Monday, November 18, 2019

1070. ஒரு மகிழ்ச்சியான காலை வேளை ....




*
இன்று காலை எனக்கு மிகவும் மகிழ்வான ஒரு நாளாகப் பிறந்தது. கால்நூற்றாண்டிற்குப் பிறகு என்னிடம் படித்த மாணவனுடன் தொலைபேசியில் தொலைதூரத்திலிருந்து பேசும் வாய்ப்பு அமைந்தது. கொஞ்சம் வித்தியாசமான ஒரு மாணவனாக இருந்தான். ஆனால் இப்போது மிகவும் வித்தியாசமானவனாக, அதுவும் நான் ஆச்சரியப்படுமளவிற்கு மாறியவனாகவும் உயர்ந்த எண்ணங்களோடும் இருப்பதைப் பார்த்து அத்தனை மகிழ்ச்சியும் வியப்பும் எனக்கு.

சொந்த வாழ்க்கையில் உயர்ந்த ஒரு செயலைச் செய்துள்ளான். அது அவன் இளம் வயது வாழ்க்கை, குடும்பச் சூழல் எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது  எனக்கெல்லாம் அதை நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாக அவனை அண்ணாந்து பார்த்தேன். அதையும் தாண்டி அவன் பேசியவையும் அப்படி ஒரு மகிழ்ச்சியை அளித்தன. வாழ்க்கையில் “நகர்ந்து கொண்டே” இருக்கிறான் என்பது தெளிவாகப் புரிந்தது. அவன் வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், he is not enfolded into any "mold" .. he keeps growing or rather enlarging from that mold. இந்த "mold" என்ற சொல்லை அவன் ஆரம்பித்து வைக்க, இருவரும் அதைப் பற்றியே அதிகம் பேசினோம். வாழ்க்கை ஒரு "mold" என்பதைத் தாண்டி, அது "mold"-லிருந்து தொடரும் ஒரு ”நீட்சியாக” இருக்க வேண்டும் என்று பேசினோம்.

எல்லாம் பேசினோம்.

ஆனால் அந்த நீட்சிக்கு கேள்விகள் கேட்கும் மனம் வேண்டும் .. அந்த மனத்தை எனக்கு நீங்கள் தந்தீர்கள் என்றான்.

‘குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டக் கூடாது’ என்றும், கேள்விகள் கேட்டுக் கொண்டே இரு என்று நான் சொன்னதையும் எனக்குத் திருப்பிச் சொல்லி, அவைகள் என்னை மாற்ற பெரும் காரணம்  என்பதையும் சொன்ன போது ஆசிரியனின் மனதில் ஒரு விகசிப்பு வருவதைத் தவிர்க்க முடியாததே. அவனும் இப்போது ஆசிரியனாகி தன் மாணவர்களிடமும் அந்தக் “கேள்வி ஞானத்தைப்” பரப்புகிறேன் என்று சொன்ன போது ஒரு ஆசிரியனுக்குப் பெருமிதம் வருவதும் தவிர்க்க முடியாததே.

மனம் நிறைந்த ஒரு காலை நேரம் ....

பி.கு. அவன் வாழ்க்கை. அதை எல்லோர் முன்னிலும் வி(வ)ரிக்க வேண்டாமென்று விவரங்கள் இல்லாமல் எழுதியுள்ளேன்.














No comments:

Post a Comment