Wednesday, February 15, 2006

120. ஜோஸ்யம் பார்க்கப் போனேன்…3

originally posted on jan 1st, '06

மற்றைய பதிவுகள்:

1*,
2*,
3*,
4*,
5*,
6*,
7*,
8*,
9*,
10*,
11*,
12*.
13*.

1990-களின் ஆரம்பம் வரை வேறு மறுபடி ஜோஸ்ய அனுபவம் வர வாய்ப்பில்லாமல் போச்சுது. ஏதோ நாம் உண்டு நம்ம வேலை உண்டு என்று போச்சுதுன்னு வச்சுக்கோங்களேன். 90 / 91-ல் நண்பன் ஒருவனது திருமணத்தில் தலையிட வேண்டியதாச்சு.


பெண் வீட்டுக்காரர்களுக்கும் வேண்டியவனாகி விட்டேன். இரண்டு பேர் வீட்டுக்கும் நடுவில் பாலம் போடற வேலை -அது அனுமான் வேலையா, இல்லை அணில் வேலையா என்று தெரியாது.

ஆரம்ப வேலைகளை ஆரம்பிச்சதும், அடுத்த கட்டத்தில் ஜாதகப் பொருத்தம் என்ற கட்டம் வந்தது. இரு வீட்டாரும் தங்கள் தங்கள் ஜாதகக்கட்டோடு கிளம்பிப் போய் வேறு வேறு ரிசல்ட்களோடு வந்தார்கள். பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு செவ்வாய் தோஷம் என்ற கண்டுபிடிப்போடு வர, மாப்பிள்ளை வீட்டார் ஒன்றுக்கு இரண்டு ஜோஸ்யர்களைக் கேட்க, அவர்கள் இரண்டு பேருமே, சூடம் அடிச்சி சொல்லாத குறையாக மாப்பிள்ளைக்கு clean chit கொடுத்தார்கள். பெண் வீட்டாருக்கு நம்பிக்கையில்லை; அவர்களைக் குறை சொல்ல முடியுமா என்ன?

இப்போது நம்ம தலை உருள ஆரம்பிச்சது. கட்டப் பஞ்சாயத்துதான். தோள்ல துண்டுமட்டும் இல்லை; மற்றபடி நாம சொன்ன தீர்ப்பு: பொதுவா ஒரு ஜோஸ்யரிடம் செல்வது என்பது. அதேபோல இரண்டு வீட்டுக்காரர்களும் ஒரு வழியாக ஒரு ஜோஸ்யரைத் தேர்ந்தெடுக்க, அவரிடம் நானும் (பெண் வீட்டு சார்பில்..) இன்னொருவரும் (மாப்பிள்ளை வீட்டு சார்பில்..)போய் ஜோஸ்யம் கேட்டு வருவது என்று முடிவாச்சி.

தேர்ந்தெடுத்த ஜோஸ்யர் அலங்கா(ர)நல்லூரில் இருந்தார். அங்கே இருக்கும் சர்க்கரை ஆலையில் சாதாரண தொழிலாளியாக இருந்து, ஜோஸ்யராக உருவெடுத்தவர் என்று கேள்விப் பட்டேன். அங்கேபோனதும் உள்ளே அழைக்கப்பட்டோம். ஏற்கெனவே இன்னும் இரண்டு பேர் இருந்தார்கள். மோடி மஸ்தான் அவனது ஆட்களையே கூட்டத்தில் உட்காரவைத்து சில வித்தைகள் காண்பிப்பானாமே அது மாதிரிதான் அந்த ஆட்கள்போலும். ஜோஸ்யர் சொன்னதெற்கெல்லாம் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டுவதற்காகவே அவர்கள் அங்கே இருப்பார்கள் போலும். அப்பப்போ ஏதாவது சொல்லி நன்றாகவே பில்ட்-அப் கொடுத்தார்கள்.

அப்போது ஒரு பிரபல நடிகரின் திருமணச் சேதிகள் காற்று வெளியில் பல வடிவங்களில், வண்ணங்களில் மிதந்து கொண்டிருந்தன. இவர்தான் அந்த நடிகரின் ஆஸ்தான ஜோஸ்யராம். அந்த நடிகரைக் கல்யாணம் செய்ய ஆசைப்பட்ட நடிகையை, அவர் கல்யாணம் செய்யக்கூடாதென இவர்தான் தடை போட்டதாம். அந்த நடிகையின் தாய் லட்சக்கணக்கில் பணம் தர்ரேன்னு சொன்னாலும், இவர் தன் ஜோஸ்ய தர்மத்தின்படி அதை முற்றுமாக மறுத்துவிட்டாராம். கடைசியில் இவர் சொன்னது மாதிரிதான் அந்த நடிகர் வேறு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப்போறாராம். ‘பாருங்க ராஜா, இனிமே **** எப்படி ஆகப் போறார்; என்னவா ஆகப்போறார்னு பாருங்கன்னார். நம்ம ‘பில்ட்-அப்’ ஆட்களும் ‘ஐயா, சொன்னதெல்லாமே எப்பவுமே அப்படியப்படியேதான நடக்குது’என்றார்கள்.

பிறகு ஒரு வழியாக எங்கள் பக்கம் திரும்பினார். ஜாதகத்தைக் கொடுத்தோம். சும்மா சொல்லக்கூடாது; முதலடியே நெத்தியடிதான்! இந்த ஜாதகக்காரர் குரு ஸ்தானத்தில் இருப்பாரே என்றார். நண்பனும் கல்லூரி ஆசிரியர். அசந்து விட்டேன், போங்கள். கொஞ்சம் ஜோஸ்யத்தில் நம்பிக்கை துளிர்க்குமோ அப்டின்னு நானே நினச்சேன். ஆனால், அதுக்குப் பிறகு சொன்னவைகள் எல்லாமே ஏற்கெனவே சொல்லப்பட்டவைகளுக்கு எதிரானவையாகவோ,வித்தியாசமாகவோ இருந்தன. செவ்வாய் தோஷம் பற்றித்தான் கேட்க வந்திருந்தோம். அதைப் பற்றி ஏதும் அவர் கூறவில்லை. நாங்களாகவே நடந்த விஷயங்களைச் சொன்னோம். அதற்குப் பிறகு வேறு ஏதோ கணக்குகள் போட்டார்; கூட்டினார்; கழித்தார். பிறகு, குழந்தை பிறந்தா ஆணாக இருக்கும்; அப்படி ஒருவேளை இல்லாட்டி, பெண்ணாக இருக்கும்னு ஜோஸ்யம் சொல்லுவாங்களே அது மாதிரி ‘பொத்தாம் பொதுவாக’ செவ்வாய் தோஷம் இருக்குன்னு சொல்ல முடியாதுன்னாலும், அந்த ‘trace’ இருக்கிறது மாதிரி தெரியுது என்று அவரும் குழம்பி, எங்களையும் குழப்பி விட்டார். எதுக்கும் வாழை மரத்துக்கு முதல் தாலி கட்டி, பிறகு ‘உண்மைத் தாலியை’ பெண்ணுக்குக் கட்டுங்க என்றார். இதைத்தான் முதல்லேயே பெண்வீட்டுக்காரர்கள் சொல்லியிருந்தார்கள். நாங்க ‘பஞ்சாயத்துக்காரர்கள்’ வெளியே வந்து என்ன செய்வது என்று கொஞ்சம் குழம்பினோம். தோஷம் இருக்குன்னு சொன்னா, பெண்வீட்டார் சொன்னது சரின்னு ஆயிடும்; இல்லைன்னா, மாப்பிள்ளை வீட்டார் பக்கம் சாயும். ஜோஸ்யர் எங்கள குழப்பினதுமாதிரி நாங்களும் திருமண வீட்டாரைக் குழப்பிவிடுவது என்று முடிவெடுத்தோம்.
பெண்வீட்டாரின் ஜோஸ்யர் + நம்ம அலங்கா நல்லூர் ஜோஸ்யர் vs மாப்பிள்ளை வீட்டார் பார்த்த இரண்டு ஜோஸ்யர்கள் என்று கணக்கு என்னவோ 2:2 என்ற கணக்கில் சரிக்குச் சரியாக இருந்தாலும், ‘எதுக்கு வம்பு’ என்று ‘ரெட்டைக் கல்யாணத்திற்கு’
ஒருவழியா இரண்டு வீட்டாரையும் பார்த்துப் பேசி சம்மதிக்க வைத்து…இனிதே கல்யாணம் நடந்தது.







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Jan 01 2006 09:10 pm | சொந்தக்கதை.. and சமூகம் | | edit this
2 Responses
துளசி கோபால் Says:
January 2nd, 2006 at 1:40 am e
இப்ப அந்த ஜோடி நல்லாத்தானே இருக்காங்க?

ஒரு கல்யாணத்தை நடத்தி வைக்கறதுன்றது பெரிய சேவை.

ஜெயிச்சுட்டீங்க தருமி.

கீதா Says:
January 4th, 2006 at 10:15 pm e
அந்த புகைப்படம் ரொம்ப அழகா இருக்கு. ரொம்ப attractive.

அன்புடன்
கீதா

No comments:

Post a Comment