Wednesday, October 25, 2023

1257. கொமாரு .. ஒரு சொந்தக் கதை



மொழியாக்கம் செய்து வரும் நூலில் – பாலஸ்தீன் – இஸ்ரேல் போராட்டம் – ஒரு சிறு பத்தி ஒன்று வந்தது. அது என் பழைய நினைவொன்றைக் கிளறிவிட்டது. அந்தப் பத்தி :

 

1990 ஆகஸ்ட் இரண்டாம் தேதியில் ஒரு லட்சம் ஈராக் வீரர்கள் இரவோடு இரவாக குவைத்தின் எல்லைகளைத் தாண்டி அந்நாட்டிற்குள் வலிந்து நுழைந்தனர். குவைத் நகரம் ஈராக்கினரால் சூழப்பட்டு முற்றுகையிடப்பட்டது.. இந்தப் போரின் நடுவே 39 ஸ்கர்ட் ஏவுகணைகளை(Scud missiles – ground to ground missiles)  இஸ்ரேல் நகரான டெல் அவிவ் மீது ஏவியது. இதனால் பெரும் பொருட்சேதம் நடந்தாலும், உயிர்ச் சேதங்கள் அதிகமில்லை.  இரண்டே இரண்டு பேர் மட்டும் மரணம் அடைந்தனர்.

 

அந்த சமயத்தில் எங்கள் கிறித்துவக் கோயிலில் திருவிழாக் காலங்களில் கோவிலுக்கு வெளியே பெரிய விளையாட்டு மைதானத்தில் பூசை நடக்கும். அது ஒரு மாலைப் பொழுது. பூசையின் நடுவே சாமியாரின் பிரசங்கம். நானும் வேறொரு கல்லூரிப் பேராசிரியரும் கூட்டத்தின் பின்னால் நின்று கொண்டு அதைக் கேட்டுக் கொண்டிருந்தோம். சாமியார் மிகவும் உருக்கமாக யேசு எப்படி இஸ்ரேலரைக் கவனமாகப் பார்த்துக் காப்பாற்றி விட்டார் என்று அதிசயித்துப் பேசினார். அவர் தன் மக்களை அத்தனைக் கிருபையோடு காப்பாற்றி விட்டார் என்று மனமுருகப் பேசினார்.

 

பக்கத்திலிருந்த பேராசிரியருக்கும் அப்படி ஓர் ஆச்சரியம். என்னைப் பார்த்து மகிழ்ச்சியோடு யேசுவின் கிருபையை என்னோடு பகிர்ந்து கொண்டார். 

“எப்படி பாத்தீங்களா? எந்த அளவு இஸ்ரேல் மீதான கருணை அவருக்கு. காப்பாத்திட்டார்ல...”

ஒரு நிமிடம் யோசித்தேன். ஏதோ ஒரு பொறி தட்டியது.

“ஆமாங்க. ஆனால் 50 வருஷத்துக்கு முந்தி தான் நல்லா தூங்கிட்டார் போல. லட்சக் கணக்கில ஹிட்லர் இஸ்ரேலர்களைக் கொல்லும் போது அசந்து தூங்கிட்டாரே!”

பேராசிரியர் முறைத்தார்.

(அப்போது நானும் ஓரளவு ஒரு நம்பிக்கையாளன் தான் ...இப்போது மாதிரி இல்லை.)



No comments:

Post a Comment