Thursday, December 07, 2023

1264. பழைய நினைப்புடா, பேராண்டி




கார்த்திக் அன்பாக நம்மளப் பத்தி நாலு நல்ல வரி எழுதிட்டானா ... அது ஒரு பழைய ஞாபகத்தைக் கொண்டு வந்திருச்சி, பேராண்டி.

ஜீன்ஸ் பாண்ட், மூக்குக் கண்னாடி பற்றிச் சொன்னானா ... அதில இருந்து ஒரு கொசுவத்தி சுருளா பழைய நினைவுகள். அந்தக் காலத்தில 
ஜீன்ஸ் பாண்ட் நம்மூர்ல கிடையாது. யாராவது "பாரன்"ல இருந்து வந்தா போட்டுட்டு வருவாங்க. அதுக்கு எத்தினி டிமாண்ட் தெரியுமா?
அப்படி போட்டவங்க அத இங்க யாருக்காவதுடொனேட் பண்ணினாதான் உண்டு. ஆனா எனக்கு எப்படி கிடச்சிது, யாரும் கொண்டு
வந்தாங்களா அப்டின்றதெல்லாம் மறந்து போச்சு. வழக்கமா இந்த ஜீன்ஸ் பாண்ட்டில் ஒரு பிரச்சனை, அளவு சரியாக இல்லாட்டா 
அதை நமக்கு ஏத்த மாதிரி ஆல்ட்டர் எல்லாம் பண்ண முடியாது. 

எப்படியோ ஒரு பாண்ட் கிடச்சிது. கல்லூரியில் ஜீன்ஸ் அதிகம் 
தென்படாது.  போட்டுட்டுப் போனாலும் glaringஆக பளிச்சின்னு தெரியும். யோசிச்சேன். போட்டுட்டும் போய்ட்டேன். இதுக்காகவே 
காண்டீன் போவோம்ல .. போய்ட்டேன். மாப்ள அப்டின்னு கூப்பிடுற நண்பன் கன்னா பின்னான்னு என்னையத் திட்டினான். இதையெல்லாம்
எபடிடா கல்லூரிக்குப் போட்டுட்டு வர்ர ...very indecent அப்டின்னான். இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது கல்லூரியின் 
துணை முதல்வரும் காண்டீன் வந்தார். அவர் டீ குடிக்கும் போது நான் அங்கிருந்து கிளம்பினேன். எதிர்த்தாற்போல் இருந்த என்னைப் பார்த்து
"jeans ... ha .. first faculty to wear it in our college, Sam" என்றார். பாராட்டுறாரா... திட்டுறாரான்னு தெரியலை. 

கொஞ்சம் காத்திருந்து அவர் புறப்படும்போது அவரிடம் போய் மெல்ல, "Sir, do you mind me wearing this in college"அப்டின்னு மெல்ல கேட்டேன். அவ்வளவு தான். அவர் சொன்னதை நான் தவறாக நினைத்து விட்டேன் என்று பதறிப் போய்..  No Sam... i am just appreciative of this" அந்த அர்த்தத்தில் தான் சொன்னேன் என்றார். 
                           

அப்படி ஒரு கல்லூரி ... அப்படி ஒரு பேராசிரியர். எனக்கென்னவோ எங்கள் கல்லூரி தவிர எனைய கல்லூரிகளில் இந்த FREEDOM இருக்காது என்றே நினைக்கின்றேன். தெய்வீகக்கல்லூரி தான். கொடுத்து வைத்தவர்கள் நாங்கள். அப்படியிருந்த "அந்தக் கல்லூரியில்" வேலை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

of course,என்னைத் திட்டிய நண்பன் பின்னாளில் ஜீன்ஸ் போட்டு கல்லூரிக்கு எல்லோரும் போல் வர ஆர்மபித்த போது நினைவு படுத்தினேன். அட போடாஎன்றான்.

எங்கள் கல்லூரியை இப்படி சொல்வதினால் ஏதோ உயர்த்திச் சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். இன்னொரு சான்று தரவா? ஒரு பட்டறைக்காக வேறு ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தேன். அன்றைய பாஷன் பெல் பாட்டம்ஸ். என்னைப் பார்த்த அக்கல்லூரியில் உள்ள இளைய ஆசிரியர் ஒருவர் என்னைப் பார்த்து "சார், இதை  உங்கள் கல்லூரிக்குப் போட்டுட்டு போவிங்களா?" என்று அப்பாவித் தனமாகக் கேட்டார். ஆமாம், ஏன் என்றேன். "எங்கள் கல்லூரியில் இதெல்லாம் போட்டா வீட்டுக்கு விரட்டிருவாங்க "என்றார்.



ஜீன்ஸ் இப்படி வந்ததா? அதே மாதிரி "மூக்குக் கண்ணாடி". வெள்ளெழுத்துக் கண்ணாடி போடும் காலம் வந்தது. சரியாக 40 வயது முடியும் போது கண்ணாடி போடும் நிலை வந்தது. என்ன கண்ணாடி போடலாம் என்று யோசித்த போது, சைனா கண்ணாடி என்று ஒன்று வந்தது. சின்னூண்டாக இருக்கும். மூக்கின் நுனியில் போட்டால் மேல் வழியாக சாதாரண பார்வை; கண்ணாடி வழியாகப் பார்த்தால் படிக்க எளிது. இந்தக் கண்ணாடியை எப்போதும் போடாமல், வாசிக்கும்போது மட்டும் போடும் பழக்கம் இந்தக் கண்ணாடியைப் பயன்படுத்தும் ஆட்களிடம் இருக்கும். நான் ஒரு ஸ்டெப் அதிகமாகச் சென்றேன்! .ஒரு கயிறு கட்டி கண்ணாடி நெஞ்சில் தொங்கும்; வாசிக்கும்போது மூக்கில் மேல் போய் உட்கார்ந்து கொள்ளும். ஆனால் இப்படி அந்தக் காலத்தில் போடுவது அதிகமாக யாருமில்லை.  நான் அவ்வாறு போட்டு வரும்போது சிலர் மிட்டாய்கடையைப் பார்ப்பது போல் பார்த்தார்கள். சில comments வந்தன. கண்டு கொள்ளவில்லை. வைஜெயந்தி மாலாவும், பின்னணிப் பாடகி சுசிலா அம்மையாரும் தங்கச் செயின் போட்டு இது மாதிரி கண்ணாடியைப் போடுவதைப் பார்க்கும் வரை என் கண்ணாடி பலருக்கும் விநோதமாகவே இருந்தது. இதற்கெல்லாமா நாமல்லாம் அஞ்சுவோமா?. என் கண்ணாடி .. என் மூக்கு .. என் மூக்குக் கண்ணாடி என்று இருந்துட்டோம்ல ...

அது ஒரு காலம் ...

1 comment:

அ. வேல்முருகன் said...

அம்மாவும் நீங்களும் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். வாழ்க்கையில் ஒவ்வொன்றும் பசுமையான நினைவுகள். நினைவுகளை அசைபோட மிக இனிமை.

Post a Comment