Friday, June 28, 2019

1058. ஒரு ”நடிகனின்” (!!) கதை .... 6 என் அகில உலக ரசிகப் பெருமக்களுக்கான ஒரு சுற்றறிக்கை.



***
தொடர்புடைய பிற பதிவுகள்

 5. https://dharumi.blogspot.com/2019/06/1056-5-dubbing-days.html

8.  https://dharumi.blogspot.com/2019/06/1058-6.html


***
துணை இயக்குனர் சிவா
&
ஒலிப் பதிவாளர்  சுதா மேடம்





THE LAST TOUCHES

உலகம் முழுவதும் இருக்கிற என் நடிப்பின் ரசிகர்களான உங்கள் அனைவருக்குமான என் சுற்றறிக்கை இது.

மெளனகுரு இயக்குநரான சாந்த குமார் இயக்கும் மகாமுனி என்ற படம் இந்த மாதம் (19?) வெளியாகிறது என்பதும் அதில் நான் நடித்திருப்பதும் உலகம் முழுவதுமுள்ள என் ரசிகர்களான உங்களுக்குத் தெரிந்திருக்கும். படத்தை எப்படி ஆர்வமுடன் எதிர்பார்த்திருப்பீர்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். எப்போதுமே நீங்கள் அப்படித்தானே .. என் அனைத்துப் படங்களையும் எவ்வளவு ஆர்வத்தோடு வரவேற்பீர்கள் என்பது எனக்குத் தெரியாதா என்ன!

ஆனால் நான் ஒவ்வொரு முறையும் சொல்வது போல் இந்தப் படத்திற்கும் சொல்லிவிடுகிறேன். வேண்டாமென்றாலும் கேட்கவா போகிறீர்கள்! ஆடி மாதம் ஆரம்பித்து அநியாயக் காத்து அடிக்கிறது. ஆகவே ரொம்ப உயரமான கட் அவுட் வேண்டாம். 40 அடியோடு நிறுத்தி விடுங்கள். அது போதும்.

இன்னொன்றும் சொல்லி விடுகிறேன். இந்த தடவையாவது கேட்டுக் கொள்ளுங்களேன். நீங்கள் ஒவ்வொரு படத்துக்கும் பெரிய பெரிய ப்ளக்ஸ் போர்டுகள் வைத்து பால் ஊற்றுகிறீர்கள். நிக்க வைத்து பால் ஊத்தினாலும் எனக்கென்னவோ என்னைப் படுக்கப் போட்டு கடைசியாகப் பால் ஊத்துவது போலவே அது  இருக்கிறது,\.இந்தப் படத்திற்கு பால் ஊத்த வேண்டாமே! சரியா?

படத்தின்  டைட்டிலோடு  என் குரலோடு தான் படம் ஆரம்பமாகிறது. குரல் மட்டும் வருகிறது ... ஆளைக் காணோமே என்று பயந்து விடாதீர்கள் ... வந்திருவேன்.  வெளியே ரொம்ப நேரம் ஆடிக்கொண்டிருக்காமல்,  தியேட்டரின் மணி அடிச்சதும் பாய்ஞ்சு லேட்டாக வராமல் மொதல்லேயெ வந்திருங்க.  சட்டுன்னு நம்ம குரலோடு படத்தை ஆரம்பிச்சிருவோம். சரியா?

 எத்தனை சீனில் வருகிறேன் என்பதெல்லாம் ஒரு கேள்வியா? அட... ரெண்ட் சீன்ல வந்தாலும் எப்படில்லாம் நடிக்கிறோம் என்பது தானே பெருசு. இல்லீங்களா? பின்னிடுவோம். (அப்படி பின்றோமோ இல்லையோ .. ஆனா  வெளிய வந்து எங்க தலை பின்னிட்டார்னு சவுண்டு உட்ருங்க. நமக்குள் இது ரகசியமா இருக்கட்டும்!  நமக்குள் ஆக வேண்டியதை பிறகு பார்த்துக் கொள்வோம்.)

இந்தப் படத்தில் என் நடிப்பைப் பார்த்து அப்படியே அசந்து போய் விடாதீர்கள். இதெல்லாம் நமக்கு ரொம்ப சாதாரணம் என்பது உங்களுக்குப் புரியாதா என்ன? ஆனாலும் நீங்க ரொம்பவே வியந்து போய் இந்தப் படத்திலேயே எங்க ஆள் தான் டாப் என்றெல்லாம் சொல்லி விட வேண்டாம். சீனியர்லாம் வருத்தப்பட வைக்கக் கூடாதல்லவா? எல்லாம் ஒரு நனி நாகரீகம் தான்!!

முன் குறிப்பு:

முன்குறிப்பாக இருக்க வேண்டியதை பின்குறிப்பாகக் கொண்டு வந்துள்ளேன்.  இந்த முன்-பின் குறிப்பை வாசித்து அதை முன் குறிப்பாகக் கொள்ளுங்கள் என்று இந்த பின் குறிப்பில் விளக்கமாக விளக்கி விடுகிறேன். விளங்கிக் கொண்டீர்களா? (வெழங்கிடும்...!)

முன்பே டப்பிங் பற்றி எழுதியிருந்தேனா?  ஆனால் சென்னையிலிருந்து மீண்டும் அழைப்பு. சிறிது நேரம் டப்பிங் தர வரவேண்டும் என்றார்கள். காலையிலேயே சென்னை சென்றேன். மாலையில் தான் டப்பிங் என்றார்கள். என்னை வீட்டுக்கே வந்து அழைத்துச் சென்றார்கள். ரொம்பவும் நன்றாக டப்பிங் பேசி விட்டேன் போலும், ஏனெனில் நான் பேசி முடித்ததும் இதுவரை வராத மழை வந்து வெளுத்துக் கட்டியது.  காலையிலிருந்து சீரியசாக டப்பிங் பார்த்துக் கொண்டிருந்த சுதா மேடம், துணை இயக்குநர் சிவா இருவரும் ஒரு ப்ரேக் எடுத்து ஜன்னல் வழியே மழையை ஆசை தீரப் பார்த்துக் கொண்டார்கள். 

முன்பு டப்பிங் வந்த போது professional dubbing artists யாரையும் பார்க்கவில்லை. இந்த முறை இருவர் வந்திருந்தார்கள். ஒருவர் டிவியிலும் பணி புரிகிறாராம். விஜயா என்று  இன்னொருவர். இருவருமே தொழில் முறை ஆட்களாக இருந்ததால் சொன்னதை உடனே புரிந்து கொண்டு டக் .. டக் .. என மிகச் சரியாக, சரியான டைமிங்கோடு, எதிர்பார்த்த ஒலிகளை எளிதாகக் கொடுத்தார்கள். ஒரு பெண் அழுகின்ற சீன். அந்த நடிகையின் தொண்டை அசைவுகளை வைத்து அவர் அழுகும் ஒலியை விஜயா கொண்டு வந்தார்,  எல்லாம் சில வினாடிகளுக்கான் ஒலிகள் தான், ஆனால் அவை படத்தை மிக பொருத்தமாக, அழகாகக் கொண்டு வந்தன. சிறு சிறு ஒலிகளும் படத்திற்கென்று ஓர் உருவத்தைக் கொடுத்தன. வியப்போடு பார்த்து ரசித்தேன்.

வேலை முடிந்த பின் இயக்குநர் வந்து இதைப் போன்ற சில கடைசி நிமிட வேலைகளைப் பார்த்து எல்லாம் சரி தானா என்று பார்க்க வேண்டும் என்று காத்திருந்தோம். அவரும் வந்து என் பகுதியைச் சரியென்றார். திருப்தி. வேலை முடிந்தது. படம் ஜூலை மாதமே வெளிவந்து விடும் என்ற பேச்சு சுற்றி வந்தது. Yet to be confirmed. 


***




1 comment:

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

உங்கள் ரசிகர்களில் நானும் ஒருவன். காத்திருக்கிறேன்.

Post a Comment