Monday, August 17, 2026

1388. பின் நவீனத்துவத்தில் மாசாத்துவான் கதை




  பின் நவீனத்துவத்தில் மாசாத்துவான் கதை




என்ன இது .. நவீனத்துவம் என்றெல்லாம் பேசுகிறேனே என்று யோசிக்கிறீர்களா? வேறொன்றுமில்லை சிறிது வித்தியாசமாக இருந்தால் அது பின் நவினத்துவம் என்று நான் இதுவரை கருதி வந்திருக்கிறேன். இங்கே மாசாத்துவானைப் பற்றி பேசப் போகிறோம். ஆகவே இந்தத் தலைப்பை வைத்தேன். சரியா தவறா என்று கடைசியில் சொல்லுங்கள்.


கோவலன் மிகவும் பிரபலமான செல்வந்தன். நகரச் செல்வந்தர்கள் குழுவின் தலைவனாகவும் இருந்தவன். செல்வத்திற்குக் குறைச்சல் இல்லை. செல்வம் சேரும்போது இளைஞர்களுக்கு வரும் பல்வேறு புதிய பழக்க வழக்கங்களும் அவன் மேல் ஏறி உட்கார்ந்தன. அதில் ஒன்று நாட்டியக் கலையின் மேல் அவனுக்கு அப்படி ஒரு அபிமானம். அந்த ஆட்டம் அவனுக்குப் பிடித்தது. ஆனால் நாளாவட்டத்தில் ஆடிய ஒரு பெண்ணையும் அவனுக்குப் பிடித்தது. தொல்லை என்னவென்றால் அந்தப் பெண்ணுக்கும் அவனைப் பிடித்தது. வீட்டிலோ கண்ணகி. பதிவிரதை. அடங்கிய மனைவியாக வீட்டில் இருந்தாள். அதைவிட தன் மாமியார் மாமனாருக்கு ஒரு மகளாகவே இருந்தார். மாமனாருக்கு தன் மருமகள் மேல் அத்தனை பாசம்.


கோவலன் சிறிதாகவே திசை மாறும் பொழுதுமே அவரது தந்தை மாசாத்துவானுக்கு அது அறவே பிடிக்காத ஒன்றாக ஆகிவிட்டது. மகனைக் கூப்பிட்டுப் பேசினாராம். பையனோ இப்போது வளர்ந்த பிள்ளை. கட்டுக்குள் அடங்குவானா? அதுவும் பெரிய செல்வந்தன். நாடெல்லாம் அவன் பேச்சை நம்புகிறது அவனை மிகவும் உயரத்தில் வைத்து அவனது சமூகம் களித்துக் கொண்டிருக்கிறது. அவன் காதில் தந்தையின் மந்திரம் எப்படி ஏறும். ஏறவில்லை. தந்தை கோபித்தார். பையன் தான் விரும்பிய நாட்டியக்காரியான மாதவியின் பக்கம் முழுவதுமாக ஒதுங்கி விட்டான்.

 

மாசாத்துவானுக்கு பெரிதும் மன அழுத்தம் வந்தது. தான் எதிர்த்து பேசியதாலே தன் மகன் இவ்வாறு தன் மனைவியை விட்டுவிட்டு மாதவியின் பக்கம் சென்று விட்டானோ என்ற மனப்பழு அவருக்கு அதிகமாக இருந்தது. இதனால் கண்ணகியின் மேல் அவர் ஏற்கனவே வைத்திருந்த பாசம் மேலும் வளர்ந்து, என் மகள் வாழ்க்கையை நானே கெடுத்து விட்டேனோ என்று தன்னைத்தானே நொந்துகொள்ளும் அளவுக்கு அவர் மாறிவிட்டார்.

 

ஆனால் கோவலன் இதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. தன் வியாபாரத்தை செழிப்பாக்கினான் பெருக்கினான் ஆனால் அதோடு மாதவியோடு இருந்த தொடர்பையும் மேலும் இறுக்க மாக்கிக்கொண்டான்.


ஏற்கனவே மாதவியின் நாட்டியம் அனைவரையும் மிக எளிதாக கவரக்கூடிய ஒன்றாக இருந்தது. இப்போது கோவலனோடு சேர்ந்த பிறகும் அவள் சோர்ந்து போகவில்லை இன்னும் நடனத்தில் மேலும் மேலும் நெருகேற்றிக் கொண்டிருந்தாள். அந்தக் கலையின் உச்சத்திற்குச் சென்ற அந்தப் பெண் நாட்டிய விழா ஒன்றை எடுத்தாள். நடுநாயகமாக தன்னை வைத்து அந்த விழாவை பெருமளவில் நடத்திக் காண்பித்தாள். கோவலன் தன் தாயையும் தந்தையையும் வற்புறுத்தி அந்த விழாவுக்கு அழைத்திருந்தான். மாதவி ஆடினாள். வந்த அனைவரையும் தன் ஆட்டத்தினால் அவள் சொக்க வைத்தாள்

விழா முடிந்த நேரத்தில் மேடையை விட்டு இறங்கிய மாதவி தன்னை கௌரவிக்க வந்திருந்த பெரியவர்கள் அனைவரையும் நேரிடையாக சந்தித்து அவர்களுடைய வாழ்த்தை பெற்றுக் கொண்டிருந்தாள். வரிசையாக அவள் வந்து கொண்டிருந்த பொழுது அங்கே மாசாத்துவானும் அவனது திருமதியும் நின்று கொண்டிருந்தார்கள். மாசாத்துவான் அவள் வரும்பொழுது தன் தலையைத் திருப்பி வேறெங்கோ பார்ப்பது போல் அவள் கண்களைச் சந்திக்காமல் தவிர்த்தார். ஆனால் திருமதி மாசாத்துவான் மாதவியை வாழ்த்திக் கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டு முதுகில் தட்டிக் கொடுத்து தன் அன்பை எல்லாம் வெளிக்காட்டினார்..


விழா முடிந்தது. வீட்டிற்கு வந்த மாசாத்துவான் தன் மனைவியை பார்த்து இதெல்லாம் உனக்குத் தேவையா? நீ செய்தது சரியா என்று கேட்டார். அவரது மனைவிக்கு முதலில் புரியவில்லை ஏன் என்ன செய்து விட்டேன் என்று கேட்டார் மாதவியை இவ்வாறு பொதுவெளியில் அணைத்து உன் அன்பை வெளிக்காண்பிக்க வேண்டுமா என்று கேட்டார். இல்லை... எதிரில் வந்து நின்றாள் ஆகவே அப்படி செய்தேன் என்று அசடு வழிந்தார். மாசாத்துவான் பொது வெளியில்  அவளை அணைத்தாய்; வாழ்த்தினாய்; எந்த முறுமுறுப்பும், எதிர்ப்பும் நீ காண்பிக்கவில்லை. ஆகவே மக்கள் என்னவென்று நினைப்பார்கள் கண்ணகி இருக்கும் பொழுது மாதவியிடம் சென்ற தன் மகனை இந்தத் தாய் அதனை ஒரு குற்றமாகக் காணவில்லை. அதையும் விட அந்த உறவை அவர் ஒத்துக் கொண்டு ரசிக்கிறாள் என்று தானே அனைவரும் யோசிப்பார் கள். She is not worth it. இது உனக்குப் புரியவில்லையா என்று கேட்டார். மனதிற்குள் என்ன நினைத்தாரோ திருமதி மாசாத்துவான். பதிலேதும் சொல்லாமல் மௌனமாக இருந்தார்.. உன்னைத்தான் மட்டமாக மக்கள் எடை போடுவார்கள் என்றார் மாசாத்துவா
ன். அதோடு உன்  மீதான character assassination நிச்சயமாக அதிகமாக நடக்கும்; பார்த்துக் கொண்டேயிரு என்றார் மாசாத்துவான்.

 

ஒரு பழைய இதிகாசக் கதைக்கு ஒரு ஆங்கிலச் சொற்றொடரை சேர்த்து இந்தக் கதையை ஒரு பின்னவீனத்துவக் கதையாக மாற்றி விட்டேனே. பார்த்தீர்களா? இதைத்தான் நான் முன்பே தலைப்பில் சொன்னேன் இது ஒரு பெரிய பின் நவீனத்துவக் கதை என்றேன்.


கதையின் முழு சாராம்சம் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். புரிந்து விட்டதா?

 

பி.கு. யாரப்பா அது? ஏதோ தப்பான ஒரு படத்தை இக்கதையோடு இணைத்து விட்டார்களே?


 

 


No comments:

Post a Comment