Saturday, August 21, 2010

428. பொள்ளாச்சி to ஆழியார்





*
பழைய கார் இருக்கும்போதே வெளியூருக்கெல்லாம் காரோட்டிச் சென்று வர ஆசை. தங்ஸிடம் பெர்மிஷன் கிடைக்கவேயில்லை. கார் மாற்றியதும் கட்டாயமாக ஊர் சுற்றிவர ஆசை.
ஆனாலும் தங்ஸோடு பெத்த மகளுகளும் வில்லிகளாக மாறி, வயசான காலத்துல இப்படி ஒரு ஆசையான்னு சொல்லி பெர்மிஷனே தரலை. என் பரிதாப நிலையைப் பார்த்து சில நண்பர்களுக்கு பாவமா போச்சு. ஆனால் பாவம் அவங்க என்ன பண்ண முடியும்?                                                                   

                                                                                   


அமினா நூலுக்கு மொழியாக்கப் பரிசு கிடச்சுதா... அதுக்கு பொள்ளாச்சிக்கு வாங்கன்னு அழைப்பு வந்தது. என்னமோ தெரியலை .. தங்ஸ் தானும் வர்ரதா சொல்லிட்டாங்க. கார்ல போறதா இருந்தால் தான் நானும் போவேன் அப்டின்னு சும்மா ஒரு டூப் உட்டேன். அது டூப்புதான் தங்ஸுக்குத் தெரியும்தான். ஆனால் என்ன நினச்சாங்களோ .. சரி, கார்லேயே போவோம் அப்டின்னுட்டாங்க.



ஒரே ஒரு முறை தவிர, இதுவரை 30 - 40 கிலோ மீட்டர் வரைதான் காரோட்டும் அனுபவம். பொள்ளாச்சிக்கு மதுரையிலிருந்து போக 4 மணி நேரம் ஆகும் அப்டின்னாங்க. மாலை நேரத்திலேயே ஊருக்குப் போய்ச் சேர்ரது மாதிரி புறப்படணும்னு இரண்டு மணிக்குக் கிளம்ப நினைத்து ஒன்றரைக்கெல்லாம் புறப்பட்டுட்டோம். விழா 11-ம் தேதி. நாங்கள் 10 தேதியே புறப்பட்டாச்சு. மதுரை தாண்டி சிறு தொலைவிலேயே நாற்கரச்சாலை வந்திருச்சு. அட .. என்னமா கார் வழுக்குது ..! வண்டி நூறு தாண்டியும் அலுங்காம குலுங்காம போச்சு.


இன்னும் ஒண்ணையும் சொல்லணுமே (சான்ஸ் கிடைக்கும்போது சொல்லட்டா எப்போதான் சொல்றது?!) 2002-ல் நூறு நாள் அமெரிக்க வாசம். அப்போ டிஸ்னி லேண்ட் பார்க்க காரில் நீண்ட பயணம் ஒன்று. அப்போது அங்க உள்ள ரோடுகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். நூல் கட்டினது மாதிரின்னு சொல்லுவாங்களே அது மாதிரி நெட்டுக்க ... ஒரேயடியா நேரா ... ரொம்ப ஆச்சரியப்பட்டேன். அப்போ அங்க சொன்னாங்க ... முதல் அமெரிக்க அதிபர் ஸ்கேல் வச்சி நேர்கோடு போட்டு அப்படியே ரோடு போடச்சொன்னார் அப்டின்னாங்க. சரி .. உங்க ஊர்ல ரோடு போட்டு, அதன் பிறகு ஊர் வந்திச்சி ... எங்க ஊர்ல ஊரெல்லாம் எப்பவோ வந்திரிச்சி ... ரோடு இப்பதான் வருதுன்னு சொன்னேன்.

ஆனா இப்போ இந்த நால்வழிச்சாலை அதே மாதிரி அங்கங்க வர்ரதை இப்போ கார்ல நம்மளே ஓட்டிக்கிட்டு போகும்போது ரொம்ப நல்லா அனுபவிக்க முடியுது. ஆனாலும் நால் வழிச்சாலைக்குள் நுழைஞ்சி 90 - 100 தொடும்போது கை லேசா குறு குறுத்தது மாதிரி தெரிஞ்சுது. அதெல்லாம் கொஞ்ச நேரத்திற்கு ... பிறகு சரியாயிரிச்சி. கைலி கட்டிக்கிட்டு தலையில ஹெல்மட் போட்டுக்கிட்டு 100-யும் தாண்டி, எங்களையும் தாண்டிப் போன இளைஞனை வேடிக்கை பார்த்துக் கொண்டே அவன் பின்னால் கொஞ்ச தூரம் போனேன். அவன் விரைவாக என்னைக் கடந்து பறந்தான்.


திண்டுக்கல் வந்ததும் நால்வழிச் சாலையிலிருந்து சாதாரணச் சாலைக்கு வந்தோம். துள்ளாமல் வந்த பயணம் முடிந்து வழக்கமான சாலைப் பயணம் ஆரம்பமாயிற்று, இந்த சாலைகூட பரவாயில்லைதான் ஆயினும் நால்வழிச் சாலைக்கும் இதற்கும்தான் எத்தனை வேற்றுமை. அந்த வேற்றுமையாலேயே சாதா சாலை ரொம்ப சாதாவாக இருந்தது. இங்கேயும் 90-க்கு மேல் பறந்த பேருந்துகளை முந்த விட்டோம். மூன்றரை மணி நேரத்தில் பொள்ளாச்சி போய்ச் சேர்ந்தோம்.

நன்றாக வரவேற்றார்கள். நல்ல இடம் கொடுத்திருந்தார்கள். நல்ல நண்புக்குழு உண்டானது. அடுத்த நாள் முழுமையும் விழா நடந்தது. இரவு 9 மணிக்கு அறை வந்தோம். அடுத்த நாள் 12-ம் தேதி காலையிலேயே புறப்பட்டு, 22 கிலோ மீட்டர் தள்ளியிருந்த ஆழியார் அணைக்கட்டு பார்க்கக் கிளம்பினோம்.


நேரமோ காலை. இடமோ க்ளைமேட்டுக்குப் பெயர் போன பொள்ளாச்சி. நல்ல சாலை. இருபுறமும் மலைப் பாங்காடு. ஜில்லென்று இருந்தது. அரை மணி நேரத்தில் அணை. படியேறி அணையின் மேற்புரத்துக்குப் போய் சில படங்கள். மீண்டும் மதுரை நோக்கி ....


திரும்பி வரும்போது ஒரு எக்ஸ்பர்ட் ட்ரைவர் மாதிரி தோணிச்சி. திண்டுக்கல் வந்ததும் ஊருக்குள் நுழைந்தோம். இதுவரை வந்திட்டு திண்டுக்கல் பிரியாணி சாப்பிடாம எப்படி வர்ரது? ஊருக்குள் நுழைந்ததும் நாடு முன்னேறிக்கிட்டே இருக்குன்னு தோணிச்சி. ஏன்னா .. எங்க பார்த்தாலும் சாலைகளைத் தோண்டிப் போட்டிருந்தார்கள் ... வளர்ச்சி'ங்க. ஒரு வழியா வேணு கடைக்குப் போய் சாப்பிட்டுட்டு, அங்கிருந்து நால் வழிச் சாலைக்கு வந்து பறக்க ஆரம்பித்தோம். கையில் இப்போதெல்லாம் போகும்போது இருந்த எந்த நமச்சலும் இல்லை!


Moral of the post!! :


ஊழல்கள் பிறக்குமிடமே நமது சாலைகள் என்றுதான் எனக்கு எப்போதும் தோன்றும். சட்டங்களை நாம் இள வயதிலிருந்தே மீறுவதே சாலைகளில்தான். அதற்கு தண்டனையும் கிடையாது. ஆகவே எப்போதும் சட்டங்களை மீறுவது நமக்கு எந்த மனத்தடைகளையும் உண்டு பண்ணுவதில்லை. தப்பு செய்ய பழகுமிடமே சாலைகள்! சாலைகளில் விதிகளை மீறுவதை மிகக் கடுமையாகத் தண்டித்தால் ஒருவேளை நம் குற்றங்கள் குறையலாம்; இனியாவது சட்டங்களுக்கு ஒரு வேளை நாமெல்லாம் மதிப்பு கொடுக்க ஆரம்பிக்கலாம்.


பாருங்களேன் ... ஒருவர் தன் மாடுகளை சாவதானமாக சாலைகளைக் கடந்து கொண்டிருந்தார். இன்னொரு முட்டாள் ... விரைவாக வண்டிகள் பறக்கும் இந்த சாலைகளில் சின்னக் கைக்குழந்தையையும் வண்டியில் வைத்துக் கொண்டு  சர்வ சாதாரணமாக வலது பக்கம் தவறாக, ரொம்ப கூலாக, தப்பு செய்கிறோமே என்ற எவ்வித உணர்வும் இன்றி போகிறான். வளைவுகளில் அவன் வருவது தெரியாமலோ, இல்லை எதிர்பாராமலோ ஒரு வண்டி வந்தால் என்ன ஆகும் நினக்கும்போதே மனது பதைத்தது. இந்த நால்வழிச் சாலைகளிலாவது போக்குவரத்துச் சட்டங்களைக் கடுமையாக்க ஆரம்பிக்க வேண்டும். யாரும் அதைச் செய்யப் போவதில்லை ... ம்ம்...ம் ..


*
 இன்னும் கொஞ்சம் படங்கள் பார்க்க இங்கே ....


13 comments:

Unknown said...

தனியாக பயணம் செய்வது நல்ல அனுபவம் ... காரில் துணைவியும் இருந்ததால் பழைய விசயங்களை அசைபோட்டு சென்றிருப்பீங்க..
படங்கள் நன்றாக இருக்கு.. அதிலும் அந்த காக்கா என்னமா யோசிக்குது..?

Narayanaswamy G said...

You should plan a trip to Bangalore once. You will really enjoy the 4 Way all along.

With a steady driving at 100 or 110 you will be able to make it in 6 Hrs easily. I make it in 6 Hours from Sivakasi.

துளசி கோபால் said...

அது என்னங்க...... மறுநாள் //முழுவதும் விழா நடந்தது//

முகிய புள்ளிகள் யார் யார் வந்தா? என்ன ஏதுன்னு விவரம் சொல்லுங்க.

திண்டுக்கல்லில் பிரியாணி எங்கே சாப்புட்டீங்கன்னு கோபால் கேக்கறார்.

தருமி said...

செந்தில்,

டக்குன்னு எப்படி காக்கா பிடிக்கிறீங்க!!

தருமி said...

கடப்பாரை
அட .. போங்கய்யா, எங்க விடப்போகுதுங்க. குமரி போகணும் .. பார்க்கலாம்

தருமி said...

துளசி
விழா விவரம் .. அதெல்லாம் உட்ருவோமா/ இதெல்லாம் சொன்னவங்க அதையெல்லாம் அப்படி உட்ருவோமா?

பிரியாணின்னா அதுக்கு மட்டும் கோபால்ஜியா? (வேணு ப்ரியாணி)

Thekkikattan|தெகா said...

பட்டைய கிளப்பிட்டீங்கன்னு சொல்லுங்க. கூடவே பின் சீட்டில உட்காந்திட்டு வந்தது மாதிரி இருக்கு. படங்களுக்கு நன்றி. அந்த பூ படம் கடைசியா இருக்கிறது, செமையா இருக்கு.

ஆமா, பரிசு வாங்கினீங்களே எப்போ எங்களுக்கு ட்ரீட் :)

Anonymous said...

அட... திண்டுக்கல், மதுரைனு நம்ம ஊர் பக்கம் வந்திருக்கீங்க.. நம்மள பாக்காம போய்ட்டீங்களே..

தருமி said...

//மதுரைனு நம்ம ஊர் பக்கம் வந்திருக்கீங்க.. //

மதுரைக்காரவுகளுக்கே மல்லிகையா கொடுக்குறீங்க !

Jerry Eshananda said...

நீங்க ஜாலியா போகணும்னே "இப்படி அநியாயமா எங்களை கலட்டிவிட்டுடீங்களே"

உண்மைத்தமிழன் said...

ஆஹா.. உங்களோட கார்ல வந்த ஒரு அனுபவம் எனக்கு இருக்கே.. ச்சும்மா ஸ்மூத்தா பக்கத்துல ஒரு "பிகர்" உக்காந்திருக்கிற நினைப்புல நீங்க ஓட்டின ஓட்டு இருக்கே..!!!!!!!

தருமி said...

//உங்களோட கார்ல வந்த ஒரு அனுபவம் எனக்கு இருக்கே.//

அப்டியா..?!
நீங்களும் பிகருமா ..? என் பக்க்க்க்கத்திலேயா ..?

தருமி said...

புரிஞ்சிக்கங்க, ஜெரி!

Post a Comment