Monday, February 25, 2008

251. கனா காணும் காலங்கள்

ரொம்ப நாளா நினச்சிக்கிட்டு இருந்த விஷயம். தமிழ் சின்னத் திரை வரலாற்றிலேயே ஒரு வித்தியாசமான நீள்தொடர் என்றால் அது நிச்சயமாக கனா காணும் காலங்கள்தான். அதைப் பற்றி எழுதணும்னு நினைச்சிக்கிட்டே இருந்தேன். அப்புறம் என்னங்க, பயங்கரமான மாமியார் இல்லாத சீரியல் என்றாலே அது வித்தியாசமான விஷயம்தானே! வில்லன், வில்லி, தினமும் நடிப்பவர்களுக்கு ஒரு 'லார்ஜ்' கிளிசரின், பார்ப்பவர்களுக்கு ஒரு 'ஸ்மால்' அளவு கண்ணீர் என்றில்லாமல், அட, அதெல்லாம் விடவும் ஒரு கதாநாயகன், கதாநாயகி என்று கூட இல்லாமல் தமிழில் ஒரு நீள்தொடர் என்றால் "தமிழ் சின்னத் திரை வரலாற்றிலேயே ஒரு வித்தியாசமான நீள்தொடர்" என்பது சரிதானே.

அதெல்லாவற்றையும் விடவும், இதில் வரும் ஆசிரியர்கள் உண்மையான ஆசிரியர்கள் போலவே பெரும்பாலும் வருவது என்னே ஆறுதல். காப்ரியல் ஒரு ஸ்ட்ரிக்டான ஆசிரியர் என்றால், ஜீவா (ஆஹா! கதையில் அவர் பெயர் மறந்து போச்சே!) ஒரு இளமையான, நல்ல ஆசிரியராக வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜீவாவின் பாத்திரப் படைப்பு அழகு; ஒரு நல்ல ஆசிரியரின் அணுகுமுறையை நன்றாக இயக்குனர் காட்டியுள்ளார்; அதை ஜீவா நன்றாகச் செய்து வருகிறார். உடன் வேலை பார்ப்பதாக ஓர் இளம் ஆசிரியைக் காட்டியதும் கொஞ்சம் பயந்தேன். நல்ல வேளை அவர்களுக்குள் காதல் ஏதும் வந்துவிடவில்லை! பி.டி. மாஸ்டரையும், தமிழ் ஆசிரியரையும் கொஞ்சம் நகைச்சுவையாகக் காட்டினாலும் தமிழ்ப்படங்களில் வருவது போல கிறுக்குத்தனம் ஏதுமில்லாமல் இருக்கிறார்கள். நல்ல ஒரு 'கரஸ்' (Correpsondent) - smart, decent and very natural! ராகவியின் குடும்பம், நண்பர்களின் அப்பா- அம்மாவை நண்பர்கள் எல்லோருமே அப்பா-அம்மா என்று கூப்பிடுவது போன்ற நல்ல விஷயங்கள் இளையவர்களுக்குப் போய்ச்சேரும் என்றே நம்புகிறேன்.

பள்ளி மாணவர்கள் நடுவில் இருக்கக் கூடிய வழக்கமான கலகலப்பு, அவர்களின் நட்பின் ஆழங்கள் எல்லாமே அழகாகக் காட்டப் படுகின்றன. அதோடு அந்த வயதில் வரும் பால் ஈர்ப்பு என்பதே ஒரு infatuation என்பதாக இதுவரை நன்கு காட்டிக் கொண்டு வருகிறார் இயக்குனர் ராஜா (ஆமா, அவர் யாரு, என்ன, அப்டின்னு யாருக்காவது தெரியுமா?) அதை இன்னும் நன்றாகக் காட்டிச் செல்வார் என்று நம்புகிறேன். அந்த infatuation-ஆல் எப்படி சில இளம் மாணவர்கள் அலைக்கழிக்கப் படுவார்கள்; அதில் அவர்கள் எடுக்கும் தவறான முடிவுகள் எப்படி அவர்களைச் சுற்றியுள்ளோர்களைத் துன்புறுத்தக் கூடும் என்பதை பச்சை பாத்திரம் மூலம் நன்கு காட்டியுள்ளார். இதே போன்ற காட்சியமைப்புகள் தொடரவேண்டும். சினிமாத்தனம் உள்ளே இதுவரை அதிகமில்லை; இப்படியே செல்ல வேண்டும்.

இதுவரை எடுத்தது கூட பெரிய விஷயமில்லை. இனியும் நட்பின் பெருமை, வந்துபோகக் கூடிய infatuation-லிருந்து அவர்கள் எப்படி விடுபடவேண்டும், இந்த வயதில் படிப்பில் காட்ட வேண்டிய அக்கறை, தாய்தகப்பனுக்கு பிள்ளைகள் ஆற்ற வேண்டியது என்ன என்பது,
எப்படி பள்ளியிறுதி வகுப்புகளில் அவர்கள் பெரும் மதிப்பெண்கள் அவர்கள் வாழ்க்கையையே எப்படி திசை மாற்றும் என்பது - இது போன்ற postive approach இந்த நெடுந்தொடரில் இடம் பெறும் என்று நம்புகிறேன்; ஆசைப் படுகிறேன். ஏனெனில் இளம் வயதினருக்கு இத்தொடர் பிடித்திருப்பதுபோல் தெரிகிறது. நல்ல விஷயங்களை இத்தொடர்மூலம் அவர்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை இயக்குனர் -இதுவரை நன்கு செய்து வந்துள்ளது போல் - தொடர்ந்து செய்வார் என நம்புகிறேன்; ஆசைப் படுகிறேன்.

குற்றம் கூற வேண்டுமானால் அடிக்கடி வசனங்கள் மூலம் இது ஒரு நீள்தொடர் என்பதை நினைவு படுத்துவது போல், 'இந்த எபிசோடுக்கு இது போதும்' என்பது போன்ற வசனங்களைத் தவிர்க்கலாம். சிரைத்து முற்றிய முகம் உள்ள 'பசங்களை'யும், இடுப்பகன்ற 'சிறுமிகளை'யும் நடிக்கத் தேர்ந்தெடுத்தற்குப் பதில் உண்மையான அந்தந்த வயசுப் பசங்களை அறிமுகப் படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. Harry Potter படத்தில் வரும் பள்ளிப் பசங்களுக்கு அந்த வயசுப் பசங்களைத்தானே நடிக்க வைத்துள்ளார்கள். இங்கும் அதேபோல் சின்ன வயசுப் பசங்களையே எடுத்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

பொதுவாகவே இப்போது நம் தமிழ் டி.வி. சேனல்களில் எனக்குப் பிடித்த சில நிகழ்ச்சிகளைத் தருவது விஜய். சன் டிவி புதிய கலைஞர் டிவி மாதிரியும், கலைஞர் டிவி பழைய சன் டிவி மாதிரியும் உள்ளன்; சொந்த சரக்கு என்பதே கிஞ்சித்தும் இல்லை. பாவம்தான்!

30 comments:

G.Ragavan said...

தருமி சார், தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களையெல்லாம் பாக்குறதில்லை இப்ப. தொலைக்காட்சியே பாக்குறதில்லை. நீங்க சொல்றதப் பாத்தா நாடகம் நல்லாருக்கும் போல.

சன் டீவி தொடங்குனப்ப வந்த பல நாடகங்கள் அருமையானவை. அதே மாதிரி 88-91 வரையில் வந்த பல சென்னைத் தொலைக்காட்சி நாடகங்களும் அருமையானவை. அவைகளின் டிவிடிகளெல்லாம் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறேன். ரொம்பச் சின்ன வயதில் பார்த்தவை. அப்பொழுதே ஈர்த்தவை இப்பொழுதும் ஈர்க்கும் என்றே நம்புகிறேன். இந்தியில் கூட அப்பொழுது பல தொடர்கள் ஈர்த்தன. நூபுர், இந்திரதனுஷ், பாரத் ஏக் கோஜ் போன்ற நாடகங்கள் உண்மையிலேயே மிக அருமையானவை. பின்னாளில் அவை ஸ்ரீமான் ஸ்ரீமதி என்று சீரழிந்து போனது வேறு விஷயம்.

Divya said...

\\ ஜீவா (ஆஹா! கதையில் அவர் பெயர் மறந்து போச்சே!) \\

கதையிலும் அவர் பெயர் 'ஜீவா' சார் தான்!

நல்லாயிருக்கு பதிவு!

துளசி கோபால் said...

// சிரைத்து முற்றிய முகம் உள்ள 'பசங்களை'யும், இடுப்பகன்ற 'சிறுமிகளை'யும் நடிக்கத் தேர்ந்தெடுத்தற்குப் பதில் உண்மையான அந்தந்த வயசுப் பசங்களை அறிமுகப் படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.//

நீங்க ரொம்பக் கவனிச்சுப் பார்த்தமாதிரி இருக்கு! வகுப்பைச் சொன்னேன்!!

Narayanaswamy G said...

//சிரைத்து முற்றிய முகம் உள்ள 'பசங்களை'யும், இடுப்பகன்ற 'சிறுமிகளை'யும் நடிக்கத் தேர்ந்தெடுத்தற்குப் பதில் உண்மையான அந்தந்த வயசுப் பசங்களை அறிமுகப் படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது//

அக்மார்க் மதுரை நக்கல்!

Unknown said...

கண்டிப்பாக இந்தத் தொடர், வித்தியாசமானதுதான். வழக்கமான வில்லன் வில்லித்தனங்கள் இல்லாமல், கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.

தருமி அண்ணா (அய்யான்னா, நான் ரொம்ப சின்னவனாத் தெரியுறேன் :)), 'மதுர' யும் கொஞ்சம் பரவாயில்லையே... முழுக்க மண்மணம் மாறாம வருதான்னு கொஞ்சம் விமர்சியுங்களேன்? (எனக்கு அந்த தலைப்புப் பாடல் பிடிக்கும். எங்கள் 2 வயது வாண்டுக்கும்) :)

வால்பையன் said...

சீரியல் பார்க்கறதே கொஞ்சம் ஓவர். அதற்கு விமர்சனம் வேறயா!!
நீங்கள் பார்க்காத வகுப்பு காமெடியா அதில் காட்ட போகிறார்கள்.
உங்கள் கல்லூரி காமெடியை வைத்து பத்து தொடர் எடுக்கலாமே.!

வால்பையன்

தருமி said...

//தொலைக்காட்சியே பாக்குறதில்லை//

அப்ப அங்க எப்படித்தான் நேரம் போகுது? பாவம் தான் நீங்க :(

நீங்க சொன்ன நாடகங்கள் ஏதும் பார்த்ததில்லையென நினைக்கிறேன். சென்னைத் தொலைக்காட்சி நாடகங்களும் அருமையானவை என்று சொல்வது சும்மா ஜோக்குதானே !

தருமி said...

நன்றி திவ்யா.

தருமி said...

//வகுப்பைச் சொன்னேன்!!//

நாமல்லாம் டீச்சர்கள் இல்லியா... அதையெல்லாம் ஒழுங்கா கவனிச்சிப் பார்க்கணுமா இல்லியா...?

தருமி said...

கடப்ஸ்,
அப்டியா சொல்றீங்க...?
உள்ளதுதானே..

தருமி said...

தம்பி தஞ்சாவூரான்,
கொஞ்சம் மனச படிச்சிட்டேங்களே அய்யா! அதப் பத்தியும் கொஞ்சம் எழுதிடலாம்னு நினச்சேன், அதுக்குப் பிறகு, அது ஒருமாதிரியா 'மீனாட்சி புராணமா' ஆயிடுமோன்னு பயந்துதான் எழுதலை. மீனாட்சி கண்ணுக்கு அடுத்து, நம்ம வண்டு, பட்டாசு, ரிக்கார்டு, துரைப்பாண்டி எல்லோரும் அப்படியே நம்ம செல்லூர் ஆளுகதான். பேச்சும் சுத்தமா அந்த ஏரியா பேச்சுத்தான்.
ஆட்கள் செலக்ஷன் ரொம்ப சரியா செஞ்சிருக்காரு இயக்குனர், நம்ம பையன். ( நம்ம கல்லூரி பையன் இல்லியா!)

தருமி said...

வாலு,
//உங்கள் கல்லூரி காமெடியை வைத்து ...//

என்னய வச்சி காமெடி கீமெடி பண்ணலையே ..?

உண்மைத்தமிழன் said...

தருமி ஐயா,

இத்தொடர்தான் இன்றைய தேதியில் விஜய் டிவியில் டாப் ரேட்டிங்கில் தொடர்ந்து பல மாதங்களாக வந்து கொண்டிருக்கிறது.

அனைத்து டிவிக்களிலும் கர்ச்சீப் நனையும் அளவுக்குத் தாய்க்குலங்களை அழுக வைத்துக் கொண்டிருக்கும்போது வித்தியாசமாக மாணவர்களை குறிவைத்து கதைக்களம் துவக்கப்பட்டு நாளடைவில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான முக்கோண உறவில் பிணைக்கப்பட்டுவிட்டதால் தங்களைப் போன்றவர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

//அதோடு அந்த வயதில் வரும் பால் ஈர்ப்பு என்பதே ஒரு infatuation என்பதாக இதுவரை நன்கு காட்டிக் கொண்டு வருகிறார் இயக்குனர் ராஜா (ஆமா, அவர் யாரு, என்ன, அப்டின்னு யாருக்காவது தெரியுமா?)//

இந்த இயக்குநரின் நிஜப் பெயர் குமாரராஜா. இவர் ஏற்கெனவே 'காவ்யாஞ்சலி', 'அம்மு', 'என் தோழி-என் மனைவி-என் காதலி', 'காத்து கருப்பு' ஆகிய தொடர்களை இயக்கியவர்.

தருமி said...

உண்மைத் தமிழன்,
தகவல்களுக்கு நன்றி.

குமாரராஜா அவ்வளவு தொடர்கள் இயக்கியுள்ளாரா? நீங்கள் சொன்ன தொடர்கள் பார்த்ததில்லை.
அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள் (உங்களுக்கு ரொம்ப தெரிஞ்சவர் மாதிரி இருந்ததால்...)

செல்வம் said...

வணக்கம் தருமி...
இந்த தொடரின் ஆரம்ப இயக்குநர் பிரபுகண்ணா என்பவர்.கதை வசனம் பிரம்மா என்பவர்.

இப்போது இருவருமே இல்லாத நிலையில் தொடர் கொஞ்சம் நொண்டியடிக்கத்தான் செய்கிறது.

உ.ம்(பச்சை உயிர் பிழைத்த காட்சியைக் குழந்தைத்தனமாக கையாண்டிருப்பது).இயக்குநர் ராஜா timefரம் ல் இருந்தவர்.பிரபுகண்ணா இல்லாத நிலையில் அவர் இயக்கி வருகிறார்.

ஆனால் நாட‌க‌ம் மிக‌ச்சிற‌ந்த‌து என்ப‌தில் மாற்று க‌ருத்தே இல்லை.என்னுடைய‌ விம‌ர்ச‌ன‌ம் கீழே

http://kadalaiyur.blogspot.com/2008/01/blog-post_23.html

நித்யன் said...

//

பொதுவாகவே இப்போது நம் தமிழ் டி.வி. சேனல்களில் எனக்குப் பிடித்த சில நிகழ்ச்சிகளைத் தருவது விஜய். சன் டிவி புதிய கலைஞர் டிவி மாதிரியும், கலைஞர் டிவி பழைய சன் டிவி மாதிரியும் உள்ளன; சொந்த சரக்கு என்பதே கிஞ்சித்தும் இல்லை. பாவம்தான்!


//

அப்படியே வழிமொழிகிறேன்...

நித்யகுமாரன்

சிறில் அலெக்ஸ் said...

புதிய களங்களில் சொல்வதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன.. இருந்தாலும் அதே அரைச்ச மாவையே அரைச்சு சீரியல் போடுராங்க. இப்ப சன்லேயூம் கல்விச்சாலையை முன்வைத்த ஒரு சீரியல் வரப் போகுது.

விஜய் சிட்டி ரசிகர்களுக்கு தீனி போடுகிறது.. மக்கள் நிகழ்சிகள் சில ரெம்ப நல்லாயிருந்துச்சு. நான் பாக்கும்போது அப்பத்தான் துவங்கியிருந்தாங்க. வீரப்பன் தொடர் நல்லாயிருந்ததா மாமியார் சொன்னாங்க.

சீரியலை தவிர்த்து தொலைக்காட்சியில் எத்தனையோ சூப்பர் நிகழ்ச்சிகளைத் தரலாம்..

இங்க food channelணு ஒண்ணு இருக்குது.. சாப்பாட்டு பின்னணியிலேயே எத்தனை நிகழ்ச்சிகள் செய்றாங்க... எத்தனை சுவாரஸ்யமாயிருக்குது.

நிச்சயமா நம்ம மக்களிடம் நல்ல திறமைகள் இருக்குது. அது சினிமாவைச் சுற்றிய திறமையாக இருந்தால் மட்டுமே டி.வி அங்கீகரிக்குது என்பது வருத்தத்திற்குரியது.

இப்ப நாட்டிய மோகம் தலைவிரித்தாடுது. சினிமா பாட்டுக்கு நம்ம சிறுசுங்க காட்டும் நளினம் இருக்குதே.. நடிகைங்க தோத்தாங்க..

நல்ல நிகழ்ச்சிகள் சில நேரம் கடுப்படித்தாலும் அவற்றை பார்த்து .. இதுபோல பாராட்டி உற்சாகப் படுத்தவேண்டும்.

கலக்குங்க வாத்தியாரே!

G.Ragavan said...

// தருமி said...
//தொலைக்காட்சியே பாக்குறதில்லை//

அப்ப அங்க எப்படித்தான் நேரம் போகுது? பாவம் தான் நீங்க :( //

நேரம் எங்கங்க இருக்கு? இன்னும் நாலஞ்சு மணி நேரம் இருந்தா நல்லதுதான்.

// நீங்க சொன்ன நாடகங்கள் ஏதும் பார்த்ததில்லையென நினைக்கிறேன். சென்னைத் தொலைக்காட்சி நாடகங்களும் அருமையானவை என்று சொல்வது சும்மா ஜோக்குதானே ! //

ஐயோ.. இல்ல இல்ல.. நான் உண்மையாத்தான் சொல்றேன். ஓமப்பொடியார் கிட்ட பேசி இதோ இந்தப் பட்டியல் கெடைச்சது.

சூரிய வம்சம்னு ஒரு நாடகம். ஸ்ரீகாந்த் அரசியல்வாதியா நடிச்சிருப்பாரு. சு.சமுத்திரம் எழுதிய நாவல். சென்னைத் தொலைக்காட்சியில தொடர் நாடகமா வந்துச்சு. ரொம்பச் சின்ன வயசுல பாத்தது. முழுக்கதையும் நினைவில்லை. ஆனா ரசிச்சுப் பாத்தேன்.

இவளா என் மனைவி - ஆர்.சி.சக்தி எடுத்த நாடகம். நிழல்கள் ரவி, சரத்பாபு, சித்ரா நடிச்சது. மறக்க முடியுமா?

நீலா மாலா - ஞாயிறு காலை வந்துருமே

சக்தி 90 - இதுல நடிச்ச நடிகை பேரு ராகவி. அந்தப் பேரச் சொல்லிப் பயக கிண்டல் அடிப்பாங்க.

அந்தப்புரம் - அந்தக் காலத்து சரித்திர நாடகம். முடிஞ்ச வரைக்கும் நல்லாவே இருந்தது.மனோரமா கூட நடிச்சிருந்தாங்கன்னு நெனைக்கிறேன்.

மரியாதைராமன் கதைகள் - இது அப்ப பிடிச்ச நாடகம்

பரமார்த்த குருவின் கதைகள் - சொல்லனுமா இந்தக் காமெடியை :)

பெண் - ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நடிகை எடுத்த கதை. ரொம்ப அருமையா இருக்கும்.

பகலில் ஒரு இரவு - ரேவதி குருடியா வருவாங்க. சுரேஷ் மேனன் நாடகம். இதுல ரஞ்சனி கூட சின்ன பாத்திரத்துல வருவாங்க.

நடந்தாய் வாழி காவேரி - சீர்காழி சிவசிதம்பரம் நடிச்சிருந்தாருன்னு நெனைக்கிறேன். சரியா நினைவில்லை.

கல்யாணத்துக்குக் கல்யாணம்

பஞ்சு பட்டு பீதாம்பரம் - காத்தாடி ராமமூர்த்தி நாடகம்

தினேஷ் கணேஷ் - டெல்லி கணேஷ் சுலக்ஷனா நடிச்சது. இதுல கட்டிக்கிட்ட உன்னையத்தான் நான் கட்டிக்குவேன் இல்லாங்காட்டி உசுரையே விட்டுக்குவேன்னு ஒரு பாட்டு வரும்.

கடல் புறத்தில் - செந்தாமரை, லிவிங்ஸ்டன், சபீதா ஆனந்த் நடிச்சது

ரயில் சிநேகம் - பாலச்சந்தரோட மாஸ்டர் பீஸ்....பாட்டெல்லாம் கலக்கல்

ஸ்வர பூஷணி - இது கர்நாடக சங்கீதத்தை அடிப்படையா வெச்சி வந்தது. அடிக்கடி பாடுவாங்க. ஆனாலும் உக்காந்து பாத்த நாடகம்.

நாணயம் - ஏவிஎம் எடுத்த தொடர். கே.ஆர்.விஜயா நடிச்சது. ரொம்ப நல்லாயிருக்கும்.

வண்ணக்கோலங்கள் - எஸ்.வி.சேகர் நாடகம்

சரஸ்வதியின் சபதம் - இதுல சோ ஒரு எழுத்தாளரா வந்து சினிமாவுக்குக் கதை சொல்லுவாரு. அது அப்படியே சினிமா மாதிரி வரும். அப்ப வந்த பலப்பல படங்களைக் கிண்டலடிச்சிச் சூப்பரா இருக்கும். கொத்தமல்லி ஆத்தா பாட்டு கூட சூப்பரா இருக்கும்.

ஜனதா நகர் காலனி - சுப்புணி இருக்கப் பயமேன்!

எத்தனையெத்தனை....இன்னும் சில நாடகங்கள் நினைவில் இருக்கு. சட்டுன்னு வரலை. :) இதுல எதையுமே நீங்க பாத்ததில்லையா?

தருமி said...

சிறில்,
கவலையே படாதீங்க .. சன் டிவியில் வரப்போற கல்லூரி சீரியல் நிச்சயமா நல்லா இருக்காது; வழக்கமான நம்ம சீரியல்களின் தரத்தில் இருக்கும். என்ன அதோடு கொஞ்சம் சினிமா மாதிரி கிறுக்குத்தனமான நடனம், காதல், போட்டி, வில்லத்தனம் என்று சொல்லப்படும் அர்த்தம் கெட்டதனம் அது இதுன்னு நிறைய இருக்கும். விளம்பரத்தைப் பார்த்தா அப்படித்தான் தெரியுது.

நம்ம ஆளுகளாவது வித்தியாசமா நினைக்கிறதாவது ...

தருமி said...

ஜிரா,
என்னங்க இவ்வளவு நீள பட்டியலே கொடுத்திட்டீங்க...என்னே நினைவாற்றல்..! அசத்திட்டீங்க. அந்த ஓமப் பொடியார் யாரு?

நீலா மாலா
பெண்
பகலில் ஒரு இரவு
சர. சபதம்
-இதுகள் மட்டும் கொஞ்சம் நினைவில் இருக்கு...

உண்மைத்தமிழன் said...

தருமி ஐயா,

இனொரு கொசுறு நியூஸ்.. விஜய் டிவியின் 'கனா காணும் காலங்கள்' தொடரின் கதை, வசனகர்த்தாவான பிரம்மாதான் இப்போது சன் டிவியில் வரப் போகும் 'கல்லூரி காலம்' தொடருக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிக் கொண்டிருக்கிறார்.

சன் டிவி தரத்திற்கு நிறைய செலவு செய்தாலும் கனா காணும் காலங்களோட காப்பிதானே என்ற எண்ணம் வந்துவிட்டால் சீரியல் அம்பேல்தான்..

Narayanaswamy G said...

//நீலா மாலா
பெண்
பகலில் ஒரு இரவு
சர. சபதம்
-இதுகள் மட்டும் கொஞ்சம் நினைவில் இருக்கு...//

ஒரு மார்க்கமாத்தான் நினைவுல இருக்கு உங்களுக்கு...

தருமி said...

உண்மைத்தமிழன்,

க.கா.கா. நன்றாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் முழு சினிமாத்தனத்திலிருந்து மாறுபட்டு இருப்பதுவே. ஆனால் க.கா. ட்ரெய்லரைப் பார்த்தாலே முழு சினிமாத்தனம்தான் தெரியுது.

நாம்தான் பாவம்...!
விடியல் இன்னும் தொலைவில் ...

தருமி said...

கடப்ஸு,
//ஒரு மார்க்கமாத்தான் நினைவுல இருக்கு //

இதிலென்னங்கப்பா மார்க்கமா இருக்கிறது...?

Aravindhan said...

அட என்ன ஒரு அதிசயம்.நான் நெனச்சேன் பெருசுங்க எல்லாரும் வழக்கமா மாமியார் மருமக சண்டை இல்லாத மெகா தொடர் பக்கம் போகவே மாட்டங்கனு.
என்னதான் ஜவ்வு மாறி இழுத்தாலும்,விளம்பர இடைவேளை நிகழ்ச்சி நேரத்தை விட அதிகமா இருந்தாலும் ,கதைன்னு ஒண்ணு இல்லாட்டாலும் ,அப்படி ஒண்ணு இருந்தா அது நகராம ஒரு வர்ஷமா ஒரே எடத்துல இருந்தாலும் இயக்குனர திட்டிகிட்டே மெகா தொடர் பாக்குற பெருசுங்க தான் எங்க areala ஜாஸ்தி.

நான் பாக்குற ஒரே மெகா தொடர் கனா காணும் காலங்கள் தான்.ஆனா அது கூட இப்ப வழக்கமான மெகா தொடர் மாதிரி இருக்கு.ஜாலியா சந்தோஷமா இருக்குற இஸ்கூல்ல ஒரு திருப்பம் கொண்டு வரணும்னு சொல்லிட்டு அனாவசியமா சில charactersa கொன்னுடாங்க . அதுலயும் மொத்த seriallayum ஒரே ஒரு figure தான் இருந்துச்சு.அதையும் போட்டு தள்ளிட்டாங்க.இப்ப ஒரு பொண்ணு கூட பாக்குற மாதிரி இல்ல.(ஒண்ணு இருக்கு ஆனா அது ரொம்ப frequenta வர்றது இல்ல ).இருந்தாலும் பசங்களுக்கு ஒரே loves. தாங்க முடிலடா சாமி.

வர வர மாமியார் கழுதை போல ஆனாள்.

வந்தியத்தேவன் said...

சன் டிவியின் கல்லூரிக் காலம் சீரியலையும் பிரம்மா தான் எழுதி இயக்குகின்றார். கலக்கப்போவது யாரு, ஜோடி நம்மர் 1 ஆகியவ்ற்றை காப்பி அடித்த சன் இப்போ கனாக் காணும் கால்ங்களையும் காப்பி அடிக்கின்றது. வெகுவிரைவில் காதலிக்க நேரமில்லையையும் காப்பி அடிக்கும்.

சில நாட்களாக கனாக் காணும் கால்ங்களும் போரடிக்கின்றது ப்ரியா என்ற அட்டுபிகரின் அலம்பல் தாங்கமுடியவில்லை. இந்த கேரக்டர் தேவையற்றது.

நிஜமா நல்லவன் said...

///சன் டிவி புதிய கலைஞர் டிவி மாதிரியும், கலைஞர் டிவி பழைய சன் டிவி மாதிரியும் உள்ளன; சொந்த சரக்கு என்பதே கிஞ்சித்தும் இல்லை. பாவம்தான்!///



மொத்தத்தில் சரக்கே இல்லை அப்புறம் சொந்த சரக்கென்ன இரவல் சரக்கென்ன. கனாகாணும் காலங்கள் நிச்சயம் பாராட்டப்படவேண்டிய நல்ல தொடர்.

Raman Kutty said...

yes you right i also accept that vijay tv would become best...

மங்களூர் சிவா said...

ஓ இப்பிடி ஒரு சீரியலா!?

புகழன் said...

நல்ல தொடர் ஆனால் பார்க்க முடிவதில்லை

Post a Comment