Monday, February 17, 2014

714. . யூதாஸின் நற்செய்தி ... 5





***

ஏழு பதிவுகள்: 


***





THE GOSPEL OF
JUDAS


Edited by

RODOLPHE KASSER
MARVIN MEYER
                                        GREGOR WURST



*

நூலில் உள்ள தனிக்கட்டுரைகள் ....

*

கிறித்துவத்தில் ஒரு பெரும் மாற்றம்

யூதாஸின் நற்செய்தியைப் பற்றிய இன்னொரு பார்வை

Bart d. Ehrman

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் 1947-ம் ஆண்டு Dead Sea Scrolls கண்டுபிடிக்கப்பட்ட போது அது மக்களிடையே பெரும் விவாதங்களை எழுப்பியது. (77) அவைகள் ஏசுவைப் பற்றிப் பேசவில்லை. அவை முழுவதுமாக யூத மத நூல்களாகவே இருந்தன. அதோடு கிறித்துவத்தின் ஆரம்ப கால நிலையை அவை சொல்லின. ஆனால் இதற்கு ஓராண்டிற்கு முன் வந்த Nag Hammidi என்ற எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட ஏடுகள் கிறித்துவத்தைப் பற்றி நிறைய சொல்லிச் சென்றன. அவைகளிலிருந்த நற்செய்திகள் பல புதியன. அவை -- Gospel of Truth, Gospel of Philip, Gospel of Thomas.

Gospel of Thomas  இதுவரைஏசு சொல்லி நமக்குத் தெரியாத 114 வசனங்களைக் கொண்டிருந்தது. (78)

யூதாஸின் நற்செய்தி நமக்குத் தெரியாத பலவற்றை முன் வைக்கிறது. நமக்குத் தெரியாத ஒரு  யூதாஸை நமக்கு அறிமுகப் படுத்துகிறது.(79)

நாம் நினைப்பது போல் யூதாஸ் ஒரு மோசமான, புனிதமற்ற, தீமை நிறைந்த மனிதரல்ல. ஆனால் ஏசுவிற்கு நெருங்கிய சீடர். மற்ற சீடர்களை விட ஏசுவைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருந்த மனிதர். ஏசு விரும்பிய படி அவரை எதிரிகளின் கைகளில் கையளித்தார். இதன் மூலம் கடவுளை மறுதலித்து, லெளகீகமாக இருந்த இந்த உலகிலிருந்து தன் வீடான பரலோகத்திற்குச் செல்ல ஏசுவிற்கு உதவினார். (80)

அவைகள் மத்த்திற்கு எதிரானவை என்ற கருத்தில் பல நற்செய்திகள் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால் இப்போதைய கால கட்ட்த்தில் இது போன்ற நூல்கள் ஆவலோடு வரவேற்கப்படுகின்றன. நான்கு நற்செய்திகளும் காலத்தில் மிக முந்தியவை. அதன் பின் பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. 1896-ல் கண்டுபிடிக்கப்பட்ட மரிய மக்தலேனாவிள் நற்செய்தியும் பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணியது. இப்போது கிடைத்துள்ள யூதாசின் நற்செய்தி அனேகமாக 280-ம் ஆண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும். அப்படியானால் அதன் உண்மையான காலம் என்னவென்று நமக்குத் தெரியாது. பழைய முதல் நூல் அழிக்கப்பட்டிருக்கலாம். நமக்குக் கிடைத்தது ஒரு நகலாகத்தான் இருக்க வேண்டும்.ஐரினியஸின் கூற்று இதனை நிருபிக்கின்றது. (81)

ஐரினியஸ் இது போன்ற எதிர்மறைக் கருத்துகள் தரும் நூல்களை அழிக்க முனைந்தார். ஐரினியஸால் இவ்வாறு கிறித்துவத்திற்கு எதிராக இருக்கும் மக்களும் அவர்கள் நம்பிக்கைகளும் Gnostic /Gnostic religions என்று அழைக்கப்பட்டன. (82)


GNOSTIC RELIGIONS – ‘ஞான மரபு’ மதங்கள்

முதலில் ஞான மரபுகள் பற்றி ஐரினியஸ் எழுத்து மூலமாகவே நமக்குத் தெரிய வந்தது. அதன் பின் Nag Hammidi 1945-ல் தோன்றிய பிறகு மேலும் பல தகவல்கள் கிடைத்தன. (83)

இம்மரபு மதங்கள் ஞானத்தின் அடிப்படையில் உள்ளவை.  நாம் எங்கிருந்து வந்தோம்; எதற்கு இங்கே வந்தோம்; எப்படி நாம் முக்தி அடைவோம் என்ற ‘ஞானம்’ நிறைந்தவர்கள்.
ஏசுவின் மேல் உள்ள நம்பிக்கைகளால் அல்ல; நம் செயல்களாலேயே நாம் உய்வடைய முடியும். (84)

கிறித்துவத்தில் உண்மையான கடவுள் அழகான இந்த உலகைப் படைத்துள்ளார் என்கிறது.
ஆனால் ஞான மரபில் இந்த உலகில் உள்ள அவலங்களைப் பார்க்கிறது; இது ஒரு நல்ல உலகமல்ல; இந்த உலகம் முழுமையில்லாத, குறையுள்ள ஒரு கடவுளால் படைக்கப்பட்டது. உலகத்தோடு ஒட்டாத ஒரு எல்லையில்லா வன்மையுள்ள ஆன்மா (spirit). இதுவே பரம்பொருள். இந்தப் பெருங்கடவுள் பல ஆன்மாக்களைப் படைத்துள்ளது. அவை aeons என்று அழைக்கப்படுகின்றன. எல்லாம் வல்ல கடவுளும், இந்த aeonsகளும் ஒரு மோட்சத்தில் இருந்தார்கள். ஆனால் ஒரு பிரபஞ்ச அழிவினால் சில aeons மோட்சத்திலிருந்து கீழே விழுந்தன. அப்படி வந்து aeons களால் இந்த உலகம் படைக்கப்பட்டது. இந்த உலகத்தில் சில மனிதர்களுக்கு மட்டும் அழிவில்லாத ஆன்மா கிடைத்துள்ளது. அவர்களது ஆன்மா தாங்கள் விடுபட்ட தெய்வீக வீட்டிற்குத் திரும்ப வேண்டும்.

இன்னும் பல விளக்கங்களும் உண்டு. இவை குழப்பத்தை உண்டு பண்ணலாம். ஆனால் இவைகளின் அடிப்படை யாதெனில், பழைய ஏற்பாட்டில் சொல்லப்படும் கடவுளே இவ்வுலகைப்படைத்தார். இவர் பரம்பெரும் பொருள் அல்ல; இடைப்பட்ட – secondary and inferior – கடவுள். இக்கடவுள் படைத்தவர்களே நாம். நம்மில் பலரும் ஆடு மாடுகள் போல் சாதாரணமானவர்கள். அவர்கள் மிருகங்களைப் போல் பிறந்து, இறந்து, அழிந்து விடுவார்கள். வெகு சிலர் மட்டும் தங்களுக்குள் இறைத் தன்மை கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்கள் வீடான மோட்சத்திற்குச் செல்லும் வழி தெரிய வேண்டும். (85,86)

சில ஞான மரபில், இவ்வழியைக் காண்பிக்க வந்தவரே ஏசு; இவர் ஒரு aeon ஆக இருக்கலாம். வெறு சில ஞான மரபினர் ஏசு ஒரு மனிதரே; ஆனால் அவரது வாழ்வின் ஏதோ ஒரு புள்ளியில் ஞான ஆன்மா அவருள் புகுந்து விட்டது. மரணத்தோடு அந்த ஆன்மை அவரை விட்டு அகன்று விட்டது. அதனாலே அவர் சிலுவையிலிருந்து, ‘இறைவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்’ என்று சத்தமிட்டார்.

ஐரினியஸ் இந்த ஞான மரபுக்காரர்களைப் புறந்தள்ள முடியவில்லை; ஏனெனில் ஞான மரபுக்காரர்கள் தங்களது ரகசிய ஞானம் பற்றி நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.  இதனால் ஐரினியஸ் தன் ஐந்து நூல்களில் ஞான மரபுக்காரர்களை முற்றுமாக எதிர்த்தார். அவர் எதிர்த்த நூல்களில் ஒன்று யூதாஸின் நற்செய்தி. (88)

பல ஞான மரபினரில் ஒரு குழு காயினைட் – Cainites - என்றழைக்கப்பட்டனர். ஆதாமின் மகன் காயின் பெயரைத் தழுவி வந்த பெயர் இது. காயின் பழைய ஏற்பாட்டின் கடவுளை முழு முதல் கடவுளாகக் கொள்ளவில்லை. ஐரினியஸின் கருத்துப் படி ஞான மரபினர் பழைய ஏற்பாட்டின் கடவுள் சொன்னவைகளுக்கு எதிரான கருத்துகளையே முன்னிலைப் படுத்தினர். யூதாஸ் எல்லோராலும் துரோகி என்றழைக்கப்பட்டார். ஆனால் ஞான மரபினர் அவர் ஏசு விரும்பியதைச் செய்தார்; அவரே ஏசுவின் முழுமையான சீடர்; யூதாஸ்சிடம் மட்டுமே ஏசு தன் திட்டங்களைப் பற்றி முழுவதும் தெரிவிக்கிறார். (91)

யூதாஸ் சீடர்களிலேயே மிக மோசமானவராகச் சித்தரிக்கப்படுகிறார். இருபது முறை அவரது பெயர் புதிய ஏற்பாட்டில் வருகிறது.  ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு வசைச் சொல்லும் அவர் பெயரோடு சேர்ந்து வருகிறது. யூதாஸ் ஏசுவைக் காட்டிக் கொடுக்காவிடில் ஏசு உலகத்திற்கு வந்த நோக்கமே தடை படுமே என்று யாரும் நினைக்க இடம் கொடுப்பதில்லை. (93)

மாற்கு புதிய ஏற்பாட்டில் யூதாஸ் பணத்திற்காக மட்டும் இவ்வாறு நடப்பதாக்க் கூறவில்லைமத்தேயுவில் பணத்திற்காக, லூக்காஸில் சாத்தானின் தூண்டுதலாலும், ஜான் நற்செய்தியில் யூதாஸின் கெட்ட குணமும், பேராசையும் காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன. (94)

எல்லாம் முடிந்த பின் மத்தேயுவில் யூதாஸ் மனம் வெறுத்து, வெள்ளிக் காசுகளை யூத குருக்களிடம் கொடுத்து, பின் நான்று கொண்டு இறந்தார் என்று சொல்லப்படுகிறது. மற்ற மூன்று நற்செய்திகளில் அச்செய்தி இல்லை; ஆனால் அப்போஸ்தலர்கள் நடவடிக்கையில் யூதாஸ் முப்பது வெள்ளிக்காசிற்கு ஓரிடம் வாங்கி, அதன் பின் கொடூரமாக – வயிறு வெடித்துக் கிழிந்து - மரணமடைந்தார் எனக் கூறப்படுகிறது. ஆனால் யூதாஸின் நற்செய்தியில் ஏசுவை இப்பிறவியிலிருந்து விடுதலை செய்பவராக இருக்கிறார். இதில் அவர் ஒரு வில்லன் அல்ல; ஒரு கதாநாயகன்.(96)


யூதாஸ் – அவரது நற்செய்தியில்

நற்செய்தியின் ஆரம்பத்திலேயே ஏசு யூதாஸிடம் மட்டும் தன் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கின்றார். (97) 

யூதாஸிற்கு ஏசுவைப் பற்றி முழு உண்மைகள் தெரிகின்றன.  அதனால் ஏசு யூதாஸை தனியே அழைத்து, தன்னைப் பற்றியும் முழு இரட்சிப்பைப் பற்றியும் கூறுகிறார். (98)  

யூதாஸ் தான் கண்ட காட்சி பற்றியும், அதில் தான் கல்லால் எறியப்படுவது பற்றியும் ஏசுவிடம் கூறுகிறார். அதனோடு ஒரு பெரிய மாளிகையைப் பார்ப்பது பற்றியும் கூறுகிறார். அந்தப் பெரிய மாளிகை தெய்வீக பிரசன்னத்தைப் பெறுபவர்கள் மட்டுமே காண முடியும் என்கிறார் ஏசு. (99)

இந்த உலகம் இப்போதிருக்கும் தெய்வங்களை விட பல பழைய தெய்வங்களை பெற்றிருந்தது. அதில் ஒன்று El என்ற தெய்வம்; இதன் உதவிக்கு  Nebro அல்லது   yaldbaoth  என்ற ரத்தக் களறியான தெய்வம். இதன் பெயருக்குப்புரட்சியாளன்என்று பொருள். அடுத்து  ’முட்டாள்என்ற பொருளில் Saklas  என்ற தெய்வம்இதில் கடைசியாகச் சொன்ன Saklas தன்னுடைய image ல் மனிதர்களைப் படைத்தார். மனிதர்களில் வெகு சிலரே தெய்வீகத் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். (100) அதில் யூதாஸும் ஒருவர். 

இறுதியில் அவர் ஒளிபொருந்திய மேகங்களுக்கு நடுவே செல்கிறார். அவரது விண் மீனே எல்லோருக்கும் வழிகாட்டியாக உள்ளது. (101)

யூதாஸ் அதன்பின் ஏசுவைக் காட்டிக் கொடுப்பதோடு இந்த நற்செய்தி நிறைவு பெறுகிறது.


யூதாஸ் நற்செய்தியினைப் பற்றிய வித்தியாசமான இறையியல் விளக்கங்கள்:

பல இறையியல் கருத்துகள் இதில் கூறப்பட்டுள்ளன. அவை: இந்த உலகத்தைப் படைத்தவர் உண்மையான கடவுள் இல்லை; இந்த உலகம் மிகவும் மோசமானது; இதிலிருந்து தப்பிக்க வேண்டும்; கிறிஸ்து கடவுளின் ஏக குமாரனல்ல;  இரட்சணியம் கிறிஸ்துவின் இறப்பினாலும்,. உயிர்த்தெழுதலாலும் நடக்காது; பதிலாக அது அவரது ரகசியக் குறிப்புகளின் படியே நடந்தேறும்.(102)

இவையெல்லாமே கிறித்துவக் கோட்பாட்டிற்கு எதிரானவைகள். இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் இது போன்ற பல கோட்பாடுகளோடு பல கிறித்துவ அமைப்புகள் போட்டியிட்டுக் கொண்டிருந்தன. இந்த இரு கோணப் போட்டிகளில் ஒரு சாராருக்கு அனுசரணையாக இருந்த நூல்கள் மட்டுமே கடவுளின் வார்த்தைகள் – நற்செய்தி – என்று அறிவிக்கப்பட்டன.


யூதாஸ் நற்செய்தியில் கடவுள்

தங்கள் உணவுக்காக ஜெபம் செய்யும் தன் சீடர்களைப் பார்த்து ஏசு நகைக்கிறார். சீடர்கள் காரணம் கேட்கும் போது அவர்கள் தாங்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்வதாகச் சொல்கிறார். (104)  

தன்னைக் கடவுளின் மகன் என்று சீடர்கள் சொல்லும் போது, எந்தப் பரம்பரையும் அவரை உண்மையில் யாரென்று அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்று கூறுகிறார்.  

சீடர்கள் வணங்குவது மனிதர்களைப் படைத்த புரட்சிக்காரனான ’yaldbaoth’ என்ற கடவுளையும், முட்டாள் என்ற பொருள் கொண்ட ’Saklas’ என்ற கடவுளையும் மட்டுமே.


கிறிஸ்து பற்றிய குறிப்பு

கிறிஸ்து தன்னை சீடர்களிடம் ஒரு குழந்தை போல் காண்பித்துக் கொண்டார். புதிய நற்செய்திகளைத் தவிர்த்த பல கிறித்துவ எழுத்துகளில் ஏசு ‘தன்னை ஒரு மனிதனாகக் காண்பிக்கும்’ விதம் குறிப்பிடப்பட்டுள்ளது. (107) 

இங்கே புனிதத்தின் அடையாளமாகவே ‘குழந்தை’ என்று குறிப்பிடப்படுகிறார்.(109) 

ஏசுவின் மரணம் அவரது விடுதலை; அது போலவே நமது மரணத்தின் மூலம் நாமும் விடுதலை அடைகிறோம். இறந்த ஏசு உயிர்ப்பது பற்றி இந்த நற்செய்தியில் ஏதுமில்லை. உயிர்த்தால் விடுதலை ஆன ஆன்மா மீண்டும் இந்த உலகத்திற்கு வருகிறது. ஆனால் ஆன்மா இந்த உலகை விட்டுச் சென்று மிகப் பெரும், புனித பரம்பரையோடு சேர்வது தானே.  (110)


இரட்சிப்பின் வழிகள்

இந்த நற்செய்தியின் படி ஒவ்வொரு மனிதனுக்கும் உடல், ஆவி, ஆன்மா (body,spirit, soul) என்ற மூன்றும் உண்டு. உடலுக்கு உயிரளிப்பது ஆவி; உயிர் மூடி வைத்திருப்பது ஆன்மா.ஆவி போனதும் உடல் மாண்டு விடுகிறது. (112) 

தெய்வீக ஆன்மா கொண்டவர்களின் ஆன்மா மட்டும் தெய்வலோகத்திற்குச் செல்கிறது. மற்றவர்களின் ஆன்மா உடலோடு மடிகிறது.(113)


ஏசுவின் அடியார்களின் கருத்துகள்

யூதாஸின் நற்செய்தியில் ஏசுவின் சீடர்கள் உண்மையை அறிந்தவர்களில்லை. ஆனால்பதின்மூன்றாவதுசீடரான யூதாஸ் அறிந்தவராகக் காண்பிக்கப்படுகிறார்.

மார்க் 11: 15-17ல் ஏசு தன் கோவில் வியாபார தளமா என்று கொதித்து வியாபாரிகளை விரட்டுகிறார். ஆனால் அவரது சீடர்களோ பெரிய கற்களைக் கொண்டு கட்டப்பட்ட அந்தக் கோவில் எவ்வளவு பெரியதாக உள்ளது என்று ஆச்சரியப்படுகிறார்கள். (மார்க் 13;1)  (113) 

ஆனால் யூதாஸின் நற்செய்தியில் சீடர்கள் அங்கு நடத்தப்படும் பலிகளைப் பற்றிக் கேட்கிறார்கள். ஏசுவின் பெயரால் நடத்தப்படும் அந்தப் பலிகளை ஏசு தவறென்கிறார். (114)

இதன் பின் யூதர்களின் கோவில்களில் வழிபடவில்லை. புதிய கிறித்துவர்கள் யூதர்களில்லை.ஆனாலும் அவர்கள் யூதக் கடவுளை வணங்கினர்; அந்த யூதக் கடவுள் யூதச் சட்டங்களைத் தந்தன; ஒரு யூத மெசியாவை யூதர்களுக்கு அனுப்பி, யூதர்களின் நூல்களில் கூறப்பட்டவைகளை முடித்து வைத்தன. அவர்கள் தாங்களேஉண்மையானயூதர்கள் என்றும், உண்மையான கடவுளின் உண்மையான மக்களாகவும் புரிந்து கொண்டார்கள்.
ஆனால் ஏசுவோ இந்த உலகைப் படைத்த கடவுள் ஒரு முட்டாள். இந்த உலகம் நல்லதல்ல; இதனை விட்டு விட்டு வெளியேற வேண்டுமேயொழிய இதனைக் கட்டிக் கொண்டு கிடக்க வேண்டியதில்லை. ஏசு யூதாஸிற்குச் சொல்லிக் கொடுத்தது  மட்டுமே முழு உண்மை. (115)


யூதாஸின் நற்செய்தியும் ஏனைய அனைத்து மத நூல்களும்:

ஏன்  மத்தேயு, மார்க், லூக்காஸ், யோவான் என்ற நான்கு நற்செய்திகள் மட்டும் நமக்குக் கிடைத்தன?

இன்றைய நற்செய்தியில் மொத்தம் 27 நூல்கள் இணைக்கப்பட்டுள்ளனஇவைகள் கடவுளின் வார்த்தைகள் என்று பழமைக் கிறித்துவத்தால் அனுமதிக்கப்பட்ட நூல்கள் இவை.

ஏசு காலத்திற்கு முன்பே மோசஸினால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் ஐந்து நூல்கள் – Genesis (ஆதியாகமம்), Exodus (யாத்திராகமம்), Leviticus(லெவிய்ராகமம்), Numbers (எண்ணிகையாகமம்), Deuteronomy (உபாகமம்) – இருந்தன.

ஏசுவின் காலத்திற்குப் பிறகு அவர் சொன்ன போதனைகளும், அவரது உடனிருந்தோரின் போதனகளும் எழுதி வைக்கப்பட்டன. அதன் பின்னும் பல நூல்கள் எழுதப்பட்டன. பல நூல்கள் ஏசுவின் அப்போஸ்தலர்களால் எழுதப்பட்டவை. உதாரணமாக புதிய ஏற்பாட்டில் பால்  எழுதிய பதின்மூன்று கடிதங்களோடு மேலும் பல எழுதப்பட்டுள்ளன. இதைப் போலவே யோவானின் வெளிப்பாடுகள் (Apocalyse or revelation of John) புதிய ஏற்பாட்டில் இருப்பது போலவே பேதுரு (Peter), பால் எழுதிய வெளிப்பாடுகளும் உண்டு.

இது போலவே பல நற்செய்திகள் எழுதப்பட்டிருந்தன. இப்போது நற்செய்திகளாக அறியப்பட்டிருக்கும் அந்த  நான்கு நற்செய்திகளும் எந்தப் பெயரும் குறிப்பிடப்படாமல் இருந்தன. இரண்டாம் நூற்றாண்டில் தான் ஏசுவின் சீடர்களான மத்தேயு, யோவான் இருவர் பேரிலும், ஏசுவின் அப்போஸ்தலர்களான பேதுருவோடு உடனிருந்த மார்க், பாலுடன் இருந்த லூக்காஸ் இருவர் பேரிலும் நற்செய்திகள் பெயரிடப்பட்டன.

ஏனைய நற்செய்திகள் மற்ற அப்போஸ்தலர்களால் எழுதப்பட்டவை. பிலிப், பீட்டர், யூதாஸ், ஏசுவின் சகோதரரான யூதாஸ் தாமஸ், மேரி மகதலேன் போன்றோரால் எழுதப்பட்ட நற்செய்திகள் அவைகளில் சில.

 காலம் செல்லச் செல்ல மேலும் பல நூல்கள் எழுதப்பட்டன. ஒவ்வொரு குழுவும் சில நூற்களை ஏற்றுக் கொண்டனர். இக்குழுக்கள் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். இவைகளில் ஐரினியஸ் இருந்த குழு மேலும் மேலும் புதிய கிறித்தவர்களோடு பெரிதானது. இக்குழுவில் இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் இருந்தவர்களில் வேதசாட்சி ஜஸ்டின் (Justin Martyr), டெர்டூலியன் (Tertullian) என்பவர்கள் முக்கியமானவர்கள். 

இக்குழுவே ஆதி / பழமைக் கிறித்துவர்கள் (Orthodox) என்றழைக்கப்பட்டனர். இவர்கள் மற்ற அணிகளை வென்று முக்கியத்துவம் பெற்றதும் கிறித்துவ வரலாறு புதியதாக மாற்றி எழுதப்பட்டது.  இவர்கள் தேர்ந்தெடுத்த நான்கு நற்செய்திகளே இப்போதை புதிய ஏற்பாட்டில் உள்ளன. (118)

ஏனைய நூல்கள் பல காப்பாற்றப்படாமலும், நகல் எடுக்காததாலும் இயற்கையான மரணமடைந்தன. ஆயினும் இந்த நூல்களில் ஏதாவது ஒன்று கண்டெடுக்கப்படும் போது இரண்டாம் நூற்றாண்டில் பழமைக் கிறித்துவம் மட்டும் இல்லாமல் வேறு பல குழுக்கள் இருந்திருக்கின்றன என்பது தெரிகிறது.

யூதாஸின் நற்செய்தி இதுபோன்ற ஒரு நூலே. இதில் வழக்கமான கிறித்துவத்தைப் புரட்டிப் போடும் ஒரு நூலாக உள்ளது.  
உண்மையான கிறித்துவம் என்று அறியப்பட்ட பல கொள்கைகளை மாற்றிப் போடும் நூலாக உள்ளது. 
இந்நூலிலிருந்து யூதாஸ் மட்டுமே ஏசுவோடு ஒன்றியிருந்து, அவரைப் பற்றி முழுவதும் தெரிந்தவராக இருந்தார் என்பது தெரிகிறது. அவர் இந்த உலகைப் படைத்த கடவுளிடமிருந்து வரவில்லை; அந்தக் கடவுளின் மகனும் அவரில்லை. 
அவர் பார்பெல்லோவிலிருந்து வந்தவர்; இரட்சிப்பின் ரகசியங்களை அங்கிருந்து கொண்டு வந்தவர். 
இவ்வுலகில் இறந்தது மூலமே அவர் பாவமும், துன்பமும், துயரமும் சூழ்ந்த இந்த உலகத்திலிருந்து விடுதலை பெற்று,  பெரும் மோட்ச  ராஜ்ஜியத்திற்கு எழுந்தருளினார்.(120)




**************









*

2 comments:

வவ்வால் said...

தருமிய்யா,

நீங்க மொத்தமா எழுதி முடிச்ச பின் நாம குட்டைய குழப்ப இறங்கலாம்னு நினைக்கிறேன், இப்போதைக்கு கவனித்து வருகிறேன்!

உங்க முந்திய பின்னூட்டங்களும் படித்தேன்!

தருமி said...

//நீங்க மொத்தமா எழுதி முடிச்ச ...//

ஒரே வாசகர். அவரையுமா விட்டு விடுவது. ஆகவே .. இதோ ... உடனே முடிச்சிருவோம் ...!

Post a Comment