Monday, December 24, 2012

618. காணாமல் போன நண்பர்கள் - 10 - இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பு







*


அதீதம் டிசம்பர் மாத இரண்டாம் இணைய இதழில் இடம் பெற்ற ?????




 1960 -61 ஆண்டில் .... 

படிப்பு முழுவதுமே வீட்டில் இருந்து படித்தது தான் - ஒரே ஒரு வருஷம் மட்டும் ஹாஸ்டலில் இருந்து படித்தேன். 1960-61 - Pre-University Course.  ’நவீனத்துவம் அப்டின்னா ரொம்ப ரீசன்டான விஷயம்னு அர்த்தம். பிறகு அதில எப்படி பின்நவீனத்துவம்னு ஒண்ணு இருக்கும்?’ அப்டின்னு ஒரு பெரிய எழுத்தாளர் - 1960-80 - கேட்டார். ரொம்ப நியாயமான கேள்வியாக அது இருந்துச்சு. அது மாதிரிதான் இதுவும். இந்த வகுப்பை நடத்துவது Universityதான். ஆனால் அதுக்குப் பேரு மட்டும் Pre-University. எப்படியோ இதுவும் பின் நவீனத்துவம் மாதிரி ஒரு Oxymoron ! 

படிச்சது St. Xavier's College, Palaymkottai. பெரிய ஆளுக எல்லாம் க்ளாஸ்மேட்டாக இருந்திருக்காங்கன்னு பின்னால தெரிஞ்சுது. ரொம்ப green horn ஆக இருந்த ஆண்டுகள் - எல்லா விஷயத்திலும். கால் சட்டை பத்தாமப் போய், நீளக் கால்சட்டை அதிகமாக இல்லாமல், ஈடு கட்ட நாலு முழ வேஷ்டி ஒண்ணு ரெண்டு .. அதையும் கட்டத் தெரியாது; கட்டினாலும் முதல் நாளே கட்டத் தெரியாம கட்டி கால் கிட்ட வேட்டி கிழிந்து விடும்.  என்னத்தையோ போட்டுக்கிட்டு ஒப்பேத்தின ஆண்டு. இதில் ஹாஸ்டல் வாழ்க்கை வேறு, உலகமும் புரியாம, வாழ்க்கையும் பிடிபடாமல் ரொம்ப வித்தியாசமா இருந்த வருஷம். இதில் புதிதாக  ஹாஸ்டல் வாழ்க்கை.வீட்டோடும் ரொம்ப ஒட்டு இல்லாமல் இருந்த வருஷம். என்னை நானே நினச்சிப் பார்த்தா ரொம்ப பாவமான பையனாக இருந்திருக்கிறேன். 

Britto Hostel - இது கத்தோலிக்க கிறித்துவ மாணவர்களுக்கானது. அதனால் காசு கொஞ்சம் கம்மி. அதோடு சாப்பாடு சமாச்சாரமும் கொஞ்சம் கம்மின்னு சொல்லுவாங்க. ஆனாலும் மொதல் மொதல்ல வீட்டை விட்டு வெளியே சாப்பிடுற அனுபவம். ரொம்ப வித்தியாசமா இருந்தது. அதுவும் ஞாயிற்றுக் கிழமை காலையில் ஊத்தப்பம் போடுவாங்க. ஆளுக்கு மூணோ .. நாலோ போடுவாங்க. அதைத்  தட்டில் வச்சதும் நடுவிலே ஒரு குழி போடுவோம். அதில தண்ணியா ஒரு கறிக்குழம்பு ஊத்துவாங்க. எப்டின்னே தெரியாது. கறித்துண்டுகள் கடுகு சைஸில் அப்பப்போ கையிலேயோ வாயிலேயோ தட்டுப் படும்.ஆனால் எங்க எல்லோருக்கும் அது ரொம்ப பிடிக்கும். இன்னும் ஞாபகத்தில் இருக்குன்னா .. பார்த்துக்குங்களேன்!

மொதல்ல கொஞ்ச நாளைக்கு போடுற சாப்பாடு பத்தாது. ஆனால் சீனியர் அண்ணன்கள் சாப்பிட முடியாம மிச்சம் வைப்பாங்க. அதில் அப்படியே ஐக்கியமாகி சில P.U.C. பசங்க அந்த அண்ணன்மார்களோடு சாப்பிட சேர்ந்து போவோம். பூரி வச்சா அதில ஒண்ணு .. ரெண்டு  நம்ம ப்ளேட்டுக்கு வந்திரும். அதே மாதிரி இட்லிலேயும் பங்கு வந்திரும். ஆனால் இதெல்லாம் அரைப் பரிட்சை வரைதான் .. அதுக்குப் பிறகு அவங்க வைக்கிறதே போதும்னு எங்களுக்கும் ஆயிடும்.   மீன் குழம்புன்னு ஒண்ணு வைப்பாங்க; வீட்ல அந்த மாதிரி மீன் சாப்பிட்டதில்லை. அதாவது ஒரே ஒரு துண்டு மீன் வைப்பாங்க. அதில் முள் .. கிள் எதுவும் இருக்காது. என்ன மீனோ.. அது மாதிரி முள் இல்லாத மீன் வீட்ல சாப்பிட்டதேயில்லை. சரி .. சாப்பாடு பத்தி இப்ப என்ன .. நம்ம கதைக்குப் போவோம் ...

கழிவறை வரிசையாக இருக்கும். ‘தம்’மடிக்கிற ஆளுகளுக்குன்னு சில அறைகள் உண்டு. தீக்குச்சி .. தீப்பெட்டி சைடு எல்லாம் அங்கங்க இருக்கும். ஒரு தடவையோ ரெண்டு தடவையோ போனேன். இழுக்கிற சுகத்தை விட வார்டன் சாமியார்  வந்து பார்த்திருவாரோன்ற பயம் ரொம்ப. அதினால் அங்கே தம் அடிக்கிறதை விட்டாச்சு. குளிக்கிறது எல்லாம் வெளியில ஒரு பெரிய தொட்டி இருக்கும். எப்போதும் தண்ணி நிறைஞ்சிருக்கும். மொத ரெண்டு போணி தண்ணி ஊத்துறது எல்லாமே ஒரே ஸ்டைல் தான். டொம்முன்னு பெரிய சத்தத்தோடு போணியை அடித்து குளிர்ந்த நீரை மேல ஊத்திக்குவோம்.

நண்பர்கள் அப்டின்னும் ரொம்ப கொஞ்ச பேருதான். ஹாஸ்டலில் தேவராஜ் அப்டின்னு ஒருத்தன். என் வகுப்பு கிடையாது. ஆனால் என் விடுதியறையிலிருந்து நாலைந்து அறை தாண்டி இருப்பான். விளையாட்டு நேரத்தில் ஒண்ணா இருப்போம். ரிங் டென்னிஸ் சேர்ந்து விளையாடுவோம்.  சாப்பிடச் செல்லும் போது சேர்ந்து போகும் நண்பன். ஒரு விடுமுறைக்கு வீட்டுக்கு போய்ட்டு வந்த அவன் ஒருநோட்டைக் குடுத்துப் படி அப்டின்னான். ஒரு கதை எழுதியிருந்தான். ஒரே காதல் கதை தான். நம்ம சினிமாவும் கதைகளும் காதலைத் தாண்டி எப்போதோன் வெளிய போயிருக்கு ...? வாசிச்சேன். நல்லா புரிஞ்சுது. பய எதுலேயோ உழுந்துட்டான். சொந்தக்காரப் பொண்ணு. ஆனாலும் எங்க பழக்கத்தில அதையெல்லாம் அவன்கிட்ட நான் கேட்கவில்லை. ஆனா கதை வாசித்ததும் அதைப் பற்றிக் கேட்டான்.

அவன் சாப்பாடு சாப்பிட உட்கார அந்தப் பெண் பரிமாறுகிறாள். கழுத்துச் சங்கிலி அவன் கண்முன்னால் ஆடுகிறது. ... இப்படியெல்லாம் போகும். நான் அந்தக் கதையைத் தொடர்ந்து .. அந்தச் சங்கிலி ..  இன்ன பிற  .. சில ‘உணர்ச்சி பூர்வமான’ after thoughts பத்திச் சொன்னேன். அது அவனுக்கு ரொம்ப பிடிச்சிது. என் கதையைத் தொடர்ந்து அதை எழுதுன்னான். நானும் எழுதினேன். அதை வாங்கிட்டு போய், அதுவும் அடுத்த லீவுக்கு வீட்டுக்குப் போய்ட்டு வந்ததும், மறுபடி அவன் எழுதி என்னிடம் கொடுக்க ... நான் தொடர ... மறுபடி அவன் எழுத ... ஆகா .. அப்டி இப்டின்னு ரெண்டு குயர் நோட்டு ஒண்ணு நிறம்புறது மாதிரி ஒரு ‘மகா காவியம்’ ரெண்டு பேரும் சேர்ந்து படைச்சோம்.  ஒரே ஒரு வாசகன் எங்களுக்கு. தேவராஜின் ரூம் மேட். அவனும் ஆஹா .. ஓஹோன்னான். என்னிடம் தனியா அவன், ‘இந்தப் பய தேவராஜ் காதல்ல உழுந்துட்டான் .. அதைப் பத்தி எழுதுறான் ... நீ எப்டிடா.. எதிலயும் உழாமலே வெளுத்துக் கட்டுற?’ அப்டின்னான். 

இப்படிப்பட்ட ஒரு ’மஹா காவிய’த்தை யார் வெச்சுக்கிறதுன்னு ஒரு பேச்சு வந்தது. தேவராஜ் அது தனக்கு வேணும்னுட்டான். எழுத ஆரம்பித்ததும் அவன். முக்கிய சரக்கெல்லாம் அவனுடையது. நான் எப்படி அதைக் கேட்க முடியும்? இந்தக் காலம் மாதிரி இருந்திருந்தா at least  ஒரு photocopy  எடுத்திருப்போம். அதெல்லாம் அந்தக் காலத்தில் ஏது. அதனால் நான் படைத்த ஒரு மஹா காவியத்தின் நகல் கூட என்னிடம் இல்லாது போயிற்று. நண்பனின் தொடர்பும் இல்லாது போயிற்று.

ச்சே .. தமிழ் இலக்கிய உலகிற்கு எவ்வளவு பெரிய இழப்பு ...?! 

மலரும் ஒரு எழுத்தாளன் அங்கே செத்து விட்டான் என்பது தான் ஒரு மாபெரும் சோகம்.  :(


அப்போ நம்ம படைப்பெல்லாம் அப்படி ஆச்சுன்னா ...
 

                                                 ......  இப்போ நம்ம நிலைமை இப்படி ஆகிப் போச்சு !!!


*


*

2 comments:

Unknown said...

மிகவும் அருமையான பதிவு சகோ நன்றி

அ. வேல்முருகன் said...

சமூகம் சார்ந்த சிந்தனை எத்தனை பேருக்கு உள்ளது. இலக்கியமாக எழுதுவது மக்களுக்கு சென்று சேர வேண்டும். நீங்கள் எழுதுவது மக்களுக்கானது.

இது ஒரு வாய்ப்பு

வேண்டுமானால் காதல் இலக்கியம் படைக்க இயலாமல் போய் விட்டது என்று சொல்லிக் கொள்ளுங்கள்.

Post a Comment