Sunday, October 09, 2005

89. ஜெயிலுக்கு போகலாம்…வாரீகளா…?…2

*

நேரடிச் சம்பளம், சில வட இந்திய மாநிலங்களில் வழங்கப்பட்ட U.G.C. பரிந்துரை செய்த சம்பள உயர்வு என்ற இரு கோரிக்கைகளும் முந்திய போராட்டத்தால் கிடைத்தது. சந்தோஷத்தில் மிதந்த கல்லூரி ஆசிரியர்களுக்கு அடுத்து ஒரு பேரிடி காத்திருந்தது. என் கல்லூரி நாட்களுக்கு முன்பு, பள்ளிப் படிப்பு 11 வருடமும் (5+6), கல்லூரியில் முதல் இரண்டு வருடம் intermediate course என்றும், பின் இரண்டு வருடப்படிப்பாக degree-யும் இருந்து வந்தன. அதன் பின் 60-களின் ஆரம்பத்தில், கல்லூரியில் மட்டும் ஒரு மாற்றம் - பள்ளியில் அதே 11 ஆண்டுகள்+1(Pre-University class)+3 (degree course) என்றானது. இந்த கணக்கு 78-79-ல் X (10)+ XII(2) என்று பள்ளிப்படிப்பும், கல்லூரிகளில் degree courses(3 years) என்றும் மாறியது. அப்போதெல்லாம் கல்லூரிகளின் பலமே இந்த pre-university (P.U.C.) என்ற வகுப்புகளை வைத்துதான். உதாரணமாக அமெரிக்கன் கல்லூரியிலேயே 40% மாணவ எண்ணிக்கை இந்த வகுப்புகளை வைத்தே இருக்கும். 8 sections with each seciton having 90-100 students; திடீரென இந்த எண்ணிக்கை குறைந்தால் மற்ற பல விழைவுகளோடு, முக்கியமாக ஆசிரியர் எண்ணிக்கை என்ன ஆகும்? கல்லூரி ஆசிரியர்களில் பாதிக்குமேலேயே வெளியே அனுப்பப் படும் நிலை வந்தது.

‘எடுத்தோம்; கவிழ்த்தோம்’ என்ற வகையில் முடிவெடுப்பதுதான் நமது அரசியல்வாதிகளின் நிலைப்பாடாகவே இருந்து வந்திருக்கிறது. இப்போதுகூட பாருங்கள் - இந்த ஆண்டு entrnace exam எல்லாம் எழுதி முடித்த பிறகு குட்டையைக் குழப்பினார்கள். XII வகுப்புகள் ஆரம்பித்த பிறகு பாடத்திட்ட மாறுதல்கள் பற்றிய அறிவிப்புகள் வருகின்றன. பொறியியல் கல்லூரி சேர்க்கை முடிந்த பிறகு இன்னும் ஆயிரம் அதிக இடங்கள் கல்லூரிகளுக்கு அளிக்கப்படுகின்றன. சொல்லிக்கொண்டே போகலாம். அன்றும் இதே நிலைதான். எண்ணித் துணிக என்பது மாறி, துணிந்த பின் ‘எண்ண’ ஆரம்பிக்கிறார்கள்.

அன்று பல கல்லூரிகள் P.U.C. வகுப்புகளை மட்டுமே நம்பி கல்லூரிகளை ஆரம்பித்து நடத்தியும் வந்தார்கள். இந்நிலையில் அந்த வகுப்புகள் அப்படியே நீக்கப் படுமானால், கல்லூரிகளுக்கு பெரிய இழப்புகள், ஆசிரியர்களுக்கு வேலை காலி என்ற நிலைகளுக்கு மறுதீர்வு என்ன என்பதே சிந்திக்கப் படவேயில்லை. தங்கள் கழுத்துக்குக் கத்தி என்ற நிலையில் ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தில் குதிப்பது தவிர வேறு வழியின்றி 78-ன் கடைசியிலோ, 79-ன் ஆரம்பத்திலோ மறுபடியும் மறியல், வேலை நிறுத்தம், சிறை நிரப்புதல் என்ற பழைய, பழகிய போராட்ட வழிகளில் செல்ல முடிவெடுத்தோம்.

இம்முறையும் போராட்டம் ஆரம்பித்து சிலர் சிறை செல்ல, நடுவில் ஒரு தொய்வு ஏற்பட்டுவிட்டது. இதனால், முதலில் சிறை சென்ற ஆசிரியர்கள் ஏறத்தாழ 15 நாட்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் எந்த வித தனிச்சலுகைகளும் இல்லாமல் மற்ற கைதிகள் போலவே நடத்தப் பட்டனர். பகலில் மட்டும் வெளிய இருக்க அனுமதி தரப்பட்டு, இரவில் கைதிகள் போலவே ‘செல்’ உள்ளே வைத்துப் பூட்டி விடுவார்களாம். அங்கே உள்ளேயே திறந்த மூத்திரப் பிரை. அந்த நினைவே அவர்களை அருவருப்புப்பட வைத்ததாம். இந்த நிலையில் அந்த நாட்களில் ஒரு நாளில் உள்ளே இருந்த கைதிகள் அவர்களுடைய குறைதீர்க்க போராட்டம் ஒன்று நடத்தி, அதில் கைதிகளுக்கும், காவலர்களுக்கும் நடந்த போராட்டத்தில் உள்ளே இருந்த ஆசிரிய நண்பர்கள் தங்களைத்தானே செல்லுக்குள் வைத்துப் பூட்டிக்கொண்டார்களாம்.

15 நாள் தனியே இருந்த பிறகே மற்றவர்களும் போராட்டத்தில் இறங்கி, சிறைக்குள் சென்றோம். முதலிலேயே சிறை சென்றவர்கள் இம்முறை அமெரிக்கன் கல்லூரியிலிருந்து நால்வர் - நால்வருமே இளைஞர்கள்; அதில் ஒருவருக்குத் திருமணமாகி சில நாட்களே ஆகியிருந்தது - முதலிலேயே உள்ளே சென்று விட்டார்கள். நாங்கள் உள்ளே வந்த பிறகே அவர்களுக்கு உயிர் வந்ததாம். அவர்கள் ஏற்கெனவே பல நாட்கள் உள்ளேயே இருந்ததாலும், கைதிகள் போலவே நடத்தப்பட்டதாலும் அவர்களுக்கு ‘ஆயுள் கைதிகள்’ என்று நாமகரணம் செய்தோம். பல வருடங்களுக்கு அந்த பெயர் நிலைத்து நின்றது.

சிறை நாட்கள் முதலில் நன்றாகவே இருந்தது. எண்ணிக்கை நிறைய இருந்தமையால் மரத்தடிகளில் பெரிய பந்தல் எங்களுக்காகப் போடப்பட்டது. ‘செல்’களுக்கு முன்னால் இருந்த இந்த பந்தல்கள் வெயிலுக்கு ஓரளவு பாந்தமாக அமைந்தன. ‘செல்’லுக்குள் எங்கள் படுக்கைகள், பைகள் ஒரு மூலையில். இன்னொரு மூலயில் shift போட்டு எங்களைப் பார்க்க வரும் மற்ற ஆசிரிய நண்பர்கள் கொண்டுவரும் பழங்கள், பிஸ்கோத்துகள். சமைத்த உணவுகள் உள்ளே வர தடை. ஆனால், அது பெரிய இழப்பல்ல; ஏனெனில் உள்ளே கொடுக்கப்பட்ட மதிய உணவு நன்றாகவே இருந்தது. உள்ளே வந்த ஓரிரு நாட்களில் சிறைச் சட்டங்களில் எங்கள் தலைவர்கள் சிலர் கைதேர்ந்தவர்களாக ஆனார்கள். தலைக்கு இவ்வளவு அரிசி,காய்கறி, பருப்பு என்ற அளவுகளைத் தெரிந்து கொண்டு, அந்த ‘ரேஷன்களை’ ஜெயிலர்களிடமிருந்து வாங்கி, சமையல் தெரிந்த அல்லது அதில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் சிலரின் மேற்பார்வையில், உள்ளேயிருந்த கைதிகளில் சிலரைச் சேர்த்துக்கொண்டு நாங்களே சமையல் செய்தோம். 600 பேருக்கு மேல் அப்போது உள்ளே இருந்தோம்.

காலையில் ஒரு நல்ல காப்பி, (டிபனைப் பற்றி அதிகமாக யாரும் கண்டுகொள்வதில்லை.) மதியச் சாப்பாடு ஒரு கப் சோறு, ஒரு கூட்டு, சாம்பார், ரசம், நல்ல தயிர். ஆனால் இதில் ஒரு பிரச்சனை. குழம்பில் ஆரம்பித்து ரசம் தயிர் என்று வருவதற்குள் பல சமயங்கள் தயிர் காலியாகிவிட்டது. தயிர் பிரியர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சனையாகி விட்டது. எப்படி சமாளிக்கலாமென யோசித்து, ஒரு திட்டம் தீட்டினோம். இருவர் இருவராகச் சேர்ந்து கொண்டு ஒரு தட்டில் கப் சோற்றுடன் சாம்பார், ரசம் இரண்டையும் ஒரே சமயத்தில் ஒருவர் வாங்கிக் கொள்வது, அவரின் பார்ட்னர் இன்னொரு பிளேட்டில் இருவரது ரேஷன் தயிரை வாங்கிக் கொள்வது… பிறகென்ன ஒரே தட்டிலிருந்து சாப்பிட்டுக் கொள்வோம். இப்படி சாப்பாட்டுக்காக ஜோடி சேர்ந்து கொண்டவர்களுக்கு -எல்லோரும் இப்படி செய்யவில்லை; சிலரே அப்படி - S.P. என்று பெயர் வைத்துக்கொண்டோம்; அப்டின்னா, ‘சோத்துப் பார்ட்னர்’ என்று பொருள்! பிந்திய ஆண்டுகளில், மூட்டாவை வைத்தே கருத்து வேறுபாடு கொண்டு மாறுபட்ட நிலையில், எதிர் எதிரணியில் நின்று கொண்டிருந்த போதும் ‘அந்தப் பழைய’ நினைவுகளின் தாக்கத்தால்’ மற்றவர்களிடம் இருந்ததை விடவும் என் S.P.-உடன் நான் தோழமையோடிருந்தேன். எல்லாம் ஒன்றாக ஒரே தட்டில் உண்ட பாசம்தான்! மாலையில் அது என்ன combination என்று தெரியாது; ஒரு கடலை உருண்டையும், தேநீரும்… சிலர் கடலை உருண்டைகளுக்கு விசிறிகள்; சிலருக்கு அது பிடிக்கவில்லை. அதனால், தேநீர் குடுத்தவுடன் பயங்கரமாக ‘பண்டமாற்று’ நடக்கும். சிலர் உருண்டைகளைப் பத்திரமாக வைத்திருந்து வெளியில் உள்ள நண்பர்களுக்கு, பார்வையாளர் நேரத்தில் ‘கள்ளக் கடத்தல்’ செய்வதுண்டு.

காலை, இரவு உணவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எப்படி கொடுப்போம்; அதுதான் மூலையில் பழமும், பிஸ்கட்டும், ரொட்டி வகைகளும் நிறைந்திருக்குமே. ஆனால், உள்ளே வந்த எங்கள் ஆசிரியர்கள் இருவர் - ஒருவர் தமிழ்த்துறை பேரா. தினகரன், இன்னொருவர் ஆங்கிலத்துறை - பேரா. பத்மனாபன் நாயர் - உள்ளே இருந்த அத்தனை நாட்களிலும் ஒரு தடவைகூட உள்ளே வழங்கப்பட்ட உணவு வகையறாக்களைத் தொடவும் இல்லை. ஏறத்தாழ 20 நட்களுக்கும் மேலாக ‘சோறில்லா வாழ்வாகப்’ போய்விட்டது. முதலாமவரின் உணவுப் பழக்கம்: பன் ஒன்றை எடுப்பார்; கையாலேயே இரண்டாகப் பிரித்து, பச்சை வாழைப்பழத்தை நடுவில் வைத்து அவர் செய்யும் ‘banana sandwich’ சிறையிலேயே பிரசித்தமானது. இரண்டாமவரோ ஏதோ சாப்பிடுவார் பழம், பிஸ்கட்டுன்னு; அதைவிட முக்கியம் சிகரெட்தான். இப்போதெல்லாம் அவர் என்னை மாதிரி, இல்லை..இல்லை.. எனக்கு முன்பே அவர் சிகரெட்டை விட்டுவிட்டார்.

சும்மாவா சொன்னர்கள்; இரண்டு கேள்வியை மூன்று ஆசிரியர்களிடம் கொடு; அவர்கள் நான்கு வித பதில் கொடுப்பார்கள் என்று. பகல் நேரங்களில் காலையில் அங்கங்கே அரட்டைக் கும்பல்; எல்லா விதயங்களையும் அலசி ஆராய்ந்து ‘காயப்போடுவதுதான்’! மதியத்தில் ‘உண்ட கழைப்பு’; மாலையில் ஆறு மணிக்கு முதலில் பத்திரிகைச் செய்திகள்,வெளியிலிருந்து வரும் கல்லூரிச் சேதிகள், தலைவர்களிடமிருந்து வரும் செய்திகள், அதைப் பற்றிய விவாதங்கள் என்று இருக்கும். சில நாட்களில் இந்த விவாதங்களே நீண்டு விட அதை முடித்து விட்டு சாப்பாட்டுக்குத் தயாராக வேண்டியதுதான். மற்ற நாட்களில் ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சி இருக்கும். டி.எம். செளந்திரராஜன் குரலில் பாட ஒரு ஆசிரியர் - அவரது ‘புல்லாங்குழல் தந்த மூங்கில்களே’ என்னும் கிருஷ்ணன் மேல் பாடும் தனிப்பாடலுக்கு நான் உட்பட பலர் விசிறிகள்; சில கவிஞர்கள் தங்கள் கவிதைகளை அரங்கேற்றினார்கள்; பட்டிமன்றம் நடந்தேறும். பேரா.சாலமன் பாப்பையாவும் , மற்றொரு பேராசிரியரும் பட்டி மன்றம் நடத்தினார்கள். பாப்பையா வழக்கம்போல் பேசுவார் என நினைத்து மற்ற ஆசிரியர்கள் ஜோக் வெடிகளாக வெடிக்க, பாப்பையா தன் ஸ்டைலை முழுவதுமாக மாற்றி மிக மிக ஆழமான, அர்த்தமுள்ள சமூகப்பிரச்சனைகளைத் தொட்ட பேச்சு நன்றாக இருந்தது. அதன்பின் நான் பலதடவை அவரிடம் அந்த ‘ஜெயில் பேச்சு’ போல எதுவும் அமையவில்லை என்று கூறியதுண்டு.

Biological clock பற்றித் தெரியும்தானே. Personal habits என்று வைத்துக் கொள்வோமே; இதை இதை இந்த நேரத்தில் செய்வது என்று ஒரு தனி ஒழுக்கம் வைத்திருப்போமே, அதை முழுவதுமாக மாற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று. இருந்ததோ மிகக்குறைந்த கழிப்பறைகள்; எங்களுக்காகச் சிரமம் எடுத்து ஓரளவு சுத்தமாக வைத்திருந்தார்கள். என்ன, காலை வேளைகளில் எப்போதும் ‘ஹவுஸ் ஃபுல்’தான். கலயாண வீட்டில் பந்தியில் இடம் பிடிக்க பாவம், அப்பதான் சாப்பிட உட்கார்ந்தவர்கள் முன்னால் நின்று கொண்டு, அவர்களையும் அவர்கள் இலையையும் பாத்துக்கிட்டே இருந்து அவர்களைச் சாப்பிடவிடாமல் ‘நொம்பலப் படுத்துவார்களே’ அது மாதிரி இங்கேயும் இருக்கும். ஆனால் இங்கு கழிப்பறைக் கதவுகள் எல்லாமே அரைக் கதவுகள்தான். அதனால் அந்த ‘பந்தி ஸ்டைல்’ இங்கே நடக்காது. புறமுதுகு காட்டிதான் நிக்கணும். உள்ளே இருப்பவர்களுக்கு அது ஒன்றுதான் வசதி. பல விஞ்ஞான ரீதியான experimentations and executions மேற்கொள்ள வேண்டியதாயிருந்தது. ‘காலைக் கடன்களுக்கெல்லாம் காப்பியே பிரதானம்’ என்ற நிலையை மாற்றிக்கொள்வது; காலைக் கடனென்றால் அது காலையில்தான் இருக்கவேண்டுமா என்ன, கூட்டம் குறைவான மதியமாகவும் இருக்கலாமே என்ற மேற்சொன்ன மாதிரி biological clock-யை வேறுவிதமாக set செய்து கொள்வது; அல்லது அதிகாலை (?) இரண்டு, மூணு மணிக்கு மாற்றிக்கொள்வது; - இப்படியாக அவரவர் ‘சக்தி’க்கு ஏற்றவாறு internal & external adjustments செய்து கொண்டோம்; வேற வழி?

உள்ளே இருந்த மற்ற கைதிகளுக்கு முதலில் எங்களைப் பார்க்கக் கொஞ்சம் வேடிக்கையாக இருந்திருக்கும் போல. கொஞ்சம் தள்ளியே இருந்தார்கள். நாளாவட்டத்தில் கொஞ்சம் நெருங்கினோம். எனக்கு இரு நண்பர்கள் கிடைத்தார்கள். எல்லாம் சின்ன வயசுப் பசங்கள். பங்காளிச் சண்டைகள் அது இதுன்னு சொன்னார்கள். அதில் ஒருவனுக்கு ‘தீட்சை’ கொடுத்தேன். வெளியே போனதும், வெளியே இருக்கும் பகையாளியை ‘மேலே’ அனுப்புவதுதான் அவன் குறிக்கோளாக இருந்தது. அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றிச் சொல்லி அவன் அப்படி செய்ய மாட்டேன் என்று என்னிடம் உறுதிமொழி கொடுத்தான். ஒரு வித்தியாசமான நடையில் பாவனையில் இருந்த இன்னும் இரு இளைஞர்களைப் பற்றிக் கேட்டேன். அவர்கள் இருவருமே ‘கோழிகள்’ என்றார்கள். அப்டின்னா என்னன்னா, வேறு யாரோ செய்த குற்றத்தைத் தான் செய்ததாகச் சொல்லி வலிய தண்டனையை ஏற்றுக்கொள்ளும் ஆட்களாம்; அவர்கள் குடும்பம் அவர்களது தண்டனைக் காலத்தில் நல்ல படியாக கவனித்துக் கொள்ளப் படுமாம்; அதேபோல் இவர்கள் வெளியே போனவுடன் ‘நல்ல′ வேலையோ, பொறுப்போ கிடைக்குமாம். என்ன குற்றம்னா ‘கள்ளக் கடத்தல்’ கேசுகள். நம்ம ஊர்ல இதுக்குத்தான் ‘பினாமி’ என்று கணக்கு ஏதும் கிடையாது போலும்! எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பினாமியே போற்றி!!

அந்தக் கைதிகளின் கூட்டத்தில் இரண்டே இரண்டு பேர் மட்டும் தனித்துத் தெரிந்தனர். நம்ம ‘தோஸ்துகள்’ மூலம் அவர்களைப் பற்றிய விவரங்கள் சேகரித்தேன். ஒருவர் வயதானவர்; 60-க்கு மேலிருக்கும். வட இந்தியர்; சேட் என்று எல்லாரும் கூப்பிடுவார்கள்; எப்போதும் வெள்ளை வெளேரென்று குர்தா, பைஜாமாவில் இருப்பார். ஒரு மரத்தடியில் ஒரு folding chair இருக்கும் அவருக்காகவே; அதுதான் அவரது அரியணை; பக்கத்தில் இன்னும் இரண்டு கைதிகள் இருப்பார்கள். இவருக்குத் தனியாகச் சமைப்பதும், மற்ற குற்றேவல்கள் செய்வதுமே அவர்களுக்கு உள்ளே அளிக்கப் பட்டிருந்த வேலைகள். எல்லாம் ஒரு extra-cosnstituional power centres தான்! பண மோசடி வழக்கில் உள்ளே வந்த ஆளாம். அடுத்த கேசு: ஒரு ‘தாதா’; ஒரு அரசியல்வாதியின் பெயர் சொன்னார்கள்; அவருடைய அடியாளாம். இவனோடு எப்போதும் இன்னும் இருவர் கூடவே அலைவார்கள்; அல்லக்கைகளாம். இந்த மூவரையும் யாரும் கண்டு கொள்வதில்லை.
இந்த நால்வரைத் தவிர மற்ற கைதிகள் எல்லோருமே வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள்தான். அப்படியென்றால் நம்ம ஊர்ல, நாட்ல, பணக்காரர்கள் எல்லோரும் தவறே செய்யாத நல்லவர்களாகவும், ஏழைகளில் பலருமே கெட்டவர்களாகவும் இருக்கிறார்களோ? அந்தத் தோற்றம்தான் உள்ளே இருந்தது. ஜாதி இரண்டொழிய வேறில்லை….. அது சரிதான்; ஆனால், ஆண், பெண் என்ற வேறுபாடு அவ்வைக் கிழவி காலத்தில் சரி; இப்போ காசு உள்ளவன்; இல்லாதவன் - haves and have-nots தான் அந்த இரு சாதிகளும்தான். நமது நீதியும், நீதியரசர்களும், வழக்குரைஞர்களும் யாருடைய சட்டைப்பைகளில் இருக்கிறார்கள் என்று யாருக்குத்தான் தெரியாது. நம் ஊர் சட்டங்களும், நீதித்துறையும் எவ்வளவு கேவலமானவைகள் என்றுதான் எனக்குத் தோன்றியது. அடுத்த முறை கண்ணைக் கட்டிக் கொண்டிருக்கும் அந்த நீதி தேவதையின் கைகளில் இருக்கும் தராசை நன்றாகப் பார்க்க வேண்டும்; நிச்சயமாக ஏதோ ஒரு ‘கோல்மால்’ அதில் இருக்க வேண்டும்! இல்லாவிட்டால் எப்படி ஏழைகள் மட்டுமே, அதிலும் ‘பாவப்பட்ட’ஏழைகள் மட்டுமே ‘உள்ளே’ இருக்கின்றனர்? உள்ளே இருக்கும் ஒரே ஒரு பணக்காரனும் ஏக தடபுடலுடன் வசதியாகவே இருந்தான்; அடிதடி தாதா பற்றி சொல்லவே வேண்டாம்! அடிப்படைக் கோளாறுகளுடன் நாம் இயங்கி வருகிறோம் என்பது மட்டும் தெளிவாச்சி. நீதிக்கு முன் எல்லோரும் சமம்; சட்டம் தன் வேலையைச் செய்யும்; - இப்படிதான் எத்தனை, எத்தனை வார்த்தை ஜாலங்கள். நம்மை நாமே முட்டாளாக்கிக்கொண்டு …’இன்னும் எத்தனை காலம்தான் ஏமா(ற்)றுவாய் இந்த நாட்டிலே…’

நாட்கள் கழிந்தன; பேச்சுகள் சுற்றுக்குபின் சுற்றாக சுற்றிக்கொண்டிருக்க, நாங்கள் ஒருவருக்கொருவர் தைரியமூட்டிக்கொள்ளும் நிலை. வீட்டிலிருந்து யாரையும் பார்க்க வர வேண்டாமென சொல்லியிருந்தேன் - என்ன சில நாட்கள்தானே என்றநினைப்பில். இப்போதோ ஏறத்தாழ இருபது நாட்கள் ஓடிவிட்டன. நண்பர்களிடம் சொல்லியனுப்பினேன். மனைவி இரண்டு மகள்களோடு வந்தார்கள். சில நிமிஷங்கள். சின்னவளுக்கு ஒரு வயதும், சில மாதங்களும். தூக்கி வைத்துக்கொள்ள ஆசை. எப்படி முடியும். குழந்தைகள் அழுகையோடு விடைபெற்றார்கள். அகநானூரில் ஒரு பாடல் வருமே: கிணற்றுக்குள் தண்ணீர் மேலே மிதக்கும் பாசி, மேலிருந்து தண்ணீர் மொள்ள வரும் குடம் பட்டவுடன் விலகி, வாளி மேலே போனவுடன் மீண்டும் வந்து மூடிக்கொள்ளும் - தலைவன் தொட்டதும் பசலை விலகி, அவன் பிரிந்ததும் மீண்டும் வரும் பசலை போல். அந்தக் கதைதான். குடும்பத்தினரைப் பார்த்த பிறகு ஜெயில் ஜெயிலாகவே ஆனது. பற்றாக்குறைக்கு அடுத்த நாள் பார்க்க வந்த குடும்ப நண்பர்கள் ‘உங்களைப் பார்த்துவிட்டு வந்தவுடன் சின்னவளுக்கு இரவெல்லாம் காய்ச்சல்’ என்று சொன்னார்கள். அதிலிருந்து ஐந்தாறு நாட்கள் கழித்து விடுதலையான நாள் வரை மருந்தில்லாத மனக்காய்ச்சல் எனக்கு.

அதற்குப் பிறகும்  சிறை வாசம் வந்தன. ஒரு முறைதான் மிக நீண்ட  வாசமாயிற்று.

 =======================================



Oct 09 2005 11:38 am சொந்தக்கதை.. and நட்சத்திரப் பதிவுகள edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 1 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
2 Responses
குழலி Says: after publication. e -->October 9th, 2005 at 1:04 pm e
ம்… 1984-85ல் ஆசிரியர் போராட்டத்திற்கு சிறை சென்று வந்த என் தந்தை கூறிய கதையைப் போலவே உள்ளது. சற்று நீளமாக உள்ளது, இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
நன்றி
வசந்தன் Says: after publication. e -->October 25th, 2005 at 7:08 pm e
நீளம் ‘பிறழ்ச்சினை’ இல்லை. நன்றாக இருக்கிறது அனுபவப் பகிர்வு.

1 comment:

கோமதி அரசு said...

பொது நிகழ்ச்சி இருக்கும். டி.எம். செளந்திரராஜன் குரலில் பாட ஒரு ஆசிரியர் - அவரது ‘புல்லாங்குழல் தந்த மூங்கில்களே’ என்னும் கிருஷ்ணன் மேல் பாடும் தனிப்பாடலுக்கு நான் உட்பட பலர் விசிறிகள்; சில கவிஞர்கள் தங்கள் கவிதைகளை அரங்கேற்றினார்கள்; பட்டிமன்றம் நடந்தேறும். பேரா.சாலமன் பாப்பையாவும் , மற்றொரு பேராசிரியரும் பட்டி மன்றம் நடத்தினார்கள். பாப்பையா வழக்கம்போல் பேசுவார் என நினைத்து மற்ற ஆசிரியர்கள் ஜோக் வெடிகளாக வெடிக்க, பாப்பையா தன் ஸ்டைலை முழுவதுமாக மாற்றி மிக மிக ஆழமான, அர்த்தமுள்ள சமூகப்பிரச்சனைகளைத் தொட்ட பேச்சு நன்றாக இருந்தது. அதன்பின் நான் பலதடவை அவரிடம் அந்த ‘ஜெயில் பேச்சு’ போல எதுவும் அமையவில்லை என்று கூறியதுண்டு.

ஜெயிலில் நல்ல விஷயங்களையும், இசையையும் நிதானமாய் கேட்க முடிந்தது பெரிய விஷயம்.





மனைவி இரண்டு மகள்களோடு வந்தார்கள். சில நிமிஷங்கள். சின்னவளுக்கு ஒரு வயதும், சில மாதங்களும். தூக்கி வைத்துக்கொள்ள ஆசை. எப்படி முடியும். குழந்தைகள் அழுகையோடு விடைபெற்றார்கள். அகநானூரில் ஒரு பாடல் வருமே: கிணற்றுக்குள் தண்ணீர் மேலே மிதக்கும் பாசி, மேலிருந்து தண்ணீர் மொள்ள வரும் குடம் பட்டவுடன் விலகி, வாளி மேலே போனவுடன் மீண்டும் வந்து மூடிக்கொள்ளும் - தலைவன் தொட்டதும் பசலை விலகி, அவன் பிரிந்ததும் மீண்டும் வரும் பசலை போல். அந்தக் கதைதான். குடும்பத்தினரைப் பார்த்த பிறகு ஜெயில் ஜெயிலாகவே ஆனது. பற்றாக்குறைக்கு அடுத்த நாள் பார்க்க வந்த குடும்ப நண்பர்கள் ‘உங்களைப் பார்த்துவிட்டு வந்தவுடன் சின்னவளுக்கு இரவெல்லாம் காய்ச்சல்’ என்று சொன்னார்கள். அதிலிருந்து ஐந்தாறு நாட்கள் கழித்து விடுதலையான நாள் வரை மருந்தில்லாத மனக்காய்ச்சல் எனக்கு.//

குழந்தை, குடும்பத்தை பிரிந்து இருப்பது வேதனையான விஷயம், என் கணவர் 81லில் சிறை செனற போது என் இரு குழந்தைகளும் சிறுவயதுதான். அப்பவை பார்க்க வேண்டும் என்று என் மகன் அழுவான் நாங்கள் மாமனார் ஊரில் இருந்தோம்.

இப்போது மாதிரி அலை பேசி வசதிகள அப்போது கிடையாது.

நீங்கள் பட்ட கஷ்டத்தை உங்கள் பதிவின் மூலம் உணர முடிகிறது.

Post a Comment