Monday, September 05, 2011

526. பிறந்த மண்ணின் வாசனை ... பல ஆண்டுகளுக்குப் பின்

*
பள்ளிப் பருவத்தில் சொந்த ஊர் செல்வதற்கு முந்திய இரவு சரியாகத் தூக்கம் வராதது போல் தெரியும். இன்று, ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு மேல் சொந்த ஊர் பக்கம் போகாத எனக்கு அதேபோல் ஊருக்குப் புறப்படுவதற்கு முந்திய இரவு எப்போதும் போல் தூக்கம் உடனே வராதது ஆச்சரியமாக இருந்தது. பழைய நினைவுகளை மீண்டும் நினைத்துப் பார்த்துக் கொண்டேன்.

சின்ன கிராமம். பெயர்: காசியாபுரம். பக்கத்தில் கொஞ்சம் பெரிய  ஊர்கள் இரண்டு : -- 1.  நல்லூர் - நெல்லை மாவட்டத்தில் பெயர் பெற்ற, 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் ஒரு உயர் நிலைப் பள்ளிக்கூடம்;  இப்போது அங்கு ஒரு கல்லூரியும் கூட;  2.  ஆலடிப்பட்டி - ஸ்ரீ வைத்தியலிங்கசாமி கோவில் இருக்கும் ஊர். இந்த இரு ஊர்களுக்கும் கிழக்குப் பக்கம் இருப்பதே எங்கள் ஊர். .

சிறு வயதில் வருடத்திற்கு இரு முறை அங்கு செல்வதுண்டு - கிறிஸ்துமஸ் விடுமுறைக்கும், கோடை விடுமுறைக்கும். பின் அது கோடை விடுமுறை மட்டும் என்றானது. வளர்ந்ததும் எப்போதோ ஒரு முறை என்றானது.  ஊரிலிருந்த அப்பம்மா இறந்ததும் ஏறக்குறைய முழுவதுமாக நின்று போனது. இப்போது போகும்போது நிறைய மாற்றங்கள் ... ஆச்சரியங்கள் ... முன்னேற்றங்கள்.

ஒளவையார் தன் நாட்டைப் பார்த்து வாழ்த்த வேண்டுமென்று மன்னன் விரும்பினானாம். ஆனால் நாட்டைப் பார்த்த தமிழ்க்கிழவி ‘வரப்புயர’ என்று மட்டும் வாழ்த்தினாளாம். ஏமாந்த மன்னனிடம் பின் அவள், வரப்புயர நீர் உயரும். நீர் உயர்ந்தால் நெல்லுயரும்; நெல்லுயர்ந்தால் குடி உயரும்; குடி உயர்ந்தால் நாடு உயரும்; நாடு உயர்ந்தால் முடி உயரும் என்றாளாம். எனக்கு இன்று என் ஊரைப் பார்க்கும்போது ‘ரோடு உயர’ என்று யாரோ வாழ்த்தியிருப்பார்களோ என்று தோன்றியது. எங்கும் எதிலும் சாலைகள் ... வெறும் மணல் தரைகள் சாலைகளாக மாறி விட்டன. அதனால் ஊரின் முகமே மாறி விட்டது. பெரிய பாட்டையாவின் வீட்டிற்கு அந்தக் காலத்தில் மிகவும் மவுசு அதிகம். பெரிய உயரமான, அகலமான வீடு. படத்தில் நீலக்கலரில் தெரிவது பாதி வீடு. இன்னும் பாதி கைமாறி விட்டது.
பெரிய பாட்டையா வீடு
உயரத்தில் என் சின்ன வயதிலிருந்து பார்த்த மஞ்சள் நிறத்து இரு வாழைக்குலைகள் இன்னமும் அதே வண்ணத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.அந்தக் காலத்தில் அந்த வீட்டை 'வாழைப்பழக் குலை வீடு' என்பார்கள் . அந்த வீட்டின் தென்பக்கத்து திண்ணை வீதியிலிருந்து நான்கடிக்கு மேல் உயரமாக இருக்கும்.
வாழைப் பழக்குலை வீடு
இப்போது பார்த்தால் ரோட்டிலிருந்து ஓரடி உயரத்தில் திண்ணையிருந்தது. ‘ரோடு உயர’ என்பதாக, ரோடு உயர்ந்து வீடுகள் ‘இறங்கி’ விட்டன போலும்.

இதற்கு அடுத்த தெருவில் எங்கள் பாட்டையா வீடு. அந்தக் காலத்தில் எங்கள் வீட்டுப் படிகளும் தெருவிலிருந்து உயரமாக இருந்தன. இப்போது அந்தப் படிகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. பெரிய பாட்டையா வீட்டை விட சிறிய அந்த வீடு இப்போது அடையாளமும், கம்பீரமும் இழந்து சாதாரணமாக இருந்தது. ஏன் எல்லா வீடுகளும் இப்படி நீலக்கலரில் இருக்கின்றன என்று
எங்கள் தெரு
தெரியவில்லை; பொருளாதாரம் ஒரு காரணமாக இருக்கலாம் - அப்படியே கொஞ்சம் நீலப் பவுடர் போட்டு அடித்ததோ என்னவோ!
சந்தி

இந்த சந்தியில் தெரியும் அந்த ஒற்றைத் தூண் ‘அந்தக் காலத்தில்’ மின் விளக்குகள் வருவதற்கு முன் ஒரு விளக்குத் தூணாக இருந்தது. இருட்டிய பின் இது போன்ற விளக்குத் தூண்களின் தலையில் இருக்கும் மண்ணெண்ணெய் விளக்குகளை ஏற்றவும், காலையில் அவைகளை அணைக்கவும் ஒருவர் கையில் ஒரு தீவட்டியோடு மாலையிலும், ஒரு நீளக் கழியோடு காலையும் வருவதைச் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். அந்த விளக்கின் வெளிச்சம் தரை அளவு கூட நீளாது. ஒரு ஒளிப்பந்து. அவ்வளவே ...

அந்தக் கல்லுக்குப் பக்கத்தில்  இப்போது இருக்கும் வீடு அப்போது கூரை வீடாக இருந்தது. அங்கு இன்னொரு கல் தூண் இருக்கும். ஊரில் நடக்கும் திருட்டு போன்றவைகளில் குற்றம் செய்தோரை அந்தக் கல் தூணில் கட்டி வைப்பார்கள். அப்படி ஒரு நிகழ்வைப் பார்த்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது. புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்று படித்த பிறகு இந்தத் தூணைப் பார்க்கும்போதெல்லாம் புதுமைப்பித்தன் நிச்சயமாக நினைவுக்கு வந்து விடுவார்.

அவ்வப்போது இந்த சந்தியில் காடா விளக்கு வெளிச்சத்தில் ஏலம் நடக்கும். ‘டவுண்காரப் பையனான’ எனக்கு இந்தச் சந்தியின் முக்கில்தான் முதன் முதல் சடுகுடு விளையாட்டு அறிமுகப்படுத்தப் பட்டது. நிலவு ஒளியில் நடந்த ஓர் இரவு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த என்னை விளையாட நண்பர்கள் அழைத்து ‘மேடையேறினேன்’. அப்போதெல்லாம் கபடி என்ற பெயர் இந்த விளையாட்டிற்கு இருந்ததாக நினைவில்லை. அது அப்போது சடுகுடு விளையாட்டு தான். முதன் முறை ஏறி பாடினேன். ஒருவனைத் தொட்டும் விட்டேன். உடனே அங்கேயே நின்று, சடுகுடு என்று பாடுவதை நிறுத்தி விட்டு, அவனைத் தொட்டுட்டேன் என்று பிரகடனப்படுத்தினேன்! அட .. போடா .. நீ அவுட்டுன்னு அவுட்டு கொடுத்துட்டாங்க. அதுக்குப் பிறகுதான் ‘ரூல்ஸ்’ எல்லாம் தெரிந்தது.

இந்தச் சந்தியிலிருந்து தெற்குப் பக்கம் ஒரு தெரு.சிறிது தூரம் சென்றதும் தெரு நின்று, ஒரு முரட்டு சாலை தொடரும். பாறை மயமாக இருக்கும். அங்கிருந்து சிறிது தூரம் சென்றதும் ‘கல்லறைத் தோட்டம்’. ஆனால் இப்போது அங்கெல்லாம் நல்ல சாலை. கல்லறைத் தோட்டம் முன்பு காடாக இருந்தது; ஆனால் இப்போது திருத்தப்பட்டு, வேலி கட்டி, பூட்டிய கதவுகளோடு இருந்தது. அம்மாவின் கல்லறை அங்கிருந்தது. பார்க்கப் போனேன். சிறு வயதில் இங்கே நடந்த ஒரு நிகழ்வும் மறுபடி ரீவைண்ட் ஆனது.

1907ல் இறந்த பூட்டையாவின் கல்லறை
 பூட்டையா, பூட்டி, பாட்டையா, அப்பம்மா கல்லறைகளோடு என் அம்மாவின் கல்லறையும் அங்கே உண்டு. அம்மாவின் கல்லறையை சிறிது நேர்ப் படுத்த ஊரிலிருந்த தம்பி மூலம் ஏற்பாடு செய்து, சில படங்கள் எடுத்து திரும்பினேன்.
பூட்டையா - பாட்டையா கல்லறைகளுக்கு நடுவில் அம்மா கல்லறை

அம்மா கல்லறை - 13.10.’47

ஊரை ஒரு முறைச் சுற்றிப் பார்ப்போமே என்று சுற்றினேன். பாட்டையா காலத்தில் St.Joseph's R.C. Elementary School என்று ஒரு பள்ளி ஆரம்பித்தார். அம்மா இறந்த பிறகு, இரண்டரை வயதிலிருந்து ஐந்து வயது வரை  வாழ்க்கை இப்பள்ளியோடு தொடர்ந்திருந்தது. அதுபற்றி இங்கே கொஞ்சம் சொல்லியிருக்கிறேன். அந்தப் பள்ளி அப்போது கிறித்துவக் கோயிலாகவும் தேவையானபோது உருவெடுக்கும். அந்தப் பள்ளியின் கதை முடிந்து பல ஆண்டுகளாக ஆகிப் போனது; இப்போது வெறும் ஒரு கட்டைச் சுவராக நின்றது. அதைப் படமெடுக்க மனம் வரவில்லை ...

கோவில்



பள்ளியே கோவிலாக இருந்த போதே புதிய கிறித்துவக் கோவிலுக்கான அடிப்படை வேலைகள் முடிந்து, ஜன்னல்கள் அளவில் கட்டைச் சுவராக அந்தக் கட்டிடம் பல ஆண்டுகள் வெறுமனே கிடந்தது. பத்தாண்டுகளுக்கும் மேல் அதுபோல் கிடந்த அந்த இடம் எங்கள் பாட்டையாக்களின் கடைசிக் காலத்தில் மறு உருவெடுக்க ஆரம்பித்தது. மெல்ல வளர்ந்து ஒரு கோவிலாக மாறியது. இப்போது அங்கு தினமும் வழிபாடு நடப்பதாகத் தகவல்.




ஆலடிப்பட்டிக்கு உரிய இந்துக் கோவில் ஸ்ரீ வைத்தியலிங்க சாமி கோவில். இந்தக் கோவிலின் திருவிழா முழு ஆண்டு விடுமுறை நேரத்தில் வரும். ஆகவே முன்பெல்லாம் அந்த விழா நாளில் அடிக்கடி ஊரில் இருப்போம். அடடே .. அந்த வயசில் இரவு நெடு நேரம் விழித்திருந்து கரகாட்டம், வில்லுப் பாட்டு ... அது இதுன்னு நண்பர்களோடு சுற்றியதுண்டு. கரகாட்டம் தான் சிறப்பு நிகழ்ச்சி. ஏனென்றால் நாம் பார்க்க வேண்டிய நண்பிகளுக்கு நேர் எதிராக நாம் பார்வையாளர் வட்டத்தில் நிற்க முடியும். திரும்பிப் பார்க்கும் தொல்லையில்லாமல், நேருக்கு நேர் நிற்கலாமில்லையா...!
ஆலடி ஸ்ரீ வைத்தியலிங்க சாமி கோவில்

அந்தக் கோவிலிலும் பல மாற்றங்கள் தெரிந்தன. கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு ’ஆட்டோ ஸ்டாண்ட்”. ஆச்சரியமாக இருந்தது. மாட்டு வண்டிகளே இருந்த இடங்களில் இப்போது பெரும் மாற்றங்கள். கோவிலுக்கு எதிரில் ஒரு சிறு மேடை உண்டு; அதனுள்ளே ஒரு சின்ன லிங்கம் உண்டு; இந்த மேடை கோவிலுக்கு எதிர்த்த தெருவின் முகப்பை அடைத்து நிற்கும். மிஞ்சிப் போனால் ஒரு சைக்கிள் மட்டும் போகக்கூடிய இடமே மீதியாக முன்பு உண்டு.ஆனால் இப்போது அந்த இடம் எப்படி மாற்றினார்களோ தெரியவில்லை ... அகலமாக அந்த இடம் மாறியிருந்தது. மேடைக்கு ஒரு பக்கம் நல்ல இடைவெளி. லாரிகள் கூட இப்போது கடந்து போகலாம். லிங்கமே வழி விட்டு விட்டது ...! ஆனாலும் அந்த மேடைக்கருகில் நம் அரசியல் கட்சிகளின் கொடிகள் - தி.மு.க., அ.தி.மு.க., தே.தி.மு.க. - கம்பங்களில் பறந்து கொண்டிருந்தன! சாமிக்கும் அரசியலுக்கும் நம் ஊரில் இடமா கிடைக்காது!


 



இன்னும் பார்க்க சில இடங்கள் இருந்தன. படம் எடுக்கவும் சில இடங்களை நினைத்திருந்தேன். முடியாது போயிற்று. சிறு வயதில் ஒரு கிணற்றைப் பார்த்துப் பயப்படுவதுண்டு. மிகப் பெரியது. வெறும் பாறைதான். தண்ணீரே பார்த்ததில்லை. வைத்தியலிங்க சாமி கோவிலில் இருந்து வடக்குப் பக்கம் செல்லும் சாலையில் இருக்கும். ஊர்க்கிணறு என்று ஒன்று உண்டு; அது என் பூட்டையா வெட்டியதாகச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதையும் படமெடுக்க நினைத்தும் எடுக்க வில்லை. பொன்னியின் செல்வன் இணைத்த நண்பன் - அப்பாதுரை - ஒருவன் ஊரில் உண்டு. அவனையும் பார்க்க முடியாது போயிற்று.

அடுத்த முறை போகும்போது விட்டவைகளைத் தொடணும் ...


*
காசியாபுரம் பற்றி வேறு சில பதிவுகள்:

54. மரணம் தொட்ட கணங்கள்...முதல் கணம்

57. எனது "ஜாவா மஹாத்மியம்"...

81. அப்பாவின் கல்யாண வைபோகமே…

  MY APPA'S WEDDING THAT I ATTENDED.
MY VERY EARLY DAYS AT KASIAPURAM
PIETY AT KASIAPURAM
A GREAT ACTOR WAS BORN!


*

20 comments:

Gurusamy Thangavel said...

சுவராசியமாக இருந்தது.

SURYAJEEVA said...

வரலாற்றில் இடம் பெற்று விட்டது உங்கள் ஊரின் வரலாறு... உங்களால்

தருமி said...

நன்றி, தங்கவேல்

எத்தனைக் காலமாயிற்று ‘சந்தித்து’?!

தருமி said...

சாதிக்காத நான் என் ஊரை எப்படி வரலாற்றில் இடம் பெறச் செய்வேன். இருப்பினும் ‘நல்ல வார்த்தைக்கு’ நன்றி.

சார்வாகன் said...

அருமை

சார்வாகன் said...

வணக்கம் அய்யா!!!!!

"மாத பிதா குரு தெய்வம்"
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!!!!!
நன்றி

தருமி said...

சார்வாகன்,
பதிவுலகில் எனக்கு சில ஆசிரியர்கள் உண்டு. நீங்களும் அதில் ஒருவர்.

ஆசிரியர் நாள் வாழ்த்துகள்

கல்வெட்டு said...

பேராசான்,
ஆசிரியர்தின வாழ்த்துகள்.

**
சாலைகளைப் புதுப்பிக்கும்போது ஏற்கனவே உள்ள தார், கற்கள் கலவையை எடுத்துவிட்டு புதிதாகப் போடவேண்டும். ஆனால் அப்ப‌டி நடப்பது இல்லை.

இருக்கும் சாலையில் தார் ஊற்றி மேலும் ரவுண்டு கனமாக்கிவிடுவார்கள். இப்படியே பெருத்துதான் சாலைகள் உயர்ந்து வீடுகள் தாழ்ந்துவிட்டது.
**

ஊர்பற்றிய பதிவிற்கு நன்றி. ஒரு ஊரை அறிமுகப்படுத்தி உள்ளீர்கள்

naren said...

பதிவுக்கு நன்றி,

மனதில் எதோ ஒன்றை தொட்டதைப்போல் இருந்தது.

எல்லோரும் தங்கள் பால்ய கால நினைவுகளை- அதுவும் கிராமத்தின் - நினைவுகளை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

anyway sir teachers day greetings.

Indian said...

தாமதமான ஆசிரியர் நாள் வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

13 - 10 - 1947. அம்மாவைச் சிறு வயதிலேயே இழந்துவிட்டதாக இரு வருடங்களுக்கு முன் சந்தித்த போது நீங்கள் சொன்னது நினைவிற்கு வந்தது ஐயா.

அ. வேல்முருகன் said...

அய்யா, வணக்கம், தாமதாக வருகை புரிந்துள்ளேன் தங்கள் வலைதளத்திற்கு. RC சர்ச்சு எதிர்புறம் உள்ள வீடுதான் எங்கள் வீடு. தற்போது பெரியம்மா மட்டும் அங்கு வசித்து வருகிறார். நாங்கள் சென்னையில்,

காசியாபுரத்தானாக தாங்கள் பார்த்த தளம் எனது வாழ்நாள் சம்பங்களை சிலவற்றை தொகுக்க வேண்டும் என்ற எண்ணத்தால் ஏற்படுத்தியது. எனது எண்ணங்களை வெளிப்படுத்த www.velvetri.blogspot.com என்றொரு தளத்தில் எழுதி வருகிறேன். தங்கள் விமர்சனத்தை எதிர் நோக்கியிருக்கிறேன்,

ஊருக்கு கொடைக்கு மட்டும் செல்வது என வழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம். தாத்தாவின் சொத்துக்களை விற்க கூடாது என்றும், அந்த கிராமத்தின் விதைகள் இந்த கூட்டம் என்பதற்காகவும் சிறிய சொத்தாயிருந்தாலும் விற்கவில்லை.

மற்றபடி தங்களை சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்.

நன்றி

அ. வேல்முருகன் said...

உங்கள் உதவியால் காசியாபுரத்தை இன்று கண்டுகளித்தேன். நன்றி

தருமி said...

கல்வெட்டு
நரேன்
இந்தியன்
.............மிக்க நன்றி

தருமி said...

நன்றி குமரன். நான் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய நாளல்லவா ..?

தருமி said...

வேல்முருகன்
காசியாபுரம் இரு பதிவர்களை உருவாக்கியுள்ளதே .. பெருத்த மகிழ்ச்சி.

எப்படி இப்பதிவைச் சரியாகக் கண்டுபிடித்தீர்களோ..?

தருமி said...

வேல்முருகன்
உங்களை ஒரு சங்கிலிப் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.
வாருங்கள் ...

http://dharumi.blogspot.in/2013/07/672.html

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உங்கள் கிராமத்தில் தெருக்களின் "பளிச்" எனக்கு மிகப்பிடித்தது.
படங்களும் செய்திகளும் இதமானவை- பழமையை விரும்புவோர்க்கு!
இப்படி வீடுகள் இங்கே மாளிகை எனும் வகைக்குள் வந்து, பாரம்பரிய சொத்துக்களாக அரசால் தீர்மானிக்கப்பட்டு, நாம் வாழ்ந்தாலும் இது அரச சொத்தாகக் கண்காணிக்கப்படும். இவற்றில் மாற்றம் செய்ய அரச அனுமதி தேவை, இனிமுடியாதனும் நிலையிலே மாற்றம் செய்யலாம்.அதே போல் திருத்த அனுமதியுண்டு.
பாராமரிப்புக்கு அரச உதவி அத்துடன் வரிச்சலுகையும் உண்டு.
விற்கலாம், வாங்குவோருக்கும் மாற்றம் செய்ய அனுமதியில்லை.
ஜப்பான்,சீனா, அவுஸ்ரேலிய,அமெரிக்கச் செல்வந்தர்கள் ,சிலவற்ரை வாங்குகிறார்கள்.

Unknown said...

My native come in Google ,am proud of this

தருமி said...

lebanon rajesh

யாருப்பா நீங்க ? உங்களப் பத்தி சொல்லுங்க’பா!

அது ஏன் lebanon பேருல்லாம் வருது காசியாபுரத்தில ...?

Post a Comment