Sunday, March 18, 2018

976. நல்ல சில சினிமாக்கள் ……….

* * சினிமா பற்றிப் பேச ஆரம்பித்தோமா … அதைப் பற்றியும் சொல்ல நிறைய இருக்கிறது. தமிழனாச்சே … சினிமா இல்லாமல் ஏது அவனுக்குவாழ்வு.

 படிக்கிற காலத்தைத் தாண்டி வேலை பார்க்க ஆரம்பித்த காலத்தில் ஒண்ணு நண்பர்களோடு அரட்டை அடிக்கணும் .. இல்ல … ஏதாவது ஒரு சினிமாவிற்குப் போகணும். வேறு போக்கிடம் ஏதும் கிடையாது. நானும் நண்பன் ஆல்பர்ட்டும் இந்த இரண்டையும் இணைத்து விடுவோம். எப்படியும் வாரத்திற்கு ஒரு சினிமாவாவது பார்க்கணும் என்பது ஒரு எழுதப்படாத விதி. தமிழ்ப்படங்களை விட ஆங்கிலப்படங்கள் அதிகமாக பார்த்திருப்போம். அதற்கு ஒரு காரணம் தமிழ்ப்படம் ஓரளவு அதிக நாள் ஓடும். ஆங்கிலப் படங்கள் ஓரிரண்டு தவிர மற்றதெல்லாம் ஒரு வாரம் கூட ஓடுவதில்லை. அதனால் ஆங்கிலப்படம் பார்க்கும் வாய்ப்புகளும் அதிகம். ரீகல் தியேட்டர் தான் அதற்கெல்லாம் சொர்க்கம். அந்த தியேட்டரைப் பற்றியே நிறைய பேசலாம். (இங்கே பேசியிருக்கிறேன்.)

 ஆனாலும் அப்போதிருந்தே மதுரை ஒரு கிராமிய டவுன் தானே! தியேட்டரே பற்றாது. நன்கு நினைவில் இருக்கிறது. மதுரை சென்னைக்கு அடுத்த மாநகராட்சியாக மாறிய போது வெறும் 14 தியேட்டர்கள் மட்டுமே இருந்ததாக நினைவு.. படம் நிறைய போடுவதற்கு தியேட்டர்களே கிடையாது. எதற்காகடா இந்த ஊருக்கு மாநகராட்சி அந்தஸ்து என்று பேசிக்கொள்வோம்.


 ஒரு நாள் நன்றாக நினைவில் இருக்கிறது. அந்த வாரம் சினிமா ஏதும் பார்க்கவேயில்லை. ஆனால் ஏதாவது ஒரு சினிமா பார்த்தே ஆக வேண்டுமென்று ஒரு கை அரிப்பு. யோசித்துப் பார்த்தோம். நண்பர்கள் சிலர் மீனாட்சி தியேட்டரில் ஒரு மலையாளப்படம் ஓடுது … அந்தப் பக்கமே போயிறாதீங்க என் ஒரு பயங்கர அறிவிப்பு கொடுத்திருந்தார்கள். படத்தின் பெயர்: போஸ்ட் மேனை காணலில்லா … போஸ்ட் மேனைக் காணவில்லை என்று பொருளோ? எப்படித்தான் போரடிக்குன்னு பார்ப்போம்னு தைரியமா அந்தப் படத்திற்கும் போனோம். வெட்டுப்பட்டு வெளியே விழுந்தோம். ஆனாலும் ஒரு ‘கடமையை’ முழுவதாகச் செய்து விட்ட பெருமிதம்!

 ஆனால் சில சமயங்களில் அப்படிக் கண்ணை மூடிக்கொண்டு படம் பார்க்கப் போய் சில நல்ல படங்களைப் பார்த்த நினைவும் உண்டு. தாகம் என்றொரு படம். ஒரு வங்காள நடிகை நடித்திருந்தார். நம்மூர் முத்துராமன் குருடனாக நடித்திருப்பார். அப்போதெல்லாம் படத்தைப் பற்றி ஏதும் அதிகமாக ஊடகங்களில் செய்திகள் அதிகமில்லை. எப்படிப்பட்ட படம் என்று தெரியாது போய் பார்த்தேன். இன்னும் சில காட்சிகள் நினைவில் இருக்கின்றன. அடிக்கடி ஒரு மரத்தைச் சுற்றிப் போடப்பட்ட ஒரு வட்ட திண்டு இருக்கும். படத்தில் அடிக்கடி வந்தாலும் போரடிக்காமல் அந்த இடத்தோடு ஒரு தொடர்பை நாமளே எடுத்துக் கொள்வோம். படம் டைரடர் புட்டண்ணா.. உதவி இயக்குநர் பாரதிராஜா என்று பின்னால் பார்த்த நினைவு. ஆனால் இப்போது இணையத்தில் அந்த செய்திகளைத் தேடி உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இல்லை .. இல்லை…இணையத்தில் கூகுள் சாமி கொடுக்காத விஷயமா… கொஞ்சம் கண்டு பிடித்து விட்டேன். கதாநாயகி நந்திதா போஸ். இயக்குனர் பாபு நந்தன் கோடு. வேறு விவரங்கள் தெரியவில்லை. புட்டண்ணா …பா.ராஜா பற்றி சொன்னது தப்பு. படம் அப்படிப் பிடித்துப் போனது. எவ்வளவு என்றால் கட்டாயம் நாலைந்து நாட்களுக்காவதுஒரு சினிமா என்றிருந்த என்னால் அடுத்த சில நாட்களுக்கு எந்தப் படத்தையும் பார்க்கப் பிடிக்காத ஒரு மன நிலைக்குத் தள்ளப்பட்டேன். சில சமயம் பிடித்த ஒரு இனிப்பைச் சாப்பிட்டு விட்டு அதன் ருசி நாக்கை விட்டு நகராமல், நாமும் அடுத்து எதையும் அந்த சுவை மாறக்கூடாதென சாப்பிடாமல் இருப்போமே … அது மாதிரி அந்தப் படம் எனக்கு ஒரு பெரும் தாக்கத்தை அளித்தது. ஒரு மரத்தைச் சுற்றி ஒரு சிமிண்ட்டால் ஆன திண்டு என்று சொன்னேனே … அதே எபெக்ட் பின்னாளில் இன்னொரு படத்திலும் ஒரே இடம் திரும்பித் திரும்பி வரும். அந்த இடத்தையே நாமும் காதலிக்க ஆரம்பித்து விடுவோம். அது பாலு மகேந்திராவின் மம்முட்டி நடித்த ‘யாத்ரா’. அந்தப் படமும் அழியாத கோலங்கள், வீடு படமும் பாலு மகேந்திராவை ஒரு நல்ல திரைக்கதை அமைப்பாளராக எனக்குக் காட்டியது. பாக்யராஜை இந்த விஷயத்தில் எல்லோரும் தூக்கிப் பிடிப்பது எப்படி என்று எனக்குப் புரிவதில்லை.



 இதே போல் இன்னொரு படம். மலையாளத்தில் நிர்மால்யம் என்னும் படம். பரிசிற்காக எடுத்த படம். நாலைந்து பாத்திரங்கள் மட்டும் உள்ள ஒரு படம். அசையாமல் ஒரு கட்டிலில் படுத்துக் கிடக்கும் ஒரு கிழவர் மிக முக்கியமான பாத்திரம். சிறந்த நடிகருக்கான பரிசு இப்பட்த்தில் நடித்த அந்தோனி என்ற நடிகருக்கு. இவர் அந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான பரிசை வாங்கினார். ஆனால் விழாவிற்கு முன் விழா நடக்கும் இட்த்திற்குப் பக்கத்தில் ஒரு ப்ளாட்பார்மில் ஓரமாக உட்கார்ந்து பீடி குடித்துக் கொண்டிருந்தார் என்று சொல்வார்கள்.

 தனக்கு அரசு வேலை கிடைத்து விட்டது என்று கதாநாயகியைக் காதலிப்பவன் அவளிடம் சொல்லிவிட்டு ஊரை விட்டுப் போவான். ஒரு அகலமான, தண்ணீரே இல்லாத ஆற்றைத் தாண்டி நடக்க ஆரம்பிப்பான். காமிரா ஸ்டான்ட் போட்டு ஆற்றில் ஓரத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அவன் முழு ஆற்றைக் கடப்பது வரை அந்தக் காமிரா அதே கோணத்தில் அதே இடத்தில் அசையாமல் இருக்கும். கதாநாயகன் ஆற்றைக் கடக்கும் போது ஒரு சாவு ஊர்வலம் ஒன்று அவனைக் கடந்து செல்லும். காட்சிப் பொருளாக நம்முன் இவை எல்லாம் கடந்து போகும். கதாநாயகன் ஒரு முறை வீட்டிலிருந்து தன் செருப்பை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பி தெரு முனை போகும் வரை காமிரா ஒரே இடத்தில் அசையாமல் இருக்கும். படத்தைப் பற்றி முழுமையாகத் தெரியாது. பரிசுப்படம் என்பது மட்டும் தெரியும். நான் மட்டும் படத்திற்குத் தனியாகப் போயிருந்திருக்கலாம்.



கடைசி சீனில் கதாநாயகன் – ஒரு கோவில் பூசாரி – கோவிலில் கஷ்டப்பட்டு விழா எடுக்கிறான். கடைசி நாள் தான் தன் மனைவி சோரம் போவதைத் தெரிந்து கொள்கிறான். இத்தனை நாளும் கட்டிலில் படுத்திருக்கும் கிழவர் – கதாநாயகனின் தந்தை – அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரே சாட்சி.





விழாவின் இறுதி நாள். கையில் அருவாளைத் தூக்கு வைத்துக் கொண்டு சாமி ஆடுகிறான். இறுதி சீன். தன் தலையை வெட்டிக்கொண்டு கடவுளின் காலடியில் உயிரின்றி சாகிறான். படம் முடிகிறது. படத்தின் டைரகடர் . எம்.டி. வாசுதேவன் நாயர்.





 நான் என் நண்பன் ஒருவரையும் அவனது நண்பர்கள் சிலரையும் கிளப்பி விட்டுப் படம் பார்த்து வந்தோம்.மதுரை லட்சுமி தியேட்டர். படம் முடிந்து மெளனமாகத் திரும்பி வந்தோம். தியேட்டரிலிருந்து ஏறத்தாழ ஐம்பது மீட்டர் தாண்டி இருந்த கடையில் சிகரெட், டீக்காக நின்றோம். நான் மெல்ல படம் நன்றாக இருந்துதில்ல … என்று பேச ஆரம்பித்தேன். எல்லோரும் அடிக்க வந்தார்கள்.அடப்பாவி … வேறுபடம் கிடைக்காமல் இந்தப் படத்துக்கு எங்களை ஓட்டிட்டு வந்துட்டியா …? காமிரா மேன் காமிராவை வைத்து விட்டு அவர் பாட்டுக்கு டீ குடிக்கப் போய்றாரு … நல்ல படமான்னு தகராறு செய்தனர். ஒருத்தர் மட்டும் அந்தக் கடைசி சீன் மட்டும் நல்லா இருந்தது என்றார்.


நமக்கு அது பத்தாதா? இங்க பாருங்க… படம் பாத்துட்டு வழக்கமா எதையாவது ஜாலியா பேசிக்கிட்டே நடந்து வருவோம். நாம் மட்டுமல்ல .. தியேட்டர் விட்டு வரும்போது யாரவது ஏதாவது பேசிக்கொண்டு வந்தது மாதிரி பார்த்தீங்களா? எல்லோரும் பிரம்மை பிடிச்சி வெளியே வந்தாங்களா இல்லையா? அந்தக் கடைச் சீனுக்கான பில்டப்பு தான் இந்த முழுப்படம் என்றேன்.

அவர்களுக்கு நான் சொன்னதை முழுவதுமாக ஒப்புக் கொள்ளவும் முடியவில்ல. அட போப்பா இல்லைன்னு சொல்லவும் முடியவில்லை. 


அழகான படம்.






 *

4 comments:

srinivasan Nattarasan said...

உங்களுக்கு சினிமா, கலை ரசனை இல்லையோ என்று நினைத்தேன்.நீங்கள் சொன்ன படங்கள் அத்தனையும் மொக்கை.நிர்மால்யம் எனக்கு பிடித்தது.பரிசு பெற்ற நடிகர்.படமும்கூட!பரவாயில்லை.ரசனையானவர்தான்!

தருமி said...

self contradictory...நீங்கள் சொன்ன படங்கள் அத்தனையும் மொக்கை & .நிர்மால்யம் எனக்கு பிடித்தது.

??????

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இவ்வாறாக நினைவுகூர்ந்து விமர்சிப்பது என்பது சற்று சிரமமே. அக்கால நினைவுகளோடு பகிர்ந்த விதம் அருமை. அனுபவங்கள் எப்போதும் பாடம்தானே.

”தளிர் சுரேஷ்” said...

பழைய படங்களை நினைவுகூர்ந்து பகிர்ந்தமைக்கு நன்றி! நிர்மால்யம் படக்கதை கேள்விப்பட்டு இருக்கிறேன்! நன்றி!

Post a Comment