Monday, March 06, 2006

140. ஷோலே - இரண்டாம் பாகம்…

ஹாலிவுட் படங்களில் எனக்கு இந்த western படங்கள் என்றாலே ரொம்பவே பிடிக்கும். எல்லா படங்களின் கதைகளுமே ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும்: ஹீரோ எங்கிருந்தோ ஒரு ஊருக்கு வருவாரு; வில்லன்களைத் துவம்சம் பண்ணிட்டு, கடைசியில அந்த ஊரு மக்கள் கேட்டுக்கிட்டாலும் எதுவுமே வேண்டான்னுட்டு, தனியாகத்தானே வந்தோம்; தனியாகத்தானே போகணும் அப்டிங்கிற தத்துவத்தோடு அந்தி மயங்கும் ஒரு மாலை வேளையில் தன் குதிரையில் தனி ஆளாகத் திரும்பிப் போய்டுவார். எப்பவுமே ‘சத்தியமே ஜெயதே’ அப்டிங்கிறது மாதிரி, நல்லவனாக, வல்லவனாக வந்து தீய சக்திகளை அழிச்சிட்டுப் புறப்பட்டுப் போயிடுவார். எத்தனையோ நடிகர்கள் நடிச்சிருந்தாலும் சிலருக்குத்தான் அந்த ரோல் பொருந்தியிருந்தது. அதிகம் அலட்டிக்காம, நறுக்குன்னு வசனங்கள் பேசி நடிச்சதில Garry Cooper, John Wayne, Henry Fonda, Joel Mcrea - இவர்கள்தான் என்னைக் கவர்ந்தவர்கள். இவர்கள் காலத்திற்குப் பிறகு Clint Eastwood, Franco Nero, Lee Van Cleef- இவர்கள் என்னைக் கவர்ந்தார்கள். கடைசியாகச் சொன்ன இந்த நடிகர்கள் நடித்தது இத்தாலிய வெஸ்டர்ன் படங்களாகும். இந்தப் படங்களை spaghetti Westerns என்று அழைப்பதுண்டு. இந்தப் படங்களுக்குத் தேவையான இயல்புகள் இவர்களிடம் இயற்கையாகவே இருந்தன. இந்த நேரத்தில் நம்ம கர்ணன் ஜெயசங்கரைக் கதாநாயகனாக வைத்து எடுத்த நம்ம ஊரு கெளபாய் படங்கள் நினைவுக்கு வரத்தான் செய்கின்றன. சரி..அந்தக் கொடுமையை வேறு ஒரு பதிவில் பார்ப்போம். ஷோலே படம் பார்த்த போது அந்தப் படத்திற்கும் ஆங்கில வெஸ்டர்ன் படங்களுக்கும் இருந்த ஒற்றுமைகள் பளீரெனத் தென்பட்டன. என்ன, வெஸ்டர்ன் ஹீரோக்கள் குதிரையில் வருவது போல் இல்லாமல் நம்ம கதாநாயகர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தார்கள். ஆனாலும் பல காட்சி அமைப்புகள், கதாபாத்திரப் படைப்புகளில் பல ஒற்றுமை இருந்தன என்பதென்னவோ உண்மை.

ஒற்றுமைகள்:
ஷோலேயில் இரண்டு நல்ல நண்பர்கள் - தர்மேந்திராவும், அமிதாபும். இதே போலவே பல படங்களில் இரட்டைக் கதாநாயகர்கள் ஆங்கில வெஸ்டர்னில் வருவார்கள்: Henry Fonda-வும் Antony Quinn-ம் “Warlock” (1959)என்ற படத்திலும், John Wayne-ம் Kirk Douglas-ம் “The War Wagon”என்ற படத்திலும், (1967) Burt Lancaster-ம் Kirk Douglas-ம் “TheGunfight at the O.K. Coraala” (1957)என்ற படத்திலும் இதே போல இரட்டை நண்பர்களாகவே வருவார்கள். அதே போல், உள்ளூர் பெரிய மனிதர் (சஞ்சீவ் குமார் )வில்லனைச் ( அம்ஜத் கான்) சமாளிக்க, தர்மேந்திரா, அமிதாபை நாடுவது “The Professionals” (1966) “Vera Cruz” (1954) “Shane” (1953)என்ற படங்களில் உள்ள கதையமைப்பாகும். அமிதாப் இளம் விதவை (ஜெய பாதுரி)மீது காதல் கொள்வதாக ஷோலேயில் இருக்கும். இதே கதையமைப்பே “Hondo” (1953) என்ற படத்திலும், சிறிதே மாறி “Shane” படத்திலும் வரும். இதைவிடவும், அமிதாப் இறக்கும் அந்தக் கடைசி சீன் அப்படியே “The Garden of Evil” (1950)என்ற படத்தின் அப்பட்ட காப்பியாகும். அமிதாப் அந்தக் கடைசி சீனில் செய்வது, பேசும் வசனம் எல்லாமே இந்தப் படத்தின் கதா நாயகன் Richard Widmark செய்வதின் ஃபோட்டா காப்பிதான். ஷோலேயில் ஒரு நல்ல சீன்; தர்மேந்திரா கிராமத்துப் பெண் ஹேமமாலினியைக் கவர தன் துப்பாக்கியால் குறி பார்த்து சுட்டு தன் வீரப் பிரதாபத்தைக் காண்பித்துக் கொண்டிருப்பார். அப்போது, அமிதாப் அதைவிட தூரத்திலிருந்து குறி தவறாமல் சுட்டு தர்மேந்திராவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வார். இந்த சீனும் Garry Cooper “Dallas” (1950) என்ற படத்தில் செய்வதின் சுத்தமான நகலாகும். ஷோலேயில் A.K. Hangal-ன் பாத்திரப் படைப்பு Karl Malden, Van Heflin போன்றவர்கள் வெஸ்டர்ன் படங்களில் செய்யும் சின்னப் பாத்திரங்களையே ஒத்திருந்தது. கபார் சிங் (அம்ஜத் கான்) ஷோலேயில் நடித்த கதா பாத்திரமும் Burt Lancaster “Vera Cruz” என்ற படத்தில் செய்ததே. ஷோலே வெஸ்டர்ன் படங்களில் இருந்து மாறுபட்ட ஒரே முக்கிய அம்சம் என்னவென்றால், ஹேமமாலினியின் பாத்திரப்படைப்பு மட்டுமே. ஏனெனில் வெஸ்டர்ன்களில் வரும் பெண்கள் ஏறக்குறைய எல்லோருமே நீண்ட சிகரெட்டை ஊதிக்கொண்டு, கொஞ்சமே கொஞ்சம் உடை உடுத்திக்கொண்டு ‘ஒரு மாதிரி’ பெண்ணாகவே வருவார்கள். வீடுகளில் அவர்களைப் பார்க்க முடியாது; எப்போதும் கதாநாயகனும், வில்லனும் மோதும் ‘பார்களில்’தான் இருப்பார்கள். என்னதான் இருந்தாலும் ஷோலே நம்ம ஊர் படமல்லவா; அதற்கேற்றாற்போல ஹேமமாலினியின் பாத்திரம் படைக்கப்பட்டது. இன்னொரு முக்கிய வேற்றுமை - வெஸ்டர்னில் வரும் கதா நாயகர்கள் எப்போதும் தனித்தே இருப்பார்கள். ஒரு படத்தில் ஹீரோவை ‘ஏன் தனியாக இங்கே உட்கார்ந்திருக்கிறாய்?’ என்று கேட்க, கதாநாயகன் ‘நான் எப்போதுமே தனியன்தான், கூட்டத்திலும் கூட’ என்பான். வெஸ்டர்ன் படக் கதாநாயகர்களுக்கே உரித்தான இந்த தனித்துவம் சிறிதும் இல்லாமல் தர்மேந்திராவின் பாத்திரப் படைப்பு ஒரு ஜனரஞ்சகமான, கலகலப்பான பாத்திரமாக இருக்கும். வெஸ்டர்ன் படங்களுக்கே உரித்தான ஒரு சோகம் கப்பிய, தனியனாக இருக்கும் கதாநாயகப் பாத்திரம் ஷோலேயில் தலைகீழ். ஷோலே - இரண்டாம் பாகம் வரப் போகிறதாம். அந்தப் படம் எந்தெந்த வெஸ்டர்ன் படங்களைத் ‘தழுவ’ப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

இந்தப் பதிவு என் சொந்தச் சரக்கல்ல; என் நண்பரும், எனக்குக் கல்லூரியில் சீனியருமான ஆங்கிலப் பேராசிரியர் J. வசந்தன் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியது. வசந்தன் மெல்லிய நகைச்சுவையுடன் கதை, கட்டுரைகளை ஆங்கிலத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக எழுதி வருகிறார். பல பத்திரிகைகள் அவரது கட்டுரைகளைத் தொடர்ந்து பதித்து வந்துள்ளன. இப்போதும் The Hindu-வின் Metro Plus-ல் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் “Down The Memory Lane” என்ற தலைப்பில் எழுதிவருகிறார். He is also a good cartoonist. Mostly his writings will have his own drawings. கோகுலம் என்ற குழந்தைப் புத்தகத்தில் தொடராக வந்த அவரது நகைச்சுவைக் கட்டுரைகள் புத்தகமாக வெளிவந்துள்ளன. கல்லூரியில் பல ஆண்டுகளாக “Curtain Club”என்ற நாடகக் குழுவை அமைத்து பல ஆங்கில நாடகங்களை மேடையேற்றியுள்ளார். அவரது சில சினிமா பற்றிய கட்டுரைகளைத் தமிழில் தர எனக்குள்ள ஆவலின் முதல் முயற்சி இது.



வெளிகண்ட நாதரின் - மீண்டும் ஷோலே






Mar 06 2006 03:33 pm Uncategorized edit this
6 Responses
தருமி Says:
March 6th, 2006 at 10:51 pm e
Name: Padma Arvind E-mail: padma.arvind@gmail.com IP: 70.111.192.244

தருமி:
பொதுவாகவே அமிதாபின் நிறைய சண்டை போடும் உடல் மொழி கிளிண்ட் இன் பாதிப்பாக தோன்றுவது உண்டு. ஷோலேயில் காட்சிகள் படமாக்கப்பட்டவிதம் அருமை(வெகு நாட்களுக்கு முன்)

தருமி Says:
March 6th, 2006 at 10:55 pm e
நன்றி பத்மா.

தருமி Says:
March 6th, 2006 at 10:57 pm e
மக்களே,
(வழக்கம்போல) தருமிக்கு ஒரு சந்தேகம்
மேலே உள்ள பத்மா அவர்களின் பின்னூட்டம் எனக்கு என் மயில் பொட்டியில் வராமல் நேராக மட்டுறுத்தலுக்குக் காத்திருந்தது. approve என்று கிளிக் செய்த பிறகும் இங்கு பின்னூட்டத்திற்கு வரவில்லை.
* ஏன் என் inbox-க்கு வராமல் பின்னூட்ட மட்டுறுத்தலுக்கு நேரடியாக வந்தது?
* மட்டுறுத்தப் பட்ட பிறகும் ஏன் பின்னூட்டத்திற்கு வரவில்லை?
* முன்பு சில தடவைகள், சில பின்னூட்டங்கள் inbox-க்கும் வராமல், மட்டுறுத்தலுக்கும் வராமல் நேரடியாக பின்னூட்டத்தில் வந்து விட்டது. அது எப்படி?

வெளிகண்ட நாதர் Says:
March 6th, 2006 at 11:24 pm e
//இந்த நேரத்தில் நம்ம கர்ணன் ஜெயசங்கரைக் கதாநாயகனாக வைத்து எடுத்த நம்ம ஊரு கெளபாய் படங்கள் நினைவுக்கு வரத்தான் செய்கின்றன.//
ஆஹா, மறந்தே போய்ட்டேன், ஞாபக படுத்திட்டீங்க, சிஐடி சங்கர்லருந்து.. எங்க பாட்டன் சொத்து வரை..இருக்கு எழுத, அரிதாரத்தில… நன்றி தருமி!

வெளிகண்ட நாதர் Says:
March 8th, 2006 at 5:22 am e
நன்றி தருமி, நானும் பல western படங்கள் பார்த்ததுண்டு. இப்படி ஷோலே படத்தை, Frame by Frame Comapre பண்ணியதிலலை. இருந்தாலும் இன்னொரு முறை அப்படங்களை பார்க்க தூண்டுகிறது உங்கள் பதிவு.

//இந்த நேரத்தில் நம்ம கர்ணன் ஜெயசங்கரைக் கதாநாயகனாக வைத்து எடுத்த நம்ம ஊரு கெளபாய் படங்கள் நினைவுக்கு வரத்தான் செய்கின்றன//.ஆஹா.. மறந்தே போயிட்டேன்.. ஞாபகபடுத்தீட்டிங்க..அரிதாரத்தில எழுதனும், சிஐடி சங்கர்லருந்து, எங்கபாட்டன் சொத்து வரை..

dharumi Says:
March 11th, 2006 at 2:57 pm e
வெளிகண்ட நாதர்,
ஆக, அடுத்த பதிவுக்கு விஷயம் எடுத்துக் கொடுத்தாச்சு, இல்லையா?

No comments:

Post a Comment