Thursday, August 27, 2015

857. தெரு விளக்கில் படிக்கிறவங்க எல்லாம் பெரிய ஆளுகளா என்ன ,,,,? (தருமி பக்கம் 32)








*





 நமது 'ராஜ மாளிகை'யிலிருந்து சிறிது தொலைவில் புனித மரியன்னை கோவிலும், அதே காம்பவுண்டுக்குள் புனித மரியன்னை ஆரம்பப்பள்ளியும், உயர்நிலைப்பள்ளியும் இருந்தன. எனது வாழ்வில் இந்த காம்பவுண்டு மிக முக்கிய இடம் பிடித்து விட்டது. ஆரம்பப்பள்ளி நாட்களில் தினமும் காலையில் 6 மணிக்கெல்லாம் இரண்டாம் பூசைக்கு அனுப்பி விடுவார்கள். பூசை முடித்து விட்டு. கோவிலுக்குப் பின்னாலிருக்கும் fathers’  bungalow வில் இருந்த பெரிய மாட்டுப் பண்ணையில் வீட்டுக்குப் பால் வாங்கிக் கொண்டு போக வேண்டும். அதென்னமோ…. சின்ன வயதிலேயே நாலரை, ஐந்து மணி என்று வீட்டில் எழுப்பி விட்டு விடுவார்கள். இது போன்ற பழக்கம் அப்படியே என்னை வாழ் நாளெல்லாம் தொற்றிக் கொண்ட்து என்று பலரும் சொல்வதுண்டு. ஆனால் என் வழி … தனி வழி …! இன்று வரை காலையில் எழுவது என்பது ஒரு பெரிய கஷ்டமானதாகவே இருக்கிறது. இப்போதும் காலையில் நடைப் பயிற்சி என்றால் நன்றாக தூங்கி விடுகிறேன். அதற்குப் பதிலாக shuttle cock என்றால் ஒரு வழியாக அலாரம் வைத்து எப்படியோ எழுந்து விடுகிறேன். அதற்காகவே நடைக்குப் பதிலாக விளையாட்டு என்று இப்போதும் வைத்துக் கொண்டு விட்டேன்.

காலையில் எழுந்து கோவிலுக்குப் போகும் பழக்கம் தொடர்ந்து வந்தது. பத்தாம் வகுப்பு வரை வந்த போது வீட்டிலும் ‘ஜனப் பெருக்கம்’ அதிகமாக ஆகி விட்டது. அதனால் இரவு மொட்டை மெத்தையில் படிக்கும் பழக்கம் ஆரம்பித்தது. பக்கத்து வீட்டில் நடந்த ஒரு தற்கொலை, அதனால் எழுந்த பேய் பயம் எல்லாம் இதற்குள் பழகிப் போய் விட்டது. அதோடு அன்றிலிருந்து இன்று வரை தொடரும் இன்னொரு பழக்கம் – படிக்க வேண்டிய புத்தகத்தை எடுத்தால் அப்படி ஒரு தூக்கம் கண்களைக் கட்டிக் கொண்டு வரும். அட … அந்தத் தூக்கத்திற்கு இணை ஏதுமில்லை. இன்னும் நினைவில் இருக்கிறது. உட்கார்ந்து படித்தால் தூக்கம் வந்து விடுகிறதே என்று நடந்து கொண்டு, அதோடு மட்டுமின்றி மெல்லியதாக முணங்கிக் கொண்டே படிக்க ஆரம்பித்த சமயத்தில் கூட, நடந்து கொண்டே படிக்கும் போது கையிலிருந்த புத்தகம் தூக்கத்தில் கைநழுவிக் கீழே விழுந்தது. என்னமோ அப்படி ஒரு தூக்கம். அதுவும் வயதான பிறகு தூக்கம் குறைந்து விடும் என்று வழக்கமாக மக்கள் சொல்வார்கள். ஆனாலும் எனக்கு இன்று வரையிலும் தூக்கம் என்னைத் துரத்தி துரத்தி வந்து தூங்க வைத்து விடும். பலரும் அதை ஒரு பெரிய blessing என்கிறார்கள். இருக்கட்டும் …. (இப்போது கூட - காலை 10.45 - காலையிலேயே எழுந்து விளையாடி விட்டு ... இப்போதும்  லேசாக தூக்கம் வருவது போல் தான் இருக்கிறது!)



மொட்டை மெத்தையில் படிக்க ஆரம்பித்த பிறகு யாரோ ஒரு பெரிய மனிதர் தெரு விளக்கில் படித்து பெரிய நீதிபதி ஆனார் என்று எங்கள் பள்ளிப் பாடத்தில் வரும். நானும் பக்கத்து வீட்டில் இருந்த நண்பர்களுக்கும் அந்த தகவல் தெரிய நாங்களும் தெருவிளக்கில் படித்து பெரிய ஆளாக வரணும் என்ற நினைப்பில் வீதியில் படிக்க ஆரம்பித்தோம்! என்னைப் பொறுத்தவரை மெத்தையில் தனியாகப் படித்தால் படிப்பு படிக்க வருவதே இல்லை .. தூக்கம் மட்டும் நன்றாக வந்தது. தெருவிளக்கில் படிக்க ஆரம்பித்ததும் தூக்கம் போய் விட்டது. ஆனால் நண்பர்கள் குழாம் பெரியதாகி விட்டது. அரட்டை அடிக்கவும், டீ அல்லது எங்களது பேவரைட்டான சுடச் சுட பருத்திப் பால் குடிக்கவும் தான் நேரம் இருந்தது. அதோடு அந்த வயதில் பேசுவதற்கு ‘விஷயங்களா’ இல்லாமல் இருந்திருக்கும்?

உட்கார்ந்து படிக்க தெரு விளக்குகளுக்கும் போட்டி இருக்கும். எங்கள் வீட்டிலிருந்து நாலைந்து வீடுகள் தாண்டி நான்கு ரோடுகள் சந்திக்கும் இடம். அதனால் அந்த இடத்தில் மட்டும் மெர்குரி லைட் இருக்கும். அதிக பிரகாசமாக இருக்கும். இந்த லைட்டுக்கு அடியில், சந்தின் முதல் வீட்டில் தபால் நிலையம் இருந்தது. ஐந்தாறு படிகள் இருக்கும் படிக்கட்டு. படியின் முடிவில் உட்கார அகலமாக திண்ணை மாதிரி இருக்கும். இதற்கு மேல் ஒரு தகரக் கூரை இருக்கும். குளிர் காலத்தில் படிக்க நன்றாக இருக்கும். இந்த இடத்திற்குப் போட்டி நடக்கும். பாவம் … யாரோ பெரிய மனிதர் ஒருவர் இதே மாதிரி விளக்கு வெளிச்சத்தில் படித்துப் பெரியவரானாராம். நாங்கள் எல்லாம் அப்படிப்பட்ட ’பெரிய மனிதர் category’ல்’ வரவில்லை. என்னோடு அப்படி தெருவில் இருந்த படித்தவர்களில் பலரும் பள்ளிப் படிப்போடு முடித்துக் கொண்டார்கள். தப்பித்துக் கொண்டது நானும்,ஜாபர் என்ற நண்பரும். அவரும் பாவம் … என்னைப் போலவே அவரும் (வக்ஃபோர்ட் கல்லூரியில்) ஒரு பேராசிரியரானார். காலம் கடந்த காலத்தில் நாங்கள் இருவரும் சந்திக்கும் போது பழைய நினைவுகளை rewind செய்வதுண்டு. வீட்டில் உட்கார்ந்து ஒழுங்காகப் படித்திருந்து, வாழ்க்கையில் இன்னும் நன்றாகத் தேர்ந்திருக்கலாம் என்றும் பேசிக் கொண்டதுண்டு. தெரு விளக்குகளுக்குக் கீழே உட்கார்ந்து ஒழுங்காகப் படித்திருக்க வேண்டும் … அரட்டை அடித்தால் இப்படி என்னை மாதிரி தான் ஆக வேண்டும்!

இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் தெருவுக்கு வரமுடியும். ஆனாலும் நான் தான் படிக்க வேண்டும் என்று கொள்ளை ஆர்வம் கொண்டவனாச்சே … அதுக்கு முன்பும் படிக்க வேண்டுமே…! பள்ளியில் எங்களைப் போன்ற வசதி குறைந்த கிறித்துவ மாணவர்கள் படிப்பதற்காக அறை ஒன்றைக் கொடுத்தார்கள். இப்போது அந்தப் பழைய கட்டிடம் இல்லை. அப்போது அது மூன்று வகுப்புகள் கொண்ட பழைய கட்டிடம். மேலே ஓட்டுக் கூரை. பின்பக்கம் சுவர் கிடையாது. மூங்கில் தட்டிகள் வைத்திருக்கும். ஒரே ஒரு முட்டை பல்ப் இருக்கும். ஆறு மணியிலிருந்து எட்டு மணி வரை இந்த வசதி உண்டு. மேற்பார்வைக்கு ஆள் யாரும் கிடையாது. அது பத்தாதா? அரட்டை … சண்டை … என்று ஒரு பக்கம் போராட்டம் நடக்கும். அதோடு இன்னொரு பெரும் போராட்டம் ஒன்றும் நடக்கும் – எங்களுக்கும் கொசுவிற்கும் நடுவில் நடக்கும் போராட்டம். பள்ளியில் நிறைய மரம் .. கொசுக்களுக்குப் பஞ்சமேயில்லை. மேய்ந்து விடும். இதனால் ஆறு மணிக்கு வந்ததும் ஒரு படை போய் காய்ந்த இலை தளைகளை அள்ளிக் கொண்டு வருவோம். மூங்கில் தட்டி பக்கத்தில் போட்டு, அதைப் பற்ற வைத்து கொசுவை விரட்டும் படலம் ஆரம்பித்து விடும். புறப்படுவதற்கு முன் கொஞ்ச நேரம் எரித்தவைகளை அப்புறப்படுத்தும் அடுத்த படலம். இதில் என்ன படித்தோமோ ……

 எப்படியோ பள்ளிப் படிப்பை முடித்தாகி விட்டது ………

 இளங்கலைக்கு வந்ததும் மீண்டும் கோவில் காம்பவுண்டு வாழ்க்கையின் இன்னொரு பகுதியாக மாறியது. வழக்கம் போல் காலையில் பூசைக்காக வீட்டில் எழுப்பி விட்டு விடுவார்கள். எழுந்திருந்து கோவிலுக்கு வந்து விட்டு ஒரு மணி நேரம் உயர் பள்ளியின் உள்ளே விசாலமாக உள்ள வெராண்டா எதிலாவது உட்கார்ந்து படிப்பதுண்டு.  கென்னடியும், நேருவும் இறந்த செய்திகள் இது போல்  ஏதோ ஒரு காலைப் பொழுதில் ‘படித்துக்’ கொண்டிருந்த போது தான் கிடைத்தது என்பது நன்கு நினைவில் இருக்கிறது. 
அதுவும் கென்னடி சுடப்பட்டு இறந்தார் என்பது ஒரு பெரிய அதிர்ச்சியான செய்தியாக வந்தது. மாலையிலும் மீண்டும் பள்ளிக்கு வந்து விடுவேன். கோவிலைச் சுற்றி ஏதாவது ஒரு விளக்கடி என்றானது.

ஒரு நாள் அது போல் புத்தகத்தைப் ‘புரட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு குரு / பாதிரியார் – அவர் எங்களது parish priest – என்னைப் பார்த்தார். பாவம் … கஷ்டப்பட்டு படிக்கிற நல்ல பிள்ளை என்று என்னைத் தப்பாக நினைத்துக் கொண்டு என்னிடம் பேசினார். அவர் ரொம்ப ஸ்ட்ரிக்டான ஆள் என்பதும் எனக்குத் தெரியும். ஏன் வீட்டிலிருந்து படிக்கவில்லை என்றார். வீட்டில் வசதியில்லையென்று சொன்னேன். சரி .. நாளை மாலை என்னை வந்து பார் என்றார். சரி … நாம் பள்ளியில் படிக்கும் போது ஒரு அறை எல்லோருக்குமாகக் கொடுத்தார்களே அது மாதிரி இருக்கும் என்று நினைத்துக் கொண்டு அடுத்த நாள் சென்றேன்.

 What a shock ….! 






 *

4 comments:

Nagendra Bharathi said...

தொடர் அருமை

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

என்ன நடந்தது என்று எதிர்பார்க்கும்போது தொடரும் என்று கூறிவிட்டீர்களே?

கரந்தை ஜெயக்குமார் said...

இன்ப அதிர்ச்சி காத்திருந்தது என்று நினைக்கின்றேன்
தம +1

சார்லஸ் said...

தெரு விளக்கில் படித்ததால்தான் நிறைய சுதந்திர எண்ணங்கள் உருவாகி தருமி ஆகி விட்டீர்கள் . இல்லாவிடில் பத்தோடு பதினொன்றாய் யாராலும் அறியப்படாமலே இருந்திருப்பீர்கள்.

Post a Comment