Wednesday, December 06, 2006

191. திரு. மாசிலாமணிக்கு சமர்ப்பணம்***

*


*


இந்தப் பதிவை எழுத ஆரம்பித்த போது, இதைப் பதிவேற்றியதும் அதனை திரு.மாசிலாமணி அவர்களின் பார்வைக்குக் கொண்டு வரவேண்டுமென நினைத்திருந்தேன். நிச்சயமாக ஏதாவது அதற்குப் பயனிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பதிவேற்றும் முன்பே அவரது மரணச் செய்தி வந்து விட்டது. ஆராதனா,தெக்கிக்காட்டான் இவர்களது பதிவுகளின் மூலம் இன்னும் கொஞ்சம் தெரிந்து கொண்டது அவர்மேல் நான் வைத்த மரியாதையைக் கூட்டுவதாக இருந்தது. அவரது ஆங்கிலப் பதிவில் ஒரிரு முறை பின்னூட்டம் மூலம் சந்தித்தது மட்டுமே அவரோடு என் தொடர்பு. இருப்பினும்,"லஞ்சம் தவிர்; நெஞ்சு நிமிர்" என்ற அவரது தமிழ்ப் பதிப்பின் தலைப்பே அவர்பால் எனக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தியிருந்தது.

அவரது அகால மரணத்தால் கவலையுற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்தப் பதிவை அன்னாரின் நினைவுக்குச் சமர்ப்பிப்பதன் மூலம் என் மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
* * * * * * *


*

*

சமீபத்தில் காஞ்சி அருகே ஆட்டோ ஒன்று ரயிலில் மோதி 15 பேர் அந்த இடத்திலேயே உயிரழந்தார்கள். அந்த சமயத்தில் எழுத நினைத்து விட்டுப் போனது இது. மிகவும் சோகமான ஒரு விஷயம். குடும்பமாகப் பலர் இறந்தது மிக்க வேதனையாக இருந்தது. எப்படி நாமெல்லோருமே ஒட்டு மொத்தமாக சட்ட திட்டங்களை மீறுவதையே ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளோம் என்பதே அப்போது என் நினைவுக்கு வந்தது. ரயில் வரும்போதும் தாண்டிப் போனது அந்த ஆட்டோ ட்ரைவரின் தவறு என்று மேலோட்டமாகச் சொல்லுவதை விடவும் இந்தப் புத்தி நம் எல்லோரிலும் நீக்கமற நிறைந்திருப்பதையே நினைவுபடுத்துகிறது. respecting the law of the land என்ற ஒரு மனப்போங்கு நம்மில் வெகு சிலருக்கே உள்ளது. போக்குவரத்து அடையாள விளக்குகளுக்குக் காத்திருக்கும்போது இதை நன்றாகவே பார்க்க முடியும். பச்சை விளக்கு வரும் வரை நீங்கள் நின்றால் அங்கு நிற்கும் போலீஸ்காரர் முதல் அனைவருமே உங்களை ஏதோ ஒரு அபூர்வ பிராணியைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள். ஆக, அந்த ஆட்டோ ட்ரைவர் விதியை மீறி தன் விதியையும், தன்னோடு இருந்த மிகப் பலரின் விதியையும் முடித்துவிட்டார். இறந்தவர்கள் பாவம்தான்; அவர்களின் உறவினர்களும் பாவமே.

ஆனால் மாநில அரசு ஐம்பதாயிரமும், ரயில்வே பத்தாயிரமும் இறந்தவர்களின் உறவினர்களுக்குக் கொடுப்பது எதற்காக? ரயில்வே கொடுத்ததைக் கூட குறை சொல்லவில்லை; மாநில அரசு எதற்காக இந்த வள்ளல் தன்மையைக் காண்பித்துள்ளது?

அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு விபத்திற்கும் - என்ன காரணத்தால் ஏற்பட்ட விபத்தானாலும் அரசு இதுபோல் நஷ்ட ஈடு தருமா? தரணுமா? மழை பெய்யும்போது காருக்குள்ளேயிருந்து இறந்து போன அந்த நான்கு மென்பொருள் துறை ஆட்களுக்கும் கொடுக்கலாமே.

இதுபோன்ற விபத்துக்கள் நடக்கும்போது அரசு பணம் கொடுப்பதற்குப் பதில் அந்த நேரத்திலாவது நாம் எல்லோரும் எப்படி சிறு சிறு விதிகளை, அதுவும் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியம் என்பது போன்ற செய்திகளை மக்களினூடே பரப்புவது நல்ல சில விளைவுகளை ஏற்படுத்தலாம். அதை விட்டு விட்டு இந்த தாராள மனப்பான்மையைக் காண்பிப்பது தேவையில்லா விஷயமாயிருக்கிறது. நிச்சயமாக அத்தகைய உதவிகள் கிடைக்க வேண்டியவர்களுக்குச் சரியாகக் கூட கிடைக்காமல் போகலாம் - நெல்லுக்குப் போவதற்கு முன் எத்தனை புற்களோ..?!

பொதுவாக இந்த respecting the law of the land என்பது நம்மிடையே இல்லாது இருப்பது குறித்து சமுதாயத்தில் எந்த நிலையினருக்கும் ஒரு பொருட்டாகத் தெரியவில்லையென்பது என் மனக் குறை. என் சின்ன வயதிலும் நாங்கள் no entry பாதைகளில் சைக்கிளை வேக வேகமாக உருட்டிச் செல்வதுண்டு. அப்போது இரு வகை எண்ணங்கள் மனத்திலிருக்கும்: ஒன்று, தப்பு செய்கிறோமே என்ற குற்ற மனப்பான்மை; இரண்டு, மாட்டிக்கொள்ளக் கூடாதே யென்ற பயம். இப்போது நம் யாவருக்கும் முதல் எண்ணம் நிச்சயமாக இல்லை; இரண்டாவதற்கு ஏதாவது ஒரு வழி வச்சிருப்போம்... மாட்டிக்கிட்டா பாத்துக்குவோம் என்ற எண்ணம்.. எப்படி, யாரை பாத்துக்குவோம் என்று ஆளுக்கொரு வழி.

எனக்கு ஒரு நினைப்பு: இந்த விதிகளை மதிக்கும் புத்தியை வர வைக்க ஏற்ற இடம் ரோடுகள்தான் என்று நினைக்கிறேன். stop என்று ஒரு கோடு ரோடுகளில் போட்டிருக்குமே அங்கு யாராவது சரியாக நிற்கிறோமா? அப்படி நிற்பது ஏதோ பயந்த சுபாவம் என்பது போலவும், நான் ஒரு தைரியமான ஆள் என்றோ அல்லது ஒரு புரட்சிக்காரன் போல் காட்டிக்கொள்வது போலவுமோ எல்லோரும் அந்த கோட்டிற்கு ஓரடி அளவாவது தாண்டி நிற்பதுதான் வழமை. அதுக்கு அடுத்து, பச்சை விளக்கு விழ 5-7 வினாடிகள் இருக்கும்போதே புறப்பட்டு விடவேண்டும் என்பதும் ஒரு இன்னொரு விதி. இதில் எந்த வித்தியாசமும் இருக்காது; எல்லா வயசுக்காரர்களும், படித்தவர்கள் படிக்காதவர்கள் என்பது போன்ற எந்த வேற்றுமையோ இன்றி பாய்ந்து விடுகிறோம். இதில் அங்கு நிற்கும் போலீஸ்காரர்களின் பங்களிப்பு வேறு. நாம் நின்று கொண்டிருந்தாலும் அவர்களே கிளம்புங்க என்று ஒட்டு மொத்தமாகச் சொல்கிறார்கள். இந்த இரண்டு விஷயமுமே நம் மனத்தில் ஒரு தவறான தத்துவத்தை நம்மையும் அறியாமலேயே ஊட்டி விடுமின்றது. விதிகளை மீறுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை; விதிகள் மீறுவதற்கே உள்ளன என்பன போன்ற கருத்துக்கள் மனதில் நிலை பெறத்தான் இந்த வழக்கம் வழி வகைக்கும். அதே போல காத்திருக்கும் இடங்களில் வரிசையில் நிற்பது என்பது ஒரு கேவலமான விஷயமாகவே பார்க்கப் படுகிறது. இது போன்று சின்னச் சின்ன விஷயங்களாக நினைப்பவைகள் மக்கள் மனத்தில் ஒரு தவறான மனப்போங்கை ஏற்படுத்தாதா? சிறு வயதிலேயே stop என்றால் stop என்பதும், பச்சை விளக்கு வந்த பிறகே புறப்படவேண்டுமென்பதும் ஒருவரின் மனத்தில் பதிந்து விட்டால் அதே நினைப்பு பெரிய விதிகளைப் பொறுத்தவரையும் வந்துவிடாதா?

எனவேதான் இந்த "படிப்பு" ரோட்டில் ஆரம்பிக்க வேண்டுமென்றேன். இதைப் பள்ளிகளில் சின்ன வயதிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதென்னவோ சரிதான். ஆனால் அந்த சிறு பிள்ளை ரோட்டிற்கு வந்து நம்மைப் பார்த்த பிறகு 'உண்மையை'ப் புரிந்து கொள்ளாதா? அதை விடவும் சரியான பள்ளி ரோடுகள்தான். அதை எப்படி செய்வது என்றெண்ணிப் பார்த்தேன். தண்டனை என்பது போல் நல்ல ஆசான் யார்? ஸ்டாப் கோட்டைத் தாண்டுகிறாயா?; பச்சை விளக்கைத் தாண்டுகிறாயா?; வண்டி ஓட்டும்போதே செல் பேசுகிறாயா? - spot fine என்று ஒன்று இருந்தால், அதையும் ஒழுங்காகச் செய்தால் நமக்கு ஒரு பயம் இருக்காதா? ஆனால் நம்மூரில் இதில் ஒரு பெரிய பிரச்ச்னை. பச்சை விளக்கைத் தாண்டினால் 100 ரூபாய் அபராதம் என்று வைத்துக் கொள்ளுவோம். மாட்டிக் கொண்டால் நாமெல்லாம் எப்படி ஆட்கள் .. அங்கேயே பேரம் பேச ஆரம்பித்து விட மாட்டோமா? நூறுக்குப் பதில் 25 வச்சுக்கங்கன்னு நாம் ஆசை காட்டினா, பாவம் காவல்துறை ஆட்கள் என்ன ஆவார்கள் .. ஆனானப்பட்ட விசுவாமித்திரருக்கே ஒரு வீக பாய்ண்ட் உண்டே.. ஆக பிள்ளையார் பிடிக்க குரங்காகி விடுமே என்று தோன்றியது. ஆனாலும், உண்மையில் செய்ய வேண்டுமென நினைத்தால் இதைச் சாதிக்க முடியும். 3 - 5 பேர் அடங்கிய குழுக்கள் நகரின் அங்கங்கே - எங்கே எப்போது என்று யாருக்கும் தெரியக்கூடாது; எங்கு வேண்டுமானாலும் இருப்பார்கள் என்ற நிலை வருமாறு இருக்க வேண்டும் - இந்த தண்ட வசூலிப்பைச் செய்ய வேண்டும். லஞ்சம் வராமலிருக்க ஒவ்வொரு குழுவிலும் ஓரிரு காவல்துறை ஆட்களும், ஒரு home guard போன்ற அமைப்புகளிலிருந்து ஒருவரும், கல்லூரிகளிலிருந்து N.S.S., N.C.C. போன்றவைகளிலிருந்து ஒரு மாணவனையும் வைத்து இக்குழுக்கள் அமைக்கப் பட்டால் ஊழல் என்று பேச்சு வராமல் நடத்த முடியும்.

விதி மீறல் தவறு என்று ரோட்டில் 'சொல்லிக் கொடுக்கப் பட்டால்' நாளாவட்டத்தில் நமக்கு இன்னும் கொஞ்சம் நல்ல புத்தி வந்துவிடாதா என்ற ஆதங்கம்தான். அப்படி ஒவ்வொன்றாக கற்றுக் கொடுக்கப்பட்டு நாம் எல்லோரும் நல்ல civic sense-உள்ளவர்களாக மாறிவிட மாட்டோமா? இது கனவோ என்னவோ... ஆனால் நடந்து விட்டால்..நடந்து விட்டால் என்பதையும் விட நடந்தே ஆகணும்..

இதோடு தொடர்புடைய பழைய பதிவொன்று இங்கே...

நடத்திக் காண்பிக்ககூடிய இடத்தில் இருப்போர் யார் கண்களுக்கேனும் இது போய் சேர்ந்துவிடாதா என்ற நம்பிக்கையில்...


.
*** இப்பதிவு இப்பதிவு 11.12.2006 தேதியிட்ட பூங்காவில் இடம் பெற்றது. (5)

8 comments:

The Buddha said...

மிக சரியாக சொன்னீர்கள் தருமி!!!

நம் நாட்டிற்கு மிக தேவையான ஒன்று " Self-Discipline". நம் நாட்டில் புதுச்சட்டம் என்பது கையூடல் பெற இன்னும் ஒரு வழி. என்னால் முடிந்த மட்டில் சட்டத்தை மதிப்பதால் எனக்கு கிடைக்கும் "self-satisfaction" பற்றி பேசுபவர்களிடம் சொல்கிறேன். சிலர் பெருமை பீத்திக்கொள்கிறேன் என நினைத்தாலும் கவலை படுவதில்லை.

The Buddha said...

After I read your post, I visited Mr.Masilamani's blog pages. A person who was so busy had taken time to put those pictures to inculcate safety into people's head & talking against bribe, I am sure he is one in a million. I salute him and pray for his soul to rest in peace.

P.S: I don't know whether you allow comments in English. I am really not used to the tamil typing. Please excuse.

Thekkikattan|தெகா said...

தருமி,

எனக்குத் தெரியும் நீங்கள் இது போன்ற ஒரு ஆக்கப் பூர்வமான சில suggestionsகளுடன் ஒர் நாள் திரு. மாசிலாமணி சாரை சந்திக்க இருப்பீர்கள் என்று.

அவரும் Anti-corruption அதிகாரி ஆகிவிட்டார் என்றதும் எனக்கும் மிக்க மகிழ்சியாக இருந்தது. எனக்கு நினைவிருக்கிறது நீங்கள் மாசி சாரின் ஆங்கில ப்ளாக்கில் இது போன்று ஏதாவது செய்ய முடியுமா என்று வேறு சில கேள்விகளுடன் அவரை வினவியிருந்தது.

நிஜமாகவே இந்த முறை அங்கு நான் வரும் பொழுது மாசி சாரும் அவரது துணைவியாரும் என்னுடைய வீட்டு விழாவிற்கு கலந்து கொள்வதாக திட்டமிட்டுறுந்தார்களாம், அப்பொழுது அங்கு நீங்களும் சந்தித்திருக்கக் கூடும். இப்படி ஒரு நல்ல அதிகாரிக்கு குறைந்த ஆயுலை வழங்கி பேரிழப்பு ஒன்று நடந்தேறி விட்டது மிக்க வருத்தம்.

நீங்கள் கூறிய சட்ட விதிகளை மக்களை கொண்டு மதிக்க வைக்கப்படுவதென்பது ஒன்றும் சிம்ம சொப்பனம் கிடையாது. சட்ட இலாக்கா அதிகாரிகள் முறையாக சட்ட விதிகளின் படி - அந்த இடத்திலேயே விதிகளை மீறியவர்களுக்கு, எதனால் இப்பொழுது நிறுத்தப் பட்டிருக்கிறார் என்பதனை அவர் வாயாலேயே சொல்ல வைத்து விட்டு fine கட்டுவதற்கான சீட்டைக் கொடுத்து விட்டு மறு பேச்சுக்கு வேலை இல்லா அளவிற்கு நகர்ந்து சென்று கொண்டு இருந்தாலே... ஒரு சில வருடங்களிலேயே எல்லாம் கட்டுக்குள் வந்து விடும்.

ஆனால். அதனை யார் நிறைவேற்றுவது எந்த மன நிலையில் என்பதுதான் கேள்வி. நமக்கு வேண்டியது திரு.மாசிலாமணி போன்ற "லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்" கோட்பாட்டை கையிலெடுக்கத் துணியும் நேர்மையான மேலும் பல காவல் துறை அதிகாரிகளே...

Unknown said...
This comment has been removed by a blog administrator.
தருமி said...

ஆராதனா சொன்னது:

தருமி சார்.. என்னுடைய பதிப்பு இவ்வளவு பாதிப்பை உண்டாகியிருக்கும் என்று நான் கொஞம் கூட நினைக்கவில்லை. காவல் அதிகாரி திரு. மாசிலாமணி அவர்களின் கடைசி ஊர்வலம் போது, they stopped the traffic for about 10 minutes. the police constable who was standing near Maruthi hospital Junction just cried like a small kid. actually he was sobbing! so out of real curiosity I asked him and then he gave me all the details about Masilamani Sir.

Little did I know that I was writing about a legend of the police department.. There was news about him in the Tamil dailies too.(Trichy edition). Now I realise that it has made such an impact. I saw his website. A real wonderful person and his madam also has a blog dedicated to God and to Patients. May his soul rest in peace. and may God give sufficient peace for Dr. Mrs. Masilamani and to her children..

Sivabalan said...

தருமி அய்யா

மாசிலாமணி அவர்களின் மறைவு மிகவும் வருந்த தக்கது..

அவருக்கு மரியாதை செய்யும் விதமாக நல்லதொரு பதிவை கொடுத்துள்ளீர்கள்.

நன்றி

ஞானவெட்டியான் said...

ஆம்.
காணக் கிடைக்காத தங்கத்தை இழந்துவிட்டோம்.
என்ன செய்வது? நல்லவர்கள் நீண்டநாட்கள் இருப்பதில்லையே!
அவர்தம் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை மீண்டுமொருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

Santhosh said...

தருமி அய்யா,
நம்ம நாட்டில் சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக்கப்பட வேண்டும். மற்ற நாடுகளில் சட்டங்கள் மீறப்பட்டால் அவர்கள் போடும் fine மிக மிக அதிகம்(In Georgia state the minimum fine for violations starts from 100$). ஆனால் நம்ம நாட்டில் ஏழைகளால் கட்ட முடியாது என்று ஜல்லி அடித்து fineகள் எல்லாம் மிகக்குறைவு (fineஜ கூட போட்டால் தான் அடுத்த முறை கட்ட வேண்டுமே என்ற பயம் வரும் அப்பொழுதாவது தவறு செய்வதை தடுப்பான்.). இதில் காவல் துறையினரை குற்றம் சாட்டி பிரயோஜினம் இல்லை. சும்மா வார்டு கவுன்சிலருக்கு வணக்கம் போட்டவன் எல்லாம் தவறு செய்து மாட்டும் பொழுது நான் யாரு தெரியுமா? அப்படின் என்று சவுண்டு விடுவதும் அதற்கு வக்காலத்து வாங்கும் அரசியல் நாய்களும் தான். இங்க எல்லாம் பாருங்க எவனாயிருந்தாலும் சட்டம் ஒன்று தான். புஷ் பொண்ணா இருந்தாலும் மாட்டினா சட்டத்தின் முன் நிறுத்தி விடுவார்கள் நம்ம ஊரில் ஒரு கவுன்சிலர் வீட்டுக்கு பக்கத்து வீட்டுகாரனை உள்ள வெச்சி பாருங்க என்ன நடக்குதூன்னு. சட்டம் போடுறவங்க அதை மதிக்கணும் சார். அவர்களின் தலையீடு குறைந்தால் போதும் குற்றங்கள் பெரும்பகுதி குறைந்துவிடும்.
மாசிலாமணி போன்று நேர்மையான அதிகாரிகள் எவ்வாறு பந்தாடப்படுகிறார்கள் என்று கேட்டுப்பாருங்க கதை கதையா சொல்லுவாங்க.

Post a Comment