Friday, January 29, 2016

886. புத்தகம் எழுதியதும் வந்த சில "திருகு வலிகள்"






மதங்களும் சில விவாதங்களும் 

***

ஈரோடு புத்தகக் கண்காட்சியில்
ஆகஸ்ட் 3ம் தேதி 
திங்கள் கிழமை, மாலை 2 மணிக்கு
இந்நூல் எதிர் வெளியீடு பதிப்பகத்தாரால்
வெளியிடப்பட்டது.
எதிர் வெளியீடு
சா. அனுஷ்
பக்கம் 240
ரூ. 220



அணிந்துரை
பூமியில் வாழும் கோடானு கோடி மக்களை கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று பட்டினி போட்டுக் கொல்லும் ஆதிக்கவாதிகள் மோட்சம், சுவனம், பரலோகம், சிவலோகம், வைகுந்தம் போன்ற கற்பனை உலகத்தைப் படைத்து, நாடகங்களில் இறுதிக் காட்சிகளாக அவைகளை வைத்து, அப்பாவிகளின் சுயசிந்தனையைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
இந்த முத்தாய்ப்பான உத்திக்குப் பெயர் தான் விதி.
Dr.கோவேத.சுவாமிநாதன், 
தமிழ்த் துறைத் தலைவர் (ஓய்வு),
அமெரிக்கன் கல்லூரி, மதுரை.

பின்னட்டை
காலமெல்லாம் ஒரே மதத்திலேயே வளர்ந்திருந்தாலும் அம்மதத்தின் பழைய வரலாற்று நிகழ்வுகள், இன்னும் பல முக்கிய செய்திகள் நம் கண்களுக்கு வராமலேயே இருக்க வழியுண்டு. அப்படி மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, ஒதுக்கப்பட்டுள்ள செய்திகளின் மேல் இந்நூல் சிறிது வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
தருமி
·         இருபத்தைந்து நாட்கள் கழித்து ….

MONDAY, SEPTEMBER 28, 2015
நேற்று இரவு எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. குரலிலிருந்து இளைஞர்கள் என்று நினைக்கிறேன். நால்வரோ ஐவரோ என்னோடு பேசினார்கள். அவர்களுக்கு என் மீது கோபம் – நான் நபியைத் தாக்கி தரம் தாழ்த்தி எழுதி விட்டேன் என்று. அவர்களுக்குப் பதில் சொன்னேன். இருந்தாலும் எல்லோருமே தெரிந்து கொள்ள மீண்டும் அதனைத் தருகிறேன்.
இளைஞர்களின் கோபத்திற்கான காரணம் நான் ஹதீஸ் பற்றி எழுதியிருப்பது. பக்கம் 217 – 222. அதிலும் 220 -222 பக்கங்கள். இதில் நான் கொடுத்திருக்கும் தலைப்பைப் புரிந்து கொண்டாலே என் மீதுள்ள கோபம் போய் விட வேண்டும். அந்தத் தலைப்பு: முகமதுவை இழிக்கும் சில ஹதீஸ்கள். (முகமதுவை நான் இழிக்கவில்லை. ஹதிஸ்கள் தான் இழிக்கின்றன. )
1.ஹதீஸ்கள் வேண்டாமென்று அல்லாவும், நபியும் கூறியதாகச் சொல்லும் வசனங்களைக் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் இருவரும் வேண்டாமென்று சொன்ன பின்னும் ஹதீஸ்கள் மதத்திற்குள் நுழைந்துவிட்டன.
2. அப்படி நுழைந்த ஹதீஸுகளில் சில நபியைப் பற்றி (உயர்வாகப் பேசுவதாக நினைத்தோ என்னவோ) எழுதியவை அவரின் புகழுக்கு மாசு கற்பிக்கின்றன.
இந்த இரு பாய்ண்ட்டுகளையும் இப்பக்கங்களில் சொல்லியுள்ளேன். அதற்கு ஹதீஸுகளையே மேற்கோள்களாகக் காட்டியுள்ளேன். அவை ஹத்தீஸ்தானே ஒழிய என் வார்த்தைகளல்ல என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நபியைத் தரம் தாழ்த்தி எழுதும் அளவிற்கு நிச்சயமாகச் செல்ல மாட்டேன் என்று உறுதி எனக்கு எப்போதுமுண்டு.
****
விவாதங்களைத் தொடர விரும்பும் நண்பர்கள் பதிவுகளிலோ, என் பழைய / புது முகவரியிலேயோ கேள்விகளைத் தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
தொலைபேசியில் பேசும்போது சரியான விளக்கங்களையோ. ஆதாரங்களையோ தரமுடியாது போகின்றது. இருவருக்கும் பயனில்லாமல் போகிறது.
***
இவர்களோடு பேசிய சில மணித்துளிகளில் இன்னொரு அழைப்பு. கொஞ்சம் வித்தியாசம். பேசியவரின் போன் எண் கிடையாது. personal number.
அந்த  போனில் பேசியவருக்கு,
என்னை ஆர்.எஸ்.எஸ்சின் ஆள் என்றீர்கள். என் பதிவுகள் சிலவற்றைப் படித்தால் உண்மை புரியும். படித்துப் பாருங்கள்
அடுத்து ஓரிரு நாட்களில் வெளிநாட்டிலிருந்து இன்னொரு கடுமையான போன். அதன் பின்
புதிய எண்களுக்குப் பதிலளிக்கவில்லை. காரணம் மேலே சொன்னது தான்: தொலைபேசியில் பேசும்போது சரியான விளக்கங்களையோ. ஆதாரங்களையோ தரமுடியாது போகின்றது.
***
11.10.15. ஞாயிற்றுக் கிழமை. புதுக்கோட்டை பதிவர் விழாவிற்குப் பிறகு …
விழா முடியும் தறுவாயில் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றோம். இப்போது எதிர் வெயில் சுட்டெரித்தது. தெருமுக்கிற்கு வரும்போதே வேர்த்துக் குளித்து விட்டேன். சரவணனே ஏனிப்படி வேர்த்து விட்டது என்றார். ஒரு லொட .. லொட பஸ்ஸில் ஏறினோம். பஸ் ஊர்ந்து போனதாகத்தெரிந்தது. ஆனாலும் இரண்டு மணி நேரத்தில் வந்து சேர்ந்து விட்டோம்.
அடுத்த நாள். தெரியாத எண்ணிலிருந்து அழைப்புகள் வந்தால் எடுப்பதில்லை என்று வைத்திருந்தேன். இருந்தும் காலையில் ஒரு அழைப்பு. தயங்கியபடி எடுத்தேன்
கடுமையான அழைப்பு”!
இது போன்ற அழைப்புகள் வருவது பெரும் நெருடலாக இருக்க ஆரம்பித்திருந்தன.
அந்த அழைப்போடு அழுத்தத்தோடு பேசி முடித்ததும் எழுந்தேன். இடது கையில் ஒரு வலி. தலையில் சிறிது அசமந்தம். ஏதோ தவறு என்பது போல் நினைப்பு. ஒரு மணி நேரம் வேறு வேலைகளில் ஈடுபட்டேன். பயனில்லை. பக்கத்து வீட்டு நண்பரை அழைத்துக் கொண்டு குடும்ப டாக்டரிடம் சென்றோம். வழக்கமாக ரத்த அழுத்தம் சிறிதே மேலே இருக்கும். கவலைப்பட வேண்டாம் என்பார். இந்த முறை அழுத்தம் பார்த்த்தும் … down to earth!! ரொம்ப கீழே போயிருந்தது. மருத்துவ மனைக்குச் செல்லுங்கள் என்றார்.
ஒரு மணி நேரத்தில் மருத்துவகத்தில் சேர்ந்தேன்.
வழக்கமாக – 20 ஆண்டுகளாக – பார்க்கும் மூத்த மருத்துவர் வந்தார். என்ன ஆச்சு என்றார். வழக்கமான ஆண்டுக்கொருதடவை அவரைப் பார்த்து இரண்டு மூன்று மாதங்களே ஆகியிருந்தன. நடப்பைச் சொன்னேன். முழு விவரமும் கேட்டார். எல்லாம் சொன்னேன். ஒரு நாள் observation என்றார். ஆனால் 4 நாட்களாகி விட்டன. நேற்றுமாலை வீடு வந்து சேர்ந்தேன்.
புறப்படும் முன் மருத்துவர் கொஞ்சம் easyஆகச் செல்லுங்கள் என்றார். நான் எழுதுவது, அரை குறையான போட்டோ ஆர்வம், வீட்டம்மாவின் எதிர்ப்போடும் அவரது ஆதரவோடும் விளையாடும் shuttle cock எல்லாம் அவருக்குத் தெரியும்.
சில வாரம் விளையாட்டு வேண்டாம்.
குறைவாக நடக்க ஆரம்பியுங்கள்.
ப்ளாக் குறையுங்கள்.
கம்ப்யூட்டரில் நேரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
வாசியுங்கள்.
நன்கு ரெஸ்ட் எடுங்கள் ….. என்று சொன்னார்.
அவர் சொல்வதைக் கேட்க வேண்டுமல்லவா….??!!
****
http://dharumi.blogspot.in/2015/09/blog-post_28.html இப்பதிவை போட்டதும் சில கடுமையான விவாதங்கள் ஆரம்பித்தன.
ஒன்றரை ஆண்டுகளாக எழுதாதிருந்த சார்வாகன் விவாதங்களில் வழக்கம் போல் அழகாகக் கலந்து கொண்டார். மிகுந்த நன்றி அவருக்கு. நல்ல பதில்களைப் பொறுமையாகக் கொடுத்தார்.
முன்பு வெளிநாட்டிலிருந்து பேசிய விவாதங்களைத் தொடர்ந்தார்.  நடுவில் மீரான் - //. இதை தொடர்ந்து படித்தவருக்கு தெரியும் யார் உண்மையை பேச முயற்சிக்கின்றனர் யார் நழுவுகின்றனர் என்று.// எழுதியிருந்தார்.
நானும் பதிலுக்கு - //தயவு செய்து ஒரே ஒரு காபீரிடம் - உங்களுக்கு அப்படி ஏதும் காபீர் நண்பர் யாராகிலும் இருந்தால் - இப்பதிவைக் காண்பித்து யார் உண்மைகளை எழுதுகிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள்.// என்றேன்.
அதற்குப் பதிலில்லை.
விவாதங்கள் மேலும் தொடர்ந்தன. இறுதியில் - நான் வருகின்ற மே மாதம் என்னுடைய விடுமுறையில் இந்தியா வரும்போது நேரடியாக விவாதிப்போம், நீங்களும் உங்களுடைய சகாக்களும் தயாராக இருங்கள்.
இதற்கு மேலும், //நீங்கள் அணிப்பியுள்ள விடயங்களை மீண்டும் ஒரு முறை நீங்களே வாசித்துப் பாருங்கள் எவ்வளவு கொழப்பம் இருக்கின்றது என்பது புரியும். அதனால் இதை பொதுமக்கள் முன்னிலையில் நேரடியாக விவாதிப்போம்.
மதுரையிலேயே விவாதத்தை வைத்துக்கொள்ளலாம்.
விவாதிக்க தயார் என்றால் தெரிவிக்கவும்.// என்று 170வது பின்னூட்டத்தில் சொல்லியுள்ளார்.


நேரடி விவாதம் என்றால் அது ஒரு முற்றுப் புள்ளி என்று தான் நான் எடுத்துக் கொள்கிறேன்.


புத்தகம் எழுதினால் பொறுப்பில்லாமல் யாரும் எழுத மாட்டார்கள். நானும் அப்படியே. இனியும் பதில் வேண்டுமென்றால் புத்தகமாக வரட்டும்; பதில் சொல்லலாம்.




4 comments:

சார்லஸ் said...

இசை பற்றி நான் எழுதினாலே மதம் பிடித்தவர் போல் சண்டையிட வருபவர்கள் இருக்கும்போது மதங்கள் பற்றி எழுதியிருக்கும் உங்களை எதிர்க்கும் மத யானைகளை நீங்கள் சந்திக்கத்தானே வேண்டும் . தெளிவு என்ற அங்குசம் உங்களிடம் இருக்கிறது. சமாளிப்பீர்கள்.

Balaji.paari said...

Sam, please take it easy. Health is first priority.

தருமி said...

சார்லஸ் Balaji.paari
thanks for both of you. சொந்தப் பெயரையும் போட்டு மதங்களைப் பற்றி எழுதுகிறீர்களே என்று ஆரம்பித்திலேயே சிலர் கேட்டதுண்டு. உண்மைகளை எழுதுகிறோம் ... இதில் மறைவெதற்கு என்றேன். புத்தகம் வந்ததும் வந்த சில போன்கள் கொஞ்சம் தடுமாற வைத்ததும் உண்மைதான். பதிவுலக நண்பர்களின் துணை தடுமாற்றத்தைப் போக்கி விட்டன.

அனைவருக்கும் நன்றி

வேகநரி said...

உங்க நண்பர் சொன்ன மாதிரியே உங்க உடல் ஆரோக்கியம் முதன்மையானது. அதை நீங்க முதன் கவனமெடுத்து பாதுகாத்து கொண்டு தான் அழுகிய சாக்கடைகளை சுத்தம் செய்யும் உங்க பணியை தொடர்ந்து செய்ய வேண்டும்.

Post a Comment