Friday, February 04, 2022

1250. ஒரு கிழவனின் புலம்பல்




*

கிழவனின் புலம்பலின்  தொடர்ச்சிதான்.

மாநிலங்களிடம் இருக்கும் சில அதிகாரங்களும் பறிக்கப்பட்டு பல்லில்லாத புலிகளாக மாற்றப்பட்டு விட்டன. புலிகளின் கதை இப்படியென்றால் “ஆடு”களின் அதிகாரமோ முழுமையாக ஒன்றிய அரசின் துணையால் தூண்டப்பட்டு வருகிறது. நீட் திரும்பி வந்துள்ளது . இந்த நாடகம் அநேகமாக இப்படியே தொடர்ந்து கொண்டிருக்கலாம். மொழிப் பிரச்சனை எல்லாவற்றையும் கடந்து போயாகி விட்டது. இந்த மொழிப்பிரச்சனை மற்ற மாநில மக்களுக்கோ, அரசுகளுக்கோ ஏன் வரவில்லை என்பது என் நெடுநாளைய கேள்வி. அவர்களுக்கு அவர்கள் மொழி மேல் அக்கறை இல்லையா? தங்கள் பிள்ளைகள் தேவையில்லாமல் இந்தி படித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயச் சூழல் அவர்களை உறுத்தவில்லையா? அல்லது இதெல்லாம் தெரியாமல் தான் இருக்கிறார்களா? நம் தெற்கத்திய மாநிலங்களும் இப்படி மெளனம் சாதிப்பது எப்படியென்றே எனக்குத் தெரியவில்லை.

நம் முதலமைச்சர் தேசிய அளவில் புதிதாக ஆரம்பித்திருக்கும் சமயநீதி அமைப்பு பாராட்டுக்குரியது. வளரட்டும். அதே போல் மொழி பற்றிய உணர்வும் வளர்ந்து இந்தித் திணிப்புக்கு எதிராக, தாய்மொழிகளுக்கு ஆதரவாக மாநில அரசுகள் முனைந்து ஒன்றிணைய வேண்டும்.

இதற்காக நமது முதலமைச்சர் ஒரு ”மொழி நல்லெண்ணத் தூதுக் குழு” ஒன்றை ஏற்படுத்தி அது நட்புடன் இருக்கும், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்குச் சென்று உள்துறை அமைச்சரையும், கல்வியமைச்சரையும் நேரில் சந்தித்து, மொழிப் பிரச்சனையில் தமிழ் நாடு 1937லிருந்து எடுத்திருக்கும் முயற்சிகளையும், அதன் போராட்டங்களையும், அதன் நல் விளைவுகளையும் எடுத்துச் சொல்லி “ஆள் சேர்ப்பது” நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது.

நம் கல்வியமைச்சரோ, திருமதி கனிமொழியோ, அல்லது நான் ப்ளாக் காலத்தில் சந்தித்துப் பேசிய, நானறிந்த ஒரே ஒரு அரசியல்வாதி திமுக எம்.பி அப்துல்லா அவர்களோ தலைமையேற்று, தூது சென்று முயன்றால் என்ன என்பது என் இன்னொரு ஆசை. 








*



No comments:

Post a Comment