சில சமயங்களில் நாம போட்டு வச்சிருக்கிற கணக்கு சுத்தமா தப்பா போகும் போது ரொம்ப சந்தோஷமா ஆயிடுது. சமீபத்தில நடந்த காவல் துறை ஆட்களோடு தொடர்புடைய இரண்டு நிகழ்வுகள் அப்படித்தான் ஆகின.
சில நாட்களுக்கு முன் நானும் தங்கமணியும் இருட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது எங்களைத் தாண்டிச் சென்ற ஒரு தம்பதிகளின் மொப்பட் ரோடின் நடுவில் இருந்த so called median-ல் தடிக்கி வண்டியோடு விழுந்தார்கள். பச்சிளம் கைக் குழந்தை வேறு. சும்மா சொல்லக்கூடாது அந்த தாயை. தான் விழுந்தும் அந்த நிலையிலும் எப்படியோ அணைத்த குழந்தையை விடவில்லை. பெரியவர்கள் இருவருக்கும் உடனே எழுந்திருக்க முடிந்தாலும் ஓரளவு நல்ல அடிதான். ஆனால் குழந்தை தாயின் அணைப்பில் எந்தவித அதிர்வுமின்றி பேசாமலிருந்தது.
அவர்கள் விழுந்ததற்கு முழுக் காரணமாக இருந்தது எது அல்லது யார் என்று எப்படிக் குறிப்பிட்டுக் கூறுவது என்று தெரியவில்லை. அரசாங்கம் என்று பொதுவாகச் சொல்லவா; நகராட்சி என்பதா; காவல்துறை என்பதா என்று தெரியவில்லை. ஏனெனில், (அவர்கள் விழுந்தது மதுரை மீனாட்சி கல்லூரி அருகில், செல்லூர் ரோடு ஆரம்பிக்கும் இடம் - இக்குறிப்பு மதுரைக்காரர்களுக்காக ) அந்த இடத்தில் சாலையைப் பிரிக்கும் அந்த மீடியன் அரை அடி உயரம்கூட இல்லாதது; கறுப்பு வெள்ளை பெயிண்ட் அடிப்பார்களே அதெல்லாம் இல்லாதிருந்தது; சரியாக அந்த இடத்தில் மின் தெருவிளக்கும் இல்லாதிருந்தது; இவை எல்லாமே அந்த விபத்துக்குரிய காரணிகள். வண்டியோட்டிகளுக்கு அந்தத் தடை இருப்பதே சரியாகத் தெரியாது. பார்த்த விபத்தினால் வழக்கமாக வரும் எரிச்சலோடு அன்றைக்கு வீட்டுக்குப் போயாகிவிட்டது. ஆனால் நல்லூழாக - luckily!? - அடுத்த ஓரிரு நாளிலேயே மீண்டும் அந்த இடத்தைத் தாண்டி வரும்போது சில காவல்துறை அதிகாரிகள் அதே இடத்தில் நின்று கொண்டிருக்க நானும் அவர்கள் ஜீப் அருகில் நிறுத்தி நின்று கொண்டிருந்த ஓட்டுனரிடம் இவர்கள் யாரென்று கேட்க, ஏ.சி., ட்ராஃபிக் என்றதும் நேரே அவரிடம் போய் நடந்த அந்த விபத்தைப் பற்றிக் கூறினேன். "ஏன் சார், ரோடுன்னா ஆயிரத்தெட்டு accidents நடந்துகிட்டுதான் இருக்கும். அதுக்கெல்லாம் நாங்க என்ன பண்ண முடியும்? வண்டி ஓட்டுறவங்கதான் கண்ணைத் திறந்து ஒழுங்கா ஓட்டணும். எங்கள என்ன பண்ணச் சொல்றீங்க? பெருசா சொல்ல வந்துட்டீங்க ...போங்க சார், போய் உங்க வேலை எதுவோ அத ஒழுங்கா செய்யுங்க" - இப்படித்தான் ஒரு பதிலை எதிர்பார்த்தேன். ஆனால் அந்த கொஞ்ச வயசு அதிகாரி பொறுமையாகக் கேட்டார். என்ன செய்யலாம்னு என்கிட்டயே கேட்டார். சொன்னேன். பீட்டில் இருந்த போலீஸ்காரரைக் கூப்பிட்டார். இன்னும் இரண்டுமணி நேரத்தில் இந்த இடத்தில் ஒரு பீப்பாய் அடையாளத்துக்கு வைத்தாக வேண்டும் என்றார். எனக்கும் நன்றி சொன்னார். நானும் சொன்னேன்.
செம்மை செய்த பின் எடுத்த படம்.
அடுத்த நாள் அந்த இடத்தில் ஒரு பீப்பாய் சமர்த்தாய் உட்கார்ந்திருந்தது. அதைவிடவும் அதிலிருந்து ஒரு வாரத்துக்குள் அந்த இடத்தை மேலும் செம்மைப் படுத்தி இப்போது அது ஒரு பாதுகாப்பான இடமாக மாறி விட்டிருக்கிறது. சே! காவல் துறை ஆட்களை வைத்து நம்ம போட்ட கணக்கு இப்படி ஒரேயடியா தலைகீழா தப்பா போச்சேன்னு எனக்கு ஒரே சந்தோஷம்!
சரி அதுதான் அப்டின்னா, இப்போ அஞ்சு நாளைக்கு முன்னால எங்க வீட்டுக்குப் போற வழியில் (மதுரைக்காரங்களுக்கு - பாத்திமா கல்லூரிக்குப் பக்கத்தில் ) உள்ள ஒரு traffic island-ல் உள்ள ஒரு பாதுகாப்பின்மையை அங்கு நின்ற கான்ஸ்டேபிளிடம் - பெயர்: திரு. குமார் - சொன்னேன். அவரும் தன்மையாக் கேட்டுட்டு நாளைக்கு இந்த இடத்திற்குப் பணிக்கு வரும் காவலரிடம் ட்ராஃபிக் ஏ.சி.ன் தொலைபேசி எண் கொடுத்தனுப்புகிறேன். நீங்கள் அவரிடம் பேசுங்கள் என்றார். அதே போல அடுத்த நாள் அங்கு நின்ற காவலர் - பெயர்: திரு. அபு பக்கர் - ஏ.சி.யின் எண் கொடுத்தார். ஏ.சி.யின் பெயர் கேட்டேன். சிவானந்தன் என்றார். வீட்டுக்கு வந்து உடனே தொலைபேசினேன். ரிங் போய்க்கிட்டே இருந்தது; எடுக்க ஆளைக் காணோம். சரி அவ்வளவுதான்னு இருந்தேன். தொலைபேசி வைத்ததுமே மறுபடி என் தொலை பேசி கிணுகிணுத்தது. வேறு யாரோன்னு நினச்சி எடுத்து, யாருங்க பேசுறதின்னு கேட்டா, இப்போ நீங்கதான இந்த எண்ணுக்கு பேசியது என்று ஒரு குரல். சரி.. ஏ.சி.யின் அலுவலகத்திலிருந்து யாரேனும் பேசுவார்கள் என்று எண்ணினால் பேசியது ஏ.சி.யேதான்! - ஆச்சரியமாக இருந்தது.
அடுத்து, என்ன விஷயம் என்று கேட்டார்; சொன்னேன். ஆங்.. அதெல்லாம் தெரியும். வேண்டியதைச் செய்வோம். ம்ம்.. - இப்போதும் இப்படித்தான் பதில் வரும் என்று நினைத்தேன்.ஆனால் எந்த வித அதிகார தோரணையற்ற குரலில் பேசினார்; விளக்கம் கேட்டார். ஏற்கெனவே அந்த இடத்தில் செய்யப் போகும் மாற்றங்கள் பற்றியும் விளக்கினார்.நீங்கள் சொல்லும் குறையையும் நினைவில் வைத்திருந்து வேண்டியதைச் செய்கிறேன் என்றார்.
இந்த இரண்டு ஏ.சி.யும் ஒரே ஆளா என்று தெரியாது. ஆனால் அப்படித்தான் இருக்கணும். ஒரேமாதிரியான utmost courtesy. நிரம்பவே எனக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியமாக போயிற்று. அதிகாரத்தில் இருப்பவர்கள், அதுவும் போலீஸ் துறையில் உள்ள ஓர் உயர் அதிகாரி ஒரு சாதாரண குடிமகன் சொன்ன சில கருத்துக்களுக்குச் செவி சாய்ப்பது என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று. சொன்னதை செய்தும் காட்டுவது மிகப் பெரிய விஷயம்தான். நம் நாடு நல்லாதான் சென்று கொண்டு இருக்கிறதோ...? நான்தான் ரொம்பவே cynical-ஆன ஆளாக இருக்கிறேனோ?
52 மறுமொழிகள்:
எனக்கு ஆனந்த கண்ணீரே வந்திருச்சு!
இடைத்தேர்தல்.....???!!!...
மெய்யாலுமே நம்ப முடியலீங்க தருமி சார்.....
அரசு ஊழியர்களில், அதிலும் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இப்படியும் ஒரு ஆளா?.....
இதனால்தான் மதுரையில் கொஞசம் மழை பேய்கிறதோ?
பாராட்டுக்கள் தருமி சார்..
இது போல் மக்கள் சிவில் உரிமைகளை பயன்படுத்த தொடங்கிவிட்டாலே அரசு அதிகாரிகளை ஒரளவுக்கு வழிக்கு கொண்டுவந்துவிடலாம் போலிருக்கிறது!
உடனே செயலில் இறங்கிய அந்த போலீஸ் அதிகாரிகளை பாராட்ட வேண்டும்.
extreme கேசு.... cynical...என்று ஏதேதோ சொல்லுகிறீர்கள்...
என்னாச்சு சார் உங்களுக்கு? வெறும் வயிற்றோடு எதாவது 'மெகா சீரியல்' பார்த்த அதிர்ச்சியா?
சினிமா என்றால் மதுரை தான் தமிழ்நாட்டுக்கே நாடி பிடித்து சொல்லும் என்று கேள்விப்பட்டேன்.. போலீஸ் விஷயத்திலும் இது நடந்தால் "போலீஸ் உங்கள் தோழன்" என்பது உண்மையாகும்.
அந்த டிரம்மில் கருப்பு மஞ்சள் பெயிண்ட் அடித்தால்,இரவில் வருபவர்களுக்கும் உதவுமே?
ஆச்சரியமா அதே நேரம் சந்தோஷமா இருக்குது.
ஒரு படத்துல கார்திக் கலெக்டரா வருவார். வழக்கம் போல நேர்மையா நடக்கற அவரை எல்லோரும் பாராட்டும் போது அவர் சொல்லுவார், நான் வாங்குற சம்பளத்துக்கு நியாயமா செய்ய வேண்டிய என் கடமையத்தான் செஞ்சேன். விசேஷமா எதும் செஞ்சுடலை. அதுக்கே வந்து பாராட்டறீங்களே, என்ன செய்ய நம்ம நாட்டுல கடமைய செய்யறதே இல்ல அபூர்வமா போச்சுன்னு சொல்லுவார். அது மாதிரி, இயல்பா நடக்க வேண்டிய விஷயம் நடந்தாலே நமக்கு அது ஏதோ தெய்வத்தையே நேர்ல பாத்தா மாதிரி ஆனந்த கண்ணீர் விட வைக்கற விஷயமா போயிடுச்சு. ஹ்ம்ம்.... இருந்தாலும் அந்த ACக்கு ஒரு ஓ போடுவோம்.
நிஜமாகவே அருமையான செய்திதான்.
போலிஸாரின் கண்ணியமான அணுகுமுறை மட்டுமல்ல, உங்களின் பொதுநல சேவை மனப்பாண்மையும் பாராட்டப்பட வேண்டியது.
அவ்..அவ்...அவ்..அவ்
//எனக்கு ஆனந்த கண்ணீரே வந்திருச்சு!
//
ரிப்பீட்டே!
பிரச்சினையை பொறுமையாக எடுத்துச் சென்ற உங்களுக்கும், செவிமடுத்துக்கேட்டு நடவடிக்கையும் எடுத்த அந்த அதிகாரி(களு)க்கும் பாராட்டுகள்.
இப்படியே ஒவ்வொருவரும் (பொதுமக்களும், அதிகாரிகளும்) பொறுப்போடு நடந்துகொண்டால் எப்படி இருக்கும் என்று கண்ணைத் திறந்துகொண்டே கனவில் ஆழ்ந்துவிட்டேன்.
நல்லனவற்றையும் உரக்கச் சொல்வது அவசியம். நீங்கள் அதைச் செய்திருக்கிறீர்கள்.
நன்றி.
இன்னிக்கு இந்த ஏசி ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனச் சொல்ல முடியவில்லை. அந்த நாள் விரைவில் வருமென நம்புவோம். அந்த அதிகாரிக்கு நம் வாழ்த்துக்கள்.
பேரசிரியரே..
காவல் துறையில் மிக நல்லவர்கள் எளியவர்கள் உண்டு.. ஒரு சிலர் செய்கிற தப்பை வைத்து மொத்த பேரையும் கணிக்க வெண்டாம். most of the police officers are very good people . and they are very friendly too.
பரவாயில்லை...
தருமி சாருக்கு ஒரு 'ஜே' போடுகிறேன்..எனக்கு மிகவும் பிடித்த காவல்துறையைப் பற்றி எழுதியதற்கு...
ஒன்னு சமீபத்தைய நிகழ்வுகள்னா இடைத் தேர்தல் காரணமாகயிருக்கலாம் அல்லது உண்மையிலேயே நல்லவர்கள் எல்லாத்துறையிலும் இருக்காங்க.ஆனால் சினிமாக்காரங்க பண்ற ஃபோகஸில் போலீஸ்னா லஞ்சம்,அராஜகம்னு நம்ப வைக்கப் பட்டிருக்கிறோம்.
எனக்கென்ன போச்சுன்னு போகாத உங்க கடமையுணர்ச்சிக்கு ஒரு சல்யூட் சார்.
//எனக்கு ஆனந்த கண்ணீரே வந்திருச்சு! //
எனக்கும்!
மாசிலாமணி சார்தான் நினைவுக்கு வந்தார்.
இந்தமாதிரி சம்பவங்கள் பரவலானா நல்லது.
-மதி
தருமிசார்,
(போலீஸ்காரன் புள்ளையா ) இந்த படிக்கறப்ப சந்தோசமா இருக்குங்க! :)
நம்மூரில் நேர்மையாக இருப்பதற்கு மிகுந்த நெஞ்சுரமும், அசைக்க முடியா தன்னம்பிக்கையும் வேண்டும்.
அது போன்ற மனிதர்களை காண்பது மிகவும் அரிது. ஆனால், சுத்தமாக இல்லை என்று கூறுவதற்கில்லை. எல்லா துறைகளிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக "சேற்றில் முளைத்த செந்தாமரைப் போல" இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஏதோ ஓர் அபூர்வ spp.களில் ஒன்றில் தடுக்கி விழுந்தது போன்று தடுக்கி விழுந்து கண்டெடுத்திருக்கிறீர்களோ என்று எண்ணச் செய்கிறது. இருந்தாலும் சந்தோஷமாக இருக்கிறது காது கொடுத்து கேட்டு, மக்களை காவு வாங்குவதிலிருந்து தப்பிக்க வைத்தமைக்கு.
இருந்தாலும் உங்களுக்கும் ஆசாத்திய நம்பிக்கையைதான் போங்கள், இன்னமும் அந்த நம்பிக்கை குறையவே இல்லை :-)
ஐயா,
உண்மையான சூப்பர்ஸ்டார் இவரு தான்!!
போலிஸ் எல்லாரும் அப்படி இருந்தா தமிழ்நாடு எப்படி இருக்கும்?
ஐயா,
எமது இவ்வார பாசக்கார குடும்ப வெளியீடு
எனக்குM ஆனந்த கண்ணீரே வந்திருச்சு!
நன்றி மதி...i felt so honoured and overwhelmed to read your comments.
literally brought tears..... this post!
புரொபசர் சார்,
கண்ணியமானவர்களும், கடமை உணர்ச்சி மிக்கவர்களும் (அந்த ஏ.சி யைப் போல, உங்களைப் போல) எங்கும் இருக்கிறார்கள் !
வாசிக்க நிறைவாக இருந்தது.
மதுரை ஒண்ணும் அவ்வளவு மோசமில்லன்னு தோணுது ;-)
எ.அ.பாலா
Sir,
If you really want this people to be recognised and rewarded, you can send a print of your message and send it to the Commissioner of Police. Madurai. or to the D.I.G of Madurai.
it will be an added laurel to them
ஜோ,'
உங்களுக்குப் பின்னால் ஒரு பெருங்கூட்டத்தையே கண்ணீர் விட வச்சிட்டீங்களே!
டெல்பின்,
உங்கள் sentiments, உணர்வுகள் புரிகின்றன.
இந்தப் பதிவு உங்களுக்குத் தரும் மகிழ்ச்சி மிகவும் திருப்தியாயுள்ளது.
அது தந்த துயரத்தைக் காலம் விரைவில் ஆற்ற விழைகிறேன்.
இளவஞ்சி,
உங்கள் உணர்வும், பெருமிதமும் புரிகின்றன.
எனக்கு மகிழ்ச்சியாயும், நெகிழ்ச்சியாயுமிருக்கிறது.
krishjapan,
நிச்சயமா நீங்க சொல்றதுக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இருக்க சாத்தியமில்லை. முதலாவது சம்பவம் நடந்தது தேர்தல் வேலைகளுக்கெல்லாம் முன்பு. இரண்டாவது இடம் தொகுதிக்கு வெளியே. நானே சொல்லியுள்ளது போல் எனக்குப் பின்னால் என்ன ஓட்டுப் போட பெருங்கூட்டமா அணிவகுத்து நிற்குது. அதோடு, நடந்தது எல்லாமே one-to-one என்ற முறையில்தானே.
என்ன செய்வது நல்ல மனத்தோடு நல்லது செய்யும்போது கூட இதுமாதிரி சந்தேகங்கள் வர்ர மாதிரிதான் பெருவாரியான நடப்புகள் இருக்கின்றன.
டெல்பின்,
//send it to the Commissioner of Police. Madurai. or to the D.I.G of Madurai...//
இவர்களது மெயில் ஐடி கிடைத்தால் நலமாயிருக்கும். இல்லையென்றாலும் நீங்கள் சொன்னதைச் (செய்ய முயலுகிறேன்.)செய்கிறேன்.
நம்ப முடியவில்லை எனும் மதுரையம்பதிக்கும்,
அதிகாரிகளை மக்களே ஒழுங்குக்கு கொண்டுவரமுடியுமென நம்பும் பாபு மனோகருக்கும்,
மதுரைமேல் இவ்வளவு நம்பிக்கை கொள்ளும் வடுவூர் குமாருக்கும்,
ஆச்சரியமும், சந்தோஷமும் ஒருங்கே படும் மனதின் ஓசைக்கும்,
இந்நிகழ்ச்சி ஓர் அபூர்வமான ஒன்றாக இருக்கக் கூடாதென விழையும் லஷ்மிக்கும்,
பாராட்டிய ஸ்ரீரிதர் வெங்கட்டுக்கும்,
மகிழ்ச்சிக் கண்ணீர் பெருக்கிய பங்காளிக்கும்,
பொறுப்பைப் பாராட்டி, நாளை எப்படியிருக்க வேண்டுமென கனவு காண ஆரம்பித்து விட்ட வற்றாயிருப்பு சுந்தருக்கும்,
நாளை நல்ல நாளே என நம்பும் கொத்ஸுக்கும்,
சல்யூட் அடிக்கும் கண்மணிக்கும்,
நல்லவர்களை நினைத்துக் கொண்ட மதிக்கும்,
நன்றிகள் பல.
மதுரைல பெரும்பாலும் நல்ல மக்கள் தாங்க (நீங்க,அந்த காவலதிகாரி,...எக்ஸட்ரா)ஆனா இதே போன்ற அணுகுமுறைய சென்னைல நாம எதிர்பார்க்கமுடியுமா ன்னு தெரியல ..எல்லாருமே இந்த மாதிரி நல்லவங்களா இருந்திட்டா
நல்லாருக்குமில்ல
தர்மபுரி வழக்கில் மூன்று பேருக்கான தூக்குத்தண்டனை பற்றி மிகுந்த அவநம்பிக்கையுடன் நீங்கள் எழுதியது என் நினைவுக்கு வருகிறது.
இவர்களது மெயில் ஐடி கிடைத்தால் நலமாயிருக்கும்.////
here they are!
digmadur@sancharnet.in
spmdu@sancharnet.in
சத்தியமாச் சொல்றேன். நம்பவே முடியலை. இவங்க உண்மையான கடமையுணர்வோடு சொல்லீருந்தாங்கன்னா....இவங்களுக்கு கோடி நன்றிகள். ஏன்னா காவல்துறை கிட்ட இதெல்லாம் நான் உண்மையிலேயே எதிர்பார்க்கலை. இது உண்மையான மாற்றமாக எல்லாக் காவல்துறையிலும் தொடர்ந்தா நல்லா இருக்கும். ஆனா...அதெல்லாம் நடக்குமான்னு தெரியல.
முதலில் உங்களுக்குப் பாராட்டு.
அடுத்து இன்னும் நல்லவர்கள் நிறையவே இருக்கிறார்கள் என்பது பத்திரிக்கைகளுக்குத் தெரியாத உண்மை.
அடுத்து தயை செய்து அவரை மீண்டும் கூப்பிட்டு இந்தப் பதிவுகளிலே உளமாரப் பாராட்டினார்கள் என்று சொல்லுங்கள்.நன்றி.
உண்மையிலேயே, இதை நம்ப முடியலை. நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று நம்ப முடிகிறது. வாழ்க அந்த அதிகாரி. உங்களுக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சல்யூட்.
"உங்களால் இன்னும் நிறைய களப்பணிகள் செய்ய முடியும்" என்று ஒரு பதிவின் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேன். ..தொடருங்கள்.
**
அனைத்து துறைகளிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் ஆனால் சொற்ப அளவுதான் 0.5 %. :-((
நாம் இவர்களை ஊக்குவிப்பதன்மூலமே இந்த விகிதத்தை வளர்க்க முடியும்.
குற்றம் கண்ட தருமிக்கும்,சரி செய்த பாண்டியப் பிரதேச SPக்கும் வாழ்த்துகள்.
goodnewsindia.com க்கும் ஒரு மயில் தட்டி விடுங்கள்.
mind of everyone in Madurai is like that.....nothing amuzing bout the same. I've experienced many circumstances like this........infact if you move with all levels of them you'll find almost everyone on the upper cream like that and the person in the lowest position also is more or less the same. Its only the midlevel which is corrupt....
கல்வெட்டு,
நீங்கள் சொன்னது போல் goodnews india-வுக்கு எழுதியுள்ளேன்.
அதோடு, என் ஆங்கில ப்ளாக்கிலும் ஒரு பதிவிட்டுள்ளேன்.
I SALUTE MADURAI A.C. (TRAFFIC)
டெல்பின்,
நீங்கள் சொன்னது போல் காவல்துறை மேலதிகாரிகளுக்கு மெயில் அனுப்புகிறேன் - ஆங்கிலப் பதிவின் தொடுப்போடு.
முகவரிகள் தந்தமைக்கு நன்றி
தெக்ஸ்,
//இருந்தாலும் உங்களுக்கும் அசாத்திய நம்பிக்கையைதான் போங்கள்..//
வாழ்க்கையே நம்பிக்கைதானே,இல்லியா?
:)
enRenRum-anbudan.BALA,
//மதுரை ஒண்ணும் அவ்வளவு மோசமில்லன்னு தோணுது ;-)//
என்ன சொல்ல வர்ரீங்க... மதுரையப் பத்தி ரொம்ப மோசமான மதிப்பு போட்டிருப்பீங்க போலும். வேணாம் சார், என்ன வச்சு மதுரைய மோசமா நினக்காதீங்க :(
மத்தவங்க எல்லாரும் நல்ல மனுசங்க, சார் ! வேணும்னா, அடுத்து அய்யனார் சொல்றதை வாசிச்சி பாருங்க ...
-L-L-D-a-s-u,
உங்களுக்குமா..?
ரொம்ப நன்றி
அய்யனார்,
மதுரைக்கே நற்சான்றிதழ் கொடுத்திருக்கீங்க.. அப்படியே போகும்போது எ.அ. பாலாவிடம் சொல்லிட்டு போங்க....!
ஓகை,
அது நீதித்துறை தொடர்பான விஷயம். அதைவிடவும், காவல்துறையை நான் சாடிய விஷயங்கள் பலவுண்டு. அப்படிச் சாடிய எனக்கே சந்தோஷமும் அதிர்ச்சியும் தந்து விட்டார் இந்த காவல்துறை அதிகாரி.
ஜிரா,
//இது உண்மையான மாற்றமாக எல்லாக் காவல்துறையிலும் தொடர்ந்தா நல்லா இருக்கும்.//
என் ஆவலும் அதுதான்.
நந்தா,
நம்புங்கள் நந்தா !
கடப்பாரை,
உங்கள் அளவு எனக்குப் பழக்கம் இல்லாததானாலோ என்னவோ நீங்கள் சொல்வது எனக்கு புதிதாகத் தெரிகிறது. அப்படியிருப்பின் மிக்க மகிழ்ச்சி.
நிகழ்வுகளை சீராக்க பதிவுகளை இட்டதோடல்லாமல் நல்ல பணிகளை பாராட்டி பலருக்கும் எடுத்துச் செல்லும் உங்கள் தன்மை யாவரும் பின்பற்ற வேண்டியது.
வணக்கம்
உங்களது இந்தப் பதிவு இந்த வார பூங்கா இதழுக்கான தமிழ்மண வாசிப்பில் என்னை கவர்ந்த பதிவுகளில் ஒன்றாக தெரிவுசெய்துள்ளேன்.
பாராட்டுக்களுடன் மேலும் எழுத வாழ்த்துக்கள்.
இதை கேட்கும் பொழுது தேன் வந்து பாயிது காதினிலே...
கோடி வாழ்த்துக்கள் இந்த காவலர்களுக்கும் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும்....
just send the mail to below mail ids...
cop_mdu@yahoo.co.in
cop_mdu@dataone.in
tnpolice@tn.nic.in
அன்புமிக்க அதிகாரிகளே!
மதுரை காவல்துறை அதிகாரிகளை பற்றி வலைபூ பக்கத்தில் வந்த செய்தி... தெருவிக்கவும் அனைவருக்கும்
http://dharumi.blogspot.com/2007/06/224.html
கோடான கோடி வாழ்த்துக்கள் தங்களுக்கு,
தொடரட்டும் தங்கள் பணி! மேன் மேலூம் சிறக்க இயற்கை தாயை பிராத்திக்கின்றேன்...
அன்புடன்,
தமிழ். சரவணன்
Post a Comment