Friday, February 20, 2009

294. 'நான் கடவுள்' படம் பார்த்தேன்.

*

நம் பதிவுலக மக்களின் விமர்சனங்களை, அதுவும் கதை, திரைக்கதை, வசனம் என்று இன்னும் பலப்பல காரியங்களைப் புட்டு புட்டு வைக்கும் நம்ம உண்மைத் தமிழனின் விமர்சனம் வாசிக்கும் முன் 'நான் கடவுள்' படம் பார்த்துவிட வேண்டுமென ஏற்கெனவே நினைத்து வைத்திருந்தேன். இருந்தும் வெள்ளிக்கிழமை மாலை தமிழ்மணம் திறந்தபோது உ.த.வோடு சேர்ந்து இன்னும் இருவர் பயமுறுத்தவே தவ்வி தமிழ் மணத்துக்கு வெளியே குதித்து ஓடிவிட்டேன். இருந்தும் முதலில் நினைத்தது போல் அன்றே படம் பார்க்க முடியவில்லை.

அடுத்த நாள் இரவுக் காட்சிக்கு சென்று விடுவது என்று முடிவெடுத்து மாலையே புலன் விசாரணையில் இறங்கினேன். வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த குரு தியேட்டரில் படம் ஓடியது. மாலையே அங்கே போய் விசாரித்தேன். வெளிச் சுவரில் இருந்த ஒரு ஜன்னல் மாதிரியான ஓட்டையைக் காண்பித்து அங்கு முதல் வகுப்புக்கு 9.30-க்கே டிக்கெட் கொடுத்துவிடுவார்கள்; 70 ரூபாய்; 10 மணிக்குத்தான் மற்றைய அனுமதிச் சீட்டுகள் கொடுக்கப்படும் என்றார் வாயில் காப்பாளர். சரியாக 9.20-க்கெல்லாம் தியேட்டருக்கு வந்துவிட்டேன்.காத்திருக்க வேண்டியதிருக்குமென்பதால் வாசிக்க புத்தகம் ஒன்றும் எடுத்துவிட்டு வந்துவிட்டேன். என்ன புத்தகம்' என்ன அதில் சொல்லியுள்ளது என்பதெல்லாம் தொடர் பதிவில் எழுத நினைத்திருக்கிறேன் - ஜாக்கிரதை!

நேரே அந்த ஓட்டைக்குப் பக்கத்தில் அல்லது எதிர்த்தாற்போல் நிற்க கொஞ்சம் தயக்கமாக இருந்தது. யாரும் அப்போது அங்கு நிற்கவும் இல்லை. ஓரிரு பேர் வந்து நிற்பதைப் பார்த்ததும் நானும் அப்படியே மெல்ல நகர்ந்து ஓட்டைக்குப் பக்கத்தில் போனேன். ஏற்கெனவே நின்று கொண்டிருந்த இருவருமே இளைஞர்கள். என்னைப் பார்த்ததும் எனக்காக இடம் விட்டதுபோல் உணர்ந்தேன். ஆக நான்தான் டிக்கெட் கவுண்டரில் முதல் ஆளாக நின்று கொண்டிருந்தேன். ஆனாலும் யாரும் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக நிற்காமல் தள்ளி தள்ளி நின்றுகொண்டிருந்தோம். அதற்குள் இன்னும் இரு வரிசைகளில் கூட்டம் நிறைய சேர ஆரம்பித்து விட்டது. வருவோர்கள் எங்களிடம் இது எத்தனை ரூபாய் டிக்கெட்டுக்கான வரிசை என்று கேட்டு பல சந்தேகங்களைக் கிளப்ப ஆரம்பித்து விட்டனர். 9.45க்கு டிக்கெட் கவுண்டர் திறக்கப் போவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் அதற்குள் மற்ற டிக்கெட்டுகளைக் கொடுக்க ஆரம்பித்து எங்களுக்கு சூடேற்றி விட்டு விட்டனர். இதோ இப்போது கொடுக்கப் போகிறார்கள் என்று வாயில் காப்பாளர் வந்து சொல்லிவிட்டுப் போக நான் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தேன்.ஏனெனில் இப்போது கவுண்டரைப் பார்த்து, கையில் தயாராக காசோடு நிற்கவேண்டியதாயிருந்தது. இரண்டாம் நாள் .. இரவுக் காட்சி .. அதில் முதல் டிக்கெட் ... என்னவோ ஒரு தயக்கம் .. வெட்கம் .. ஏறக்குறைய 35 வருஷத்துக்கு முந்தி 'சவாலே சமாளி' படம் பார்க்க தேவி தியேட்டரில் டிக்கெட்டுக்காக என்னை வரிசையில் நிற்க வைத்துவிட்டு, நண்பன் ஆல்பர்ட் வழக்கமாகச் சொல்லும் பொய்யோடு - (C.T. Office அப்டின்னு சொல்லிக்கிட்டு போவான்; அவன் ராசி .. ஒருத்தரும் அவனைக் கண்டுகொள்ளாம விட்டுருவாங்க .. டிக்கெட் எடுத்துட்டு வந்திருவான்; நான் வரிசையிலிருந்து பிரிந்து அவனோடு சேர்ந்து கொள்வேன்; அது அந்தக் காலம்) - அந்த நினப்பெல்லாம் வந்தது. அதன் பின் அதே மாதிரி பாரதி ராஜா படத்துக்கு முதலிரு நாட்களிலேயே படம் பார்க்க முனைந்தது உண்டு. விமர்சனம் எதும் கேட்கும் முன் படம் பார்த்திரணும்னு ஒரு நினப்பு. ஆனால் 80களில், 90 களில் தயாராக டிக்கெட்டு எடுத்துத் தர ஆட்கள் ஏற்பாடு செஞ்சிட்டு போறதுதான். ஆனால், இப்போ இத்தனை வருசத்துக்கு அப்புறம் .. இந்த வயசில இப்படி வந்து நிற்கிறோமேன்னு ஒரு ஓரத்தில ஒரு சின்ன நினப்பு; தயக்கம். அடுத்து நிக்கிற இளைஞனை முதல் டிக்கெட் எடுக்கச் சொல்லிவிட்டு, இரண்டாவது டிக்கெட்டை வாங்கிட வேண்டியதுதான் அப்டின்னு நினச்சிக்கிட்டு நின்னப்போ, திடீர்னு 70 ரூபாய் டிக்கெட்டுக்கு இங்க உள்ளே வாங்கன்னு ஒரு அறிவிப்பு வர, கூட்டமா அங்கே உள்ளே போனால், அங்க கம்பி வலைக்குள்ள இருந்த ஒரு தற்காலிக கவுண்டர் வழியே டிக்கெட் குடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இங்கே க்யூவாவது ஒண்ணாவது .. நானும் கொஞ்சம் க்யூ மாதிரி ஒண்ணை ஆரம்பிக்கலாமேன்னு தயங்கி பின்னால நின்று கொண்டிருக்கும்போதே டிக்கெட் முடிஞ்சிருச்சின்னு சொல்லிட்டாங்க.

நமக்கு வந்த சோதனை அப்டின்னு நினச்சிக்கிட்டு இருக்கும்போது மீண்டும் காவலர் வந்து அடுத்த 60 ரூபாய் டிக்கெட்டை உள்ளே இருந்தே, வெளியேயிருந்து வரிசையில் வராமலேயே வாங்கிக் கொள்ள அழைத்துப் போனார். அங்கே ஏற்கெனவே வரிசையில் வந்து சீட்டு வாங்கிக் கொண்டிருப்பவர்கள் தகராறு செய்தால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது வாயில் காப்பாளரே மனது வைத்து என்னிடம் இருந்து காசை வாங்கி டிக்கெட் எடுக்க காத்திருந்த தம்பதிகளிடம் கொடுத்து 'சாருக்கும் ஒரு டிக்கெட் வாங்கிக் கொடுத்திருங்க' என்றார். என்ன முகராசியோ அப்டின்னு நினச்சிக்கிட்டேன். எப்படியோ டிக்கெட் வாங்கியாச்சி.

உள்ளே போனால் ஏ.சி. எல்லாம் போட்டிருந்தார்கள். முன்பு பாரதியார் படம் பார்க்கப் போனபோது பால்கனியில் மட்டும் தான் ஏ.சி. இருந்ததாக நினைவு. ஏ.சி.யை மட்டும் நம்பக்கூடாதுன்னு நினச்சி, மின்விசிறி எல்லாம் பார்த்து வசதியாக ஒரு இடம் பிடித்து உட்கார்ந்தேன். கையில் இருந்த புத்தகத்தில் இரண்டு மூன்று பக்கம் வாசிக்கும்போதே வெளிச்சம் குறைக்கப் பட சுற்றியுள்ளவர்களைப் பார்க்க ஆரம்பித்தேன். எல்லாரும் முப்பது முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்டவர்கள்; அதிலும் இளைஞர்கள் அதிகம்; பெண்கள் அனேகமாக 1% இருக்கலாம். எனக்குப் பக்கத்தில் ஒரு சீட் காலி. அடுத்து ஒரு இளைஞன்; அடுத்து ஒரு சீட் காலி. இரண்டு நண்பர்கள் சேர்ந்து எங்கள் வரிசைக்கு வந்தார்கள். அருகருகே உட்கார எண்ணி, நடுவில் இருந்த அந்த இளைஞனை ஒரு சீட் தள்ளி உட்காரச் சொல்லிக் கேட்டார்கள். என்ன ஆச்சரியம். அதற்கு அவன் முடியாதென்றான். வந்தவர்கள் சொல்லிப் பார்த்தார்கள்; இவனோ கேட்பதாயில்லை. இந்த மாதிரி நேரத்தில் ஏதாவது சண்டைக்கிழுத்த நினைவு வந்தது. ஆனால் வந்தவர்கள் நல்ல மாதிரி போலும். அடுத்த வரிசைக்குச் சென்று விட்டார்கள். என்ன இது; பாலா மாதிரி டைரக்டர் படம் பார்க்க வந்திருக்கிறான்; இருந்தும் இப்படி இருக்கிறானேன்னு தோன்றியது. சில நிமிடங்களில் அடுத்து அதே போல் இருவர் வர, அவன் தள்ளி உட்கார மாட்டேனென்று சொல்ல, அவர்களும் வேறிடம் பார்த்துச் செல்ல... எனக்கு அவனிடம் ஏதாவது கேட்டுவிடலாமெவென தோன்ற ... அடக்கிக் கொண்டேன். ஆனால் எனக்கு அவனை விடவும், சாதுவாக சென்றவர்கள் மீது கொஞ்சம் எரிச்சல் வந்தது.

படம் ஆரம்பித்து, பார்த்து, முடிந்து வெளியே வரும்போது இரு சக்கர வண்டியை எடுக்க நெடுநேரம் காத்திருக்க வேண்டியதிருந்தது. அவ்வளவு இளைஞர் பட்டாளம். காத்திருந்த போது காதில் விழுந்த சில விஷயங்களில் ஒன்று: இந்தப் படம் எடுக்க எதுக்கு எட்டு வருஷம்? ஆனால் மற்றபடி பலரும் ஒரு இறுக்கத்தோடு சென்றதாகவே தோன்றியது.


*

Saturday, February 14, 2009

293. தமிழார்வலர்களுக்கு ஓர் அறைகூவல்!

*

கூடல் நகரின் பதிவர் கூட்டமும் "தொடர் ஓட்டமும்" - 2


எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் என்னும் நம்மவர்களுக்கு ஆர்வக்கோளாறு என்பது கொஞ்சம் அதிகம்தானென்றே நினைக்கிறேன். பொருட்குற்றம் வந்தாலும் பரவாயில்லை சொற்குற்றம் வந்துவிடக்கூடாதென்ற நினைப்போ என்னவோ, சென்னையில் ஒரு பொதுவிடத்தில் நான் பார்த்த ஒரு தமிழாக்கம் என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது. சாதாரண ஒரு தமிழனை விட சிறிதளவாவது எனக்குத் தமிழ் அதிகமாகத் தெரியும் என்ற நினைப்பில் வாழ்ந்து வரும் எனக்கு, அந்தத் தமிழாக்கம் பார்த்ததும் முதலில் திகைப்பும், பின் சிரிப்பும் கடைசியில் 'அடப் பாவிகளா' என்றும்தான் தோன்றியது.

அந்தத் தமிழாக்கத்தை இங்கு தருகிறேன். யாராவது அதற்கு என்ன பொருள் என்று கூற முயன்று பாருங்களேன். நானும் நாலைந்து பேரிடம் கொடுத்துப் பார்த்தேன். பாவம் அந்தத் தமிழர்களுக்கு அதன் பொருள் புரியவில்லை; அவர்களும் என்னைப் போன்றே மொடாக்குகள் போலும். எங்கே, நீங்களும் முயற்சி செய்யுங்களேன்.


மெய்ப்புல அறைகூவலர்களுக்கு ..


உங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்.

மேற்கூறியதற்கான ஆங்கில அறிவிப்பைப் பின் தருகிறேன்.


அடடா! ஏதோ நான் தான் முதலில் பார்த்ததுபோல் அதை ஒரு பதிவாகவும் போட்டுட்டேன். முன்னோடிகள்தான் எத்தனை பேர்!


http://elavasam.blogspot.com/2008/08/blog-post_28

http://amarkkalam.blogspot.com/2008/12/cinema-paradiso.html


http://ilayapallavan.blogspot.com/2008/10/blog-post_7520.html

http://govikannan.blogspot.com/2008/12/blog-post_17.html



இப்போது இன்னொரு கேள்வி:
//தமிழ்ப்படுத்த வேண்டியதுதான், அதற்காக இப்படியெல்லாமா 'படுத்துவது'?
- தட்ஸ் தமிழ் // -- இதனோடு முழுவதுமாக ஒத்துப் போகிறேன்.ஆனால் கோவி //இதைச் அனுகூலம் ஆக்கிக் கொண்டு தமிழ் எதிர்பாளர்கள்...நக்கலாக சிரித்து...'பாருங்கய்யா தமிழை' என்று சொல்ல ஆரம்பித்துவிடுவர்.// என்கிறார். நானும் அப்படித்தான் சொல்கிறேன்:'பாருங்கய்யா தமிழை' அதோடு ஒரு கேள்வியையும் உங்கள் முன் வைக்கிறேன்: இது தேவையா?

இதில் இன்னொன்றும் தெரியவருகிறது. நம் பதிவர்களுக்குத்தான் எப்படி ஒரேமாதிரியான சிந்தனை!

சென்னை விமானநிலையத்துக்காரர்களுக்குத் தமிழில் மட்டும் இப்படிப்பட்ட ஈடுபாடு" என்றில்லை; ஆங்கிலத்திலும்தான் போலும். ஒரு - electronic notice board-ல் - இருந்த ஒரு ஆங்கில அறிவிப்பு -- அடடே! என்ன ஒரு ஆங்கிலப் புலமை! கைத்தொலை பேசியில் படமெடுக்க நினைத்தும் காத்திருக்க முடியாததால் விட்டு விட்டேன்.



*


பட உதவி (படம் ஆட்டை போட்டது): இ. கொத்ஸ்.


*

Saturday, February 07, 2009

292. முத்துக் குமரனின் வேண்டுகோளுக்காக ...

முத்துக் குமரா,
நீ உன்னைச் சாகடித்துக் கொண்டதில் எனக்கு முழுவதுமாக உடன்பாடில்லை. இருந்து போராடியிருக்க வேண்டியவன் இறந்து போராட நினைத்தது தவறு. இருப்பினும் உன் உணர்வுகளுக்குத் தலை வணங்குகிறேன்.

நீ கேட்டுக்கொண்டதன்படி (நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் ) உன் கடிதத்தின் நகலை என் பதிவிலிடுகிறேன்.



ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்: (தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தமிழ்மக்களுக்கு முத்துக்குமரன் அளித்த இறுதி மடல்)
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2009, 12:43.55 PM GMT +05:30 ]

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?







ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். 'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

============================

இதனையொட்டிய எனக்குப் பிடித்த இன்னொரு பதிவினை - பிரபு ராஜதுரையின் பதிவு - உங்கள் பார்வைக்குக் கொண்டுவர ஆவல்.



*

Sunday, January 11, 2009

290. கூடல் நகரின் பதிவர் கூட்டமும் "தொடர் ஓட்டமும்" - 1

உன் ஒரு பதிவைப் படிப்பதே பெருசு; அதில இங்க வந்தா (1)இந்த, (2) இந்த பதிவுகளை முதலில் படிச்சிட்டு வந்தாதான் இந்தப் பதிவின் பொருளடக்கம் புரியும் அப்டின்னு சொன்னா உங்களுக்கு ..

கொடுமை .. கொடுமைன்னு கோவிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை தலைய விரிச்சி ஆடிக்கிட்டு இருந்துச்சாம் அப்டின்றது மாதிரிதான் தெரியும். இருந்தாலும் என்ன செய்வது. அந்தப் பதிவுகளை முதலில் வாசிச்சிக்கிங்க ...

இந்தப் பதிவு ஜாலிஜம்பரின் பதிவிற்குப் பின்னூட்டமாக ஆரம்பித்து, தனிப் பதிவாகவே இட்டுவிடுவது என்று முடிவு செய்து இட்டுள்ளேன்.


ஜாலிஜம்பர் தன் பதிவில் சொல்லியுள்ள சில பகுதிகளும் என் கருத்துக்களும்:


1. //ஜென்னியை தமிழில் எழுதும் போது சென்னி என எழுத இனி தயக்கமேதும் இல்லை.//


ஜாலி,

1. ஒழுங்கா ஜென்னியை ஜென்னின்னே கூப்பிடுங்க .. எழுதுங்க .. தயவு செய்து. சரியா? உங்கள் பெண்ணாகவே இருந்தாலும் உங்கள் தமிழார்வத்திற்காக மகளின் பெயரைக் கொலை செய்யக்கூடாது. நீங்க சென்னின்னு கூப்பிட்டா அவளது பெயரையும், (என் மகள் பெயரையும் கூட!), ஒரிஜினலா நீங்கள் நினைத்துவைத்த 'அந்த' ஜென்னியின் (மார்க்ஸின் மகள்) பெயரையும் கெடுக்கிறீர்கள். வேண்டாமை'யா அந்தக் கொடுமை .. நல்ல அழகுப் பெயர்!எவ்வளவு ஆசை ஆசையாக வைத்தோம்; அதெல்லாம் இந்தக் கொடுமைக்கா? உங்கள் மகளே வேண்டாமென்றுதான் கூறுவா(ர்க)ள்; உங்கள் இல்லாளும்தான்!

இந்தத் தமிழ்ப்படுத்தும் கொடுமையைத்தானய்யா வேண்டாமென்கிறேன். இதனால் நீங்கள் சாதிப்பது ஏதுமில்லை. 'எண்ணித்துணிக கருமம்' - பெயர் வைப்பதற்கு முன் யோசித்திருக்கலாம். சரி, இங்கே உங்கள் மகள் பெயர், உங்கள் பெயர்; அவைகளை எப்படி வேண்டுமானாலும் எழுதிக்கொல்/ள்வீர்கள். ஆனால்,

அதே மாதிரி ஏன் ஜாலி ஜம்பர் என்று பெயர்வைத்துக் கொண்டார் என்பதே புரியாமல் இருக்கும்போது புதிதாக சாலி சம்பர் என்றால் என்னவென்று புரிந்து கொள்வது? சென்னி என்று நீங்கள் எழுதும்போது ஜென்னி என்ற பெயர்தான் அது என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?



2. //மொழியின் இசைவுக்கு மாறான எழுத்துக்களை பயன்படுத்துவது, மொழியைக் கறைப்படுத்துவதாகவே எனக்குத்தெரிகிறது//


இந்த விவாதம் எனக்குப் புரியவில்லை. தமிழ்மேல் காதல் இருப்பது சரிதான்; ஆனால் வெறியாகக்கூடாது. இந்த 'கன்னித்தமிழ்' என்று பெயர் வைத்தது தவறாகப் போய்விட்டது. பெண்ணுக்கு ஏற்றி வைத்த "கற்பை" மொழிக்கும் ஏற்றி வைத்துவிடுகிறீர்கள். நம் மொழியில் இல்லாத ஒரு ஓசை உள்ள சொல்லை உங்கள் (நம்) மொழிக்குக் கொண்டுவரும்போது அந்த ஓசையைத் தரக்கூடிய எழுத்து நம்மிடம் இல்லையெனில், ஏன் அடுத்த மொழி எழுத்துக்களைப் பயன்படுத்தக் கூடாது?. அதற்கு மறுப்புத் தெரிவிப்பது எதற்கு? நம் மொழியின் கற்புக்கு காப்பா? நிறைய chastitiy belt கதைகள் உண்டு; அவைகள்தான் என் நினைவுக்கு வருகின்றன! ஜென்னி என்றால் உங்கள் மொழி "கறை" பட்டுவிடுவது எப்படி?



3 //பிறமொழிச்சொற்களை ஏற்றுக்கொள்வது வேறு பிறமொழி எழுத்துக்களை பயன்படுத்துவது வேறு என்று நான் சொன்னேன்//


முதலாவது உங்களுக்கு ஏற்புடைத்ததாயின் இரண்டாவதற்கும் உடன்பட்டே ஆகவேண்டும். ஏனெனில், வேறு வழி ஏது? ஜார்ஜ் =சார்சு; ஜென்னி=சென்னி; ஸ்டாலின்=சுடாலின் என்பது நிச்சயமாகத் தவறு மட்டுமல்ல; கேலிக்கூத்தான காரியம். ஆகஸ்ட் என்பதை ஆகசுடு என்று எழுதியதைப் பார்த்தபோது சிரிப்புத்தான் வந்தது. இல்லை, இது சரிதான் - இதுதான் சரி - என்கிறீர்களா?



4.//அதைப்போலவே தமிழிலும் பிறமொழிச்சொற்களை பயன்படுத்தும் போது தமிழில் உள்ள எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்துவது தான் சிறப்பு என்றும் (நன்னன்) கூறினார்//



நன்னனே கூறினாலும் எனக்கு அது சரியான கருத்தாகத் தெரியவில்லை. அய்யா, ஆகஸ்ட் என்பதை வேறு எப்படி எழுதுவது என்று சொல்லுங்கள். நான் அன்று சொன்னதும் இதுபோன்ற சொற்களைத்தான். அறிவியல் சொற்களில் வரும் ஸ், ஷ்,ஹ் போன்ற வடமொழி எழுத்துக்களுக்கு வேறு தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தினால் பொருளே மாறிவிடும் அபாயம் உண்டு என்றேன்; அதற்கு உங்கள் பதில் என்ன?

அவைகளுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் கொண்டு வரலாமென நீங்களோ, டி.பி.சி.டி.யோ பதில் கூறினீர்கள் என்று நினைக்கிறேன். அதற்குரிய என் அன்றைய பதிலை மீண்டும் இங்கு பதிகிறேன்: It is too late now! வேகமாக வளரும் அறிவியலை இப்போது மொழிமாற்றம் செய்து தமிழை வளர்ப்பதைவிடவும் அப்படியே எடுத்துக் கொள்வதே அறிவு பூர்வமான காரியமாக எனக்குத் தோன்றுகிறது.

நாம் இப்போது பசியோடு இருக்கிறோம்; சாப்பிட வேண்டும்; தட்டில் இருப்பதை கரண்டியால் சாப்பிடுவதா இல்லை ஜப்பானிய அதாவது சப்பானிய முறையில் குச்சியால் சாப்பிடுவதா, இல்லை கையால் சாப்பிடுவதா என்ற பட்டிமன்றம் தேவையில்லை.

இந்த இடத்தில் அன்று சொன்னதை மீண்டும் சொல்கிறேன்: தாய்மொழிக் கல்விதான் சிறப்பு. அதில் நாமும் நம் முழு நாடுமே மிகவும் பின்தங்கி விட்டோம். நீங்கள் சொல்லும் புதுச்சொற்களைக் கண்டுபிடித்து மொழியை வளர்ப்பதல்ல நம் நோக்கம். நம் மொழி வளர்ந்த மொழி. இனி மற்ற ஓசைகள் இங்கு நுழைவதால் தமிழின் 'கற்பு' ஒன்றும் கெட்டுப் போய்விடாது!



5. //பிறமொழிச்சொற்களை ஏற்றுக்கொண்டால் தானே தமிழ் வளரும் என்பது தருமியின் வாதம். பிறமொழிச்சொற்களை ஏற்றுக்கொள்வது வேறு; பிறமொழி எழுத்துக்களை பயன்படுத்துவது வேறு என்று நான் சொன்னேன்.//


Throwing the baby out with the bath water என்றொரு ஆங்கிலச் சொலவடை உண்டு. அதுபோல ஒலிகளுக்காக சொற்களை ஒதுக்கும் அபாயம் இதில் இருப்பதாகப் படுகிறது. உதாரணமாக (!), உதாரணம், விஷயம் போன்ற சில வடமொழி எழுத்துக்களுக்கும், risk, interesting போன்ற சில ஆங்கிலச் சொற்களுக்கும் இணையான தமிழ்ச் சொற்களுக்கு நானும் அலைமோதிப் பார்த்து விட்டேன். சான்றாக என்பதோ,பற்றியம் என்பதோ, கண்டம் என்பதோ,interesting - இதற்கு ஈடு ஒன்றும் இல்லை என்னிடம், எனக்கு முழுப் பொருளை அளிப்பதாகத் தோன்றவில்லை. அது என் குறையாகவும் இருக்கலாம்.

பிறமொழிச் சொற்களே வேண்டாம் என்ற "உயந்த" நிலையிலிருந்து சிறிதே கீழே இறங்கி வந்து இப்போது சொற்கள் வரட்டும்; ஒலி வேண்டாமென்கிறீர்கள் என நினைக்கிறேன். இந்தப் போக்கில் போனால் இன்னும் சிறிது காலத்தில் ஒலிக்கும் ஓகே சொல்லிவிடுவீர்கள் என்பது புரிகிறது. (கடவுள் மறுப்புக்கு முன்னால் ஒரு வித பயத்தினால், agnostic என்ற ஒரு நிலையைச் சொல்லுவார்கள். எல்லா கடவுள் மறுப்பாளர்களும் இப்படித்தான்; theist -> agnostic -> atheist என்ற பரிணாம வளர்ச்சிதான் இயற்கை. (நான் அதையும் தாண்டி antireligious என்ற "உயர்நிலை'(!)க்கு முன்னேறி விட்டேன் !) அதுபோலவேதான் நீங்கள் சொல்லும் சொற்கள் வரலாம்; ஒலி வேண்டாமென்ற விவாதம்.


பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்.
......
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை.


(தொல்காப்பியரும், நன்னூலும் பிறமொழி ஒலிகளைக் கடன்வாங்கலாம் என விதி கொடுத்திருப்பதாக அறிகிறேன். அதைப் பற்றிய குறிப்பை சின்னாளில் பதிவிடுவேன்.)


ஏற்கெனவே இந்த விவாதம் பதிவுகளில் அங்கங்கே நடந்து வந்திருப்பது இப்போதுதான் என் கண்களில் பட்டன. நல்ல விவாதப் பொருள்தான் போலும். ஆகவே நன்கு தமிழாய்ந்த பதிவர்களை இந்த விவாதத்தை வளர்த்தெடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.



*

Friday, January 09, 2009

289. கூடல் நகரின் பதிவர் கூட்டம்.

*

படம் எடுத்த என்னைச் சேர்த்து "கூட்டத்துக்கு"(!?) திரளாக வந்திருந்தவங்க ஐந்து பேர்.(பேரையெல்லாம் அங்கங்க ஆளுக மேல் போட்டாச்சு!) ஆறாவதா உட்கார்ந்திருப்பது மதுர பொவண்டோ!


நெஜமாகவே ஜாலி ஒண்ணும் தூங்கலைங்க...அம்புட்டு ஆழமா மத்தவங்க பேசுனதைக் கேட்டுக்கிட்டு இருக்காருங்க .....







நாங்க இருக்கிறதுக்கு ஒரு மண்டபம் பிடிச்சோம். அது காந்தியடிகள் மகாத்மா ஆன பின் இருந்த குடிசையின் நகலுக்குப் பக்கத்தில் இருந்தது. ஆனால் அதற்கு மறு பக்கத்தில் அரைகுறையாக இருந்த ஒரு கட்டுமானத்தைப் பார்த்ததும் ஜாலிஜம்பரின் 'மூன்றாவது கண்' துடிக்க ஆரம்பித்துவிட்டது. அதை background-ஆக வைத்து ஒரு படம் எடுத்தேயாகணும்னு வெறியாகி, என்னை மாடலாக்கி விட்டார்.


நான் விட்டுருவேனா? பழிக்குப் பழி வாங்கிட்டேன்.











அது என்ன ராசியோ என்னவோ! எடுத்த படத்தில் பாதிக்கு மேல் மக்கள் கண்கள் சொருகி சொக்கிப் போய் உட்கார்ந்திருப்பதுபோல் விழுந்திருச்சி. அதுக்கு நானென்ன பண்ண முடியும்?
ஒருவேளை bovonto effect-ஆக இருக்குமோ என்னவோ?





எல்லாம் வழக்கம்போல இருந்திச்சி. பதிவர்கூட்டத்துக்கு வாழ்த்துச் சொல்லி வால்பையன் தொலைபேச, அவரிடம் டிபிசிடி கொஞ்சம் ஆள்மாறாட்ட தகிடுதத்தம் செய்ய முயன்றுகொண்டிருந்தார். எந்த குறிப்பிட்ட நோக்கமுமில்லாமல் ஒரு அவியலான மொக்கை அரட்டை நடந்தேறியது. தன் குடியிருப்பில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்பதற்காக சீனா 6.30க்குக் கிளம்பினார். இருட்டி விட்டது. கொசுத்தொல்லை பின்னூட்டத் தொல்லையைவிட மோசமானது. எழுந்து நின்று கொண்டு பேச ஆரம்பித்தோம். அது என்னவோ தெரியவில்லை. ஏறக்குறைய புறப்படுவோம் என்று சொல்லி எழுந்து நின்று பேச ஆரம்பித்த பிறகு தான் கொஞ்சம் சூடு பிடித்தது. டிபிசிடி நாம் பதிவுகளை இன்னும் கொஞ்சம் தமிழுணர்வோடு எழுதுவது நலம் என்றார். நல்ல தமிழ், தனித்தமிழ் பதிவுகளில் வரவேண்டுமென்றார். என்னைத்தவிர மற்ற இருவரும் அது சரி என்றார்கள். நான் அதற்கெல்லாம் காலம் நிரம்பவும் கடந்து விட்டது. தமிழில், ஆங்கிலம் போலல்லாமல், பேச்சுத் தமிழும் எழுத்துத் தமிழும் அதிகமாகவே விலகி நிற்கின்றன. அதோடு இன்னும் தனித்தமிழ் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்காமல், எல்லா மொழிச் சொற்களையும் உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும் என்றேன். கிரந்த எழுத்துக்கள் இல்லாமல் எழுத வேண்டும் என்றனர் மற்ற மூவரும். கிரந்த எழுத்துக்கள் இல்லாமல் முடியாது என்பது என் விவாதமாக இருந்தது. ஸ்டாலினை சுடாலின் என்று சொல்லச் சொல்ல பழகி விடும் என்றார்கள். தேவையா என்றேன் நான்.

இன்னும் அறிவியல் மொழியில் ஸ,ஜ போன்ற கிரந்த எழுத்துக்கள் இல்லாமல் முடியாது; அதுபோல மற்றைய மொழிச் சொற்களை அப்படியே வாங்கிக்கொள்ள வேண்டும்; புதிய சொற்களை ஓரளவுக்கே கொண்டுவர முடியும். சான்றாக, 'தானி' என்பது 'ஆட்டோ' என்பதற்குச் சரியாக இருக்கலாம். ஆனால் ஆட்டோ ரிக்ஷாவிற்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். மற்ற ஆங்கிலச்சொற்களில் ஆட்டோ என்பது prefixஆக வரும்போது எப்படிப் பயன்படுத்துவது --- இதெல்லாம் என் வாதத்தில் நான் சொன்னவைகள்.

ஆனால் அவர்கள் முனைப்பாக என் கூற்றுக்களை மறுத்தார்கள். பல சான்றுகள் கூறப்பட்டன, சின்னச் சின்ன நாடுகள் கூட தாய்மொழியைப் பேணும் அளவிற்கு தமிழர்கள் நாம் பேணுவதில்லை. முயன்றால் நாமும் தனித்தமிழிலேயே, ஆங்கிலக் கலப்பின்றி பேசவும் எழுதவும் முடியும் என்பதில் மிக அழுத்தமாக நின்றார்கள்.

இரு வாயில் காப்போர்கள் எங்களைச் சுற்றி வந்தார்கள். நாங்கள் பேசிய விஷயத்தாலோ விடயத்தாலோ என்னவோ எடுத்தவுடன் விரட்டவில்லை. ஆனாலும் அவர்கள் எங்களைச் சுற்றி சுற்றி வந்ததும் நாங்களே இருந்த இடத்தை விட்டு எங்கள் வாகனங்கள் ஊர்திகள் நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி நகன்றோம். ஆனாலும் பேச்சு சூடாகிக்கொண்டு இருந்தபடியால் சட்டென்று நிறுத்தமுடியாது தொடர்ந்து கொண்டிருந்தோம். பொறுமை இழந்த ஒரு வாயில் காப்போர் எங்களிடம் நேரம் ஆகிவிட்டது. இந்த அளவு யாரையும் உள்ளேயிருக்க விடக்கூடாது என்பதை நாகரீகமாகச் சொன்னார். வேறு வழியில்லாததால் அத்துடன் "கூட்டத்தை" முடித்து ... பிரிந்தோம்.

ஆனாலும் எங்கே டிபிசிடி திட்டுவாரோ என்று பயந்து நான் எப்படி இப்பதிவைப் பேச்சுத்தமிழில் ஆரம்பித்தாலும் அதன்பின் தனித்தமிழில் எழுத முயன்றிருக்கிறேன் என்பதைப் பார்த்தே, பதிவர் கூட்டம் ஒரு அழுத்தமான பாதிப்பை என்மீது ஏற்படுத்தியிருப்பதை நீங்கள் பார்க்க முடியுமே ... இல்லையா? (நெஜமாத்தா'ங்க) (உண்மையாதானுங்க!!)



*