Tuesday, May 22, 2007

217. குண்டு எல்லாம் எதற்கு...?***

camping at chennai ...

சென்னைக்கு வந்துவிட்டு தி.நகர் கடைவீதிகளில் ஒரு சுற்று சுற்றாவிட்டால் நாடும், நகரமும் நம்மை தூற்றாதா? அதனால் சென்ற வெள்ளிக் கிழமை ஒரு வழக்கமான "தி.நகர் சுற்றுலா"விற்கு மகளோடும், தங்கமணியோடும் சென்றேன். சென்று என்ன வாங்கினோம்; வாங்க மறந்தோம்; பேரம் செய்தோம் என்பதைச் சொல்ல அல்ல இந்தப் பதிவு. அங்கு பார்த்த ஒரு நிகழ்வைப் பற்றிய ஒன்றும், அதற்கு அடுத்த நாள் ஹைதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கும் உள்ள தொடர்பு பற்றியதாகும். ... இரண்டுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இந்த மாதிரி குண்டுவெடிப்புகள் நம் காஷ்மீரப் பிரச்சனைகளோடு தொடர்பு கொண்டவைகளாமே; வெளிநாட்டு பயங்கரவாதிகளின் சதித் திட்டமாமே .. அப்படித்தான் செய்தித்தாள்களில் செய்திகள் வருகின்றன. வெளிநாட்டு சதிகாரர்கள் இங்கு வந்து இந்த சதிகளையும், குண்டு வெடிப்புகளையும் செய்ய வேண்டுமா என்ன, 'நமக்கு நாமே' அதைச் செய்து கொள்ள முடியாதா என்ன? நம்மால் நிச்சயமாக முடியும் என்றுதான் அன்றைய தி.நகரில் பார்த்த ஒன்றால் எனக்குத் தோன்றியது.

தி.நகர் உஸ்மான் ரோட்டின் நெரிசல் யாருக்குத்தான் தெரியாது. அந்த நெரிசலான தெருவில் ஒரு பள்ளிவாசல். நாங்கள் போனதும் வெள்ளிக் கிழமை மதியம். தொழுகை நேரம் போலும். மசூதியின் தரைத் தளத்திலும், இரண்டுமாடிகளிலும் மக்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். இடம் பற்றாத காரணத்தால் தெருவில், அகலத்தில் ரோட்டின் பாதிவரையிலும், நீளத்தில் பள்ளிவாசலின் நீளத்தையும் தாண்டி, தரையில் செய்தித் தாள்களை விரித்து தொழுகையில் இருந்தனர். ஒரேமாதிரி அவர்கள் குனிந்து எழுந்து தொழுகை செய்வதைப் பார்த்துக்கொண்டு மக்கள் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களின் சூழல் மறந்த தொழுகை ஆச்சரியத்தைக் கொடுத்த அதே நேரம், எனக்குள் எனக்குப் பிடித்த சொலவடை ஒன்று நினவுக்கு வந்ததைத் தடுக்க முடியவில்லை. அது: 'அடுத்தவனுக்கு உபகாரமாக இல்லாவிட்டாலும், உபத்திரமாக இராதே.'

உள்ளதே இடைஞ்சல் மிகுந்த இந்தப் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து -அது வெள்ளிக் கிழமைகளில் மட்டுமா, எல்லா நாளுமா என்பது தெரியாது - தொழுகை நடத்துவது பொதுமக்களுக்கு இடைஞ்சல் என்பது யாருக்கும் தெரியாதா? தொழுகை செய்து புண்ணியம் தேடும் அந்த நேரத்தில் அடுத்தவருக்கு இடைஞ்சல் தருவதால் தொழுகையின் பயன் குறையாதா என்று தோன்றியது.

ஆனால் இந்த மாதிரி எண்ணமே தவறு என்பதே பலருக்கும் தோன்றும். ஏனெனில், மதம் முதலாவதாகவும், சாதி இரண்டாவது காரணியமாகவும், ஏழ்மை மூன்றாவது காரணமாகவும் நம் மக்களால் சட்டங்களைப் புறந்தள்ள பயன்படுத்தப் படுகின்றன. இப்படி தெருவை அடைத்து தொழுவதோ, நாட்கணக்கில் ரோட்டை அடைத்து கோயில் விழா எடுப்பதையோ, மார்கழி மாதத்தில் யார் தூங்கினால் என்ன, யாருக்கு என்ன இடைஞ்சல் என்றால் என்ன என்ற கவலை ஏதுமின்றி, இந்துக் கோவில்களில் காலை 4 மணிக்கே இறையஞ்சலிப் பாட்டுக்கள் என்ற பெயரில் அலறும் ஒலிபெருக்கிகளையோ, 'பாவிகளைத்' தெருமுனைகளிலெல்லாம் இருந்தோ, இல்லை ஞாயிற்றுக் கிழமை அல்லது ஏதோ ஒரு வார நாளில் அலறும் ஒலிபெருக்கிகளையோ, மசூதிகளிலிருந்து நாளைக்கு ஐந்துமுறை வரும் அழைப்பொலியையோ நாம் நம் சமூகத்தில் குறை சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னாலே தப்பு, அவன் அநியாயக்காரன் என்ற எண்ணம்தான் எல்லோர் மனதிலும் எழும். adjust செய்து போகணும் அப்டின்றது நல்ல தத்துவம்தான். ஆனால் மற்றவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கக் கூடாதே என்ற அடிப்படை எண்ணம் நம் எல்லோர் மனதிலும் ஏன் தப்பித் தவறியும் வருவதில்லை?

சரி .. சொல்ல வந்ததிலிருந்து கொஞ்சம் விலகி விட்டேன். அந்த இடையூறை யாரும் அதிகமாகக் கண்டு கொள்ளவில்லை; அதுவே எனக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது -பரவாயில்லை நம் மக்கள் adjust செய்து கொள்ளுகிறார்களே என்று. ஒரு தெரு ஓரக்கடைக்கு நாங்கள் செல்லும் சமயம் சரியாக தொழுகை முடிந்தது. எல்லோரும் கலையத் தொடங்கினார்கள். நாங்கள் நின்றிருந்த கடைக்குப் பக்கத்தில் ஒரு 'இசைக் கடை' இருந்தது. பாடல் குறுந்தகடுகள் விற்கும் கடை. அதிலிருந்து தொழுகை முடிந்ததும் பாட்டு சத்தம் கேட்டது. வடமொழியில் இறை வணக்கமோ, இல்லை 'மந்திரமோ' ஒரு பாடல் சத்தமாக ஒலிக்கத் தொடங்கியது. முதலில் எதற்கு இந்த தொழுகை முடிந்து மக்கள் புறப்படும்போது சரியாக இந்த மாற்று மதப் பாடல் என்றுதான் தோன்றியது. ஆனாலும், பரவாயில்லையே, தொழுகை முடியும் வரை பொறுத்திருந்து பிறகு இந்த மாதிரி பாடல்களைப் போடுகிறார்களே என்ற் கொஞ்சம் சந்தோஷப் பட்டேன்.

அதற்குள் நாங்கள் நின்றிருந்த கடைக்காரப் பையனும் தொழுகையிலிருந்து திரும்பி வந்தான். வரும்போதே அந்த இசைக்கடையைப் பார்த்து கொஞ்சம் முகம் கோணலாக வந்தது மாதிரி தோன்றியது. நானும் நம்மால் ஆன ஒரு மத நல்லிணக்க முயற்சியாக, அந்தப் பையனிடம், 'தொழுகை முடிவதற்கு வரை பொறுத்திருந்து அதன் பின் பாடல்களைப் போடுகிறார்களே பரவாயில்லை அல்லவா?' என்றேன். பையன், 'அட போங்க சார், தொழுகை நடக்கும்போதும் அவர்கள் எப்போதுமே பாட்டு, அதுவும் அவங்க சாமி பாட்டா போடுவாங்க சார். இதுவரை சொல்லியும் கேட்பதில்லை' என்றான். 'அடப் பாவமே' அப்டின்னுதான் சொல்ல முடிஞ்சுது.

இதில்,
- மதக் காரணங்களுக்காக சட்டம் எப்போதும் எங்கேயும் கண் மூடித் தூங்கப் போய்விடுவதென்பதற்காகக் கவலைப் படுவதா?
- மதத்தின் பெயரால் எந்த மதக்காரர்களும் செய்யும் சட்டமீறல்கள் எல்லாமே புனிதமாக்கப் பட வேண்டுமா?
- ஒருவருக்கொருவர் கொஞ்சம் adjust செய்து கொள்ளக் கூடாதா? அந்தப் பாட்டுக் கடைக்காரர்கள் ஒரு அரைமணி நேரம் பாட்டு போடாமல் இருந்தாலென்ன?

சாதிகளின் பெயரைச் சொல்லி விட்டால் இங்கே பல நியாயங்கள் தூங்கப் போய் விடுகின்றன. அடுத்து, எழ்மையின் பெயரிலும் பல நியாயங்கள் ஓரங்கட்டப் படுகின்றன. குடிசைகள், புறம்போக்கு வளைப்புகள் எல்லாமே ஏழ்மை என்னும் போர்வைக்குள் வைக்கப் பட்டால் நாம் எல்லோருமே 'அய்யோ பாவம்; அரசாங்கத்துக்கு இரக்கமே இல்லை' என்று கண்ணை மூடிக்கொண்டு தீர்ப்பளிக்கிறோம். பணக்காரர்கள் வளைத்துபோட்டு கல்லூரிகளும், கடைகளும் கட்டியதை இடித்துத் தள்ளும்போது சந்தோஷப் படும் பொதுமக்கள், குடிசைகளை சகட்டு மேனிக்குக் கட்டியபின் அவைகளை அகற்றும்போதுமட்டும் ஏன் எதிர்ப்பு காண்பித்து தங்கள் மனிதாபிமானத்தை அந்த நேரங்களில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்? இரண்டாவது தரப்பினருக்காக வருத்தம் கொள்வது வேறு; அவைகளை நியாயப் படுத்துவது வேறு.

சாதிகளையும், எழ்மையையும் விட வலிமை நம் நாட்டில் மதங்களுக்குக் கொடுக்கப் பட்டு விட்டன. அவைகள் sacred cows! ஒன்றும் செய்து விட முடியாது. கடவுளையே காப்பாற்றுவதை எப்போது நம் மத நம்பிக்கையாளர்கள் கைவிடுவார்கள்? அது எப்போதும் நடக்கப் போவதில்லை. அவரவர் கடவுளர்களை அந்தந்த நம்பிக்கையாளர்கள்தான் காக்கும் பணியைச் செய்கிறார்கள். இதில் எந்த மதக்காரர்களும் 'தாழ்ந்தவர்கள்' அல்ல; ஒருவருக்கொருவரோடு போட்டி போட்டுக்கொண்டு தங்கள் தங்கள் கடவுளர்களைக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். "எங்களைக் கும்பிடுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்; எங்களை நாங்களே 'எப்படியாவது' காப்பாற்றிக் கொள்கிறோம்' என்று அந்தக் கடவுளர்களா இந்த நம்பிக்கையாளர்களிடம் வந்து சொல்லப் போகிறார்கள்? அப்படியே சொன்னாலும்கூட கேட்கும் கூட்டமா இது?

நடப்புகளைப் பார்க்கும்போது நம்மை அழித்துக் கொள்ள வெளிநாட்டு தீவிரவாதிகள் வேண்டுமா என்ன என்றுதான் தோன்றுகிறது.

Thank god! I am an atheist !



*** பூங்காவில் இடம் பெற்ற பதிவு மே,21, 07

27 comments:

வடுவூர் குமார் said...

இந்த விடிகாலை ஒலிபரப்பை கட்டாயம் தடை செய்யவேண்டும்,அதுவும் குழல் மாதிரி உள்ள ஒலிப்பான் பொது இடங்களுக்கு ஏற்றதல்ல.
ஊருக்கு வரும் சம்யங்களில் போகும் ஒன்றிரண்டு திரை அரங்குகளில் வெளிப்படும் சத்தம் நம் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கேட்கும் திறனை இழந்துவருகிறார்களோ என்று சந்தேகம் வருகிறது.

Aruna Srinivasan said...

//"எங்களைக் கும்பிடுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்; எங்களை நாங்களே 'எப்படியாவது' காப்பாற்றிக் கொள்கிறோம்' என்று ..// //நடப்புகளைப் பார்க்கும்போது நம்மை அழித்துக் கொள்ள வெளிநாட்டு தீவிரவாதிகள் வேண்டுமா என்ன என்றுதான் தோன்றுகிறது.//

யதார்த்தமான சிந்தனை தருமி. Thank God, I am not an atheist :-) Our faith or non-faith may differ. But I agree with your genuine concern.

குட்டிபிசாசு said...

நல்ல ஆக்கம்!! வாழ்த்துக்கள்!!

PRABHU RAJADURAI said...

good post!

Sridhar V said...

//Thank god! I am an atheist !//

அப்படி எல்லாம் சீக்கிரமா விட்டுடவமா என்ன? :-))

போட்டியும் பொறாமையும் இல்லாமல் இணக்கமா இருக்கற இடங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி!

வித்யார்தி said...

இது போன்ற அத்துமீறல்கள் மிகவும் சர்வசாதாரணமாக நிகழ்கின்றன. நாம் நம்முடைய வீதியினிலியே இதை பார்க்கலாம். உதாரணமாக பக்கத்துவீட்டுக்காரர் தன்னுடைய வண்டியை எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நம் வீட்டு கேட்டினில் நிறுத்துவார். மார்க்கெட்டில் காய்கறிக் கடைக்காரர், கழிவுகளை தெருவினில் சகஜமாக கொட்டுவார். சாலை விதிகளை சற்றும் பின்பற்றாமல் நமக்கு முன்னால் செல்லும் ஆட்டோக்காரர் சரேலென்று ஒரு ரைட் டர்ன் எடுப்பார். சாலை விதிகளை மதிப்பதாக நினைத்துக்கொண்டு சரியாக STOP Line ல் வண்டியை நாம் நிறுத்த, நம்மை கடந்து சென்று நமக்கு முன்னதாக வேறொறுவர் வண்டிவை நிறுத்துவார். இப்படி இன்னும் பல.

பிரச்சனை நம்மிடம் உள்ளது. அடிப்படையில் நமக்கு civic sense வராதவரை இவைகளை தவிர்க்கமுடியாது.

khanba said...

//உள்ளதே இடைஞ்சல் மிகுந்த இந்தப் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து -அது வெள்ளிக் கிழமைகளில் மட்டுமா, எல்லா நாளுமா என்பது தெரியாது - தொழுகை நடத்துவது பொதுமக்களுக்கு இடைஞ்சல் என்பது யாருக்கும் தெரியாதா? தொழுகை செய்து புண்ணியம் தேடும் அந்த நேரத்தில் அடுத்தவருக்கு இடைஞ்சல் தருவதால் தொழுகையின் பயன் குறையாதா என்று தோன்றியது.
//

nanbarukku vanakkam.

oru vishayathai patri karuthu therivikkummun adanai patri aazhamaana arivu illaa vidinum adippadai arivaavadu irukka vaendum yaenbadu yennudaya thaazhmayaana karuthu.

velli kizhamai mattumalla yella naalum thozhugai nadathuvadu yaenbadu praarthanai niraivaeruvadarkoo alladu iraivanukku application pooduvadarkoo alla. maaraaga, thozhugai yaenbadu kadamai. iraimarai il manidaudaya padaippai patri koorumboodu "inda ulagai padaithadu manidanukkaaga. manidanai padaithadu yennai vanungu vadarkaaga" yaendru kurippida pattulladu.

\\அவர்களின் சூழல் மறந்த தொழுகை ஆச்சரியத்தைக் கொடுத்த அதே நேரம், எனக்குள் எனக்குப் பிடித்த சொலவடை ஒன்று நினவுக்கு வந்ததைத் தடுக்க முடியவில்லை. அது: 'அடுத்தவனுக்கு உபகாரமாக இல்லாவிட்டாலும், உபத்திரமாக இராதே.'
//

nabigal nayaaga thinudaya kootrai nanbarukku theriapadutha kadamai pattullaen.

"andai veetukkaararudaya kaatrai thadukkumalavukku unveettu suvatrai yezhuppuvadu kutramaagum"

"un veettil thayarikkapadum unavu porutkalai andai veetukkaaranukkum pagirndu kodu"

idu mattumalla,

saga manidanaduya paadugaappu matrum aravanaippai (yenda madathai saarndavargalaaga irundaalum sari alladu ungalai poola kadavul maruppaalargalaanaalum sari) patri sahaabaakkal(nabigaalrudaya thoozhargal) kurippidum pozhudu "yengai yengaludaya sothukkalil pagudi yezhudi vaikka sollividuvaargaloo yennum alavirkku yengalukku arivurai seyya ppattulladu" yenru kurippidugiraargal. aaga madangal yaenbadum maarkkam yenbadum neengal kurippiduvadu pool alla. anaithu madangalum maarkangalum manidanudaya nanmaikkae antri theemaikkaaga alla. saalai yil poogumboodu adirpadum vilangu paadikka pada koodaadu yendru 10 alladu 15 nimidam kaathirukkum neengal ungalai pool ulla saga manidanudaya nambikkaikaaga yaen oru 5 nimidam kaakkakoodaadu? alladu neengal selavitta anda 5 nimidathaal ungaludaya aluvalgal yaedaavadu paadikkapattadaa?

kadaisiyaaga ondru. neengal kadavul maaruppaalar yaenru yaarum ungalai kutram sollappoovadu illai. adupool kadavulai nambikkayaalargalai madikkaavittaalum sari avamaana paduthaadeergal yaenbadu yennudaya thaazhmayaana vaendu gool.

nanri,
vanakkam.
r.mohamed bilal,
UAE.

உண்மைத்தமிழன் said...

மும்பை கலவரம் நடந்ததற்கு முழு முதற்காரணமே இதே போன்று நடுரோட்டில் வந்து துண்டை விரித்து முஸ்லீம்கள் நமாஸ் செய்ததுதான். அப்போது ஏற்பட்ட ஒரு சிறு உரசலே அக்கொடுமைக்குக் காரணமாகிவிட்டது.

நம்முடைய இளைஞர்களிடையே சகிப்புத்தன்மை குறையத் தொடங்கிவிட்டது ஸார்.. நீ ஒரு அடி அடித்தால், நான் இரண்டு அடி அடிப்பேன் என்றுதான் யோசிக்கிறார்களே தவிர, அடிப்பது என்பது வன்முறை என்பதை அவர்கள் உணர்வதில்லை. கட்டுக்கோப்புகள் உடைந்து கொண்டே போகின்றன. இதுதான் விஷயம்.

சென்னையில் யாராவது இதைக் கட்டுப்படுத்தப் போனால் சிறுபான்மையினரை மிரட்டுகிறார்கள் என்பார்கள். நம்ம கடைக்காரனை மிரட்டினால் ஐயோ.. நம்மாளே நமக்கு உலை வைக்கிறான் என்பார்கள். அரசியல்வாதிகளோ இரண்டு பக்கமும் பேசிக் கொள்வார்கள். அவர்களுக்கு இரு பக்க ஓட்டுக்களும் வேண்டும். இதில் எங்கே அவர்கள் நீதி, நியாயம் பார்க்கப் போகிறார்கள்..?

என்னமோ போங்க ஸார்.. எல்லாத்தையும் பார்த்தா வெறுப்பாத்தான் இருக்கு..

தருமி said...

வடுவூர் குமார்,
நீங்கள் சொல்லும் threshold shifting in hearing ஏற்கென்வே நடந்திருச்சின்னு ஆராய்ச்சிகள் சொல்லுது.

//ஒலிபரப்பை கட்டாயம் தடை செய்யவேண்டும்,..//

'அவன நிப்பாட்ட சொல்லு; நான் நிப்பாட்டுறேன்' - இதுக்கென்ன சொல்லுவீங்க ..?

சட்டங்களும், அவைகளை நடத்தும் திறனுடைய அரசு அமைப்புகளும் மட்டுமே இதைச் சாதிக்க முடியும் என்பது என் கருத்து - சிங்கப்பூரில் செய்தது மாதிரி.

தருமி said...

அருணா ஸ்ரீனிவாசன்,
நம்பிக்கையாளர்களால்கூட இதை ஒப்புக்கொள்ள முடிவதே ஒரு நல்ல அறிகுறிதான். ஆனால், ஒரே ஒரு நம்பிக்கையாளர் (நீங்கள்தான்) சொல்வதை மட்டும் வைத்து சந்தோஷப் படமுடியுமா, படலாமாவென்று தெரியவில்லை. மற்ற நம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் பக்க நியாயம் மட்டுமே தெரியுமில்லையா ..?

தருமி said...

குட்டிப் பிசாசு, (பேரு நல்லா இருக்கு!)

நன்றி.

தருமி said...

பிரபு ராஜதுரை,
நன்றி.

அடுத்து நம்ம ஊர்ல ரொம்ப நாள கண்ணை, மனசை உறு(ரு)த்துகிற ஒரு விஷயம் எழுதணும்; எழுதியவுடன் சொல்றேன். ஏதாவது செய்ய முடியுமான்னு சொல்லணும்.

தருமி said...

ஸ்ரீதர் வெங்கட்,
//போட்டியும் பொறாமையும் இல்லாமல் இணக்கமா இருக்கற இடங்களும் இருக்கத்தான் செய்கின்றன. //

கேக்க சந்தோஷமா இருக்கு; இதுமாதிரி இடங்கள் பெருகட்டும்.

தருமி said...

அறியாதவன்,
அதான் சார், அதான் - civic sense -எனக்குப் பிடிச்ச வார்த்தை.. அது நம்ம சமூகத்தில வயசு, படிப்பு, ஸ்டேட்டஸ் இப்படி எந்த வித்தியாசமுமில்லாமல் யாருக்குமே இல்லாம் எப்படிங்க போயிரிச்சி..?
அதாங்க என் கேள்வி ..

தருமி said...

உண்மைத் தமிழன்,
//எல்லாத்தையும் பார்த்தா வெறுப்பாத்தான் இருக்கு.. //

ஏதோ வயசான ஆளுகளுக்கு வெறுப்பும் ஆதங்கமும் இருந்தால் பரவாயில்லைங்க. நீங்களும் அதில் சேரக் கூடாதுங்க .. அதுக்காகத்தானே இப்படி நான் எழுதுறது. சரிங்களா..?

Unknown said...

டெல்பின்,
எழுதியதில் கண்ட தவறைச் சுட்டிக் காண்பித்தால் நலமாயிருக்குமே .

தருமி said...

திருந்திக் கொள்ளவும், திருத்திக் கொள்ளவும்தான் மேலே உள்ள கேள்வியைக் கேட்டேன்.

தருமி aka sam

Anonymous said...

தருமி,


நல்ல பதிவு. இப்படி நடுரோட்டில் தொழுகை செய்வது ஒரு விதமான மதவிளம்பரம். பர்தா போடுவது, மீசையை மழித்து தாடியை நீளமாக வைத்துக் கொள்வது - இது போன்ற ஒருவிதமான அட்வர்டைஸ்மன்ட்.

உடனடியாக இந்து மதம் பற்றி கேள்வி எழும் என்பதால் அதையும் சொல்லிவிடுகிறேன். உச்சஸ்தானியில் லவுட் ஸ்பீக்கரில் அலறுவது குரானாக இருந்தாலும், எல்.ஆர்.ஈஸ்வரியாக இருந்தாலும் தவறுதான். விடியற்காலையில் கேட்கும் அபஸ்வரம் கோவிலிலிருந்து வந்தாலும், மசூதியிலிருந்து வந்தாலும் தவறே.

மற்ற மதத்துக்காரர்கள் அதே தவறைச் செய்யும்போதுதான் நமக்கும் புரிகிறது. என்ன செய்வது?

மும்பையில் இப்படித்தான் தெருவை மறித்து முஸ்லீம்கள் தொழுகை செய்வதைப் போல சிவசேனாக்காரர்கள் தெருவில் ட்ராஃபிக்கை நிறுத்தி ஆரத்தி செய்ய ஆரம்பித்தனர். உடனடியாக கலவரம் ஆரம்பித்தது.

லக்ஷ்மி said...

சொந்த மதத்துக்காரங்களை மாத்தப்பார்த்தால் நாத்திகப்பட்டமும், மற்ற மதத்துக்காரங்களை மாத்தப்பார்த்தால் மதவெறிங்கற பட்டமும் நிச்சயம். ஒவ்வொருத்தரும் தானா உணர்ந்தால்தான் விழிப்புணர்வு வரும். அரசாங்கமும் கொஞ்சம் கண்டிப்பு காட்டணும் இது போன்ற விஷயங்களில். நல்ல கருத்துக்கள கம்பிமேல் நடப்பது போன்ற ஜாக்கிரதை உணர்வோட சொல்லியிருக்கீங்க தருமி சார். பின்ன சும்மாவா உங்களை ஹெச்.எம் ஆக்கியிருக்காங்க நம்ம மக்கள்?

தருமி said...

லக்ஷ்மி,
//சொந்த மதத்துக்காரங்களை மாத்தப்பார்த்தால் நாத்திகப்பட்டமும், மற்ற மதத்துக்காரங்களை மாத்தப்பார்த்தால் மதவெறிங்கற பட்டமும் நிச்சயம். //

என் சொந்த அனுபவத்தில் பட்டறிந்ததை மிக் மிக அழகாக இரண்டே வரிகளில் சொல்லிச் சென்றுள்ளீர்கள்.
மிக்க நன்றி.

நந்தா said...

கொஞ்சம் கவனம் பிசகியிருந்தால் நீங்களும் மத வெறியர் என்று முத்திரைக் குத்தப் பட்டிருப்பீர்கள். உண்மையிலேயே மனிதம் தான் முக்கியம் என்று சொல்பவர்களால் ஒத்துக்கொள்ளப் படும் கருத்துக்கள்.

எவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன. நான் சாமி கும்பிடறேன். என்ன பொழப்பு இது?

koothanalluran said...

this 'pinnottam' is nothing related to your 'pathivu', just for info only. This is the same masjid site , 'instant pilliyar' came out from the earth and public opposed to build the masjid. After a long fight, muslims got this place for worship. Thuglak Cho vehemently opposed this masjid construction.

கூத்தாடி said...

தருமி
நல்ல ஆக்கம் .பூங்காவில் தான் படித்தேன் .சொன்னாப் புரியாது நம்மாளுங்களுக்கு ..அவங்க அவங்களுக்கு மதம் தான்
பெரியது .நீங்க சொன்ன கடைசி வாக்கியம் பிடித்தது

தருமி said...

நன்றி நந்தா

தருமி said...

koothanalluran,
நானும் உங்கள் பின்னூட்டத்துக்கு தொடர்பில்லா ஒரு விஷயம் கேட்கணும். ஐம்பது வருஷத்துக்கு முந்தி, என் பள்ளித்தோழன் ஒருவனுக்கு உங்கள் பெயரைத்தான் பட்டப் பெயராக வைத்துக் கூப்பிடுவோம். மதுரைக்கருகில் உள்ள ஓர் ஊர் அவன் சொந்த ஊர் என்று நினைவு. உங்களுடையதும் அந்த ஊர்ப் பெயர்தானா? மதுரைக்கருகில்தானா?

தருமி said...

கூத்தாடி,
//நீங்க சொன்ன கடைசி வாக்கியம் பிடித்தது //

எது?
தமிழில் சொன்னதா? ஆங்கிலத்தில் சொன்னதா? இரண்டாவதாயிருப்பின் அது ஒரு மேற்கோள்.

நல்லடியார் said...

//தி.நகர் உஸ்மான் ரோட்டின் நெரிசல் யாருக்குத்தான் தெரியாது. அந்த நெரிசலான தெருவில் ஒரு பள்ளிவாசல். நாங்கள் போனதும் வெள்ளிக் கிழமை மதியம். தொழுகை நேரம் போலும். மசூதியின் தரைத் தளத்திலும், இரண்டுமாடிகளிலும் மக்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். இடம் பற்றாத காரணத்தால் தெருவில், அகலத்தில் ரோட்டின் பாதிவரையிலும், நீளத்தில் பள்ளிவாசலின் நீளத்தையும் தாண்டி, தரையில் செய்தித் தாள்களை விரித்து தொழுகையில் இருந்தனர்.//

தருமி,

நெரிசலான தெரு, வெள்ளிக்கிழமை, தொழுகை நேரம், இடம் பற்றாத காரணத்தால் என்ற பல நியாயமான !? காரணங்களை நீங்களே அடுக்கி விட்டு அடுத்தவனுக்கு உபகாரமாக இல்லாவிட்டாலும், உபத்திரமாக இராதே என்பதில் என்ன நியாயம் இருக்கிறது சார்?

முஸ்லிம்களாவது அதிகபட்சம் 10 நிமிடங்கள் (மக்கள் ஷாப்பிங் செய்யும் பீக்அவர் மாலை 4-7 மணி எனக் கொண்டால் இருவேளை தொழுகைக்கு 20 நிமிடங்கள் மட்டுமே. வெள்ளிக் கிழமை நன்பகல் தொழுகைக்கு 30 நி்மிடங்கள்) ஜனநாயக,மதசார்பற்ற ?! நம்நாட்டில் பொது இடத்தில் தொழுகிறார்கள். ஆனால் நிரந்தர இடையூராக சாலையை அடைத்துக் கொண்டு வீற்றிருக்கும் தெருப்பிள்ளையார்,உண்டியல்களும், தாரை தப்பட்டையுடன் சிவலோகம் செல்லும் சவ ஊர்வலங்கள் பற்றி உங்கள் நாத்திகம் என்ன சொல்கிறது? சாமி சிலைகளுக்குப் போட்டியாக நிற்கும் பகுத்தறிவுச் சிலைகள் பற்றியும் சொல்லுங்களேன்.

எனது பதிவிலும் சில கேள்விகள் இருக்கலாம். பொடிநடையா வந்து வாசித்து செல்லுங்கள்.

அன்புடன்,

Post a Comment