Author: தருமி
•3/13/2010 12:01:00 AM
*
பழந்தின்னு கொட்டை போடுற வயசில இருக்கிற ஆளப்பார்த்து உன் பதின்ம வயசப்பத்தி சொல்லுன்னு கேக்கிறதுக்கு; ஒரு தைரியம் வேணும். உள்ளதே வயசானதுக அனேகமா அதத்தான் பண்ணிக்கிட்டு இருக்குங்க. ஆனா அதுகள போய் இன்னும் உன் பழச எடுத்து உடுன்னு கேட்டா ஒரே குழப்பாமா போய்டுது .. எதச் சொல்றது .. எத உட்டுர்ரது அப்டின்னு ஒரு கலாட்டா; குழப்பம். இந்த கலாட்டாவில் / குழப்பத்தில் இன்னைக்கி எழுதிட வேண்டியதுதான் நினச்சாலும் எப்படியோ இழுத்துக்கிட்டே போகுது. தெக்ஸ் கேட்டு ஒரு மாசம் இருக்கும்னு நினைக்கிறேன்; இன்னைக்கி நாளைக்கின்னு இதுவரை தள்ளிப் போட்டாச்சு. ஆனா இன்னைக்கி (மார்ச் 12) களத்தில இறங்கியாச்சி .. ஆனா எப்போ முடியும்னுதான் தெரியலை!

பதிவர் proposes ..பதிவு disposes!!

ஏதாவது நல்லது ஒண்ணு ரெண்டை எடுத்து உடலாம்னு நினைச்சி ரீவைண்ட் பண்ணினால் நல்லது ஒண்ணுமே கண்ணுல காணோம். எதிலயும் முன்னால் நிக்கலை. நல்லது ஏதும் செஞ்சதாக நினைவில்லை. வீட்டுக்கு அடங்குன பிள்ளையாய், உலகம் அதிகம் தெரியாது, தேடிச்சோறு நிதந்தின்று ...



காலை நான்கு நான்கே கால் மணிக்கு அப்பாவும் அம்மாவும் என்னை எழுப்பி விட்டு  கோயிலுக்கு முதல் பூசைக்குப் போவார்கள். அவர்கள் திரும்பிவரும் ஐந்து மணிக்குள் நான் பல்விளக்கி சட்டை மாற்றி இரண்டாவது பூசைக்கு தயாராக இருக்க வேண்டும். ஐந்தரை மணிக்குப் பூசை. அது முடிந்து அப்படியே சாமியார்கள் ஹவுசில் இருக்கும் பால் பண்ணையில் பாலை வாங்கிக் கொண்டு வீடு வரணும். பதின்ம வயதின் முதல் பாதியில்  இந்த வேலை ஒழுங்காக நடந்தேறியது. இந்த நிகழ்வுகளோடு சேர்த்து ஒரு விஷயம் சொல்லணும். ஆனா இப்போ இல்லை. அடுத்த "சீன்ல" சொல்றேன்.


இந்த ரொட்டீனோடு இன்னும் கொஞ்சம் வயசானவுடன் இன்னொரு வேலையும் சேர்ந்து கொண்டது. வாழ்க்கையில -அதுவும் இந்தப் பதின்ம வயதை நினைச்சா - மனசுக்குள்ள ஓடுற விஷயம் அது. வீட்டுக்கு எல்லோரும் குளிக்கிறதுக்கு நாளிக்கிணத்தில இருந்து தண்ணி இறைக்கிற விஷயம்தான் அது. வீட்டுக்குள்ள போர் போட்டு தண்ணீர் பிடிக்கிறதுக்கெல்லாம் முந்தின காலம் அது. வீட்டுக்குள்ளேயே நாலடி அகலத்தில சிமெண்டு உரை இறக்கி வீட்டுக்குள்ளேயே ஒரு கிணறு இருக்கும். நல்ல ஆழமா இருக்கும். மதியம் எட்டிப் பார்த்தால் தூரத்தில் நம்ம தலையின் நிழல் தெரியும். கிணத்துக்கு வெளியே நான்கு பக்கமும் அகலமாகக் கருங்கல் வைத்திருக்கும். மூணு மூணரையடி உயரம் இருக்கலாம். ஏன்னா, அப்போ அந்தக் கல் ஏறக்குறைய என் நெஞ்சு வரை இருக்கும். தலைக்கு மேலே ஒரு உருளி. பின்னால்தான் டயர் வைத்து தண்ணீர் இறைப்போம். ஆனால் நான் சொல்லும் காலத்த்தில் வெறும் கயிறுதான். நல்ல சைஸ்ல ஒரு வாளி. தண்ணீர் இறைத்து இடது பக்கம் இருக்கிற ஒரு பெரிய ட்ரம்ல கொட்டணும்.

நான் இறைக்க ஆரம்பித்த காலத்தில் நெம்புகோல் தத்துவம் எல்லாம் பாவிக்கணும். அதாவது தண்ணீர் வெயிட்டை என்னால இழுக்க முடியாது. அதனால இடது கால் முட்டியை அந்தக் கற்சுவர் மேல் அழுத்தி வச்சுக்கிட்டு, வலது கால நல்லா பின்னால வச்சிக்கிட்டு முட்டி, முக்கி தண்ணீர் இறைக்கணும். வழக்கமா ஒழுங்கா கோவிலுக்கு வேற போவோமா .. அங்க முழங்கால் போட்டு சாமி கும்பிடுறதுனால முழங்காலில் எல்லாக் கிறித்துவ பிள்ளைகளுக்கும் (அந்தக் காலத்தில்) கருப்புத் தளும்பு வந்திரும். அதோடு இந்த தண்ணீர் இறைக்கிறதுல சேர்ந்து முழங்காலில் எப்போதும் ஒரு பெரிய கருப்பா காய்ச்சுப் போயிருக்கும்.

வீட்டுக்கு தண்ணீர் இறைக்கிறதோடு விருந்தாளிகள் வந்தால் எக்ஸ்ட்ரா லோடு இறைக்கணும். அதிலும் ஒரு உறவினர் வந்தால் மனசுக்குள்ள நல்லா திட்டுவேன்.ஏன்னா அவர் வர்ரதே எப்போதும் ராத்திரி பத்து மணிக்கு மேல்தான். அவர் வரும்போது அனேகமா நான் தூங்கியிருப்பேன். என்னை அப்பா எழுப்பி விட்டு தண்ணீர் இரைக்கச் சொல்வார்கள். அவரும் அப்பாவும் மொட்டை மெத்தைக்கு அரட்டை அடிக்கப் போய்விடுவார்கள். நான் தண்ணீர் இறைக்கணும். அம்மா அந்த நேரத்தில் அவருக்குச் சாப்பிட ஏதாவது செய்யணும். எப்படியோ தூங்கிக்கொண்டே ஒரு வழியா அந்த வேலையை செஞ்சிட்டு படுக்கப் போற சுகம் இருக்கே ... அதெல்லாம் அனுபவிக்கணுங்க ...!





அடுத்த சீன் ...

கோவிலுக்குப் போய்ட்டு, பூசை பாத்துட்டு பால் வாங்கிட்டு வரும்போது நடந்த ஒரு விஷயம் சொல்றேன்னு சொன்னேனே ... அது மனசுக்குள்ள போட்டு பூட்டி வச்சிருந்த ஒரு விஷயம். இதுவரை அதை யாரிடமும் சொன்னதாக நினைவில்லை. இந்தப் பதிவை எழுதணும்னு நினச்சதும் அதுவும் நினைவுக்கு வந்தது. ஆனா அதை புரிஞ்சுக்கணும்னா முதல்ல நீங்க இதைப் படிக்கணுமே ...

அத வாசிச்சிட்டீங்கன்னா தொடருங்க ...

பொதுவா காலையில அப்பா அம்மா கோவிலுக்குப் புறப்பட்டவுடன் என்னை எழுப்பி உட்கார வச்சிட்டு போவாங்க, அனேகமா பல நாள் அப்படியே சாஞ்சிருவேன். இன்னொரு குட்டித் தூக்கம் போட்டுட்டு அவங்க திரும்பி வர்ரதுக்குள்ள முழிச்சி ரெடியாவேன். பல நாள் தூங்கிடுவேன். அதுனால சில சமயம் அப்பா என்னையும் அவங்களோடு எழுப்பி பல் விளக்க வச்சிருவாங்க. அப்படி ஒரு நாள் மெத்தைப் படியில் உட்கார்ந்து பல் விளக்கிக்கிட்டு இருக்கும்போது பக்கத்தில ஒரு பேப்பர் கசங்கிக் கிடந்தது. மெல்ல எடுத்துப் பார்த்தேன். "அம்மா " படம் மாதிரி தெரிந்தது. ஏற்கெனவே ஓரிரண்டு படம் மட்டுமே பார்த்திருக்கிறேன். இது அந்தப் படங்கள் மாதிரி இல்லாமல் வேறு படம் மாதிரி இருந்தது. அந்த அரையிருட்டில் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த போது அப்பா வந்தார்கள், சட்டென்று அந்தப் படத்தை மெத்தைப் படியின் ஒரு ஓரத்தில் 'ஒளித்து' வைத்துவிட்டு, கோவிலுக்குப் புறப்பட்டுப் போனேன். திரும்பி வந்ததும் அதைத் தேடினேன். கண்ணில் படவில்லை. யாரிடம் கேட்கவும் மனமில்லை.

சில நாட்களாக மனதில் ஒரு ஓரத்தில் ஒரு வருத்தம். வீட்டில் எல்லாம் நல்ல படியாக இருந்தாலும், சுற்றியுள்ளவர்கள் ஏதாவது சொல்லி மனசைக் குழப்புவதுண்டு. அதோடு, ரொம்ப பெரிய ஆளான பிறகும்கூட அம்மா பற்றி ஏதாவது பேசினால் ரொம்ப சென்டியாகி விடுவதுண்டு. அட ... சினிமா பாட்டு கேட்டால் கூட பொசுக்குன்னு அழுகை வந்திரும்.

அந்தக் காலத்தில் நான் தனியாக எனக்குள் பேசிக்கொண்டு, யோசித்துக் கொண்டிருக்கும் இடம், காலம் எதுவென்றால் நான் தனியே அரையிருட்டில் கோவிலுக்கு ஐந்து ஐந்தரை மணிக்குப் போவேனே அப்போதுதான். இந்த நிகழ்வு நடந்து கொஞ்ச நாள் வரை 'அம்மா' நினைப்பு ரொம்ப வந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் .. இன்னும் அந்த இடம் கூட நன்கு நினைவில் இருக்கிறது. தெற்கு மாரட்டு வீதியின் திருப்பத்தில் இருக்கும் திரெளபதியம்மன் கோவில். எனக்குள் யோசிச்சிக்கிட்டு போனேன். இப்போது நடப்பதெல்லாம் ஒரு கனவுதான். இதிலிருந்து நான் விழித்ததும் 'அம்மா' வந்து விடுவார்கள். நான் அவர்களோடு சேர்ந்து கொள்ள முடியும். அதுவரை இந்தத் 'தூக்கம்' தொடரும் என்று நினைத்தேன்..... இப்போது நடப்பது கனவாகவும், தூக்கமாகவும், அதிலிருந்து விழித்தால் (நடந்து முடிந்தது) உண்மையாகவும் இருக்குமென்று நினைத்தேன்.

நடந்தது என்னவோ அனேகமாக பதினைந்து வயதுக்குள் இருக்குமென்று நினைக்கிறேன். ஆனால் வயதான காலத்தில், ஏறத்தாழ ஐம்பதாவது வயதில் வாசித்த ஒரு வாசிப்பு மீண்டும் மனதை இடர வைத்தது. வாசித்தது Taosim பற்றியது. அதில் வரும் CHUANG TZU -ம் அவரது பட்டாம்பூச்சி கனவு பற்றியும் வாசித்த போது நான் என் பதினைந்தாம் வயதில் நினைத்தது நினைவுக்கு வந்தது.

CHUANG TZU ஒரு கனவு காண்கிறார். தானே ஒரு பட்டாம் பூச்சியாக சிறகடித்துப் பறப்பது போல் ஒரு கனவு. காலையில் எழுந்ததும் அவர் மனதில் தோன்றியது:    தான் பட்டாம்பூச்சியாக கனவில் வந்தது உண்மையா ... இல்லை பட்டாம் பூச்சி தான் உண்மையா.... தன்னை மனிதனாக நினைத்துக் கொள்வதே ஒரு கனவா?

இதில் எது கனவு? எது உண்மை?

CHUANG TZU -க்கு வந்த ஞான திருஷ்டி எனக்கு அந்தப் பதினைந்து வயதில் எப்படி வந்தது ?

கனவுகளே வாழ்க்கை ... வாழ்க்கையே ஒரு கனவு ….


பி.கு.
நான் சொன்ன கிணறு பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கம் வேணும்னா இங்க வந்து இன்னொரு பதிவு வாசிங்க ....



இத் தொடரைத் தொடர நான் அழைக்க விரும்புவது...

முனைவர் P. கந்தசாமி
T.B.R.ஜோசப்
வால்பையன் (ஒரு சேஞ்சுக்காக.... ஒரு சின்ன ஆளும்[வயசில])

சீனா
துளசி
சாம் தாத்தா



==============
முனைவர் P. கந்தசாமியின் பதிவு
T.B.R.ஜோசப்பின் பதிவு
வால்பையன் பதிவு


This entry was posted on 3/13/2010 12:01:00 AM and is filed under

34 மறுமொழிகள்:

On Saturday, March 13, 2010 2:17:00 AM , அமர பாரதி said...

தருமி சார், அருமை. இன்றுதான் "கல்யான வைபோகமே" பதிவு படித்தேன். என்ன சொல்வது? அதுவும் அருமையே. "அதிலிருந்து அப்படித்தான்" என்று சொல்லியிருக்கிறீர்களே, அது பெயருக்காக மட்டும்தானா? உண்மையிலேயே அப்படியா?

 
On Saturday, March 13, 2010 5:01:00 AM , Thekkikattan|தெகா said...

ஹ்ம்ம்ம்.... தருமி, உங்கள தொடழைப்பு எழுத அழைத்ததிற்கும் நீங்கள் கிடந்து தவித்ததிற்கும் என்ன காரணமென்றே இப்பொழுதான் என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

To be honest with you, it is too heavy and overwhelming, Sam! I could not take some part of flow in the passage, tear wells up... you made me break into tears for a reason ...

இப்பவும் என்ன இங்கும் எழுதுறதின்னே தெரியலை. கண்ணீரை துடைச்சு தூரப் போட்டு சைட் பார்வையில உட்கார்ந்து இந்த பின்னூட்டத்தை தட்டுறேன்.

எப்படிங்க இவ்வளவு சின்ன வயசில அவ்வளவு விசயங்களும் ஆழமா மனசில பதிஞ்சிருமா...

 
On Saturday, March 13, 2010 6:02:00 AM , cheena (சீனா) said...

அன்பின் தருமி அண்ணே

புதிய பக்கம் பளிச்சுன்னு இருக்கு

உங்களைப் போலவே

பதிவு படிக்கணூம் - மெதுவாப் படிக்கனூம் - நுனிப்புல் மேய விரும்பலே - இன்னிக்குள்ளே பதில் போட்டுடறேன்

நல்லாருக்கு நுனிப்புல் மேஞ்சது

 
On Saturday, March 13, 2010 6:53:00 AM , ரோஸ்விக் said...

பதின்மம் பற்றி திறந்தமனதுடன் சொல்லக்கூடிய வயது தான் உங்களுக்கு... :-)

தங்களின் பகுத்தறிவு சம்பந்தமான பதிவுகள் (நான் ஏன் மதம் மாறினேன்) அனைத்தும் படித்தேன். மிக அறிவுபூர்வமான ஓன்று. நானும் தூய மரியன்னை மேல் நிலைப் பள்ளியில் தான் பயின்றேன்.

என்றாவது ஒரு நாள் சந்திப்போம் என்ற நம்பிக்கையில்.... :-)

 
On Saturday, March 13, 2010 7:33:00 AM , காட்டாறு said...

//தேடிச்சோறு நிதந்தின்று ...//
நிதர்சனம் லேசா மனசை கீறுது. :-( Past is over and gone. No guarantee for future. So let us live this moment asif it were the last. :-)

//பதின்ம வயதின் முதல் பாதியில் இந்த வேலை ஒழுங்காக நடந்தேறியது. இந்த நிகழ்வுகளோடு சேர்த்து ஒரு விஷயம் சொல்லணும். ஆனா இப்போ இல்லை. அடுத்த "சீன்ல" சொல்றேன்.
//
அடுத்த சீன் எப்போங்க வரும். ஆவலா இருக்கோமில்ல. :-)

 
On Saturday, March 13, 2010 11:03:00 AM , SurveySan said...

long live the blog world. lovely post )

 
On Saturday, March 13, 2010 12:30:00 PM , உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஏதாவது நல்லது ஒண்ணு ரெண்டை எடுத்து உடலாம்னு நினைச்சி ரீவைண்ட் பண்ணினால் நல்லது ஒண்ணுமே கண்ணுல காணோம். எதிலயும் முன்னால் நிக்கலை. நல்லது ஏதும் செஞ்சதாக நினைவில்லை.]]]

ஹி.. ஹி.. எப்படி நினைவுக்கு வரும்..? ஏதாவது செஞ்சிருந்தாத்தானே ரீவைண்ட் பண்ண முடியும்..?

ம்ஹூம்.. இப்ப வருத்தப்பட்டு என்ன புண்ணியம்..?

 
On Saturday, March 13, 2010 8:46:00 PM , வி.பாலகுமார் said...

நினைவுகள் அழகு.

எங்கேயோ படித்த வரிகள் ஞாபகம் வருகிறது.

" நான் மனிதன். ஒரு வண்ணத்துப்பூச்சியாய் உருமாறியதாய் கனவு காண்கிறேன். அல்லது நான் வண்ணத்துப்பூச்சி ஒரு மனிதனாய் உருமாறியதாய் கனவு கண்டுகொண்டு இருக்கிறேன் "

 
On Sunday, March 14, 2010 10:41:00 AM , delphine said...

I find no words to comment on your post! very touching!! The best portion of a good man's life!!!!!!

 
On Monday, March 15, 2010 1:32:00 PM , தருமி said...

அமர பாரதி,
உண்மை எப்படியிருந்தாலும், இழப்பை மறக்கவோ, மறுக்கவோ முடியாதல்லவா ... இன்று வரை?

 
On Monday, March 15, 2010 1:33:00 PM , தருமி said...

விடுங்க தெக்ஸ்.

சீனா,
முனிப்புல் எது?

ரோஸ்விக்,
தொடர்பில் இருக்கலாமே?

 
On Monday, March 15, 2010 1:36:00 PM , தருமி said...

காட்டாறு,

(அடுத்த சீன் அங்கேயே இருக்குல்ல?!)

உ.த.,
//இப்ப வருத்தப்பட்டு என்ன புண்ணியம்..?//

அதச் சொல்லுங்க ...

வி.பாலகுமார்,
அதான் butterfly dreams ..!


டெல்பின்,
மிக்க நன்றி

 
On Monday, March 15, 2010 1:37:00 PM , தருமி said...

SurveySan,

//long live the blog world.//

இது எதுக்கு?

 
On Monday, March 15, 2010 3:09:00 PM , ஸ்ரீ said...

:-)))

 
On Monday, March 15, 2010 7:11:00 PM , தருமி said...

//ஸ்ரீ said...

:-))) //

ஸ்ரீ,
அப்டின்னா ...?

 
On Monday, March 15, 2010 8:55:00 PM , அமர பாரதி said...

தருமி சார்,

எனக்குப் பின்னூட்டம் இட்டதற்கு நன்றி. இத்தனை பேர் எழுதறீங்க. அதையெல்லாம் படிச்சாலே போதும் சார். நானும் எதுக்கு எழுதிக்கிட்டு?

 
On Monday, March 15, 2010 9:33:00 PM , தருமி said...

அமர பாரதி,

சரி .. சோதனைப் பதிவு ஒண்ணுக்கு ரெண்டு போட்டுடீங்க. அடுத்தது சாதனைப் பதிவு போடுங்க. காத்திருக்கோம்ல ..........

நாங்களே எழுதுறோம்னா நீங்க எழுதவேணாமா ...?

 
On Monday, March 15, 2010 9:49:00 PM , cheena (சீனா) said...

அன்பின் தருமி அண்ணே

இப்படி ஆரம்பிச்சு

//பழந்தின்னு கொட்டை போடுற வயசில இருக்கிற ஆளப்பார்த்து உன் பதின்ம வயசப்பத்தி சொல்லுன்னு கேக்கிறதுக்கு; ஒரு தைரியம் வேணும். உள்ளதே வயசானதுக அனேகமா அதத்தான் பண்ணிக்கிட்டு இருக்குங்க. ஆனா அதுகள போய் இன்னும் உன் பழச எடுத்து உடுன்னு கேட்டா ஒரே குழப்பாமா போய்டுது .. எதச் சொல்றது .. எத உட்டுர்ரது //

இப்படிச் சொல்லிட்டு - அழைத்த ஆறு பெயரும் நேற்றுப் பிறந்த மழலைகளா அண்ணே

 
On Monday, March 15, 2010 9:53:00 PM , cheena (சீனா) said...

//ஏதாவது நல்லது ஒண்ணு ரெண்டை எடுத்து உடலாம்னு நினைச்சி ரீவைண்ட் பண்ணினால் நல்லது ஒண்ணுமே கண்ணுல காணோம். எதிலயும் முன்னால் நிக்கலை. நல்லது ஏதும் செஞ்சதாக நினைவில்லை. வீட்டுக்கு அடங்குன பிள்ளையாய், உலகம் அதிகம் தெரியாது, தேடிச்சோறு நிதந்தின்று ...//
ஆகா ஆகா - அண்ணே - தன்னடக்கமா - ஒண்ணு தெரியுமா - பதின்ம வயதுன்றது குறும்பு பண்ற 13 - 19 வயது - அப்பல்லாம் நல்லது ( அப்படினனா என்ன ? ) செய்ய முடியடஹு - சரியா அண்ணே

 
On Monday, March 15, 2010 9:55:00 PM , cheena (சீனா) said...

இரண்டாம் பூச முடிஞ்சு பால் வாங்கிக்கிட்டு வரும்போது நடந்த்தென்ன ? விரவில் அடுத்த சீனில் எதிர்பாருங்கள் - ரசிகப் பெருமக்களே !!!

வெயிட்டிங்க்ஸ் அண்ணே !

 
On Monday, March 15, 2010 9:57:00 PM , cheena (சீனா) said...

முழங்கால்ல கருப்புக் காய்ச்சறதுக்கு நல்ல விளக்கம் அண்ணே ! ஏண்ணே பள்ளிக்கூடத்துல முட்டி போட்டதில்லையா நீங்கல்லாம்

 
On Monday, March 15, 2010 9:59:00 PM , cheena (சீனா) said...

தூங்கறவன் எழுந்திருச்சி - தூங்கிக்கிட்டே வேலை செஞ்சு - திரும்பப் படுக்கப் போற சுகம் - அது சரி நான் அணுபவிச்சதில்ல அண்ணே

 
On Monday, March 15, 2010 10:00:00 PM , cheena (சீனா) said...

தூங்கறவன் எழுந்து - தூங்கிக்கிடே வேலை செஞ்சு - மறுபடியும் தூங்கப்போற சுகம் - நான் அனுபவிச்சதில்ல அண்ணே !

 
On Monday, March 15, 2010 10:10:00 PM , cheena (சீனா) said...

அம்மா படம் - மங்கலாக நினைவு - ஒளித்து வைத்தது - காணாமல் போனது - காலை அஞ்சிலிருந்து அஞ்சறை - ஒரே சிந்தனை - அண்ணே கனம் தாங்க இயலவில்லை அண்ணே - 15 வயதில் நடந்தது புரிய 50 வயதில் படித்தது உதவுகிறதா அண்ணே

அண்ணே என்ன சொல்வதெண்ரு தெரியவில்லை

 
On Monday, March 15, 2010 10:47:00 PM , தருமி said...

//அழைத்த ஆறு பெயரும் நேற்றுப் பிறந்த மழலைகளா//
எல்லாம் ஒரு தைரியம்தான்!

//பதின்ம வயதுன்றது குறும்பு பண்ற 13 - 19 வயது -//
வேணும்னா திருட்டு தம் அடிச்சது எழுதலாம்!

//வெயிட்டிங்க்ஸ் அண்ணே !//
சொல்லிட்டேன் … அதுதான் பட்டாம் பூச்சியின் கனவு

//பள்ளிக்கூடத்துல முட்டி போட்டதில்லையா நீங்கல்லாம்//
வாத்தியார்களிடமிருந்து புழச்சிக்கிட்டேன்; ஆனா சாமிக்கிட்ட மாட்டிக்கிட்டேன்.

//தூங்கறவன் எழுந்து - தூங்கிக்கிடே வேலை செஞ்சு - மறுபடியும் தூங்கப்போற சுகம் -//
அட … என்ன சுகம் அது. இன்னும் இருக்கு அது!

//15 வயதில் நடந்தது புரிய 50 வயதில் படித்தது உதவுகிறதா//
புரிஞ்சிது அப்டின்றதை விட, கனம் தெரிஞ்சிது.

 
On Wednesday, March 17, 2010 9:50:00 AM , Bullet மணி said...

பல பதிவர்கள் தங்களது பதின்மம் என்று இளமை காலத்தை விவரித்து இடுகையிடுகிறார்கள்.

இந்த Nostalgia நமக்கு நல்லதா என்று google ல் சொடுக்கினேன்.

Nostalgia நமது உள்வியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாக சில ஆராய்ச்சிகள் கூறுகிறது.

படித்த எனக்கும் இந்த Nostalgia ஓட்டிக் கொள்ளவே செய்கிறது.

இந்த தங்களது பதின்ம பதிவு நன்றாகவே இருந்தது.

 
On Wednesday, March 17, 2010 10:57:00 AM , செல்வநாயகி said...

////உண்மை எப்படியிருந்தாலும், இழப்பை மறக்கவோ, மறுக்கவோ முடியாதல்லவா ... இன்று வரை?///

true and very touching.

 
On Wednesday, March 17, 2010 1:08:00 PM , சசிகுமார் said...

நண்பரே தூள் கிளப்பிடீங்க, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

 
On Thursday, March 18, 2010 4:32:00 PM , டி.பி.ஆர் said...

அருமையா, நிறைவா இருந்தது...

பழைய நிகழ்வுகளை அப்படியே கண்முன்னே நிறுத்தும் எழுத்து...

தன்னுடைய தந்தையின் திருமணத்தை மகனே பார்ப்பது... இதை ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை படித்தபோது...

திரும்பிப் பார்ப்பதில்தான் எத்தனை சுகம்!

 
On Thursday, March 18, 2010 8:50:00 PM , மங்கை said...

//"அம்மா " படம் மாதிரி தெரிந்தது. ஏற்கெனவே ஓரிரண்டு படம் மட்டுமே பார்த்திருக்கிறேன்..... வைத்துவிட்டு, கோவிலுக்குப் புறப்பட்டுப் போனேன். திரும்பி வந்ததும் அதைத் தேடினேன். கண்ணில் படவில்லை. யாரிடம் கேட்கவும் மனமில்லை.//

இது தான் மனதை புரட்டி போட்டுச்சு.. என் கண் முன்னால் அந்தக் குழந்தை..ம்ம்ம்ம்.. இத்தனை அழுத்தமா உணர்வுகளை சொன்ன பதிவை நான் படிச்சதில்லை...

 
On Monday, March 29, 2010 8:21:00 AM , சாம் தாத்தா said...

அண்ணா, மனசு மிகக் கனத்துப் போய், மெல்ல வலிக்கிறது.

உங்க அளவுக்கு என்னால எழுத முடியுமா தெரியலை?

முயற்சி செய்யறேன் அண்ணா.

 
On Thursday, April 08, 2010 1:28:00 PM , Ponchandar said...

குறும்பலா பேரி என்னோட சகலையோட ஊர். வந்திருக்கீகளா அங்கிட்டு ???

 
On Thursday, April 08, 2010 3:19:00 PM , தருமி said...

பொன்சந்தர்,
அம்மா ஊராச்சே .. வராமலா இருந்திருப்பேன்?

 
On Tuesday, April 13, 2010 9:10:00 PM , இரசிகை said...

vannaththup poochchi.....:)

 
Related Posts with Thumbnails