Thursday, May 30, 2019

1055. Sam ON DSL ........





*





DSL  இறந்தும் நாட்கள் ஓடி ஒரு வாரம் முடிந்து விட்டது.


கல்லூரியில் எங்கள் இருவரையும் இணைத்தது எங்கள் ஆசிரியர் சங்கம் - MUTA. நாங்கள் இருவருமே அதில் ஒரே ஒரு தரம் தான் இணைந்தோம் - ஏனெனில் தொல்லைகள் ஏதுமில்லாத எங்கள் கல்லூரியின் ஆசிரியர்களுக்கு சங்கம் ஒரு தொல்லை தான். ஏதாவது ஒரு காரணம் தேடி சேருவார்கள். கொஞ்ச நாள். ஏதாவது ஒரு காரணம் சொல்லி விலகுவார்கள். இது பலரிடம் அடிக்கடி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். சங்கத்தில் செயலராக இருக்கும் போது எங்கள் ரத்தத்தில் ஓடுவதெல்லாம் புர்ச்சி ரத்தம் என்பார்கள். அடுத்த மாதம் என்ன blood transfusion நடக்குமோ. புர்ச்சி வெளியேறி இருக்கும். இந்த சூழலில் முதலில் இருந்து ஓய்வு பெரும் வரை சங்கத்தில் தொடர்ந்து இருந்தவர்கள் என்று எங்கள் கல்லூரியில் அந்தக் காலத்தில் கணக்கெடுத்தால் கையளவு எண்ணிக்கையில் தான் இருப்போம். அந்த இணைப்பு என்னையும் லாரியையும் ஒன்றாகச் சேர்த்தது. அதில் எங்கள் இருவருக்கும் ஒரு வித்தியாசம். நான் சங்கத்து உறுப்பினர்களோடு இணைந்தும், சங்கத்தில் இல்லாதவர்களிடமிருந்து விலகியும், அல்லது அவர்களை எதிர்த்தும் இருந்து வந்திருக்கிறேன். இதனால் எனக்கு என்னிடமிருந்த conviction காரணமாக நிறைய நண்பர்களும், இன்னும் நிறைய non-நண்பர்களும் இருந்தனர். ஆனால் லாரி எல்லோரிடமும் நன்கிருப்பார். சங்கத்தின் மீது என்னை விட மிக அதிகமான பற்றுள்ளவர். ஆனால் அதை வைத்து - என்னைப் போல் - யாரிடமும் பகைமை காட்ட மாட்டார். அது தான் லாரி! 

அடிக்கடி விளையாட்டாக நாங்கள் இருவரும் பேசிக் கொள்வோம். நான் அவரை ”நார்லு காட்டான்” (நாகர்கோவில் காட்டான்) என்றும், அவர் என்னை நெல்லைக் காட்டான் என்றும் அவ்வப்போது அழைத்துக் கொள்வோம். அப்படி இருந்த எங்கள் நட்பு எங்களது ஒய்வுக் காலத்தில் புதியதோர் வடிவம் பெற்றது. அவருக்கு கணினியைப் பயன் படுத்த வேண்டுமென்று அத்தனை ஆவல். சின்னச் சின்ன உதவிகள் செய்தேன். ஆனால் அதோடு அவரால் எளிதாக ஒட்டிக் கொள்ள முடியவில்லை. அதோடு நான் முதலில் மொழியாக்கம் செய்த “அமினா” நாவல் எங்கள் உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை  உருவாக்கியது. அவர் எங்கள் பணி நாட்களில் என்னை ஒரு “விளையாட்டுப் பையனாக” நினைத்திருந்தார். அமினா வாசித்தார். அன்றிலிருந்து பல முறை அந்த நூல் பற்றிப் பெருமையாகப் பேசுவார்
.
“ஏய்யா ... இந்த மாதிரி எழுதக்கூடிய ஆள் என்று என்னை நீர் எதிர்பார்க்கவே  இல்லை. இல்லையா?” என்று கேட்டேன். அப்போதுதான் அந்த விளையாட்டுப் பையன் என்று நினைத்ததைச் சொன்னார். அதன் பின் எப்போதும் இப்போது என்ன செய்கிறாய்? என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பார். எப்போதுமே அவரின் அருகில் நின்று பேசும் போது அவர்களின் தோளைத் தட்டிக் கொடுத்துக் கொண்டு பேசுவது அவர் பழக்கம். அமினா வாசித்த பிறகு எப்போதெல்லாம் தொலைபேசியில் பேசுகிறாரோ அப்போதெல்லாம் அந்த “தட்டிக் கொடுத்தல்” தொடர்ந்து நடக்கும். தொலைவின் காரணமாக அடிக்கடி சந்திப்பது இல்லை, ஆனாலும் எப்படியும் வாரம் ஒரு முறையாவது அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்து விடும். இப்போது என்ன செய்கிறீர்கள்? தொடர்ந்து செய்யுங்கள் என்ற தொடர்ந்த உற்சாகமூட்டல் இருக்கும்.

டயாலிசிஸ் வந்ததும் மிகவும் சோர்வாக இருந்தார். ஆனால் ஒரு மாதம் கழித்துப் பார்த்த போது அதிலிருந்து வெளிவந்ததாகக் காண்பித்துக் கொண்டிருந்தார். சின்னச் சின்னப் பிள்ளைகளுக்கும், இளைஞர்களுக்கும் டயாலிசிஸ் நடப்பதைப் பார்த்து தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார். “என் கேஸ் பரவாயில்லை” என்றார். சில மாதங்களில் மனதை நன்கு தேற்றிக் கொண்டார். அதோடு நில்லாமல் மீண்டும் கணினி பற்றித் தெரிந்து கொள்ளவும் ஒரு புதிய கணினி ஒன்று வாங்கவேண்டும் என்று கேட்டார். ஒரு கணினியும் வாங்கும் முனைப்பில் நான் இருந்த போது உடல் நலம் மிகக் குறைந்தது. அப்போது நான் கடைசியாக அவரை வீட்டுக்குப் பார்க்கப் போனேன்.

”கிழித்த நாராய்” கிடந்தார் என்று வழக்கமாகச் சொல்வார்களே .. அந்த வார்த்தைகள் அவரது படுக்கையறையில் நுழைந்து அவரைப் பார்த்ததும் மனதில் தோன்றியது. ஏற்கெனவே டயாலிசிஸ்ஸிற்குப் பிறகு உடல் மிக மிக மெலிந்து இருந்தார். ஆனால் இப்போது அவர் படுத்திருந்த கோலமே அச்சுறுத்துவதாக இருந்தது. உள்ளே நுழைந்து கட்டிலின் பக்கதில் நின்றிருந்தேன். அழுதிடக் கூடாது என்று திடப்படுத்திக் கொண்டேன். மெல்ல பக்கத்தில் அம்ர்ந்தேன். அவர் விழிக்கவில்லை. மெல்ல நெற்றியில் கை வைத்தேன். விழிக்கவில்லை. முத்தமிடத் தோன்றியது. குனிந்து நெற்றியில் மெல்ல முத்தமிட்டேன். விழித்து விட்டார். எழுந்திருக்க முனைந்தார். தடுத்தேன். சிறிது நேரம் படுத்திருந்தார். பின் நான் தடுத்தும் எழுந்து உட்கார்ந்தார். அதுவே எனக்கு ஆச்சரியம் தான்.

இருவரும் ஏதும் பேசவில்லை. பின்னால் மெல்லிய குரலில்”ஏனிப்படியெல்லாம் நடக்கிறது” என்றார். என்ன பதில் சொல்ல முடியும்.  அவர் உட்காரவும் சிரமப் பட்டதாகத் தோன்றியது. படுத்திருக்கச் சொன்னேன். மெல்ல எழுந்தார். என்னால் மேலும் சிரமப் படுத்திக் கொள்கிறார் என்று தோன்றியது. கிளம்புகிறேன் என்றேன். Ok.. We will meet என்றார். நிச்சயமாக அது .... நான் சுகமாகி மீண்டும் பார்த்துப் பேசிக்கொள்வோம் என்ற பொருளில் அவர் சொல்லவில்லை என்று தான் எனக்குத் தோன்றியது. மறுமையின் டச் அதில் இருந்ததாகத்தான் நான் நினைத்தேன். என் இறைமறுப்பு அவர் அறிந்தது தானே. அது அவருக்கு நினைவுக்கு அப்போது வந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவரே ‘அது எப்படி” என்பது போல் ஏதோ ஒன்றை முணுமுணுத்தார்.  கைகளைப் பற்றி  ”நார்லு காட்டான்” என்றேன். எப்படி அவரால் முடிந்தது என்று நான் நினைக்கும் அளவிற்கு என் கைகளை மிக இறுக்கமாகப் பிடித்தார். எப்படி அத்தனை உறுதி வந்தது என்று ஆச்சரியப்பட்டு போனேன்.  கண்ணீர் வர முயற்சித்தது. இன்னும் அவரோடு இருந்தால் அழுது விடுவேன் என்று உணர்ந்தேன். கஷ்டப்பட்டு அவரை கட்டிலில் மீண்டும் உட்கார வைத்து விட்டு வெளியேறினேன்.

வீட்டின் வாசல் படிக்கு அடுத்து அவரது துணைவியாரிடம் இரண்டு வார்த்தைகள் பேசினேன். திரும்பிப் பார்த்தால் அவர் எப்படி கஷ்டப்பட்டு வெளியில் வந்திருப்பாரோ தெரியவில்லை. படுக்கையறையின் வாசல் வரைக்கு வந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து படுக்க வையுங்கள் என்று சொல்லி விட்டு வெளியேறினேன்.

மருத்துவ மனையில் பார்த்த போது அவர் என்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று தான் நினைக்கின்றேன். என் பெயரைச் சொன்னதும் கண்கள் எடுத்தேறி என்னைப் பார்த்தது போல் தோன்றியது. 



எல்லாம் முடிந்து விட்டது ........



*


4 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஒரு நட்பின் அடையாளத்தினைப் பகிர்ந்து அஞ்சலி செலுத்திய விதம் மனதில் நின்றது.

CSAM JEFFRY said...

கண்கள் கசிகின்றன....
வாசித்தவர்களுக்கே.
நேசித்த உங்களுக்கு?

CSAM JEFFRY said...

ஆழ்ந்திரங்கல்கள்...
இறையமைதி
உற்றாருடன்
இருப்பதாக.

என்
நெஞ்சுக்கு
நெருக்கமான
பேராசிாியா்.

சிற்றாலயத்தில்
மாணவர்
வழிபாட்டு நேரங்களில்
என்னுரைகளை
வெகுவாய் இரசித்தவா்.

என்ன கண்ணா...
எப்படி இருக்கிற?
என அன்பாய்
விசாாித்தவா்.

பெரியாா் அருகிலுள்ள
ஆலய்ப் பொறுப்பில்
பல காலம் இருந்தாா்.

அப்போதெல்லாம்
அங்கே சென்று
சந்தித்தும்
சிந்தித்திருக்கிறேன்.

மிகப் பெரிய
இழப்பு தான்.

ஆனாலும்
ஏற்றுத் தானே
ஆக வேண்டும்.

போவதும் வருவதும்
உலகத்து இயல்பு.

போய்
வாருங்கள்
சாா்....

தருமி said...


Rajeev Nedumaran
Fri, May 31, 11:59 PM (11 hours ago)


Such a soft spoken man.
Always DSL mama to me!
So long professor...

Post a Comment