Saturday, February 10, 2018

970. BIBLE STUDY - பழைய ஏற்பாடு ...7






*     

                             2.     விடுதலைப் பயணம்


இதன் முன்னுரைப் பகுதியில் கடவுளே முன் வந்து “தனது உரிமைச் சொத்தாகிய” இஸ்ரயேலர்களின் அடிமைத் தளையை அறுத்து, விடுதலை நோக்கி அழைத்துப் போவதும். அவர்களைத் தண்டித்து தூய்மையாக்கி மீண்டும் ஏற்றுக் கொள்வதாகச் சொல்கிறது.
இஸ்ரயேலர்களை கடவுளின் இனமாக முழுவதும் காண்பிக்கப் படுகிறார்கள்.  அப்படியானால் இக்கடவுள் ஒரு சமுதாயம் மட்டும் சார்ந்த, ஒற்றைச் சார்புடைய கடவுளாகவே எனக்குத் தோன்றுகிறார். உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் படி கிறித்துவத்தை உயர்த்தியவர்களின் தொழில் நுட்பம் தான் இது.

3:2. – “அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்கு (மோசேவிற்குத்) தோன்றினார். இதுவரை கடவுளே நேரடி தரிசனம் கொடுத்து வந்திருக்கிறார். முதன் முறையாக ஒரு “தூதர்” இறக்கி விடப்பட்டுள்ளார்.

3 : 15  கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்; “நீ இஸ்ரயேல் மக்களிடம், “உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர்-ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்-என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்என்று சொல். இதுவே என்றென்றும் என்பெயர்; தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!
மீண்டும் கடவுள் ஒரு குறிப்பிட்ட இனத்தவர் என்பதை இவ்வரிகள் மீண்டும் வலியுறுத்துகின்றன. இஸ்ரயேலர்களுக்கு மட்டுமான ஒரு இனக் கடவுளை எல்லா மக்களுக்குமான கடவுளாக மாற்றி விட்டனர். இதை பைபிள் வார்த்தைகளை வைத்தே கிறித்துவ மக்களிடம் பேசினாலும் அவர்கள் அதனை ஏற்க மறுத்து விடுவதைப் பல முறை பார்த்துள்ளேன். மதம் வலியது!

9 : 12 ” ஆண்டவர் பார்வோனின் மனத்தைக் கடினப்படுத்தினார். ஆண்டவர் மோசேக்கு அறிவித்தபடியே அவர்களுக்கு அவன் செவிசாய்க்கவில்லை.”
இதென்னங்க விளையாட்டு? கடவுளே மன்னனின் மனதைக் கடினப்படுத்துகிறார். அவன் வார்த்தை தவறுகிறான். அதற்காகக் கொள்ளை நோயை (9 : 14) ஏவி விடுவேன் என்கிறார் கடவுள்!  அடுத்து கல்மழையை ஏவி விடுகிறார்.( 9 : 24) ஆடுவதும் நானே! ஆட்டுவிப்பனும் நானே! என்கிறார். இதில் மன்னனை எப்படிக் குறை சொல்வது?


10 :20; 10 : 27; 11 : 10:  “ஆண்டவர் பார்வோனின் மனம் இறுகிப்போகச் செய்தார். அவனும் இஸ்ரயேல் மக்களைப் போகவிடவில்லை.” மீண்டும் அதே திருவிளையாடல் தான்! தவறு யார் மீது? இறுகிப் போகச் செய்யும் கடவுளா? இறுகிப் போன மன்னவன் மனதா?
12 : 13; 12 : 27; 12 : 29  “… நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும் போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள் மேல் வராது.”  
பாரபட்சம் மிகுந்த கடவுள். இஸ்ரயேல் மக்களுக்கான கடவுள் மட்டுமே இவர். எகிப்தியரைத் தண்டிக்கிறார்; கொல்கிறார். ஆனால் இஸ்ரயேலர்களுக்கான கடவுளாகவே பார்க்க முடிகிறது.


12 : 49 “பாஸ்கா விதிமுறைகள்” – ”விருத்த சேதனம் செய்து கொள்ளாதவன் எவனும் இதை உண்ணாதிருப்பானாக.” இஸ்லாமியர்கள் விருத்த சேதனத்தைக் கண்டிப்பாகச் செய்து வரும்போது கிறித்துவத்தில் இக்கட்டாயம் இல்லை. கடவுளின் ஆணையை மறுதலிப்பதா இது? இதற்குக் காரணம் என்ன?


14 :18 – “பார்வோனையும் அவன் தேர்களையும்  குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, ‘நானே ஆண்டவர்’ என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்.”  ஆனால் இன்று வரை எகிப்தியர்கள் இஸ்லாமியர்களாகவே உள்லனர். கிறித்துவத்திற்குள்  இதுவரை வரவேயில்லை. கடவுளின் ‘எதிர்பார்ப்பு’ தவறாகி விட்டதோ!


16 : 30 – “ஆகவே, மக்கள் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தனர்”. ஏழாம் நாள் சனிக்கிழமையா (Seventh-Day Christians) அல்லது ஞாயிற்றுக் கிழமையா?


17 : 16 – “ஆண்டவரின் அரியணையை எதிர்த்து ஒரு கை ஓங்கியுள்ளது. இதனால் தலைமுறை தோறும் அமலேக்கியருடன் ஆண்டவர் போரிடுவார்”.   யார் இந்த அமலேக்கியர்கள்? இன்னும் அவர்கள் கைதான் ஓங்கி உள்ளதா?


20 : 4 –5 “…யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணி விடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக் கொள்ள மாட்டேன். “ – ஓ!  வஹாபிக்கள், தலிபான்கள்  இவர்களின் தத்துவம் இப்படித்தான் ஆரம்பித்ததோ!


”என்னைப் புறக்கணிக்கும்  மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்”. அட என்னங்க அநியாயமா இருக்கிறது. அப்பா கடன் வாங்கினால் பிள்ளைகள் தீர்க்கணும்னா கூட பரவாயில்லை; ஆனால் அப்பா பண்ணின தப்புக்கு பிள்ளைகள் அதுவும் நான்கு தலைமுறை கழித்தும் வருமென்றால் …. என்ன ’தெய்வ சித்தமோ’ தெரியவில்லை. இந்த் தெய்வத்தின் தீர்ப்புகள் எதுவும் சரியாக இருக்காது என்று தான் தெரிகிறது.


21-ம் பகுதியில் “அடிமைகள்” பற்றிப் பேசப்பட்டுள்ளது. எத்தனை கொடுமையான அடிமைத்தனத்தை நடத்துவது பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே கிறித்துவக் கடவுள் அடிமைத் தனத்தை ஆதரிக்கிறது. கொடுமைதான்! அடிமையை அடித்துத் துன்புறுத்தலாம்; பெண் அடிமைகள் மீது எல்லா உரிமைகளும் உரிமையாளருக்கு உண்டு; சூனியக்காரிகள் எவளையும் உயிரோடு வைக்காதே;

23-ன் பகுதியில் தான் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமான கடவுள் என்று கடவுள் மீண்டும் உறுதிப்படுத்துகிறார்.

25-ம் பகுதி “திருத்தலத்திற்கான காணிக்கை” என்ற தலைப்பின் கீழ் வருகிறது.

25-1 – “இஸ்ரவேல் மக்கள் காணிக்கை கொண்டு வருமாறு நீ அவர்களோடு பேசு. தன்னார்வம் கொண்ட் ஒவ்வொருவரிடமிருந்தும் நீங்கள் எனக்காக காணிக்கைகளை பெற்றுக் கொள்ளுங்கள்”.
 இதன் பின்னும் எல்லாமே காணிக்கை பற்றி மட்டுமே அதிகமாகப் பேசப்படுகின்றன.உடன்படிக்கைப் பேழை, அப்ப மேசி, விளக்குத் தண்டு,கூடாரம், பலிபீடம் முற்றம் அமைத்தல், விளக்கைப் பேணுதல், குருக்களின் உடைகள், மார்புப்பட்டைகள்  …. இப்படி எல்லாமே காசு … பணம், money … என்று தான் பேசப்படுகின்றன.


29:45 “நான் இஸ்ரயேல் மக்களிடையே குடியிருப்பேன். ( அப்போ நமது பகுதியில் அந்தக் கடவுள் வரமாட்டாரோ?) 

அவர்களுக்குக் கடவுளாயிருப்பேன். 
(அப்போ நமக்கு அவர் கடவுளில்லையா?)


29:46 “…நானே அவர்களின் கடவுளாகிய ஆண்டவர்”. எவ்வளவு திருத்தமாக இக்கடவுள் இஸ்ரயேலர்களின் கடவுள் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியுள்ளார். பின் ஏன் ஏனைய சாதியினர் அவரைக் கடவுளாகக் கருதுகிறார்கள்?


30:11 ”இஸ்ரயேல் … எண்ணிக்கைகுட்பட்டவர் ஒவ்வொருவரும் தம் உயிருக்கு ஈடாக ஆண்டவருக்கு மீட்புப் பணம் கட்ட வேண்டும். இல்லையெனில் அவர்கள் கணக்கிடப்படுகையில் அவர்களிடைய கொள்ளை நோய் வந்து விடும்.”  காசு … காசு … கடவுள் கட்டாய வசூல் இஸ்ரயேலர்கள்மேலும் கடினமாக விழுந்து விடுகிறது. காசு தராவிட்டால் கொள்ளை நோய் … என்ன அன்பான, இரக்கமான கடவுள்!


31:15 – “..ஓய்வு நாளில் வேலை செய்பவன் எவனும் கொல்லப்பட் வேண்டும்” . அடடா … இதைப் பின்பற்றினால் ஒரு கிறித்துவனும் இன்று உயிரோடு இருக்க முடியாதே!


34: 13,14 “அவர்களின் (ஏனைய சாதியினரின்) பலி பீடங்களை இடித்துத் தள்ளுங்கள். அவர்களின் சிலைத்தூண்களை உடைத்தெறியுங்கள். அசேராவின் கம்பங்களை வெட்டி வீழ்த்துங்கள். 

14 – நீ வேறொரு தெய்வத்தை வழி படலாகாது. ஏனெனில், ’வேற்றுத் தெய்வ வழிபாட்டை சகிக்காதவர்’ என்பதே ஆண்டவர் பெயர்.” ஆஹா … நல்ல கடவுள்.அரசியல் கட்சித் தலைவர் போல், அடுத்த கடவுளைக் கும்பிடுபவனை எதிரியாகக் கருதும் கடவுள்.


34:24  “நான் வேற்றினத்தாரை உன் முன்னிருந்து துரத்திவிட்டு உன் எல்லையை விரிவு படுத்துவஏன்.” 

இஸ்ரயேலருக்கு மட்டுமேயான கடவுள்

35-ம் பகுதி மீண்டும் காணிக்கை பற்றி பேசுகிறது. கூடாரத்திற்கான காணிக்கை, மக்களின் தாராள காணிக்கைகள் … என்று காசு பிடுங்கும் காணிக்கை பற்றி பேசுகிறது. கடவுளே மக்களிடம் காணிக்கை கேட்டு கேட்டு வாங்குவதைப் பற்றி நிறைய யோசிக்க வேண்டும். ஆனால் யாரும் யோசிப்பதாகத் தெரியவில்லையே!










*

4 comments:

வேகநரி said...

நல்ல பதிவு தேடிப்பிடித்து படித்தேன். தமிழ்மணம் தனது செயல்பாட்டை இழந்துவிட்டதினால் தமிழ் பதிவு உலகத்துடன் தொடர்புகள் பெரும்பாலும் துண்டிக்கபட்டுவிட்டன. எனக்கும் வருத்தம், இழப்பு.
அதில் முதலாவது தர்மி சாரின் பகுத்தறிவு தமிழ் பதிவுகளை வருங்காலத்தில் படிக்க முடியுமா என்பது பற்றியதே :(

தருமி said...

ஏனிப்படி ஆச்சு தமிழ் மணத்திற்கு? எல்லாமே நல்லாதான போய்க்கிட்டு இருந்தது. ப்ளாக்கர்கலுக்கு எல்லாம் நட்டம் தான். மீள் உயிர்ப்பு கிடையாதா?

தருமி said...

ப்ளாக்கர்களுக்கு .........

வேகநரி said...

இன்று தமிழ்மணம் வேலை செய்கிறது :) ஆனா நாளை?

தகவலுக்காக :-தமிழகத்தை சேர்ந்த தமிழ் கிறிஸ்தவ மதகுரு ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ளாராம். அவர் தனது பக்தர்களிடம் (பக்தர்களும் தமிழர்கள் தான்.பெரும்பான்மை இலங்கையர், சிறுபான்மை தமிழகம்,கேரளா தெலுங்கானா)தெரிவித்துள்ளாராம்
ஆஸ்திரேலியா ஓர் இன பால் திருமணம் செய்யலாம் என்று சட்டம் சமீபத்தில் கொண்டு வந்துள்ளது. இது கடவுளுக்கு விரோதமானது. அதனால் ஆஸ்திரேலியாவுக்கு மிக பெரிய பேரழிவு(அன்பான கடவுளிடம் இருந்து) வர இருக்கின்றது.
அதற்கு மாற்று வழி இல்லையா சுமாமி -இது பக்தர்கள்
இருக்கிறது நீங்க மிகவும் அதிகமாக கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றாராம்.(இப்போதே அதிகம் அதை விட அதிகமாக)
நான் ஒருஇன பால் திருமண சட்ட ஆதரவாளன் அல்ல. ஆனா இந்த மதவாதிகள் இதை எல்லாம் எப்படி தங்களது வியாபார கடவுள் பிரார்த்தனைகளுக்கு பயன்படுத்துகிறார்கள் பாருங்கள்.

Post a Comment