Tuesday, May 23, 2023

1223. WHAT A LIFE ....?

நீண்ட நாள் மருத்துவத்திற்காக நெடுந்தூரம் பயணம் செய்து ஓர் ஊரில் வந்து தங்கியிருக்கிறோம். மருத்துவம் பற்றியோ, மருத்துவர் பற்றியோ எதுவும் பேசுவது இப்போது என் நோக்கமல்ல. ஆனால் மருத்துவத்திற்காக வந்த மக்களைப் பற்றிக் கட்டாயம் பேச வேண்டுமென்று முதலிலிருந்து ஓர் உறுத்தல்.

சேர்ந்த முதல் நாள் காதில், கண்ணில் ஏதும் விழவில்லை. அங்கங்கே அலைந்து கொண்டிருந்தேன். இரண்டாம் நாள் மருத்துவத்திற்காக வந்த மக்களோடு ஒருவனாய் காத்திருந்த போது பார்த்த காட்சிகள் என்றும் மனதை விட்டு அகலாது. பெரியவர்கள் பலரும் சிரமத்துடன் பார்த்த போது மனம் ஒன்றும் சிரமப்படவில்லை. ஆனால் சின்னஞ்சிறு குழந்தைகளையும் அவர்களின் குறைபாடுகளையும் பார்த்து மனம் பதறியது. அங்கே தொடர்ந்து இருக்க முடியாமல் ஓட வேண்டும் போல் இருந்தது. பக்கத்தில் உறவுக்காரப் பெண் என்னோடு இருந்தாள். இறை நம்பிக்கை நிறைந்த பெண். எங்களுக்கருகில் சாமி உருவங்கள் இருந்த அலங்கார மேடை ஒன்றும் இருந்தது. பலரும் வணக்கம் செலுத்திக் கொண்டிருந்தனர். என்னால் கண்முன் நடப்பதையோ பார்க்க முடியாமல் மனம் பதைத்தது. இல்லாத அந்த தெய்வத்தின் மேல் கோபம் வந்தது. உறவுக்காரப் பெண்ணிடம், “இப்படி ஒரு கடவுள் இருந்து இப்படி படைத்தாரென்றால் அந்தக் கடவுளைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் எறிந்து விடணும்என்று கோபமாகச் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

முதல் அனுபவே இப்படிக் கசந்தது. அப்போது எந்தக் குழந்தை பற்றியும் தனித்து ஏதும் தெரியாது. தங்கிய நாட்கள் ஒவ்வொன்றாகக் கடந்த போது ஒவ்வொரு குழந்தை பற்றியும் தெரியத் தெரிய ... மனசு தாங்கவில்லை.

ஒரு சின்னக் குழந்தை. பத்துப் பதினோரு வயதிருக்கும். மலரின் பெயர் அந்தப் பெண்ணுக்கு. அழகுக் குழந்தை. முகம் அத்தனை அழகு. மெல்லிய குரலில் பேசும் அழகே அழகு. பிறந்த நாளிலிருந்து கை கால்களின் எலும்புகளினாலோ என்னவோ நடக்கவோ, கையால்  எதையும் பிடிக்கவோ முடியாது. நாங்கள் நல்ல நண்பர்களாகி விட்டோம். என்ன பாவம் செய்தது அந்தக் குழந்தை. கடவுள் படைத்தான் என்பதோ, ஊழ்வினைப் பயன் என்பதோ நான் நம்ப மறுக்கும்  வெறும் வெத்து வேட்டுகள்.

பத்துப் பன்னிரண்டு வயது என்று அந்த பெண்ணைப் பார்த்த போது நினைத்தேன். ஆனால் உண்மையில் இருபதைத் தாண்டிய பெண். உடம்பே கோணலாகி வளைந்திருக்கிறது. காலில் சுத்தமாகப் பலமில்லை. ஏழெட்டு வயது வரை துள்ளி ஓடிய பிள்ளையாம். நடனம் ஆடுவதை போட்டோ எடுத்து வைத்திருக்கிறார்களாம். குழந்தைப் பருவத்தில்வெகு விரைவாக நடக்க ஆரம்பித்த குழந்தை. இப்போது முழுவதும் முடங்கிப் போன பிள்ளை.

இன்னொரு பையன். பிறவியிலேயே மூட்டை முடிச்சாகப் பிறந்தான் போலும். கால்கள் திருகி இருக்கின்றன. அவனது தந்தை ஒரு வருடமாக உடனிருந்து வைத்தியம் பார்க்கிறாராம். முதலில் அம்மாவோடு இருந்திருக்கிறான். அம்மா செல்லமாக இருந்ததால் அவரை வியாபாரம் பார்க்க தன் கடையில் இருத்தி விட்டு அப்பா பையனை சிறிது முரட்டுத்தனத்தோடு கவனிக்கிறார் என்றார்கள். அதுவே பையனை விரைவில் சுகமாக்கும் என்று அப்பா நினைக்கின்றார் என்றார்கள்.

பிறக்கும் போதே காது கேளாமையுடன் பிறந்த பையன். அவனோடு மல்லாடும் பெற்றோர். அப்பா work from home software ஆள். வேலையும் பையனையும் எப்படியோ சமாளிக்கிறார் அப்பா.

இப்படி எத்தனையோ குழந்தைகள். இப்படி கொத்துக் கொத்தாய் பாவப்பட்ட குழந்தைகளைப் பார்க்கும் போது மனது தாங்கவில்லை. அதிலும் குழந்தைகள் என்பதால் அவர்களுக்கு தங்களுக்கான கொடுமைகளைச் சரியாகக்கூட புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் பெற்ற தாய் தந்தையரை நினைத்தாலே மனம் பதறுகிறது. எத்தனை எத்தனை பெற்றோர் தூக்கம், இன்பம் தொலைத்து பிள்ளைகளின் நிலையறிந்து சோகமுற்றிருக்கிறார்கள் என்று தோன்றியது. பிள்ளைகள் நிலைகளை விட இவர்கள் நிலைதான் பாவம் என்று தோன்றியது. நம்பிக்கைகளோடு காத்திருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை நடக்கட்டும், நடந்தேறட்டும் என்று மட்டுமே மனதில் தோன்றுகிறது. circumstances make one go very philosophical.

சோகமான சூழல்தான். ஆனால் அதிலும் ஒரு வெகு நல்ல விஷயம் பார்த்தேன். Camaraderie எ-ன்ற சொல்லின் முழுப்பொருளையும் இங்கு ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறேன்.  எல்லோரும் எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்கிறார்கள். மனதில் சோகத்தைச் சுமையாகத் தூக்கிக்கொண்டு வெளியே இன்முகத்துடைன் உடனிருப்போரிடம் பழகுகிறார்கள். உயர்வு தாழ்வு இல்லை. எனக்குத் தோன்றியதை சிலருடன் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னேன். “நம்ம கெட்ட குணங்களையெல்லாம் வெளியே விட்டுவிட்டு நல்லவர்களாக அனைவரும் இருக்கிறோம்என்றேன். பலமாக எல்லோரும் ஒத்துக் கொண்டனர். நான் தொடர்ந்து, “யார் கண்டது? வெளியே போனதும் பழைய குணங்கள் மீண்டும் வந்து நம்மீது ஏறிக் கொள்ளலாம் என்றேன். ஒரு பெண்மணி உடனே ஒரு பதில் சொன்னார்கள். “அப்படியெல்லாம் நடக்காது சார். இங்கே பத்தியம் இருப்பது போல் இருக்கிறோம். இந்தப் பத்தியமும் என்றும் நம்மோடு இருக்கும். என்றும் இப்படியேதான் வெளியேயும் இருப்போம்” என்றார் உறுதியாக. என்றார். அது உண்மையாக இருக்க வேண்டும். அது உண்மையானால் உலகமே அன்பு மயமாகி விடும் என்றே தோன்றியது. 

Thursday, May 18, 2023

1222. #அயோத்தி #DHARUMIsPAGE answering to #KASHMIRFILES

Wednesday, May 17, 2023

1221. WALKING TIME IN A GREEN PARADISE



நேற்றைய நடையில் ஊரைப் பார்த்து வியந்தேன்; இன்று (14.5.23) ஊரின் வெளிப்பகுதியைப் பார்த்து அதன் அழகில் மயங்கி விழுந்தேன். சமீப காலத்தில் நெட்பிளிக்ஸ், ப்ரைம் வீடியோ அருள்பாலித்ததில் நிறைய கேரளப் படங்களைப் பார்த்து, ஏற்கெனவே இருந்த கேரளக் காதல் அதிகமாக வளர்ந்துள்ளது. இப்போதும் இந்த ஊர் கேரள எல்லையில் உள்ளது. இன்று நடந்த சாலையில் தொடர்ந்தால் ஓரிரு கிலோ மீட்டர் தொலைவில் கேரளம் வந்து விடுமாம். எல்லைப் பகுதி மக்கள் என்பதால் தமிழும் கேரளமும் எங்கும் நிரவிக்கிடக்கின்றன.

தெரியாத சாலை. நல்ல சிமிண்ட் போட்ட சாலை. பெரிய சாலையிலிருந்து கிளைத்துச் சென்ற நல்லதொரு சாலை. நடக்க ஆரம்பித்தேன். பச்சையழகில் அப்படியே குடை சாய்ந்து வீழ்ந்தே விட்டேன். வழுவழு சாலை. சாலையில் வலது பக்கத்தில் பெரும்பள்ளம். அது ஒரு கால்வாய். ஆனால் தண்ணீர் கண்ணுக்குப் புலப்படவில்லை. அந்தப் பள்ளத்திலிருந்து பல்வேறு மரங்கள்; செடிகள்.  திரும்பும் இடமெல்லாம் பச்சைப் பசேலென்று இருந்தது. சிறிது தூரம் வரை இடது பக்கத்தில் பல மாமரங்கள். காய்கள் காய்த்துத் தொங்கின. அதன்பின் இடது பக்கம் ஆங்காங்கே சில கேரள வீடுகள்; சில பாவப்பட்ட மக்களின் குடிசைகள். வலது பக்கமோ நான் நடந்த தொலைவு வரை செடிகளும், மரங்களும். எல்லோரும் வாழைத் தோப்பு பார்த்திருப்போம். ஆனால், இங்கே கால்வாய் பள்ளத்திலிருந்து உயர்ந்து வளர்ந்த பல வாழை மரங்கள் கேட்பாரற்று காய்த்து, காய்ந்து, சாய்ந்து ஒரு வாழைக்காடாக இருந்தது.

எதிரில் வந்த சில மக்களும், குடிசை வாழ் மக்களும் என்னை ஓர் அபூர்வ பிராணி மாதிரி பார்த்தார்கள். நட்பாகப் பழகிய காவல் துறை ஆய்வாளரிடம் திரும்பி வரும்போது அவரது அவுட் போஸ்ட்டில் காலாற உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். எல்லையோரம் என்பதால் அருகருகே அவுட்போஸ்ட்டுகள் இருக்கின்றன என்றார். அபூர்வ பார்வை பற்றிச் சொன்னேன். இந்தப் பக்கம் யாரும் உங்களைப் போல் முக்கால் கால்சட்டை போடுவதில்லை; அதனால் அப்படிப் பார்த்திருப்பார்கள் போலும்” என்றார். இன்னொன்றும் நான் கவனித்தேன்: என்னைப் போன்ற ஒரு வயயயசான ஆள் காதில் எதையோ மாட்டிக் கொண்டு பாட்டு கேட்பதையும் விநோதமாக ( வயது குறைவான இப்போதைய என் ரூம் மேட்டும் அப்படிதான் பார்த்தார்; கேட்டார்!) பார்ப்பது போல் தோன்றியது.

என்னமோ போடா, குமாரு!

நான் மயங்கிய இடங்களைக் காண்பிக்க இதோ ஓர் காணொளி:

காணொளி போட முயற்சித்தேன். இரு நாளாக முயற்சித்தும் முடியவில்லை - இங்கே இணையத்தின் நிலை இப்படி போலும். பின்னாளில் சேர்க்கிறேன். இப்போதைக்கு இப்பதிவு இவ்வளவே !!



Sunday, May 14, 2023

1220. இது ஆறாம் திணையோ ...?

                                     

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித்திணையில் வருமாமே? அப்படியென்றால் ஒரே ஊரில் நகரமும், கிராமியமும் இணைந்தால் அதன் பெயர் என்ன? ஏழ்மையும், வளமையும் அருகருகே அடுத்தடுத்து இருந்தால் அதன் பெயர் என்ன? நாடும் காடும் ஒரே தெருவில் அடுத்தடுத்து இருந்தால் அதன் பெயர் என்ன? ஆளே இல்லாத இடத்தில் பெரிய கடைகள் நடுநடுவே இருந்தால் அதன் பெயர்  என்ன? எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

நாஞ்சில் நாட்டுக்கு ஒரு மருத்துவப் பயணம். தமிழ் நாடு- கேரளம் இரண்டும் இணையும் இடத்தில் – இப்படி சொல்லணுமா அல்லது இரண்டும் பிரியும் இடத்தில் – ஒரு சிற்றூர். மாலை நேரம். சற்றே நடக்கலாமென்று நேற்று ஒரு சாலையில் சென்றேன். சின்ன குறுகலான சாலை; ஆள் நடமாட்டம் மிகவும் குறைவு. ஆனால் எதிரும் புதிருமாக நிறைய வண்டிகள். அதனால் இன்று(13.5.23) சாலையை மாற்றி நடக்க ஆரம்பித்தேன். நீண்ட நெடும் பாதை. சிறிது ஏற்றமும் இறக்கமுமாக இருந்த சாலை.


பல வியப்புகள் ...

·         சாலையில் இருமருங்கிலும் தொடர்ந்து வீடுகள் இருந்தன. இருந்தும் ஆள் நடமாட்டம் அதிகமில்லை. இரு சக்கர வண்டிகள் மட்டும் பறந்து கொண்டிருந்தன. இப்போது தான் வாசித்த ஒரு செய்தி உண்மையெனத் தெரிந்தது. சில பெரிய வீடுகள் ஆளில்லாத வீடுகள் மாதிரி இருந்தன. இப்படிக் காலி வீடுகள் நிறைய கேரளாவில் இருப்பதாகவும் வெளிநாட்டுக்குக் குடியேறிவிட்டார்கள் எனவும் சமீபத்தில்  வாசித்திருந்தேன். வீடுகளைப் பார்த்த போது அச்செய்திதான் நினைவுக்கு வந்தது. இதில் ஆச்சரியப்பட வைத்த ஒன்றும் இருந்தது. பெரிய வீடுகள் .. அலங்கார வீடுகள். ஆனால் அடுத்த வீடு ஒரு ஓட்டைக் குடிசையாக இருந்தது. சாலைகள் மேடும் பள்ளமுமாக இருப்பது போல் மக்களும் ஏழ்மையும் வளமையும் மாறி மாறி இருந்தார்கள்.  இருண்ட ஒரு வீட்டின் முன் உட்கார்ந்திருந்த ஒரு வயதான் அம்மையார் என்னைக் கவர்ந்தார். படம் எடுக்க உத்தரவு வாங்கிப் படம் எடுத்தேன். மொழியில்லாமல் இருவரும் பேசிக்கொண்டோம்.

                                                                  



                                                                              



                                                                                                         


·         சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தபோது பார்த்த ஒரு அதிசயம்; இரு மருங்கிலும் வீடுகள். அதிகமாக மரங்கள் சூழ்ந்த வீடுகள். மாமரங்கள் காய்த்துத் தொங்கின. பலாமரங்கள் கைக்கெட்டும் அளவில் காய்த்துத் தொங்கின. சிறு வயதில் எங்காவது கண்ணில் படும் மாமரங்களில் அல்லது புளியமரங்களில் கல்லெறிந்து விரட்டுப்பட்ட நினைவு வந்தது. இங்கே யாரும் கல்லை விட்டு கூட அல்ல, எட்டியும் மாங்காயைப் பறிக்க மாட்டார்கள் போலும். நான் படமெடுத்த போது காய் பிடுங்கும் ஆவலைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன்.




·         வீடுகள் நிறைய உள்ள தெரு என்றால் அங்கு வீடுகளை மட்டும் தான் நாம் பார்க்க முடியும். ஆனால் வீடுகளின் நடுவே ஒரு காடும் இருக்கிறதே என்று வியப்போடு பார்த்தேன். அடுக்கடுக்காக நீள் வரிசையில் ஒரு பெரும் காட்டையும் அந்தத் தெருவில் பார்த்தேன். அடுத்த ஆச்சரியமாக அது இருந்தது.                                                                                     

                                                          


    



·         மரங்கள் அடர்ந்த காடு இருந்தது. ஆட்கள் அதிகமில்லாத வீடுகள் இருந்தன. ஆனால் அந்தத் தெருவில் அங்கங்கே பல கடைகள். ஒரு ரெடிமேட்  கடை; இன்னொரு பெரிய பழக்கடை. கவரிங் கோல் கடையும் கூட ஒன்று; ஓர் இருசக்கர பணிமனை. யார் இங்கு வந்து வியாபாரம் செய்வார்கள் என்ற கேள்வி மனதில் எழுந்தது.


                                                                             

·         இவ்வூரின் ஊராட்சி அலுவலகமும், நூலகமும் அதே தெருவில் பார்த்தேன். இது அவ்வூரின் முக்கிய தெருவாக இருக்குமோ?
















Sunday, May 07, 2023

1219. walk time #DHARUMIsPAGE