி. நான் ஈழத்தில் பிறந்து வளர்ந்த கிராமத்தில் 20% - 30% வீதமானவர்கள் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவத்தில் அவர்கள் எப்பிரிவு என எனக்குத் தெரியாது. நாம் அவர்களை வேதக்கரர்கள் என்று சொல்வோம். ஏன் என் ஊரில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் தைப்பொங்கல் கொண்டாடவில்லை என்பதற்கான காரணம் எனக்குத் தெரியாது. சிலவேளைகளில், என் ஊரில் வசிக்கும் பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் உழவுத் தொழிலை மேற்கொள்ளாததும் காரணமாக இருக்கலாம். அவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடித் தொழில், மரம் ஏறுதல் போன்ற தொழில்களைச் செய்து வருபவர்கள்.

தைப்பொங்கல் ஒரு மதத் திருவிழா அல்ல, அது தமிழர்கள் திருநாள் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. எனவே, நீங்கள் ஆணித்தரமாகச் சொல்லியுள்ளது போல், சகல தமிழர்களும், மத, தொழில் வேறுபாடுகளைக் களைந்து இத் திருநாளைக் கொண்டாட வேண்டும். இதற்கும் இந்து முலாம் பூச முற்படுபவர்களுக்கு இது நல்ல பாடமாக அமையும்.

Anonymous said...

இந்த பதிவு 100 எட்டும் போல் இருகின்றதே!அதற்கும் மேலும் வரும் போல் இருகின்றது.அதற்கு இப்பொழுதே வாழ்த்துக்கள்!

தருமி said...

மதுர புல்லட் பாண்டி,
சொன்னது ...

நம்ம ஆட்களுக்கு இயற்கைக்கு எதிராக தான் நடக்க தெரியும், இதுல என்னதான் வரலாறு சொன்னாலும் கத கேக்கர மாதிரி தூங்கிடுவாங்க, நீர்,நிலம்,காற்று,நெருப்பு,ஆகாயம் இதுக்கு எதிரா எங்கயா மதம் இருக்கு ஏற்கனவே காடுகளை அழிச்சு மழை இல்லாம போச்சு, சுனாமி நாட்டுக்குள்ள வந்துச்சு திருந்துடா மனூசா இல்ல சந்ததி இல்லாம தருசா போகப்போர

No Editing Plz

டிபிஆர்.ஜோசப் said...

நெஜமாவா தெரியாம கேக்குறீங்க ..? என்னங்க இது, நான் 'திருந்தி' எத்தனை வருஷமாச்சு; அதப் பத்தி பதிவு போட்டு எத்தனை மாசமாச்சு? வாசிச்சதில்லையா? என்ன போங்க..//

சரி, இப்பவாவது இதில இருந்து வாசிக்க ஆரம்பிங்களேன். படிச்சுட்டு உங்க கருத்தையும் சொல்லுங்களேன்...//

என்னுடைய கேள்விக்கு நீங்கள் அளித்த இந்த பதிலை அன்றே படித்துவிட்டேன். ஆனால் வாதத்தைத் தொடர மனமில்லாததால் மவுனமாகிப் போனேன்.

அத்துடன் உங்களுடைய பதிவில் வந்துள்ள வாதப் பிரதிவாதங்களையும் வாசித்தபின் நாமும் எதற்காக எதையாவது எழுதி அதற்கு இன்னும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து...

நான் பலமுறை கூறியிருக்கிறேன்..

மதமும் இறை நம்பிக்கையும் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது. அது முழுக்க, முழுக்க ஒருவருடைய மனசு அதில் சுரக்கும் உணர்வுகள் சம்பந்தப்பட்டது..

மதத்திலேயே நம்பிக்கையில்லை என்பவர்களிடம் மத சடங்குகளைப் பற்றி விவாதித்து என்ன பயன் என்றுதான் நான் நினைக்கிறேன்.

எந்த மதச்சடங்கையும் விவாதப் பொருளாக ஆக்கலாகாது என்பதும் என் கருத்து. அது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது.

தருமி said...

ஜோசப்,

//... படிச்சுட்டு உங்க கருத்தையும் சொல்லுங்களேன்//

நான் கேட்டது என் மதம் பற்றிய பழைய பதிவுகள் - அதிலும் கிறித்துவர் என்ற முறையில் கிறித்துவம் பற்றி நானெழுப்பிய கேள்விகள் - பற்றிய கருத்தையே கேட்டேன். இந்தப் பதிவு பற்றி அல்ல.

//உங்களுடைய பதிவில் வந்துள்ள வாதப் பிரதிவாதங்களையும் வாசித்தபின் நாமும் எதற்காக எதையாவது எழுதி அதற்கு இன்னும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து...//
நமக்கு சரியென்று தோன்றுவதை சொல்வதற்காகத்தானே பதிவுகளே. இல்லையா? எதிர்ப்பே இருக்காது என்றோ, இருக்கக்கூடாது என்றோ நினைக்கக் கூடாதல்லவா?

சாத்வீகன் said...

மிக நல்ல பதிவு.

பொங்கலோ பிற பண்டிகைகளோ எதுவும் மக்களை ஒருங்கிணைக்கவே.

பண்டிகைகளின் போது பிரியாணியையும் சர்க்கரைப்பொங்கலையும் கேக்கையும் பரிமாற்றிக்கொள்ளும் மனிதமனங்கள் என்றும் நம்பிக்கை தருபவை.

நன்றி.

நெல்லை சிவா said...

நல்ல பதிவு. மதங்கள் மனிதனை நெறிப்படுத்த என்ற நிலைமை போய், மதப் படுத்திக் கொண்டிருக்கிறது. விசாலமான மனப்பான்மை, சுருங்கிக் கொண்டிருக்கின்றது.

ஒளிந்திருக்கும் ஒற்றுமை புரியாமல், 'தனித்துவம்' போய்விடுமோ என்ற பயத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நானறிந்த வகையில், இன்னமும் பொது மனப்பான்மையோடு பார்க்கின்ற மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வலைப்பதிவர் கூட்டம் என்பது மிகப் பெரிய தமிழ் மக்கள் கடலில், சிறு பகுதிதான். 'ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்கும்' அரசியல் பண்ணிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று தோன்றுகிறது.

பத்மா அர்விந்த் said...

பண்டிகைகள் என்பதே தினசரி இயந்திரத்தனமான வாழ்க்கையில் ஒரு புத்துணர்ச்சியை ஊட்டவும், பகை மறந்து மனிதர்கள் கூடவும் பகிர்து கொள்ளும் பழக்கமும் காலத்திற்கேற்ப உணவு பழக்கங்கள் மாறவும் ஏற்பட்டிருக்க வேண்டும். நீங்கள் சொல்வது போல இங்கே பரந்தமனமும் மாற்றுக்கருத்தை ஏற்றுக்கொள்லும் பக்குவமும் குறைவதும், வரிகளுக்கு இடையிலும் ஊடாகவும் என்ன பொருளாய் இருக்கும் என சிந்திப்பதும் தற்போதைய ட்ரெண்ட் போலும்.

நல்லடியார் said...

தருமி,

பொங்கல் பற்றிய முஸ்லிம்களின் கண்ணோட்டமாக நான் எழுதியதில் எந்தக் காழ்ப்புணர்வும் இல்லை. தற்காலப் பொங்கல் முஸ்லிம்களும் இணைந்து கொண்டாடும் வகையில் அதன் கொண்டாட்டங்கள் இல்லை என்பது முதற்காரணம். அதற்கான என் தரப்பு வாதங்களையே வைத்தேன்.

உழவர்களுக்கு நன்றி செலுத்தவே பொங்கல் பண்டிகை என்றால், உழவர்களுக்கு நன்றி செலுத்த இஸ்லாம் குறிப்பிட்ட நாளை/நாட்களை வரையறுக்கவில்லை. மேலும் இஸ்லாமியப் பண்டிகைகளில் அனைத்து நிலையிலுள்ளவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நோன்புப் பெருநாளை ஈகைத் திருநாள் என்கிறோம். ஒருமாதம் நோன்பிருந்து பசித்திருக்கும் ஏழை உழவனின் நிலையை உணர்ந்து ஏழைகளுக்கு(ம் உழவர்களுக்கும்) தர்மம் செய்து, பெருநாள் அன்று ஃபித்ரா எனும் பெருநாள் பரிசு/அன்பளிப்பு கொடுத்து தமிழர்கள் என்று சகோதரத்துவத்தைக் குறுகிய வட்டத்திற்குள் அடக்காமல் 'மனிதர்கள்' என்று பரந்த மனப்பான்மையுடன் மக்கள் அனைவரும் பொதுவாகக் கொண்டாட தடையாக இருப்பது எது? இதனைச் சொல்வது இஸ்லாம் என்பதனாலா? அல்லது தமிழனின் பண்பாட்டிற்கு இது ஒத்துவராதா? என்பதை தெளிவு படுத்துங்கள்.

பெரும்பாலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வசைபாடும் பிறபதிவுகளில் இஸ்லாம், அவர்களின் வழிபாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் அச்சுருத்தலாக இருக்கிறது என்பார்கள். மாறாக, பொங்கல் விசயத்தில் மட்டும் இஸ்லாம்/முஸ்லிம்கள் வலிந்து அழைக்கப்படும் காரணம் என்னவாக இருக்கும்? (முஸ்லிமாக இருப்பதை விட தமிழராக இருப்பதே சிறந்தது என்பதற்காகவோ என்னவோ?) முஸ்லிமாக இருப்பவர்கள் தமிழராக இருக்க முடியாதா? தமிழனாக இருந்தால் தெய்வ நம்பிக்கை கூடாதா? ஒன்றுமே புரியவில்லை! எனில், நாங்களெல்லாம் தமிழுக்கு எதிராகச் செய்த கலாச்சார சீரழிவுகள் யாவை?

மேலும், தமிழனின் பண்பாடுகளில் ஒன்று பிறன்மணை நோக்காமை! இதற்கு வகைசெய்யும் பர்தாவை தமிழர்கள் அனைவரும் ஏற்று இதிலும் தமிழ் கலாச்சாரத்தைக்/பண்பாட்டைக் காக்கலாமே? முன்வருவார்களா?

மது,சூது,கொலை, களவு பாவம் என்பதும் தமிழர் பண்பாடுதான். இதனை அழுத்தந்திருத்தமாக இஸ்லாம் தடுக்கிறது என்பதை தமிழ் பண்பாட்டு/கலாச்சாரக் காவலர்கள் அறிவார்கள்களா?

இப்படி தமிழ்க்கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காக்க, இஸ்லாத்தில் ஏகப்பட்ட வழியுண்டு. விடுத்து, பொங்கலன்று மட்டும் தமிழ் கலாச்சாரத்தைக் காக்க வேண்டுமா?

பி.கு: பெரும்பாலும் உங்கள் பதிவில் பின்னூட்டமிட விரும்பாதற்குக் காரணம் புதிய புதிய அணானிகளை அனுமதித்து சொல்லவந்த விடயத்தை/ வாதத்தை திசை திருப்ப வழிவகுப்பதாலேயே. மற்றபடி உங்களின் இப்பதிவில் சொல்லியுள்ள இஸ்லாம் சம்பந்தப்பட்ட கருத்துக்களுக்கு வாய்ப்பிருந்தால் என்பதிவில் பதிலளிக்கிறேன்.

பொங்கல் வாழ்த்துக்கள்! (நீங்களும் இதை சகோ.G.ராகவன் போல் திருப்பியனுப்ப மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்!:-)

அன்புடன்,

தருமி said...

உஷா,
நாமெல்லோரும் எல்லா பண்டிகைகளையும் எப்படி கொண்டாடுகிறோம் என்பதல்ல இன்கு விவாதிக்கப்படும் விஷயம்.

* பொங்கல் ஒரு தமிழர் பண்டிகை. எல்லோரும் விழாக் களத்துக்குள் இறங்கி விளையாடுவோம் வாருங்கள் என அழைக்கும் ஒரு குழு. (இதில் நானும் அடக்கம்.)
* இது எங்கள் களம்; யாரும் உள்ளே இறங்கினால் இருக்கு என்று தனியுரிமையை வீரியமாகக் குரலெழுப்பும் இன்னொரு குழு.
* இந்தக் களம் மோசம்; எங்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லும் இன்னொரு குழு.

- ஏன் இப்படி மூன்று திக்குகளை நோக்கி இந்தக் குழுக்கள்? அப்படி இருக்க வேண்டிய காரணம் என்ன? சரிதானா? இதில் நீங்கள் எங்கே?

Anonymous said...

//ஆனால் விவாதிக்கப்படும் விஷயம் அடைத்து வைத்திருக்கும் மனக் கதவுகளைச் சற்றே திறந்தால் கூட போதும்; அதற்கும்கூட நாம் தயாரில்லை என்பதுதான் கவலைக்குறிய விஷயம்.//

தருமி எந்த அளவுக்கு தயார்? பிற மத புரிதல்களைப் பொறுத்தவரை உங்கள் மனக் கதவு எந்த அளவு திறந்துள்ளது? உங்கள் முதுகில் உத்திரம் கிடக்கிறது. அதைப் பார்த்துவிட்டு அடுத்தவன் கண்ணில் இருக்கும் துரும்பைக் கவனிக்கலாம்.

தருமி said...

குமரன்,

//..பலவகையாகப் பிரிந்து கிடக்கும் பதிவர்கள் ..//
பலவகையாய் பிரிந்திருப்பது நமது சுய சிந்தனைகளைக் குறிப்பதாக எடுத்துக் கொள்கிறேன். ஆனால் திரிபு விவாதங்களை - திரிபு விவாதங்கள் என்று நாம் நினைக்கும் விஷயங்களை - நமது பார்வையில் விவாதம் செய்வது சரியென்றே நினைக்கின்றேன்.

தருமி said...

வெற்றி,

நன்றி

பொதுவாக தமிழ்க் கலாச்சாரத்தை ஒட்டியே தங்கள் சமய கலாச்சாரங்களை கத்தோலிக்கர்கள் அமைத்துக் கொள்வதே வழக்கம். இதற்குரிய காரணங்களாக நான் நினைப்பவைகளை இங்கு கூறியுள்ளேன்.

இராம.கி said...

நீங்கள் கூறிய மூன்று குழுக்களில் முதல் குழுவைச் சார்ந்தவன் "உள்ளேன் அய்யா" என்று குரல் கொடுக்கிறேன்.

என்னுடைய "பொங்கலோ பொங்கல்" பதிவைப் படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

தமிழ் மக்கள் ஒன்று சேருவார்கள்; சரியானதைத் தேடி உணருவார்கள் என்றும் நம்புகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

பொங்கல் இந்து பண்டிகை என்று வாதிடுவோர் தமிழ்மணத்தில் இருவர் தான்.

ஒருத்தர் ஜடாயு.
இன்னொருத்தர் நல்லடியார்.

தருமி said...

நல்லடியார்,

//உழவர்களுக்கு நன்றி செலுத்த இஸ்லாம் குறிப்பிட்ட நாளை/நாட்களை வரையறுக்கவில்லை//

இதைத்தான் நானும் குறிப்பிட்டேன். "எல்லாமும்" உங்கள் புத்தகத்தில் இருக்கும்; அதில் இல்லாத விஷயங்களை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள்; பொருட்படுத்தக் கூடாது என்பது என்ன விவாதமென்று புரியவில்லை. ஒரு உதாரணத்திற்கு - கொஞ்சம் crude ஆக இருக்கலாம்; விளக்கத்திற்காகத்தான் - போலியோ சொட்டு மருந்து பற்றி இஸ்லாம் ஏதும் வரையறுக்கவில்லை; அதனால் அதை எங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்க மாட்டோம் என்பதுபோல் ஒரு விவாதமாக இது எனக்குத் தோன்றுகிறது.

//ஈகைத்திருநாளை ..மக்கள் அனைவரும் பொதுவாகக் கொண்டாட தடையாக இருப்பது எது?//

ஒரு மாத நோன்பும், பெருநாளும், ஈகைத்திருநாளும் எந்த இஸ்லாமியை மதத் தொடர்பில்லா விஷயங்கள் என்றா கூறுகிறீர்கள்? பொங்கல் எந்த வித சமயச்சார்பில்லா திருநாள் என்பதுதான் என் விவாதம்.

//தமிழனின் பண்பாடுகளில் ஒன்று பிறன்மணை நோக்காமை!//

தமிழ்ப் பண்பாடு என்ற சொற்றொடரே நம்மை நாம் ஏமாற்றிக் கொள்ளும் விஷயம் என்பது என் ஆழமான கருத்து. மனிதப் பண்புகள் என்று கூறுங்கள் ஒத்துக் கொள்கிறேன். ஏதோ தமிழர்கள் மட்டும் ஓர் உயர்ந்த மனிதக் கூட்டம் என்பதுபோல் பேசும் இந்தத் 'தமிழ்ப்பண்பாட்டை' அரசியல்வாதிகளுக்கு ஒதுக்கிவிடுவோமே. பிறன்மனை நோக்காமை மனிதப் பண்பாடு.


//மது,சூது,கொலை, களவு பாவம் என்பதும் தமிழர் பண்பாடுதான்.//

இல்லையில்லை..இவைகள் மனிதப் பண்பாடுகள்தான். உங்கள் மதம் மட்டுமா இவைகளைத் தடுக்கிறது. மதம் என்று ஒன்று இருந்தால் அது இவைகளைத் தடுத்துதானே ஆகவேண்டும். மதங்கள் எதற்கு, மனிதமே இவைகளைத் தடுக்கிறதல்லவா?

//இப்படி தமிழ்க்கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காக்க, இஸ்லாத்தில் ஏகப்பட்ட வழியுண்டு.//

எந்த மதத்தில் இல்லை? நல்லவைகள் இல்லாத, நல்லவைகள் சொல்லாத மதம் எது?


தயவுசெய்து பர்தாவை இங்கு இழுக்காதீர்கள். ஏற்கெனவே இதைப் பற்றிச் சொன்னதை மீண்டும் வலியுறுத்துகிறேன். இஸ்லாமியர்களுக்குப் பிடித்தது பர்தா. ஆனால் மற்றவர்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதுதான். துயரம் என்னவென்றால் அதைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவும் தயாரில்லை.
தயவுசெய்து இஸ்லாமியர்கள் அல்லாதவர்களிடம் ஒரு கருத்துக் கணிப்பு போல தனிப்பட்ட முறையில் நீங்களே நடத்திப் பார்த்தால் ஒருவேளை பர்தாவைப் பற்றிய மற்றவர்களின் கருத்துக்கள் உங்களுக்குத் தெரிய வரக்கூடும். ஒஸ்லாமிய பெண்கள் பர்தாவைப் பற்றி சொல்லியுள்ளதைப் பதிவுகளில் முன்பு வாசித்தபோது நான் இப்படி பின்னூட்டம் இட்டேன் என்று நினைவு: இஸ்லாமியரல்லாத பெண்கள் இந்த பர்தாவைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்களேன்.

Let me raise a question: why the WHOLE OF NON-ISLAMIC people are not for பர்தா?
அவ்வளவு புத்திசாலியான கமலாதாஸ் -இப்போதைய பெயர் தெரியாது - இஸ்லாமுக்கு மாறிய பிறகுதானே பர்தாவின் 'மகிமை'யை உணர்ந்தார்.

மற்ற மதத்தினரிடம் இருக்கும் நல்லவைகளை எல்லோருமா எதிர்த்து நிற்பார்கள்? அப்படி எல்லோரும் முனைப்பாக எதிர்த்து நின்றால், அந்தக் கோட்பாட்டில் ஏதும் தவறு இருக்கலாமோ என்று நினைக்கவாவது ஆரம்பிக்கலாமே.

//..புதிய புதிய அணானிகளை அனுமதித்து சொல்லவந்த விடயத்தை/ வாதத்தை திசை திருப்ப வழிவகுப்பதாலேயே. //

தவறு. அனானிகளைப் பற்றிய என் கருத்தை நான் வெளிப்படையாக பலமுறை அறிவித்துள்ளேன் என்பதை விடவும், ஓராண்டாக்கும் மேலாக அனானிகளை அனுமதிப்பதில்லை; அப்படியே அனானிகளை அனுமத்தித்தால் அனுமதிக்கும்போது அதைச் சுட்டிக்காட்டிய பின்பே அவர்களுக்குப் பதில் சொல்லிவந்து கொண்டிருக்கிறேன்.

எனக்குப் பொங்கல் வாழ்த்துக்கள் கூறியதற்கு மிக்க நன்றி. ஒரு தமிழனுக்கு ஒரு தமிழன் கூற வேண்டுமல்லவா?!!

உங்களுக்கு என் காலந்தாழ்ந்த பொங்கல் வாழ்த்துக்கள் - ஒரு தமிழனுக்கு இன்னொரு தமிழனிடமிருந்து.

தருமி said...

நல்லடியார்,
மன்னிக்கணும். பர்தா பற்றி ஒரு அடிப்படை ஐயம்.

பெண்களைப் பார்த்து ஆண்கள் கெட்டுப் போவாங்க என்றால், ஆண்கள்தானே ஏதாவது செய்து கொள்ள வேண்டும்; அதைவிட்டு விட்டு..பாவம் ..பெண்கள் அவர்களை ஏன் மூடணும்?

இதற்குப் பதில் இங்க கூட வேண்டாம்; இங்க பொங்கல் பத்தி மட்டும் பேசுவோம். மற்றவை உங்கள் பதிவில்கூட இருக்கலாம். சரியா..?

ramachandranusha(உஷா) said...

தருமி ஐயா,
எலலாரும் களத்தில் குதித்துவிட்டால் வேடிக்கைப் பார்க்கவும் நாலு பேர் வேண்டாமா :-) நான் எந்த குழுவிலும் இல்லை என்று தெளிவாய் சொல்லிவிடுகிறேன். இதெல்லாம் அவரவர் தனிப்பட்ட , சொந்த உணர்வுகள், நம்பிக்கைகள் என்பதை மீண்டும் ஒருமுறை சொல்லிவிடுகிறேன்.

thiru said...

//நம்பிக்கையுள்ளவர்களுக்கு அது கடவுள்; அப்போது அவர்களுக்கு அந்த லட்டு பிரசாதமாகும். என்னைப் பொறுத்தவரை அவன் கொடுத்தது லட்டு; லட்டு எனக்குப் பிடிக்கும்; சாப்பிட்டேன் என்றேன்.//

உண்மை.
ஆனால் எல்லோருக்கும் பிடிக்காமல் இருக்கலாம். நீயும் லட்டாக பார்க்கவேண்டும் அல்லது நீயும் பிரசாதமாக தான் பார்க்கவேண்டும் என பிறர் வற்புறுத்தும் போது தான் கலவரமும், குழப்பமும் ஆரம்பமாகிறது. ஒருவர் சொல்வதால் இன்னொருவருக்கு 'லட்டு' பிரசாதமாகிவிடாது; லட்டு 'பிரசாதமாக' உணரப்பட்டாலொழிய. உன் வாயில் அதை பிரசாதமென திணிக்கும் வரை விடமாட்டேன் என அடம்பிடிப்பது எந்த வகை?

//விதிமுறை என்று நினைப்போர் தங்கள் தரப்புக்கு நியாயம் தேட கையில் கிடைப்பது, கண்ணில் பார்ப்பது, மண்ணில் நிலைப்பது எல்லாவற்றிலும் அவ்விதியை ஒட்டி வைத்து அவற்றை தங்கள் மதங்களின் இருப்புக்கு சாட்சியாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றார்கள்.
சொன்னவர்: நிர்மல் | 1/19/2007 10:11:53 PM//

ஆம் இது தான் குழப்பத்தின் ஆரம்பம்.


//* பொங்கல் ஒரு தமிழர் பண்டிகை. எல்லோரும் விழாக் களத்துக்குள் இறங்கி விளையாடுவோம் வாருங்கள் என அழைக்கும் ஒரு குழு. (இதில் நானும் அடக்கம்.)//
நானும் இந்த களத்தில் தான்.

-0O0O0-

பொங்கல் மதம் சம்பந்தமில்லாத பொதுவான திருவிழா. சிலருக்கு பொதுவான அடையாளங்களை அழித்து எனக்கு மட்டுமே சொந்தம் என கொண்டாட பிடிக்கிறது. சிலருக்கு அதனால் இது எனக்குரியதல்ல என ஓடப்பிடிக்கிறது. விவசாயம் அழிந்து வருகிற இந்த காலத்தில் பொங்கல் புத்தரிசி, புதுப்பானையில் கொண்டாடப்படலாம். வருங்காலங்களில் பொங்கலுக்கு புத்தரிசி கிடைக்குமா என்பதே கேள்வி. இதில் எனது பண்டிகை மட்டும் தான். எனது மதத்திற்கு சொந்தமானது என சொல்வது பிறரை மட்டுமல்ல; தன்னையும் ஏமாற்றிக்கொள்ளுதல்.

-0O0O0-

பண்டைய காலங்களில் பண்டிகைகள் உருவானதன் நோக்கம் சண்டையிடுதல் அல்ல. மனிதன் கூடி, மகிழ்ந்து, கொண்டாடவும் அளவில்லா கொடைகளை தந்த இயற்கைக்கு நன்றியுமாக தோன்றியது. மதங்கள் தோன்றி அடையாளங்கள் குத்தப்படுகிறது. எஞ்சிய பொது திருவிழாக்களும் மதவெறியில் முத்திரை குத்தப்பட்டு அதன் நோக்கத்தை இழந்து போகிறது.

தமிழகத்தில் பொங்கல், இன்னொரு நாட்டில் 'தாங்ஸ் கிவிங்', இன்னொரு நாட்டில் ஹார்வெஸ்ட் பெஸ்டிவெல்.... இன்னும் பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. நாளும், பெயரும், கொண்டாடும் முறையும் தான் வேறுபட்டது. இது இயற்கையை போற்றும் திருவிழா! அடுத்த வருடமே இந்தியா முழுமையும் பொங்கலை கொண்டாடப்போகிறோம் என்றால் தமிழர்கள் தடுக்கவா போகிறார்கள்? இல்லை அது உடனே இந்தியா முழுமையும் வேதகாலத்தில் கொண்டாடப்பட்டதாக ஆகிவிடுமா? இல்லையே.

-0O0O0-

நல்லடியாரின் பதிவும் பின்னூட்டமும் பொங்கலை 'இந்து பண்டிகை' என்கிறதா? பொங்கல் ஒரு மதசார்பற்ற பண்டிகை. மதம் சாந்த விழாக்களையும், கலாச்சார விழாக்களையும் குழப்புவது அவசியமில்லை. மற்றபடி ஒரு பண்டிகையை கொண்டாடவும், கொண்டாடாமல் இருப்பதும் அவரவரது தனிப்பட்ட விருப்பம். நான் ஏன் கொண்டாடவில்லை என காரணம் பொதுவாக அறிவிக்க அவசியமில்லை. காரணம் கேட்கவும் அவசியமில்லை.

மற்றபடி ஈகைப்பெருநாளை அனைவரும் கொண்டாட அழைப்பது நல்ல தொடக்கம். அதுபோல தீபாவளி, கிறிஸ்துமஸ், என அனைத்தையும் அனைவரும் இணைந்து கொண்டாடுவோம். சடங்குகளை அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வீடுகளில் வைத்துக்கொள்ளலாம். அனைத்தும் பொதுவிழாக்களாக மனிதனை செம்மைப்படுத்தட்டும். சடங்குகள் வீதிக்கு வரும்போது தான் பிரச்சனை ஆரம்பமாகிறது.

//முஸ்லிமாக இருப்பவர்கள் தமிழராக இருக்க முடியாதா? தமிழனாக இருந்தால் தெய்வ நம்பிக்கை கூடாதா? ஒன்றுமே புரியவில்லை! எனில், நாங்களெல்லாம் தமிழுக்கு எதிராகச் செய்த கலாச்சார சீரழிவுகள் யாவை?//

நண்பரே! தமிழ்பேசும் இஸ்லாமியர்கள் தமிழர் என்பதில் மாறுபாடில்லை. மதபண்டிகைகளையும், கலாச்சார பண்டிகைகளையும் பிரித்தறியவா இயலவில்லை? அய்யப்ப பக்தர்களுக்கு அன்னதானம் இட்டு வழியனுப்பிய பல இஸ்லாமியர்களை பார்த்திருக்கிறேன். உடனே அவர்கள் இஸ்லாமை தூற்றியதாக பொருளா? இல்லை இந்துவாக மாறிவிட்டனரா? நோன்பு கஞ்சி குடிக்கும் பல இஸ்லாமியர் அல்லாதவர்கள் உண்டு. மதங்கள் நமக்கு இதை தான் சொல்லித்தரவேண்டும்.

//இதற்கு வகைசெய்யும் பர்தாவை தமிழர்கள் அனைவரும் ஏற்று இதிலும் தமிழ் கலாச்சாரத்தைக்/பண்பாட்டைக் காக்கலாமே? முன்வருவார்களா?//

இதில் மாறுபடுகிறேன். பர்தா பற்றி வேறொரு விவாதம் துவங்குங்கள் ஆரோக்கியமாக விவாதிப்போம்.

*~~~~~~*

மற்றபடி தருமி அய்யாவின் நல்லடியாருக்கான பின்னூட்டத்தை நானும் ரிப்பீட்டே!

தருமி said...

அனானி ஒருவர் அருள்கூர்ந்து பர்தா பற்றி அனுப்பிய ஒரு லின்க் இது.

தருமி said...

வைகை,
எதற்கு இந்த பூடகமான வார்த்தைகள்?
// உங்கள் முதுகில் உத்திரம் கிடக்கிறது.//
உத்திரத்தை கொஞ்சம் அடையாளம் காண்பியுங்களேன்.

//தருமி எந்த அளவுக்கு தயார்? ... தங்கள் மனக் கதவு எந்த அளவு திறந்துள்ளது? //
பிறந்த மதத்தைக் கேள்விகளுட்படுத்தும் அளவுக்கும், கற்பிக்கப்பட்டு ஆழமாகப் பதிக்கப்பட்ட நம்பிக்கைகளிலிருந்து வெளியே வரும் அளவுக்கும் திறந்துள்ளது.

சொல்ல வந்ததை - அப்படி ஏதும் இருந்தால் - வெளிப்படையாக எழுத எது உங்களைத் தடுக்கிறதோ?

தருமி said...

இராமகி,

உங்கள் பின்னூட்டம் படித்ததும், நீங்கள் பதிவைப் படித்துவிட்டு முதுகில் தட்டிக்கொடுத்து சென்றது போல் உணர்ந்தேன்.
நன்றி.

தருமி said...

மறவன்,

...& Co ???

தருமி said...

உஷா,
வேடிக்கை பார்க்கிற கூட்டம் எப்பவுமே ஏதாவது ஒரு குழுவுக்கு 'வெளியிலிருந்து ஆதரவு' தந்து தங்கள் தங்கள் விருப்பத்திற்கேற்றவாறு விசில் அடிப்பதோ, கை தட்டுவதோ உண்டு.
உங்கள் விசிலை எங்கள் குழுவுக்குத் த்ருமாறு வேண்டி, விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம். ;))

என்னங்க இப்படி? நீங்களும் 'ஐயா' போட ஆரம்பித்து விட்டீர்கள். நாமெல்லாம் ஒரே ... !! fill up the blank! :(

தருமி said...

திரு,
குழு உறுப்பினரானதற்கு நன்றி. :)

//எஞ்சிய பொது திருவிழாக்களும் மதவெறியில் முத்திரை குத்தப்பட்டு அதன் நோக்கத்தை இழந்து போகிறது. //

சோகம்தான்.

நாடோடி said...

//இது எங்கள் மதத்திற்கு எதிரான பண்டிகை, ஜல்லிகட்டில் மாடுகளை கொடுமைபடுத்துகிறார்கள்(இதுதான் அங்க இருந்த மிகப்பெரிய காமடி) என்ற பதிவு எந்த ஒரு எதிர்வினையையும் ஏற்படுத்தவில்லை.
ஏன் அரசியலா?..//

நான் கூற வந்தது பொங்கலை முஸ்லீமகள் கொண்டாடக்கூடது என்று கூறிய பதிவு திரட்டியில் யாராலும் கவனிக்கப்படவில்லை. எப்படி கூறலாம் எனறு திராவிடர் உரிமை பேசுபவர்களும்,பார்பீனியத்தை எதிர்பதாக கூறும் கம்யூனிஸ்ட்களும் பதில் எழுப்பிருக்கவேண்டும். ஆனால் பொங்கல் இந்து பண்டிகை என்று வந்தபின்பே தங்கள் எதிர்ப்பை அதற்கு மட்டுமே காட்டி (ஓட்டுக்காக) தங்களது சிறுபண்மையிருக்கான விசுவாதத்தை வெளிபடுத்திகொண்டனர்.தன்மானத்தை அடகுவைக்கும் இவர்கள் போன்ற தமிழர்கள்தான் இழிவானவர்கள் அவர்கள் அல்ல. இவர்களின் இந்த போக்கே ஜோவின் பதிவிற்கு வந்த எதிவினைகளுக்கு காரணம். ஒரு காலத்தில் நடுநிலைமையிலிருந்தவர்கள் கூட ஏதவது ஒரு பக்கம் சாய்ந்திருக்ககூடும்.

மேலும் பொங்கல் கொண்டாடிதான் தமிழக முஸ்லீம்கள் தமிழன் என்று நிருபிக்க வேண்டுமா என்று ஒருவர் கேட்டுருந்தார்.

அவருக்கு
பொங்கலை ஒதுக்கி, அரேபியா கலாச்சாரத்தை ஏற்றுதான் நீங்கள் முஸ்லீம் என்று நிறுபிக்கவேண்டுமா?..அப்போ அரேபிய மொழி மட்டுமே அல்லாவுக்கு ஏற்ற மொழி என்பீர்கள்.அப்புறம் நீங்கள் எப்படி தமிழ்பேசும் தமிழராக முடியும்?அந்த நிலையில்தான் அல்லா இருக்கிறார் என்றால் அவர் எப்படி கடவுளாக முடியும்?..

தருமி said...

நாடோடி,

//இது எங்கள் மதத்திற்கு எதிரான பண்டிகை, ஜல்லிகட்டில் மாடுகளை கொடுமைபடுத்துகிறார்கள்(இதுதான் அங்க இருந்த மிகப்பெரிய காமடி) என்ற பதிவு எந்த ஒரு எதிர்வினையையும் ஏற்படுத்தவில்லை.
ஏன் அரசியலா?..//

உங்கள் 'வருத்தம்' புரிகிறது. ஆனால் உங்கள் நோக்கம் என்ன என்பதும் எனக்கு முழுமையாகப் புரியவில்லை. ஆயினும், நாலடியாரின் பொங்கலைப் பற்றிய பதிவுகளுக்கு நிறைய பேர் எதிர்க் கருத்துக் கூறியுள்ளார்கள். நீங்கள் எதிர்பார்க்கும் ஆட்கள் வரவில்லை போலும். அதுதான் உங்கள் கவலையா? யாரை எதிர்பார்த்தீர்களோ அவர்களிடம் நேரிடையாகக் கேட்டிருக்க வேண்டியதுதானே?

//... பொங்கல் இந்து பண்டிகை என்று வந்தபின்பே தங்கள் எதிர்ப்பை அதற்கு மட்டுமே காட்டி (ஓட்டுக்காக) தங்களது சிறுபண்மையிருக்கான விசுவாதத்தை வெளிபடுத்திகொண்டனர்.//

விழா கொண்டாடமாட்டேன் என்பவர்களிடம் வாருங்கள் என்று அழைப்பதை மட்டுமே செய்ய முடியும். ஆனால் 'இது எங்கள் சமய விழா; இது எங்களுக்கு மட்டுமே உரியது' என்று சிலர் சொல்லும்போது - அது ஒரு சிறு பான்மையோர்தான் என்றாலும் - விழாவாகக் கொண்டாடும் மக்களோ பலர் இருப்பதால் நிச்சயமாக இந்த இரண்டாம் நிலைப்பாட்டுக்குத்தான் எதிர்ப்பு நிறைய வரும்; அது இயற்கை. இதில் நீங்கள் reading in between lines என்று புதுநிலை எடுப்பதும், //..தன்மானத்தை அடகுவைக்கும் இவர்கள் போன்ற தமிழர்கள்தான் இழிவானவர்கள் ..// என்று இழித்துப் பேசுவதும், நான் ஏற்கெனவே சொன்னது போல் அது உங்கள் தனிப்பட்ட அஜெண்டாவைத்தான் வெளிக் காண்பிக்கிறது. இதனால்தான் //... ஒரு காலத்தில் நடுநிலைமையிலிருந்தவர்கள் கூட ஏதவது ஒரு பக்கம் சாய்ந்திருக்ககூடும்.// என்ற உங்கள் விவாதம் நல்ல ஜோக்காக இருக்கிறது.

இவ்வளவு சொல்லும் நீங்கள் நல்லடியாரின் பதிவிற்கு வந்துள்ள 58 பின்னூட்டங்களில் எத்தனை பின்னூட்டங்கள் கொடுத்து உங்கள் எதிர்ப்பைக் காட்டி விட்டீர்கள். உங்களை அங்கே தேடி தேடிப் பார்த்தேனே.. இங்கு வந்து உங்கள் கவலையைத் தெரிவிக்கும் முன் அங்கு போயல்லவா உங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருக்க வேண்டும். உங்களை எது தடை செய்தது?

உங்கள் வார்த்தைகளின்படியே, ''தன்மானத்தை அடகுவைக்கும் இவர்கள்.. தங்களது சிறுபண்மையிருக்கான விசுவாதத்தை வெளிபடுத்திக்// கொண்டார்கள் என்றால், நீங்கள் அப்போது எங்கே போனீர்கள்? தன்மானத்தை அடகு வைக்காத நீங்கள் அந்தப் பதிவில் முதல் ஆளாக உங்கள் கடும் எதிர்ப்பைக் காண்பித்திருக்க ஏன் தவறினீர்கள்?

நீங்கள் என்முன் வைத்த கேள்வியைத்தான் நான் உங்கள் முன் வைக்கவேண்டியதுள்ளது://இது எங்கள் மதத்திற்கு எதிரான பண்டிகை, ஜல்லிகட்டில் மாடுகளை கொடுமைபடுத்துகிறார்கள்(இதுதான் அங்க இருந்த மிகப்பெரிய காமடி) என்ற பதிவு எந்த ஒரு எதிர்வினையையும் உங்களிடம் ஏற்படுத்தவில்லை.
ஏன் அரசியலா?..//

இதுதான் உங்கள் அரசியலா?

நாடோடி said...

நான் இதற்கு ஒரு பதிவு போட்டேன்.

அங்கே சொன்னது போல் நான் திரட்டியிலிருந்து வெளியேறவேண்டும்,இனிமேல் எந்த பதிவும் எழுதவேண்டாம், முக்கியமாக ஆரிய திராவிட,மத பிரச்சனைகளில் தலையிடக்கூடாது என்ற முடிவில் இருந்தேன். அலுவலகத்தில் எனக்கு இருக்கும் பெயரை இப்படி தேவையில்லாத விசயங்களில் நேரத்தை செலவழித்து பெயரை கெடுத்து கொண்டிருக்கிறேன்.அதனால் பதிவும் எழுதவில்லை, எங்கும் இது போன்ற சண்டைகளில் மூக்கை நுழைத்ததும் இல்லை. நல்லடியார் பதிவு மட்டுமல்ல, ஜடாயு பதிவிலும் நான் பின்னூட்டம் இடவில்லை. அதற்கா நான் அதற்கு ஆதரவாக் செயல்படுகிறேன்,எதிராக செயல்படுகிறேன் என்பது அவரவர் மன அனுமானங்கள்.

அந்த இருவரும் தங்களது உள்மன வக்கிரங்களை வெளிபடுத்திகொண்டனர்.

//விழா கொண்டாடமாட்டேன் என்பவர்களிடம் வாருங்கள் என்று அழைப்பதை மட்டுமே செய்ய முடியும்.//

அதற்கு சொன்ன காரணங்கள் யார் கண்ணுக்கும் தெரியலையா?..

மேலும் நான் சொன்ன விசயம் திராவிடம்,பார்பீனியம் பேசுபவர்களுக்குதான்.
இந்த பதிவிலும் வந்து பேசி இருப்பார்கள் தெரியும்.

//உங்கள் வார்த்தைகளின்படியே, ''தன்மானத்தை அடகுவைக்கும் இவர்கள்.. தங்களது சிறுபண்மையிருக்கான விசுவாதத்தை வெளிபடுத்திக்// கொண்டார்கள் என்றால், நீங்கள் அப்போது எங்கே போனீர்கள்? தன்மானத்தை அடகு வைக்காத நீங்கள் அந்தப் பதிவில் முதல் ஆளாக உங்கள் கடும் எதிர்ப்பைக் காண்பித்திருக்க ஏன் தவறினீர்கள்?//

அந்த இரண்டு பதிவில் போய் என் எதிர்ப்பை அல்லது ஆதரவை தெரிவிப்பதாலோ நானும் பத்தோடு பதினொன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் .. I am sorry.அங்கு கழுதையாக கத்திய சிந்தாநதிக்கு யாரவது உதவி செய்தார்களா?..அவரும் திராவிடபதிவர்கள் பதிவிற்கு சென்றும் கழுதையாக கத்தி பார்த்தார் யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

//இதில் நீங்கள் reading in between lines என்று புதுநிலை எடுப்பதும், //..தன்மானத்தை அடகுவைக்கும் இவர்கள் போன்ற தமிழர்கள்தான் இழிவானவர்கள் ..// என்று இழித்துப் பேசுவதும், நான் ஏற்கெனவே சொன்னது போல் அது உங்கள் தனிப்பட்ட அஜெண்டாவைத்தான் வெளிக் காண்பிக்கிறது.
//

இதில் நீங்கள் என்னை ஒரு கூட்டத்தில் சேர்க்க முயற்சி செய்கிறிர்கள்.நீங்களே என்னை வலுக்கட்டாயமாக தள்ளுகிறிர்கள் எதாவது ஒரு பக்கத்தில் நில் என்று,அல்லது நீ அங்கிருந்து கொண்டு அதற்கு ஆதரவாக பேசுகிறாய் என்று. இதன் தொடர்ச்சியாக "நீ ஒரு பார்பனன்...போன்ற முடிவுகள் வரும் என்பதால் தான் நான் மேலே சொன்ன "அங்கே சொன்னது போல் நான் திரட்டியிலிருந்து வெளியேறவேண்டும்....."

இப்போது "ஒரு காலத்தில் நடுநிலைமையிலிருந்தவர்கள் கூட ஏதவது ஒரு பக்கம் சாய்ந்திருக்ககூடும்." இது பொருந்தும் என நினைக்கிறேன்.

என்னை பொருத்த வரைக்கும் "பொங்கல் ஒரு இந்து பண்டிகை" என்று சொன்ன ஜடாயுவின் பதிவிற்கு பொங்கி எழுந்தவர்கள், " பொங்கள் இந்து பண்டிகை , முஸ்லீம்கள் கொண்டாககூடாது" என்று நல்லடியார் சொன்னபோது அமைதிகாத்த அனைவரும் தன்மானத்தை இழந்த தமிழர்கள்தான்.

இதற்கு "விழா கொண்டாடமாட்டேன்" என்றுதான் சொன்னார்கள் என்று அதிகமாக ஜல்லிதான் கேட்க்கும். அதற்கு சொன்ன ஜல்லி காரணத்தை யாரும் பார்க்க மாட்டார்கள்.

//நீங்கள் என்முன் வைத்த கேள்வியைத்தான் நான் உங்கள் முன் வைக்கவேண்டியதுள்ளது://இது எங்கள் மதத்திற்கு எதிரான பண்டிகை, ஜல்லிகட்டில் மாடுகளை கொடுமைபடுத்துகிறார்கள்(இதுதான் அங்க இருந்த மிகப்பெரிய காமடி) என்ற பதிவு எந்த ஒரு எதிர்வினையையும் உங்களிடம் ஏற்படுத்தவில்லை.
ஏன் அரசியலா?..//
//

நான் பதிவு போட்டு இருந்தேன். எனக்கு தெரிந்து அது போதும் என்று எண்ணுகிறேன். நான் அரசியலை நுழைக்க விரும்பவில்லை. நுழையவேண்டாம் என்றுதான் விரும்புகிறேன்.
என்பதிவில் எட்டி பார்த்த 200சொச்சம் பேரில் யாரும் இதுவரைக்கும் பின்னூட்டவில்லை.

நல்லடியார் said...

பொங்கல்-தமிழர்கள் அனைவரும் கொண்டாட உகந்ததாக பொங்கல் இருக்கிறதா? என்றால் இல்லை என்பதற்கு சூரிய வழிபாடு, படைப்புகளுக்குப் படையலிடுவது ஆகிய இந்து மதம் அடிப்படையிலான சடங்குகளால்,முஸ்லிம்கள் கொண்டாடத் தடையாக இருக்கிறது. பொதுவாக அனைவரும் கொண்டாடுவதற்கு அதன் சமயகுறியீடுகளை அகற்றி விட்டு வாதிடாமல் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று அவரவர்கள் தான் தோன்றித் தனமாக வீம்புக்கு வாதிட்டு வருகிறோம்.

உழவுக்குப் பயன்பட்ட மாடுகளைப் போற்றுகிறோம் என்று சொல்லிக் கொண்டு ஜல்லிக்கட்டு என்ற பெயரில் துன்புறுத்துவதைச் சுட்டிக்காட்டினால், முஸ்லிம்கள் குர்பானிக்காகவும், உணவுக்காகவும் மாடுகளைக் அறுக்கவில்லையா? என்ற அதிமேதாவித்தனமான ஒப்பீடுகள்! உழவுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செய்கிறோம் என்று சொல்லி எந்த முஸ்லிமும் குர்பானி கொடுக்க வில்லை. மாறாக,அதன் இறைச்சிக்காகவே என்று தெளிவாகச் சொல்லி விட்டே செய்கிறோம் . இந்த வேறுபாட்டை புரியாதவர்களே நகைப்பிற்குறியவர்கள்.

தருமிக்கு,

//"எல்லாமும்" உங்கள் புத்தகத்தில் இருக்கும்; அதில் இல்லாத விஷயங்களை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள்; பொருட்படுத்தக் கூடாது என்பது என்ன விவாதமென்று புரியவில்லை//

இணை வைத்தல் தவிர்த்து வாழ்க்கைக்கு அவசியமானதாகச் சொல்லப்படும் எதையும் இஸ்லாம் 'தகுந்த' காரணமின்றி தடுக்கவில்லை. இஸ்லாம் சொல்லும் 'தகுந்த' காரணங்கள் மற்றவர்களுக்கு 'தகாத'தாகப் பட்டால் அதனைத் தெளிவு படுத்த வேண்டியவர்கள் எதிர் தரப்பே என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

//ஒரு மாத நோன்பும், பெருநாளும், ஈகைத்திருநாளும் எந்த இஸ்லாமியை மதத் தொடர்பில்லா விஷயங்கள் என்றா கூறுகிறீர்கள்? பொங்கல் எந்த வித சமயச்சார்பில்லா திருநாள் என்பதுதான் என் விவாதம். //

நன்றி செலுத்துவதற்காக ஒரு பொதுவான திருநாள் தேவை என்றால் பொங்கலை விட பெருநாள் அனைவருக்கும் ஏற்றதாக பொங்கலைவிட நியாயமான காரணங்கள் இருக்கும் காரணத்தாலேயே நோன்பு+ பெருநாளை மேற்கோள் காட்டினேன். அதனைக் கொண்டாடுவது முஸ்லிம்கள் என்பது தவிர நியாயமான வேறுகாரணம் சொல்லி ஒதுக்க முடியாது. முடியும் எனில் அதே காரணம் பொங்கலுக்கு அதைவிடப் பொருந்தும்.

பொங்கல், சமய சார்பற்ற திருநாள் என்பதற்கு, நீங்களோ அல்லது அவ்வாறுச் சொல்லும் எவருமே சரியான ஆதாரத்தைக் காட்டவில்லை.ஒரே காரணம் பண்டைய தமிழன் கொண்டாடினான் என்பது மட்டுமே. தமிழனின் தெய்வ நம்பிக்கை இயற்கை வழிபாடாகவே இருந்து வந்திருக்கிறது என்பதை மறந்து விட்டு, இயற்கையுடன் தொடர்பு படுத்திக் கொண்டாடும் பொங்கலை, சமய சார்பற்றது என்பது சுத்தப் பேத்தல்.

பர்தா பற்றிய ஐயத்திற்கு,

//பெண்களைப் பார்த்து ஆண்கள் கெட்டுப் போவாங்க என்றால், ஆண்கள்தானே ஏதாவது செய்து கொள்ள வேண்டும்;அதைவிட்டு விட்டு..பாவம்..பெண்கள் அவர்களை ஏன் மூடணும்?//

பர்தா பற்றி பல பதிவுகளில் தெளிவாகச் சொல்லியும் விடாபிடியாக மனநிலையிலேயே அதனை எதிர்க்கிறீர்கள். உங்கள் கேள்வியை சற்று மாற்றிப்போட்டு எல்லாப் பெண்களும் பிறர் ரசிப்பதற்காகவே என்றால் நம் சகோதரியையோ அல்லது மனைவியையோ பிறர் ரசிக்கும் போது கோபப்படுவது ஏன்? ஈவ் டீசிங் என்ற சட்டம் இருப்பதுபோல்,ஆடம்-டீசிங் (?) என்று எங்காவது சட்டம் இருக்கிறதா?ஆணும்-பெண்ணும் சமமென்றால் பொதுக் கழிவறையில் ஏனய்யா ஆண்-பெண் பாகுபாடு? குறைந்த பட்சம் கழிப்பிடத்திலாவது சமத்துவமாக நடத்த முன்வரலாமே என்றால் வக்கிரக் கேள்விகள் என்பீர்கள், உங்கள் கேள்வியின் வக்கிரங்களை மறைத்துக் கொண்டு!

நாடோடிக்கு,

//நான் கூற வந்தது பொங்கலை முஸ்லீமகள் கொண்டாடக்கூடது என்று கூறிய பதிவு திரட்டியில் யாராலும் கவனிக்கப்படவில்லை. //

பொங்கலின் குறியீடுகள் இந்து மதச்சடங்குகளாகவே உள்ளது என்பதாலேயே முஸ்லிம்கள் கொண்டாட்ட ஏற்ற வகையில் இல்லை என்றேன். இதற்கு நியாயமான மறுப்புகள் உங்களிடம் இருந்தால் வரவேற்கிறேன். விடுத்து, "பொங்கலை ஒதுக்கி, அரேபியா கலாச்சாரத்தை ஏற்றுதான் நீங்கள் முஸ்லீம் என்று நிறுபிக்க வேண்டுமா?..அப்போ அரேபிய மொழி மட்டுமே அல்லாவுக்கு ஏற்ற மொழி என்பீர்கள்.அப்புறம் நீங்கள் எப்படி தமிழ்பேசும் தமிழராக முடியும்?அந்த நிலையில்தான் அல்லா இருக்கிறார் என்றால் அவர் எப்படி கடவுளாக முடியும்?.." என்றெல்லாம் ஜல்லியடித்து வீணான தருமித்தனம் செய்யாதீர்கள்.

இறுதியாக,

சூரியவழிபாடு, படையல், படைப்புகளை வணங்குதல்- இவையின்றி பொங்கலை அடையாளப் படுத்த முடியுமா? முடியுமெனில் முஸ்லிம்கள் பொங்கல் கொண்டாட எந்தத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை.

அன்புடன்,

வசந்தன்(Vasanthan) said...

தருமி, நீங்கள் இன்னும் இப்படிப் பதிவு போடுவதை விடவில்லையா?;-)
ஈழத்தில் கத்தோலிக்கர்கள் பொங்கல் கொண்டாடுகிறார்கள். அதுவும் தேவாலயத்தில் சிறப்புத் திருப்பலி வைத்து அங்கேயே பெரிய கிடாரத்தில் பொங்கிக் கொண்டாடுகிறார்கள்.
தேவாலயத்தில் பொங்கல் திருப்பலி வைப்பதும் பொங்குவதும்கூட, இப்பண்டிகை ஏதோவொரு விதத்தில் மதச்சாயத்திலிருந்து வெளிவரமுடியாததைக் காட்டுகிறதா என்று இப்போது யோசிக்கத் தோன்றுகிறது.
_______________
நாங்கள் சந்தித்துக் கனகாலமாச்சுப் போல கிடக்கு.

தருமி said...

வசந்தன்,
//நாங்கள் சந்தித்துக் கனகாலமாச்சுப் போல கிடக்கு. //

நாம சந்தித்துக் காலமாகிப் போச்சுன்னுதான் சொல்ல வர்ரீங்க; ஆமாங்க, ரொம்ப நாளாப் போச்சு.

//இப்படிப் பதிவு போடுவதை விடவில்லையா?;-) //

இல்லைங்க .. நாய் வால் :)

உங்கள் கடைசிச் சொற்றொடர் முழுமையாகப் புரியவில்லையே!

அடிக்கடி வந்து போய் இருங்கள்.

தருமி said...

நாடோடி,

//கழுதையாக கத்திய சிந்தாநதிக்கு யாரவது உதவி செய்தார்களா?..//
அப்படி சிந்தாநதிக்கு உதவிக்குப் போகாத நாடோடிக்கு மற்றவர்களைப் பற்றிப் பேச என்ன தகுதியிருக்கிறது என்றுதான் தெரியவில்லை.

//ஒரு காலத்தில் நடுநிலைமையிலிருந்தவர்கள் கூட ஏதவது ஒரு பக்கம் சாய்ந்திருக்ககூடும்//
முற்றிலும் உண்மை - எனக்கும் சேர்த்து!

//எனக்கு தெரிந்து அது போதும் என்று எண்ணுகிறேன்.//
ஆனால் இப்போது வந்துவிட்டீர்களே, இங்கு. வந்தது தப்பில்லை. வார்த்தைகளைச் சிதறாமல், சொல்லவந்ததை நேர்மையாக, நேராகச் சொல்லியிருக்க வேண்டும்; தவறிவிட்டீர்கள். தவறு.

உங்கள் கடைசிப் பத்தி என்ன சொல்கிறதென்று எனக்குப் புரியவில்லை. ஆனால் விளக்கம் எதுவும் தேவையில்லை.

தருமி said...

நாடோடி,

//கழுதையாக கத்திய சிந்தாநதிக்கு யாரவது உதவி செய்தார்களா?..//
அப்படி சிந்தாநதிக்கு உதவிக்குப் போகாத நாடோடிக்கு மற்றவர்களைப் பற்றிப் பேச என்ன தகுதியிருக்கிறது என்றுதான் தெரியவில்லை.

//ஒரு காலத்தில் நடுநிலைமையிலிருந்தவர்கள் கூட ஏதவது ஒரு பக்கம் சாய்ந்திருக்ககூடும்//
முற்றிலும் உண்மை - எனக்கும் சேர்த்து!

//எனக்கு தெரிந்து அது போதும் என்று எண்ணுகிறேன்.//
ஆனால் இப்போது வந்துவிட்டீர்களே, இங்கு. வந்தது தப்பில்லை. வார்த்தைகளைச் சிதறாமல், சொல்லவந்ததை நேர்மையாக, நேராகச் சொல்லியிருக்க வேண்டும்; தவறிவிட்டீர்கள். தவறு.

உங்கள் கடைசிப் பத்தி என்ன சொல்கிறதென்று எனக்குப் புரியவில்லை. ஆனால் விளக்கம் எதுவும் தேவையில்லை.

சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam said...


இங்கு
எனது கருத்துகள் உள்ளன.

தருமி said...

நல்லடியார்,

//ஜல்லியடித்து வீணான தருமித்தனம் செய்யாதீர்கள்.//
வேண்டாம் நல்லடியார், இது நன்றாக இல்லை. ஏன் இப்படி தேவையில்லாமல் வார்த்தைகளைச் சிந்துகிறீர்கள். யார் வேண்டுமானாலும் யாரைப்பற்றியும் இப்படி எழுதிவிட்டுப் போய்விடலாம். அதுவும் உங்களைப்போல் முகம் காண்பிக்காதவர்களுக்கு இதற்கென்று தனித் தைரியம்கூட எதுவும் தேவையில்லை. நீங்கள் என்னைப் பற்றிய அங்கதப் பதிவு போடும்பொழுதும் அதை ஒரு aberration என்றுதான் எடுத்துகொண்டு, கண்டு கொள்ளவில்லை. இப்போது இது அதிகம். தவறு செய்கிறீர்கள்.

//பொங்கலைவிட நியாயமான காரணங்கள் இருக்கும் காரணத்தாலேயே நோன்பு+ பெருநாளை ..//
மீண்டும் அதே கேள்வி: ஒரு மாத நோன்பும், பெருநாளும், ஈகைத்திருநாளும் எந்த இஸ்லாமியை மதத் தொடர்பில்லா விஷயங்கள்தானா?

//பொங்கல், சமய சார்பற்ற திருநாள் என்பதற்கு, நீங்களோ அல்லது அவ்வாறுச் சொல்லும் எவருமே சரியான ஆதாரத்தைக் காட்டவில்லை//
இதற்கும் பதில் சொல்லியுள்ளேன் பதிவில். அதோடு கேள்விகளும் அல்லவா வைத்துள்ளேன். காண மறுப்பவர்களை எதையுமே பார்க்க வைக்க முடியாது.

// உங்கள் கேள்வியை சற்று மாற்றிப்போட்டு எல்லாப் பெண்களும் பிறர் ரசிப்பதற்காகவே..//
எதை மாற்றிப் போட்டு இப்படி ஒரு பொருள் கொள்கிறீர்கள்? அப்பகுதியில் நான் எங்கே, என்ன கேள்வி கேட்டிருக்கிறேன்? //why the WHOLE OF NON-ISLAMIC people are not for பர்தா? // - இது மட்டுமே பர்தாவைப் பற்றி நானெழுதியதில் உள்ள என் ஒரே ஒரு கேள்வி. இதை எப்படி மாற்றிப் போட்டால் நீங்கள் சொல்லும் வக்கிர வாதம் வரும்? ஏதாவது சொல்லிவிட்டுப் போய்விடுவதா? பர்தா பற்றிக் கேள்வி எழுப்பினால் உங்களுக்குக் கோபம் வ்ரும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அதற்காக இப்படியா.. இல்லாததையும் பொல்லாததையும் கூறுவது. நீங்களாக ஏதாவது நான் சொன்னதாக சொல்லிவிடுவதா? இது சுத்த விதண்டாவாதம். (இது ஒரு சுத்த நல்லடியார்த்தனம் என்று கூறினால் நன்றாயிருக்குமா? ஒத்துக்கொள்வீர்களா?)

//பர்தா பற்றி பல பதிவுகளில் தெளிவாகச் சொல்லியும் விடாபிடியாக மனநிலையிலேயே அதனை எதிர்க்கிறீர்கள்.//
நிச்சயமாக. தெளிவாகச் சொல்லிவிட்டதாக நீங்களே கூறிக்கொண்டால்...? நான் சொன்னவைகளை நீங்கள் விடாப்பிடியாக எதிர்க்கிறீர்கள் அல்லவா? நாலு பேரிடம் கேட்டுப்பாருங்களேன் என்றேனே..

//ஆணும்-பெண்ணும் சமமென்றால் பொதுக் கழிவறையில் ஏனய்யா ஆண்-பெண் பாகுபாடு? //
என்னே புத்திசாலித்தனமான விவாதம்!!! இதற்கு அடுத்து என்னவெல்லாம் கூறுவீர்களோ?

//...உங்கள் கேள்வியின் வக்கிரங்களை மறைத்துக் கொண்டு!//

உங்கள் கழிவறை விவாதத்தையும் பர்தா பற்றிய உங்கள் பத்தியையும் மீண்டும் படித்து விட்டு, வக்கிரம் யார் மனசில் என்று நீங்களே தீர்ப்பெழுதிக் கொள்ளுங்கள்.

தருமி said...

சுரேஷ்,

மிகத் தெளிவான நீரோடை போன்ற விளக்கம். மிக்க மகிழ்ச்சி.

உங்கள் பதிவைப் படித்தபின் இரண்டு வகையில் மகிழ்ச்சி.
1. //இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த நிறுவனப்படுத்தப்பட்ட சனாதன மதங்கள் இந்த மண்ணில் இருந்தாலும், மக்கள் அனைவரும் அந்த மதங்களுக்குச் சென்றுவிடவில்லை.
ஆங்கில அரசால் மதமற்று ஒருவன் இருப்பது என்பதேயே சிந்திக்க இயலவில்லை. எல்லோருக்கும் சேர்த்து "இந்து" என்று பெயரிடப்பட்டது.
இப்படியாக, இந்து மதம் என்று ஒன்று உருவாகிவிட்டது.
பிரிட்டிஷ் காரர்களைத் திட்டாதீர்கள். அவர்கள் இல்லையென்றால் இந்து அடையாளமில்லை. //

இதே கருத்தை நான் என் சில பதிவுகளில் மீண்டும் மீண்டும் சொல்லி வந்துள்ளேன். அதே கருத்துக்கள் இன்னொருவரிடமிருந்தும் அதே அலைவரிசையில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

2. இதே கருத்தை நான் என் சில பதிவுகளில் சொல்லியபோதெல்லாம் எதிர்ப்பை மட்டுமே அதிகமாகச் சந்தித்தேன். இருவர் மட்டுமே என் பதிவுகளில் இந்தக் கருத்துக்கு ஒப்புதல் தந்தனர். உங்கள் பதிவுக்கு வந்துள்ள பின்னூட்டங்களைப் பார்த்த பிறகு இக்கருத்து பலருக்கும் ஒத்து வருவது கண்டு மிக்க சந்தோஷமாயிருக்கிறது. i was thinking that i was almost a 'voice in wilderness'. இல்லையென்று தெரிகிறது.

உங்கள் பதிவோடு நூற்றுக்கு நூறு ஒத்துப் போகிறேன்.

மிக்க நன்றி.

வஜ்ரா said...

அது ஏன் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளை மக்கள் சமூகப் பண்டிகை (secularized version) ஆகக் கொண்டாடவேண்டும்.

ஏன் கிருத்துமஸ், ரம்ஜான், ஈத் உல் ஃபித்ர், போன்ற பண்டிகைகளை சமூகப்பண்டிகைகளாகக் கொண்டாட முடியாதா ?

வாலண்டைன்ஸ் டே என்ற கிருத்தவத்தில் வேர் கொண்ட பண்டிகையை உலகெங்கும் கொண்டாடவில்லையா. அதை ஒரு சமூகப் பண்டிகையாகத்தானே கொண்டாடுகிறார்கள். மதப்பண்டிகையாகவா கொண்டாடுகிறார்கள் ?

அதே போல் பொங்கலையும் கிருத்தவரும் இஸுலாமியரும் கொண்டாடிவிட்டுப் போகவேண்டியது தான். அதற்காக இந்துக்களும் பொங்கலை "சமூகப் பண்டிகையாகவே பார்க்கவேண்டும்" மதக் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது, என்று வற்புருத்துவதனால் தான் முழு விவாதமுமே ஆரம்பமானது என்பது என் எண்ணம்.

அதிலும், இந்துக்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளக் கேவலமாக நினைக்கும் மார்க்ஸிஸ்டுகள் (சுய ஏளனச்சிந்தனைவியாதி பிடித்தவர்கள்) தங்கள் "மதச்சார்பின்மையினை" நிலைநிறுத்தி நல்ல பெயர் வாங்குவதற்காக கொஞ்சம் சத்தமாகவே தமிழர் திருநாளை (பொங்கலை) secularize செய்தனர். ஞாயமான எதிர்ப்பு தோன்றியது.


சென்ற வருடத்தைவிட இந்தவருடம் அதிகம் ! Newton's 3rd law வின் proof...உண்மை தானே...வேறு என்னவாகும்.

இது கவலைப்படவேண்டிய விஷயம் தான்.

இப்படி தங்கள் மதத்தின் தவறுகளைச் சுட்டித் திருத்தவேண்டிய சிந்தனாவாதிகள் மாற்று மதத்துப் விரிவாக்க அரசியலுக்கும் தங்களின் சுய விளம்பரத்துக்கும் விலை போய், cheap publicity தேடித் தங்களின் ஈகோ வைத் தீர்த்துக் கொண்டுள்ளனரே என்று வருத்தமாக இருக்கிறது. இதன் விளைவாக எதிர் சிந்தனைகள் தூண்டப்பட்டு வருவது தான் இந்த வருடம் அதிக எதிர்ப்பு என்பது என் எண்ணம்!

SurveySan said...

மிக அருமை.

பொங்கல் சாதி மதம் வித்யாசம் பாக்காம எல்லாரும் கொண்டாடினா நல்லாதான் இருக்கும்.
ஆனா, என் கிருஸ்/இஸ்லாமிய நண்பர்கள் யாரும் கொண்டாடுவதா தெரியல. அவ்ங்கள பொறுத்தவரை, பொங்கல், ஒரு இந்து பண்டிகை மாதிரிதான் காட்சி தெரியுது.
அவங்கள சொல்லியும் குத்தமில்ல.

ஆமாம், கிராமங்கள்ள எப்படி? கிருஸ்/இஸ்லாமிய மக்கள் கொண்டாடுவாங்களா?

என் புது ஆட்டையால், சில நல்ல பதிவுகள் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்து, படிக்காத ஆளுங்க படிக்க ஏதுவா இருக்கரது சந்தோஷம்.

தன்யனானேன்!

ஓகை said...

தருமியிடமிருந்து இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்க முடியாதென்றாலும் ஒரு நாத்திகரிடமிருந்து இப்படி ஒரு பதிவு வருவது எதிர்பார்க்கக் கூடியதுதான். பொங்கலை ஓர் இந்துக்கள் பண்டிகை அல்ல என்று சொல்ல தருமிக்கு அவசியம் இல்லை என்றாலும் ஒரு நாத்திகருக்கு அந்த அவசியம் கண்டிப்பாக இருக்கிறது.

ஜோவின் பதிவில் அவர் அனைவரையும் பொங்கல் கொண்டாட அழைக்கிறார். அவருடைய நோக்கம் தெளிவானதும் புரிந்துகொள்ளக் கூடியதும் வரவேற்கத் தக்கதுமாகும். ஆனால் ஒரே அலைவரிசையில் எழுதப்பட்ட தருமி மற்றும் சுரேஷின் பதிவுகள் பொங்கலை ஓர் இந்துக்கள் பண்டிகை அல்ல என்று நிறுவ முயல்கின்றன.

கிருஸ்துமஸ் கொண்டாடாத ஒரு கிருத்துவரைப் போல ரம்ஜானைக் கொண்டாடாத ஒரு முகமதியரைப் போல பொங்கலைக் கொண்டாடாத ஓர் இந்துவும் அரிதானவர். தமிழ்நாட்டு இந்துக்கள் அனைவராலும் தவறாமல் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை இந்துக்கள் பண்டிகையாக இல்லமல் எப்படி இருக்க முடியும்? வேற்றுமத அன்பர்கள் சிலராலும் நாத்திகர்கள் பலராலும் பொங்கல் கொண்டாடப்படுவதால் அது இந்துக்கள் பண்டிகை என்கிற அடையாளத்தை எப்படி இழந்து போகும்?

ஓணம் கேரள இந்துக்களின் பண்டிகை என்பது போல, துர்கா பூஜை வங்காள இந்துக்களின் பண்டிகை என்பது போல, பொங்கல் தமிழக இந்துக்களின் பண்டிகை என்பதில் என்ன குழப்பம் இருக்க முடியும்? சூரியன் இந்துக்களின் கடவுள் என்பது அவர்கள் சூரியனுக்குக் கட்டிய கோவில்களின் எண்ணிகையிலிருந்தே புலப்படும். சூரியன் இயற்கை என்பதனால் எத்தனை கிருத்துவர்களும் முகமதியர்களும் வழிபடுகிறார்கள்? இயற்கையை தெய்வமாக வழிபடும் சிந்து சமவெளி நாகரிகத் தொடர்ச்சியை இந்திய மதங்கள் ஒருபோதும் விட்டுவிடுவதில்லை. இந்தியாவின் இருபெரும் அந்நிய மதங்களான கிருத்துவத்திலும் இஸ்லாத்திலும் இயற்கை வழிபாட்டிற்கு எந்த வழியும் இருப்பதாக்த் தெரியவில்லை.

பொங்கலைக் கொண்டாட அது ஓர் இந்துக்கள் பண்டிகை என்கிற தயக்கம் தேவை இல்லை. இந்தியாவுக்குள் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் நுழைந்த கிருத்துவமும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நுழைந்த இஸ்லாமும் இந்நாட்டின் பூகோளத்துடன் உடன்படுகிற உணவு மற்றும் உடை வழக்கங்களை ஏற்றுக்கொள்ளத் தயங்காததைப் போலவே பொங்கலையும் அவர்கள் விரும்பும் முறையில் கொண்டாட எந்தவித தயக்கமும் தேவை இல்லை. இதற்காக பொங்கலை ஓர் இந்துக்கள் பண்டிகை இல்லை என்று உண்மைக்கு புறம்பான ஒன்றை நிறுவத் தேவை இல்லை.

தருமிக்குள்ளிருக்கும் நாத்திகரின் இந்தப் பதிவு என் கண்டனத்துகுறியதாகிறது.

தருமி said...

ஓகை,
long time .. no see.

ஒரு பழைய மாற்று மத நம்பிக்கை கொண்டவன் என்ற முறையிலும், இன்று மத நம்பிக்கையற்றவன் என்ற முறையிலும் நான் உங்கள் கருத்துக்கு எதிராய், 'இல்லை.. இல்லை.. பொங்கல் தமிழ்ச் சமுதாயத்தின் பண்டிகை நாள்தான்' என்பதையும், 'பொங்கல் இந்துக்களுக்கு மட்டுமேயுள்ள திருநாளல்ல' என்றும் அறுதியிட்டுச் சொல்வதை விடவும் மற்ற இந்து மத நண்பர்களே சொல்வது சரியாக இருக்கும்.

இருப்பினும், இரண்டு விஷயங்களை உங்கள் முன் வைக்கிறேன்:

1. அறுவடைத் திருநாள் என்பது ஓர் உலகளாவிய, பல்வேறு நாடுகளிலும் பல்வேறு விதத்தில் கொண்டாடப் படும் நாளாகும். அவ்விதமே நம் தமிழரால் கொண்டாடப் படும் நாள் பொங்கல். (மதம் இதில் இரண்டாம் பட்சம்தான்;வேண்டுமென்பவர்கள் சேர்த்துக் கொள்கிறார்கள் ஊறுகாய் போல்)

2. யார் யாரெல்லம் இந்துக்கள்; இந்துக்கள் என்பவரெல்லாம் யார் யார்? என்ற அடிப்படைக் கேள்வியை, ஆங்கிலேயர் காலத்து மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கிறித்துவ, இஸ்லாமிய மதம் சாராதவர்கள் எல்லோரும் "இந்துக்கள்" என்று ஒரு விரிந்து பரந்த குடைக்குள் கொண்டு வந்தது இன்னும் அப்படியேதான் கருதப்பட வேண்டுமா என்பதோடு பொருத்துகிறேன்.

இன்னும் இந்துக்களாய் இருக்கும் என் கிராமத்து உறவினர்கள் வீட்டில் இந்துச் சாமிகள் படங்கள் ஏதும் இருப்பதில்லை. அவர்கள் 'இந்துக்கள்'தானா?

எது எப்படியாயினும் இப்போது பிடியுங்கள்:

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்!

Thekkikattan|தெகா said...

போன வருஷம் படிச்ச பதிவிற்கு இந்த வருஷம் பின்னூட்டம் போடும் சேம்பேறிய்யா நான் :(.

இந்த லட்சனத்தில எங்கிருந்து வரப்போகிறது, எனக்கு மதத்தின் வால பிடிச்சி தொங்கிறதுக்கு தெம்பு. எங்கோ, எல்லாரும் நிம்மதியா அடிச்சிக்காம இது போன்ற நாட்களில் விழாக்களை சிறப்பாக கொண்டாடுங்கன்னு தான் சொல்லத் தோணுது.

ஒரு 'அருவடைத் திருநாளு'க்கு எதற்கு மதச் சாயம் தேவைப் படுகிறது? எல்லாம் தெரிந்த, படித்தவர்களே இது போன்ற பொது விழாக்களே மக்களை ஒன்றிணைத்து, இணைத்துக் கட்ட பயன் படுத்தத்தற்க ஒரு 'மனுநேசக் கயிறு' என்பதனை மறந்து பிரிவினை வாதம் பேசும் பொழுது, எனக்கு தோன்றச் செய்வது இன்னும் எவ்வளவு தொலைவு இருக்கிறது, இந்த அடிப்படை ஞானம் நமக்கு எட்ட - என்பதே அது.

Very Sad!

தென்றல் said...

ம்ம்.. இப்படிலாம் வேறயா! என்ன கொடுமையோ?

நல்லா தெளிவாதான சொல்லிருக்கீங்க, தருமி!

ஜோ போட்ட பதிவின் சுட்டி ....please!

/எனக்கு தோன்றச் செய்வது இன்னும் எவ்வளவு தொலைவு இருக்கிறது, இந்த அடிப்படை ஞானம் நமக்கு எட்ட - என்பதே அது.

Very Sad!
/

அத சொல்லுங்க, தெகா! ;(

தருமி அய்யா மற்றும் நண்பர்களுக்கு தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

ஓகை said...

தென்றல், ஜோ எழுதிய பதிவின் சுட்டி இதோ:

இப்பதிவு தொடர்பான என் மறுமொழிகளை இப்பதிவின் தொடர்ச்சியான தருமியின் இந்தப் பதிவில் பாருங்கள்.

Post a Comment