Sunday, June 14, 2020

1101- யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ... 5



ஏனைய பதிவுகள் ….



தொடர்ச்சி ... 










மோசேயின் சட்டங்கள் மூன்று  பிரிவுகள் ஆகும்.

1. உடன்படிக்கை சட்டங்கள் (Covenant Codes )-  சிவில் சட்டங்கள் - இன்றைய நமது ஐபிசி (IPC - Indian Penal Code) சட்டங்கள் மாதிரி.
2. குருத்துவ சட்டங்கள் (Priestly Codes)
3.  இணையச் சட்டங்கள் (Deuteronomy ) -  சமூக அல்லது புதுச் சட்டங்கள்.

 இஸ்ரேலிய சமூகத்திற்குக் கொடுப்பதற்காக கடவுளே அச்சட்டங்களைத்  தம்மிடம் வழங்கியதாக மோசே கூறினார்

 இன்னொரு சம்பிரதாயமும் மிக முக்கியமானது. அது விருத்தசேதனம். (37) ஏன் இப்போது இந்த விருத்தசேதனம் கிருத்துவ மதத்தில் இல்லை என்று ஒரு கேள்வி எழுப்பி இருந்தேன்.  அதற்கான பதில் இந்த நூலில் பின்வரும் பக்கங்களில் கிடைத்தது.

 உன்னைப் போல் ஓர் இறைவாக்கினனை (தீர்க்கதரிசி) அவர்களுடைய சகோதரர்களிடமிருந்து நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். ( உபாகமம் இணைச்சட்டம் 18;18)

 இது யோசுவா குறித்து எழுதப்பட்ட வசனம் ஆனால் அது இயேசுவை குறித்து எழுதப்பட்டதாக புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் கூறிக் கொள்வர். (அப்போஸ்தலர் நடபடிக்கைகள் - திருத்தூதர் பணிகள் 3:21,22)

 புற ஜாதியிடமிருந்து கைப்பற்றிய நாடுகளை லேவி ஜாதியினரைத் தவிர ஏனைய இஸ்ரேலியர்கள் தங்களுக்குள் பங்கு போட்டுக்கொண்டனர். லேவியருக்குச் சொத்தில் பங்கு இல்லை. ஆனால் இஸ்ரேல் கடவுளுக்குக் குருக்களாக இருந்து பணியாற்றும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது.( இந்த லேவியருக்குத்தான்காணிக்கை கொடுக்க வேண்டும் என்று ப.ஏற்பாட்டில் வலிந்து வலிந்து சொல்லப்படும். அட ..  நம் வரலாற்றில் அய்யர்கள் ராஜ குருக்களாக இருந்ததாகச் சொல்வார்கள். தட்சணைகள், பரிகாரங்கள் எல்லாம் அவர்களுக்குத் தானே!  History repeats - sadly!!  புரியுதா?) (38)

 போரில் வென்று ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்த இப்தா நேர்த்திக் கடனாக தனது ஒரே மகளை எரிபலியாக எரித்து விட்டார்.  இஸ்ரேலியர்களின் கடவுளுக்கு நரபலி  என்றால் மிகவும் விருப்பமான ஒன்று!

 இயேசுவே கூட கடவுள் நம் பாவங்களுக்குக் கழுவாயாக அமையுமாறு நரபலியாகச் செலுத்தினார் என்று பைபிள் அறிவிக்கிறது.

ஆசிரியர் இதில் ஒரு கேள்வியை எழுப்புகிறார்.  ஆபிரகாம் ஈசாக்கை கடவுளுக்கு பலியிடப் போனார் அடுத்து இப்தா தன் மகளைக் கடவுளுக்குப் பலியாக்கினார்.  இந்த இரண்டிலும் பலி செலுத்த முயன்றவர்; பலிப் பொருள்; பலியைப் பெற்ற கடவுள் என்ற மூவரும் இருந்தார்கள். ஆனால்  மூன்றாவது சம்பவத்தில் கடவுள் இயேசுவை பலியாகச் செலுத்தினார். பலி செலுத்தியவர் ஆண்டவர்; இயேசு  பலிப் பொருள்.  பலியைப் பெற்றுக் கொண்டவர் யார்?  இந்த கேள்விக்கு பதில் இல்லை என்கிறார்.(39)

அடுத்து கிறித்துவத்தில் அதிகமாகப் புகழப்படும் தாவீது, அவரது மகன் சாலமன் பிறந்த பிறப்பை பற்றி -  அது ஒரு கேடுகெட்ட, அவலட்சணமான கதை -  ஆசிரியர் கூறுகிறார். தாவீது  தனது படை வீரன் உரியாவைக் கொன்று, அவன்  மனைவி பத்சேபா மூலம் இரண்டாவது கர்ப்பத்தின் மூலம்  ஒரு மகனைப்  பெற்றெடுக்கிறார்.(1 ராஜாக்கள் - 1 அரசர்கள் 11:1.3  )  அவன்தான் அதிபுத்திசாலி சாலமன். 

(ஏற்கனவே என் பழைய பதிவு ஒன்றில் ஆபிரஹாம் கதையை சுட்டிக் காண்பித்து எப்படி பெற்றோர்கள், அதுவும் பைபிள் தெரிந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆப்ரஹாம் என்ற பெயரை வைக்கிறார்கள் என்று கேட்டிருந்தேன். அதோடு இப்பொழுது தாவீது, சாலமன் என்ற இருவர் பெயரையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். இருவருமே கீழ்த்தரமான மக்கள்.  ஆனால் வேத புத்தகம் சொல்வதால் உயர்வாக மதிக்கப்படுகிறார்கள் இது வேடிக்கையா வேதனையை தெரியவில்லை!  ஆனால் நிச்சயமாக புரிந்தவர்களுக்கு இது வேதனையாகத்தான் இருக்க வேண்டும்.) (40)

வேதம் என்ன சொல்கிறது என்றால், “ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால் அந்த விபச்சாரனும் அந்த விபச்சாரியும் கொலை செய்யப்படக் கடவர்கள்”. (லேவி 20;10 புரோட்டஸ்டண்ட் மொழிபெயர்ப்பு)

தாவீதின் இச்செயல் கடவுளின் பார்வையில் தீயதாகப் பட்டது. (2 சாமுவேல் 11:27) ஆனால் இதே தாவீது மிகவும் நல்லவர் என்றும் கடவுளின் பார்வையில் ஏற்புடையவற்றை மட்டுமே அவர் செய்தார் என்றும் பைபிள் பாராட்டுகிறது. ஆனால்  கடவுள் தவறு செய்த  ஏரோபவாம் என்பவரைக் கண்டிக்கும் போது தாவீதைப் புகழ்ந்து பேசுகிறார்.(1 ராஜாக்கள் - 1 அரசர்கள் 14:8) (41) 

தாவீதின் மகனும், நீதிமானாவனாகவும் கருதப்படும் சாலமன்  இதோடு விட்டு விட்டாரா என்ன? கடவுள் புறஜாதியார் பெண்களை இஸ்ரேலியர் எவரும் திருமணம் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தார்(உபாகமம் - இணைச்சட்டம் 7:3).  ஆனால் சாலமனோ ஆயிரம் புறஜாதிப் பெண்களை தன் மனைவியாக வைத்திருந்தார்.  அதில் 700 மனைவிகள்; 300 பேர் வைப்பாட்டிகள்.(1 ராஜாக்கள் - 1 அரசர்கள் 11:1-3) 

எஸ்ரா காலத்தில் ஆளுக்கு ஒன்று என வெறும் நூத்தி எட்டு பேர் பிற ஜாதிப் பெண்களைத் திருமணம் செய்திருந்தனர். அதற்காக கோபம் கொண்ட கடவுள், “ நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை”,  என்று தன் பிள்ளைகளுக்கு கொடுத்திருந்த வாக்குறுதியையும் மீறி (யோசுவா 1:5 புரோட்டஸ்டண்ட் மொழிபெயர்ப்பு)  அவர்களைக் கைவிட்டுவிட்டு எருசலேம் ஆலயத்தை விட்டு வெளியேறினார். ஆனால் ஒரே மனிதர் ஆயிரம் பிற ஜாதிப் பெண்களை வைத்திருந்த மனிதனாகிய சாலமன் மன்னர் கட்டிய கோயிலில் தான் முதன்முதலில் குடியேறினார்! (42)

நெபுகத்நெசரின் படையெடுப்பும் யூதர்களின் வீழ்ச்சியும்:
,
 கிமு 586ல் நெபுகத்நெசர் என்ற புறஜாதி மன்னன் இந்தியா மீது படையெடுத்து வெற்றி பெற்றான். சாலமன் கட்டிய ஆலயத்தையும் சேதப்படுத்தினர். இஸ்ரவேலர்களுக்குத் தங்கள் கடவுளின் தோல்வியை சகித்துக்கொள்ள முடியவில்லை.  ஏதேனும் காரணம் கூறலாம் என்று இறைவாக்கினர்கள் முயற்சி செய்து தடுமாறியது கீழே உள்ள வாசகங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
( ஏரேமியா - 25:6-9;  51:34;  51 36,37
எஸ்றா 9: 11-15
எசக்கியேல் 9:3;  10: 4-5; 18 , 19
எசாயா 52:8; 
சக்ரியா 8:3 (பக்கம் 46)
இந்த படையெடுப்பினால்  இஸ்ரேலிய யூதர்கள் பல நாடுகளுக்குத் தப்பி ஓடினார்கள் இவர்களைத்தான் “ காணாமல் போன ஆடுகள்” என்று புதிய ஏற்பாடு அழைக்கிறது.  எருசலேம் ஆலயம் சேதமானது; பாபிலோன் மன்னனுக்கு மக்கள் அடிமையாக்கப்உ பட்டனர்.

இறைவாக்கினர் எனப்பட்ட தீர்க்கதரிசிகள்: 
தாவீது மன்னனால் கட்டியெழுப்பப்பட்ட இஸ்ரேலியப் பேரரசு தம் கண் முன்னே புறஜாதியாரிடம் விழுந்து கிடப்பதைக் காண இறைவாக்கினருக்குச் சகிக்கவில்லை. (ஆமோஸ் 9:11)
கிபி 49ல்  கூடிய எருசலேம் சங்கத்தில் இச் சூழ்நிலைகளிலிருந்து மீள்வதற்குப் ”பவுல் குழுவினர்” உதவக்கூடும் என எதிர்பார்த்து தான் இயேசுவின் சகோதரரான யாக்கோபு பவுலுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றினார்.(48) 

இஸ்ரேலிய யூதர்கள் பாபிலோனில் அடிமைகளாக வாழ்ந்த போது தங்களைச் சுற்றிலும் வாழ்ந்த புற ஜாதியர்களுடைய மதம் சார்ந்த கொள்கைகளின் சிறப்புகளைக் கண்டனர் அவற்றின் மேன்மையைப் புரிந்து கொண்டு அக்கொள்கைகளை தம் மதத்தின் புதிய கொள்கைகளாகப் பதிவு செய்தனர். (51)

அப்படி வந்த புதிய மாற்றங்கள்:

1.     மீட்பர் என்னும் மெசியாவாகிய இரட்சகர் கொள்கை  -   இது கிரேக்க மதத்தில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. (வழி, வாய்மை, வாழ்வு -  யோவான் நற்செய்தி நூல் விளக்கம்.  ஆசிரியர் ஞான.  ராபின்சன்;  பக்கம் 21)
2.         2. மெசியா ஒரு விடுதலை வீரரே தவிர அவரைக் கடவுள் என பழைய ஏற்பாடு         அறிவிக்கவில்லை.
3.     ஞானஸ்நானம் -  கிரேக்க மதம்
4.      இரண்டாம் வருகை -  பாரசீக மித்ராயிச  மதம்
5.      உயிர்த்தெழுதல் -  பாரசீக ஜொராஷ்ட்ரிய மதம்
6.      மறுவாழ்வு -               ,,              ,,                 ,,
7.     கன்னிப் பிறப்பு -         ,,              ,,                 ,,
8.     நியாயத்தீர்ப்பு -  எகிப்திய மதம். (கி.ர. அனுமந்தன், பண்டைக்கால நாகரிகங்கள், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்)

மேற்கொண்ட மாற்றங்கள் எவையும் கிமு 586ல்  நிகழ்ந்த பாபிலோனிய படையெடுப்புக்கு முன்னர் எழுதப்பட்டிருந்த பழைய ஏற்பாட்டு நூல்களில் இல்லை. 













No comments:

Post a Comment