Thursday, April 02, 2009

303. கடவுள் என்றொரு மாயை ... 3

*

தொடர்புடைய ஏனைய பதிவுகள்:

2

298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12

*

கடவுள் என்றொரு மாயை

*






THE GOD DELUSION
THE GOD DELUSION


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


==========================================

அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================


CHAPTER 2: THE GOD HYPOTHESIS

"The religion of one age is the literary entertainment of the next." -- RALPH WALDO EMERSON

*

கதைகளில் வரும் மிகவும் மோசமான பாத்திரப்படைப்புகளையும் தாண்டியதாகவே பழைய ஏற்பாட்டின் கடவுள் சித்தரிக்கப்பட்டுள்ளது. பொறாமை, அதன் மீதான பெருமிதம்; சின்னத்தனமான (petty), நீதியற்ற, மன்னிக்காத, பழிவாங்கும், இனவாதியான, குழந்தை, சகோதரன், பிள்ளைகள் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லோரையும் கொல்லும், வீண்பெருமையடிக்கும், பெண்களை வெறுக்கும், தலைக்கனம் மிகுந்த, மற்றவரைத் துன்புறுத்தி இன்பம் கொள்ளும் மிக மோசமான ஒரு பாத்திரப் படைப்பு.(51)

*

தாமஸ் ஜெபர்சன்: மோசஸின் கடவுள் மிகவும் பயங்கரமான ஒரு பாத்திரம்(character): கொடூரமான, பழிவாங்கும், தன்னிஷ்டத்திற்கு ஆட்டிப் படைக்கும், நியாயமற்ற பாத்திரம்.(51)

*

கிறித்துவத்தில் பேசப்படும் தமதிரித்துவம் (Holy Trinity)ஒரு வேடிக்கையான தத்துவம். அதையும் தாண்டி கத்தோலிக்க கிறித்துவத்தில் நாலாவதாக மரியாளும் சேர்க்கப்படுகிறாள். அதனால் கடவுளே கூட இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்படுகிறார். (55)

அதிலும்தான் எத்தனை விதவிதமான மரியாள்கள்: Our Lady of Fatima, Our Lady of Lourdes, Our Lady of Guadalupe, Our Lady of Medjugorje, Our Lady of of Akita, Our Lady of Zeitoun, Our Lady of Garabandal, Our Lady of Knock ... ( அடடா! .. இதில நம்ம ஊரு பூண்டி மாதா, வேளாங்கண்ணி மாதா - இதெல்லாம் விட்டுப் போச்சு!!)

1981-ல் இரண்டாம் ஜாண் பால் என்ற போப்பாண்டவர் ஒரு கொலை முயற்சியில் குண்டடி பட்டு மயிரிழையில் தப்பினார்.( நம்ம ஆளு எம்.ஜி.ஆருக்கு நடந்த மாதிரியேதான்!!) அதற்கு 'அன்னையின் கருணைக் கரங்கள் அந்த துப்பாக்கிக் குண்டை (விலகும்படி) வழிநடத்தியதாலேயே' அவர் தப்பித்ததாகக் கூறினார். அன்னையின் கரங்கள் அவருக்குக் காயம் ஏற்படாமலேயே இன்னும் கொஞ்சம் சரியாக 'வழிநடத்தியிருக்கலாமே'! (56)

*

GORE VIDAL: காட்டுமிராண்டிகளாக மனிதன் இருந்த காலத்தின் மத நூலான 'பழைய ஏற்பாட்'டிலிருந்து யூதமதம், கிறித்துவம், இஸ்லாம் என்ற மூன்று மனித குலத்திற்கு எதிரான (anti-human religions) மதங்கள் பரிணமித்தன. இதனால் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாய் வானுலகத்தில் இருக்கும் இந்தக் கடவுளாலும், அவரை வழிபடும் ஆண்களாலும் பெண்கள் அடிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள். (58)

*

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பொறுத்தவரை மனிதர்களை ஏழு படிகளில் பிரிக்கலாம்:

1. நூத்துக்கு நூறு நம்பிக்கையாளர்கள்.
2. நூத்துக்கு நூறைவிட சிறிதே குறைந்த நிலை: கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதெல்லாம் தெரியாது; ஆனால் நான் நம்பிக்கையோடு இருக்கிறேன்.
3. 50%க்கு மேல் .. முழுவதாக நம்பிக்கையில்லையெனினும், கடவுளை நம்புவர்கள்.
4. சரியாக 50%. கடவுள் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்.
5. <50%. முழுவதாக நம்பிக்கையில்லையெனினும், கடவுள் மறுப்பின் பக்கம் சாய்பவர்கள். 6. >0%. முழுவதாக மறுப்பதில்லை; ஆனால் கடவுள் பக்கம் சாய்வதில்லை.
7. கடவுள் இல்லையென்று முழுமையாக நம்புவர்கள். (73)

*

BERTRAND RUSSELL: வானுலக டீ கப் !

நம்பிக்கையுள்ளவர்கள் பலரும் கடவுள் இருப்பை மறுப்பவர்களே கடவுள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். இது தவறு.

நம் பூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் நடுவில் நீள் வட்டப் பாதையில் சின்ன சீனா டீ கப் ஒன்று சுற்றி வருகிறது; அதை எந்த பெரிய தொலைநோக்கியாலும் காண முடியாத அளவு அது மிகச்சின்னதாக உள்ளது என்று நான் சொன்னால், அதை யாரால் தவறென்று நிரூபிக்க முடியும்?

அதைத் தவறென்று யாரும் நிரூபிக்க முடியாததால் நான் சொன்னதே சரி என்று நான் சொல்லிக்கொண்டிருந்தால் நான் பைத்தியக்காரத்தனமாக உளறிக்கொண்டிருப்பதாகத்தான் நினைக்க இடமுண்டு.

ஆனால், இதுபோன்ற வானுலக டீ கப் ஒன்று வானில் சுற்றிவருவது உண்மைதான்; நம் பழைய, புதிய, இறுதி 'ஏற்பாடுகளில்', புனித வேத நூல்களில் அப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது என்று பள்ளிப் பருவத்திலேயே வீடு, பள்ளி, கோவில்களில் இது நமது புத்தியில் தொடர்ந்து ஏற்றப்பட்டிருந்தால் அந்த 'உண்மையை'க் கேள்வி கேட்பதே கேலிக்குரிய, மிகத்தவறான விஷயமாகிவிடும் அல்லவா. (75)

ஆகவே, கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்கவேண்டிய கடமை நம்பிக்கையாளர்களுக்குத்தான் உள்ளது. கடவுள் மறுப்பாளர்களின் வேலையல்ல அது.


*

அடிக்கடி சொல்லப்படும் விஷயம் ஒன்று உண்டு: எப்படி என்பதை விளக்குவது விஞ்ஞானம்; ஏன் என்பதை விளக்குவது மெஞ்ஞானம் என்று.

விஞ்ஞானத்தால் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்விக்கு மதங்கள் பதில் சொல்லிவிடும் என்பது என்ன விதமான நம்பிக்கை?!

ஆக்ஸ்போர்டில் Martin Rees என்ற விண்வெளிப் பயணி 'விஞ்ஞானம் பதில் சொல்ல முடியாத கேள்விகள் பல உண்டு. அனேகமாக மதங்கள்தான் அதற்குரிய பதில்களைத் தரவேண்டுமென்று சொல்லியிருந்தார்'. ஒருமுறை நானும் அதே ஆழமான கேள்விகளை அவரிடம் கேட்டபோது, அவர் இந்தக் கேள்விக்குரிய பதிலைத்தர நான் நமது மதகுருவைத்தான் அழைக்க வேண்டுமென்றார். விஞ்ஞானிகளுக்கே தெரியாத பதிலை இந்த மதக்குருக்கள் மட்டும் எப்படி தர முடியும்?

விஞ்ஞானத்தில் பதில் தரமுடியாத கேள்விகள் பலவும் உண்டு. ஆனால் மதங்கள் அவைகளுக்குப் பதில் தந்துவிடும் என்பது என்னவிதமான நம்பிக்கை. மனிதன் நடக்கவேண்டிய நல்வழி பற்றி சொல்வது விஞ்ஞானத்தின் கட்மையல்ல. மதங்களுக்கு உண்டென்கிறார்கள். அவைகளுக்கு வேறு வேலை எதுவும் கிடையாது என்பதாலேயே அவைகளுக்கு அந்தத் தகுதியைக் கொடுப்பது சரியா? அப்படியே கொடுப்பதாயின் எந்த மதத்திற்கு அந்தத் தகுதியைக் கொடுப்பது? பைபிளில் விபச்சாரம் செய்தவர்களோடு, ஓய்வு நாளில் (Sabbath day) விறகு பொறுக்கியவர்களையும், பெற்றோரிடம் மரியாதையில்லாமல் பேசியவர்களையும் ஒன்றாக்கி இவர்கள் அனைவருக்குமே ஒரே மாதிரியான மரண தண்டனை என்று சொல்லியிருப்பது எத்தனைபேருக்குத் தெரியும்? எந்த மதத்தின் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்வது? (81)


*

அடுத்த பதிவில்:ஜெபம் / தொழுகை / வேண்டுதல்கள் கேட்கப்படுகின்றனவா? - ஒரு அறிவியல் சோதனை:


*

33 comments:

ilavanji said...

// >0%. முழுவதாக மறுப்பதில்லை; ஆனால் கடவுள் பக்கம் சாய்வதில்லை. //

தருமிசார், நானெல்லாம் மிகச்சரியாக இந்த கேட்டகிரியில் வருவேன்னு சந்தோசமா சொல்லிக்கறேன். :)

ஏன் முழுவதாக மறுப்பதில்லைன்னு யோசித்துப் பார்த்தால், மறுக்கக்கூடிய அளவிலே ஆதாரங்களோ, தேடல்களோ, உணர்ந்த உண்மைகளோ இல்லை என்பதுதான் காரணமாக இருக்க முடியும். மேலும் கடவுள் இல்லை.. அதனால் மதங்களும் பொய் என்ற உண்மைகளுக்கு அப்பால் இருக்கும் உணர்வுகளற்ற சூனியத்தை எதிர்நோக்கும் தைரியம் இல்லாத வளர்ப்பும்கூட காரணமாக இருக்கலாம். “இயேசு அழைக்கிறார்” என்று மேடையில் கசிந்துருகும் பிரார்த்தனைக்குப்பின்னே ஆயிரம் வர்த்தகமும் அரசியலும் இருந்தாலும் மேடைக்குக்கீழே கண்கள் கசிந்துருக ஏற்றுக்கொண்ட நம்பிக்கையினோடு ஐக்கியமாவர்கள் பொய்யர்கள் என கூற முடியுமா? வாழும் சமூகத்தின் ஒரு பழக்கமாக இருந்தாலும் குடும்பத்தோடு பழனிக்குப்போய் மொட்டைகளைப் போட்டு சந்தனம்பூசி பஞ்சாமிர்தம் நக்கித்திரும்பும் ஆன்மீகப்பயணங்கள் ஒரு குடும்பத்தில் எத்துனை உறவுகளையும் பிணைப்புகளையும் ஏற்படுத்துகிறது என்பதை மறுக்க முடியுமா? பிராத்திர்தவர்களது மூச்சுக்காற்று உடல்நோவுகளைப்போக்கும் என்று தர்க்காவின் வாசல்களில் குழந்தைகளோடு நிற்கும் மதம் பார்க்காத பெற்றோர்களது நம்பிக்கை என்பது உண்மையிலேயே ஏமாற்றுவேலையாக இருக்கக்கூடுமா?

இறைவனும் மதங்களும் இப்படி மக்களின் உணர்வுகளுடன் பிணைந்திருப்பதாலேயே, இறைவன் எனும் கட்டமைப்பும் அதன்மீதான மதங்கள் எனும் நிறுவனமயமாக்கப்பட்ட இயங்கங்களும் மனித உணர்வுகளை தின்று கொழுக்கும் கவைக்குதவாத கட்டுமானங்கள் என்று அறிவுக்குப்பட்டாலும், சராசரி மனிதர்களின் நம்பிக்கைகள் என்னும் உண்மையைத்தாண்டி தெரியும் உண்மையான ”உண்மை”யான வெற்றுவெளி சூனியத்தை கண்டறிவதில் என்ன வாழ்க்கை இருந்து விடப்போகிறது? அப்படியே அதை ஏற்றுக்கொண்டாலும் அது எப்படி நாம் இப்போது ஓட்டிகொண்டிருக்கும் சமூகம் சார்ந்த வாழ்க்கையை மாற்றிவிடப்போகிறது?!

என்னத்த சாமி.. என்னத்த கும்புட்டுங்கறது விட்டேத்திதனம்...அய்யோ சாமி கண்ணைக்குத்திருக்கறது விடாப்பிடியான நம்பிக்கை..சாமியாவது கீமியாவது... அறிவியல் படி எல்லாம் பொய் அப்படிங்கறது மனித உணர்வுகளை ஒதுக்கிவைத்த வரட்டுத்தனம்...சாமி இருந்தா என்ன? இல்லாட்டி என்ன?அதைக்கண்டுபுடிக்க செலவழிக்கற நேரத்துல நாலு மனிசங்களோடு நல்லா வாழறதுக்கு என்ன செய்யனும்னு யோசிக்கறது மனிதநேயத்தனம்.. எனக்கு மனிசங்களோடு கலந்து கட்டி வாழறதைத்தவிர வேற வழியைல்லாததால “முழுவதாக மறுப்பதில்லை; ஆனால் கடவுள் பக்கம் சாய்வதில்லை.” இதுல எதுபடி வாழ்ந்தாலும் தப்பே இல்லைங்கறது என் எண்ணம். முழுமுதல் உண்மைல சரியாவது தப்பாவது :)

இப்படியான என் அரைகுறை அறிவோடு இதைப்பத்தியெல்லாம் உங்ககூட பேசனும்னு ரொம்பநாளா ஆசை... போனமுறை மதுரைல விட்டுப்போச்சு.. அடுத்தமுறை நீங்க மாட்டுனீங்கன்னா அறுத்துத்தள்ளிடறேன்! :) ( என்னதான் எழுதுனாலும் பேசறதுல இருக்கற சொகம் இதுல.. ம்ஹீம்! )

குடுகுடுப்பை said...

கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்கவேண்டிய கடமை நம்பிக்கையாளர்களுக்குத்தான் உள்ளது. கடவுள் மறுப்பாளர்களின் வேலையல்ல அது.//

இருக்கிறார் என்று பலமுறை நிரூபிக்கபட்டுவிட்டது என பின்னூட்டம் வரலாம்.

வோட்டாண்டி said...

1.// நூத்துக்கு நூறு நம்பிக்கையாளர்கள். //

--எங்க மதம் தான் சிறந்தது..மத்த பய எல்லாம் கேன பைய அவன் எல்லாம் இருந்தா என்ன இல்லாட்டி என்ன..போட்டு தள்ளு..

2. //நூத்துக்கு நூறைவிட சிறிதே குறைந்த நிலை: கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதெல்லாம் தெரியாது; ஆனால் நான் நம்பிக்கையோடு இருக்கிறேன்.//

--போங்கடா போய் பொழப்ப பாருங்கடா.. அவங்க(மற்ற மதவாதிகள்,மற்றும் மற்ற ஜாதிகள்) கிட்ட எல்லாம் பேசி புரிய வைக்க முடியாது..ஏன்னா அவங்க எல்லாம் அசுரர்கள்.. சாமி அவங்களுக்கு நல்ல தண்டனையே குடுப்பார்..

3.// 50%க்கு மேல் .. முழுவதாக நம்பிக்கையில்லையெனினும், கடவுளை நம்புவர்கள்.//

--நாம பாட்டுக்கு உண்டியல்ல காசு போட்டோமா..போட்ட காசுக்கு கடவுள் கிட்டேன்து வேலை வாங்குனோமா னு இருக்கணும்..வெள்ளி கிழமை வெள்ளி கிழமை அர்ச்சனை பண்ணனும்..மத்த ஜாதி கிட்ட எல்லாம் பேசாதடா..அபிஷ்டு அபிஷ்டு..


4. //50%. கடவுள் இருக்கலாம்;
இல்லாமலும் இருக்கலாம்.//


--என்ன பொருத்தவரைக்கும் கடவுள் இருக்கார்.. நான் கோவிலுக்கு போனா எனக்கு மன நிம்மதி கிடைகிது.. எங்க குல தெய்வம் ரொம்ப powerful..

5. //<50%. முழுவதாக நம்பிக்கையில்லையெனினும், கடவுள் மறுப்பின் பக்கம் சாய்பவர்கள்.//

--என்ன பண்றது தலை எழுத்து..கோவிலுக்கு போடான்னு வீட்ல தொல்லை குடுக்குறாங்க.. சரி வந்தது வந்தாச்சு.. சுண்டல வாங்குனோமா.. ரெண்டு பொண்ணுங்கள சைட்டு அடிச்சோமானு இருக்கணும்..

6. //>0%. முழுவதாக மறுப்பதில்லை; ஆனால் கடவுள் பக்கம் சாய்வதில்லை.//

எல்லா மதமும் குப்பை..பெண்களை மனிஷனாவே மதிக்கிறது இல்லை..கேக்குற கேள்விக்கு எல்லாம் கேன தனமா பதில் சொல்றாங்கப்பா . என்னடா அறிவியலுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை.. மதம் வேணா குப்பையா இருக்கலாம் ..ஆனா கடவுள் இல்லைனுலாம் சொல்லிட முடியாது.. avar பாட்டுக்கு ஒரு ஓராம இருக்கட்டும்..நான் பாட்டுக்கு என் வேலைய பாக்குறேன்..

...
7. //கடவுள் இல்லையென்று முழுமையாக நம்புவர்கள். (73)//

கடவுளை நம்புபவன் முட்டாள்.. ஏன்டா darwin,big bang theorylam படிச்சதில்லை.. இங்க வந்து இல்லாத விட்டலாச்சாரியா கதை எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க.. டேய் இருக்கற ஒன்ன தாண்ட நீங்க இருக்கா இல்லையானு சொல்லணும்.. இல்லாத ஒன்ன நான் எப்படிடா இல்லைன்னு நிரூபிக்க முடியும்.. பத்து காலோட ஒரு மனுஷன் இருக்க முடியாதுன்னு சொன்னா..இல்லை இருக்குற ஒரு ஒரு மனிதனையும் புடிச்சி டெஸ்ட் பண்ணி prove பண்ற சொல்றது வடிவேலு comedy மாதிரி இல்லை??

வால்பையன் said...

//கதைகளில் வரும் மிகவும் மோசமான பாத்திரப்படைப்புகளையும் தாண்டியதாகவே பழைய ஏற்பாட்டின் கடவுள் சித்தரிக்கப்பட்டுள்ளது. பொறாமை, அதன் மீதான பெருமிதம்; சின்னத்தனமான (petty), நீதியற்ற, மன்னிக்காத, பழிவாங்கும், இனவாதியான, குழந்தை, சகோதரன், பிள்ளைகள் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லோரையும் கொல்லும், வீண்பெருமையடிக்கும், பெண்களை வெறுக்கும், தலைக்கனம் மிகுந்த, மற்றவரைத் துன்புறுத்தி இன்பம் கொள்ளும் மிக மோசமான ஒரு பாத்திரப் படைப்பு.//

முற்றிலும் உண்மை!

தன்னை ஒரு இஸ்லாமியனாக அறிவித்து கொண்டு ஒரு முட்டாபையன் எனக்கு தினமும் மெயில் அனுப்புவான் அதில் கூட கடவுள் பாசமானவர் தான் ஆனால் தம்மை ஏற்று கொள்ளவில்லையென்றால், சொல் பேச்சு கேட்கவில்லையென்றால் பயங்கர தண்டனையாம்.

பைபிள் பழைய ஏற்பாட்டிற்கும், குரானுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை போல!

வால்பையன் said...

//அன்னையின் கருணைக் கரங்கள் அந்த துப்பாக்கிக் குண்டை (விலகும்படி) வழிநடத்தியதாலேயே' அவர் தப்பித்ததாகக் கூறினார். அன்னையின் கரங்கள் அவருக்குக் காயம் ஏற்படாமலேயே இன்னும் கொஞ்சம் சரியாக 'வழிநடத்தியிருக்கலாமே'!//

எதாவது சின்ன தப்பு பண்ணியிருப்பாரு!
கண்ண குத்த வேல் கிடைக்காம போயிருக்கலாம். அதனால ஒரு ஆள் செட்டப் பண்ணி சுடச்சொல்லி அனுப்பியிருப்பாங்க!

முக்கியமான செய்தி சுட்ட ஆளுக்கு தண்டனை கொடுக்க கூடாது காரணம் அவன் போப்பை சோதிக்க கடவுள் அனுப்பிய ஆள்.
அவனை தண்டிப்பது கடவுளையே தண்டிப்பது மாதிரி!

வால்பையன் said...

//கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்கவேண்டிய கடமை நம்பிக்கையாளர்களுக்குத்தான் உள்ளது. கடவுள் மறுப்பாளர்களின் வேலையல்ல அது.//

இததாங்க நானும் சொல்றேன்.
ஜகா வாங்குறன்னு எனக்கே திருப்பி விடுறானுக!

தருமி said...

//...உண்மைகளுக்கு அப்பால் இருக்கும் உணர்வுகளற்ற சூனியத்தை எதிர்நோக்கும் தைரியம் இல்லாத வளர்ப்பும்கூட காரணமாக இருக்கலாம்.//

இது .. இதுதான் நான் அடிக்கடி சொல்றது, இளவஞ்சி.

//அதைக்கண்டுபுடிக்க செலவழிக்கற நேரத்துல நாலு மனிசங்களோடு நல்லா வாழறதுக்கு என்ன செய்யனும்னு யோசிக்கறது மனிதநேயத்தனம்.. //

அதைக் கண்டுபிடிக்கிறதுக்கோ, இல்லை, அந்த வழியிலேயே போயிடாம இருந்து, அதுக்குப் பதிலா நாலு மனிசங்களோடு நல்லா வாழறதுக்கு என்ன செய்யனும்னு யோசிக்கறது மனிதநேயத்தனம் -- அப்டின்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்குமோ?!

தருமி said...

குடுகுடுப்பை,

நன்றி

pudhuvaivenkatesan said...

கடந்த இரண்டாயிரம் அல்லது பத்தாயிரம் வருடங்களில் கடவுள் ஏன் ஒரு முறை கூட சாமான்யனிடம் அப்பியரன்ஸ்ரீ தர எந்தவிதமான முயற்சியிலும் ஈடுபடவில்லை என்று புரியவில்லை. அவர் மறை(ர) பொருளாகவே இருந்துகொண்டிருக்க வேண்டியதன் அவசியம் என்னவென்றும் தெரியவில்லை

தருமி said...

நாம பாட்டுக்கு உண்டியல்ல காசு போட்டோமா..போட்ட காசுக்கு கடவுள் கிட்டேன்து வேலை வாங்குனோமா னு இருக்கணும்

:)

7வது category : அப்படி என்ன ஒரு கோவம்!!??

தருமி said...

வால்ஸ்,
பழைய ஏற்பாடு கிறித்துவத்திற்கும், இஸ்லாமுக்கும் பொதுவானதுதான்.

தருமி said...

//முக்கியமான செய்தி சுட்ட ஆளுக்கு தண்டனை கொடுக்க கூடாது காரணம் அவன் போப்பை சோதிக்க கடவுள் அனுப்பிய ஆள்.
அவனை தண்டிப்பது கடவுளையே தண்டிப்பது மாதிரி!//

அதாவது சுடுபவனும் "நானே"; சுடப்படுபவனும் "நானே" அப்டின்ற அத்வைதத் தத்துவத்தை சொல்றீங்க அப்படித்தானே!!

தருமி said...

//அப்பியரன்ஸ்ரீ தர எந்தவிதமான முயற்சியிலும் ஈடுபடவில்லை //

மொதல்ல குடுகுடுப்பை சொன்னது போல, என்னிட்ட கடவுள் நேத்துகூட பேசினார்னு சொல்ல நிறைய பேரு இருக்காங்க. அதையும் தாண்டி, சிலர் நானே கடவுள் அப்டின்னும் சொல்லி போஸ்டர் அடிச்சிக்கிட்டு இருக்காங்களே!

கல்வெட்டு said...

என்னத்தப் பேசி என்னத்த செய்ய...ம்ம்...நீங்களும் என்ன என்னமோ சொல்றீங்க எழுதிறீங்க. படித்தத. கண்ணுல கண்டத. சொல்றீங்க என்ன பிரயோசனம் ... :-))

**

இளவஞ்சி சொன்னது...

//...உண்மைகளுக்கு அப்பால் இருக்கும் உணர்வுகளற்ற சூனியத்தை எதிர்நோக்கும் தைரியம் இல்லாத....//

இளவஞ்சி , கனவிலேயே இருப்பதுதான் சிரமம். :-))))

மேலும் பயம்/நிச்சயமற்ற தன்மைகள்தான் மத/கடவுள் நம்பிக்கையின் ஆதாரமான ஒரு விசயம்.

**********

//வெற்றிடத்தில் நிற்கப்பயந்தவனுக்கு எப்போதும் சாய்ந்துகொள்ள ஒரு சுவர் வேண்டும்.//

மதங்களின் மூத்திரச் சந்துகளின் வழியாக வரும் கோர்வையற்ற நாற்றம்
http://kalvetu.blogspot.com/2007/12/blog-post.html

வோட்டாண்டி said...

//அதாவது சுடுபவனும் "நானே"; சுடப்படுபவனும் "நானே" அப்டின்ற அத்வைதத் தத்துவத்தை சொல்றீங்க அப்படித்தானே!!//

சரியாய் சொன்னீங்க..நீதிமன்றம், சட்டம் தண்டனை எல்லாம் எதுக்கு.. இங்க நடக்குறது எல்லாம் கடவுள் கட்டளை padiyum விதி padiyum தான நடக்குது.. .

////அப்பியரன்ஸ்ரீ தர எந்தவிதமான முயற்சியிலும் ஈடுபடவில்லை //
பிள்ளையார் பால் குடிச்சது, பெருமாள் கண் அடிச்சது, அனுமார் மாதிரி ஒரு குரங்க ஒருவர் புகைப்படம் எடுத்தது(புகைப்படம் எடுத்தவருக்கு அப்பறம் பார்வை போயிடுச்சாம் ).. ராமர் கனவுல வந்து எனக்கு அயோதியில கோவில் கட்ட சொல்லி கேட்டது.. தெருவுல நடந்து போறவன ஆவி அடிச்சது.. சாமியார் வாயிலேந்து லிங்கம் (வாந்தி) எடுத்தது...
இதெல்லாம் கடவுள் தன்னை மனிதனிடம் நிரூபிக்க எடுத்த முயற்சிகள் அல்ல.. கடவுள் இருப்பதாக கூறி கொண்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்கும்(உண்டியல் குலுக்கும்) சில பல ஆசாமிகள் வியாபாரத்தை(காணிக்கை) பெருக்க எடுத்த முயற்சிகள்.

Thekkikattan|தெகா said...

யாருங்க இந்த வோட்டாண்டி இப்படி புகுந்து விளையாண்டுருக்காரு? வேற எங்கனயும் இவர பார்க்க முடியலையே :-).

1லிருந்து7 வரைக்கும் உங்க விளக்கம் செம கலக்கல்... வோட்ஸ்.

வோட்டாண்டி said...

//வேற எங்கனயும் இவர பார்க்க முடியலையே :-).

வேற எங்கனயும் பின்னூட்டம் போடறதுக்கு நேரம் இல்ல அப்பு.. படிக்கிறதோட சரி.. //வேற எங்கனயும் இவர பார்க்க முடியலையே :-).

வேற எங்கனயும் பின்னூட்டம் போடறதுக்கு நேரம் இல்ல அப்பு.. படிக்கிறதோட சரி..

//குடும்பத்தோடு பழனிக்குப்போய் மொட்டைகளைப் போட்டு சந்தனம்பூசி பஞ்சாமிர்தம்

சொல்ல உட்டீங்க.. சின்ன குழந்தைனு கூட பாக்காம..கதற கதற மொட்டை அடிச்சி, ரத்தம் வர வர காது குத்தி, வலியில அழுவும்போது அதோட வாயில வாழைபழத்த அமுக்கி, அப்பறம் கொஞ்சம் வளர்ந்த பிள்ளைய இருந்தா யானை கிட்ட போய் ஆசிர்வாதம் வாங்குன்னு(நாய் கிட்ட கூட போறதுக்கு பயப்புடுற வயசு) torture பண்ணி, உங்கள எல்லாம் இந்த மனித உரிமை கழகங்களும், Ministry of women and child, இவங்க எல்லாம் எந்த கேள்வியுமே கேக்க மாட்டங்கள ??

ilavanji said...

தருமி சார்,

நானொரு சமூக உறுப்பினன். என் ஜாதி, கோயமுத்தூரான், தமிழன், மதராசி, இந்தியன் என ஏகப்பட்ட குழு முத்திரைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளவில்லையென்றாலும் கூடிவாழும் இயல்பினன். இந்த பழகிய பழக்கப்படுத்தப்பட்ட கூடிவாழும் வாழ்க்கையில் என் கும்பலுக்கென சில பழக்க வழக்கங்களை வளர்த்தெடுத்து அதன் படி வாழ முயற்சிக்கும் தனியாள் நான். குழுக்கள் வேறு படலாமேயன்றி குழு என்ற ஒன்றே இல்லாது நான் கண்டது மட்டுமே உண்மை.. அது மட்டுமே வாழ்க்கையென தீர்மானத்தோடு தனியாக வாழத்தலைப்படும் முயற்சிகள் எதுவும் அறவே இல்லாத ஒரு சராசரி மனிதன். என்னைப்போன்ற ஆட்களுக்கு உண்மைகளுக்கு அப்பால் இருக்கும் உணர்வுகளற்ற சூனியத்தை எதிர்நோக்கும் தைரியம் இல்லை என்பது வெகு இயல்பு. இதை ஒரு குறையாகவோ அல்லது வாழ்ந்து தீர்க்க வேண்டுமெனில் இந்த உண்மைகளைக் கைக்கொண்டே ஆகவேண்டுமென்ற கட்டாயமோ இல்லை! ஆகவே, சூனியத்தை எதிர்கொள்ள எங்களுக்கு பயம் என்று சொல்லிக்கொள்வதில் எந்த கூச்சநாச்சமுமில்லை! :)

// அப்டின்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்குமோ?! //

இல்லை தருமி சார், நான் சொன்னதுலயே நான் நிக்கலாமுன்னு நினைக்கறேன். ”கடவுள் இருக்கிறார்.. இல்லை...” என்பது போன்ற வெறும் தர்க்கரீதியான விவாதங்களால் இதுவரைக்கும் எனக்கு “நாம் ’ஏற்றுக்கொண்ட’ முடிவுகளின் மீது மிகத் திறமையாக வெட்டியும் ஒட்டியும் விவாதிப்பது எப்படி?” என்பதான வார்த்தை விளையாட்டுக்கள் எப்படி செய்வதுங்கற திறமைகளைத்தாண்டி வேறு எந்த உருப்படியான சிந்தனைகளும் நல்ல வாழ்க்கைக்கான வழிகளும் கிடைத்ததில்லை! இப்படியிருக்க, கடவுள் இருந்தாலும் மயிராச்சு.. இல்லைனாலும் மயிரேப்போச்சு என்கிற என் நிலை நல்லபடியாக நான் சிந்திக்க உதவுவதால் அதுலயே நான் இன்னமும் ஸ்டேண்டு போட்டு நின்னுக்கறேன்! :)

கல்வெட்டு,

உங்க இந்த படிவையும் படித்திருக்கிறேன். அப்பறனும் ஏண்டா இப்படி பெனாத்துறன்னு திட்டக்கூடாது :)

என்னுடைய ஆதங்கங்கள் எல்லாம் நீங்கள் சொல்லுகிற உண்மைகளை புரிந்து கொள்ளுவதிலோ அல்லது ஏற்றுக்கொள்வதிலோ இல்லை. கடவுள் இல்லை.. சரி.. ஆகவே மதங்களும் இல்லை.. சரி ஓப்புக்கறேன். அதுக்கப்பறம்?! அதைத்தாண்டி நாங்க எல்லாம் எப்படி வாழனும்னு கேட்டா அதெப்படி அதான் உனக்கு பகுத்தறிவும் சுயமாகச்சிந்திக்கற மூளையும் வந்துடுச்சில்லை... அப்பறமென்ன நீயே வாழ்ந்துக்க.. அப்படிங்கற ஒரு தலைவனுக்கு இருக்கும் குணாதிசியத்தை சராசரிகளின் மீது திணிக்கும் மனப்பான்மைதான் மிஞ்சுவது... அதை வைத்து நாங்கள் என்ன செய்ய?! நாங்களெல்லாம் உணர்வுகளால் பிணையப்பட்டவர்கள் ஐயா! // பயம்/நிச்சயமற்ற தன்மைகள்தான் மத/கடவுள் நம்பிக்கையின் ஆதாரமான ஒரு விசயம் // அதேதான் அதே பயம் தான்... அதே நிச்சயமற்ற தன்மைதான்.. அதே ஆறுதல் தரும் உணர்வுகள் தான். எங்களை என்ன செய்யச்சொல்லறீங்க?

யேசு முடவனுக்கு கால் கொடுக்கிறார் என்ற அய்யோக்கியத்தனமான மேடை விளையாட்டுக்களுக்கு கீழாக தரையில் அமர்ந்து கடவுள் என் சுமைகளையும் தீர்ப்பார்.. ஆறுதல் அளிப்பார் என பிரார்த்தித்து அது தரும் நம்பிக்கையில் வாழ்க்கையை எதிர் கொள்ளும் ஒருவனிடம் போய்,.. யேசு காலைத்தருவார் என்பதெல்ல்லாம் பம்மாத்து.. அறிவியல் படி கடவுள் என்பது நிரூபிக்கப்படவில்லை.. ஆகவே அதன்மீது கட்டமைக்கப்பட்ட உன் மதம் பொய்யானது...” என அறிந்தாய்ந்து அவனுக்கு அறிவினைப்புகட்டுவதில் அவனுக்கு கிடைப்பது என்ன?! எனக்குத்தெரிந்து ஒரு எழவும் இல்லை! கடவுள் இல்லை என்ற உங்கள் கூற்று சரி.. ஆனால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றால் கூடிவாழ அதன்பின் நீங்கள் கொடுக்கும் மாற்று என்ன? ஜஸ்ட், ”கடவுள் இல்லை” என முரசறையும் அறிவு சாசனம்! ஒருவரோடு ஒருவர் சார்ந்து வாழ்ந்து பழக்கப்பட்ட பழகிப்போன நாங்கள் இந்த பட்டையத்தை வைத்து கஞ்சி காய்ச்சி குடிக்க முடியுமா?

என்னிடம் ஒரு சைக்கிள் இருக்கிறது. நாலு இடத்திற்கு போக வர இந்த சைக்கிளில் போய் பழகி விட்டேன். இந்த சைக்கிளில் பெல்லு சரியில்லை என்று சொல்லறீங்க.. . சரி பெல்லு மாத்திக்குவோம். சைக்கிள் ரோட்டுல ஊடலாடுது... வீல் ரெண்டும் கோணை அப்படீங்கறீங்க.. சரி வீலுக்கு பெண்டெடுத்துக்கறோம்... சைக்கிள் ஓடையில காச்சுமூச்சுன்னு சத்தம் வருதுங்க்கறீங்க... சரி செயினுக்கு ஆயில் விட்டுக்கறோம்... இதெல்லாம் உள்ள குறைகளைக் கண்டறிந்து அதற்கான மாறுவழிகளை ஏற்றுக்கொண்டு வாழப் பழகிக்கொள்ளும் உத்தியாகவே நாங்க நினைச்சுக்கறோம்.. ஆனா நீங்க உங்க சைக்கிளில் இத்தனை குறைகள் இருக்கு.. இதெல்லாம் வண்டியா.. தூக்கிக்கடாசுய்யா என் வென்று.. ஆனா வேற வண்டி உணக்கு தரமாட்டேன்!” அப்படின்னு சொன்னீங்கன்னா, நாங்க.. இந்தாளு சொல்லறதுல உண்மை இருக்குபோல.. ஆனா நம்பளை திரும்பவும் நடக்கவைச்சுருவானோங்கற பயத்துல காதுகொடுத்து கேட்டாலும் மனசுல ஏத்திக்காம எங்க ஓட்ட வண்டிய உருட்டிக்கிட்டு போய்க்கிட்டே இருப்போம். இருக்கறோம்.. :)

கடவுள் இருக்கிறார் என்ற ”நம்பிக்கை”யின் பின்னாக இப்படித்தான் நல்லவனாக வாழவேண்டும் என்ற வழிகாட்டுதல் எல்லா மதங்களிலும் இருக்கிறது. நீங்க வெளி உலகத்தில் இந்த நெறிகளைக் கைக்கொண்டு வாழும் 99% மக்களை விட்டு விட்டு.. தவறு செய்யும் 1% மக்கா ஜெயிலுல இருப்பதையும்.. ரோட்டுல ஒன்னுக்கடிப்பதையும் உதாரணமாகக்கொண்டு சொல்வது ஏற்றுபுடையதாக இல்லை! உங்களும் எனக்கும் சாமி இருக்கு என்ற நம்பிக்கையில் நல்லவனாக வாழும் நால்வரையும்.. கடவுள் நம்பிக்கை இல்லை.. .என்று சொல்லி வாழும் உத்தமர்கள் நால்வரையும் கட்டாயம் தெரிந்துருக்கும். அப்படி அந்த மட்டத்திலே இந்த பூமியிலே இருக்கற 100 வருசத்துல பயனுல்லதாக எப்படி வாழலாம் என்ற நோக்கத்தை தாண்டி, முழுமுதல் உண்மையை தேடிக்கண்டறிந்து வாழ்க்கையில் அனைவரும் அறிவாளிகளாக ஆக்கும் நோக்கத்தின் பயன் என்ன என்பது எனக்கு புரியவில்லை! :( உணர்வுகள் என்கிற பதார்த்தம் தவிர்த்து அறிவு என்கிற பட்டையம் மட்டுமே வைத்துக்கொண்டுவாழ நாங்கள் தயாராக இல்லை.. இதை ஒத்துக்கொள்வதில் எங்களுக்கு என்ன பங்கம் வந்துவிடப்போகிறது?! என் கையில் இல்லாத கிடைக்கும் என்கிற உறுதிப்படாத பென்ஸ்காரை விட இப்போது நான் வைத்திருக்கும் சைக்கிளை தூக்கியெறியாது காலங்களுக்கேற்ற மாற்றங்களை உணர்ந்துகொண்டு வண்டியை சரிசெய்து ஓட்டிக்கொள்வதால் எங்களுக்கு கிடப்பது வாழ்க்கையின் மீதான ஒரு பிடிப்பும் மனிதர்கள் மீதான ஒரு பிணைப்பும். இதைக்கொடுக்க உங்கள் “கடவுள் இல்லை” எனும் தர்க்க சாஸ்திரத்தில் இடமிருந்தால் சொல்லுங்கள்! அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

வோட்டாண்டி,

// உங்கள எல்லாம் இந்த மனித உரிமை கழகங்களும், Ministry of women and child, // அடடே! அதாவது அந்த குழந்தையோட அப்பாம்மாவை விட உங்களுக்கு அந்த குழந்தைமீது என்ன ஒரு பரிவு பாசம்! தன் குழந்தைக்கு நல்லதுங்கற நம்பிக்கைல பெத்தவங்க அவங்க குழந்தைக்கு மொட்டை போடறதும் காது குத்தறதும் உங்களுக்கு அந்த பெத்தவங்க்களை விட அம்புட்டு அக்கறையும் வலையையும் தருதா? ஆச்சரியம்தான்! தம் குழந்தைமீதான அன்பு பரிவு பாசம் இந்த உணர்வுகள் எல்லாம் பொய்.. பாருங்களேன் குழந்தையின் வலிகூடத்தெரியாம உணராம காது குத்தி மொட்டையடிச்சு வெளையாடறாங்க :)

இதுமாதிரி நம்பிக்கைகொண்டவர்களது பழக்க வழக்கங்களை “நீங்க எல்லாம் முட்டாக்கூ.. நான் பாரு எம்புட்டு அறிவாக் கேக்கறேன்..!” என்கிற சின்னக்கலைவாணர் விவேக்கின் டெம்பிளேட்டு பாணியில் நக்கலடித்துக்கொண்டு இருந்தால் எங்களை மாதிரி ஆளுங்க அதுக்கு கெக்கேபிக்கேண்ணு சபைல சிரிச்சிட்டும் அப்பறம் தனக்குன்னு வர்றப்ப பொச்சுல தொடச்சுக்கிட்டு போகவும்தான் வழிசெய்யும். உண்மையிலேயே உங்களுக்கு சமூக மாற்றக்களுக்கான அக்கறை இருந்தால் சம்பத்தப்பட்ட மக்களோடு கலந்து உறவாடி அவர்களது நம்பிக்கையைப் பெற்று அப்பறமாக உங்க கருத்துக்களை சொல்லுங்க.. ஏத்துக்கறாங்களோ இல்லையோ காது கொடுத்து கேட்கும் பக்குவம் இதன்மூலம் அந்த மக்களுக்கு வந்திருக்கும். இதில்லாம “கேளுக்கடா.. முட்டா மக்களே! நீங்க செய்யற காரியத்துல இருக்கற தாமாசு என்னன்னா..?! “ அப்படிங்கற தொணி உங்களுக்கு அப்போதைய கைத்தட்டலை மட்டுமே பெற்றுத்தரும். நீங்கள் உண்மையில் விரும்பும் மாற்றத்திற்கு இம்மியளவும் இந்த தொணி உதவாது. இங்கே நான் நம்பிக்கை என்று சொன்னதும் உணர்வுகள் மீதான கட்டமைப்புத்தான். அந்த நம்பிக்கையை தகர்த்து தவிர்த்து விட்டு வாழும் அவசியம் நம்பிக்கையாளர்களுக்கு இல்லை. இந்த நம்பிக்கை பொய் என நிரூபிக்கும் சமூக மாற்றத்திற்கான அக்கறை உங்களுக்கு இருந்தால் முதலில் எங்கள் மீதாக வேண்டும் மாற்றங்கள் உண்மையில் உங்களது அக்கறையின் விழைவாகவே வருவது என உணர்த்துங்கள்.. சொல்லும் நாந்தேன் அறிவாளி எனும் தொனி அதை கண்டிப்பாக உணர்த்த உதவாது என்றே நம்புகிறேன் :)

வோட்டாண்டி said...

//அதாவது அந்த குழந்தையோட அப்பாம்மாவை விட உங்களுக்கு அந்த குழந்தைமீது என்ன ஒரு பரிவு பாசம்!

ஒரு குழந்தைய பக்கத்து வீட்ல அவங்க அப்பன் போட்டு அடிக்கும்போது கூட தான் பீல் பண்ணிருக்கேன்..நீங்களும் தான் பீல் பண்ணி இருப்பீங்க. நான் போய் ஏன்டா பச்சை புள்ளைய போட்டு இந்த அடி அடி கிரன்னு எந்த அப்பன் காரன்கிட்டையும் கேட்டதில்லை..ஏன்னா நீங்களே தான் பதில்ல சொல்லிடீங்களே.."அந்த குழந்தையோட அப்பன் நான்..என்ன விட உனக்கு ஏன் பாசம் பொத்துகிட்டு வருது..நீ மூடிட்டு உன் வேலைய பாரு.. இவன நான் போட்டு அடிப்பேன், கொல்லுவேன் ஏனா இவன் என் பையன்"

என்னத்த சொல்ல!!! பெற்றோர்கள் எல்லாருமே பாசமா இருந்தா ஏன் ministry of child and women developmentnu ஒண்ணு இருக்கு..நீங்க ஒண்ணு பண்ணுங்களேன்.. நேரா போய் அந்த அமைச்சகத மூட சொல்லி ஒரு போராட்டம் நடத்துங்க. அது எப்படி ஒரு அப்பா ஒரு பையன்ன அடிபதையோ, ஒரு அப்பா தன் பொண்ணை விற்பதையோ இவங்க கேள்வி கேக்கலாம்.. பெற்றோருக்கு இல்லாத அக்கறை, கேவலம் ஒரு அரசியல்வாதிக்கும் என்ன மாதிரி ஒரு மூணாவது மனிதனுக்கு எப்படி வரலாம் சொல்லுங்க??
இதே logica தான ஒரு புருஷன், பொண்டாட்டிக்கு எதிராகவும் use பண்றான்.. "அவ என் பொண்டாட்டி....blah blah".. எங்க மேலதான் தப்பு சார்.. மதம் என்றால் என்ன, எதற்காக குத்துகிறார்கள் என்று அறியாத ஒரு குழந்தைக்கு கதற கதற காது குத்துவதையும், ஒரு மகனின் விருப்பமே இல்லாமல் ஒரு தந்தை வலுகட்டையமாக அவனுக்கு மொட்டை அடிப்பதையும்( விடலை வயதில் எந்த ஒரு மகனும் மொட்டை அடிக்க விரும்ப மாட்டான் .. பள்ளிகூடத்தில் image காலி ஆகிவிடும்) பார்த்து நாங்க எப்படி பீல் ஆவலாம்.
என் வேலைய மட்டும் தான நான் பாக்கணும்..

//சமூக மாற்றக்களுக்கான அக்கறை இருந்தால் சம்பத்தப்பட்ட மக்களோடு கலந்து உறவாடி
நீங்களே உணர்திடீன்களே, செய்ய முற்பட்டா "உன் வேலைய பாருன்னு பதில் வரும்..இல்ல "என் பையன் உனக்கு என்ன அக்கறை, எனக்கு எல்லாம் தெரியும்" ன்ற பதில் வரும்.. பெரியார், அண்ணா சொல்லி எல்லாம் திருந்ததவாங்க.. கேவலம் சின்ன கலைவாணர் மாதிரி கை தட்டல் வாங்குறதுக்காக காமெடி பண்ற என்னையவா கேக்க போறாங்க??

//சொல்லும் நாந்தேன் அறிவாளி
மன்னிச்சிருங்க அப்பு.. மொட்டை அடிப்பது தவறு என்பதை மட்டும் தான் நான் கூறினேன்.. மத்தபடி பெரியார் rangekku நீங்கள் எல்லாம் முட்டாள் என்ற தொனி என் எழுத்துகளில் இருந்தால் மன்னிச்சுருங்க.. வயசுல பெரியவங்க நீங்க உங்களுக்கு நான் என்னத்த சொல்றது ??

ஓகை said...

இள்வஞ்சி,
மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் யதார்த்தமான எழுத்தை மனமாற பாராட்டுகிறேன். எந்த விதமான நக்கலோ அல்லது தனிப்பட்ட தாக்குதலோ இல்லாமல் எடுத்துக்கொண்ட தலைப்பில் சுடுகின்ற உண்மைகளை நேர் சொற்களால் விரித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் பதிவுக்கு நான் எழுத நினைத்திருந்த சில கருத்துகளை சிறந்த எழுத்துக்களால் அளித்தமைக்கு நன்றி.

தருமி said...

//delphine said...
ஏன் இந்த கொலை வெறி சார்?//

டாக்டர்,
யாரை ... இந்த ரிச்சர்ட் டாக்கின்ஸைத்தான கேக்குறீங்க ..! அதுக்குத்தான் அவர் சொல்றாரு //சமயம் தொடர்பான நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கக்கூடாது என்று நாம் நமக்குள் ஒரு வழக்கத்தைக் கைக்கொண்டிருக்கிறோம் என்பதைத் தவிரவும், பகுத்தறிவோடு சிந்தித்தால் எல்லாவற்றையும் போல் இந்த மத நம்பிக்கைகளையும் நாம் ஏன் வெளிப்படையாக விவாதிக்கக்கூடாது? (pp 43)//

தருமி said...

இளவஞ்சி,

வார்த்தைகள் வந்து விழும் நேர்த்தி எப்போதும் போல் நன்றாக உள்ளது. ஆனாலும் வார்த்தைகளை ரசிக்கும் எனக்கு உள்ளே இருக்கும் பொருள் ரொம்பவும் குறைபட்டதாகத் தோன்றுகிறது.

//உணர்வுகளற்ற சூனியத்தை எதிர்நோக்கும் தைரியம் இல்லை //

இதை நான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன். நாம் வளர்க்கப் படும் வளர்ப்பு அப்படியானதே. அதிலிருந்து தன்னையே மீட்டெடுப்பது கஷ்டமே. மதங்கள் பயமுறுத்தியே இணங்க வைக்கின்றன. வெளியில் வர முயல்கையில் முதல் தடுப்பாக இருப்பது இந்த அச்சமே.

//வெளி உலகத்தில் இந்த நெறிகளைக் கைக்கொண்டு வாழும் 99% மக்களை விட்டு விட்டு... //

அப்டியா ...?!


//100 வருசத்துல பயனுள்ளதாக எப்படி வாழலாம் என்ற நோக்கத்தை தாண்டி, முழுமுதல் உண்மையை தேடிக்கண்டறிந்து வாழ்க்கையில் அனைவரும் அறிவாளிகளாக ஆக்கும் நோக்கத்தின் பயன் என்ன என்பது எனக்கு புரியவில்லை! //

நீங்களே சொல்லிவிட்டீர்களே, இளவஞ்சி. நாம் அறிவாளிகளாக ஆகிறோமோ இல்லையோ உண்மைகளைத் தேடுவதே வாழ்க்கைதானே... இல்லை என்கிறீர்களா? அதெல்லாம் தேவையில்லை ..சொல்லிக் கொடுக்கப்பட்டதை வைத்து ..
'தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னக் சிறு கதைகள் பேசி' .. வாழ்ந்தாலே போதுமென்கிறீர்களா?

உங்கள் சைக்கிள் உதாரணம் படித்த போது செக்கு மாடுகள் பற்றிச் சொல்வது நினைவுக்கு வந்தது. அந்த மாடுகள் சுற்றிச் சுற்றிப் பழகியதால் அதை வண்டியிலோ ஏரிலோ பூட்ட முடியாது என்பார்கள். அதற்கு நடப்பதே சுற்றுப் பாதையென்றாகியிருக்கும்.

இதுதான் மதம் .. கடவுள் .. நீ இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கற்றுக் கொடுக்கப்பட்டதை விட்டு வெளியே வர கஷ்டம்தான்; ஆனால் முடியாதென்பதல்ல. விழுவது எழுவதற்கே .. விழுந்து விடுவேன் என்பதால் நடக்கவே மாட்டேன் என்பதுபோல் என் 'சைக்கிளே' எனக்கு எல்லாம்; அதை விட்டுவிட்டு வேறொன்றையும் என்னால் நினைத்தும் பார்க்க முடியாதென்பது சரியான வாதமாக எனக்குத் தெரியவில்லை.

கல்வெட்டு, உஷா ராமச்சந்திரன், நான் - சடாரென மனதுக்குள் தோன்றிய சில பதிவர்கள். நீங்கள் சொல்லும் 'சைக்கிளை' நாங்கள் தூர எறிந்துவிட்டோம்; நஷ்டமேதுமில்லை.

TBR. JOSPEH said...

சார்,

உங்களுக்கு கடவுள் இல்லையென்று வாதிட மட்டும்தான் உரிமை உள்ளது. கடவுள் உண்டு என்று நம்புபவர்களை கேலி செய்யவோ அல்லது அவர்களுடைய நம்பிக்கைகளை குறை சொல்லவோ நிச்சயம் உரிமை இல்லை.

அதுவும் மரியாளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டது மிகவும் புண்படும்படி உள்ளது.

உங்களுடைய கருத்தை மட்டும் கூறுங்கள். மற்றவர்களுடைய நம்பிக்கையை விமர்சிக்க முயலாதீர்கள்.

உங்களுடைய இந்த தொடரை படித்தாலும் இதுவரை பதில் எழுதாமல் பொறுமையாகத்தான் இருந்தேன்.

தருமி said...

டி.பி.ஆர்.,
மன்னிக்கணும். நீல வண்ணத்தில் உள்ளது மட்டுமே என் வார்த்தைகள். அதில் ஏதும் மரியாதைக்குறையாகச் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். மற்றவை புத்தகத்தின் ஆசிரியரின் வார்த்தைகளே.

ஆயினும் நீங்கள் சொல்லியிருப்பதை நினைவில் வைத்திருப்பேன்.

வோட்டாண்டி said...

மதவாதிகளின் (வறட்டு) வாதங்கள்

அடிப்படை நிலை வாதங்கள்
1. கடவுள எப்படி காட்ட முடியும்?? காத்த காட்ட முடியுமா?? வலிய நீ பாத்திருக்கியா?? மின்சாரத்த பாத்திருக்கியா?? உன் மூளைய பாத்திருக்கியா??
2. அது எப்படி இருக்குன்னு நிரூபிக்க முடியும்?? நீ இல்லன்னு நிரூபிச்சி காட்டு..
3. நேத்தி கூட எங்க குருஜி மூலமா செத்து போன எங்க தாத்தா கூட video-conferencing பண்ணிட்டு இருந்தேன்
4. தக்ஷினமூர்திக்கு கொண்டகடலை மாலை சாத்துனா படிப்பு நல்லா வரும்.. போன வாட்டி நேத்தி கடன செலுத்தல, அதனால கடவுள் தண்டனை குடுத்துட்டார்

சற்றே முன்னேறிய நிலை
1. குடும்பத்தோட குல தெய்வ கோவிலுக்கு போயிட்டு வருவதுல இருக்குர்ற சுகமே தனி, மொத்த குடும்பமும் ஒண்ணு சேந்துரும்
2. கடவுள் இருந்தா என்ன இல்லாட்டி என்ன?? எங்க வாழ்க்கையாவது நம்பிகைன்ற வண்டில ஓடிட்டு இருக்கு.. உங்க (கடவுள் மறுப்பாளர்கள்) வாழ்கை எத நோக்கி போயிட்டு இருக்கு??
3. எதுக்குமே லாயிக்கு இல்லாத, எந்த ஒரு முடிவும் தெரியாத வாழ்கை உங்களது..
4. நாங்களாவது 4 பேருக்கு நல்லது செஞ்சா எதுவுமே தப்பு இல்லைன்னு சொல்லி, சொர்கத்துக்கு டிக்கெட் reserve பண்ணி வச்சிருக்கோம், நீங்க என்னடான செத்ததுக்கு அப்பறம் ஒண்ணுமே இல்லைன்னு சொல்றீங்க.. அப்பறம் எதுக்கு வாழுறீங்க??
5. போன ஜென்மத்துல பண்ண பாவத்துக்கான பலன இந்த ஜென்மத்துல அனுபவிக்கிறோம்.. அதனால இப்ப எதுவும் பாவம் செய்யாட்டி, அடுத்த ஜெந்மதுல்ல நல்லா இருக்கலாம்.. உங்களுக்கு தான் அடுத்த ஜென்மம்னே ஒண்ணு கிடையாதே?? அப்பறம் என் அர்த்தமே இல்லாத ஒரு வாழ்கைய சிரமப்பட்டு வாழ்றீங்க..

சற்றே தெளிந்த நிலை
1. புரியுதுப்பா.. ஆனா பயமா இருக்கு.. கடவுள் துணையாக வருவார் நெனைச்சா தான் ஒரு தெம்பு கிடைக்குது
2. இவ்வளவு நாளா நம்பிட்டு இருந்தோம்ல. அதுவும் சின்ன வயசுல ரசிச்சி ரசிச்சி கேட்ட கதைகள் வேற.. என் பயனுக்கும் இந்த கதை எல்லாம் சொல்ல வேண்டாமா??
3. இல்லைன்னு சொல்லி அப்பறம் எதாவது கஷ்டம் வர்றப்ப கடவுள் முன்னாடி போய் நின்னா அப்பறம் கடவுள் கோவிச்சிக்க மாட்டாரா?? நான் எல்லாம் உள்ளுக்குள்ள கோழை
4. நம்ப சக்திக்கு அப்பாற்பட்ட விஷயத்த இன்னொரு சக்தி நிர்ணயிக்கும்.. அந்த சக்தி தான் கடவுள். அவர் மேல பரத போட்ட கொஞ்சம் tension இல்லாம இருக்கு...

இதில் அடிப்படை நிலை வாதிகளிடம் பேசி புரிய வைக்கிற அளவுக்கு எனக்கு அறிவில்லை, பொறுமையும் இல்லை..
மீதி ரெண்டு நிலைய அப்படியே உட்டுருவோம்.. அவர்களால் யாருக்கும் எந்த தீமையும் இல்லை...

ilavanji said...

வோட்டாண்டி,

தன் கோவம்தீர்க்க வடிகாலாக குழந்தையைப்போட்டு அடிப்பவனும், கட்டுன புருசன் என்ற தகுதியில் மட்டுமே “எம்பொண்டாட்டி எவங்கேக்கறது?” என அடித்துமிதிப்பவனும், தன்பொண்ணை விலைபேசி விற்கும் கேடுகெட்ட அப்பனும், தங்கொழந்தை நல்லா இருக்கனும்னு வேண்டிக்கிட்டு மாமன் மச்சானுல இருந்து அழைச்சு ஒன்னுமண்ணாக்கூடி நல்லது கெட்டது பேசி கெடா வெட்டி சாமி கும்பிட்டு குழந்தைக்கு காதுகுத்தறவனும் உங்களுக்கு ஒரே குற்றச்செயலை செய்பவர்கள் என்கிற புரிதல் இருந்தால் அதற்கு நான் எதுவும் சொல்வற்கில்லை.

// பெற்றோர்கள் எல்லாருமே பாசமா இருந்தா ஏன் ministry of child and women developmentnu ஒண்ணு இருக்கு..// நாட்டுல பொறக்கற குழந்தைங்க அத்தனையுமே இந்த கவுருமெண்டு ஆபீசுதான் பார்த்துக்குதா? இல்ல.. வக்கற்ற பாதிக்கப்பட்ட வழியற்ற குழந்தைகளை மட்டும் பார்த்துக்குதா? இந்த கவுருமெண்டு ஆபீசை இன்னும் நல்லா பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்த்துக்கறமாதிரியும் பாதிக்கப்படாத வகையில் நலவாரிய சட்டங்கள் போட்டும் முன்னேற்றலாமா ? இல்லை... சில பெத்தவனுங்க யோக்கிதை சரியில்லாததால நாட்டுல வளர்ற கொழந்தைக அத்தனைக்கும் பெத்தவனுங்க வளர்த்தறதுக்கு துப்புக்கிடையாதுன்னு அறிவிச்சு அத்தனை பேர்த்தையும் கவுருமிண்டு ஆபீசுக்கு அள்ளிக்கிட்டு வந்தறலாமா? எதைச்செஞ்சா சரியா இருக்கும்னு நினைக்கறீங்க?! ”கடவுளை நம்பிவாழும் இந்த இத்துப்போன வாழ்க்கைல இத்தனை ஓட்டைகள் இருக்கு.. அதனால இந்த நம்பிக்கைய தூக்கிகடாசீரு” அப்படிங்கறதுக்கும் “60 வருச ரிசர்வேஷன் சிஸ்டத்துல இத்தனை ஓட்டைக இருக்கு... சில கிருமிலேயருங்க ஏமாத்தறாங்க.. அதனால ரிசர்வேஷன் சிஸ்தத்தையே ஒழிச்சுக்கட்டுங்க”ன்னு சொல்லறதுக்கும் வித்தியாசங்க இருக்கறதா நான் நினைக்கலை.

நான் இங்க எம்மதந்தான் பெருசு எஞ்சாமிதான் கிங்கு மத்ததெல்லாம் போங்கு சொல்லற ஆளா இதை எழுதலை. ஏதோ சாமி நம்பளை கஷ்ட காப்பாத்துங்கற நம்பிக்கைலை சாமிய கும்பிட்டுக்கிட்டு வாழ்க்கைய ஓட்டறவிங்ககிட்ட போய் இதெல்லாம் டகால்டிங்கப்பு.. சாமிக்கு 6 தலைன்னா ஆனாசின் எந்த வாயில போடும்? யேசு நல்ல மேய்ப்பர்னா நீங்க எல்லாம் ஆடுங்களா? மாதிரியான கேள்விகள் கேட்டு அவிங்க அறிவுகண்ணை தொறக்கறதோட நிப்பாட்டிக்காம அதுக்கபறம் இப்படி சமூகமா உண்மை கண்டறிந்த அறிஞர்களாக அனைவரும் கூடி வாழ என்ன வழின்னும் சொல்லுங்கன்னுதானே கேட்கறோம். அதைச்சொல்லாம வெறும் தர்க்கரீதியாக நிறுவும் தகவல்கள் உணர்வு ரீதியாக கூடிவாழும் மக்கள் கிட்ட என்ன மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது சொல்லுங்க? குறைங்களைச் சொல்லுங்கப்பு.. மாத்திக்கறோம். அவங்கவிங்க நம்பிக்கைக்கு பங்கம் வராம... மொத்தமா தூக்கியெறின்னு நீங்க வெறுங்கையோட சொல்லறப்ப உங்க வாக்குல எங்களுக்கு நம்பிக்கை வருமா?

// பெரியார், அண்ணா சொல்லி எல்லாம் திருந்ததவாங்க..//

பெரியார் எல்லாம் கலகக்காரர் அய்யா.. சிந்தனைகளை தேங்கா ஒடைக்கற மாதிரி சொல்லலைன்னா இவனுங்க மண்டைல ஏறாதுன்னு கலகத்தை மாற்றத்திற்கான ஒரு ஆயுதமா உபயோகிச்சவர். அவரை வெறும் கடவுள்மறுப்பாளனாக மட்டும் நாமளே ஜாடில அடைச்சுப்புடாம இருப்போம். பெரியார் கருத்தை ஏத்துக்கிறமோ இல்லையோ அவரோட செயல்களின் நோக்கத்தை யாரும் சந்தேக்கிக்கவில்லை. ஏன்னா அவருடைய சொல்லும் செயலும் ஒன்று. இந்த நம்பகத்தன்மை அவரோட வாழையடிகளும் அப்படியே இருந்திருந்தா நாங்க ஏன் இப்படி பொலம்பறோம். நல்ல மாற்றினை அடைத்திருக்க மாட்டோமா?! அடுத்து அப்படியொரு தலைவன் வருகிற வரைக்கும் நாங்க எங்களுக்கு ஆறுதல் அளிக்கும் இந்த குட்டிச்சுவத்துலயே சாஞ்சிகறோம். நீயே ஏனப்பா யோசிச்சு அறிவாளியாகி தலைவனாகக்கூடாதுன்னு கேக்காதீங்க.. நானெல்லாம் வாழ்க்கையின் லட்சியமே ஒரு சராசரியா வாழ்வதுதாங்கற பிடிப்புல இருக்கறவன் :)


// வயசுல பெரியவங்க நீங்க // ஹிஹி.... எனக்கு இந்த தேர்தல்ல ஓட்டிருக்காங்கறதே டவுட்டுதானுங்...


ஓகை, ஊக்கங்களுக்கு நன்றி... நாம நாம்பளா இருந்து நினைப்பதை தெரிந்ததை எழுதறது இந்த மாதிரி நண்பர்கள் இடத்துலதானே? அதனால தருமிசாருக்குதான் நீங்க நன்றி சொல்லனும் :)


தருமிசார்,


// அப்டியா ...?!//

100கோடில 99கோடி எந்த கொலை, கொள்ளை. கற்பழிப்பு, 420 கேசுங்க இல்லாம சாதாரணமாக குடும்பம், புள்ளகுட்டி நச்சரிப்போடு வாழ்ந்தே ஆகனும்னு ஓடிக்கொண்டிருப்பதை பார்த்தால் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது :)

// உண்மைகளைத் தேடுவதே வாழ்க்கைதானே... இல்லை என்கிறீர்களா? // உண்மைதான் சார். தேடுதல் தான் வாழ்க்கை...இந்த தேடலை கடவுள் இருக்கிறாரா இல்லையாங்கறதுக்கு மட்டும் ஏன் சுருக்கிக்கனும்னுதான் கேக்கறேன். அப்துல்கலாம் இறைநம்பிக்கையுள்ள விஞ்ஞானிதான். கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையை மட்டும்கொண்டு அதை வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பாக்கி அறிவியல்பூர்வமாக அவரு ராக்கெட்டு விட்டுக்காட்டலையா? இப்பத்தின சந்திராயன் மாஸ்டருகூட குலதெய்வத்துக்கு நோம்பின்னா தவறாம வந்துடறாராம்! அவரு இந்து சாமிதான் கும்பிடுதாரு.. அவருகிட்ட ராகுவும்கேதுவும் சந்திரனை முழுங்கறாராமேன்னா சிரிக்கமாட்டாறா? அதுக்காக அவருக்கு உள்ள நம்பிக்கைய விட்டுட்டாரா?! அவர்கள் கடவுள் என்பது என் வாழ்க்கைக்கான நம்பிக்கை என்பதோடு மட்டுமே அதைத் தள்ளிவைத்துவிட்டு அவர்களுக்கு பிடித்த தேடலில் இறங்கிவிட்டார்கள். எங்க அப்பாயிக்கு முனியப்பன் சாட்சியா அவந்துணையோடு பெத்த 9 புள்ளைங்களை வளர்த்தியெடுக்கனுங்கற வெறி இருந்தது. அந்த வைராக்கியத்துக்கான பிடிப்பு முனியப்பங்கற பேரு. இப்ப எனக்கு முனியப்பன் மேல பிடிப்பும் இல்லை வெறுப்பும் இல்லை. ஆனா முனியப்பனை சாக்கா வைச்சு வருசத்துக்கு ஒருக்கா ஒரு 200 பேரு கூடிச்சாப்படறது மனசுக்கு புடிச்சிருக்கு. என்ன செய்ய? “ஆடுங்கடா என்னைச்சுத்தி..நான் அய்யனாரு வெட்டுக்கத்தின்னு” ஆடற நம்பூட்டு பொடுசுகளின் அழகுக்காகவேனும் இளைய தளபதியையும் ரசித்துவிடலாம்தான் போலிருக்கிறது அப்படின்ன நம்ப அய்யனாரு கூற்றைத்தான் இங்க நான் சொல்லிக்கறது :) இதில்லாம கடவுள் இருக்கிறாறா இல்லையா என் ஆராய்து தெளியாத அத்தனைபேரும் தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னக் சிறு கதைகள் பேசித்தான் வாழ்கிறார்கள்... அவர்களுக்கு தேடலே கிடையாது என்றா நம்பறீங்க?

சைக்கிள் மேட்டரு உங்களுக்கு செக்குமாட்டை நினைவுக்கு கொண்டுவருது. எனக்கோ அது மாடு கழுத்துல பூட்டுன மணியாட்டம் தான் தோணுது. காதோரம் கிணுகிணுக்கிற வெங்கல ஓசை தரும் நாம தனியா இல்லைங்கற நம்பிக்கைல அவங்கவிங்க ராஜபாட்டைல அவங்கவிங்க நடக்கறதுதான். நீங்க எல்லாம் சைக்கிளை தூர எறிஞ்சிட்டீங்க.. ஏனெனில் உங்க தேடலின் நோக்கம் மீண்டும் நடந்து பார்ப்பதும் சைக்கிளை விட நல்ல வாகனத்தை கண்டுபிடிப்பதுமாக இருப்பதால இருக்கலாம். நாங்க போகவர்றதுக்கு சைக்கிளும் அதைக்கொண்டு வாழ்க்கையை ஓட்ட நாங்க விரும்பற எங்க தேடல் உள்ள பாதைல சைக்கிள் துணையா இருக்குங்கற நம்பிக்கைல அப்ப்பப்ப தேவைப்பட்ட ரிப்பேருங்களை செஞ்சுக்கிட்டு ஓடிக்கிட்டு இருக்கோம்! :) உங்க தேடலோடு எங்க தேடல் ஒத்து வரலைங்கறதுக்காக, உங்க நம்பிக்கைகளோடு எங்க நம்பிக்கைகள் ஒத்துவரலைங்கறதுக்காக, உங்க அறிவுபூர்வமான வாதங்களோடு எங்க நம்பிக்கைகள் ஒத்துப்போகலைங்கறதுக்காக நீங்க எங்களைப்பார்த்து “அறிவிழிகளே.. பொய்யான நம்பிக்கைகளை விடுத்து உண்மையான உண்மையைத் தேடுங்கள்!” என்பதற்கும் தெருமுக்கிலே நின்றுகொண்டு “பாவிகளே! உங்கள் பாவங்களைக் கழுவ யேசுவை நாடுங்கள்!” என கூவுபவனுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக என்னறிவுக்கு எட்டவில்லை! இந்த இரண்டிலுமே சுட்டப்படுபவைப்பற்றி எந்த அக்கறையும் இல்லை என்பது என் தாழ்மையான எண்ணம்.

வோட்டாண்டி said...

//இருந்து அழைச்சு ஒன்னுமண்ணாக்கூடி நல்லது கெட்டது பேசி கெடா வெட்டி சாமி கும்பிட்டு குழந்தைக்கு காதுகுத்தறவனும் //

அனைவரும் குழந்தையின் விருப்பம் இல்லாமல்.. தேவை இல்லாத ஒன்றை அக் குழந்தையின் மீதி திணிபவர்கள் தான். காது குத்துவது, 10 வயது மகனை தீ மிதிக்க சொல்வது,(அல்லது தீ மிதித்தால் நல்லது என்று brain wash செய்து மிதிக்க வைப்பது), தலையில் தேங்காய் உடைப்பது, சாமியாரிடம் சாட்டை அடி வாங்க சொல்வது.. இதெல்லாம் தேவையா?? படிப்பை திணிப்பது தேவை இல்லாத ஒன்னனு பதிலுக்கு கேக்காதீங்க..
மகனிடம் ஒரு தந்தை மொட்டை அடிக்க இஷ்டமானு? கேட்டுட்டு மொட்டை அடிகிரதுல எனக்கு எந்த பிரச்னையும் இல்ல...
உங்கள் குடும்பம் ஒண்ணா கூடி , மகனுக்கு காது குத்துவதையோ, மொட்டை அடிப்பதையோ தவிர்த்து வெறும் குல தெய்வத்துக்கு மட்டும் பூஜை செய்து திரும்பினால் எனக்கு மகிழ்ச்சியே..


//ஹிஹி.... எனக்கு இந்த தேர்தல்ல ஓட்டிருக்காங்கறதே டவுட்டுதானுங்...
உள்ள போய் பார்த்தா அந்த குழந்தையே நீங்க தான் சார்.. சத்தியராஜ் காமெடி பாத்து இருக்கீங்களா??

கல்வெட்டு said...

இளவஞ்சி,
நீண்ட பதில்... நன்றி!
உங்கள் நம்பிக்கைகளும் வாழ்க!

**

சைக்கிள் கேப்பில் ஆட்டோ வோட்டும் உங்களின் சைக்கிள் விசயத்திற்கு.....

சைக்கிள் நிஜமான ஒன்று. ஆத்திகன்,நாத்திகன்,குருடன்,திருடன்,மொள்ளமாரி,பூசாரி,முடிச்சவிக்கி...என்று அனைவராலும் உணரப்படும் ஒரு பொருள். இதை நம்பிக்கை மட்டும் சார்ந்த கடவுள் என்ற கற்பிதத்துடன் ஒப்பிடுவது சரியா என்று மட்டும் பார்த்துக் கொள்ளவும்.

**
//ஏதோ சாமி நம்பளை கஷ்ட காப்பாத்துங்கற நம்பிக்கைலை சாமிய கும்பிட்டுக்கிட்டு வாழ்க்கைய ஓட்டறவிங்ககிட்ட போய் இதெல்லாம் டகால்டிங்கப்பு..//


//இப்படி சமூகமா உண்மை கண்டறிந்த அறிஞர்களாக அனைவரும் கூடி வாழ என்ன வழின்னும் சொல்லுங்கன்னுதானே கேட்கறோம். //

ஒரே தெருவில் இளவஞ்சியும்,கல்வெட்டும்,வோட்டாண்டியும்,உஷாவும்,தருமியும்...இன்னபிற மக்களும் வாழ்கிறார்கள். உண்மையான மனிதமும் நட்பும் இருக்கும் பட்சத்தில் எனக்கு ஒரு பிரச்சனை என்றால் இவர்களிடம் உதவி கேட்பேனா? அல்லது திருப்பதிபோய் மொட்டைபோட்டு அழகி ஐஸ்வர்யா சிறப்புத் தரிசனம் செய்து போன பின்னால், காத்து இருந்து ஜருகண்டி கேட்பேனா?

உதவி செய்பவன்தான் கடவுள், குறைகளைக் கேட்பவன்தான் கடவுள், வாழ நம்பிக்கைதருபவன்தான் கடவுள்.....இந்தக் காரணத்திற்காகவே நான் சாமி கும்பிடுறேன் என்றால்... நீங்களும் நானும் கடவுள். சாதரணமான மனிதப் பண்புகளும் நட்பும் குழு வாழ்க்கையை சுவராசியமாக்கும்.

தூரத்தைக் கடக்க சைக்கிள் பயன்படுத்திய நீங்கள் பைக்,கார்,விமானம் என்று எந்தக் கேள்வியும் இல்லாமல் மாறுகிறீர்கள்.. ஆனால் நம்பிக்கை சர்ந்த விசயங்களை மட்டும் கேள்வி கேட்க / மாற்றிக் கொள்ள பயம் கொள்கிறீர்கள்.

பஸ்ஸில் அடிபட்டுக் கிடப்பவனைக் கண்டுக்காமல் (நமக்கேன் போலீஸ் வம்பு என்று ) தாண்டிச் செல்லும் ஐயப்ப சாமி பக்தகேடிகளைவிட உதவிக்கு ஓடி வரும் எந்த உள்ளமும் நல்ல உள்ளமே!

கல்வெட்டு said...

//“அறிவிழிகளே.. பொய்யான நம்பிக்கைகளை விடுத்து உண்மையான உண்மையைத் தேடுங்கள்!” என்பதற்கும் தெருமுக்கிலே நின்றுகொண்டு “பாவிகளே! உங்கள் பாவங்களைக் கழுவ யேசுவை நாடுங்கள்!” என கூவுபவனுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக என்னறிவுக்கு எட்டவில்லை!//



சரியான ஒப்பீடு..

என்னள‌வில் உங்களின் சந்தோசத்தை கேவலப்படுத்தவோ கேலி செய்யவோ இல்லை. ஆனால் 'கடவுளைக் கடந்தவன்' அயோக்கியன் அவர்கள் பாவிகள் கெட்டவன் , நம்பிக்கை இல்லாதவன் மனுசனா? என்றும் "இது பத்தினி வாழும் வீடு" என்று நம்பிக்கையாளர்கள் அவர்கள் வீட்டில் பேர்ப்பலகை வைக்கும் போது 'கடவுளைக் கடந்தவர்களும்' சவுண்டு விட வேண்டியதாகிறது. :-))))

ramachandranusha(உஷா) said...

என் பெயரும் அடிப்படுவதால்
ஆஜர் :-)
தருமி, கல்வெட்டு ! நீங்க சொன்னதுல நிறைய ஹைலைட் செய்யலாம். ஆனால் ஓரே
வார்த்தையில் சொன்னால் பயம். எப்பொழுதாவது கட்வுள் இல்லை என்றால் எதிராளி, பெரும்பாலும் பெண் , அவர்கள் முகம் போகும் போக்கைப் பார்க்கணுமே :-))))))
கடவுளை வேண்டுவது, சுயநலமாய் தோணுகிறது. சரிதான் ஒலகமே நல்லா இருக்கணும் என்று
வேண்டிக் கொள்ளலாம் என்றால் அது அதை விட அபத்தமாய் இருக்கிறது. இந்த வேண்டிதலில் ஏதாவது பொருள் இருக்கிறதா?
வாழ்க்கை என்றால் நல்லது கெட்டதுதான். நன்மையோ, கஷ்டங்களோ பேலன்ஸ்ட்டா இருந்தால் கடவுள் தேவையில்லை. பையனுக்கு பதினெட்டு வயசாகப் போகுது. பாஸ்போர்ட் ரென்யூ
செய்யணும். ஏதிஸ்ட் ன்னு போட்டுக்க போகிறேன்னே குதிச்சிக்கிட்டு இருக்கு.
பதினெட்டு வயதில் கொஞ்சம் சிந்திக்கிற பிள்ளைகள் சாமியார் ஆவது அல்லது கடவுள் இல்லை என்பது மற்றும் கம்யூனீஸ்ட் ஆகிறேன் என்பதெல்லாம் பொதுவாய் நடப்பதுதான். வாழ்க்கையில்
நல்லது கெட்டது பார்த்துவிட்டு, மனசுல திடம் வந்ததும் சொல்லிக் கொள் என்று சொன்னேன்.
நான் முழுக்க கடவுள் நம்பிக்கையை தூக்கி எறிந்தது நாற்பது வயதுக்கு பிற்குதான். ஆனால் சின்ன வயசில் இருந்தே எந்த பூஜையும் செய்ய மாட்டேன் என்று மறுத்திருக்கிறேன். அந்த எண்ணம் ஏன் தோன்றியது என்று பல முறை என்னையே கேட்டுக் கொள்கிறேன்.
ஆனால் தருமி சார், பிராத்தனைகள், நம்பிக்கை பற்றி அடுத்த பதிவு போட்டு இருக்கீங்களே,
அதுல எனக்கு ஒப்புதல் இல்லை. அங்க வரேன் :-)

வால்பையன் said...

//உதவி செய்பவன்தான் கடவுள்,//

இந்த வார்த்தையை கடை பிடிக்க வேண்டுமென்றால் எத்தனை கடவுளுக்கு சூடம் ஏற்வது!


கல்வெட்டு
தமாசுக்கு சொன்னிகளா இல்ல சீரியசாவா

மனிதனாக வாழ என்ன தேவை?

என் பொண்ணு பச்சை காபி குடிச்சிருக்கிங்க்ளான்னு கேக்குறா
நான் போறேன் அது எதுவா இருந்தாலூம்

என்னா என் பொண்ணுக்கு கடவுள்ன்னா என்னானே தெரியாது

மடிகணிணியில் டைப் பண்ண முடியல

ஆனா இதை பார்த்து டைப் பண்ணாம்ன இருக்க முடியல

கல்வெட்டு said...

வால்பையன்,
நான் சொன்ன பதில் உதவி/ஆறுதல்/நம்பிக்கை போன்றவற்றுக்காக மக்கள் கடவுள் என்ற கற்பிதத்தில் நம்பிக்கை வைக்க வேண்டியுள்ள‌து, என்று இளவஞ்சி சொன்னதற்கான பதில்.

"உதவிகள் செய்யும் நல்ல உள்ளங்களே கடவுள்" என்று சொன்னால் அதற்கு சூடம் ஏற்றவேண்டுமா என்று சொல்லும் உங்களை என்ன செய்வது ? நமது மூளை அதன் database ல் இருந்துதான் எதனையும் முதலில் ஒப்பிடப்பார்க்கும். Learning to unlearn அப்படீன்னு தொரைமார்கள் சொல்வார்கள். கடவுள் என்ற வார்த்தையைச் சொன்னவுடன் மூளை அறிந்த சூடம் உங்களுக்கு நினைவிற்கு வந்தால் நான் என்ன செய்ய? :-))

சீனு said...

//1981-ல் இரண்டாம் ஜாண் பால் என்ற போப்பாண்டவர் ஒரு கொலை முயற்சியில் குண்டடி பட்டு மயிரிழையில் தப்பினார்.( நம்ம ஆளு எம்.ஜி.ஆருக்கு நடந்த மாதிரியேதான்!!) அதற்கு 'அன்னையின் கருணைக் கரங்கள் அந்த துப்பாக்கிக் குண்டை (விலகும்படி) வழிநடத்தியதாலேயே' அவர் தப்பித்ததாகக் கூறினார். அன்னையின் கரங்கள் அவருக்குக் காயம் ஏற்படாமலேயே இன்னும் கொஞ்சம் சரியாக 'வழிநடத்தியிருக்கலாமே'!//

:)

Post a Comment