Thursday, June 25, 2015

844. கடைசிப் பெஞ்சுதான்.. ஆனாலும்.. - (தருமி பக்கம் - 30)








*




1961

ஓராண்டிற்குப் பிறகு  ... மீண்டும் மதுரை.

இனி எங்கே, எந்த கல்லூரியில் இடம் கிடைக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்பா இடம் பிடித்து விட்டார்கள். தியாகராஜர் கல்லூரியில் விலங்கியல் துறையில் அப்பாவின் ஆணையின் படி சேர்ந்தாயிற்று. வேறு துறைகளில் இடம் இல்லை.  வேறு துறைகளில் இடம் நல்லவேளை இல்லாமல் போயிற்று. கிடைத்திருந்தால் அதோ கதியாக ஆயிருந்திருக்கலாம். அதிலும் ஒரு வேளை கணக்குப் பாடத்தில் மட்டும் இடம் என்று என்னை அதில் சேர்த்திருந்தால் .... .அம்பேல்! நட்டத்திலும் ஒரு லாபம்.  என்னை மாதிரி மக்கு பசங்களுக்கு ஏத்த துறையில் இடம் கிடைத்தது என்று மனதுக்குள் சொல்லிக் கொள்வதுண்டு. சத்தமாகச் சொல்வதில்லை - மற்ற விலங்கியல் புத்திசாலிகள் கோபம் கொள்ளக் கூடாதே .. அதற்காக இதை நான் வெளியில் சொல்வதேயில்லை. இப்பவும் நீங்களும் இதை வெளியே சொல்லி விடாதீர்கள்.

பல்கலையில் மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்காகக் கொடுத்த கடைசி நாட்களில் தான் நான் கல்லூரியில் சேர்ந்தேன். ஆகவே என் வகுப்பிலேயே பழைய மாணவர்களுக்கு நடுவே புத்தம் புது முகமாகப் போய்ச் சேர்ந்தேன். ஏனெனில் கல்லூரி ஆரம்பித்து ஏறத்தாழ இரண்டு மாதம் கழிந்த பின் தான் சேர்ந்திருந்தேன். தமிழ், ஆங்கிலம் வகுப்புகளுக்கு combined classes.  Physics, Chemistry and Zoology - மூன்று வகுப்புகளும் ஒன்று சேர இருப்போம். இந்த இரு பாடங்களிலும் பெரிய தகராறு இல்லை. ஆனால் விலங்கியலில்  பாடங்கள் புரிந்தன. ஆனால்,  செய்முறை வகுப்புகள் என்னைப் பார்த்து முறைத்தன.

இந்த நிலையில் முதல் பருவம் முடிந்து அப்பருவத் தேர்வுகளும் வந்தன. படித்தேன் .. எழுதினேன். இதுவரை எனக்கு அதிக நண்பர்களும் வாய்க்கவில்லை. இன்னும் ஒரு வகையில் புது முகமாகத்தான் இருந்தேன். ஆனால் பாருங்கள் ... தேர்வு மதிப்பெண்கள் வந்ததும் பெயர் கன்னா பின்னா என்று ’பறக்க’ ஆரம்பித்து விட்டது.

மொழிகளுக்கான எங்கள் combined classesகளிலேயே நாங்கள் உட்கார்ந்திருக்கும் பாணியிலேயே எங்களின் ‘படிப்பின் தரம்’ புரிவது மாதிரி இருக்கும். மூன்று வரிசைகளில் பெஞ்சுகள். ஒவ்வொரு வரிசையிலும் 10 பெஞ்சுகளாவது இருக்கும். வகுப்பில் நுழைந்ததும் இருக்கும் முதல் வரிசையில்  Physics பசங்க முதல் வரிசையிலிருந்து நான்கைந்து வரிசைகளில் அமர்ந்திருப்பார்கள். அடுத்து நடுவில் உள்ள வரிசைகளில் முதல் மூன்று பெஞ்சுகளில் யாரும் அமர்ந்திருக்க மாட்டார்கள். அதன் பின்   Chemistry பசங்க உட்கார்ந்திருப்பாங்க. கடைசி வரிசை. அதில் நாங்கள் உட்கார்ந்திருப்போம் -- கடைசி நாலைந்து  பெஞ்சுகளில் மட்டும் உட்கார்ந்திருப்போம். முந்திய வரிசைகளில் ஏனோ நாங்கள் அமர்வதில்லை. அம்புட்டு தன்னடக்கம்!

வழக்கமாக கல்லூரிகளில் ஆங்கில, தமிழ் வகுப்புகளில்  சில ஆசிரியர்களிடம் மட்டும்  கொஞ்சம் வாலாட்டுவது உண்டு. ஆனால் எங்களுக்கு வந்த ஆசிரியர்களிடம் அதெல்லாம் முடியாது. தமிழுக்கு வந்த ஆசிரியர்களில் ஒருவரைத் தவிர ஒவ்வொருவரும் இசையறிவு மிக்கவர்கள். இசையோடு தமிழ்ப்பாடல்கள் கற்பிப்பார்கள். ஆங்கிலத்தில் ஒரு ஆசிரியர் தவிர மற்றவர்கள் வகுப்பில் அப்படி ஒரு ஈர்ப்பு இருக்கும்.

அப்போது தான் படித்து முடித்து ஆசிரியராக வந்த ஒரு ஆசிரியர் non-detailed வகுப்பில் Thomas Hardy எழுதிய Woodlanders  என்ற புதினத்தின் கதாநாயகன் Winterbone-ன்(?) காதல் தோல்விக் கதையைச் சொல்லிக் கொண்டிருந்த போது வருத்தத்தில் எங்களில் சிலர் கண்களில் கண்ணீர் வந்தது - நிஜமாகவே! இன்னொரு பேராசிரியர்  -  ஆங்கிலத்தில் பேராசிரியர் சக்தி வேல் எனக்குப் பல வகையில் ஒரு மாடலாகவே இருந்தார். அவரை என் மாணவப் பருவம் முடிந்து கால் நூற்றாண்டுகள் கழித்துப் பார்த்த போது அவர் என் பெயரை நினைவில் வைத்து அழைத்த போது மீண்டும் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

எங்கெங்கேயோ போய் விட்டோமோ... முதல் பருவ தேர்தலின் மதிப்பெண்கள் வருவதைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தேனோ...  தமிழில் என்ன மதிப்பெண்கள் வாங்கினேன் என்று நினைவில் இல்லை. ஆங்கிலத்தில் என்ன மதிப்பெண்கள் என்றும் தெரியவில்லை. ஆனால் மூன்று வகுப்புகளிலும் நான் இரண்டாவது மதிப்பெண் வாங்கியிருந்தேன். முதல் மதிப்பெண் ஒரு  Physics பையனுக்கு. என் வகுப்பு பசங்களுக்குப் பல ஆச்சரியம். முதல் மதிப்பெண் ஒரு  Physics பையனுக்கு. அட... அது நார்மல். நல்லா படிக்கிற பசங்க அங்க இருப்பாங்க. போகுது. ஆனா இன்னும் பல  Physics, Chemistry பசங்க இருக்கும் போது  நம்ம பய எப்படி இரண்டாவது மார்க் வாங்கிட்டான்னு ஆச்சரியம். அட ... ஆச்சரியம் அதோடு மட்டுமில்லை ... இம்புட்டு லேட்டா வந்துட்டு செகண்ட் மார்க் வாங்கிட்டானேன்னு நம்ம க்ளாஸ் பசங்க நினச்சதில கொஞ்சம் உயரமா போய்ட்டேன்.

அதுவும் இரண்டாம் வருஷத்தில இரண்டாம் பருவத்து மதிப்பெண்கள் எங்கள் எல்லோருக்கும் மிக முக்கியம்.  அந்தக் காலத்தில ‘பெரிய’ பரிட்சைக்குப் போவதற்கு முன்னால் உள்ள இரண்டாம் பருவத் தேர்வுகள் எங்களுக்கு ஒரு விஷப் பரிட்சை. அந்த தேர்வுகளுக்குப் பெயர் selection exams!  நல்லாவே வடி கட்டி விடுவார்கள். முதலாண்டில் பல்கலைத் தேர்வுகளே கிடையாது. இரண்டாவது வருஷத்தில் இருந்து தான் பல்கலைத் தேர்வுகள். அதில் எழுதுவதற்கு தான் இந்த selection exams. இரண்டாமாண்டு இரண்டாம் பருவம். எங்கள் செட்டுக்கு முந்திய வகுப்பில் தேர்வு முடிவுகள் அவ்வளவு நன்கில்லை என்று பேராசிரியர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த தடவை selection exams ரொம்ப சீரியஸாக இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஆங்கிலத்தில் பயங்கரமாக வடி கட்டி விட்டார்கள். எங்கள் வகுப்பில் பலருக்கும் ஆங்கிலத்தில் பயங்கர அடி. அது பத்தாது என்பது போல் மேஜர் சப்ஜெக்ட்களிலும் இன்னொரு அடி காத்திருந்தது. இந்த இரண்டிலும் எங்கள் வகுப்பில் இருவரைத் தவிர - நானும் இன்னொரு ”பையனும்”! தப்பிப் பிழைத்தோம். அவர் இன்னொரு ’பையன்’ இல்லை! எங்களை விட ஐந்தாறு வயது மூத்தவர்; இலங்கையிலிருந்து படிக்க வந்திருந்தார்.  ஜாலியான பேர்வழி. அதோடு முதலாண்டில் எனக்கு பிறகு அட்மிஷன் வாங்கி சேர்ந்திருந்தார். பெயர் யோகேந்திரன். அவர் கடைசி நம்பர். எனக்கு அதற்கு முந்திய நம்பர். ஆங்கிலம் நன்கு பேசுவார்; எழுதுவார். தமிழ் சுத்தமாக வராது. எழுத்துக் கூட்டிதான் வாசிப்பார். சரோஜா தேவியின் பரமாத்ம விசிறி. அதிலும் சரோஜா தேவியின் நடைக்கு அவர் அப்படியே சரணாகதி அடைந்து விடுவார். பாவம்... அவர் ஒருவரை மட்டும் தமிழில் ‘போட்டுப் பார்த்து விட்டார்கள்”. அதாவது அவருக்கு தமிழ்த் தேர்வு ஆண்டிறுதியில் பல்கலையில் எழுத செலக்‌ஷன் கிடைக்கவில்லை. ஆக இரண்டாமாண்டில் எங்கள் வகுப்பில் எனக்கு மட்டுமே தமிழ், ஆங்கிலம், மேஜர், ஆன்சிலரி என்று எல்லாத் தேர்வுகளுக்கும் செலக்‌ஷன் கிடைத்திருந்தது. இதுனால இன்னும் கொஞ்சம் உயரத்திற்குப் போய்ட்டோம்லா ...!

ஆனாலும் ஆங்கிலத்தில் செலக்‌ஷன் அதிகமாக இருந்ததால் ஒரு ஸ்ட்ரைக் நடந்தது. அந்தக் காலத்தில் இல்லாத ஒரு பெயர் - cut off marks! அதை மிகவும் குறைத்து பலருக்கும் செலக்‌ஷன் அந்தப் போராட்டத்தால் கிடைத்தது. இந்தப் போராட்டத்தோடு மேஜர் தேர்வுகளுக்கும் செலக்‌ஷன் எளிதாகி விட்டது.

ஆனா... அதுக்குள்ள நம்ம நல்ல பெயர் வாங்கிட்டோம்ல ....






 *





6 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எனது கல்லூரி நாள்களை நினைவுபடுத்திவிட்டன உங்களது பதிவு. கடைசி பெஞ்சு சாதாரணம் அல்ல, அங்கிருந்தால் வகுப்பில் நடக்கும் அனைத்தையும் கவனிக்க முடியும்.

வெங்கட் நாகராஜ் said...

கல்லூரி நினைவுகள்..... இனிமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

கரந்தை ஜெயக்குமார் said...

கல்லூரிகாலை நினைவலைகள்
என் மனதிலும் உயரே எழும்புகின்றன ஐயா
மறக்க முடியுமா அந் நாட்களை
நன்றி ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

தம 2

சார்லஸ் said...

கல்லூரி காலம் கனாக் காலம் அல்ல . அவ்வப்போது கண்ணில் உயிர்ப்புடன் தெரியும் பொற்காலம் . மறுக்கவோ மறைக்கவோ முடியுமா?

Post a Comment