Saturday, October 11, 2025

ஏனிந்த நூலை வாசிக்க வேண்டும்?

 

நீங்கள் கட்டாயம் இந்த நூலை வாசிக்க வேண்டுமென்பதற்கு நான் தரும் சில காரணங்கள்:






-    ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்கை வைத்து 16 பேர் கைது செய்யப்பட்டன
ர். அவர்களனைவரும் அதுவரை ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும், சிறைவாசிகளின் நலனுக்காகவும், பல்கலைக் கழகங்களில் முறையான இடப்பங்கீடு வேண்டுமென்பதற்காகவும், மனித உரிமைகளுக்காவும் விடாது, தொடர்ந்து தங்கள் சொந்த நலனையும் துறந்து போராட்ட வீரர்களாக இருந்தவர்கள். இவ்வாறு மக்கள் நலனுக்காகப் போராடும் பெரு மக்களை அரசு ஏன் காரணமின்றி கைது செய்து நீண்ட நாள் சிறையிலடைத்துள்ளது என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாக நம்முன் நிற்கிறது-

-    கைது செய்யப்பட்டவர்களையும், அது போன்ற வேறு சில போராட்டக்காரர்களையும் நம்மை ஆளும் அரசு “urban Naxalitesஎன்று பட்டம் சூட்டி, அதில் சிலரைக் கொலையும் செய்து, பலரைச் சிறையிலடைத்து பெரும் தண்டனை வழங்கியுள்ளது நம் அரசு. Lankesh (2017),  Narendra Dabholkar (2013), Govind Pansare (2015), Malleshappa Kalburgi (2015) போன்றவர்கள் இடதுசாரிகளாக இருந்ததால்,  அல்லது வலதுசாரிகளையும், இந்துத்துவாவினரையும் அவர்கள் எதிர்த்தமைக்காகவே கொல்லப்பட்ட தியாகிகள் அவர்கள். கைது செய்யப்பட்ட 16 பேரும் இதே காரணங்களுக்காகவே கைது செய்யப்பட்டனர்.

-    நக்சலைட்டுகளில் பலரும் ஆதிவாசிமக்களின் உரிமைகளுக்காகப் போராடுப்வர்களாகவே உள்ளனர். இந்திய  நாட்டுச் சட்டத்தின்படி ஆதிவாசி மக்கள் அவர்கள் வாழும் இடத்தின் மீது முழு உரிமை கொண்டவர்கள். ஆனால் அரசு தனியார் வசம் இந்த நிலங்களைக் கொடுத்து, அனைத்து இயற்கை கனிம வளங்களைக் கொள்ளையடிக்க உறுதுணையாக உள்ளது. இதை எதிர்த்து ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் காவல் படையின் துப்பாக்கிகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்கள்.

-    ஸ்டேன் சாமி என்ற கிறித்துவப் பாதிரியார் தனது 83வது வயதில் 2020 ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இவர் முன்பே தனது குரு மடத்திலிருந்து விலகி, ஆதிவாசி மக்களின் குடிலில் தங்கி அந்த மக்களுக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். இவரே ஆதிவாசி மக்களுக்குத்தான் அவர்கள் வாழும் பகுதியின் உரிமை உள்ளது என்ற சட்டத்தை வெளியுலகிற்குக் கொண்டு வந்து, அந்த மக்களுக்கு ஒரு புதிய பாதையைக் காண்பித்தார். இவர் நரம்பு வியாதியால் பாதிக்கப்பட்டு, கை நடுக்கம் கண்டதால் straw tumbler ஒரு கட்டாயத் தேவையாக இருந்தும், அப்படி ஒரு தம்ளரைக் கொடுக்க காவல் துறைக்கு மனமில்லாமல் போனது. 50 நாட்கள் தொடர்ந்து போராடி ஒரு தம்ளரை அவருக்குப் போராட்டக்காரர்கள் பெற்றுக் கொடுத்தார்கள். காவல்துறையினரும், மற்றவர்களும் இந்த அளவு கடினமான மனதோடு எப்படியிருக்க முடியும் என்பது எனக்கு இன்னமும் பெரும் ஆச்சரியமாக உள்ளது.

-    6,7ம் இயல்களில் எவ்வாறு கைது செய்யப்பட்ட பலரின் கணினிகள் காவல்துறையின் கைப்பிடிக்குள் ரகசியாகக் கொண்டு வரப்பட்டு, பல்வேறு போலிக் கடிதங்களை அதற்குள் கள்ளத்தனமாக உள்ளேற்றி, அவைகளைச் சான்றுகளாக வைத்து அதை வைத்து அவர்களைக் கைது செய்தார்கள் என்ற செய்தி நாம் ஒரு குடியரசு நாட்டில் தான் வாழ்கிறோமா இல்லையா என்ற கேள்வியை வாசிப்பவர்களின் மனதில் எழுப்புகிறது. இதழியலாளர்கள் பலர் இந்த மர்மத்தை எப்படிப் போட்டுடைத்தார்கள் என்பதை இந்த இரு இயல்களிலும் வாசிக்கும்போது மனம் பதை பதைக்கின்றது.

-    கைது செய்யப்பட்ட 16 பேரில் நால்வர் கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்; மற்றப் போராளிகளில் கவிஞர், கலைஞர்கள், வனவளப் பாதுகாவலர்கள், சிறைவாசிகளின் நலன் பேணும் ஆர்வலர்கள், இதழியலாளர்கள், வழக்கறிஞர்கள் என்றிருந்தனர். (அவர்களும் பேராசிரியர்கள் .. நானும் ஒரு பேராசிரியன் என்று சொல்லவே தயக்கமாக உள்ளது. அத்தனை உயரத்தில் அவர்களுக்கு என் மனதில் இடம் கொடுத்தேன்.)

-    ஒரு பெண்மணி. இங்கிலாந்தில் தன் இளைய வாழ்வை ஆரம்பித்த இவர், இந்தியா வந்த பின் தன் அமெரிக்கக் கடவுச் சீட்டை வேண்டாமென்று திரும்பக் கொடுத்து விட்டு, இங்கு தொழிலாளர் நலனுக்காக அவர்களோடேயே ஒற்றை அறை உள்ள வீட்டில் உடன் தங்கியிருந்து வாழ்ந்தார் என்பதைப் படிக்கும் போது நாம் நமது கண்ணீரோடு போராட வேண்டியதிருக்கும்.

-    இதைவிட சற்றே குறைந்த பக்கங்கள் கொண்ட வேறொரு நூலை மொழிபெயர்க்க ஒரு முழு ஆண்டை எடுத்தேன். ஆனால் இந்த நூலை மொழிபெயர்க்க ஆரம்பித்த பின், யாரோ ஒருவர் பின்னாலிருந்து ஓரழுத்தம் கொடுத்தது போலுணர்ந்து, விரைந்து முடித்தேன். நான்கு மாதங்ளில் முடித்த போது நானே வியந்து நின்றேன். உள்ளூற ஒரு வெறி வந்து என்னை உந்தித் தள்ளியது.

-    நீங்களும் வாசித்து விடுங்கள் ....


 

-

 


No comments:

Post a Comment