Monday, May 14, 2007

216. கலைஞரின் தவறு

டிஸ்கி:35 வருஷத்துக்கு முந்தி நடந்த விஷயம்; எல்லாமே அப்போது கேள்விப்பட்ட விஷயங்கள். அதை இப்போது நினைவுக்குக் கொண்டு வருவதில் எவ்வளவு சரியாக இருக்குமோ? நினைவிலிருந்து ...

எம்.ஜி.ஆர். அறுபதுகளின் கடைசியில் ஒருமுறை காமராஜரை ஒரு மேடையில் பாராட்டிப் பேசும்போது, "அண்ணா என் தலைவர்; காமராஜர் என் வழிகாட்டி" என்று பேசி கட்சித்தொண்டர்கள், தலைவர்களின் வெறுப்பைச் சம்பாதிக்க தலைவர்களுக்குள் அறிக்கைகள் வலம் வர, சரியாக அந்த சமயத்தில் வெளியான 'முகராசி' என்ற எம்.ஜி.ஆரின் படம் காத்தாட துவங்கி விட்டது. அரசியல் தலைவர்கள் அறிக்கைகளிலும், மாற்றான் தோட்டத்து மல்லிகை பற்றிய ஆராய்ச்சிகளில் இருக்க, படம் எடுத்தவர்கள் செய்த compromiseகளில் எம்.ஜி.ஆர். தான் சொன்னதை வாபஸ் வாங்க, தி.மு.க. தலைவர்கள் அவரை ஏற்றுக் கொள்ள (அப்போது அண்ணா உயிரோடு இருந்த நேரம்) படம் மறுபடி சூடுபிடித்தது.

எம்.ஜி.ஆர். ஒரு அரசியல்வாதியாக இருந்தமையால் நடிகராக ஜொலிக்கவும், நடிகராக ஜொலித்ததால் அரசியலில் செல்வாக்கும் கொண்டிருந்தார் - at least அந்த ஆரம்ப காலங்களில் என்ற என் கணக்கு இதில் நிரூபணமானது.

அதிலும் கட்சியும் அரசியலும் அவரது படங்களுக்கு மிக முக்கியமானதாக இருந்தன. அதனால்தான் 72-ல் கலைஞரோடு தகராறு முற்றும்போதும் தானாக கட்சியை விட்டு வெளிவந்தால் அது சரியான முடிவாக இராது என்று உறுதியாக இருந்தார். ஏற்கெனவே சூடுபட்ட பூனையாக இருந்தார். பட்ட சூட்டை நன்கு நினைவில் வைத்திருந்தார். ஆனால் தன்னைக் கட்சியை விட்டு தூக்க தேவையானவைகளை எல்லாம் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். முதலில் தனக்குப் பதவி தரவில்லை என்ற குற்றச்சாட்டு; அதன்பின் தான் பதவியை எதிர்பார்க்கவில்லை என்று ஒரு அறிக்கை; அதன்பின் கடைசியாக 'கணக்குக் கேட்டு' ஒரு அறிக்கை!

அப்போது கலைஞரோடு உடன் இருந்தவர்களில் 'எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து வெளியேற்றுங்கள்' என்று கலைஞருக்கு அறிவுரை கூறியவர் எங்கள் மதுரைக்காரர்தான் என்று பேச்சு. அதே மாதிரி வெளியேற்றினார் கலைஞர். அவரை அந்த இமாலயத் தப்பைச் செய்ய வைத்தவர் சில நாட்களில் தானும் வெளியேறி அ.தி.மு.க.வுக்குச் சென்றதும் நடந்தது. கட்சியிலிருந்து எம்.ஜி.ஆர். தானாக வெளியேறியிருந்தால் அனேகமாக இந்த அளவுக்கு, கடைசி மூச்சு வரை உறுதியாக அரசுக் கட்டிலில் இருந்ததுபோல் இருந்திருக்க முடியாது என்றே நினைக்கிறேன். அதோடு மட்டுமின்றி, அதற்குப் பிறகும் தன் 'வாரிசை'(?) இன்றளவும் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு strong force ஆக வைத்திருக்க முடிந்திருக்காது என்றே நினைக்கிறேன். It is all hypothetical; but still that is what i believe strongly. ம்ம்..ம்.. நடந்தது நடந்திருச்சி... இனி அதைப் பற்றிப் பேசி என்ன செய்ய..?


பி.கு.
எம்.ஜி.ஆரை வெளியேற்றியதும் நடந்தது போல் வைகோவை வெளியேற்றியதும் நடக்கலாம் என்று வெகு சிலர் நினைத்தார்கள்; அப்படி ஏதும் நடக்கவில்லை. மாறன்Jr.-க்கும் பெரிய திசைதிருப்பல்கள் ஏதும் நடக்காதுதான். ஆனாலும் யார்மீது முக்கியமாக நடவடிக்கை எடுக்கப் படும்; எடுக்கப் படவேண்டும் என்று பலரும் நினைத்தவர் மீது பாயாமல், கலைஞரின் கோபம் திசை மாறிவிட்டது புத்திர பாசத்தினால் மட்டும்தானா ... இல்லை என்னை மாதிரி ஆட்களுக்கும் புரியாத அரசியல் விஷயங்கள் நாட்டுக்குள், அல்லது குடும்பத்துக்குள் இருக்கிறதோ என்னவோ?

28 comments:

அருண்மொழி said...

இப்போதைக்கு கருணாநிதியின் ராஜதந்திரம் என்று நினைத்து வைப்போம். Hope it doesnt backfire.

மக்களுக்கு மதுரை தினகரன் எரிப்பு மறந்துவிடும்.

உடன்பிறப்புகளுக்கு மகிழ்ச்சி - கட்சிதான் முக்கியம் என்று முடிவு எடுத்துள்ளார்.

தலைகளுக்கு மிரட்டல் - இன்றைக்கு தயாநிதிக்கு நடந்தது நாளை யாருக்கும் நடக்கும்.

தயாநிதிக்கு ஆதரவு - சூதாட்ட விடுதி நடத்தியவர், ஒன்றும் அறியா சிறுவன், பதவிக்கு தகுதியில்லாதவர், கைமுறுக்கினார் எல்லாம் போய் - அவர் நல்லவர், வல்லவர், மிகத்திறமைசாலி என்று செய்திகள் வருகின்றன.

மன்னிப்பு - தயாநிதியின் அறிக்கையை பார்க்கவும். நாளை மன்னிப்பு கேட்டு விட்டால் - மீண்டும் மந்திரி....

உண்மைத்தமிழன் said...

தருமி ஸார்

முகராசி படம் 11.12.1966-ல் வெளி வந்தது. எம்ஜியாருக்கு ஜோடி ஜெயலலிதா. இதன் தயாரிப்பாளர் சின்னப்பத்தேவர்.

நீங்கள் எழுதியிருப்பதைப் போல் இந்தப் பட ரிலீஸின் போது காமராஜரை எம்ஜிஆர் வாழ்த்திப் பேச.. அது அதற்காகவே காத்துக் கொண்டிருந்த உடன்பிறப்புக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், எம்ஜிஆரின் கதர் ஆடை. கதர் ஆடை அப்போதிலிருந்தே காங்கிரஸ் கட்சியினருக்கு உடன் பிறந்த கவசகுண்டலம் போல காட்சியளித்ததால் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும்போது எனக்கு இஇந்த விஷயத்தில் காமராஜர்தான் வழிகாட்டி என்றார். அப்ப நாங்கள்லாம் என்றுதான் கலகக்கார உடன்பிறப்புகள் கிளம்பி விட்டார்களாம். இந்தப் படத்தைப் பற்றி இன்னொரு விஷயம்.. எண்ணி 14 நாட்களில் தயாரான திரைப்படம் இது என்கிறார்கள்.

//எம்.ஜி.ஆர். ஒரு அரசியல்வாதியாக இருந்தமையால் நடிகராக ஜொலிக்கவும், நடிகராக ஜொலித்ததால் அரசியலில் செல்வாக்கும் கொண்டிருந்தார் - at least அந்த ஆரம்ப காலங்களில் என்ற என் கணக்கு இதில் நிரூபணமானது.//

இதுவும் உண்மை. தன்னுடைய திரைப்படங்களில் ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லியே ஆக வேண்டும். பாடல் வரிகளில் தன் ரசிகர்கலைக் கவர வேண்டும் என்பதில் ஆரம்பக் காலத்திலிருந்தே தனிக்கவனம் செலுத்தி வந்திருக்கிறார். அதே போல் பிற்காலத்தில் ஆங்கிலப் படத்திற்கு நிகராக கனவுக் காட்சிகளை வைத்துத் தனது ரசிகைகளையும் கனவில் மிதக்க வைக்கவும் தயங்கவில்லை எம்ஜிஆர்.

தன்னுடைய பிம்பத்தை வெளியிலும், நிஜத்திலும் யாரிடமும் எம்.ஜி.ஆர் காட்டியதாகச் சரித்திரமே இல்லை. அதனால்தான் அவர் இறந்த பின்பே அவருடைய வாழ்க்கையில் இன்னும் மூன்று பெண்கள் இருந்தனர் என்று உடன் இருந்தவர்களால் எழுத முடிந்தது. அந்த வகையில் எம்ஜிஆர் கொடுத்து வைத்தவர்.

//அப்போது கலைஞரோடு உடன் இருந்தவர்களில் 'எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து வெளியேற்றுங்கள்' என்று கலைஞருக்கு அறிவுரை கூறியவர் எங்கள் மதுரைக்காரர்தான் என்று பேச்சு. அதே மாதிரி வெளியேற்றினார் கலைஞர். அவரை அந்த இமாலயத் தப்பைச் செய்ய வைத்தவர் சில நாட்களில் தானும் வெளியேறி அ.தி.மு.க.வுக்குச் சென்றதும் நடந்தது.//

அப்போதைய பத்திரிகைகளைப் படித்துப் பார்த்தால், இது பற்றி பல நூறு பேர் எழுதியவைகளை வைத்துப் பார்க்கும்போதும் மதுரை முத்து, நெடுஞ்செழியனிடம் சொல்லி அவர் மூலம் எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கும்படி வற்புறுத்தியிருக்கிறார். ஆனால் கட்சிப் பொதுக்குழுவில் பார்த்துக் கொள்ளலாம் என்று கலைஞர் தள்ளிப் போட.. அதற்குள் க.ராஜாராம், இராம.அரங்கண்ணல் ஆகியோர் சமரச முயற்சியில் ஈடுபட்டிருக்க.. நெடுஞ்செழியன் அவசரப்பட்டு கலைஞரின் கோபாலபுரம் வீட்டு போர்டிகோவில் நின்று பத்திரிகையாளர்களிடம் எம்.ஜி.ஆர். சஸ்பெண்ட் செய்தியை வெளியிட்டுவிட்டார். எப்படியிருந்தாலும் நெடுஞ்செழியன் தன் வாழ்க்கையில் செய்த ஒரே நல்ல காரியம் இதுதான். அதனால்தான் கடைசி காலம்வரைக்கும் சற்று மரியாதையாக வாழ்ந்தார் என்கிறார்கள் திராவிடப் பெரியவர்கள்.

//யார்மீது முக்கியமாக நடவடிக்கை எடுக்கப் படும்; எடுக்கப் படவேண்டும் என்று பலரும் நினைத்தவர் மீது பாயாமல், கலைஞரின் கோபம் திசை மாறிவிட்டது புத்திர பாசத்தினால் மட்டும்தானா ... இல்லை என்னை மாதிரி ஆட்களுக்கும் புரியாத அரசியல் விஷயங்கள் நாட்டுக்குள், அல்லது குடும்பத்துக்குள் இருக்கிறதோ என்னவோ?//

மதுரைக்காரரா இருந்துக்கிட்டும் இப்படித் தெரியாத மாதிரி கேக்குறீகளே ஸார்.. இது நியாயமா? தற்போதைய உலகின் நிஜ திருதராஷ்டிரன் நமது கலைஞர்தான் ஸார்.. ஜெயிக்கப் போவது நிச்சயம் குடும்பப் பாசமாகத்தான் இருக்கும். இந்நேரம் அவர் குடும்பத்தினரில் யாராவதோ, அல்லது கட்சிக்காரர்களாகவோ செத்திருந்தால் நான்கு நாளைக்கு முரசொலியில் பேப்பர் கிழியும் அளவுக்கு கவிதை எழுதித் தள்ளியிருப்பார். செத்தது யாரோ ஒரு பொதுஜனம்தானே.. அவருக்கென்ன கவலை?

என்ன சொல்றீங்க பேராசிரியரே..?

மு. சுந்தரமூர்த்தி said...

//மாறன்Jr.-க்கும் பெரிய திசைதிருப்பல்கள் ஏதும் நடக்காதுதான். ஆனாலும் யார்மீது முக்கியமாக நடவடிக்கை எடுக்கப் படும்; எடுக்கப் படவேண்டும் என்று பலரும் நினைத்தவர் மீது பாயாமல், கலைஞரின் கோபம் திசை மாறிவிட்டது//

தயாநிதி மாறன் திடுதிப்பென்று கட்சியின் மீது திணிக்கப்பட்டார். இப்போது திடீரென்று தூக்கியெறியப்படுகிறார். அழகிரியின் அராஜகம் மறக்கப்படுகிறது. மாறன்களின் "துரோகம்" முன்னிலைப்படுத்தப்படுகிறது. கலைஞரின் மீதுள்ள மரியாதை/பயத்தின் காரணமாக திமுக காரர்கள் இத்தகைய "ஜனநாயக" நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால் good luck என்று ஒதுங்கிப்போக வேண்டியது தான்.

இந்த கருத்துக்கணிப்பு தேவைதானா என்று கேட்பவர்கள், அதற்கு நாலைந்து நாட்களுக்கு முன் "ஜெயலலிதாவுக்கு பின் அதிமுகவுக்கு தலைமை ஏற்கப்போவது யார்" என்ற கருத்துக்கணிப்பைப் பற்றி மூச்சுவிடவில்லை. இரண்டு கருத்துக்கணிப்புகளின் கேள்விகளும் வித்தியாசமானவை. அதிமுக கருத்துக்கணிப்பில் "முதல் குடும்பத்தி"ன் பெயர் ஒன்று கூட இல்லை. திமுக விஷயத்தில் எல்லாமே "முதல் குடும்ப"த்துப் பெயர்கள். இங்கும் வேறு பெயர்களை குறிப்பிட்டிருந்தால் மதுரையோடு நின்ற கலவரம் தமிழ்நாடு முழுவதும் கலவரம் நடந்திருக்கும்.அதிமுக குட்டையைக் குழப்பிய போது இனித்தது. இப்போது கசக்கிறது. என்னத்த சொல்ல?

தருமி said...

அருண்மொழி,
Hope it doesnt backfire.


Has it not already?

தருமி said...

உண்மைத் தமிழன்,
என்னங்க உங்க வயசுக்கு (!) பழைய விஷயங்களை இப்படி புட்டு புட்டு வைக்கிறீங்க !!

// அந்த வகையில் எம்ஜிஆர் கொடுத்து வைத்தவர். //

எந்த வகையில் ??!!


//என்ன சொல்றீங்க ..? //

எல்லாமே நீங்களே விளங்கி, விளக்கி சொன்ன பிறகு நானென்ன சொல்ல மீதி இருக்கு ..?!

தருமி said...

மு.சுந்தரமூர்த்தி,

இந்தக் கணிப்புகளின் பதில் ஒன்றும் யாருக்கு தெரியாத விஷயங்களைச் சொல்லி விடவில்லையே! எல்லாமே 'இதான் எனக்குத் தெரியுமே!' வகைதான். இதில் இப்படி ராட்சச ஆட்டம் ஆட என்ன நேர்ந்தது; இதில் உ.பி.களுக்கு /'தலை'வர்களுக்கு ஏன் இப்படி ஒரு கோபம் என்றுதான் எனக்குப் புரியவில்லை ...
யார் மறுத்தாலும் இன்றைக்கு தி.மு.க்.வின் முகங்களாக மக்களுக்குத் தெரிந்தவர்கள் ஸ்டாலினும், தயாநிதியும்தான். தூக்கி வைத்தவர்களும் அவர்களே; தூக்கி எறிபவர்களும் அவர்களே! என்ன அரசியலோ, போங்க ..

உண்மைத்தமிழன் said...

///தருமி said...
உண்மைத் தமிழன்,
என்னங்க உங்க வயசுக்கு (!) பழைய விஷயங்களை இப்படி புட்டு புட்டு வைக்கிறீங்க !!

// அந்த வகையில் எம்ஜிஆர் கொடுத்து வைத்தவர். //

எந்த வகையில் ??!!

//என்ன சொல்றீங்க ..? //

எல்லாமே நீங்களே விளங்கி, விளக்கி சொன்ன பிறகு நானென்ன சொல்ல மீதி இருக்கு ..?!///

அந்த வகையில்-எந்த வகையில்?

தருமி ஸாருக்கு இருந்தாலும் இம்புட்டு குசும்பு இருக்கப்படாது. இது 'தனி மனித உரிமை' என்ற அர்த்தத்தில் அப்போதே பத்திரிகைகளால் மறக்கப்பட்டது.

ஒண்ணு சொல்ல மறந்திட்டேன் ஸார்.. நெடுஞ்செழியன் ஏன் அம்புட்டு அவசரப்பட்டு எம்ஜியார் சஸ்பெண்ட்டுன்னு பிரஸ¤க்கு மேட்டர் கொடுத்தார்ன்னா..

அவருக்கு எம்ஜியார் மேல அம்புட்டுக் கோபமாம்.. என்ன கோபம்னா?

அண்ணா இறந்தவுடனே சீனியர்ன்ற முறைல தனக்குத்தான் முதல்வர் பதவி கிடைச்சிருக்கணும். அதைக் கெடுத்தது எம்ஜிஆர்தான்.

அவர் தனக்கு ஆதரவு கொடுக்காம கருணாநிதிக்கு ஆதரவு கொடுத்ததாலதான் கருணாநிதி முதல்வராகி, இப்ப நான் அவரைப் பார்க்க மாடிப்படி ஏறி இறங்கிட்டிருக்கேன்னு மனசுக்குள்ள விக்கிரமாதித்தன் மாதிரி ஒரு வெறி இருந்துச்சாம்.

அதான் சமயம் பார்த்து போட்டுவிட்டுட்டாரு.

(இது டிப்ஸ் ஸார்.. டிப்ஸ்..)

தருமி said...

செம டிப்ஸ் உண்மைத் தமிழன்! ஏன்னா, மேயர் முத்துதான் முழுமுதல் காரணம்னு மக்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். perpetual #2 பற்றி நீங்கள் சொல்லித்தான் தெரியும்.
நன்றி.

இருந்தாலும் தெரியாத அந்த "'தனி மனித உரிமை' விஷயத்தை மறைக்கிறீங்களேன்னு கோபம்தான்.

யாராயிருக்கும் அந்த மூன்று பேர் .. ம்ம்..? ஒண்ணு 'அதா' இருக்கலாம்; அப்டின்னாலும் இன்னும் ரெண்டு இருக்கே ..!? ஒருவேளை 'அது' ரெண்டாவதா இருக்கலாம். அப்படியும் இன்னும் ஒண்ணு நிக்குதே கணக்கில ...

கோவி.கண்ணன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
தருமி ஸார்

முகராசி படம் 11.12.1966-ல் வெளி வந்தது. எம்ஜியாருக்கு ஜோடி ஜெயலலிதா. இதன் தயாரிப்பாளர் சின்னப்பத்தேவர்.
//


'சமீப'த்தில் 1966ல் ?
:))))

சொன்னது எல்லாமே 'சமீப'த்தில் நடந்த மாதிரி இருக்கு !

தருமி said...

Et tu கோவி.க.!?

உண்மைத்தமிழன் said...

தருமி ஸார்.. தமிழ்நாட்டுல இருக்குற பச்சைப்புள்ளைகளுக்குக் கூடத் தெரியும் ஸார்.. யார் அவுக மூணு பேருன்னு.. வேணும்னே என் வாயைப் புடுங்குறீங்களே..?

சரி.. சரி.. வந்தது வந்துட்டேன்.. சொல்றேன்.. ஆனா நான்தான் சொன்னேன்னு வேற யார்கிட்டேயும் சொல்லிராதீங்க..

ஏற்கெனவே எனக்கு நானே சூன்யம் வைச்சுக்கிட்டேன்னு வலையுலகத்துல ஒரே பரபரப்பு..

ஒண்ணு.. 'போய் வா நதியலையே'ன்னு பாடினவங்கதானாம்.. இரண்டாவது 'நாணமோ.. இன்னும் நாணமோ'ன்னு ஆடினவங்களாம்.. மூணாவது ஒரு எலெக்ஷன்ல ' இரண்டாவதை' எதிர்த்து நின்னு தோத்தவங்களாம்.. புரிஞ்சுச்சுங்களா?

இவுக எல்லாம் அவரோட 'நிஜ' வீட்டுக்காரம்மாவுக்கே அங்கீகாரமா தெள்ளத் தெளிவாத் தெரிஞ்சவங்கதானாம்.. தெரியாத இன்னொன்னு 'ஒருத்தர் மேல ஒருத்தர் சாயலாம்'னு பாடினவங்களாம்.. இனி நீங்களே கண்டுபிடிச்சுக்குங்க..

அப்பப்பா..

அடுத்தவங்க வீட்டு விஷயம்னா தமிழ்நாட்டுல எம்புட்டு பேரு வேலை வெட்டியையெல்லாம் விட்டுப்புட்டு ஆராய்ச்சி மேல ஆராய்ச்சி பண்றாங்க பாருங்க..

தருமி said...

//அடுத்தவங்க வீட்டு விஷயம்னா தமிழ்நாட்டுல எம்புட்டு பேரு வேலை வெட்டியையெல்லாம் விட்டுப்புட்டு ஆராய்ச்சி மேல ஆராய்ச்சி பண்றாங்க//

தப்புத்தான்...கேட்டிருக்கப் படாது. பழைய ஆளுகளுக்கு மட்டும் தெரிஞ்ச விஷயமா இருக்குமே, உங்கள மாதிரி 'சின்னப் புள்ளைகளுக்கு' எங்க தெரியப் போவுதுன்னு கேட்டுட்டேன். ஆனா, நீங்க என்னவிட பெருசு மாதிரிதான் எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கிறீங்க... அதுவும் இந்த மாதிரி விஷயங்களை ...!ஆச்சரியமாத்தான் இருக்கு..உங்கள நினச்சா..? நீங்க ...சரி, உடுங்க...

சாலிசம்பர் said...

தலை இருக்க வால் ஆடக் கூடாது. சன் டிவி தனது சேட்டைகளை வெளியே வைத்துக்கொண்டதோடு வீட்டிற்குள்ளும் காட்டிய போது வாலை நறுக்கி விட்டார்.கலைஞரின் இந்த செயல் சரியே.

ஆனால் கலைஞரின் தவறாக நீங்கள் சுட்டியிருப்பது , அதற்கு ஆயிரம் வியாக்கியானங்கள் சொன்னாலும், செரிக்க முடியவில்லை.

தருமி said...

ஜாஜா,
//தலை இருக்க வால் ஆடக் கூடாது.//

மதுரையில் ஆடினது என்னது? தலையா, காலா, வாலா?

G.Ragavan said...

தருமி, எப்பொழுது ஒன்று வளரும் தெரியுமா? நெருக்கடி கொடுக்கப்படும் பொழுதுதான். ஆதரவை விட எதிர்ப்பு ஒன்றை வளர்த்து விடும். அந்த வகையில் எம்.ஜி.ஆரை வளர்த்து விட்டது கருணாநிதி என்றே நினைக்கிறேன். இந்த ஜெயலலிதா....காணமப் போயிருக்க வேண்டிய இவங்க இந்த அளவுக்கு இன்னமும் அரசியல்ல இருக்கக் காரணம் கருணாநிதிதான். வைகோ விஷயத்துல கருணாநிதி தீவிர எதிர்ப்பெல்லாம் காட்டலை. காட்டியிருந்தா வளர்ந்திருப்பாரு. விஜயகாந்தப் பாருங்க...குடிகாரன்னு ரெண்டு பேரும் போட்டி போட்டுக்கிட்டு சொல்றாங்க. அவருக்கு ஓட்டு வந்து விழுகுது. இப்பிடித்தாங்க..கண்டுக்காம விட வேண்டியவங்கள...தேவையில்லாம எதிர்த்து வளர்த்து விடுறாங்க.

உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்குப் போஸ்டர் அடிக்கக் கூட விடாம தடுத்தாங்களாம். அப்பத்தான் பாண்டு (நகைச்சுவை நடிகர்) ஸ்டிக்கர் ஐடியா குடுத்தாராம் எம்.ஜி.ஆருக்கு. ஸ்டிக்கர் அடிச்சு கண்ட எடத்துலயும் ஒட்டி வெச்சுட்டாங்க. எல்லார் கையிலயும் பொழங்குச்சாம். படம் ஓடுன ஓட்டம் சொல்ல வேண்டியதில்லை. இன்னைக்கு அதத்தான் அழகிய தமிழ் மகன்னு ரீமேக் பண்றாங்க.

தயாநிதி விஷயத்துக்கு வருவோம். அதிமுக வருங்காலம் கருத்துக்கணிப்பு இனிச்சது. திமுக கருத்துக்கணிப்பு கசந்தது. அப்ப திமுகவுக்கு வேண்டியது ஒரு அடியாள் பத்திரிக்கை. அது நடக்கலைன்னு சொன்னதும்....வெட்டு குத்து. இப்ப எல்லாரும் தயாநிதி மாறனைப் பத்தித்தான் பேசுவாங்க. அழகிரி பத்தி பேச்சே இருக்காது. சிபிஐன்னு சொல்வாங்க. நம்மூர் சிபிஐ விசாரணை தெரியாதா....அட போங்க சார். அழகிரிதான் செஞ்சாருன்னு நம்ம கிட்ட ஆதாரமா இருக்கு. இருந்தாலும் இன்னமுமா விட்டு வெச்சிருப்பாங்க. blood is thicker than water. முந்தி தயாநிதியைப் பாராட்டுனவங்க இப்ப அவரத் துரோகின்னு சொல்றாங்க. திட்டுனவங்க அவரப் பாவம்னு சொல்றாங்க. கருணாநிதி சார்...you did it.

சாலிசம்பர் said...

//மதுரையில் ஆடினது என்னது? தலையா, காலா, வாலா?//

:)).மதுரையில் ஆடியதும் வால் தான்.வாலை வெட்டாமல் கிட்டத்தில் வைத்திருக்கும் கலைஞரின் செயலைத் தான் செரிக்க முடியவில்லை.

சாலிசம்பர் said...

தருமி ஐயா,கலைஞரின் சிந்திக்கும் வேகம் ஒளியை விட வேகமானது.அவருடைய நடவடிக்கைகள் என்றுமே தமிழினத்தை கேவலப்படுத்துவதாகவோ,காட்டிக்கொடுப்பதாகவோ இருந்ததில்லை.இந்த சூழ்நிலையில் அவருடைய சில நடவடிக்கைகள் விரும்பத்தக்கதாக இல்லை.இருந்தும் அவரை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.

தருமி said...

தி.மு.க.வின் அனுதாபிகள் என்றால் அவர்கள் என்ன செய்தாலும் நாம் கண்டுகொள்ள மாட்டோம் என்ற நினைப்புதானே?

இதெல்லாம் மக்களை மடையர்கள் என அவர்கள் நினைப்பதின் எதிரொலியே!

ஆனால் நாமும் அப்படித்தான் என்றுதான் இதுவரை இருந்து வருகிறோம்.

குத்த குத்த குனியும் நாம் தான் முட்டாள்கள்; அவ்ர்கள் புத்திசாலிகள்தான் .. :(

ஜோ/Joe said...

//தி.மு.க.வின் அனுதாபிகள் என்றால் அவர்கள் என்ன செய்தாலும் நாம் கண்டுகொள்ள மாட்டோம் என்ற நினைப்புதானே?

இதெல்லாம் மக்களை மடையர்கள் என அவர்கள் நினைப்பதின் எதிரொலியே!

ஆனால் நாமும் அப்படித்தான் என்றுதான் இதுவரை இருந்து வருகிறோம்.

குத்த குத்த குனியும் நாம் தான் முட்டாள்கள்; அவ்ர்கள் புத்திசாலிகள்தான் .. :(//

வழக்கம் போல வழிமொழிகிறேன் ..இந்த முறை வருத்ததோடு!

தருமி said...

//தருமி ஐயா,கலைஞரின் சிந்திக்கும் வேகம் ஒளியை விட வேகமானது.//
ஜாஜா, உங்களுக்கேகொஞ்சம் ஓவரா தெரியலை !

//இருந்தும் அவரை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை//
இந்த தடவை வேறு வழி பார்த்துவிட வேண்டியதுதான், ஜாஜா! என்ன, ஒரு சுயேட்சை ஆளுகூடவா கிடைக்காம போயிருவார்?!

தருமி said...

நன்றி, ஜோ. வருத்தம்தான்; என்ன செய்வது ..!

நாடோடி,
ஹா...ஹா... நல்ல ஜோக்.
நமக்குள்ள வச்சுக்குவோம், என்ன?!

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

என் மனக் குமுறலுக்கு ஒரு வடிகால் இந்த பதிவும் அதை தொடர்ந்த பின்னூட்டங்களும்.இன்னும் என்ன நடக்குமோ?

தருமி said...

பொன்னியின் செல்வன்,
"இப்போதைக்கு குமுறவாவது" ஆரம்பிப்போம்.

Narayanaswamy G said...

கனிமொழி ராஜ்யசபா எம்.பியாம்ல...............எனக்கு ட்ரீட் குடுங்க.....

Tulsi said...

என்னங்க தருமி,
உ.தமிழர் இப்படிச் சொல்லிட்டாரு!

//அதே போல் பிற்காலத்தில் ஆங்கிலப் படத்திற்கு நிகராக கனவுக்
காட்சிகளை வைத்துத் தனது ரசிகைகளையும் கனவில்
மிதக்க வைக்கவும் தயங்கவில்லை எம்ஜிஆர். //

எந்த ஆங்கிலப்படத்துலே ஜிகினா உடுப்போடவோ, இல்லாமலோ கனவு டூயட் இருக்கு?

தேடிக்கிட்டு இருக்கேன்

தருமி said...

துளசி,
ரொம்ப நாளாச்சு பார்த்து ..

//ஆங்கிலப் படத்திற்கு நிகராக ..//அப்டின்னவுடனே quality பத்தி நினச்சிட்டீங்களா? அதெல்லாம் இல்லை..வாத்தியார் இந்தமாதிரி சீன்களில் எப்படி ரொம்ப நெருக்கம்ம்ம்மா 'நடிப்பார்' என்பதை இப்படி சொல்லிவிட்டாரென நினைக்கிறேன்.

உண்மைத்தமிழன் said...

///Tulsi said...
என்னங்க தருமி,
உ.தமிழர் இப்படிச் சொல்லிட்டாரு!

//அதே போல் பிற்காலத்தில் ஆங்கிலப் படத்திற்கு நிகராக கனவுக்
காட்சிகளை வைத்துத் தனது ரசிகைகளையும் கனவில்
மிதக்க வைக்கவும் தயங்கவில்லை எம்ஜிஆர். //

எந்த ஆங்கிலப்படத்துலே ஜிகினா உடுப்போடவோ, இல்லாமலோ கனவு டூயட் இருக்கு?

தேடிக்கிட்டு இருக்கேன்///

துளசி மேடம்.. எம்.ஜி.ஆரைப் பத்தி நல்லாத் தெரிஞ்சு வைச்சுக்கிட்டு, அவர் படங்களையும் பார்த்துட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி கேக்குறீகளே.. சரி விடுங்க.. அதான் தருமி ஸார்.. கரீக்ட்டா சொல்லிட்டாரு பார்த்தீங்களா?

அவருக்கு எப்படித் தெரியும்ன்றீங்களா..? எல்லாம் பொறாமை டீச்சர்.. பொறாமை.. இப்ப தருமி ஸார் விடுற 'பொறாமை மூச்சு'க்கு மட்டும் சக்தி இருந்ததுன்னா திருமலை நாயக்கர் மஹாலே காணாமப் போயிரும். அம்புட்டுப் பொறாமைல இருக்கார்..

தருமி said...

இல்லீங்க உ.தமிழன். மத்தவங்களைப் பாத்து நீங்க சொன்ன மாதிரி காதில புகை வந்திருக்கலாம். ஆனால் இந்த மனுசனப் பாத்து வந்ததெல்லாம் சரியான எரிச்சல்தான் .

Post a Comment