Tuesday, November 26, 2013

699. தருமி பக்கம் (10 ) – அந்தக் காலத்தில …. 2






*
மூன்றிலிருந்து ஐந்து வயது வரை வாழ்ந்த என் பூர்வீக வீடு. அதை  இப்போது பார்க்கும் போது கூட அப்போது, அந்தக் காலத்தில் அந்த வீடு இருந்த நிலை தான் நினைவுக்கு வருகிறது. 65 வருஷம் ஆச்சே. ஆனால் அந்த வீட்டு நினைவு நின்று நிலைத்துப் போய் விட்டது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் அந்த வீட்டைப் பார்த்த போது பாவமாக இருந்தது. நினைவில் நின்ற இடங்கள் இப்போது சிதிலமடைந்து நொருங்கிப் போய்க் கிடந்தன. பழைய நினைவுகளோடு மட்டும் இருந்திருக்கலாமோ ... வீட்டை முழுவதும் பார்க்காமல் போயிருக்கலாமோவென்று தான் தோன்றியது.

சின்ன தெருக்கள் தான் எங்கள் கிராமத்தில். ஒரு ரெட்டை மாட்டு வண்டி போவதற்காகவே கட்டப்பட்ட தெருக்கள் தான். படத்தில் இடது பக்கம் ஒரு மாடி வீட்டுச் சுவரில் ஒரு சிகப்புக் கோடு உள்ளதே அதற்கு எதிர்த்தாற்போல் தான் எங்கள் வீடு. படத்தில் தெரியும் இந்த வீடும், அதற்கு எதிர்த்தாற்போல் இருந்த எங்கள் வீடும் தான் என் சின்ன வயதில் அந்தத் தெருவில் இருந்த காரை வீடுகள். இந்த இரு வீடும் ஒரே உயரத்தில் இருக்கும்.

 இன்னொரு பெரிய காரை வீடு கீழே இருப்பது. பெரிய பாட்டையா வீடு அது. வீட்டின் உச்சியில் ஒரு வாழைத் தார் ஒன்று தொங்குவது போல் கட்டியிருப்பார்கள்.  வருஷம் அதிகமானாலும் நான் சிறு வயதில் இருந்தே பார்த்த அந்த வாழைத்தார் பத்திரமாக இன்னும் தொங்குவது ஆச்சரியம் தான்.


இந்த மூன்று வீடுகள் தான் என் சின்ன வயதில் எங்கள் ஊரில் நான் பார்த்த காரை வீடுகள். இப்போது எங்கள் வீடு இதிலிருந்து விடுபட்டுப் போனது மாதிரிதான்.வெறும் கூடு மட்டும் தான் இப்போதிருக்கிறது.

எங்கள் வீடு தெருவிலிருந்து பார்த்தால் உயரமாக இருக்கும். அனேகமாக ஐந்தடிக்கு மேல் தெருவிலிருந்து வீடு உயரத்தில் இருந்தது. வீட்டைக் கட்டிய என் பாட்டையாவிற்கு படிகள் கட்டுவதில் மட்டும் என்ன  வெறுப்போ தெரியவில்லை. வீட்டிற்குள் செல்லும் படிக்கட்டுகளும் சரி, வீட்டின் உள்ளே இருக்கும் இரு படிக்கட்டுகளும் ஏதேதோ என்று கட்டியிருப்பது போல் இருக்கும். வீட்டின் தலைவாசல் படிக்கட்டுகள்  மேலே நல்ல கல்லில் போட்டிருப்பார். ஆனால் தரை மட்டத்தில் உள்ள கல் பல வகைக் கற்களாக இருக்கும். ஒரு கல் கருங்கல்லாக இருந்தால் இன்னொரு கல் கிணற்றங்கரையில் தண்ணீர் இரைக்க போட்டிருந்த திவலைக் கல்லாக இருக்கும்.

மேற்கு பார்த்த வாசலுக்கு வீட்டுச் சுவரை ஒட்டிய படிகள். ஏறி உள்ளே வந்தால் படிக்கட்டுக்கு ஒட்டி ஒரு சதுரக் கல் தரையில் பதிக்கப்பட்டிருக்கும். அதன் நடுவே ஒரு சின்ன ஓட்டை. கதவுக்குப் பின்னால் எப்போதும் ஒன்றரை அடி நீளத்தில் ஒரு சின்ன கடப்பாரை மாதிரி ஒன்று இருக்கும்.  வீட்டுச் சமையலுக்கு தேங்காய் உறிப்பதற்காகவே அந்தக் கம்பியும், சதுரக்கல்லின் ஓட்டையும். உள்ளே ஒரு செவ்வக அறை - அதாவது, இந்தக் காலத்து ஹால் அது தான். வலது பக்கச் சுவரில்   முழுவதும் புகைப்படங்கள் தொங்கும். எதிர் சுவரில் ஒரு சுவர்க் கடிகாரம். ‘ஹாலின்’ நடுவில் ஒரு கருப்புக் கலரில் ஒரு தூண். எனக்கு மிகவும் பிடித்த தூண். தூண் நன்கு வழு வழுவென்று இருக்கும். அதில் சிறு வயதில் ஏற முயற்சிப்பது நல்ல விளையாட்டு. அந்த ‘வீர விளையாட்டு’ விளையாடுவதற்கு வயது வராத சின்ன வயதில் அந்தத் தூணைப் பிடித்துக் கொண்டு வட்டம் சுற்றியது நினைவில் இருக்கிறது. ஆனால் கடைசியாகப் பார்த்த போது அந்த தூண் என் நினைவில் இருந்த மாதிரி இல்லாமல் ரொம்ப குட்டையாகத் தோன்றியது. கருப்பு கலரும் வழுவழுப்பும் மட்டும் அப்படியே இருந்தன.

ஹாலிலிருந்து வலது பக்கம் ஒரு அறை. அனேகமாக விவசாய சாமான்கள் இருக்கும் அறையாக அப்போது இருந்தது. இந்த அறையிலிருந்து தெற்கு தட்டடிக்குச் செல்லலாம். இந்த தட்டடியில் தான் முந்திய பதிவில் சொன்ன வாழைப் பழம் பழுக்க வைக்கும் சின்ன அறை இருக்கும். நடுவில் ஒரு கதவு. பழைய கிராமத்து வீட்டுகளில் உள்ள தடியான, குட்டையான கதவு. தட்டடியிலிருந்து வெளியே போக தெற்குப் பக்கம் இன்னொரு வாசல். அதிகமாக யாரும் இக்கதவைப் பயன்படுத்துவதில்லை.  இந்தக் கதவில் தான் இன்னொரு பெரும் ‘வரலாற்று நிகழ்வு’ நடந்தது. வேண்டுமென்றால் வாசித்துப் பாருங்கள்!

ஹாலிலிருந்து இடது பக்கம் ஒரு பெரிய அறை. வீட்டின் முக்கிய அறை. உயரமான அறை. இந்த அறை வாசலும் உயரமாக, வேலைப்பாடு சிறிதுள்ள நிலையோடு இருக்கும். உள்ளே நுழைந்ததும் கதவுக்குப் பின்னால் ஒரு பெரிய - இன்றைய டைனிங் மேசையில் பாதி சைஸில் - ஒரு மரப் பெட்டி இருக்கும். ’கல் பெட்டி’ என்பார்கள். ஏனென்று தெரியவில்லை. கல் மாதிரி உறுதி என்பதா ... இல்லை, கல் மாதிரி பெரிய இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதாலா ... ? இதற்குள் தான் வீட்டின் ‘முக்கிய பொருட்கள்’ இடம் பிடிக்கும். நான் பார்த்த வரையில் உள்ளே என்னென்னவோ ஒரே பேப்பர் மயமாக இருக்கும். இந்த அறையிலிருந்து மெத்தைக்குச் செல்லும் படிக்கட்டு. நான் சொன்ன மாதிரி சிக்கலான படிக்கட்டுகள். ஆனாலும் நான் நன்கு பழகி விட்டேன் இந்தப் படிகளுக்கு.

மெத்தைக்குப் போனால் அங்கே ஒரு பெரிய அறையும், ஒரு சின்ன அறையும், இந்த இரண்டிற்கும் இடையில் ஒரு மொட்டையான பகுதியும் உண்டு. புளி, வத்தல், பனங்கிழங்கு போன்றவைகளைக் காயப்போடும் இடம் இது. இது தாண்டி, பெரிய அறையிலிருந்து இன்னொரு படிக்கட்டு மேல் மெத்தைக்கு. இந்தப் படியைப் பார்த்தாலே எனக்குப் பயமாக இருக்கும். சின்னச் சின்ன படிகள். செங்குத்தாகப் போகும். மொட்டை மெத்தை. பொதுவாக நெல் காயப்போடுவதற்குப் பயன்படுத்துவார்கள். இந்த மெத்தைப் படியில்  பெட்டிகளிலோ, மூடைகளிலோ நெல் வைத்து ஏறுவதற்கு ரொம்ப பழக்கம் வேண்டும். ஆனால் இதுவரை யாரும் அதில் விழுந்து வைத்த செய்தி ஏதும் கிடையாது. மேல் மெத்தையின் நடுவில் ஒரு ஓட்டை இருக்கும். ஓட்டையை ஒரு மண் உலை மூடி வைத்து மூடியிருப்பார்கள். நெல் காயப்போட்டிருக்கும் போது மழை வந்து விட்டால் இந்த ஓட்டை மூலம் கீழே உள்ள அறைக்கு நெல்லைத் தள்ளி விட்டு விடுவார்கள். ஓரிரு முறை இந்த adventure-ல் நானும் பங்கு பெற்றிருக்கிறேன். அந்தக் கீழ் அறையில் என் சின்ன வயதில் மூன்று நெல் குதிர்கள் இருக்கும். ஒவ்வொன்றும் ஐந்து ஆறடி உயரத்தில் இருந்ததாக நினைவு. சின்ன வயதில் இவை எப்போதும் நிரம்பியிருந்ததாக நினைவு. பின் மூன்று குதிர்கள் ஒன்றாக மாறியது. பின் மூடைகளாக மாறின. பின்னாளில் ... குதிர்களையும் காணோம் ... மூட்டைகளையும் காணோம் ...! 

கீழே ‘ஹாலிலிருந்து’ கிழக்குப் பக்கம் நேராக சென்றால் இடது பக்கம் ஒரு பெரிய திண்ணை, அதனை அடுத்து ஒரு இருண்ட சமையலறை, அதனை அடுத்து ஒரு பகுதியில் அங்கணம் என்றழைக்கப்பட்ட குளியலறை எல்லாம் இருந்தன. 

அந்த திண்ணை, ஹால் அளவை விட பெரியதாக இருக்கும். இரண்டடி உயரமாக இருக்கும். ஏன் அந்த உயரம் என்று தெரியவில்லை.  இந்தத் திண்ணையில்  எனக்குச் சின்ன வயதில் செய்த ஒரு சின்ன ஊஞ்சல் பல ஆண்டுகள் தொங்கிக் கொண்டிருந்தது. கருப்புக் கட்டையில் அழகாகச் செதுக்கப்பட்ட ஊஞ்சல். அது ஊஞ்சலா, இல்லை தொட்டிலா என்று சொல்ல முடியாது. ஏனெனில்  குழந்தை கீழே விழுந்து விடக் கூடாதே என்று சுற்றிலும் பாதுகாப்பிற்கு அரையடி உயரத்திற்குப் பலகைகள் இருக்கும். இந்த தொட்டிலுக்கு / ஊஞ்சலுக்கு கால்களும் உண்டு. வேண்டும்போது இறக்கி விட்டு குழந்தை விளையாட என்று இருந்தது. அதைத் தாண்டி சுவற்று ஓரத்தில் ஒரு ராட்சஷ சைசில் ஆட்டு உரல் ஒன்று இருக்கும். இரண்டு பேர் சேர்ந்து தான்அதில் மாவாட்ட முடியும். இதன் பக்கத்திலேயே இன்னும் ஒரு பெரிய அம்மிக்கல் இருக்கும். சமையலறை மகா இருட்டாக இருக்கும். பொய்க் கூரை போல் ஒரு தாழ்ந்த கூரை. அதற்கு மேல் ஓர் அறை உண்டு. விறகு போட்டு எரிப்பதால் அந்த அறையும், சமையலறையும் கருப்பு படர்ந்து இருக்கும். 

இந்த வீட்டை அண்ணன் தம்பிகள் என்று சகோதரர்கள் நடுவே சொத்துப் போராட்டம் … பிரிவு என்று என்னென்னவோ நடந்தது. வேதனையான விஷயங்கள். யாருக்கும் எதற்கும் விட்டுக் கொடுக்கும் மனமே இல்லாமல் போனது. இவர்களது சண்டையால் பாட்டையா காலத்து மகிமை எல்லாம் சுத்தமாக மங்கிப் போனது.  

பல ஆண்டுகள் கழித்து நான் அந்த வீட்டிற்குப் போன போது பல மாற்றங்கள்; பிரிவுகள். அந்த சமையலறை இடிந்து விழுந்து மூடிக் கிடந்தது.எப்படியெல்லாம் இருந்த வீடு இப்படி ஆகிப் போனது !


அந்த வீட்டின் அழிவின் ஆரம்பம் அது.






*
http://signatures.mylivesignature.com/54488/92/EC8E1548066E8691FE8C4E82AB8A105B.png

4 comments:

ஜோதிஜி said...

இலக்கியவாதியாக ஆகி விட்டீர்களோ? அழகாக எழுத கத்துக்கிட்டீங்களே? அதென்ன ஒவ்வொரு முறையும் எழுத்துரு மாறி மாறி வந்துகிட்டு இருக்கு?

தருமி said...

ஜோதிஜி திருப்பூர்

அட ...நீங்க வேற. ஆளில்லாத கடையில டீ ஆத்திக்கிட்டு இருக்கோமேன்னு நினச்சிக்கிட்டு இருக்கேன் ...

ப்ளாக்ல எழுதி, அதை word doc-ல பதிஞ்சி மறுபடி இங்கே பதிவிட்டேன். அதனால இருக்குமோ..?

கரந்தை ஜெயக்குமார் said...

மலரும் நினைவுகள் அருமை ஐயா
விட்டுக் கொடுக்காததால் இழந்தது பழைமையின் மகிமையினை அல்லவா?
த.ம.1

ராமலக்ஷ்மி said...

மழை வந்தால் நெல்லை உடனடியாகக் கீழே தள்ளிப் பாதுகாக்க செய்யப்பட்ட ஏற்பாடு சுவாரஸ்யம். இப்படிச் சின்ன சின்னதாக பல விசயங்கள் அக்காலத்தைய வீடுகளில். வீடுகளுக்கும் உயிர் இருந்த காலம் அது.

Post a Comment