Wednesday, June 12, 2013

660. சின்னச் சின்ன கேள்விகள்







*



நக்சல்பாரிகள், மாவோயிஸ்டுகள் என்றாலே ’நல்ல குடிமக்கள்’ எல்லோரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமோ? எனக்கு எப்போதும் அப்படித் தோன்றியதே இல்லை. அவர்கள் மேல் மரியாதை எப்போதும் எனக்கு உண்டு. இது தவறா?

ஆனால் எப்போதும் அவர்கள் மீது எனக்கு ஒரு கோபமும் உண்டு.அவர்களின் போராட்டங்களில் யாராவது அப்பாவி போலீஸ்காரர், காவல் துறை அவுட்போஸ்டுகள், பாவப்பட்ட மக்கள் சிலர், அதிகமாகப் போனால் நில பொறியாளர்கள் அல்லது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் யாரையாவது கடத்திப் போவது, சிரமப் படுத்துவது, கொலையும் செய்து விடுவது என்பது போன்றவைகளைச் செய்யும் போது எனக்குக் கோபம் வருவதுண்டு. எய்தவனிருக்க ஏன் இவர்கள் அம்பை நோகச்செய்கிறார்கள் என்று.

சமீபத்தில் நடந்த சட்டிஸ்கார் போராட்டத்தில் சல்வார் ஜுடூம் நிறுவனர் மகேந்திர கர்மா கொல்லப்பட்டிருக்கிறார். வருத்தம் ஏதும் வரவில்லை.
நல்ல “கர்மா” ! பார்த்தாலே
நல்ல தலைவர் மாதிரி இருக்கார்ல ...?
இவர் உருவாக்கிய ’படை’ அத்துணை மாபெரும் செயல்களை இதுவரை நடத்தியிருக்கிறது. பஸ்கார் பழங்குடியாராக இருந்தும் குடி கெடுத்துள்ளார். பல கொள்ளைகள்; கொடுமைகள்; தீ எரிப்புகள். பெரும் கம்பெனிகளுக்காக நம் நாட்டு சொத்தை,அங்கு வாழும் மக்களின் சொத்தை ஒன்றிரண்டு கம்பெனிக்களுக்கு வாரிக் கொடுக்க எப்படித்தான் அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், நம்மையாளும் மன்மோகன்களுக்கும், சிதம்பரத்திற்கும் ஆசை வருமோ தெரியவில்லை. இவர்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருப்பதே இல்லையோ? 

நக்சல்பாரிகளுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் அந்த மனசாட்சி இருப்பது பார்த்து மகிழ்ச்சி. எப்போதும் அம்பு எய்தவனை விட்டு அம்பின் மேல் கோபப்படும் புரட்சியாளர்களின் குறி இம்முறை சரியாக எய்துள்ளது. இப்படி சரியான ஆட்களைக் கொன்றால் தான் மன்மோகன் வகையறாக்களுக்கும் சிதம்பரங்களுக்கும் புத்தி வருமென்றால் அதுவே நல்ல வழிதான்.

ஆனால் பணத்தின் பின்னாலும் அதிகாரத்தின் பின்னாலும் ஓடும் நாய்களுக்கு நல்ல புத்தி இதனால் வந்து விடுமா என்பதும் ஒரு பெரிய கேள்வி.

*****************************

சமீபத்தில் மதுரையில் கட்டுப்பாட்டை மீறி கட்டப்படும் பல கட்டிடங்கள் மதுரை கலெக்டரால் மூடப்பட்டது. அன்சுல் மிஸ்ரா நல்ல கலெக்டர். பல நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். வாழி ...

ஆனாலும் இது போன்ற நல்ல அதிகாரிகளை நல்ல அதிகாரிகளாக எப்பொழுதும் இருக்க நமது அரசு இயந்திரங்கள் விடாது போலும். சென்ற கலெக்டர் சகாயம் சில நல்ல வழிகளை ஆரம்பித்தார். கல் குவாரிக் கொள்ளையைத் தடுக்க முதல் படியை அவர் எடுத்தார். அடுத்து வந்த மிஸ்ராவும் அதைத் தொடர்ந்தார். நீதி மன்றத்திற்கு வழக்கு போனது. சின்னாள் குவாரிக்காரர்கள் கைகள் முடக்கப்பட்டன. சில நாட்கள் போனதும் அவர்கள் ‘மீண்டும் கடை விரித்தாயிற்று’!

நம் நீதி மன்றங்களின் வேலையே இது தான் என நினைக்கிறேன். குற்றவாளி என்று ஒரு அரசியல் வாதியையோ நீதி மன்றத்திற்குக் கொண்டு வந்ததும் நம் நீதியரசர்களுக்கு எல்லாவித ‘நல்ல குணங்களும்’ மறுபடியும் பிறந்து பெருக்கெடுத்து ஓடும். குற்றவாளிகளை விட்டு விடுவார்கள். பிறகு நல்ல அதிகாரிகள் எப்படி நல்ல அதிகாரிகளாக இருக்க முடியும்.

பழைய வழக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. டான்ஸி வழக்கு. நீதிபதி கடைசியில் குற்றவாளி தவறு செய்திருக்கிறார். அவர் அதை நினைத்து வருத்தப்பட்டாலே அது போதும் என்று நினைத்து தீர்ப்பையளித்தார்.

இப்போது பிக் பசார் கடை ஒன்றையும் மிஸ்ரா பூட்டி விட்டார். வண்டி நிறுத்த இடம் கொடுக்காமல் அந்தக் கட்டிடத்தைக் கட்டிமுடித்திருக்கிறார்கள். இதனால் அது தவறென்று கடை இழுத்துச் சாத்தப்பட்டது. ஓரிரு நாட்கள் தான். இப்போது கடை வழக்கம்போல் தன் பிசினசைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. கேட்டால், கட்டிடக்காரர்கள் நீதிமன்றம் சென்று ‘ஸ்டே’ வாங்கி விட்டார்களாம். என்னப்பா இது... ?

குற்றம் செய்தவனைக் கையும் களவுமாகப் பிடித்து கலெக்டர் தண்டனை கொடுக்கிறார். தவறைத் திருத்தினால் கடையைத் திறக்கலாம் என்றால் சரி. ஆனால் கோர்ட் தண்டனைக்குரியவனை இவ்வளவு எளிதாக வெளியே விட்டாச்சு. அவன் பிசினஸும் தொடர்கிறது. இங்கே கலெக்டர் இப்போது எங்கே தன் மூஞ்சை வைத்துக் கொள்வார்?

இப்படித் தொடர்ந்து நடந்தால எதற்காக ஒரு கலெக்டர் வேணும். எதற்காக அவர் இது போல் தவறு செய்தவர்களை “வெட்டித்தனமாக”  ஒன்றுமில்லாத தண்டனை ஒண்ணைக் குடுக்கணும். இது ஒரு கலெக்டருக்கே கேவலம் இல்லையா?
ஒண்ணும் புரியலைடா ...சாமி!

கலெக்டருக்கும் ஒரு கேள்வி:

அந்தக் கட்டிடம் கட்ட ப்ளானை அப்ரூவ் செய்த அதிகாரிகள் என்ன ஆனார்கள்? கட்டிடம் கட்டும்போது கார்ப்ரேஷன் அதிகாரிகள் அவ்வப்போது பார்வையிட வேண்டுமாமே ... அவர்கள் அப்போது தூங்கிப் போனார்கள். இப்போது அவர்களை முதலில் ‘உள்ளே’ போட வேண்டாமா? போட்டுட்டீங்களா, கலெக்டர்?

அதுவும் தெரியலையே .. சாமி!

**********************************

 கிரிக்கெட் கதையும் நல்லா கீது ...

அது யாரு ஸ்ரீசாந்த். இவருதான காசு வாங்கிட்டு ஆடினார்னு உள்ளே போட்டாங்க; அவரும் நண்பர்கள் மூலமா இப்படிப் பண்ணிட்டேன் அப்டின்னும் சொன்னாரே .. இப்ப வெளியே விட்டதும் அவர் லாயர் சொல்லிக் கொடுத்ததை சொல்றார்: அவர் எப்போதும் ஒழுங்காகவே விளையாடினாறாம்’!!!!

அவர் கேஸ் அம்புட்டுதான். நம்ம நீதி மன்றங்கள் இருக்கவே இருக்கு. கோடிக்கணக்கிலே தப்பு பண்ணினா அது ஒண்ணுமே பண்ணாதுன்னு ஸ்ரீசாந்துக்குப் புரிஞ்சி போச்சி ... அதான் இப்படி தத்துவமெல்லாம் பேசுறாரு ,,,

 நடக்கட்டும் மகாதேவா ... எல்லாம் நடக்கட்டும்.(நடந்தவை எல்லாமே நன்றாகவே நடந்தது ....)

***********************************

கோல்ப் ஆட்டத்திலும் சூதாட்டமாம்.
A bridie, I win, a bogey, you lose. அடப்பாவிகளா .. எதிலெதிலெல்லாம், எதற்கெல்லாம்  இப்படி ஆட்டம் போடுவீர்கள் !!!

 ***************************************


*

10 comments:

ஜோதிஜி said...

உடையும் இந்தியா என்றொரு புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கின்றேன். இந்தியாவில் ஆந்திரா முதல் ஐந்தில் மூன்று பங்கு மாவோயிஸ்ட் இயக்க கட்டுப்பாட்டில் தான் உள்ளது. எனக்கும் பரிதாபம் வருவதில்லை என்ற போதிலும் நிறைய விசயங்கள் இதற்குப் பின்னால் உள்ளது

வவ்வால் said...

தருமிய்யா,

ரெண்டு வாரம் முந்தைய ரிப்போர்ட்டர் படிச்சிங்களா? அதில் கர்மா, சல்வா ஜுடும் ஆரம்பித்து ஆதிவாசிகளை காப்பாற்றிய மக்கள் தலைவர்ன்னு எழுதி இருக்கானுங்க, அதைப்பார்த்துட்டு அந்த கொடுமைய எழுதலாம்னு இருந்தேன், நீங்களே மிகச்சரியாக சொல்லிட்டிங்க.

நம்ம ஊடகங்கள் செயல்ப்படும் லட்சணம் இது தான்ன் காசு வாங்க்கிட்டு என்ன வேண்டும்னா எழுதுவாங்க.

நக்சல்களை ஒடுக்கும் "கோப்ரா" படைக்கு தலைவரா பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் டிஜிபி விஜயகுமார் ஐ.பி.எஸ் தான் இருக்கிறார், ரிப்போர்ட்டர் அவர் மனம் குளிர வேண்டும் என்றே இப்படி எழுதி இருக்கும்னு நினைக்கிறேன், பின்னால் என்ன அரசியலோ?
------------

# //குற்றம் செய்தவனைக் கையும் களவுமாகப் பிடித்து கலெக்டர் தண்டனை கொடுக்கிறார். தவறைத் திருத்தினால் கடையைத் திறக்கலாம் என்றால் சரி. ஆனால் கோர்ட் தண்டனைக்குரியவனை இவ்வளவு எளிதாக வெளியே விட்டாச்சு. அவன் பிசினஸும் தொடர்கிறது. இங்கே கலெக்டர் இப்போது எங்கே தன் மூஞ்சை வைத்துக் கொள்வார்? //

ஸ்டே ஆர்டர் என்பதே , தவறை சரி செய்ய கால அவகாசம் கொடுக்க அளிப்பதாகும், பெரும்பாலும் 15 நாள் "ஸ்டே ஆர்டர் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு தான் கொடுப்பாங்க, அக்கால கெடுவுக்குள் தவறு சரி செய்யப்படவில்லை எனில் மீண்டும், சீல் வைக்கலாம்.

இல்லைனா ஸ்டே வெகேட் செய்ய மேல்முறையீடு செய்து இப்பவும் நடவடிக்கை எடுக்கலாம்.

பெரும்பாலும் நம்ம அரசு அதிகாரிகள் தொடர் நடவடிக்கையில் ஈடுபதில்லை, ஒரு முறை நடவடிக்கை எடுத்து தடை வந்தா அப்படியே விட்டுறாங்க.

கொஞ்சம் இன்னும் உறுதி காட்டினா அலற விட முடியும், நானா இருந்தால் இந்த ஸ்டேவுக்கு வேற வழியில ஆப்படிச்சிருப்பேன்,

விதிமுறை மீறிய கட்டிடத்திற்கு குடிநீர் & கழிவுநீர் இணைப்பு அளிக்க முடியாது என காரணம் சொல்லி "கட்" செய்திடலாம், அதுக்கும் கோர்ட்டுக்கு போனால் ,அடுத்து மின் இணைப்பு கட்டிங், அதுக்கும் கோர்ட்டுக்கு போனால், தீ அணைப்பு துறை மூலம், விதி முறை மீறிய கட்டிடம் என சொல்லி " பாதுகாப்பு சான்றை" ரத்து செய்து, இக்கட்டிடம் மக்கள் புழங்க பாதுகாப்பானது அல்ல என வாசலில் போர்டு மாட்டிருவேன் :-))

அதுக்கும் கோர்ட்டுக்கு போனால் "சுற்று சூழல்" விதிகளை மீறி இருக்குனு ஒரே அடியா போட்டு , மூடிற வேண்டியது தான்.

எல்லா கட்டிடத்திற்கும் "முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது' என பில்டிங் கம்ப்ளீஷன் செர்டிபிகேட் வாங்கணும், அதன் பிறகே மற்ற சேவைகள் பெற முடியும், ஒரே அடியா "பில்டிங் கம்ப்ளீஷன் செர்டிபிகேட்" கேன்சல் செய்துவிட்டால் மொத்தமாக சங்கூதிடலாம் :-))

ஒரு மாவட்ட ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி "நடவடிக்கை" எடுக்கணும்னு முடிவெடுத்து உறுதியா நின்று இறங்கிட்டால் பல வழில குடைச்சல் கொடுக்க முடியும், ஆனால் பெரும்பாலும் ரொம்ப தீவிரம் காட்டுவதில்லை, மேலும் அரசியல் சக்திகள் குறுக்க புகும் என்பதால் மிதமாகவே நடந்துக்கொள்வார்கள்.

hariharan said...

ரெம்ப நல்ல கேள்விகள்!
மாவோயிஸ்ட்கள் மதவெறியர்களைவிட பரவாயில்லை ஆனா ஆயுதத்தை வைச்சு இப்ப எதையும் சாதிக்கமுடியாது!

அன்சுல் மிஸ்ரா இன்னொரு சகாயம் மாதிரிதான் அவரோட செயலகள் நல்லாயிருக்கு!

கோர்ட்ல முன்னாடி சம்பத் மாதிரி சில நீதிபதிங்க இருந்தா சாமானிய ஆளுகளுக்கு நல்லது நடக்கும்.

Avargal Unmaigal said...

உங்கள் கேள்விகள் மிக நல்ல கேள்விகள்! நீங்கள் நினைப்பதுதான் நானும் நினைப்பது....
மாவோயிஸ்ட்கள் ஆயுதத்தை வைச்சு மட்டுமல்ல மக்களின் இதயங்களிலும் புகுந்தால் அவர்களால் எதையும் சாதிக்கமுடியும்

தருமி said...

ஆயுத பாணிகளாக வலம் வரும் நக்சல்பாரிகள், மோவோயிஸ்டுகள் பற்றி முன்பே எழுத நினைத்தேன். ஆயினும் நான் நல்ல ‘குடிமகன்’ இல்லையென்று சொல்வீர்களோ என்று நினைத்து காலந்தாழ்த்தி விட்டேன். ஆனால் பலருக்கும் என் எண்ணம் இருப்பது போல் தெரிகிறது; நல்லது.

//மக்களின் இதயங்களிலும் புகுந்தால் அவர்களால் எதையும் சாதிக்கமுடியும்//

அவர்கள் லோக்கல் பிரச்சனைகளை வைத்து அங்குள்ள மக்களோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் பொதுப் புத்தியில் இவர்கள் பாதை தவறு என்று நமக்கெல்லாம் ஊடகங்கள் படிப்பூட்டுகின்றன.

தி.தமிழ் இளங்கோ said...

நல்லாத்தான் கேட்டீர்கள், நாலு கேள்விகளை ... ... ...
// கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே! //
எனக்கும் வேறொன்றும் தோன்றவில்லை!

ப.கந்தசாமி said...

என்ன பண்ண முடியும்னு தெரியலயே?

Avargal Unmaigal said...

தருமி சார் அடுத்தவங்க என்ன நினைப்பாங்க என்ன சொல்லுவாங்க என்று நினைத்து எழுதாதீர்கள் உங்கள் மனதில் என்ன படுகிறதோ பட்டென்று என்று சொல்லுங்கள். இந்த இணைய உலகத்தில் இதயத்தை திறந்து எழுதலாம் . உங்களை போல வாழ்க்கையில் அனுபவம் மிக்கவர்களின் சொல்லை கேட்க பலரின் இதயங்கள் இங்கே திறந்து இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்

G.M Balasubramaniam said...


நம் இந்தியத் திருநாட்டில் நூறு கோடி மக்கள் இருந்தால் நூறு கோடி அபிப்பிராயங்கள்.ஏறத்தாழ எல்லோருக்கும் அதிருப்தியே. கொள்கைகள் நல்லதாக இருந்தால் அவை செயல்பட முடியாதபடி செய்ய ஆயிரம் முட்டுக்கட்டைகள். இவற்றால் ஆதாயம் அடைபவர் யார்.? எடுத்துச் சொல்ல வேண்டியவர் யார். ? நாம் சகட்டுமேனிக்கு அரசியல் வாதிகளைக் குறை கூறுவோம். இந்த அரசியல் வாதிகளுக்கு ஆட்சியின் நுணுக்கங்களை போதிப்பவர் யார்.? இந்த அதிகாரிகள் தானே.?தவறுகளை நிகழவிட்டுப் பிறகு காரணங்கள் தேடுவர். மாவோயிஸ்டுகளும் நக்சல்பாரிகளும் வெளிப்படக் காரணம்தான் என்ன.? வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள். அது இல்லாமல் சமனாக்க யாரும் விரும்புவதில்லைஅந்தக் குதிரைமீது சவாரி செய்யவே அநேகமாக அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் விரும்புகிறார்கள் கட்டி முடித்து வியாபாரம் நடக்கும் கட்டிடத்துக்கு சீல் வைப்பதை விட தவறுகள் எழாமலேயே இருக்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருக்க வேண்டாமா.?கூர்ந்து கவனிக்கப் போனால் எல்லோர் கைகளும் கறை படிந்திருக்கக் காணலாம். கோடிக் கணக்கில் பணம்செலவுசெய்து சட்டசபைக்கும் பாராளுமன்றத்துக்கும் போகும் எல்லோரும் எப்படி அந்தச் செலவை ஈடு கட்டுகிறார்கள். கேள்விகள் எழுப்பலாம். தீர்வுதான் காண முடிவதில்லை. இதன் காரணத்தைக் கண்டு கொண்டு செயல் பட முடியாமல் நூறு கோடி மக்களின் நூறுகோடி அபிபிராயங்கள் உண்டு. என் பதிவு “ ஏற்ற தாழ்வு -மனிதனின் ஜாதி” அண்மையில் எழுதியது. தீர்வு என்று எனக்குத் தோன்றியதை கூறியிருக்கிறேன்.

வேகநரி said...

ஐயா, நான் இங்கே ஒரு கருத்திட்டேன். அது தங்களுக்கு அது வந்ததா?

Post a Comment