யாரிந்த ரோனா வில்சன்?
ரோனா வில்சன் - கைதிகளின் உரிமைக்காகப் பாடுபடும் போராளி. டெல்லிப் பல்கலைக் கழகத்தில் ஓர் ஆய்வாளர்.
நமது நாட்டின் பிரதம அமைச்சரைக் கொல்லச் சதி செய்யும் திட்டத்தை இவரது கணினியில் கிடைத்த ஒரு தகவலினால் பலரைக் கைதுசெய்தனர். அவ்வளவு ‘பயங்கரமான ஆளா’ இவர்?
இவர் கைது செய்யப்படும் பொழுது அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அமைப்பின் (Committee for Release of Political Prisoners - CRPP)உறுப்பினராக இருந்தார். என்னே ஒரு நகைமுரண்!
ரோனாவின் போராட்டம் அரசியல் கைதியான பேராசிரியர் ஒருவரை விடுதலை செய்வதற்காக ஆரம்பித்தது. இறந்து போன சையத் அப்துல் ரஹ்மான் ஜிலானி டெல்லி பல்கலைக்கழகத்தில் அரபி மொழி பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தவர். காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் போராடியவர் ஜிலானி. ஆனால் அவர் 2001 ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டவர் என்று கைது செய்யப்பட்டு மரண தண்டனை என்று தீர்ப்பிடப்பட்டார் . இறுதியில் அவர் மேல் உள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாததால் விடுதலை செய்யப்பட்டார்.
ரோனாவிற்கு இந்த அமைப்பு, போராட்டம் எல்லாவற்றிலும் ஈடுபட்டிருந்தாலும் அவர் முதலில் ஓர் ஆராய்ச்சி மாணவர். அவரது ஆர்வமும், அவரது ஆய்வின் தலைப்பும்:“இஸ்லாமியர் ஒரு மாற்றான் என்பதொரு கற்பனை; மாநில அரசு, சட்டம், அரசியல் இணைந்து நடத்தும் இன்றைய இந்தியாவில் புதிய பெயர் வைக்கும்போக்கு”. எப்படி ஒரு சாதாரண இஸ்லாமியர் ஒரு“தீவிரவாதியாக”க் காட்டப்படுகிறார்; சட்டங்கள் எப்படி இஸ்லாமியரை ஒரு போராளியாக மாற்றப் பயன்படுகின்றன? எங்ஙனம் இஸ்லாமியரை மிகத் திறமையாக ஒரு“மாற்றானாக”இனங்காண்பிப்பதை அரசுகள் செய்து முடிக்கின்றன? ஆனால் அதே நேரத்தில் ஒரு இஸ்லாமியப் பெண்ணைப் பாவப்பட்டதாகச் சித்தரித்து, அவளைக் காக்க வேண்டிய தேவை இந்திய அரசின் வேலை என்ற கருத்தையும் எப்படி வளர்த்து விடுகிறது? இந்தக் கேள்விகளின் பதில்களோடு, அவர் எவ்வாறு இஸ்லாமிய விரோதம் என்ற மனப்பான்மை மூலம் இந்துத்துவாவை இந்திய மண்ணில் உறுதிப்பட வைக்கின்றது என்பதையும் தன் ஆய்வில் கண்டுணர ஆவல் கொண்டார்.
No comments:
Post a Comment